Monday, December 31, 2012

இறைவன் விரும்பினால்...



என்முன் வருகிற காலங்களை
இன்னும் திடமாய் எதிர்கொள்வேன்
பொன்னினும் விலைமிகு பொருளென்றே
பொழுதுகள் தம்மை மதித்திருப்பேன்
இன்னமும் செய்ய ஏராளம்
என்பதை உணர்ந்தே உழைத்திருப்பேன்
இன்னொரு மனிதரை எண்ணாமல்
என்னை நானே ஜெயித்திருப்பேன்

எவர்க்கும் தந்தது போலேநான்
எனக்கும் நேரம் ஒதுக்கிடுவேன்
கவிதைக் கணங்களை சேகரித்து
கருவூலத்தில் காத்திடுவேன்
தவங்கள் முயல்கையில் வாழ்விங்கே
தளிர்க்கும் என்பதை உணர்ந்திடுவேன்
தவறுகள் செய்தால் பதறாமல்
தாண்டி வரவே முயன்றிடுவேன்

உள்ளம் பதறும் போதெல்லாம்
உயிர்ப்பூ வாடும் என்றுணர்வேன்
வெள்ளம் போலே உணர்வெழுந்தால்
வேகத் தடுப்புகள் எழுப்பிடுவேன்
கள்ளம் இன்றிப் புன்னகைப்பேன்
கபடுகள் இன்றிப் பேசிடுவேன்
அள்ளிக் கொடுக்கா விட்டாலும்
ஆன வரையில் கொடுத்திடுவேன்

எல்லோரிடத்திலும் குறையுண்டு
என்பதை உணர்ந்தே வாழ்ந்திடுவேன்
சொல்லால் செயலால் முடிந்தவரை
சிரமங்கள் நீக்க முனைந்திடுவேன்
இல்லாத ஒன்றுக் கேங்காமல்
இருப்பவை எதையும் இழக்காமல்
எல்லாம் அறிந்ததாய் எண்ணாமல்
என்னைப் பொறுப்பாய் இயக்கிடுவேன்

ஆற்றல்,திறமை எல்லாமே
ஆண்டவன் தந்தது என்றறிவேன்
காற்று வீசும் பொழுதறிந்து
கைவசம் உள்ளவை விதைத்திருப்பேன்
நேற்றின் தவறுகள் தொடராமல்
நேசத்தின் தீபம் அணையாமல்
மாற்றங்கள் நிகழ்வதை மதித்திருப்பேன்
மகிழ்ச்சிகள் மலர்த்த முனைந்திருப்பேன்





Saturday, December 29, 2012

சூர்ய குண்டம்

          
சூர்ய குண்டம் சூர்ய குண்டம்
சூர்ய குண்டம் சூர்ய குண்டம்


கங்கையுடன் காவிரியும் சங்கமமாய் பொங்கும்

எங்குமுள்ள தீர்த்தங்களும் இங்குவந்து தங்கும்

வானமழை வந்துவந்து தேனமுதம் சிந்தும்

ஞானியெங்கள் சத்குருவும் தந்தருளும் குண்டம்


சூர்ய குண்டம் சூர்ய குண்டம்
சூர்ய குண்டம் சூர்ய குண்டம்



மூழ்கவரும் யாவருக்கும் நன்மைதரும் லிங்கம்

பாதரசம் சக்திதரும் தூயரச லிங்கம்

ஏழுலகும் காணவரும் காட்சியிந்த குண்டம்

தீர்த்தமென்னும் அற்புதத்தின் சாட்சிசூர்ய குண்டம்



சூர்ய குண்டம் சூர்ய குண்டம்

சூர்ய குண்டம் சூர்ய குண்டம்



தத்ததிமி தோம்திதிமி தாளமிடும் வண்ணம்

சக்திமிகும் தாண்டவமாய் சலசலக்கும் குண்டம்

நித்தம்நித்தம் தேடிவந்து நாமிறங்கும் குண்டம்

தேகநலம் ஞானநலம் தந்தருளும் குண்டம்


சூர்ய குண்டம் சூர்ய குண்டம்
சூர்ய குண்டம் சூர்ய குண்டம்



ஞானவாசல் திறந்துவைக்கும் தியானலிங்கம் இங்கே

தியானவிதை முளைக்கவைக்கும் தீர்த்தகுண்டம் இங்கே

ஊனுடம்பின் உள்ளிருக்கும் தேன்துளியைத் தொடலாம்

ஆனவினை தீர்ந்திடவே யாருமிங்கு வரலாம்

Thursday, December 27, 2012

ஆருத்ரா நடனம்


ஆடும் திருவடி தெரிகிறது
ஆனந்தம் அலைபோல் எழுகிறது
பாடும் திருமுறை ஒலிக்கிறது
பரமனின் திருவருள் இனிக்கிறது

ராவணன் தோள்களில் பதிந்தபதம்
ஜாமத்தில் சுடலையில் உலவும் பதம்
ஆரூர் வீதியில் நடந்த பதம்
ஆடிய பாதமே சாசுவதம்

தீயென எழுந்தது திருமேனி
தாமரைப் பதந்தனில் இவன்தேனீ
தாயென்றும் வருவான் சிவஞானி
தாண்டவ ஜதிசொல்லு மனமேநீ

காலனை உதைத்தது சிவபதமே
காசியில் நடந்ததும் சிவபதமே
மூலமும் முடிவும் சிவபதமே
முக்தி தருவதும் சிவபதமே

முனைவர் குடவாயில் பாலசுப்பிர​மணியன் உரை

என்னுடைய 50ஆவது நூலாகிய திருக்கடவூர் பற்றி தமிழகத்தின் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்களில் ஒருவராகிய முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்அவர்கள் நிகழ்த்திய திறனாய்வுரையினை இக்காணொளியில் காணலாம்.இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நண்பர் தஞ்சை செழியன் அவர்களுக்கு நன்றி.

http://www.youtube.com/watch?v=5M1kn-mpTdw

Wednesday, December 26, 2012

சத்குரு கருத்தோட்டத்தில் இந்தத் தமிழோட்டம்

                   

(சத்குரு தந்த கருத்தோட்டத்தின் அடிப்படையில் சூர்ய குண்டம் பிரதிஷ்டைக்காக எழுதிய பாடல் இது)

பல்லவி

தண்ணீரே தண்ணீரே

பூமியின் உயிரே நீதானே

மண்ணோடும் விண்ணோடும்

ஆள்கிற அழகே நீதானே



தாகம்தீர தாகம்தீர உன்னைக் குடித்தேனே

தீர்த்தமென்று தேடிவந்து உன்னில் குளித்தேனே

மூழ்கி மூழ்கி எழுகிறேன்

மீண்டும் உன்னில் விழுகிறேன்

மடியில் என்னை ஏந்திக் கொள்ளுவாயே

அலைகளாக வந்து துள்ளுவாயே



சரணம்-1

மீன்களின் தாயகம் நீயென்று நினைந்தேன்

எனக்கும் தாய்மடி நீயென்று தெளிந்தேன்

உன்னில் தானே உயிர்வரை நனைந்தேன்

மலராய் இலையாய் உன்மேல் மிதந்தேனே

சரணம்-2

நீயில்லாமல் உயிர்களும் இல்லை

நீயில்லாமல் பூமியும் இல்லை

நீதான் நீதான் வாழ்க்கையின் எல்லை

நீதரும் சுகம்போல் வேறெதும் இல்லை


சரணம்-3
உன்னில் நானும் கலக்கிறேன்

என்னில் நீயும் கலக்க வா

இன்பமாகக் கலந்து போகலாம்

இன்னும் இன்னும் கொண்டாடலாம்
















Monday, December 24, 2012

நாகப்பாம்பே- சத்குரு கவிதை-தமிழில்

(நாகப்பாம்பு பற்றிய சத்குருவின் ஆங்கிலக் கவிதையை வாசித்தேன்.
அதைத் தமிழில் எழுத முயன்றேன்)

பூமியிலே தவழ்ந்து போகும் நாகப்பாம்பே- நீ

புற்றுக்குள்ளே ஒளிந்திருப்பாய் நாகப்பாம்பே

மேனியெங்கும் கோடுகொண்டாய் நாகப்பாம்பே-நீ

நீலநஞ்சை சேர்த்துவைத்தாய் நாகப்பாம்பே



சாம்பசிவன்தலையிலேஏறும் மாயமென்னவோ-அட

நாகப்பாம்பே உனக்கிருக்கும் மேன்மை என்னவோ

உன்னிடத்தில் உள்ள்ள ஏதோ தன்மையைக் கண்டே-அட

பொன்னுடலில் ஆடிவர பரமன் அழைத்தான்

ஆபரணம் ஆக உன்னை அய்யன் அணிந்தான் -நீ

ஆசையுடன் அவன்தலைமேல் ஏறியமர்ந்தாய்



ஊர்ந்துபோகும் சின்னஞ்சிறு ஜீவனல்லவா-இந்த

உயர்ந்தநிலை அடைந்ததென்ன? சொல்ல நீயும்வா

சொல்லிவிடு சொல்லிவிடு நாகப்பாம்பே-அந்த

ஒன்றைமட்டும் சொல்லிவிடு நாகப்பாம்பே



ஈசனவன் நேசத்தினை எப்படிப் பெற்றாய்-நீ

என்ன என்ன குணங்களினால் இந்நிலை உற்றாய்

நீயுமந்த ரகசியங்கள் சொல்லிக் கொடுத்தால்

நானும்,அந்த ஈசனவன் அன்பைப் பெறுவேன்



ஆபரணமாய் சிவனும் என்னை அணிய வேண்டாம்-அவன்

பாதத்திலோர் தூசெனவே வாழ்ந்து கிடப்பேன்

மார்க்கமொன்று சொல்லிவிடு நாகப்பாம்பே-நீ

கேட்டதெல்லாம் ஆசையுடன் நானும் கொடுப்பேன்



Friday, December 21, 2012

நாகதோஷம் என்றால் என்ன? சத்குரு புதிய விளக்கம்

             

சூர்ய குண்டம் பிரதிஷ்டையின்போது பாம்பு பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு சத்குரு விளக்கமளித்தார்.அப்போது நாகதோஷம் என்றால் என்ன என்றொரு கேள்வியை தியான அன்பர் ஒருவர் கேட்டார். அதற்கு மிகவும் புதிய பரிமாணம் ஒன்றில் சத்குரு வழங்கிய விளக்கம் அனைவரையும் வியப்பிலாழ்த்தியது.

"நாகதோஷம் என்பதன் வேறொரு பரிமாணத்தைப் பார்த்தால்,அது பாம்போடு தொடர்பு கொண்டிருக்க வேண்டுமென்று அவசியமில்லை.உங்கள் மூளையின் சிறுபகுதி ஒன்று உங்களை சில எல்லைகளை வகுக்கச் செய்கிறது.அது வாழ்க்கை பற்றிய சில எச்சரிக்கைகளை உங்களுக்கு வழங்குகிறது.சில அச்சங்களை ஏற்படுத்துகிறது.மூளையின் உட்பகுதி ஒன்று இந்தவிதமாக செயல்படுகிறது.பலர் அந்த எல்லைகளுக்கு உட்பட்டே வாழ்கிறார்கள்.இந்த உலகில் பெரும்பாலானவர்கள் விடுதலையை நோக்கி நடையிடுவதில்லை. தொடர்ந்து தங்களை எதனோடாவது அல்லது யாருடனாவது பிணைத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள்.உங்களை ஏதேனும் ஓர் எல்லைக்குள் உங்கள் எண்ணங்கள் தொடர்ந்து
பிணைத்துக் கொண்டேயிருந்தால் அது மிகவும் மோசமான நாகதோஷம்.

