Friday, November 29, 2013

முதன்முதலாய் காசி போன போது...3

"கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்" என்று குகனை அறிமுகப்படுத்துவார் கம்பர்.இன்றும் கங்கைக்கரையில் கணக்கில்லாத நாவாய்கள் நிற்கின்றன.படகுக்காரர்களும் வேட்டைக்காரர்கள் போல் வாடிக்கையாளர்களைக் குறிவைத்துக் காத்திருக்கிறார்கள் .இரண்டு மணிநேரப் படகுப்பயணத்திற்கு 250 ரூபாய் என்று பேசிப் படகேறினோம்

.கங்கைக்கரையிலிருந்து நதிக்குள் படகு புகுமுகத்தில் போக்குவரத்து நெரிசல்.படகின் கயிறவிழ்த்த கையோடு முட்டிக் கொண்டு நிற்கும் பத்துப் பதினைந்து படகுகளைக் கைகளால் தள்ளிக்கொண்டே படகோட்டி கங்கைக்குள் பிரவேசம் நிகழ்த்தினார்.ஒவ்வொரு படித்துரைக்கும் "காட்" என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.உடன் வந்த நண்பர்கள் காட் கதைகள் கேட்கக் காதுகளைத் தீட்டிக் காத்திருக்க மனம் கங்கைக்குள் இறங்கியிருந்தது.ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்ப் பிரவாகத்தில் இருக்கும் நீர்த்தடத்தில் இறங்கியிருப்பது ,தொடர் பிறவிகளின் ஆன்மப் பயணத்தில் ஒரு மைல்கல் என்று பட்டது. 
 இரவு ஏழு மணியளவில் நடைபெறும் கங்கா ஆரத்தி,கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும் என்று முன்பே சொன்னார்கள்.அதுவரை எங்கள்படகு கங்கையிலேயே திரிந்து கொண்டிருந்தது.
ஒரே நேரத்தில் இருவேறிடங்களில் நடந்தது கங்கா ஆரத்தி.ஜோதிமயமாய்அமைந்திருந்த அந்த ஆரத்தியை அர்ச்சகர்கள் இசைக்கேற்ப தாள அசைவுகளுடன் நிகழ்த்தினர்.ஒருபுறம் ஏழு பேரும் மற்றொரு புறம் ஐந்து   பேரும் நிகழ்த்தின ஆரத்தி ஒருமணிநேரம் நீடித்தது.கங்கையை உள்ளபடியே தெய்வமாய் வணங்குகிறார்கள் என்பது சந்தோஷமாக இருந்தது.மறுநாள் காலை கங்கையில் குளிக்கிற போது,அருகே ஒரு பெண் கால் செருப்புடன் துணியை அலச கங்கையில் இறங்க,"கங்கா மாதா கீ... செப்பல்?' என்று சீறிக்கொண்டு கரை நோக்கிப்
 பாய்ந்தார் ஒருவர்.
பத்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் தீபமும் மலர்களும் கொண்ட தொன்னைகளை வாங்கி கங்கையில்  மிதக்க விடுவது மிகவும் இதமான அனுபவம்.கங்கைக் குளியல் சர்வ நிச்சயமாய் சிலிர்ப்பைக் கொடுக்கிற விஷயம்.எத்தனையோ நதிகளில் இறங்கியிருந்தாலும் கங்கைக் குளியல் தனிதான். அடுத்த தீபாவளிக்கு 'கங்கா ஸ்நானம் ஆச்சா" என்று யாராவது கேட்டால் "அச்சா' என்று பதில் சொல்லலாம்.
கோடைக்காலம் ஆதலால் தெளிந்தோடிக் கொண்டிருந்த கங்கையின் குளுமையில் தாய்மையின் பெருக்கம்.நீண்ட நேரம் நீராடச் சொல்லும் அழைப்பு அலையலையாய் வந்தது.

காசியிலிருந்துடெல்லிக்கு வாகனப் பிராப்தி ரயில்.ஆதித்யா சர்மா என்ற வயதுச் சிறுவன் எங்களிடம் வழிநெடுக பேசிக்கொண்டே வந்தான் .அவ்வப்போது அவன் சொன்ன அங்கிள்ஜீ என்ற சொல்லையும் எம்.பி. மெமோரியல் ச்கூல் என்பதையும் தவிர வேறேதும் புரியவில்லை.எங்கலோடு அமர்ந்து அளவளாவ அனுமதித்த அவனின் அப்பா சர்மாவுக்கும்,தாத்தா சர்மாவுக்கும் எங்களிடம் அவன் பிஸ்கட் பெறுவதை அனுமதிக்க முடியவில்லை.குளிர்சாதனப் பெட்டிக்குள் அவர்களின் ஆசாரம் புழுங்கியது.
காசிக்கு ஒருமுறையேனும் போக வேண்டும் என்னும் எண்ணம் நிறைவேறிய நிறைவில் இருந்த போது அடுத்தடுத்த அழைப்புகளை  காசி கொடுக்குமென்று நான் நினைக்கவில்லை. சற்றே துயரமான சூழலில் காசியை நோக்கிய அடுத்த யாத்திரை வாய்த்தது.

(தொடர்வோம்)

Wednesday, November 27, 2013

முதன்முதலாய் காசி போன போது.......2

 
 
 
பாலத்தின் மேல் தடதடத்த ரயிலிலிருந்து பார்த்த போது, கம்பீரமான பிரவாகத்தில் இருந்தாள் கங்காமாதா.வாரணாசி ரயில்நிலையத்தில்காலை எட்டரை மணிக்கு இறங்கும்போதே வெறித்தனமான பக்தியுடன் வெய்யில் காசியை வலம்வரத் தொடங்கியிருந்தது.நாட்டுக்கோட்டை நகரத்தார் காசி விசுவநாதரின் நித்திய பூஜைக்குப் பொறுப்பேற்றிருந்ததால் தஞ்சை நகரத்தார் சங்கத்திலிருந்து கடிதம் பெற்று வந்திருந்தார் நண்பர் செழியன்.நகரத்தார் சங்கம் என்றால்
யாருக்கும் தெரிவதில்லை."நாட்கோட் சத்ரம்" என்றால் வீதியில் வெறுமனே நிற்கும் மாடுகள் கூட வாலைச் சுழற்றி வழிகாட்டுகின்றன.எண்பது ரூபாய் கேட்டார் ஆட்டோக்காரர்.அவர் கடந்த தொலைவுக்கு நம்மூரில் நிச்சயம் இருநூறு ரூபாய் கேட்டிருப்பார்கள்.ஒற்றையடிப்பாதைதான் எல்லா வீதிகளும்.சென்னை மவுண்ட் ரோடினும் சந்தடி அதிகம்.வழிமறிக்கும் தாதாக்களாய் வழியெங்கும் கோமாதாக்கள்.இருமுறை நின்ற ஆட்டோவை ஆசுவாசப்படுத்தி "நாட்கோட் சத்ரம்" வாசலில் விட்ட ஆட்டோக்கிழவருக்கு 100 ரூபாய் தந்து மீதி வேண்டாம் என்றதும்,கணக்கை நேர் செய்வது போல் இருபது முறை கும்பிட்டார்.
தமிழ்க்குரல்களால்  நிரம்பி வழிந்தது நாட்டுக்கோட்டை சத்திரம்.150க்கும் அதிகமான அறைகள்.ஏசி அறைகள் ஏதுமில்லை என்றாலும் கிகக் குறைந்த கட்டணத்தில் வசதியான விசாலமான அறைகள் தருகிறார்கள். காலைப் "பலகாரம்" இருபது ரூபாய். மதியம் அருமையான தென்னிந்திய உணவு-30 ரூபாய்.இரவுப்பலகாரமும் 20 ரூபாய்.

