Tuesday, May 24, 2011

அடையாளம்



ரயிலில் என் பக்கத்து இருக்கையில் அந்தப் பெரியவர் அமர்ந்திருந்தார் என்றுதான் முதலில் நினைத்தேன்.உண்மையில் அந்த இருக்கையில் அவர் ஒரு தம்பூரைப்போல் சாய்த்து வைக்கப்பட்டிருந்தார்.சீரான இடைவெளியில் அவரிடமிருந்து ஹ்க்கும் ஹ்க்கும் என்று சுருதி சேராத முனகல்கள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.

அடுத்த இருக்கையில் அவருடைய மனைவி.இவருக்கு வயது எண்பத்தைந்துக்கு மேலிருக்கும்.அந்த அம்மையாருக்கு எழுபது வயதிருக்கும். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே வரிசையில் இடம்தரலாகாது என்னும் ரயில்வே விதிகளின்படி என்னிடமிருந்து இரண்டு மூன்று இருக்கைகள் தள்ளி அவர்கள் குடும்பத்தினர் இருந்தனர்.

திடீரென்று ஹ்க்கும் முனகல் நின்றது.ஈனஸ்வரத்தில் கிழவர் பேசத் தொடங்கினார்.இடப்பக்கம் இருக்கும் அவருடைய மனைவிக்கும், வலப்பக்கம் இருக்கும் எனக்கும் மட்டுமே கேட்கக்
கூடிய மெல்லிய குரலில் கேட்டார்,"இப்ப எந்த ஊருக்கு வந்திருக்கோம்? "அம்மையார் சற்றே உரக்கச் சொன்னார். "கோயமுத்தூர் வந்திருக்கோம்.
இப்ப ரயில்ல திரும்ப கும்மோணம் போறோம்".சில விநாடிகள் மௌனத்துக்குப்பிறகு பெரியவர் கேட்டார்."இங்க எதுக்கு வந்தோம்".மாமி பதில் சொன்னார்."நம்ம பையன் இந்த ஊர்ல இருக்கான்.அதான் வந்தோம்.அவன் ஆத்துல பத்துநா இருந்துட்டு ஊருக்குப் போறோம்".

அடுத்து பெரியவர் கேட்டார்."பையன் வரலையா?" "நம்மளை ரயில் ஏத்தி விட்டுட்டு பையன் ஆபீஸ் போயிட்டான்.பேரப்பசங்களும் மருமவளும் நம்மோட வர்றாங்க".மாமி சொல்லி முடித்ததும் பெரியவர் கேட்டார்,"ஆமாம்! நீ யாரு?"

எனது நெருங்கிய உறவினர் டி.எம்.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் நினைவு எனக்கு வந்தது.விடுதலை போராட்ட வீரராக விளங்கிய அவர் எனக்கு தாத்தா முறை.எங்கள் சின்னத்தாத்தாவின் தம்பி அவர்.அவருடைய கடைசி மகனுக்கு எங்கள் ஒன்றுவிட்ட அக்காவைக் கொடுத்திருந்தது.நான் கல்லூரியில் படித்த காலத்தில்  அக்காவைப் பார்க்க திருச்சிக்குப் போவேன்.முதலில் கே.கே.நகரில் குடியிருந்தார்கள்.வாசலில் நின்று மணியடித்தால் தாத்தா புன்சிரிப்புடன் வந்து கதவைத் திறந்து விட்டு உள்ளே போய்விடுவார். கதவைத் திறப்பதென்றால் தாழைத் திறப்பதல்ல. கம்பிக்கதவை உள்புறமாகப் பூட்டி வைத்திருப்பார். சாவி அவர் வசம்தான் இருக்கும்.திறந்துவிட்டுப் போனால்,புறப்படும் வேளையில் மீண்டும் திறவுகோலும் கையுமாய் தரிசனம் தருவார்.

