Saturday, May 31, 2014

பட்சி சொன்னால் சரியாயிருக்கும்-4 (மொரீஷியஸ் பயணப் பதிவுகள்)


மொரீஷியஸ் பற்றி எழுதுகிற போது தலைப்பிலேயே பட்சியைக் கொண்டு வந்ததும் ஒருவகையில் பொருத்தமாகத்தான் இருக்கிறது.மொரீஷியஸின் சின்னமே டோடோ என்கிற பட்சிதான்.இந்த டோடோ பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பாகமொரீஷியஸின் பின்புலம் பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியம்.

மொரீஷியஸ் தீவு எரிமலையின் எச்சம்.அரிய வகை தாவரங்களும் பறவைகளும் மொரீஷியஸில் தோன்றின. அவற்றில் ஒன்றுதான் பழுப்புநிற டோடோ.வெவ்வேறு நாடுகளிலிருந்து அடிமைகளும் புலம் பெயர்ந்தோரும் மொரீஷியஸில் குடியேறினர்.

பதினாறாம் நூற்றாண்டில் டச்சு தேசத்தின் கிழக்கிந்திய கம்பெனி மொரீஷியஸில் காலூன்றியது.தொடர்ந்துகாலனிகளால் கைமாற்றப்பட்ட நாடு மொரீஷியஸ்.மொரீஷியஸின் வசீகர அழகு பற்றி வர்ணனைகளை வாரியிறைத்தும் கூட,டச்சு நாட்டுக்காரர்கள் தங்கள் ஆளுகையிலிருந்த மொரீஷியஸின் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் அதிகம் கவனம் செலுத்தவில்லை.

டச்சு நாட்டுக்காரர்களின் வளர்ப்பு மிருகங்களால் பெரும் தொந்தரவுகள் ஏற்பட்டன. நாய்களும் பன்றிகளும் அதுவரை மொரீஷியஸில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த கால்நடைகளையும் மான்களையும் துன்புறுத்தின.
டச்சு நாட்டுக்காரர்களின் ஆக்கிரமிப்பு படிப்படியாக சுற்றுxச்சூழல் அழிவுக்குக் காரணமானது.அவர்கள் டோடோ பறவை பற்றி கிண்டலும் கேலியுமான குறிப்புகளையும் சித்திரங்களையும் பதிவு செய்திருந்தார்கள்.உடல் கனமும் குறைவான சிறகுகளும் கொண்டு மிக மெதுவாக நகர்கிற அசட்டுப் பறவை" என்பது அவர்களின் பதிவு.

டோடோ புறா இனத்தைச் சேர்ந்த பறவை .இலட்சக்கணகான ஆண்டுகளுக்கு முன்னர் மொரீஷியஸுக்கு வந்ததென்றும் அதனால் தன் அலகுகளில் பாறைகளையே சுமக்க வல்லதென்றும் சொல்லப்படுகிறது.
ஒரு பறவை பறப்பதற்கான அவசியம் அதற்கான அச்சுறுத்தல்களின் அடிப்படையிலேயே நிகழ்கிறது.அந்த வகையில் பாதுகாப்பான சூழலில் பறக்கவே தேவையில்லாமல் டோடோக்கள் வளர்ந்தன. சாஸ்திரத்துக்காக,குறைந்தபட்ச சிறகுகளோடும் கூடுதல் எடையோடும் வளர்ந்து வந்த பறவை டோடோ.இந்தப் பெயரே டச்சுக்காரர்களால் சூட்டப்பட்டதென்றும்  போர்ச்சுகீசிய மொழியில் அதற்கு "அசடு" என்று பொருளென்றும் சொல்லப்படுக்கிறது.


புற்களாலும் பனையோலைகளாலும் கூடுகட்டும் டோடோ, உணவு ஏராளமாகக் கிடைக்கும்  காலமான மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடும்."ஒண்ணே ஒண்ணு,கண்ணே கண்ணு "என ஒரேயொரு முட்டை வைக்கும். முட்டைக்கருகே ஒரு வெள்ளைக் கல்லையும் வைக்குமாம். (கல்லுமுட்டை என்ற சொல் இப்படித்தான் வந்திருக்குமோ)இதற்குக் காரணம் பறவைகள் வாஸ்து சாஸ்திரமோ பட்சிகள் ராசிக்கல் ஜோசியமோ அல்ல.