 
அவசரம் அவசரமாய்த் தயாராகி வரும்போது சிற்றுண்டிக்கான நேரம் கடந்திருந்தது. வாடகைக்கார் பிடித்து உள்ளூர்க் கோயில்கள் சிலவற்றுக்குப் போனோம். துர்கா கோவில் அனுமார் கோவில், காலபைரவர் கோவில்.கோவில் மாதிரியே இல்லை.பளிங்கு பங்களாக்களில் கடவுள்கள் காட்சி தருகிறார்கள்.காலபைரவர் பிரசித்தி பெற்றவர்.ஒரே சங்கடம் அங்குள்ள ஆன்மீக அடியாட்கள். இருபது ரூபாய் கொடுத்து இறைவனுக்கு நீங்கள் வாங்கிச் சென்ற மாலையை   
உங்கள் கண்முன்பே அடுத்தவருக்கு மாட்டிவிட்டு ஐம்பது ரூபாய் வாங்கிவிடுவார்கள்.
 
அவர்கள் கண்களைப்பாராமல் கடந்து போனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. பார்த்து விட்டால் உங்களின் எந்தக் கெஞ்சலும் எடுபடாது."தண்டம்" என்று அதட்டுவார்கள்.அவர்களுக்கெப்படி தெரியும் என்று ஆச்சரியம் வேண்டாம். "தண்டம்" என்றால் குனிய வேண்டும் என்று அர்த்தமாம். உங்கள் முதுகுத்தண்டில் ஒங்கி அறைந்து,திட்டுவதுபோல் மந்திரம் சொல்லிவிட்டு, ஐம்பது நூறு என்று தண்டம் அழ வைக்கிறார்கள்."கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல' என்றெழுதிய வள்ளுவர் காலத்திலேயே காசி காலபைரவர் கோவில் வந்திருக்க வேண்டும்.சந்நிதியில் இந்த சங்கடத்திலிருந்து தப்பி வந்தாலும் பிரகாரத்தில் அவர்களின் படைகள் படமெடுத்து ஆடுகின்றன. மயிலிறகும் கையுமாய் உட்கார்ந்திருப்பவர்கள் வருந்தி அழைத்து உடம்பை மயிலிறகால் வருடி தட்சிணை வாங்கி விடுகிறார்கள்.
அவர்களில் ஒரு சிறுவன். அதிகம் போனால் வயது 15 இருக்கும்.தென்னிந்தியர்கள் அனைவருமே ஆந்திரர்கள் என்பது அவன் அபிப்பிராயம்."அண்ணா !தப்புலேது! ரண்டி" என்கிறான்.
இவர்கள் அத்தனை பேரிடமிருந்தும் பாக்கெட்டுக்கு சேதாரமில்லாமல் தப்பித்தவன் நான்மட்டும் என்பதை அதாரபூர்வமாய் அறிவிக்கிறேன்.  அங்கிருந்து போனது சாரநாத் . புத்தர் ஞானம் பெற்று வந்ததும் முதன்முதலாய் உபதேசம் செய்த இடம்.அங்கேயே அசோகர் நிறுவிய 1500 ஆண்டுகால ஸ்தூபி ஒன்றும் உள்ளது.
வெய்யிலிலும் அனற்காற்றிலும் ஏசி கார் புழுங்கித்தள்ளியது. சத்திரம் திரும்பி உண்வும் ஒய்வும் கொண்டபிறகு,சத்திர உதவியாளர் முத்து கதவைத்தட்டினார்."ஒருவரை உடனனுப்புகிறேன்.கோவிலுக்குப் போய் வந்து விடுங்கள்"என்றார்.பாதுகாப்புக் காரணங்களுக்காக வாட்ச்,பேனா,செல்ஃபோன் அனுமதியில்லை.

கோவிலுக்கு மிக அருகில் சாட்சி விநாயகரைக் காட்டி வணங்கச் சொன்னார்கள். நாம் காசிக்கு வந்தோம் என்பதற்கு அவர்தான் சாட்சி சொல்வாராம். பலத்த பாதுகாப்பைக் கடந்து அன்னபூரணி முன்உருகி நின்று தள்ளும் கூட்டத்தின் இடிபாடுகளைச் சமாளித்து, வாசலில் வாங்கிய பால்கிண்ணத்தைக் குத்து மதிப்பாய்க் கவிழ்த்து, விரல்கள் விட்டுத் துழாவியபோது,நம் கைகளுக்குத் தட்டுப்படுகிறார் விசுவநாதர். அந்த சில விநாடிகளுக்கு விலைமதிப்பில்லை, அந்தத் தாக்கம் கலையாமல் விசாலாட்சி சந்நிதிக்கு வந்தால்  ஆற அமர தரிசனம்.
 
அதுவரை இருந்த சுற்றுலா மனப்பான்மை விசுவநாதரின் ஸ்பரிசத்துடன் விடைபெற்று உள்ளே சட்டென்று அமைதி பரவியது.கங்கைக் கரைநோக்கிக் கால்கள் நடக்க, ஒரு சுழல்போல உள்ளே உருக்கொண்டது பாடல்.
 
 
விநாடிநேரம் விரல்பிடித்த விஸ்வநாதம்-என்
வினைகளெல்லாம் அவன்மடியில் விழுந்த கோலம்
கனாவில் அவன்முகம் குலாவும் தினம் தினம்
வினாமலர்ந்த நேரமவன் விடைகள் சாஸ்வதம்

ஓமப்புகை வந்து உயிரினை வருடிட
ஈமப்புகை கங்கைக் கரையினில் எழுந்திட
நாமம் மொழிந்திடும் நாவில் கமழ்ந்திடும்
ஞானம் எனும் லயமே
மோகம் விளைந்திடும் தேகம் இதுஇனி
நாளும் சிவமயமே
ஹரஹர ஷிவஷிவ எனும்நதி அலைகளில்
அமிழ்ந்திட வினைவிழுமே
திருவடி சரணென உளமிக உருகிட
சிவனருள் துணைவருமே
 
 
வேர்விடும் அகந்தையும் விழுகிற தருணம்
நேர்வரும் விஷ்வேஷ்வரனே சரணம்
காரணி அன்ன பூரணி அன்னை
கண்முன் நின்றுவிடு
காட்சி தரும்விசா லாட்சியின் சந்நிதி
கதியென்று விழுந்துவிடு
அம்பிகை துணையென நம்பிடும் மனதினில்
நன்மைகள் நிரந்தரமே
செம்பினில் ஏந்திய கங்கையின் தீர்த்தமும்
சங்கரன் தரும்வரமே 

 
கங்கைக் கரையில் நின்ற போது அங்கே சித்தித்த வாகனப் பிராப்தி-படகு
(தொடரும்)

Tuesday, November 26, 2013

முதன்முதலாய் காசி போன போது.......