மற்றபடி பெரும்பாலும் அறைக்குள்தான் இருப்பார்.அவருடைய அண்ணன் திருவெண்காடு டி.எம்.சீனிவாச பிள்ளை.ஓமந்தூராரின் மிக நெருங்கிய நண்பர்.அவரை பெரிய டி.எம்.எஸ்.என்றும் இவரை சின்ன டி.எம்.எஸ் என்றும் சொல்வார்கள். இருவருமே நல்ல உயரம். இரட்டையர்கள் இல்லையே தவிர அச்சு அசலாய் அதே முகஜாடை. மாநிறம். மீசையில்லா முகம்.கறுப்பு பிரேம் போட்ட கனத்த கண்ணாடி. எப்போதும் கதராடை. கே.கே.நகரிலிருந்து தில்லைநகர் போனபிறகும் திறவுகோல் திருப்பணி தொடர்ந்தது. ஒரு சின்ன வித்தியாசம்.மணியடித்தால் நிமிர்ந்து கூடப் பார்க்காமல் வந்து கதவைத் திறந்துவிட்டுப் போய்விடுவார்.அந்தச் சின்னப் புன்சிரிப்பும் காணாமல் போயிருந்தது.அவருக்கும் சேர்த்துவைத்து பாட்டி கலகலப்பாகப் பேசுவார்.திருமணமாகி முதல் முறையாக என் மனைவியை அழைத்துப் போயிருந்தேன்.பயணம் ஒத்துக் கொள்ளாமல் சோர்ந்து படுத்துவிட்ட என் மனைவியைப் பார்த்து யாருக்கும் கேட்காமல்-ஆனால்-என் மனைவிக்கு நன்றாகக் கேட்கும்படி பாட்டி என்னிடம் கேட்டார்,"இந்த நோஞ்சானை எங்கிருந்துடா புடிச்சுட்டு வந்தே?"

காலப்போக்கில் சின்ன டி.எம்.எஸ் தாத்தாவுடன் முதுமை விளையாடத் தொடங்கியது.அவருடைய ஞாபகங்களைப் பிடுங்கி ஒளித்து வைத்துக் கொண்டது.மனைவியை-மகன்களை-மருமக்களை பெயரன் பெயர்த்திகளை அவருக்கு முற்றாக அடையாளம் தெரியவில்லை. மகன்கள் அறைக்குள் வந்தால்,விருந்தாளிகள் என்று நினைத்து எழுந்து நிற்கத் தொடங்கினார்.கல்லூரிப் பருவத்தில் இருந்த பெயரன்களைக் காட்டி யாரென்று கேட்டால்,"டாக்டர்"என்றார்.

தாத்தாவின் ஞாபகங்களை மீட்க பெயரன்கள் சில முயற்சிகளைமேற்கொண்டார்கள். அவர் கோல்ட்ஃபிளேக் சிகரெட் பிடிப்பார். அந்த சிகரெட் பாக்கெட்டை கண்முன் ஆட்டிக் காட்டினார்கள்.அது என்னவென்றே அவருக்குத் தெரியவில்லை.பொழுதுபோக்குக்காக சீட்டு விளையாடுவார்.சீட்டுக் கட்டைக் காட்டினால் அதை வெறுமனே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.பெயரன்களில் ஒருவனுக்கு ஒரு யோசனை தோன்றியது."டேய்! தாத்தாகிட்டே பணத்தை நீட்டுங்கடா! என்ன
செய்றாருன்னு பார்ப்போம்".தன்முன் நீண்ட ஐந்நூறு ரூபாய் நோட்டை
உற்றுப் பார்த்தவர்,நடுங்கும் கைகளை நீட்டி வாங்கினார்."ஓஹ்ஹோஹோ!
தாத்தாவுக்கு பணத்தை மட்டும் தெரியுது டோய்!"


பேரன்களின் ஆரவாரக்குரல் அடங்குமுன் ஒரு காரியம் செய்தார்.ரூபாய்
நோட்டிலிருந்த காந்தி படத்தைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டு
ரூபாய் நோட்டைத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.கட்டிய மனைவிமுதல்
எல்லோரையும் பற்றிய நினைவுகளைப் பிடுங்கிக் கொண்ட முதுமையால்
காந்தியை மட்டும் தொட முடியவில்லை.அவருக்கு காந்தியை மட்டும்
 அடையாளம் தெரிந்தது.அவருடைய வாழ்வின் அடையாளமே அதுதான்

Tuesday, May 10, 2011

கண்ணதாசன் விருதுகள்-2011


கோவையில் இயங்கி வரும் கண்ணதாசன் கழகம் சார்பாக 2011 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களும், கவியரசர் கண்ணதாசனின் உதவியாளரும்-"என் அண்ணன் கண்ணதாசன்" நூலின் ஆசிரியருமான திரு.இராம.முத்தையா அவர்களும் விருதுகள் ஏற்கின்றனர்.

ரூ.50,000/ பணமுடிப்பும்,பட்டயமும் கொண்ட இந்த விருதுகளை, இலக்கிய ஆர்வலர் திரு.கிருஷ்ணக்குமார் தன் சொந்தப் பொறுப்பில் வழங்கி வருகிறார்.