முட்டைகளைக் காப்பாற்றுவதற்கான உத்தி.அடை காப்பதில் ஆண்டோடோவுக்கும் பெண் டோடோவுக்கும் சமத்துவம் உண்டு.இப்படி கூட்டி வாழ்விலும் நாட்டு வாழ்விலும் அமைதியை மட்டுமே அறிந்திருந்த டோடோ திடீரென்று வந்து சேர்ந்த மனிதர்களால் இரக்கமின்றி வேட்டையாடப்பட்டன. கடல் மாலுமிகள் டோடோ உப்புக் கண்டத்தை சப்புக் கொட்டி சாப்பிடத் தொடங்கினர். இதன் விளைவாக 17ஆம் நூற்றாண்டுக்குள் டோடோ பறவையினமே முற்றாக அழிந்து போனது.

ஆனால் 1601,1602 ஆண்டுகளில் வரையப்பட்ட ஓவியங்களில் டோடோ ஒல்லியாக,நீண்ட கால்கள் கொண்ட பறவையாக சித்தரிக்கப்பட்டுள்ளது.இந்த ஓவியங்கள் 1991ல் கண்டெடுக்கப்பட்டன.டச்சு தேசத்தைத் தொடர்ந்து பிரெஞ்சு தேசமும் பின்னர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் மொரீஷியஸை கைப்பற்றியது சுவாரசியமான வரலாறு.பிரஞ்சின் பிடியிலிருந்த மொரீஷியஸை 1809 ஆம் ஆண்டிலிருந்தே பிரிட்டிஷார் திட்டம் போட்டு வட்டம் போடத் தொடங்கினர்.

1810 டிசம்பரில் பிரிட்டிஷ் ஊடுருவலைத் தடுக்க முயன்ற பிரெஞ்சுப் படை தோல்வியைத் தழுவியது.முன்னதாக நவம்பரிலேயே 15,000 தரைப்படையினர்,20 போர்க்கப்பல்களுடன் பிரிட்டிஷ் படை மொரீஷியஸுக்குள் நுழைந்தது.அடர்ந்த வனப்பகுதியில் முதல் ஐந்து மைல்களைக் கடந்து வந்தது பிரிட்டிஷ் படை .ஆங்காங்கே பிரெஞ்சுப் படைகளின் பலவீனமான எதிர்ப்புகள்.

டிசம்பர் 2ஆம் பிரெஞ்சுப் படை அனுப்பிய சமாதான உடன்படிக்கையைபிரிட்டிஷ் படை நிராகரித்தது.டிசம்பர் 3ஆம் தேதி தன் ஆளுகைக்குள் மொரீஷியஸைக் கொண்டு வந்ததன் மூலம் இந்தியப் பெருங்கடலின் 73,426,000 சதுர கிலோமீட்டர்கள் கொண்ட கடல்பரப்பு பிரிட்டிஷ் ஆளுகைக்குள் வந்தது.

காலனி ஆதிக்கத்திற்குட்பட்ட நாடுகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுதந்திர வெளிச்சம் விழத் தொடங்கியது.ஆனால் மொரீஷியஸில் 1936 போராட்டம் இயக்கமாக வடிவம் பெற்று வலுப்பெற்றது.1942 ல் புதிய ஆளுநராகிய மெக்கன்ஸி கென்னடி, ஆட்சியாளர்கள் தேர்வுக்கான புதிய சட்டத்தை முன்வைத்தார்.32 பேர்களில் 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள். எட்டு பேர் நியமிக்கப்பட்ட அதிகாரிகள். எட்டுப்பேர் சமூகத்தின் அனைத்து தரப்பிலிருந்தும் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள். தேர்தலில் நிற்பவர்களுக்கு ரூ.200/ க்கு அதிகமான சொத்தும் ஆறாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழும் இருக்க வேண்டும்.இது பலத்த விவாதத்தை எழுப்பியது.

சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த தொழிலாளர் அமைப்பின் முன்னோடிகளான ஸீவோஸாகூர் ராம்கூலம்,தமிழராகிய ரங்கநாதன் ஸ்ரீநிவாசன் போன்றோர்குறிப்பிடத்தக்கவர்கள்.
மொரீஷியஸின் சுதந்திரத்திற்கு என் வயது. அதுவும் 1968 ல்தான் பிறந்தது.சுதந்திரம் பெற்ற மொரீஷியஸின் முதல் பிரதமராக ஸீவோஸாகூர் ராம்கூலம் பொறுப்பேற்றார். அடுத்து பிரதமரானவர்தான் கடந்த அத்தியாயத்தில் நாம் சந்தித்த இப்போதைய பிரதமர்.