(சத்குரு அவர்களுடன் காசியில் நிகழ்ந்த உரையாடலின் ஒளிப்பதிவு தற்போதுஸ்டார் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது. அது நான்காவது முறையாய் காசி சென்றபோது கிட்டிய பெரும்பேறு.2009ல் முதன்முதலாய் காசி சென்ற அனுபவங்களை அப்போது இணையக் குழுமம் ஒன்றில் எழுதியிருந்தேன்.அவை இப்போது உங்களுக்காக..)
 
கல்கத்தாவின் அவ்வளவு பெரிய விமான நிலையத்தில் என் கண்கள் வேறெதையும் தேடவில்லை. என் பெயர் எங்கே தட்டுப்படுகிறது என்றுதான் தேடினேன்.தேடுங்கள் கண்டடைவீர்கள் என்பதற்கேற்ப,என் பெயரையும்,உடன் வந்த நண்பர் மாரியப்பனின் பெயரையும்துவாலைச்சீட்டு ஒன்றில் (துண்டுச்சீட்டை விட சற்றே பெரிது)எழுதிப் பிடித்தபடி பான் மணக்கும் வாயோடும்,தூக்கக் கலக்கம் மிதக்கும் கண்களோடும் நின்றிருந்தார் ஒருவர்.விமானத்தில் இருந்து இறங்கிய கையோடு அவசரம் அவசரமாய் பாரதீய பாஷா பவன் போய் சேர்வதற்குள் கவிஞர் வைரமுத்துவிற்கு சரஸ்வதி சம்மான் விருது கொடுத்து முடித்திருந்தார்கள். விருது பெற்ற சக எழுத்தாளர்கள் அவரவர் மொழியில் ஏற்புரை வாசிக்க கொஞ்சமும் புரியாததால் கரம் சாயா குடிக்கப் போய்விட்டேன்.திரும்ப வந்து இருக்கையில் அமரவும் கவிஞர் வைரமுத்து ஏற்புரை தொடங்கவும் சரியாக இருந்தது.
 
"சங்கம் வளர்த்த மண்ணிலிருந்து வங்க மண்ணுக்கு வந்திருக்கிறேன். மீசை வைத்த பாரதி மண்ணிலிருந்து தாடி வைத்த தாகூர் மண்ணுக்கு வந்திருக்கிறேன்" என்று அவர் தொடங்கிய போது தமிழகத்திலிருந்து போயிருந்த 54 சொச்சம் பேர்களும் கல்கத்தா தமிழ்ச்சங்கத்தினரும் எழுப்பிய கரவொலியில் அரங்கம் அதிர்ந்தது என்றால் நீங்கள் நம்பத்தான் வேண்டும்.ஏனென்றால் அரங்கத்தின் அறுதிப் பெரும்பான்மை இந்தக்கூட்டம்தான்.எப்போதும் போல் இயல்பாக தேநீர் பருகிக் கொண்டு விழாவை நடத்தி முடித்து விடலாம் என்று நினைத்த பாஷா பரிஷத்தின் பாச்சா எங்களிடம் பலிக்கவில்லை.தென்மாவட்டங்களிலிருந்தும் தஞ்சை திருச்சியிலிருந்தும்  கிளம்பி வந்திருந்த எங்கள் பேரவை நண்பர்களின் ஆர்வ அலையில் அரண்டு போனார்கள் பாவம்.விழா முடிந்தது..புகைப்படப் படலம் தொடர்ந்தது
 
பாரதீய பாஷா பவன் நிர்வாகம் வருந்தி அழைத்த விருந்தைப் புறக்கணித்து விட்டு நல்ல வங்காள உணவு எங்கே கிடைக்கும் என்று விசாரித்தோம்.ஜமுனா சினிமா எதிரில் உள்ள கஸ்தூரி உணவகத்தை உள்ளூர்க்காரர்கள் பரிந்துரைத்தார்கள்.கொழுத்த மீன்களும்,நெய்மணக்கும் சோறும்கமகமத்தன.கடல்மீன்களின் கலம்பகம் மேசையெங்கும்.ஓரிரு நாட்களுக்கு முன் திறந்த வாயோடு நீந்திய மீன்கள் நீங்காத் துயிலில் கிடக்க, நாங்கள் பிளந்த வாய்களுடன் சாப்பிடவும் மறந்து சிலையானோம்.அப்புறம் மீனோடு மீனாகிய என்னை நண்பர்கள் கரைசேர்த்தனர்.
 
மயூரி ஹோட்டலில் எங்களைக் கொண்டு வந்து சேர்த்த அந்த ஓட்டுநரை அப்போதுதான் இன்னும் சரியாகக் கவனித்தேன்.அழுக்குப் படிந்த அலட்சிய வெள்ளையில் குர்தா-பைஜாமா.கல்கத்தாவிலேயே கிடந்துழன்றும்,கல்கத்தா வீதிகள் குறித்து அறியாமை,வங்கால மொழி தெரியாத எங்களைப் பார்த்து அவ்வப்போது சிநேகமாய் சிரிக்கும் கண்கள்.தட்சிணேஸ்வரம் போய் வந்த பிறகு அவர் விடைபெற,சமீபத்தில் திறக்கப்பட்ட தென்னிந்திய உணவகம் தேடிக் கிளம்பினார்கள் நண்பர்கள். எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரின் உணவு ரகங்களுக்குமுதலிடம் தருவதென் வழக்கம்.ஆனாலும் கூட்டணி தர்மத்தைக் கைவிடாமல் அவர்களுடன் கிளம்பினேன்.அப்புறம்தான் தெரிந்தது,அடுத்த வீதிகூடத் தெரியாமல் இருப்பதுதான் கல்கத்தாவில் டாக்ஸி ஓட்ட அடிப்படைத் தகுதி என்று.
 
நாங்கள் ஐந்து பேர். முன்னிருக்கையில் ஒருவர்தான் அமர வேண்டும் என்று ஒட்டுநர்கள் பதறுகிறார்கள்.மீறி ஏறிவிட்டால்,சிரித்துக் கொண்டே தலையில் அடித்துக் கொண்டு வண்டியைக் கிளப்பி விடுகிறார்கள்.நாங்கள் சொன்ன வழியும் புரியாமல்,போகும் திசையும் தெரியாமல் அந்த ஓட்டுநர் பத்து நிமிடங்களுக்குள் ஏழு முறை தலையில் அடித்துக் கொண்டார். உழைப்பாளர்களின் உரிமையை உரக்கப் பேசும் வங்க மாநிலத்தில் இன்னும் கைரிக்ஷாக்கள் புழக்கத்தில் இருப்பதுதான் பெரிய வியப்பும் வலியும் .கொளுத்தும் வெய்யிலில் கால்செருப்புக்கூட இல்லாமல் அவர்கள் ரிக்ஷா இழுக்க, பேன்ட்போட்ட-சுடிதார் அணிந்த புளிமூட்டைகள் குடைபிடித்து உட்கார்ந்தபடி கின்லே தண்ணீர் குடிக்கின்றன.
 