இந்த விருதுகள் 26.06.2011 ஞாயிறன்று கோவை மணிமேல்நிலைப்பள்ளி நானி கலையரங்கில் நிகழவுள்ள முழு நாள் விழாவின்போது வழங்கப்படவுள்ளன.

2009 ஆம் ஆண்டுக்கான விருது,திரு.நாஞ்சில் நாடன்,பாடகி திருமதி.டி.ஆர்.எம் சாவித்திரி ஆகியோருக்கும்,2010 ஆம் ஆண்டுக்கான விருது திரு.கல்யாண்ஜி,பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் ஆகியோருக்கும் வழங்கப்பட்டன

Tuesday, May 3, 2011

இங்கே அவர்கள் இருந்தார்கள்

கைரேகை படிந்த கல் கவிதை நூலின் ஆசிரியர் யாழி,அவ்வப்போது குறுஞ்செய்திகளாய் சில கவிதைகள் அனுப்புவார். பெரும்பாலும் அவருடைய கவிதைகள்.மற்றபடி அவர் ரசித்த வரிகள்-யார் எழுதினார் என்ற குறிப்புடன். எனவே அவர் அனுப்பும் குறுஞ்செய்திகளை, "இது யார் கவிதை"என்று அறிந்து கொள்ள முதலில் கீழே பார்ப்பேன். இன்று காலை அவர் அனுப்பிய குறுஞ்செய்தியில் க.முருகனுக்கு கண்ணீர் அஞ்சலி என்ற குறிப்பும் இருந்தது.யாழியை அழைத்து , க.முருகன்  யாரென்று கேட்டேன். திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞராம். குறுஞ்செய்தியில் கவிதை அனுப்பும் வட்டத்தைச் சேர்ந்தவராம். அந்தஇளைஞரின் தொழில் ஆடுமேய்த்தல். அவர் நேற்று (ஏப்ரல் 30) திண்டுக்கல்லில்இடிதாக்கி இறந்ததாக யாழி தெரிவித்தார். க.முருகனுக்கு அஞ்சலியாக யாழி எழுதியிருந்த வரிகள்....

"திக்கற்றுத் தவிக்கின்றன
நல்மேய்ப்பனைத் தொலைத்த
ஆடுகளும்...."

யாழியின் குறுஞ்செய்தி வந்தடைந்தபோது, தஞ்சாவூரிலிருந்து திரும்பும் வழியில் கரூரில் நின்றிருந்தேன். முதுபெரும் புலவர் திரு. லியோ இராமலிங்கம் மறைவுக்காக தஞ்சாவூர் சென்றிருந்தேன்.என் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் வெற்றித் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளருமான தஞ்சை செழியன் அவர்களின் தந்தையார் புலவர் லியோ ராமலிங்கம். நாவலர் நெடுஞ்செழியன் மீதுள்ள மாறாப்பற்றால்,தன் மூத்த மகனுக்கு நெடுஞ்செழியன் என்றும், இளைய மகனுக்கு செழியன் என்றும் பெயர் வைத்தவர் அவர். எழுத்து பேச்சு விழாக்கள்அமைப்பு என்று இறுதி வரையில் இயங்கிய அவரின் பெயர் இராமலிங்கம்தான். பெயருக்கு முன்னால் லியோ என்று அவர் போட்டுக்கொள்ளத் தொடங்கியதற்குக் காரணம்,அவர் ஒருதலையாய்க் காதலித்த பெண்ணின் பெயர் லியோ. அவருடன் தமிழ்படித்த காலத்திலேயே  தன் காதலை வெளிப்படுத்தியபோதும் லியோ மறுத்துவிட்டார். காரணம்,லியோ ஒரு கன்னியாஸ்திரி!!

துறவு வேண்டாம் உறவு வேண்டும் என்று வலியுறுத்தி,இலக்கிய மேற்கோள்களுடன் பக்கம் பக்கமாய் இராமலிங்கம் லியோ அவர்களுக்குஎழுதிய கடிதங்களும், அவரது காதல் போராட்ட அனுபவங்களும் நூலாகவெளிவந்துள்ளன.தன் மார்க்கத்தில் தீராப் பிடிப்புள்ள லியோ, தாயன்புடன் இந்தக் காதலை மறுக்க, மனந்தளராமல் நெடுக முயன்று பல இன்னல்களுக்குப் பின் அந்த முயற்சியை வருத்தத்துடன் கைவிட்டார் இரமலிங்கம் அவர்கள். லியோ அவர்கள் பெயருக்குப் பின்னால் தன் பெயர் அமையவேண்டும் என்ற ஆசை கை நழுவிப்போனதில் தன் பெயருக்கு முன்னால் லியோ என்று போட்டு மன அமைதி கொண்டார் திரு.லியோ இராமலிங்கம். அவருடைய காதல் கள்ளங்கபடமற்ற அன்பில் முகிழ்த்தது என்பதற்கு அடையாளமாய் எத்தனையோ நிகழ்வுகள். தன் பெயர்த்திகளை. லியோ அம்மையார் பணிபுரிந்தசமய நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று ஆசி பெறச் செய்வார் அவர்.