நாய் தான் வசிக்கும் பகுதியைச் சுற்றி ஆங்காங்கே சிறுநீர் கழித்துக் கொண்டே போகிறது.அதற்கு சிறுநீர் கழிக்கும் வியாதியில்லை .தன் எல்லையை நிர்ணயிக்கிறது. அதுபோல் எதற்குள்ளாவது யாராவது சிக்கிக்
போவது மிகவும் மோசமான நாகதோஷம்.மூளையின் வெளிப்பகுதி,விடுதலை நோக்கி உங்களை உந்துகிறது.அதுதான் தேடலை பலப்படுத்துகிறது.இயற்கையுடன் உங்களை இயைந்து வாழச் செய்கிறது.
அதை நோக்கிப் போவதே விடுதலை.

உங்களைப் பிணைக்கிற நகதோஷத்திலிருந்து எப்படி விடுபடுவது என்றும் யோகமரபில் சொல்லப்பட்டிருக்கிறது.சுருண்டு படுத்திருக்கும் பாம்பு நகர்ந்து தன் எல்லையை விட்டு எழுவதே விடுபடுகிற வழி.அதுபோல் உங்கள் சக்திநிலை ஓர் எல்லைக்குள் இல்லாமல் எழத்தொடங்குமேயானால்மனிதப்பிறவி என்ற எல்லையையும் தாண்டி உங்களால் நகர முடியும்.இந்த நாகதோஷத்தைத் தாண்ட இதுதான் சரியான பாதை.

மற்றபடி உலகியல் நிலையில் நாகதோஷம் என்றால் அதற்கு வேறு சில அறிகுறிகள் உண்டு.சில நாட்பட்ட நோய்கள் எந்தவிதமான சிகிச்சைக்கும் குணமாகாமல் பலன் தராமல் தொடர்ந்தால் அது நாகதோஷம். எல்லோருக்கும் பொதுமைப்படுத்திச் சொல்ல முடியதென்றாலும் சிறுநீர்த்தடத்தில் ஏற்படக்கூடிய சில தொற்று நோய்கள் நாகதோஷத்தால் வருபவை.சில வகையான சரும நோய்கள் நாகதோஷத்தால் வருபவை.சிலருக்கு தோல் செதில்செதிலாக உரியும். இது நாகதோஷத்தின்
அடையாளம்.சிலருக்கும் எலும்புகள் இறுகி உடம்பே பாறைபோல் ஆகும்.இதற்கு மருத்துவத்தில் எந்த மருந்தும் இல்லை. ஆனால் ஈஷாவுக்கு வந்த ஒருவர் இங்கேயே தங்கி பல ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டு முழுமையாக குணமடைந்தார். எலும்பு இப்படி இறுகிப் போவதும் நாகதோஷத்தின் விளைவுதான்.சில நாகதோஷங்கள் உளவியல் சார்ந்த கோளாறுகளாக வெளிப்படும்

நாகதோஷத்தால் ஏற்படக்கூடிய நோய்கள் எவ்வளவுதான் மருத்துவம் செய்தாலும் குணமாகாமலேயேஇருந்து கொண்டிருக்கும்.ஆனால் குறிப்பிட்ட சக்திநிலையில் இருக்கும் சில கோவில்களுக்குப் போனாலே
இது குணமாகும்.சில அர்ப்பணங்களை செய்தாலே சரியாகிவிடும்.அத்தகைய தன்மைகள் கொண்டஆலயங்கள் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியவில் நிறைய உள்ளன" என்றார் சத்குரு.

Wednesday, December 19, 2012

உலகம் அழிகையில் சிவனென்ன செய்வார்?


அழித்தலுக்கான கடவுளென்று சிவனைச் சொல்வார்கள்.அவன் ஆடுமிடம்
சுடுகாடென்பார்கள்.அவனுக்கு தாய்தந்தை இருந்திருந்தால் இப்படி மயானத்தில் ஆட விட்டிருப்பார்களா என்று பாடியவர்கள்சிவனடியார்கள்.

அடியவர்களிலேயே சிவனுக்கு அம்மா முறை கொண்டாடியவர்
காரைக்கால் அம்மையார்.கொண்டாடியவர் அவர் மட்டுமல்ல.
சிவனும்தான். பேய்வடிவெடுத்து காரைக்கால் அம்மையார் கயிலாயம்
செல்லும்போது பார்வதி இவர் யாரென்று கேட்க,"வருமிவள் நம்மைப்பேணும் அம்மை காண்"என்றாராம் சிவபெருமான்.
பார்வதிக்கு மாமியாரைத் தெரியாத போதும் காரைக்காலம்மையாருக்கு
மருமகளைத் தெரிந்தே இருக்கிறது. "நீதான் சுடுகாட்டில் ஆடிப் பழகி விட்டாய்.அவள் சின்னப்பெண்.அவளையும் உன் இடப்பாகத்தில்
வைத்துக் கொண்டு சுடுகாட்டுக்குப் போய்விடாதே.பாவம் பயந்துவிடப்போகிறாள்"என்று பாடியவர் அவர்.

"குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத்(து)
எழிலாக வைத்தேக வேண்டா - கழலார்ப்பப்
பேரிரவில் ஈமப் பெருங்காட்டிற் பேயோடும்
ஆரழல்வாய் நீயாடும் அங்கு."

ஆனால் தன் பிள்ளை மயானத்தில் கையில் நெருப்பை ஏந்தியாடும்
அழகை அவர் ரசிக்காமல் இல்லை.கையில் அனலேந்தியதால் சிவனின்
உள்ளங்கை சிவந்ததா,அல்லது சிவனின் உள்ளங்கையைத் தீண்டியதால்
நெருப்பு சிவப்பாக இருக்கிறதா என்ற சந்தேகம் அவருக்கு.

சிவனிருக்கும் மயானங்கள் என்று ஐந்து மயானங்களைக் குறிப்பாக சொல்வார்கள்.காழி மயானம்,கடவூர் மயானம்,காசி மயானம், கச்சி மயானம்,நாலூர் மயானம் ஆகியவை அவை,மயானம் என்றால் சுடுகாடு என்று மட்டும் பொருளல்ல. மய-அயனம் என்றால் படைப்புத் தொழில் இடையறாமல் நடந்து கொண்டிருக்கும் இடம் என்று பொருள்.குறிப்பிட்ட காலத்துக்குப் பின் பிரம்மாவும்இறக்கிறார் என்று சொல்வதன் பொருளே, இறப்பு என்றால் என்ன என்று பிரம்மாவுக்குத் தெரிந்தால்தான் அவரால் படைக்க முடியும் என்பதுதான்.கடவூர் மயானம் பிரம்ம சம்ஹாரத் தலம் என்று சொல்லஇதுதான் காரணம்.


ஞானிகள் ஞானோதயம் அடைந்ததே மரணம் குறித்து தீவிரமாக
சிந்தித்த போதும் அதை தியானமாக மேற்கொண்ட போதும்தான்.
இதெல்லாம் இருக்கட்டும். உலகம் அழிகையில் சிவனென்ன செய்வார்
என்பதல்லவா கேள்வி?இதற்கான விடை தெரிய வேண்டுமென்றால்நாம் மாணிக்கவாசகர் காலத்துக்குப் போக வேண்டும்.


திருவாசக ஏடுகளை மாணிக்கவாசகர் தில்லையில் பொன்னம்பலப்
படிக்கட்டுகளில் வைக்க அதை சிவபெருமான் தன் கைப்பட ஏட்டுச்சுவடிகளில் எழுதிக் கொண்டாராம்.அதை எழுதியது தான்தான் என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாக "திருச்சிற்றம்பலமுடையான் கைசார்த்து" என்று கையொப்பமும் இட்டாராம்.முதன்முதலில் தமிழில் கையெழுத்து போட்ட கடவுள் சிவன்தான்.

ஏன் திருவாசகத்தை சிவபெருமான் நகலெடுத்துக் கொண்டார் என்பதற்கு பல நூறாண்டுகள் கழித்து மனோன்மணியம் எழுதிய  சுந்தரம் பிள்ளை ஒரு விளக்கம் கொடுத்தார். பிரளய காலம் முடிந்து பிரபஞ்சம் முற்றாக அழிந்து வேறொரு பிரபஞ்சம் வடிவெடுக்க வேண்டும். அதுவரை சிவனுக்கு வேலையில்லை.தனியாகத்தான் இருப்பார்.அந்தத் தனிமையைப் போக்கிக் கொள்ளதிருவாசகம் படிக்கலாம் என்று முன்னரே ஒரு பிரதி எடுத்து வைத்துக் கொண்டாராம்.

"கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்தே
உடையார் உன் வாசகத்தில் ஒருபிரதி கருதினதே"
என்கிறார் சுந்தரம் பிள்ளை.முன்யோசனைக்காரர்தான் சிவபெருமான்.











































சிpp



சிவன்

Saturday, December 15, 2012

துப்பாக்கி எப்போது பூப்பூப்பது



என் பால்ய நண்பன் அருண் அமெரிக்காவின் காதலன்.அவன் பாஸ்டனில் இருந்த நாட்களில் அவனுடன்காரில் டி.எம்.எஸ் பாடல்களைக் கேட்டுக் கொண்டே நயாகரா சென்றபோது அவன் சொன்னது இன்றும்
நினைவிருக்கிறது." America is an Idea".மனித சமூகம் ஒவ்வொன்றுமே தன் இலட்சிய வாழ்முறையை வடித்தளிக்க முற்பட்டுக் கொண்டேயிருக்கிறது.அப்போது தனக்கிருக்கும் அமெரிக்கக் காதலையும் மீறி அருண் கவலைப்பட்ட விஷயம் தனிமனிதர்களும் பாதுகாப்பு கருதி துப்பாக்கி வைத்துக் கொள்ளக் கூடிய உரிமை. அநேகமாக அந்த சட்டம் 2005ல்தான் முன்வரைவு கண்டதாக ஞாபகம்.

யாரேனும் அந்நியர் தன் வீட்டுக் கதவைத் தட்டினல்,அது தன் பாதுகாப்புக்கு பாதிப்பென்று வீட்டிலிருப்பவர் கருதினால் கூட சுட்டுவிட முடியுமே என்று நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.அவன் காரில் ஜிபிஎஸ் வழிகாட்டத் தடுமாறிய போது யாரிடமவது வழிகேட்கக் கூட அவன்யோசித்தான். ஒருவரிடம் சென்று வழிகேட்பது கூட அவரின் அந்தரங்கத்துக்குக் குந்தகம் என்பதாக எண்ணுபவர்களின் தேசமது.

துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமை யாருக்கும் உண்டென்னும் விதமாய் அறிவிக்கப்பட்டதில்வந்த ஆபத்துகளில் ஒன்று சாண்டி ஹுக் தொடக்கப்பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கி சூடும் அந்த சம்பவத்தில் இருபது குழந்தைகள் உட்பட இருபத்தேழு பேர்கள் இறந்ததும் ஆகும்.