போக்குவரத்து குறித்த எந்தப் பிரக்ஞையும் இல்லாத கல்கத்தா வீதிகளில் காலாற நடந்து காயம் படாமல் கின்னஸ் சாதனை புரிந்தோம். திடீர் திடீரென்று பிரசன்னமான டிராம்களும்
விற்பனையாளர்களின் தொந்தரவும் கலந்து கலகலத்தது கல்கத்தா.மேல்பாக்கெட்டில் பணமோ செல்போனோ வைக்காமல் போனால் கல்கத்தா காளியை தரிசிக்கலாம் என்றார்கள். தட்சிணேஸ்வரத்தில் பரமஹம்ஸர் கும்பிட்ட காளியைப் பார்த்த நிறைவில் அங்கு செல்லவில்லை
 
மறுநாள் காலை சொன்ன நேரத்திற்கு வந்து சேர்ந்தார் அதே ஓட்டுநர். விக்டோரியா மஹாலுக்கு அழைத்துச் சென்றார். நம் தேசியத் தலைவர்களின் அபூர்வமான கறுப்பு வெள்ளைப்படங்களையும் ஒவியங்களையும் தவிர    பெரிதாக ஒன்றுமில்லை.கட்டிடம்தான் பிரம்மாண்டம்.ஒட்டுநரின் பெயரை அப்போதுதான் கேட்டுக் கொண்டேன்.  டி.பண்டிட் என்று கனகம்பீரமாய் உச்சரித்தார்..மதியம் காசிக்கு ரயிலில் கிளம்ப வேண்டும். ரயில் நிலையத்தில் எங்கள் பெட்டிக்குப் பக்கத்திலேயே காரைக் கொண்டு வந்து நிறுத்தும்படி வாய்த்தது பண்டிட்டிற்கு.
 
அவர் கணக்கைத்தீர்த்துவிட்டு,காரிலேயே பெட்டிகளை வைத்துவிட்டு மதிய உணவை முடித்துக் கொண்டோம் .வெய்யிலின் வீச்சு தங்காமல் எங்கள் குளிர்பதனப் பெட்டிகளைத் தேடி பெட்டிகளுடன் விரைந்தோம்.ஏறப்போன எங்களைத் தடுத்தர் பண்டிட். டிப்ஸ் தான்கொடுத்து விட்டோமே என்று குழப்பமாகப் பார்த்த போது,பைஜாமா பாக்கெட்டில் கைவிட்டார். வெளியே எடுத்தவையோ வேலைப்பாடுகளுடன் அமைந்த செயற்கைப்பூக்கள்.கூடவே,திரவியங்களில் நனைக்கப்பட்ட டிஷ்யூ பேப்பர்.முகம் முழுக்க நெகிழ்வும் சிரிப்புமாய் ஆளுக்கொன்றைத் தந்துவிட்டு கண்களில் வெளிச்சம் மின்ன கைகுலுக்கி விடைபெற்றார் பண்டிட்ஜீ!!அதுவரை எங்களை அமர வைத்துக் கார் ஒட்டிய பண்டிட், எங்கள் உள்ளங்களில் வசதியாய்ச் சாய்ந்து உட்கார்ந்து கொள்ள ,குலுங்கிக் கிளம்பியது ரயில்.......காசி நோக்கி!

(தொடரும்)

Monday, November 25, 2013

நாவலர்கள் நால்வருக்கு நல்ல விழா



சில விழாக்கள்,தனிமனிதர்களைக் கொண்டாடும். சில விழாக்களோ வெற்றிகளைக் கொண்டாடும்.அபூர்வமாய் சில விழாக்கள்தான் வாழ்க்கையைக் கொண்டாடும். அப்படியொரு விழாவை தமிழ் மணக்க மணக்க நிகழ்த்தியது திருச்சி நகைச்சுவை மன்றம்.நவம்பர் 24 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதன் பள்ளி கலையரங்கில் விழா நிகழ்ந்தது.

தமிழ் மேடைகளை நெடுங்காலமாய் தாங்கிப் பிடிக்கும் நாவன்மை மிக்க பேரறிஞர்கள்,பெரும்புலவர்.பா.நமசிவாயம்,
நாவுக்கரசர். சோ.சத்தியசீலன்,ஆய்வுரைத் திலகம் அறிவொளி,நகைச்சுவைத் தென்றல் இரெ.சண்முகவடிவேல் ஆகியோருக்கு வணக்கம் செலுத்தி விருதளித்த விழா,அனைத்து வகைகளிலும் அர்த்தமுள்ள விழா.

நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் திரு.திருச்சி சிவா விருதுகளை வழங்க, விருதாளர்களின் வியக்கத்தக்க மேன்மைகளை பேராசிரியர்.இரா.மாது அறிமுகம் செய்ய,
சொல்வேந்தர் திரு.சுகிசிவம்,அவர்களும் நானும் வாழ்த்துரை வழங்கினோம்.

என்னுடைய வாழ்த்துரையில்,
"சமயாச்சாரியர் நால்வர்,சந்தானக் குரவர்கள் நால்வர் என்பதுபோல் மேடைத்தமிழின் ஆச்சாரியர்கள் இந்த நால்வர்.
தமிழ் மேடைகள் என்கிற களத்தையும் தளத்தையும் வடிவமைத்துக் கொடுத்ததில்,இவர்களுக்கு மகத்தான பங்கு உண்டு.தமிழிலக்கிய மேடை என்பது யாரும் நடக்காத காட்டுப் பாதையாக இருந்தபோது,அதில் காலடிகள் பதித்து ஒற்றையடிப் பாதையை உருவாக்குவதில் வாரியார் சுவாமிகள்,கி.வா.ஜ.,பேராசிரியர் ராதாகிருஷ்ணன் போன்றோர் பெரும்பங்காற்றினர்.

அந்த ஒற்றையடிப் பாதையை நெடுஞ்சாலையாக விரிவு செய்ததில் இந்த நால்வருக்கு மகத்தான பங்கும் பணியும் உண்டு. திரு.சுகிசிவம்,இந்த நெடுஞ்சாலையை தங்க நாற்கர சாலைபோல் விரிவு செய்து கொடுத்ததால் அவர்களின் அடியொற்றி வந்திருக்கும் எங்கள் தலைமுறைப் பேச்சாளர்கள் எளிதாகவும் விரைவாகவும் பயணம் செய்ய முடிகிறது.இவர்கள் நால்வருமே திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் மேடைக்கு வந்தவர்கள்.ஆனால்,ஆன்மீகத் தமிழை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் திராவிட இயக்கங்களையும் எதிர்கொண்டு  வளர்ந்தார்கள்.எழுந்தார்கள்.
அதனால்தான் இந்த மேடையில் பக்தி சிவமும் இருக்கிறார். பகுத்தறிவு சிவமும் இருக்கிறார்"என்றேன்..

நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் திரு.சிவா பேசும்போது,
"தமிழகத்தில்தான் மக்கள் திரண்டு வந்து மேடைப்பேச்சைக் கேட்கும் முறை இருக்கிறது. இதனை மக்கள் மத்தியில் நிலைக்கச் செய்ததில் இந்த நால்வருக்கும் மகத்தான பங்கிருக்கிறது. இவர்கள் தமிழை மக்களை இணைக்கும் கருவியாகப் பயன்படுத்தினார்கள். இத்தனை ஆயிரம்பேர் இந்தக் கூட்டத்திற்கு வந்ததே அவர்கள் தமிழ்கேட்டு அவரவர்கள் வாழ்வில் பெற்ற உயரங்களுக்கு நன்றி செலுத்தத்தான்.தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டுமென்று நாடாளுமன்றத்தில் நான் தனிநபர் மசோதா கொண்டு வந்தேன்.
தமிழை மக்கள் உள்ளங்களில் நிலையான ஆட்சி செலுத்த வைத்த அறிஞர்களைக் கொண்டடுவது நான் கடமை. இவர்கள் இங்கே விருது பெற்றார்கள் என்று சொல்வது பிழை. விருதினை ஏற்றார்கள் என்று சொல்வதே முறை.

நான் என் கைகளில் விருதினை வைத்துக் கொண்டு அவர்களை ஏற்குமாறு கேட்டுக் கொண்டேன்.இவர்கள் பக்திநெறியை மக்கள் மத்தியில் கொண்டு செல்கிற போதும் தமிழைக் கொண்டு போய் சேர்த்தவர்கள்"  என்று புகழாரம் சூட்டினார்.

சொல்வேந்தர் திரு.சுகிசிவம் பேசும்போது "நாங்களெல்லாம் பேச்சாளர்களாக வசதியுடன் இருக்கிறோம்,விமானத்தில் பறக்கிறோம் என்றால்,அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்கள் இந்த நான்குபேர்கள். இவர்களுக்கு நன்றி செலுத்துகிற கடமை எங்களுக்கு உண்டு.இந்த விழாவில் கலந்து கொண்டு நன்றி செலுத்தும்  வாய்ப்பைத் தந்தமைக்காக
அமைப்பாளர்களுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.

ஒரு பேச்சாளன் என்பவன் தனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்பவன் அல்ல. எதிரில் இருப்பவர்களுக்கு என்ன தர வேண்டும் என்று சிந்தித்துப் பேசுபவனே சிறந்த பேச்சாளன்.
அவனுக்கு சமரசம் கூடாது. இந்த நான்குபெரும் சொன்னதையே திரும்பச் சொல்லும் பௌராணிகத்துக்கும் போகாமல் முழுக்கமுழுக்க கடவுள் எதிர்ப்பையும் மேற்கொள்ளாமல்  இரண்டுக்கும் நடுநிலையிலே நின்று தங்கள் கொடிகளை உயர்த்திப் பிடித்தவர்கள். அதனாலேயே இருதரப்பாரின் எதிர்ப்புகளையும் எதிர்கொள்ள வேண்டி வந்தவர்கள்.

இவர்கள் தமிழை ஆழ்ந்து கற்று அதன்வழியே மேடைக்கு வந்தவர்கள்.இன்று தமிழகத்தில் ஓர் ஆபத்தான சூழல் இருக்கிறது.ஆழ்ந்த புலமையோ சிந்தனைத் தெளிவோ இல்லாமல் வெறும் தொலைக்காட்சி புகழை வைத்துக் கொண்டே பெரிய பேச்சாளர்களாக சிலர் பிரபலம் ஆகிறார்கள்.
ஆனால் தங்கள் தகுதியாலேயே தலைநிமிர்ந்தவர்கள் இவர்கள்" என்றார்.

விழாவை பல மாதங்கள் முன்பே  கனவு கண்டு,திட்டமிட்டு வெற்றிவிழாவாக ஆக்கித்தந்தவர் நகைச்சுவை மன்ற செயலாளர் திரு,ஜி.சிவகுருநாதன். அவரே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மன்றத் தலைவர் திரு.பாலசுப்பிரமணியன் தலைமை தங்கினார்.அறங்காவலர்கள் டாக்டர் ஜெயபால்,திரு.செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அறங்காவலர் திருமதி கௌரி ஜெகதீசன் நன்றி நவின்றார்.

விழா நாயகர்கள் நால்வரில் மூவர் அரங்கை அலங்கரிக்க,
ஆய்வுரைத் திலகம் அறிவொளி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலும் விழா அரங்கிற்கு வெளியே ஆம்புலன்ஸில் படுத்திருந்த வண்ணமே சிறிது நேரம்  விழா நிகழ்வுகளைக் கேட்டுக் கொண்டிருந்தார் என்ற செய்தி அறிவிக்கப்பட்டபோது அரங்கம் நெகிழந்தது.தகைசால் தமிழறிஞர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்தியபடியே கலைந்து சென்றனர் பங்கேற்ற பொதுமக்கள்.

இன்று காலை கோவை திரும்பியதும் அந்த விழாவின் அதிர்வுகள் ஆழ்மனதில் நிறைவின் பாரத்தைத் தந்தன. எத்தனை சுகமான பாரமாயிருந்தாலும் எழுத்தில்தானே இறக்கி வைக்க முடியும்...

மலைக்கோட்டை நகர்முழுதும் மல்லி வாசம்
முழுநிலவைக் கண்டலர்ந்த அல்லி வாசம்
கலைக்கோட்டை அரண்களான நால்வருக்கு
கவின்மிக்க விழாக்கண்ட நன்றி வாசம்
தலைக்கோட்டை தமிழுக்கே இவர்தான் என்று
தாரணியே சொன்னாலும் அகந்தையின்றி
நிலைக்கோட்டை போல்நிற்கும் நால்வருக்கும்
நகைச்சுவைமன்றம் தெளித்த பன்னீர் வாசம்

பகைச்சுவையே அறியாத பண்பின் மிக்கார்
பெரும்புலவர் நமசிவாயம் அய்யாவுக்கும்
தொகைச்சுவையே அறியாமல் தொண்டுக்காக
திசையளக்கும் சத்யசீலன் அய்யாவுக்கும்
வகைவகையாய் தமிழ்நூல்கள் வடித்தளிக்கும்
வியனறிவு வித்தகராம் அறிவொளிக்கும்
நகைச்சுவையே வடிவான ஆருர்ச் செல்வர்
சண்முகவடிவேலர்க்கும் விருதுக் கோலம்

திருச்சியிலே வதிகின்ற தமிழர் எல்லாம்
திருவிழாக் கூட்டம்போல் தேடிவந்தார்
திருமுறைக்கு வழிவகுத்த நால்வர்போல
தமிழ்வளர்க்கும் நால்வரையும் வணங்கி நின்றார்
ஒரு-முறைக்கு செய்வதுபோல் இன்றி, உள்ள்ம்
ஒருமித்து விழாக்கண்ட உயர்ந்த பண்பால்
வருகின்ற தலைமுறைக்கும் பெருமை சேர்த்த
விழாக்குழுவை விருப்பமுடன் வாழ்த்தி நின்றார்

ஆயிரமாய் தமிழ்மக்கள் திரண்டிருந்தோம்
அவைமகிழ அவர்சிறப்பை நினைந்திருந்தோம்
தூயவர்க்கு விருதளித்து மகிழ்ந்திருந்தோம்
தொண்டுநலன் தனைநினைந்து வணங்கி நின்றோம்
தாயகமே!தென்தமிழே!குறளே!எங்கள்
தீஞ்சுவைசார் இலக்கியமே !திசைகள் எட்டே!
நாயகமாம் இவர்நால்வர் நலன்கள் வாழ்க
நாளெல்லாம் இவர்தொண்டில் தமிழும் வாழ்க!