( தொடர்வோம்)

Monday, May 26, 2014

அன்பும் சிவம்



புவனங்கள் எல்லாமே சிவசந்நிதி
பிரபஞ்சங்கள் முழுமைக்கும் அவனேகதி
தவறென்றும் சரியென்றும் சுழலும்விதி
சுடர்வீசும் மலர்ப்பாதம் சரணாகதி

அன்பேதான் சிவமென்று சிலர்பாடுவார்
அழிப்பேதான் தொழிலென்று சிலர்கூறுவார்
கண்மூன்று கொண்டானை யார்காணுவார்
கண்மூடி அமர்ந்தோரே சிவம்பேணுவார்

அடங்காத இருளோடு அவன்ராஜ்ஜியம்
அலைபாயும் மனதோடும் அவன்நாடகம்
ஒடுங்காத வரைதானே நவகாவியம்
ஒடுக்கத்தில் அசைவில்லா உயிரோவியம்

சங்கீதம் எல்லாமும் சிவன்பாடலே
சங்காரம் உயிர்ப்பெல்லாம் அவனாடலே
ஓங்காரப் பெண்ணோடு அவன் கூடலே
நீங்காத துணையிங்கு அவன்நீழலே

சித்தர்க்கும் முத்தர்க்கும் நெறிசொன்னவன்
பித்தேறும்  நரிதன்னைப் பரியென்றவன்
வித்தோடு உயிராகி விளைவானவன்
அத்தா என்றழுவார்க்கு அருளானவன்

நிலவுக்கு சடைமீது குடில்தந்தவன்
அரவுக்கு உடலெங்கும் இடம்தந்தவன்
கடல்தந்த நஞ்சுக்கும் கதிதந்தவன்
தமிழ்தந்த அம்மைக்குப் பதம்தந்தவன்

வானோடு ஒளியாகி இருளாகினான்
ஊனோடு உணர்வாகி உயிராகினான்
தேனோடு நிறமாகி சுவையாகினான்
தீயோடு காடேகி நடமாடினான்

துயர்மூடும் மருளுக்கு விடிவானவன்
உயிர்போகும் பாதைக்கு முடிவானவன்
உயர்வுக்கும் தாழ்வுக்கும் நடுவானவன்
கயிலாயன் அருளாளன் கருணாகரன்

Tuesday, May 20, 2014

எழிலேயென் அபிராமியே-2



புகைப்படத்தை புகைப்படம் எடுத்தவர் இசைக்கவி



முச்சந்தி நடுவிலொரு மலர்வீழ்ந்த தருணமந்த
 மென்காற்று பதறிடாதோ
உச்சரிக்கும் சிறுமழலை ஒலிமிழற்ற வாணியின்
உயிர்வீணை அதிர்ந்திடாதோ
பச்சைமயில் கால்மாற்றி பூந்தோகை விரிக்கையில்
பொன்னம் பலம் மிளிருமே
உச்சம்நான் தொடும்நேரம் உள்ளபடி மலைச்சிகரம்
ஓரங் குலம்வளருமே
அச்சமிலை அழுகையிலை அத்தனைக்கும் ஏற்பாடு
அன்றைக்கே செய்துவைத்தாய்
இச்சையுடன் சிவன்பார்க்க இருவிழிகள் மண்பார்க்கும்
எழிலேயென் அபிராமியே

 வீசுமொரு கவரியுடன் விதம்விதமாய் உபசாரம்
   விருப்பமுடன் ஏற்றவள் நீ
 தேசுசுகனல் ஐந்தினிடை திகழுமருட் கனலாக
 தூயதவம் நோற்றவள் நீ
 பேசுமருள் வேதங்கள் போயடைய முடியாத
பெற்றியெலாம் சேர்த்தவள் நீ
ஆசையுடன் தொழுகின்ற அடியார்கள் பக்தியின்முன்
ஆர்வமாய்த் தோற்றவள் நீ
ஏசிவரும் பகைவர்முனம் ஏழுலகும் ஆளும்நிலை
யாவும்தரப் பூத்தவள் நீ
ஊசிமுனை பக்தியையும் ஊதிப்பெரி தாக்குகிற
உயிரேயென் அபிராமியே


காடுகரை சேர்ப்பதுவும்  காசுபணம்  பார்ப்பதுவும்
கடைக்கண்கள் பார்த்ததாலே
மேடுபள்ளம் யாவினிலும் மேலேறி வந்ததுவும்
மாதுமனம் வைத்ததாலே
சூடும்புகழ் யாவையுமே சேருகிற நல்லவிதம்
சுந்தரியாள் தந்ததாலே
தேடும்வினை யாவையுமே தீர்ந்துபொடி யாவதுமுன்
திருக்கோயில் வந்ததாலே
ஏடுபெயர் சொல்லுவதும் மேடைகளில் வெல்லுவதும்
ஈகையென நீதந்ததே
தோடுதனை நிலவாக்கி நாடகங்கள் ஆடவந்த
தமிழேயென் அபிராமியே