நம்மூரில் ஒரு தனியார் பள்ளிக்குள் கூட தொடர்பில்லாதவர்கள் நுழைந்துவிட முடியாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாயிருக்க,தன் அன்னையை வீட்டிலேயே கொன்றுவிடு அன்னை பணிசெய்த பள்ளிக்குள் புகுந்து பிஞ்சுகளையும் பெரியவர்களையும் பதம் பார்த்திருக்கிறான் அதானி லான்ஸா. அதே நாளில் சீனவிலும் ஒரு தொடக்கப்பள்ளி அருகே ஒருவன் கத்தியுடன் இருபத்தெட்டு குழந்தைகளைத் தாக்க முற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது,அதிர்ச்சியை அதிகரித்துள்ளது.நல்லவேளையாக சீனாவில் நிகழ்ந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஒன்றுமில்லை.

மேலோட்டமாகப் பார்த்தால் இந்த சம்பவத்துக்கான காரணம் என்று நாம் ஒன்றை யூகிக்க முடியும்.அதானி லான்ஸாவின் அன்னை அந்தப் பள்ளியில் பணிபுரிந்தவர் என்று உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னுடன் நேரம் செலவிடாத அன்னையையும் அதற்குக் காரணமான பள்ளிப் பிள்ளைகளையும் மனநோய் முற்றிக் கொன்றிருக்கக் கூடும் என்பது மேலோட்டமான யூகம் மட்டுமே.
விக்கி ஸாட்டோ


பள்ளிப் பிள்ளைகளைக் காக்க தன்னையே கவசமாக்கி கொடூரனின் துப்பாக்கி முன்னர் பாய்ந்து உயிர்நீத்த விக்கி ஸாட்டோ என்னும் வீராங்கனை நம் வணக்கத்துக்க்குரியவர்."துப்பாக்கி எப்போது
பூப்பூப்பது"என்பது கவிஞர் வைரமுத்துவின் கவிதை ஒன்றின் தலைப்பு. எல்லோரும் துப்பாக்கிவைத்திருப்பது மனித உரிமையின் அடையாளமா,உயிர்வாழும் உரிமைக்கான அச்சுறுத்தலா என்பதை
அமெரிக்கா முடிவு செய்ய வேண்டிய நேரமிது.

Wednesday, December 12, 2012

12.12.12.மதியம் 12 மணிக்கு சத்குருவுடன்...!!


ராதே பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு சத்குரு வருவாரா என்கிற கேள்வி எல்லோருக்கும் உண்டு. ஊரிலிருந்தால் வருவார் என்ற பதில் வரும், "ஊரிலிருக்கிறாரா?"என்ற அடுத்த கேள்வி எழும். அவரையே நேரில் பார்த்து அழைப்பிதழ் தந்தால் உண்மை தெரிந்துவிடும் என்பதால் சத்குருவை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். தோம் என்றால் திரு.கிருஷ்ணனும் நானும். புதன்கிழமை மதியம் 12.00 மணிக்கு சத்குருவை நீங்கள் சந்திக்கலாம் என்று தகவல் வந்தது. புதன்கிழமை 12.12.12 என்பது நினைவுக்கு வந்தபின்தான் மதியம் 12.00 மணி என்பதன் பொருத்தமும் புத்தியைத் தொட்டது.

மதியம் 11.55க்கெல்லாம் அவர்முன் அழைத்துச் செல்லப்பட்டோம். பணிந்தெழுந்ததும் தோள்களைத் தட்டி "என்ன முத்தையா நல்லாருக்கீங்களா" என்ற வாஞ்சையான -வழக்கமான வரவேற்பை வழங்கினார். என்னெதிரே தரையில் அமர எத்தனித்த திரு.கிருஷ்ணனிடம் "கீழே உட்கார முடியுமா? நாற்காலி வேணுமா?" என்று சத்குரு விசாரிக்க பதறிப்போய் என்னைப் பார்த்தார் கிருஷ்ணன். "நான் சொல்லவில்லை" என்பதாகத் தலையசைத்தேன். விஷயம் இதுதான். கடந்த சிவராத்திரிக்கு முன் யக்‌ஷா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க வந்திருந்த கிருஷ்ணன் நெடுநேரம் தரையில் அமர்ந்திருந்ததில் முதுகுவலி வந்ததாய் என்னிடம் சொல்லியிருந்தார்.

ராதே ஜக்கி

ராதே நாட்டிய நிகழ்ச்சி அழைப்பிதழைக் கைகளில் வாங்கியவர் கிருஷ்ணனிடம் நலம் விசாரித்தார். ஞாயிறு தோறும் சந்திப்போம் நல்லதையே சிந்திப்போம் என்ற தலைப்பில் வாராவாரம் கோவையில் கிருஷ்ணன் நிகழ்ச்சிகள் நடத்திவருவதைச் சொன்னதும் சத்குருவிடம் ஒரு மலர்ச்சி."சங்கீதம், நாட்டியம் மாதிரியான விஷயங்களை ரசிக்க மக்களை பழக்கியே இருக்கணும். அவங்களுக்கு  பிடிச்சுட்டா விடமாட்டாங்க.இருபது வருஷம் முன்னால மஹாசிவராத்திரிக்கு நான் சாஸ்திரிய சங்கீதம் வைச்சப்போ எல்லாரும் உக்கார முடியலைன்னு சொன்னாங்க. இப்போ யாருக்குமே எழுந்து போக முடியலை.பழகீட்டா விடமாட்டாங்க.இல்லேன்னா ஒரே பொழுதுபோக்கு டீவி தான்னு ஆயிடும்"என்றார் சத்குரு.



"அரசாங்கம் ஒரு சட்டம் பண்ணிக்கணும். காலையில ஒன்பதிலேயிருந்து சாயங்காலம் ஆறு மணிவரைக்கும் எந்த சேனல்லேயும் எதுவும் வரக்கூடாது. அப்போ எல்லாம் போய் வேலை பண்ணிக்கணும்தானே!" என்றவர், "முன்னே எல்லாம் தமிழ்நாட்டில என்ன பிரமாதமான விஷயம்னா காலையில ஆறு மணிக்கே எழுந்து வயலுக்கு உற்சாகமா வேலைக்குப் போனாங்க. இப்போ வேலை பார்க்கணும்ங்கிற எண்ணமே போயிடுச்சு.ஒரு தேசத்தில வேலை பார்க்கிற எண்ணம் குறைஞ்சா ரொம்ப சிக்கலாயிடும். அவங்க பழக்கத்தை மறந்துட்டாங்க. அவங்க சாப்பாட்டை மறந்து ஏதேதோ சாப்பிட்டுக்கறாங்க" என்றார் சத்குரு.

"கிராமிய உணவுகள் பலதும் இப்போ வழக்கிலேயே இல்லை என்ற கிருஷ்ணன்,தங்கள் இனிப்பகத்தில் அதிரசத்திற்காக பாரம்பரிய குடும்பங்கள் சிலவற்றமமர்த்தியிருப்பதாகவும் அவர்கள் பகுதிநேரமாக வேலை பார்க்கிறார்கள். பணத்தைப் பெரிதாக நினைப்பதில்லை.அதனால் அதிரசத்தின் அடிப்படை சுவை மாறுவதில்லை"என்றார். "என்ன பண்ணினாலும் ஈடுபாடா பண்ணினாதான்  நல்லாயிருக்கும்.இன்னைக்கு மனிதர்கள் காலையில எழுந்து வேலைக்கு போய்வர்றதே ஒரு போராட்டமா இருக்கு"என்றார்.

விழா ஏற்பாடுகள் பற்றி பேச்சு திரும்பியது. "குறித்த நேரத்தில் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். மாலை மரியாதை போன்றவற்றில் நேரத்தை வீணடிப்பதில்லை' என்றதும் சத்குரு சொன்னார். "சில இடங்களில பார்க்கிறேன். அவங்க கொண்டுவர்ற மாலைகளோட சைஸ் பார்த்தா யானைக்குப் போடலாம் போல இருக்கு. ஒருதடவை என்கிட்டேஅப்படியொரு பெரிய மாலையை தூக்கிட்டு வந்தாங்க.அப்படியே கொண்டு போயிடுங்க இந்த பெரிய மாலையை வாங்கிக்கறது ரொம்ப ஆபாசமா இருக்கும்னு சொல்லீட்டேன்" என்றார் சத்குரு. கடிகாரத்தைப் பார்த்தேன்  அப்போதுதான் மதியம் 12.12ஐ கடந்தது.

வெவ்வேறு அம்சங்கள் குறித்து பேச்சு திரும்பியது. கலாச்சாரத்தை மீட்டெடுப்பது பற்றி சத்குரு கொண்டிருக்கும் கவனமும் அதற்கான திட்டங்களும் பேசப்பட்டன. சத்குருவின் சூன்யா குடிலை ஒட்டிய பாதையில்  வைக்கோல் ஏற்றிய மாட்டுவண்டியொன்று அசைந்தசைந்து சென்றது. பண்டைக்கால முனிவரொருவரின் பர்ணசாலையில் அமர்ந்திருக்கும் உணர்வைப் பெற்றேன். விடைபெறும்போது சத்குரு ஆசீர்வதித்துத் தந்த வெண்ணிற மலரொன்றை கண்களில் ஒற்றிக் கொண்டேன்.சுவாசத்தில் கலந்தது அதன் வாசம்.
        
அதுசரி..ராதே நாட்டிய நிகழ்ச்சிக்கு டிசம்பர் 16ல் சத்குரு வருகிறாரா என்றா கேட்கிறீர்கள்? "நான் சொல்ல மாட்டேன்..அதைமட்டும் நான்சொல்ல மாட்டேன்"

Sunday, December 9, 2012

அற்புதர் - 18

அற்புதரின் பிரதேசம் மௌனத்தால் ஆனது. அங்கெழும் அத்தனை ஓசைகளும் மௌனத்தின் மடியில்.



நிகழ்பவை. மண்ணில் மழைத்துளி விழுகிற ஓசையும், புல்லில் பனித்துளி படிகிற ஓசையும் துல்லியமாகக் கேட்கும் விதமாய் அங்கே நிலைகொண்டிருந்தது மௌனம். அற்புதரின் மௌனமோ  சுழலும் வாளின் கூர்மைகொண்டது. நாலாதிசையிலும் சுழலும் அந்த வாளின் முனைபட்டு விம்மி வெடிக்கும் உயிர்களின் வெற்றுக் கவசங்கள் விழுந்தன.

கெட்டிப்பட்ட அழுக்கையே கவசமென்று கருதிய அறியாமை பொடியாகும் ஆனந்த கணங்களை அற்புதர் நிகழ்த்திக் கொண்டேயிருந்தார்.அவருடைய மௌனத்தின் மேற்பரப்பில் முத்துதிர்த்த சொற்களின் சுட்டுவிரல்மௌனம் நோக்கியே நீண்டன."என் சொற்கள் உங்களை ஈர்க்கின்றன. பின் மௌனத்திடம் சேர்க்கின்றன"என்றார் அற்புதர்.

அகல மறுக்கும் அழுக்குக் கவசத்தையும் சற்றே துளைத்து அற்புதர் விதைக்கும் மௌனவிதை, உயிரின் கூச்சலை உற்றுக் கவனிக்கும் விவேகத்தை விளையச் செய்தது.


 தீபத்தைத் தொட்டு விழுகிற விட்டில் பூச்சிகளாய்அந்த மௌனம் தொட்டு விழுந்தன வெற்றரவங்கள். வானின் மடியில் வெளிச்சமும் இருளும் வந்து போவதைப்போலவே, மௌனத்தின் மடியில் சொற்கள், சொந்தங்கள், உறவுகள், உணர்ச்சிகள் வந்துபோவதை அற்புதர் உணர்த்தினார். வந்துசேர்ந்த மௌனத்தின் வெப்பம் தாங்காமல் வினைகள் கருகத்தொடங்கின. உள்ளே உந்தி எழுந்த நெருப்பும் வழியில் கிடந்த மூட்டைகளை வேகவேகமாய் எரிக்க எஞ்சிய சாம்பலும் கண்ணீரின் நதியில் கழுவப்பட்டது.