Sunday, November 24, 2013

இந்த நம்பர் பிஸியாக உள்ளது

"அலோ!' மரபின்மைந்தருங்களா?"

"ஆமாங்க!வணக்கம்"

வணக்கம்யா! நீங்க ஏடு படிப்பீகளா?"

காலை ஆறரை மணிக்கு இந்த அழைப்பு வந்தபோது தஞ்சாவூர் ஞானம் ஹோட்டல் அறையில் பயணக்களைப்பு நீங்க படுத்துக் கிடந்த   எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"என்னங்க கேட்டீங்க?"

"அதாம்யா! ஏடு படிப்பீகளான்னு கேட்டேன்.எங்கூட்ல எங்க முப்பாட்டன் காலத்து ஏடுகள்லாம் கெடக்கு. நீங்க படிச்சுச் சொல்லுவீகளா?"

"அதெல்லாம் நமக்கு பழக்கமில்லையே"

"அப்படியா?பின்ன  நீங்க என்னமோ கவிஞ்சருன்னு போட்டிருக்கு!!"

"எதிலீங்க போட்டிருக்கு?"
"இன்னைக்கு தினமலருல ஒங்க போட்டா போட்டு நம்பரப் போட்டு கவிஞ்சருன்னு போட்டிருந்தது.நீங்க எழுதப் படிக்கத் தெரியாதுங்கறீய!"

"அய்யா! ஏடு படிக்கத் தெரியாதுன்னுதான் சொன்னேன்"

"அதாங்க நானுஞ் சொன்னேன்! வச்சுரவா"

சில வாரங்களுக்கு முன்னால் மதுரையில் இன்றைய  நெல்லை ஆட்சியரின் துணைவியும் கோவை மாநகரக் காவல்துறை துணை ஆணையருமான அமரர் திருமதி ஹேமா கருணாகரனின் படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசினேன்.அப்போது தினமலர் நாளிதழ் சார்பாக சந்தித்துப் பேசிவிட்டு தொலைபேசி எண்ணுடன் வெளியிடப் போவதாக சொன்னார்கள் .
அடுத்தடுத்து அழைப்புகள்."கவிதை எழுதி தமிழ் வளர்க்கும் ஆர்வம் இருந்தும் நேரம் கிடைக்கவில்லை.என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்கும் குரல்கள்,சினிமா பாடலாசிரியராக குறைந்தது எத்தனை கவிதை தொகுப்புகள் எழுதியிருக்க வேண்டும் என்ற சந்தேகம்.

"கண்ணதாசந்தான் ஒங்க கவிதை குரு ன்னு சொல்லியிருக்கீங்களே! நீங்களும் நாட்டுக்கோட்டை செட்டியாரா?"என்று கேட்ட ஒருவர் 'இல்லை' என்றதும் "அதனாலென்ன பரவாயில்லை" என்று போனை வைத்து விட்டார்.
அவரே சிறிது நேரத்துக்குப் பின் அழைத்து,"சார்! தப்பா நெனச்சுக்காதீங்க! நீங்க என்ன ஆளுங்க?" என்றார். "பிள்ளைமார்"என்றதும், "நெனச்சேன்! ஜெயகாந்தனை யாரும் தாண்ட முடியாதுன்னு சொல்லியிருக்கீங்களே!" என்றார்.

காலை தஞ்சாவூர் சித்த ஆஸ்ரம விழாவில் கலந்து கொண்டதால் போனை ஒலியெழுப்பா நிலையில் வைத்திருந்தேன்.பலர் அழைத்திருந்தார்கள்.
அந்தப் பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே ஒருவர் அழைத்தார். எடுக்கும் முன் துண்டித்தார். சாப்பிட்டு வருவதற்குள் அவரிடமிருந்தே நான்கைந்து அழைப்புகள்,வந்த வேகத்திலேயே துண்டிக்கப்பட்டன. திரும்ப அழைத்தேன். அவர் சற்று எரிச்சலுடன் பேசினார்.'சார்! ஒங்க தினமலர் பேட்டியை பார்த்துட்டு பாராட்டறதுக்காக ரொம்ப நேரமா மிஸ்டு கால் விட்டுகிட்டே இருக்கேன்..கூப்பிட மாட்டேங்கறீங்களே சார்!! "

Wednesday, November 6, 2013

சீண்டும் சவால்கள்



நாற்றுகளின் தலைகலைத்து நடக்கும் தென்றல்
நாளைகளின் மெல்லரும்பை சீண்டிப் பார்க்கும்
கீற்றுகளைக் கொட்டுகிற முழுவெண் திங்கள்
குளத்திலுள்ள அல்லிகளை சீண்டிப் பார்க்கும்
நேற்றுகளின் நினைவுகளோ இன்று வந்து
நிகழ்கணத்தை மெதுவாக சீண்டிப் பார்க்கும்
ஊற்றெடுக்கும் உன்சக்தி என்னவென்றே
உருவாகும் சவால்களெல்லாம் சீண்டிப் பார்க்கும்


தன்போக்கில் நடக்கின்ற நதிக்குக் கூட
தடைகள்தான் உந்துசக்தி யாகும்- இங்கே
உன்போக்கில் வாழ்வதென்று நினைத்தால் கூட
உலகத்தின் போக்குன்னை உந்தித் தள்ளும்
மின்போக்கில் போகுமொளி போலே நீயும்
முன்னேற்றப் பாதையிலே மோகம் கொண்டால்
முன்போகும் உன்பின்னே உலகம் போகும்
முன்வைக்கும் உன்னடிகள் பாதை போடும்

போர்வைக்குள் சுகங்கண்ட மனிதனுக்குப்
புதுவிடியல் புதிராகத் தோன்றும்-இங்கே
சோர்வுதனை சுட்டெரிக்கும் சுடராய் ஆனால்
சூரியப்பூ நீதிரும்பும் திசையைப் பார்க்கும்
தீர்வுகளை சாதிக்க நீயே போதும்
திணறல்தான் நீந்திவர நல்ல பாடம்
ஆர்வமெனும் ஆயுதம்நீ கொண்டால் போதும்
ஆயிரமாய் வெற்றிகளும் உன்னைச் சேரும்