கண்ணதாசன், தமிழ்வாணன் போன்றோருடன் நெருங்கிப்பழகி,ஆன்மீக ஈடுபாட்டுடன் எழுபத்தைந்தாவது வயதில் மறைந்த அந்தப் பெரியவருக்குஅஞ்சலி செலுத்தித்திரும்பும்போதுதான் இந்தச் செய்தி.

இயக்குநர் திரு.பாண்டியராஜனின் தாயார் திருமதி சுலோச்சனா அம்மையார் சமீபத்தில் மறைந்தார்.ஏப்ரல் 27ல் திரு.பாண்டியராஜன் அவர்களிடம் துக்கம் கேட்கப் போனபோது அவர் சுமைதாள மாட்டாமல் பகிர்ந்து கொண்ட நினைவுகள் அருமையானவை.

திரைப்படம் ஒன்றிற்காக ஒப்பந்தம் செய்ய வந்த மேஜர் சுந்தர்ராஜன், புதுமையாக இருக்கட்டும் என்று மூன்றரை இலட்சம் ரூபாய்களை இரண்டு ரூபாய். ஐந்து ரூபாய் நோட்டுக்களாக மாற்றி ஒரு பிளாஸ்டிக் மூட்டையில் கட்டி பாண்டியராஜனிடம் தந்தாராம். அந்தபிளாஸ்டிக் மூட்டையை தன் தாயின் காலடிகளில் வைத்து வணங்கி எழுந்த பாண்டியராஜனிடம் அம்மா சொன்ன வார்த்தைகள்,"பார்த்துடா கண்ணு!போலீஸ் பிடிசுக்கப் போவுது!"

பல்லவன் பேருந்து ஓட்டுநர் திரு.ரத்தினம் அவர்களின் மனைவியாக வாழ்ந்து விடலைப்பையனையும், குஞ்சு குளுவான்களாக இருந்த பெண் குழந்தைகளையும்  விட்டு கணவர் மறைய அவர்களை ஆளாக்கிய சுலோச்சனா அம்மையார், ஆயுசு முழுக்க தன் அப்பாவித்தனத்தையும் வளர்த்திருந்தார். சில உறவினர்களின் வீடுகளுக்குப் போகும்போதெல்லாம் சில திரைப்பட ஷீல்டுகள் அவர்கள் வீடுகளில் இருப்பதை கவனித்திருக்கிறார் பாண்டியராஜன். அவர்கள் இந்தப் படதில் நடித்தார்களா என்று ஆச்சரியமாகக் கேட்டபோதுதான் விஷயம் புரிந்தது. தன்னைக் காண வரும் உறவினர்களுக்கு வேஷ்டி புடவை கொடுத்து மரியாதை செய்யும்போது தன் மகன் நடித்தபடங்களின் வெற்றிவிழா ஷீல்டுகளையும் தந்தனுப்புவாராம் அம்மா.

பல அயல்நாடுகளுக்கு அம்மாவை அழைத்துச்சென்ற பாண்டியராஜனின்மனதில் நீங்காத நினைவுகளில் ஒன்று, தன் இரண்டாவது படமே படுதோல்விஅடைந்தபோது நடந்த சம்பவம்.மனைவிரெடி படம் வெளிவந்த காலத்தில், எண்பதுகளில்,13,40,000 ரூபாய் நஷ்டமாகி முட்டி மோதி கதறி அழுது புரண்டபாண்டியராஜன் அருகே அமர்ந்து தன் பிரார்த்தனை
உண்டியலை உடைத்து முவாயிரம் ரூபாய்களை நோட்டும் சில்லறையுமாய் எண்ணி,கைகளில் தந்து,"இந்தா கண்ணு ! இத வச்சுக்க"என்று தந்த நடுங்கும் கரங்கள் இன்றும் அவர் கண்முன்னே வந்து போகின்றன.

எளிய மனிதர்களாகிய இவர்கள் தங்கள் அன்பால் காதலால் கவிதையால் இந்த பூமியை இன்னும் அழகாக்கிவிட்டு புறப்பட்டு விட்டார்கள். இந்த மூவருக்கும் இதய அஞ்சலி