சுமைகள் குறைந்ததையும் சிறகுகள் விரிந்ததையும்  உணர்ந்த உயிர்ப்பறவை தன் கூடும் வானமும் ஒன்றே என்று கண்டுகொண்டது.முன்னொரு காலத்தில் தான் முட்டி உடைத்த முட்டையின் ஓடுகள் தூள்தூளாகக் கிடப்பதைக் கண்ட பறவை, இவையே தன்னை முன்னொரு காலத்தில் பிணைத்து வைத்திருந்தவை என்பதை உணர்ந்தது. தன்னுள் குடியிருக்கும் மௌனத்துடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்கள் தங்களுக்குத் தாங்களே மௌன சாட்சியாய் மாறிப் போன பிறகு வாழ்க்கைப்பாதையின் எந்தப் புழுதியும் அவர்கள் மீது படியவில்லை.

அற்புதர் சொன்னார், "உங்கள் உயிர்களின் புழுதியை மௌனம் கொண்டு கழுவுகிறேன். இனி நீங்களாகச் சென்று புழுதியில் புரண்டாலொழியாழுக்கு உங்களை அண்டாது. உலகில் நீங்கள் முன்புபோல் இயங்கலாம். உலகம் உங்களில் இயங்காது. மௌனத்தின் சமுத்திரம் நான். உங்கள் ஒவ்வொருவருக்கும் தருகிறேன் ஒருதுளி மௌனம். அந்த ஒருதுளி வளர்ந்து வளர்ந்து உள்ளே சமுத்திரமாகும். அலைகளே அலையாத அந்த சமுத்திரம் அமுதமாகும்"





Friday, December 7, 2012

வைகையைப் பாடிய வைரமுத்து

கோவையில் படைப்பாளர்கள் கலந்துகொண்டு தங்களுக்குள் பல்வேறு விஷயங்களை விவாதிக்கும் ஊஞ்சல் என்னும் அமர்வு ஒவ்வொரு வாரமும் முதல் செவ்வாயன்று நடைபெறும் 20 முதல் 25 பேர்கள் மட்டும் கலந்துரையாடி விருந்துண்டு விடைபெறுவார்கள். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் விருந்தோம்பலில் இந்நிகழ்ச்சி சில ஆண்டுகளாய் நடைபெறுகிறது.




இவர்களில் தங்கவேல் சரவணன் என்றோர் இளைஞர். மரபாளர்களுக்கே மறந்து போன பழந்தமிழில் திருமுகம் வரைவது தொடங்கி வெண்பா கட்டளைக் கலித்துறை என்று வெளுத்து வாங்குவார். அம்பாசமுத்திரம் அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரம் அவருடைய சொந்த ஊர். அங்கு கோவில் கொண்டுள்ள உலகம்மை மீது பிரபந்தங்கள் பாடிய நமச்சிவாயக் கவிராயர்தான் அவருடைய ஆதர்சக் கவிஞர். கவிராயரின் பாடல்கள் இவருக்குக் கரதலப் பாடம். தங்கவேல் சரவணன் எழுதும் காதல் கவிதைகள் பெரும்பாலும் வெண்பாக்கள். சொல்விளையாட்டு,  மடக்கு, திரிபு அந்தாதி என்று எழுதித் தள்ளுவார். அவற்றைப் படித்துப் புரிந்து கொண்டு ஒரு பெண்ணுக்கு காதல் தோன்றுவதொன்றும் அத்தனை எளிய காரியமில்லை.

இளஞ்சேரல் ஜான்சுந்தர் ஆகியோர் பொறுப்பில் இப்போது ஊஞ்சல் அசைந்து கொண்டிருக்கிறது. கடந்தவாரம் நிகழ்ந்த அமர்வில் தங்கவேல் சரவணன், தாமிரபரணியை எப்படியெல்லாம் நமச்சிவாயக் கவிராயர் பாடியிருக்கிறார் என்றோர் உரை நிகழ்த்தினார்."அடுத்த பிறவியிலும் நின் நன்னதியையும் சன்னதியையும் சேர வேண்டும்" என்பது போன்ற பிரார்த்தனைகள். "முத்தலை ஆடும் பொருநை" என்று கவிராயர் பாடியதன் அழகை நிறுவ, முத்துப்போன்ற நீர்த்துளிகள் தெறிக்கும் அலை என்பதையும் தாமிரபரணி சங்கமிக்கும் கொற்கையில் கொழிக்கும் முத்துக்களையும் சொல்லி, "முழங்குதிரைப் புனலருவி கழங்கென முத்தாடும்" என்ற குற்றாலக் குறவஞ்சி வரியினையும் ஒப்பிட்டுக் காட்டினார்.

தாமிரபரணி என்பதை அவர் "செம்பாறு" என்னும் நேர்த்தியையும் வியந்து விளக்கிய தங்கவேல் சரவணன் அடுக்கிக் கொண்டே போன வரிகளில் அபரிமிதமான ஆச்சரியங்கள் கொட்டிக் கிடந்தன. உரை முடிந்ததும் தமிழிலக்கியங்களில் ஆறுகள் நதிகள் பற்றிய வர்ணனைகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ந்தது. சங்க இலக்கியங்களில் காணப்படும் "நீர்வழிப் படூஉம் புணை" தொடங்கி சமயத்தமிழ், கம்பன் என்று வளர்ந்து கவிஞர் வைரமுத்துவின் "மதுரை" கவிதைக்கு வந்தது விவாதம்.

வைகை நதி
"மல்லிகை மௌவ்வல் அரவிந்தம்-வாய்
மலரும் கழுநீர் சுரபுன்னை
குல்லை வகுளம் குருக்கத்தி-இவை
கொள்ளையடித்த வையை நதி
நாளும் ஓடிய நதிமதுரை-நீர்
நாட்டியமாடிய பதிமதுரை"




 என்ற பத்தியை நான் சொன்னதுமே, "ஒரு சந்தேகம்" என்று இடைமறித்தார் அவைநாயகன். சுற்றுச்சூழல் பற்றிய அபாரமான கவிதைகள் எழுதி வருபவர். நீர்நிலைகள், வனங்கள், விலங்குகள், பறவைகள் குறித்தெல்லாம் மிகத்துல்லியமான விபரங்களை விரல்நுனிகளில் வைத்திருப்பவர்.

"சுரபுன்னை" என்பது, பாலைவனத்தில் வளர்கிற தாவரம். "சுரம்" என்ற சொல்லே பாலைவனத்தைக் குறிக்கும். அப்படியிருக்கும்போது வைகையீல் அது எப்படி வந்தது?"என்பது அவைநாயகனின் கேள்வி. புன்னை என்பது வேறு. சுரபுன்னை என்பது வேறு. சுரபுன்னை மாங்க்ரோஸ் வகையைச் சார்ந்தது என்றார் அவைநாயகன்.

பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் கந்த சுப்பிரமணியம், "கடலில் கலக்காத வைகை இராமநாதபுரம் கண்மாய் வரை ஓடுகிறது. அங்கே சுரபுன்னை இருந்திருக்கலாம்" என்றார். தங்கவேல் சரவணன் இன்னொரு விளக்கம் சொன்னார். "சுரர்' என்பது தேவர்களைக் குறிக்கும். தேவ லோகத்தவர்களும் பயன்படுத்தும் புன்னை என்ற பொருளில் புன்னைக்குத் தரப்பட்ட அடைமொழி சுரபுன்னை என்றும் கொள்ளலாம்" என்றார்.

கவிஞர் வைரமுத்துவிடம் கேட்டேன். கந்தசுப்பிரமணியத்தின் கருத்தை ஒப்புக் கொண்டவர் தங்கவேல் சரவணனின் விளக்கத்தை ரசித்தார். இதுபோன்ற விவாதங்கள் இலக்கியத்தை உயிர்ப்பாக வைத்திருப்பவையல்லவா!

சித்தர்கள் அருளும் சிவானந்தம்


மிகச்சமீபத்தில்,முகநூலில் ஒருவரி வாசித்தேன்."மறைவாகக்
கடவுள் அப்படி என்னதான் செய்து கொண்டிருக்கிறார்?"
இந்தக் கேள்வி ஏறக்குறைய எல்லோருக்குமே உண்டு.
கடவுள் நமக்கு என்ன செய்வார் என்ற சுயநலக் கேள்வியில்
தொடங்குகிற இந்தத் தேடல், கடவுள் என்ன செய்கிறார் என்ற
சுயத்தேடலாக வளர்வதே பெரிய வரம். இதற்கு விடைகாணும்
வழியே தவம்.
சில நாட்களுக்கு முன் பாலரிஷி அவர்களிடம் "நீங்கள் சித்தர்கள்
பற்றியொரு புத்தகம் எழுதலாமே" என்று கேட்டேன். கேள்வியின்
கடைசிச்சொல்லை பதிலாக்கினார்.."எழுதலாமே!நான் சொல்கிறேன்.
நீங்கள் எழுதுங்கள்".
                                   
அதற்குப்பின் நடந்ததுதான்  சுவாரசியம். அந்த விநாடியிலேயே அவர்சொல்லத் தொடங்கியிருந்தார்.நல்லவேளையாய் காகிதமும் எழுதுகோலும் கையருகே இருந்தன.முன்னொரு முறை பாலரிஷி
குறித்து,மந்திரமழை என்றொரு புத்தகம் எழுதியிருந்தேன்.சித்தர் நெறி குறித்து மறைபொருளாய் உள்ள பல மகத்துவங்களின்விளக்கங்களை மழைபோல் பொழிந்துகொண்டிருந்தார் பாலரிஷி.
சித்தர்கள் கண்டுணர்ந்து தரும் மூலிகைகள் பற்றி அறிந்திருக்கிறோம்.அவற்றில் "செத்த மூலிகை உயிருள்ளமூலிகை"பற்றிக் கேட்டிருக்கிறோமா? பாலரிஷி சொல்லித்தான்முதலில் கேட்டேன்.பூசையில் ஒரு மலரை எடுத்து இறைவனுக்கு அர்ப்பணிப்பதன் மூல தாத்பர்யத்தில் எத்தனை நுட்பங்கள் என்றும் இவர் சொல்லித்தான் கேட்டேன்.
கோள்களின் கோலாட்டம் காரணமாய் வாழ்வில் ஏற்படும்போராட்டம் என்பது உண்மையா என்கிற கேள்வி நம்மில்எத்தனையோ பேர்களுக்கு உண்டு. ஆன்மீகப் பாதையில்இருப்பவர்கள் அத்தகைய நேரங்களை எளிதில் கடக்கஎன்னவழி என்பதையும் விரிவாக விளக்கியிருக்கிறார்பாலரிஷி.

ஞானியரிடம் உரையாடத் தொடங்கும்போதெல்லாம்,நம்கேள்விகளின் எல்லைக்கு அப்பாற்பட்ட விஸ்தீரணத்தில்வந்து விழுகிற பதில்கள் நம்மை வாயடைத்துப் போகச்செய்யும். என் குருநாதரிடம் இதைப் பலமுறை உணர்ந்ததுண்டு.பாலரிஷி அவர்களுடனான உரையாடலிலும் இதே அனுபவம்.              
மூலவிதையாகிய ஓங்காரம், பிரபஞ்சத்தின் கருப்பையாகியநாதம், சித்தர்மரபில் ஹோமங்களின் தாத்பர்யம் என்று எத்தனையோ விஷயங்களை பாலரிஷி விளக்கும்போதுசில கேள்விகளை இடைமறித்துக் கேட்பேன். சிலசமயங்களில்நம் கேள்விகள் நமக்கே வியப்பாக இருக்கும்.ஆனால் அடுத்தவிநாடியே வந்து விழுகிற விடையின் வீச்சு, நம் கேள்வி பற்றிநமக்கே எழும் பாராட்டுணர்வு அகங்காரமாய் வளர்ந்துவிடாமல் ஆட்கொள்ளும்.