(2013 நவம்பர் மாத "நமது நம்பிக்கை" மாத இதழில்... )

Saturday, November 2, 2013

-ஜெராக்ஸின் அசல் ஹீரோக்கள்


" இந்த பேப்பரை ஜெராக்ஸ் எடுத்துட்டு வாங்க"என்று நாம் சொல்லாத நாட்களே இல்லை.நகலெடுப்பதை ஆங்கிலத்தில் ஜெராக்ஸ் எடுப்பதென்றுதான் பலரும் சொல்கிறோம்.நியாயமாகப்
பார்த்தால் "ஃபோட்டோ காப்பி எடுத்து வாங்க" என்றுதான் சொல்ல வேண்டும்.நகலெடுக்கும் எந்திரத்தை
உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் ஜெராக்ஸ். இந்த டிசம்பர் மாதம் 19ஆம்தேதியுடன் ஜெராக்ஸ் நிறுவனத்தின் முக்கிய ஹீரோவுக்கு வயது 103.

ஜே.சி.வில்சன்
நியூயார்க் அருகிலுள்ள ரோசஸ்டர் என்னும் இடத்தில்,1909 டிசம்பர் மாதம் 19ஆம்தேதி பிறந்தார்ஜோசஃப் சேம்பர்லெய்ன் வில்சன்.இவரை செல்லமாக ஜே.சி.வில்சன் என்றே அழைப்போம். இவர்அசலா ஜெராக்ஸா என்று பார்த்தால் அசலென்றும் சொல்லலாம்.ஜெராக்ஸ் என்றும் சொல்லலாம்.
ஏனென்றால் இவருடைய தாத்தா பெயரும் ஜோசஃப் சேம்பர்லெய்ன் வில்சன்தான்.ஆனால் தாத்தாஅரசியல்வாதி.அவர்களுக்கு அரசியலை பரம்பரைத் தொழிலாய் செய்தால் நல்ல ஆதாயம் கிடைக்கும் என்ற
சூட்சுமம் புரியவில்லை.அதனால் அவருடைய மகன் ஜோசஃப்.ஆர்.வில்சன் ஹெலாய்ட் என்ற நிறுவனத்தைநிர்வகித்து வந்தார்.அவருடைய மகன்தான் ஜெராக்ஸின் அசல் ஹீரோ ஜே.சி.வில்சன்.
புகைப்படங்களை டெவலப் செய்வதற்குத் தேவையான ரசாயனங்களைத் தயாரித்து வந்தது ஹெலாய்ட்நிறுவனம்.தன் 21ஆவது வயதில் குடும்பத் தொழிலுக்கு வந்த ஜே.சி.வில்சன்,நகலெடுத்தலை எளிமையாக்க
சில ஆராய்ச்சிகளை ஆர்வமுடன் செய்து வந்தார்.இதன் விளைவாக 1930ல் அறிமுகமானதுதான் ஹெலாய்ட் ரெக்கார்ட். இது அந்தக் காலத்தில் நகலெடுக்கப் பயன்பட்ட காகிதத்தை விட மேம்பட்டதாய்
இருந்தது.அறிமுகமானதுமே அபார வெற்றியைப் பெற்றது ஹெலாய்ட் ரெக்கார்ட்.ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ.படித்தது வீணாகவில்லை என்று குடும்பம் அவரைக் கொண்டாடியது.
ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். உலகம் ரெண்டுபட்டாலும் சாமர்த்தியசாலிகளுக்குக் கொண்டாட்டம்தானே தவிர திண்டாட்டம் அல்ல.  இரண்டாம் உலக யுத்த காலத்தில் நகலெடுத்தல் தொடர்பான உற்பத்திகளில் அப்பாவும் பிள்ளையும் சுறுசுறுப்பாக
வேலை பார்த்து நல்ல காசு பார்த்தார்கள்.ஆனாலும் புதிய தலைமுறையில் பூத்த ஜே.சி.வில்சன்புதிய தொழில்நுட்பமே எதிர்காலத்திலும் தாக்குப்பிடிக்கும் என்று தீர்க்கமாக நம்பினார்.
"எங்கே?எங்கே?" என்று தேடலுடன் காற்றில் அலைந்த அவருடைய கைகளைப் பற்றிக் கொள்ள வேண்டிய ஒரு சாதனைக்கரமோ வாழ்க்கைச் சுழலிலிருந்து தன்னைக் கரை சேர்க்கக்கூடிய
ஆதரவுக் கரத்தைத்தேடி தத்தளித்துக் கொண்டிருந்தது.1906 பிப்ரவரி மாதம் எட்டாம் தேதிபிறந்த செஸ்டர் ஃபிலாய்ட் கார்ல்சன் (இனி செல்லமாய் கார்ல்சன்) நகலெடுப்பதை விரைவாகவும்
எளிதாகவும் ஆக்கும் முறைகள் பற்றி ஆய்வுகள் மேற்கொண்டிருந்தார்.
போராடித்தான் வாழ்வை நடத்தியாக வேண்டும் என்பது கார்ல்சனுக்குக் காலம் கற்றுத் தந்தபாடம்.17 வயதில் தன் தாயையும் 27 வயதில் தன் தந்தையையும் இழந்த கார்ல்சன் பள்ளிமாணவராய் இருக்கும்போதே குடும்பத்துக்கான சம்பாத்தியத்தை ஈட்டித் தர வேண்டியவர்
ஆகிவிட்டார்.பத்து வயதிலேயே பத்திரிகை நடத்திய கார்ல்சன்,அத்தை கொடுத்த பொம்மை டைப்ரைட்டரில்தான் விளையாடுவார்.இயற்பியல் பட்டப் படிப்பு முடித்த கார்ல்சன்வேலை கேட்டு விண்ணப்பித்தார்...விண்ணப்பித்தார்...விண்ணப்பித்துக் கொண்டேயிருந்தார்.
அப்படி அவர் விண்ணப்பித்த நிறுவனங்களின் எண்ணிக்கை 82!!
கார்ல்சன்
ஒருவழியாக பெல் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தின் காப்புரிமைப் பிரிவில்வேலை பார்த்ததால் தன் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வாங்கும் அவசியம் கார்ல்சனுக்குத்தெரிந்தது.வாரம் 35 டாலர்கள் சம்பளத்துக்கு வேலைபார்த்தபடியே தன் குறிப்பேட்டில் 400க்கும்
அதிகமான கண்டுபிடிப்புகளுக்கான யோசனைகளைக் குறித்து வைத்திருந்தார் கார்ல்சன்.
அவருடைய பரிசோதனைகளுக்கு அவர் மனைவி ஆதரவாய் இருந்தார்.பரிசோதனைக்கூடம்அமைக்க வசதியில்லை.தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டின் சமையலறைதான்
பரிசோதனைக்கூடம்.  சில நேரங்களில் பரிசோதனை ரசாயனங்கள் எசகுபிசகாகி மொத்தக் குடியிருப்பும் "லொக் லொக்" என்று இருமும்படியாக  புகை சூழ்ந்து கொள்ளும்.
அதிவிரைவில் நகலெடுக்கும் தொழில்நுட்பத்தை கார்ல்சன் கடைசியில் 
கண்டறிந்துவிட்டார்.ஆனால் அவர் கண்டுபிடிப்பை முக்கிய நிறுவனங்களுக்கு விற்க முனைந்தபோது,
"போங்க சார்! விளையாடாதீங்க!இதெல்லாம் சாத்தியமே இல்லை"என்று திருப்பிஅனுப்பிய திருவாளர்கள் பட்டியலில்,ஐபிஎம்,ரெமிங்டன்,ஜெனரல் எலக்ட்ரிக் போன்றஜாம்பவான்களும் உண்டு. தன் கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை 1942 அக்டோபர் 6ஆம் தேதி பெற்றார் கார்ல்சன்.
இதற்கிடையே வில்சனின் ஹெலாய்ட் நிறுவனத்தில் ஆராய்ச்சி இயக்குநராகப்பணிபுரிந்த ஜான்.ஹெச்.டெஸாவர், பழைய பேப்பர்களைப் புரட்டிக் கொண்டிருந்த போதுரேடியோ நியூஸ் என்ற பத்திரிகையில் கார்ல்சனின் கண்டுபிடிப்பு பற்றிய செய்திவெளியாகியிருந்தது.  ஹெலாய்ட் நிறுவனம் நகலெடுப்பதற்கான ரசாயனக் கலவை கொண்ட
காகிதத்தைத் தயாரிப்பது பற்றிய ஆய்வில் இருந்தது.ஆனால் கார்ல்சன்  மாற்றி யோசித்திருந்தார்.ஒரு ரசாயனப் பவுடரைக் கொண்ட கருவி போதும் என்றார் அவர்.1938ல் வடிவமைக்கப்பட்ட இந்தக் கருவிக்கு 
ஆறாண்டுகள் தாண்டி விடிந்தது.அதன்பின் இரண்டாண்டுகள் தீவிரமான முன்னேற்பாடுகள் நடந்தன.இன்னொரு நிறுவனத்துடன் இணைந்து ஹெலாய்ட் நிறுவனம் 1948ல் இந்த வசதியை மக்களுக்கு
அறிமுகம் செய்தது.
இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஜெராக்ஸ் நிறுவனம்,பிரம்மாண்டமாக வளர்ந்தது.1968ல்கார்ல்சன் அமெரிக்காவின் முக்கிய செல்வந்தர்களில் ஒருவராக பார்ச்சூன் பத்திரிகையில்
குறிப்பிடப்பட்டார்.காரணம் 1956 முதல் 1965 வரை காப்புரிமை வழியாக உலகெங்கும் எடுக்கப்படும் ஒவ்வொரு நகலுக்கும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கார்ல்சனுக்கு ராயல்டியாகக் கிடைத்தது!!!
தன் வாழ்வின் கடைசிக்காலத்தில் இந்து சமயத்தின் வேதாந்தத்திலும் ஜென் புத்த மார்க்கத்திலும்பேரார்வம் காட்டினார் கார்ல்சன்.முதல் மணமுறிவுக்குப்பின் அவர் வாழ்வில் வீசிய இரண்டாவது வசந்தமாகிய டோரியின் அறிமுகமே இந்த ஆன்மீகம்.1968 செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி கார்ல்சன் மறைந்தார்.
அவருடைய வெளிச்சத்தையும் சுபிட்சத்தையும் பகிர்ந்து கொண்ட ஜே.சி.வில்சன் 1971 நவம்பர் 22ல்மறைந்தார். நம்மூரில் அவர்கள் வாழ்க்கையை விளக்க கவியரசு கண்ணதாசனின் பல்லவி
ஒன்றே போதும்.. "இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கேதான் எதிர்காலம்! பகைவர்களே ஓடுங்கள்!புலிகள் இரண்டு வருகின்றன!"