Wednesday, May 14, 2014

வித்தகக் குழந்தை



ஆவின் மடியில் மாயனின் இதழ்கள்
அமுதம் பருகும் நேரம்
தாவி யணைக்கும் கன்னியருக்கும்
தாய்முலைகனிந்தே ஊறும்
கோவில் சிலையாய் கோதையும் நின்றாள்
கோலினை ஓங்கிய படியே
நாவில் வருடும் பசுவிடம் பெருகும்..
பாலும் ஆயிரம் படியே


பசுவின் காலைப் பற்றிய படியே
பரமன் பருகும் அழகு
கசியும் மடியில் கண்கள் பதித்த
கோபிகை நெஞ்சம் மெழுகு
திசைகள் எல்லாம் சலனம் இன்றித்
தாய்மைத் தவிப்பில் கரையும்
இசைக்கும் குழலும் இதழ்கள் பிரிந்த
 ஏக்கம் பெருகிப் பதறும்

மதுரா நகரில் தேவகி யன்னை
மடியும் அடையா மகிமை
இதமாய் சொரியும் பசுவும் அடையும்
இதுதான் கண்ணன் பெருமை
முதலும்  முடிவும் இல்லா இறைவன்
முட்டும் கன்றாய் ஆனான்
விதியை மாற்றும் விமலன் அழகன்
வித்தகக் குழந்தை ஆனான்

Saturday, May 3, 2014

குருசிவ அந்தாதி

 

பின்ன முடியாத பொன்வலையை வீசியே
என்னையும் உன்னையும் யார்பிடித்தார்?-சின்ன
இழையும் சுமையாய் இறுகும்,நாம் செய்யும்
பிழைகள் மலியும் பொழுது.


பொழுது புலருங்கால் பூவின் அரும்பு
தொழுதகை போலே திகழ -அழுததுளி
வெண்பனியாய் மின்ன, வருமே விடியலும்;
கண்பனித்தால் உள்ளே கனல்


கனலெரிய உள்ளே களங்கம் எரியும்
புனலொன்றும் ஊறிப் பெருகும்-அனலேந்தி
ஆடும் அழகன் அருட்கழலை எண்ணியெண்ணிப்
பாடும் பணியே பணி

பணிப்பொன்னில் தூசாய் பரமாநான் உன்னில்
அணியாயா வேனோ அறியேன் -பிணித்தவலை
தள்ளாத என்னையும் தாங்குகிற உன்கருணை
விள்ளாதோ வெய்ய வினை.

வினையென்ப தெல்லாம் விளைவித்தோன் நானே
மனையென்றும் செல்வமென்றும் மேயும்-கனைக்கறவை
பால்கொடுக்கும் என்றாவுன் பட்டி யிலேசேர்த்தாய்
கால்கொடுக்கும் நாளென்றோ கூறு.

கூறிலொரு பெண்கொண்ட கொற்றவா உன்பார்வை
மாறில் ஒருசருகாய் மண்வீழ்வேன் - நூறிலொரு
பங்கும் பயனில்லாப் பேதையை ஆட்கொள்ள
பொங்குமன்பில் நீதொடர்ந்தாய் பின்  

Friday, May 2, 2014

தீபத்தில் கொஞ்சும் தயை.


லம்யம் எனுமோர் லயமும் அதிர்வுடன்
நம்குரு நாதன் நவிலவே-செம்பிது
பொன்னாய்ப் புடமாக பொன்னம் பலமாக
அன்னான் நடமாடு வான்.

வான்மின்னல் கீற்றாய் வெயில்நிலவாய் நீர்த்தழலாய்
தேன்மெல்ல உள்ளே துளிர்க்குமே-நானென்னும்
ஒற்றைஅடை யாளம் உலகெங்கும் தானாக
பற்றோ கரையும் பனி.


பனிதங்கும் வேணியன்; பக்தை கரத்தே
கனிதங்க வைத்தகா ருண்யன் -இனியிங்கு
வந்துவந்து போகும் விதிமாற்றித் தன்கழலை
தந்துவந்து காக்கும் திறம்

திறம்தந்தான் பாடத் தமிழ்தந்தான் வாழ
அறம்தந்தான் அத்தனையும் தந்தான்- விறண்மிண்டர்
கோபத்துக் கஞ்சும் குணக்குன்றன் ஆரூரில்
தீபத்தில் கொஞ்சும் தயை.

 
தயையே வடிவானான் தாயொரு பாகன்
கயிலை மலையிலிடம் கொண்டான்-துயரேதும்
அண்டாமல் காக்கும் அருளாளன் தானிந்த
அண்டமெ லாமழிக்கும் ஆள்.

ஆளான சுந்தரர்ர்க்கும் ஆளாவான் நாலிரண்டு
தோளாட ஆடுகிற தாண்டவன் -மாளாமல்
தேவரெலாம் வாழவே தானள்ளி உண்டானே
ஆவலுடன் ஆலகா லம்