இந்த நூலின் உருவாக்கத்தில் அத்தகைய அனுபவத்துக்குப் பலமுறை ஆளாகியிருக்கிறேன். உதாரணமாய் ஒரு சம்பவம்.நாதம் குறித்த நுட்பங்களை பாலரிஷி விளக்கிக் கொண்டிருந்தார்."நாதமே பிரபஞ்சத்தின் மூலம் என்றால் நாதத்துக்கு முந்தையமௌனம்,நிர்ச்சலனம் என்னநிலை?" இப்படியொரு கேள்வியைநான்தான் கேட்டேன் என்பது எனக்கே விளங்கும்முன் விடை சொல்லத் தொடங்கிவிட்டார் பாலரிஷி.  
"நாதம் என்பது பிரபஞ்சம் உருவான மூலம் என்றால் அதற்குமுந்தைய மௌனம்,நிசப்தம்,நிர்ச்சலனம் என்று நீங்கள் எதைச் சொன்னாலும் அது பரம்பொருள் உருவான மூலம்.பரம்பொருள்உருவான பின்னர் நாதத்தில் இந்தப் பிரபஞ்சம் உருவானது, இதைத்தான் பிரணவ மூலம் என்றும் பிரபஞ்ச மூலம் என்றும்சொல்கிறோம்.ஓர் உயிராக நீங்கள் உருவானது பிரபஞ்சத்தில்தான்என்கிறபோது அதன்வழியாகவே நீங்கள் பரம்பொருளுடன்தொடர்புக்கு வருகிறீர்கள்.
அதற்கும் முந்தையதான மௌனம் உங்கள் நேரடி அனுபவத்தில்இல்லை.ஆனால் உங்கள் உபாசனையாலோ தவவலிமையாலோபரம்பொருளை உங்கள் உள்நிலை அனுபவத்தில் நீங்கள் பெற்றால்அந்த மௌனம் குறித்தும் நீங்கள் உணரக்கூடும். இதை நீங்கள்தவவலிமையில்தான் உணர வேண்டுமே தவிர, ஒரு தகவலாகக்கேட்டுப் பெறுவதில் எந்த அர்த்தமும் இல்லை".
ஆன்மீகத்தின் ஆழம்காணுதல் அனுபவத்தில் நிகழ வேண்டுமேதவிர தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ் வராது என்று பாலரிஷி உணர்த்திய நிமிஷங்கள் அவை.

அப்படியானால் இந்தப் புத்தகம்?அவரே சொல்வதுபோல் சித்தர்நெறி குறித்த தகவல்களின் திரட்டல்ல.சித்தர்நெறி குறித்து பாலரிஷி அவர்களின் உள்நிலை அனுபவங்களின்  வெளிப்பாடு.அத்தகைய அனுபவங்களைத் தேடிப்போவதற்கான பாதைக்கு வெளிச்சம்காட்டும் ஞானச்சுடரே இந்தத்தொகுப்பு.       
இந்தப் புத்தகம் உருவாகிக் கொண்டிருக்கும்போதே "இதற்குஎன்ன தலைப்பு வைக்கலாம்"என்று பாலரிஷி கேட்டார்கள்.உடனே எனக்குள் இருக்கும் வணிக மூளை விழித்துக் கொண்டது.வாசகரை ஈர்க்கும் விதமாக, "சித்தர்நெறி ரகசியம்", என்றோ"உங்கள் வாழ்வில் சித்தர்கள்" என்றோ வைக்கலாம் என்றேன்.ஒரு புன்னகைமூலம் மறுத்துவிட்டு பாலரிஷி அவர்களே தந்ததலைப்புதான் 'சித்தர்கள் அருளும் சிவானந்தம்". 
இந்த நூல் நிறைவுபெறும் நிலையில் நானாகக் கேட்காத ஒருகேள்வியைத்தானாக எழுப்பிக் கொண்டு பாலரிஷியே பதிலும் தந்தார்.

 "சமூகத்தில் எத்தனையோபேர் சிரமத்திலிருக்கிறார்கள்.வன்முறையால் வீழ்கிறார்கள்.நான் சிவானந்தத்தைத் தேடுகிறேன்என்றோ சிவானந்தத்தில் லயிக்க்கிறேன் என்றோ சொல்லிக் கொண்டு இவற்றையெல்லாம் பாராமல் இருப்பது ஆன்மீகமாகாது.அவர்களுக்கு அன்பு,பரிவு,கருணை,உதவி ஆகியன வழங்குவதுதான் ஆன்மீகப் பண்பின் அடையாளம்".
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல் பெருமானின் உள்ளுருக்கம் எப்படி இருந்திருக்கும்என்று உணரக்கிடைத்த உன்னத தருணம் அது.

Tuesday, December 4, 2012

அற்புதர்-17

                                           

அற்புதரின் வீட்டு முற்றத்தில் அதிர்ந்து கொண்டிருந்தன கால்சதங்கைகள்.பதங்களுக்கேற்ற அபிநயத்தில் அசைந்தாடிக்
கொண்டிருந்தன பிஞ்சுப் பாதங்கள். அற்புதரின் பாகம்பிரியாள் விதைத்த விதைகளில் இதுவும் ஒன்று. வான்முகிலாய் மாறி அவர் வார்த்த அமுதத்தில் மலர்ந்திருந்தது அந்த ஆனந்த மலர்.

பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்த காலங்களில்
மேற்கொண்ட சங்கல்பங்களில் ஒன்று இன்று கண்ணெதிரே
களிநடம் புரிந்ததில் அற்புதருக்கு மகிழ்ச்சி.

தன்னுள் ஒலிக்கும் தாண்டவ அதிர்வுகளையே வருபவர் மூச்சில்
வைத்து அவரவர் உயிரையே பொன்னம்பலமாக்கித் தந்து கொண்டிருக்கும் அற்புதரின் முற்றத்தில் அருள்மணம் பரப்பியது ஆனந்த நடனம்.

இசையில் கசியும் இதயம் அற்புதருக்கு. அமர ஸ்வரங்களில் சஞ்சரிக்கும் அசுணமாவைப் போன்றதே அவரின் ரசனை.ஒவ்வொரு தாயின் கருவிலும் ஒலிக்கும் ஓங்காரத்தின் பாலை குழந்தைகள் அருந்திப் பிறக்கின்றனர். அவர்களில் ஒருசிலரே கலைகளில் சிறக்கின்றனர்.

கருவில் அருந்திய கலைமுலைப்பாலின் சுவையை நினைவின் நாவுகளில் மீட்டுக் கொள்பவர்கள் தங்களையே மீட்டி உயிரின்
பாடலைக் கண்டெடுக்கிறார்கள்.

தெய்வீகத்தின் கசிவுகளே இசை,தெய்வீகத்தின் அசைவுகளே நடனம் என்பதை நன்குணர்ந்த அற்புதர் வைபவங்கள் ஒவ்வொன்றிலும் கலைகளையே கொலுவில் இருத்துவார்.

கடவுளிடம் மனிதன் பேசுவது பிரார்த்தனை.கடவுள் மனிதனுடன்
பேசுவது தியானம். கடவுளும் மனிதனும் கலந்து பேசுவதே கலை.
அற்புதருக்கு கானமும் தாளமும் வானுக்குப் போடும் பாலம்தான்.
வெற்று மூங்கிலில் இருக்கும் வெளி காற்றிலிருக்கும் கடவுளின்
குரலை ஒலிபரப்புவதுபோல், தேகமே மூங்கிலாய் அசைந்தசைந்து
தேவ முத்திரைகளை வெளிப்படுத்துகிறது.


கீர்த்தனையின் கீற்றிலிருக்கும் ஸ்வரங்கள் தேகமெனும் விருட்சத்தைத் தென்றலாய் உலுக்க,,அதிலிருந்து ""பொலபொல"வென உதிரும் அபிநய மலர்களே அர்ச்சனை மலர்கள்.

நாத ஆராதனையும் நாட்டிய ஆராதனையும் உள்ளிருக்கும் தெய்வத்திற்கு உகப்பானவை என்பதை உணர்ந்த அற்புதரின் வீட்டு முற்றத்தில் அசைந்து கொண்டிருக்கிறது நாட்டியக் கொடிமுல்லை.





Sunday, December 2, 2012

தொழில்நுட்ப சாமிக்கொரு நாமாவளி

                                

 இது நடந்து நான்காண்டுகள் இருக்கும். கல்லூரி ஒன்றின் தமிழ் மன்றத் தொடக்கவிழாவிற்குக் கூப்பிட்டிருந்தார்கள். மேடையேறுவதற்கு முன்பே பேராசிரியர் ஒருவர் தன் படைப்பாக்கம் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார்.
தலைப்பைப் பார்த்ததும் தூக்கி வாரிப் போட்டது."சிஎன்சி 108 போற்றி" என்பது அந்தத் தலைப்பு.

எந்திர உற்பத்தித் துறையில் பயன்படும் கம்ப்யூட்டர் நியூமெரிகல் கண்ட்ரோல் பயன்படும் விதங்களை,போற்றி எழுதப்பட்டிருக்கும் துதி நூல் இது.அறிவியல் அறிவும் ஆங்கில அறிவும் இதைப் பாராயணம் செய்வோருக்கு உடனே சித்திக்கும் விதமாக ஆங்கிலத்திலும் தமிழிலுமாக இந்நூல் உருவாகியுள்ளது.
   உயர்வற உயர்நலம் உடைய சிஎன்சியின் கல்யாண குணங்களை இதில் அணுவைத் துளைத்து அதில் அணுசக்தி ஒப்பந்தத்தைப் புகுத்தினாற்போலப் படைத்திருக்கிறார் ஆ சிரியர்.

    Good structural rigidity என்பது உறுதியான கட்டமைப்பு உள்ளாய் போற்றி என்றும்,    Ball screw application என்பது குண்டு மரைத் தண்டின் குணமே போற்றி   என்றும்  CNC Lathe என்பது கடைசல் எந்திரமாய் ஆனாய் போற்றி      என்றும் நீள்கிறது.

ஆசிரியரின்படைப்பாற்றல் இயங்குகதி,பக்திப்பரவசத்தின் சுழல் கதி ஆகியன உச்சம் கொண்ட நிலையில்    Vertical machining center         என்பது, குத்து வசத்தில் குடைவாய் போற்றி என்றும்       Horizontal machining center      என்பது படுக்கை வசத்தில் பன்முகம் போற்றி  என்றும் பிரவாகம் எடுக்கையில் வாசகர் அறிவியல் தரிசனம் பெற்று மெய்தானரும்பி விதிர்விதிர்ப்பதும் .கண்மலர்களில் ஆனந்த பாஷ்பம் அரும்புவதும் நிச்சயம்.