(என்னுடைய 51 ஆவது நூலாகிய,"அறிய வேண்டிய ஆளுமைகள்" தொகுப்பில் இடம்பெற்ற கட்டுரை.வெளியீடு:விஜயா பதிப்பகம்)

Friday, November 1, 2013

சத்குரு சந்நிதி...

சத்குருவின் ஞானோதயத் தலம்..சாமுண்டி மலையில்...


பார்க்க நினைத்துத் தவித்திருப்பேன் -உனைப்
பார்த்ததும் கண்கள் பனித்துவிடும்
கேட்க நினைத்த கேள்விகளை -மனம்
கணப்பொழு துக்குள் தொலைத்துவிடும்
மூர்க்கத் தினவுகள் அவிந்தடங்கி-ஒரு
மழலையைப் போலெனைக் குழைத்துவிடும்
தீர்க்க முடியாப் புதிர்களையோ- உன்
தீட்சண்யப் பார்வை எரித்துவிடும்

அத்தன் அன்னை உடன்பிறந்தோர்-என
அத்தனை உறவுகள் இருந்துமென்ன
எத்தனை காதல் உன்னிடத்தில்-இது
எப்படி மலர்ந்தது என்னிடத்தில்
சித்தன் யோகி என்றெல்லாம் -உனை
சிமிழுக்குள் அடைக்க முடியாதே
பித்து மனதின் புலம்பலைப்போல்-நல்ல
பிரார்த்தனை பிரபஞ்சத்தில் கிடையாதே

சாமானியன் போல் தோன்றுவதும்-பல
சாகச விந்தைகள் பேசுவதும்
நாமம் தன்னைச் சொன்னாலே-அடி
நாபியில் புயலைக் கிளப்புவதும்
பூமி அண்டம் தனக்குள்ளே-எனும்
புனித அனுபவம் பெருக்குவதும்
ஆமாம் உனக்கே சாத்தியமாம்-நீ
ஆச்சரியங்களின் களஞ்சியமாம்

குவிந்த உன்னிரு கைகளிலே-இந்தக்
குவலயம் அடைக்கலம் ஆகிவிடும்
சிவம்தான் கனிந்த சுடர்விழியில்-ஒரு
சின்னப் புன்னகை கோலமிடும்
தவம்தான் எழுந்து நடந்தாற்போல்-மெல்லத்
திருவடி பதிக்கும் சத்குருவை
இவன்தான் பாடிட இயன்றிடுமோ-அந்த
இமயம் கைகளில் அடங்கிடுமோ

உன்னை குருவாய் அடைந்தவர்கள்-இந்த
உண்மைக்கு சாட்சியம் ஆகிடுவார்
உன்னை நன்றாய் உணர்ந்தவர்கள்-நீ
உலவும் உன்னதம் என்றறிவார்
ஜன்னல் பார்வை பார்ப்பவர்கள்-இந்த
ஜன்மத்தில் வானை உணர்வதில்லை
தன்னில் கதவுகள் திறக்காமல்-குளிர்
தென்றலை உணர்ந்தவர் எவருமில்லை

தீபாவளி வாழ்த்துகள்