இனி,இந்த எந்திரத்தின் அனைத்துமறி அற்புதத்தை விளக்கப் போந்த ஆசிரியர்,  Master datum seting,Offset datum setting        ஆகியவற்றை "ஆதிப் புள்ளியை அறிவாய் போற்றி,அருகாமை புள்ளிகளும் அறிந்தாய் போற்றி" என்னுமிடம் வருங்காலத்தே இந்த திவ்யசுலோகங்களுக்கு பாஷ்யம் எழுதப் போகிறவர்களுக்கு மிகவும் வாய்ப்பான பகுதி.அறிவாய் அறிந்தாய் ஆகிய பிரயோகங்கள் காட்டும் கால வேற்றுமை,இக்கணினி எந்திரமானது,காலமும் கணக்கும் நீத்த காரணீயாய்த் திகழ்வதைச் சுட்டுகிறது.

ஆக்கல் அளித்தல் காத்தல் அருளல் மறைத்தல் ஆகிய ஐந்தொழில் வல்ல சி என்சியை பலவாறாய்ப் புகழ்ந்தேத்தி பனுவல் பாடி, Emergency stop-அபாய நிறுத்த அமைப்பே போற்றி என்றரற்றிச்சரண்புகும் போது அதன் அரும்பேராற்றல் ]தெள்ளிதின் விளங்குகிறது.

இனி இதனை ஒரு துதிநூலாக மட்டுமின்றி,காவியமாகவும் கண்டுணரும் விதமாக ஆக்கப்பட்டிருக்கிறது.
பாவிகம் என்பது காவியப் பண்பே என்பதற்கேற்ப சிஎன்சி,பலதேசத்துப் பெண்களாகவும் உருவகிக்கப்பட்டிருப்பது சக்தி வழிபாட்டின் புத்தம் புதிய பரிமாணமாகவும்-இலக்கிய மதிப்பீட்டில் இந்நூலுக்குக் காவிய வகைமையில் இடம்பெற்றுத் தரத் தக்கதாகவும் திகழ்கிறது.

    High cost investment  அதிகச் செலவு வைக்கும் அமெரிக்கப் பெண்ணே போற்றி
   Can be operated for 3 shifts  சலியாது உழைக்கும் சீனப்பெண்ணே போற்றி
   Smooth table movements நளினமாய் நகரும் கெய்சா பெண்ணே போற்றி(ஜல்சா அல்ல)   Strong construction   கட்டான உடல்கொண்ட கருப்பு பெண்ணே போற்றி
   Command obidiant operation           விதிமுறையில் இயங்கும் ஆங்கில பெண்ணே போற்றி  Touch sensitive features  தொட்டாலுணரும் பிரெஞ்சு பெண்ணே போற்றி
  All good quality/features   நற்பண்பு யாவும் கொண்ட இந்திய பெண்ணே போற்றி
என்றெழுதியிருப்பதைக் காணும் போது சிஎன் சி,சப்த கன்னியர் வடிவில் உபாசிக்கப்படுவதாக நாம் உய்த்துணர முடிகிறது.பிரதி செவ்வாய் வெள்ளிகளில்  திருவிளக்கு வழிபாட்டிற்குப் பயன்படும் விதமாக"உற்பத்தி கூடத்தின் ஒளிவிளக்கே போற்றி போற்றி" என்றிவ்வருட் பனுவல் நிறைவு பெறுகிறது

தனியாய் நூற்பலன் எழுதப்படாவிடினும் இதன் பராயணத்தால் விளையும் இக பர சௌபாக்கியங்கள் வெள்ளிடை மலையன்றோ!!

இதனை அருளிச் செய்தவர் பேராசிரியர் வி.இராமச்சந்திரன் என்று தெரிகிறது.32 ஆண்டுகள் தொழில்நுட்பப்
பேராசிரியராய்ப் பணிபுரிந்த இவர் தன்னை ஒரு தமிழ் அடிப்பொடி என்று தெரிவிக்கிறார்.


நெ 6 முதல் மெயின்ரோடு அண்ணாநகர் பீளமேடு கோயமுத்தூர் 641004 என்னும் சந்நிதானத்திற்கு விண்ணப்பிப்போர் இதன் பிரதி ஒன்றினைப் பெறும் பாக்கியசாலிகள் ஆவார்கள் .இதன் விலை மதிப்பிலாத்தன்மையினை உணர்த்தும் முகத்தான் விலை ஏதும் குறிப்பிடப்படவில்லை

Saturday, December 1, 2012

அற்புதர்-16

                                     

சிலரின் பாதையில் அற்புதர் எதிர்ப்படுவதுண்டு. ஒரு வழிப்போக்கராய் அவரை எண்ணுபவர்கள் அவர் அற்புதர் என்பதை அறிந்ததில்லை.இன்னும் சிலர் அற்புதரின் பாதையில் பயணம் செய்வதுண்டு. அவர்களும் அற்புதரை அற்புதர் என்று அடையாளம் கண்டதில்லை. ஆனால் அற்புதர்தான் தன்னுடைய பாதையென்று கண்டுணர்ந்தவர்கள் உண்டு.
அவர்கள்தான்,அற்புதம் என்ற சொல்லைக் கடந்த பேரற்புதம்
அவரென்று உணர்ந்தவர்கள்.

தன்னுடைய பாதையே அற்புதர்தான் என்று தெரிந்த பிறகு தாங்கள் சென்று சேர வேண்டிய இடத்தைக் குறித்த அச்சம் எவருக்கும் ஏற்பட்டதில்லை. ஆனால் சிலருக்கோ செல்லும் பயணம் குறித்த முன்முடிவுகள் இருந்தன.தங்கள் பாதையில் இருந்த கற்களை அகற்றிய பின்னர் அற்புதர் அழைத்துப்போயிருக்கலாம் என்று புலம்பினார் ஒருவர்.பாதையின் கற்களை அகற்றுவதைவிட பாதங்களுக்கு
பலம் தருவதுதான் அற்புதரின் பணி. அற்புதரின் பாணி.

போகும் வழியெங்கும் அற்புதர் சில பூச்செடிகளை நட்டிருக்கலாம் என்று குறைப்பட்டுக் கொண்டார் இன்னொருவர்.உள்ளுக்குள் ஒருவரை மலரச் செய்துவிட்டால் பாதையில் பூக்கள் தாமாகப் புலப்படும் என்பதே அற்புதரின் கோட்பாடு.

செல்லும் வழிகளில் நின்று இளைப்பாறவும் தாகம் தீர்க்கவும் அற்புதர்
தண்ணீர்ப் பந்தல்களை அமைத்திருக்கலாம் என்பதே இன்னொருவரின் ஆதங்கம். தீவிரமான தாகமும் தேடலும்தான் நில்லாப் பயணங்களின் நிகரில்லா ஊக்கம் என்பது,அற்புதரின் தீர்மானம்.

மாற்றுப் பாதைகளைத் தேர்ந்தெடுத்த பலரும் தொடங்கிய இடத்திற்கே திரும்பிக் கொண்டிருந்த போது,அற்புதரின் பாதையில் ஆங்காங்கு தென்பட்ட மைல்கற்கள் அவரவரும் தங்கள் இலக்கை நோக்கிச்
சென்று கொண்டிருப்பதை உறுதி செய்தன.

எந்தப் புகாரும் இல்லாமல் அற்புதரே தன்னுடைய பாதையென்ற ஆழமான புரிதலுடன் பாதையையேஉற்றுப் பார்த்த வண்ணம் பயணம் செய்த சிலரின் இதழ்களில் அவ்வப்போது புன்னகைப் பூக்கள்
பூத்துக் கொண்டேயிருந்தன.நெருங்கி விசாரித்த போது சொன்னார்கள்,
                        
"அற்புதர்தான் என்னுடைய பாதையென்று தெரிந்தபின் பயணம் தொடங்கினேன். இந்தப் பதையெங்கும் எனக்கும் முன்னர்
பதிந்திருக்கும் சுவடுகள் அற்புதரின் பாதச் சுவடுகள்.
தானே பாதையானது மட்டுமல்ல. தான் பயணம் செய்து சென்றடைந்த பாதையில் நமக்காக மறுபடியும் நடந்து கொண்டிருக்கிறார் அற்புதர்.
ஆவியாக மாறி ஆகாயம் சேர்ந்த மேகம் மனது கரைந்து மறுபடியும் பெய்வது போலத்தான் அளப்பருங்கருணையால் அற்புதர் மறுபடியும் பாதையானதோடு தானே பயணியாகவும்ஆகியிருக்கிறார். அருளுக்கும் அன்புக்கும் மட்டுமே சாத்தியமாகக் கூடிய அற்புதம் இந்த எளிவந்த தன்மை. "

சொல்லிக் கொண்டே சென்றவர்களின் உள்ளிலும் வெளியிலும் பூத்துக் குலுங்கின புனித மலர்கள்

Thursday, November 29, 2012

அதிகாலையில் ஓர் அர்த்தஜாமம்



29.11.2012.காலையில் ஆறரை மணியிருக்கும். பள்ளியறையில் செல்லக் கொட்டாவியுடன்காத்திருந்தசிவகாமசுந்தரிக்கு,பம்பை,உடுக்கை,தாளவாத்தியங்களின் ஓசைகள் கேட்டதும் சிரிப்பு வந்து விட்டது.தீட்சிதர்கள் உள்ளே நுழைந்து நடராஜப் பெருமானைப் பள்ளி சேர்த்துத் திரும்பும்வரை சிலைபோல்
பாவனை செய்தவள், அவர்கள் வெளியேறித் திருக்கதவம் காப்பிட்டதும் குறுநகை தவழ பெருமானின்பக்கம் திரும்பினாள்."என்ன சுவாமி!அதிகாலையில் ஓர் அர்த்தஜாமமா?"


நமட்டுச் சிரிப்போடு நாயகி கேட்டதும் நடராஜப்பெருமானின் கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பு."நேற்று உன் மகன் கந்தனின் கார்த்திகைத் திருநாள்ஆயிற்றே!பஞ்ச மூர்த்திகளுடன் திருவீதியுலா வரச்சொல்லி அடம்பிடித்து அழைத்துச் சென்றுவிட்டான்ஆறுமுகன்.நான்கு வீதிகளிலும் சொக்கப்பனை கொளுத்தி கோலாகலமாகக் கொண்டாடி விட்டார்கள்.
அனைத்தும் முடிந்து ஆலயம் திரும்பும் முன் நள்ளிரவாகிவிட்டது. பன்னிரண்டுமணி கடந்தால் பள்ளியறைக்கு அனுப்ப மாட்டார்களே!கனகசபையிலேயே காத்திருந்து உன் கனிந்த முகத்தைக்கனவில் கண்டு விடிந்தவுடனே விரைந்தோடி வந்துவிட்டேன்".விநயமாய்ப் பேசிய வண்ணம்நெருங்கிய வித்தகனின் திருத்தோள்களை வளைக்கரங்களால் வளைத்த வண்ணம் சிணுங்கினாள் அம்பிகை.


"சரிசரி! போதும் உங்கள் சிருங்காரம்.சாஸ்திரத்துக்காகத்தான் உங்களைப் பள்ளி சேர்த்திருக்கிறார்கள்.புறப்படுங்கள். பள்ளி நீங்கச்செய்ய பிள்ளைகள் வந்துவிடுவார்கள்". தேவியின் திருவாக்கு கேட்டு சபாபதி சொன்னார்,"ஆமாம்!ஆமாம்!ஒவ்வொரு வைகறையிலும் தில்லையே திரண்டு வந்துவிடுகிறது. நம் மகள்கள் பிரகாரம் முழுவதும் அமர்ந்து மலர்ச்சரங்கள் தொடுப்பதென்ன! நம் மகன்கள் பல்லக்கை சரிசெய்து,பஞ்சணைகள் தட்டிப் போட்டு சீர்செய்யும் நேர்த்தியென்ன. பம்பை,உடுக்கை,எக்காளம் தாளம் என்று போட்டி போட்டுக்கொண்டு ஆளுக்கொன்றை கைகளில் வைத்துக் காத்திருக்கும்
கோலமென்ன! பள்ளி சேர்ப்பதிலும் பள்ளி நீக்குவதிலும் பிள்ளைகள் தினமும் காட்டும் பரவசம் தினசரித்திருவிழா ஆயிற்றே"! தில்லை நாயகனின் திருவிழிகளில் வாஞ்சையும் நிறைவும் மின்னின.


"அதுசரி!நம்மைப் பள்ளி சேர்ப்பதும் பள்ளி நீக்குவதும் சடங்குபோல் இல்லாமல் உயிர்ப்போடும் உணர்வோடும் நிகழ்கிறதே,அத்தருணங்களில் என்ன நிகழ்கிறதென்று அவர்கள் அறிவார்களா?"அர்த்தபுஷ்டியுடன் அம்பிகை கேட்டதன் ஆழம் ஆளுடைநாயகனுக்குப் புலப்பட்டது.

"புவனேஷ்வரி!மூலத்தானத்தில் இருக்கும் என்னுடைய அம்சம், திருப்பள்ளிக்குப் புறப்படும்வேளையில்,உற்சவத் திருமூர்த்தத்தில் செலுத்தப்படுகிறது. அந்தத் திருவுரு பிரகாரத்தைச் சுற்றி
பள்ளியறை சேருகையில் அதனிருந்து வெளிப்படும் அருளதிர்வுகள் ஒளிச்சிதறல்களாய்,அதிர்வுகளாய் திசைகளெங்கும் பரவிவழிபட்டு நிற்பவர்களின் உடலிலும் மனதிலும் உயிரிலும்தெய்வாம்சத்தைத் தருகிறது. பள்ளி நீங்கும்போதும் திருவீதியுலா செல்லும்போதும் இதுவே
நிகழ்கிறது.இல்லறமும் தெய்வீகமே என்பதை எல்லோரும் உணரும்
தருணமது.
அவர்கள் இதனை அறிந்திருக்க வேண்டுமென்ற அசியமில்லை.அவர்களுக்கு பக்தி பாவமே பிரதானம். திருப்பல்லக்கில் நான் ஆரோகணித்ததும்,"அய்யா புறப்பட்டு விட்டார்" என்கிறார்கள்.
எதிர்ப்படும் மற்றவர்களிடம் "அய்யாவைப் பார்த்துவிட்டீர்களா"என்கிறார்கள். கூடும் அன்பால் கும்பிட மட்டுமே செய்பவர்கள் நம் அருளதிர்வுகளைப் பெற்றுக் கொண்டிருப்பதை
அறிந்தாலும் சரி, அறியாவிட்டாலும்சரி,அவர்களுக்கு நடக்க வேண்டிய நன்மைகள் நடந்தேதீரும்".நாதன் சொல்லி முடிக்கும் முன் வாத்தியங்களின் முழக்கம் மீண்டும் கேட்கத் தொடங்கியது.

திருத்தோள் தழுவிய தளிர்க்கரங்களை நெகிழ்த்தி,மெல்ல நகர்ந்த மாதரசி, திருக்கதவம் காப்புநீங்கும் ஒலிகேட்டு மறுபடியும் சிலைபாவம் காட்டினாள். மகாதேவன் மவுன விடைபெற்றுப் புறப்பட,
வடமேற்கெல்லையில் இருக்கும் தன் ஆலயம் சேர ஆயத்தமானாள் சிவகாமசுந்தரி.



Wednesday, November 28, 2012

அற்புதர்-15


                                  
அற்புதரின் முதன்மை விருந்தினர் உருவமற்றவர். அவரை அருவமானவர் என்றும் சொல்லிவிடமுடியாது. அருவமுமாகி உருவமுமான அந்த நபரின் வருகைக்காகவே தான் வந்திருப்பதாய் அற்புதர் சொன்னபோது பலருக்கும் புரியவில்லை. ஆனால் அந்த முதன்மை விருந்தினருக்கான கூடாரத்தை அமைக்கத் தொடங்கியதுமே அற்புதரின் தீவிரத்தைக் கண்டு அருகிலிருந்த அத்தனைபேரும் அதிசயித்தனர். வரப்போகிறவர் எல்லா வகையிலும் முழுமையானவர் என்றும் அவரின் வருகை நிகழ தன்னையே அர்ப்பணிக்கவும் தயாரென்றும் அற்புதர் சொல்லச் சொல்ல அச்சம் கலந்த பரவசத்தில் அனைவரும் அமிழ்ந்தனர்.

ஒரு விண்கலம் தரையிறங்கும்போது செய்யப்படும் ஏற்பாடுகளைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்கு நுட்பமான ஏற்பாடுகளில் இறங்கினார் அற்புதர்.வரப்போகும் விருந்தினர் தங்கப் போகும் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமென்பதால் அதிசூட்சுமமான முறையில் அற்புதர் இயங்கினார்.விரியத் திறந்த வாசல்வழி அந்த விருந்தினர் வரவில்லை. உண்மையில் அவர் வெளியிலிருந்து உள்ளே வந்த விருந்தினரல்ல.உள்ளிருந்து வெளிப்பட்ட விந்தை விருந்தினர்.அவர் வெளிப்பட்ட வாசல்கள் ஒவ்வொன்றையும் பூட்டுவதே அவர் வருகையை உறுதி செய்கிற வரவேற்பு என்றார் அற்புதர்.அந்த வாசல்களுக்கான திறவுகோலாகவும் பூட்டாகவும் அற்புதரின் சக்திநிலையே செயல்பட்டது.

எழுநிலை மாடங்களில் ஏற்றிவைத்த உயிர்ச்சுடராய் வந்த விருந்தினர் நிலைகொண்டபோது விரைந்தோடிச் சென்று கட்டியணைத்து வரவேற்ற அற்புதர் செயலற்று விழுந்தார். விருந்தினருக்காக அற்புதர் முன்னரே வரையறுத்த உபசாரங்கள் தொடர்ந்து நிகழ்ந்தன.எழுபத்தியிரண்டு மணிநேரங்களில் முழு நலனுடன் மீண்டெழுந்தார் அற்புதர். பலர் சேர்ந்து தூக்கிச் சென்ற அற்புதர் பாதம் பதித்து நடந்து வந்து கொண்டிருந்தார்.

ஆனந்தக் கண்ணீருடன் தன்னைப் பணிந்தவர்களிடம் சொன்னார் அற்புதர்."நான் நலமுடன் மீண்டது ஓரற்புதமென்றால் இங்கே நிகழ்ந்திருப்பது பேரற்புதம். சக்திநிலையின் உச்சமாய் இந்த சந்நிதிவடிவம் கொண்டுவிட்டது. எந்த உயிரிங்கே வந்து நின்றாலும் ஆன்மீகத்தின் விதையை விதைக்கும் கற்பக விருட்சம் இங்கே கோவில் கொண்டுள்ளது.

இங்கே நம்முடன் இருக்கும் விருந்தினரின் வடிவமே அகன்றாலும் அவரின் வீரியம் அகலாது.கோலம் மறைந்தாலும் காரியம் மறையாது.இந்த விருந்தினரின் விருந்தினர்கள் உலகம் முழுவதிலும்
இருந்து ஓடோடி வருவார்கள். இந்த விருந்தினருக்கு சடங்குகள் தேவையில்லை. சங்கீதம் தேவை.
                                                         
நாளொன்றுக்கு இரண்டுமுறை நாமிங்கேஉணவுகொள்வோம். நாளுக்கு இரண்டுமுறை இவர் நாதத்தை உட்கொள்வார்.எப்போதும் ஈரமாய் இவர்பரப்பும் அதிர்வுகள் எல்லோருக்குள்ளும் தியானம் மலர்த்தும்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் அதிர்வுகள் இவரிடம் புறப்படும்.

எல்லா நாட்களும் இவர்முன் அமர்ந்தால் தியானத்தின் ஆழம் புலப்படும்.இவர் இங்கே வந்திருக்கும் விருந்தினரல்ல. இந்தப் பிரபஞ்சத்தின் உரிமையாளர். நாம் வந்து வகுத்த இடம் இவருக்குப் பிடித்த இடம்."

அற்புதர் சொன்னதன் அர்த்தமும் அடர்த்தியும் ஆண்டுகள் செல்லச் செல்ல அனைவருக்கும் புரிந்தது.புராதன் முறையில் உருவான வளாகத்தில் திடமான மௌனமாய் திசைகளை உலுக்கும்.
அமைதியாய் எழுநிலை மாடங்களிலும் எழுகின்ற ஒளியலைகளை வாரி இறைத்தவண்ணம் வீற்றிருந்தார் அவர்.உலகின் எந்த மூலைக்குச் செல்ல நேர்ந்தாலும் இருந்த இடங்களில் இருந்து இவரையே பார்த்திருந்தார் அற்புதர்.

உலகெங்கும் அற்புதர் உலாவந்தாலும் அற்புதரின் உலகமாய் அமைந்தது
அந்தக் கூடாரம்.

Sunday, November 25, 2012

"நிறைய வேலை பண்ணுங்கப்பா"


                                                                 


" அந்தக் காலத்துல அந்தம்மா பேச்சைக் கேட்க நாங்கல்லாம் 12 மைல் சைக்கிளில போவோம்.தொ.மு.சி. ரகுநாதனும் அந்தம்மாவும் பேசினா மேடை கிடுகிடுக்கும்.பெரிய புரட்சிக்காரி" கவிஞர்புவியரசு என்னிடம் தொலைபேசியில் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டிருந்த போது 'அந்தம்மா"வைக்கடைசியாகப் பார்க்க தஞ்சாவூர் சென்று கொண்டிருந்தேன்.

ஜீவா அவர்களால் மார்க்சீய மார்க்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு,ஆழ்ந்த தமிழறிஞராய் வளர்ந்து,வள்ளலார் நெறியில் வாழ்வை இணைத்து முதிர்ந்த தாய்மையின் கனிந்த வடிவமாய் வாழ்ந்து22/11/2012ல் காலமான முனைவர் சு.சிவகாமசுந்தரி அவர்கள்தான் "அந்தம்மா".

சின்னஞ்சிறு வயதிலேயே அனல்பறக்கும் பேச்சாளராய் அறிமுகமான சிவகாமசுந்தரியின் தந்தை திரு.பழனியப்பர், வள்ளலாரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தமிழிலக்கியம் பயின்ற சிவகாமசுந்தரிக்கும்
வேளாண் பொறியாளர் திரு. சுப்பிரமணியனுக்கும் பழநி முருகன் கோவிலில் திருமணம் செய்துவைத்தவர் அருட்செல்வர்.நா.மகாலிங்கம். கோவையில் அமரர் தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார்
அவர்களின் அவிநாசிலிங்கம் மகளிர் மனையியல் கல்லூரியில் தமிழ்த்துறை விரிவுரையாளராகஅருட்செல்வர் சேர்த்துவிட்டார்.அப்போதைய முதல்வர் டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் விதித்த நிபந்தனை, "சிவகாமசுந்தரி கட்சிக்கூட்டங்களில் பேசக்கூடாது"என்பதுதான்.
              
ஜீவா மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் சென்ற கம்பனையும் பாரதியும் தமிழிலக்கிய மேடைகளில் கனலென முழங்கி,அதன்வழியே தன் மனதில் நீறு பூத்த நெருப்பாயிருந்த சமத்துவக் கொள்கைகளைமக்கள் மத்தியில் கொண்டுசென்ற வண்ணம் இருந்தார் முனைவர் சு.சிவகாமசுந்தரி.

பணிக்காலத்தில் கல்வித்திட்டத்தில் வந்தவொரு மாற்றத்தை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தைநிகழ்த்தி ஒருமாத காலம் சிறையிலிருந்தார் அவர்.போர்க்குணமும் புரட்சிக்கனலும் உள்ளே கனன்றுகொண்டிருந்தாலும் தாய்மை நிறைந்த அன்பைத் தருவதில் தனித்தன்மையுடன் திகழ்ந்தார்.

தஞ்சை பல்கலைக்கழகத்தில் பதிவாளராகப் பணிபுரிந்து பணிஓய்வுக்குப் பிறகு தஞ்சையிலேயேகுடியேறிவிட்டார் அவர். பூர்வீகம் தஞ்சைதான் அவருக்கு.தந்தைவழிச் சீதனமாக வந்த வள்ளலார் நெறி ஈடுபாடும் அவருக்கு இயல்பாகவே கைவந்தது. திருவருட்பாவுக்கு இசையமைக்கக்கூடாதென்று கருதிய வள்ளலார் இசையோடு பாடவென்றுதனியாகக் கீர்த்தனைகளை உருவாக்கித் தந்துள்ளார்.அவற்றை மட்டும் இசைப்பதற்கென்று வடலூரில் வள்ளலார்இசைவிழாவை விடாது நடத்திவந்தார் முனைவர் சிவகாமசுந்தரி .

முதுமையாலும் கணவரின் உடல்நலக்குறைவாலும் நீண்டகாலம் தமிழிலக்கிய மேடைகளைத்தவிர்த்துவந்த சிவகமசுந்தரி அவர்களை உரிமையோடும் அன்போடும் கோவையில் நடக்கும் "எப்போ
வருவாரோ" தொடர் நிகழ்ச்சியில் சில ஆண்டுகளுக்கு முன் வள்ளலார் பற்றிப் பேச அழைத்தேன்.
"எல்லாம் செயல்கூடும்" என்ற தலைப்பில் பேசிய அம்மையார், 'வள்ளல்பெருமான் வரிகளைவைத்து என் வாழ்க்கையை நான் திரும்பிப் பார்த்தால் ஒரு நிறைவு எனக்குத் தோன்றுகிறது.நான் "ஞானசபை நாதனுக்கு நல்ல பிள்ளை" என்றார். பணிபுரிந்த காலத்தில் சக ஆசிரியைகள் மத்தியிலும் மாணவிகள் மத்தியிலும் அவருக்கிருந்த செல்வாக்கு அத்தனை ஆண்டுகளுக்குப்பிறகும் அப்படியே இருந்ததை அன்று பார்த்தேன்.

விழா நடைபெற்ற கோவை ராம்நகர் ஐயப்ப பூஜா சங்கத்தின் வாயிலில் அம்மையார் வந்திறங்கியதும்நடுத்தர வயதைக் கடந்திருந்த முன்னாள் மாணவிகள் ஓடிச்சென்று அவரைக் கட்டிக் கொண்டு ஆனந்தக் கதறல் கதறியது நெகிழ்வான உணர்ச்சிச் சித்திரம்.

அடிக்கடி என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும்போதும் தஞ்சையில் அவர்களை நேரில்சந்திக்கும்போதும்,அவர் தவறாமல் சொல்கிற வாக்கியம்,"இன்னும் நிறைய வேலை பண்ணுங்கப்பா"
என்பதுதான்.

தஞ்சையின் புகழ்பெற்ற மருத்துவராக விளங்கிய அவரின் மாப்பிள்ளை
மறைந்த போதும் கணவர் மறைந்த போதும் நிலைகுலைந்த அவரைத்
தூக்கி நிறுத்தியது அவர்கற்ற தமிழும் வள்ளலார் நெறியில் அவருக்கிருந்த ஊற்றமும்தான்.

நான்கு மாதங்களுக்கு முன் "மூன்றாம் உலகப்போர்" அறிமுக விழாவிற்கு தஞ்சை சென்ற போது அவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தகவலை அவரது புதல்விமருத்துவர் அமுதச் செல்வி மூலம் அறிந்தேன். "உங்களையும் ஸ்டாலின் குணசேகரனையும் பற்றி
அம்மா அடிக்கடி பேசிக்கிட்டிருப்பாங்க.முடிஞ்சா வந்து பார்த்துட்டு போயிடுங்க" என்றார் அவர்.தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அம்மையாரிடம் சில மணித்துளிகள் பேச முடிந்தது."ரயிலுக்கு நேரமாயிடும்.புறப்படுங்க..நல்லா பண்ணிகிட்டிருக்கீங்க. இன்னும் நிறைய வேலை பண்ணுங்க"என்றார். அதன்பிறகு உடல்நிலை சற்றே சீராகி இல்லம் திரும்பினார்.

ஆகஸ்ட் 12ல், என் ஐம்பதாவது நூல் வெளியீட்டுவிழாவின் போது காலையில் அழைத்து வாழ்த்தின அம்மையார் அப்போதும் சொன்னது
"இன்னும் நிறைய வேலை பண்ணுங்கப்பா".
23/11/2012 முற்பகலில், ஐஸ் பெட்டிக்குள் துயில்நிலையில் இருப்பதுபோல் அமைதியாகப் படுத்திருந்தஅம்மையாரை வணங்கி நிற்கிற போதும் செவிகளில் ஒலித்தது அவருடைய குரல்,"இன்னும் நிறையவேலை பண்ணுங்கப்பா" .அருட்பெருஞ்ஜோதி அகவலை அருட்பா அன்பர்கள்
பாராயணம் செய்து கொண்டேயிருக்க,தமிழ் மேடைகளில் வீறுகொண்டு
முழங்கி ஓய்ந்த அந்த நெடுந்திருவுருவைப் பார்த்த வண்ணம் இருந்தேன்.

எழுபத்தாறாம் அகவைவரை வாழ்ந்த அந்தத் தேர்ந்த தமிழறிஞரை,தாய்மையின் பெருஞ்சுடரை வணங்குகிறேன்.அவரை
இழந்து வாடும் அவர்தம் புதல்விகள் துயரைப் பகிர்ந்து கொள்கிறேன்.

http://www.alaikal.com/news/?p=40845
அம்மையாரின் கட்டுரை ஒன்று


Friday, November 23, 2012

கம்பனில் சுழலும் சொற்போர்




                           நடுவர் :"கலைமாமணி"மரபின்மைந்தன் முத்தையா
                 
                         கற்பவர் மனங்களைப் பெரிதும் கவர்பவன்


                      அயோத்தி இராமனே- முனைவர்.குரு.ஞானாம்பிகை

                      ஆரண்ய இராமனே-   முனைவர்.து.இளங்கோவன்

                      கோதண்ட இராமனே- திருமதி மகேஸ்வரி சற்குரு

                            இடம்:அருள்மிகு கோதண்டராமசுவாமி ஆலயம்
                                          ராம்நகர், கோவை -641009

                              நாள்: 24.11.2012  சனிக்கிழமை மாலை 6.00 மணி

                                சொற்போர் வெடிக்கும்!                 சூடு பறக்கும்!

         (அமரர் டி.எஸ்.சங்கர ஐயர் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சி)       
                             தங்கள் வருகை........எங்கள் உவகை


   அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!!


அற்புதர்-14


                                                       

ஆண்டின் மிக இருண்ட இரவை அற்புதரின் முன்னிலையில் அணுஅணுவாய் உள்வாங்க பல இலட்சம்பேர் வந்துகொண்டிருந்தனர்.
மிகநீண்ட மலைப்பாம்பாய் வந்து கொண்டிருந்த அந்த வரிசையைப்
பார்த்த அற்புதர் புன்னகைத்த வண்ணம் வணங்கினார்.அவருக்கு
அன்றிரவு முழுவதும் தன் பங்குதாரருடன் ஒரு பணியிருந்தது..

ஒவ்வொருவருக்குள்ளும் உறங்கும் உயிர்ச்சுருளை உசுப்பிவிட்டு சீண்டிவிட்டு சீறவிட்டு வேடிக்கை பார்ப்பதில் அற்புதருக்கு அளவிட முடியாதஆனந்தம்.

தங்களுக்குள் இருக்கும் அந்த உயிர்ப்பை உணர்ந்தவர்கள்,உணராதவர்கள் அனைவருக்கும் அற்புதரின் சபையில் ஆசனங்கள் இர்ருந்தன.உலகின்
வெவ்வேறு திசைகளிலிருந்தும் குழலோடும் யாழோடும்முரசுகளோடும்
அங்கமெங்கும் தாண்டவத் துகள்களோடும் வந்துசேர்ந்த வல்லோர் குழு
கவிந்து கொண்டிருந்த இருளின் ஒவ்வோர் அணுவிலும் அதிர்வுகள்
கூட்டின.
                                                                          
அந்த இரவில் அங்கிருந்தோரின் முதுகுத்தண்டுகள் வழியே
மின்னல் வேகத்தில் பாம்புகள் ஊர்ந்து செல்லத் தொடங்கின.
சுருண்டு கிடந்த சாரைகளும் விரியன்களும் ராஜநாகங்களும்
துயில் கலைந்தெழுவதையும்,மெல்ல அசைவதையும் அங்கு வந்தவர்தம்  உடலசைவை வைத்தே உணர முடிந்தது.

அற்புதரின் திருமேனி மாபெரும் மகுடியாய் எழுந்து நின்று அத்தனை
நாகங்களையும் ஆட்டுவித்தது.ஆலமுண்ட கண்டமென்று நீலம்
படர்ந்திருந்த நள்ளிரவில் அற்புதரின் மகாமந்திர உச்சாடனத்தில் அத்தனை நாகங்களும் ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனாய்
படம்விரித்தன.

உச்சிவரை உயர்ந்தெழுந்த நாகங்கள் உள்ளே நிகழ்த்திய உறியடி உற்சவத்தில் உச்சியிலிருந்த பாற்குடத்தின் துளிகளை பருகின
நாகங்கள். பசிதுயில் மறந்தன தேகங்கள். நெடுந்தொலைவில்
ஒலித்தவொரு சித்தர் பாடல் அந்த வெள்ளிமலையெங்கும் விரிந்து
பரந்தது..

"மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்பவர்க்கு
 தேங்காய்ப்ப்பால் ஏதுக்கடி-குதம்பாய்
 தேங்காய்ப்பால் ஏதுக்கடி "




Wednesday, November 21, 2012

அற்புதர்-13


                                             
அற்புதரின் இரவுகள் ஏகாந்தமானவை.அவரின் அறிதுயில் பொழுதுகளில் அகலத் திறந்த அவரின் ஆன்மவாசல்வழி தங்களுக்கானசொர்க்கவாசல் தென்படுகின்றதா என்று வடிவிலாத் துளிகள் வந்து நிற்பதுண்டு.

பெருவழிக்கான பாதை திறக்க நெடுங்காலமாய் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்கள் மீது அற்புதரின் கண்ணோக்கம் படும்போதே அவர்களின் பயணப் பொழுது முடிவாகிவிடும்.

கையிலிருக்கும் மூட்டை முடிச்சுகளைக் களவு கொடுப்பதே அந்தப்
பயணத்துக்கான அடிப்படைத் தகுதி என்றறிந்தவர்கள் அற்புதர் அவற்றைக் களவாடும் கணத்திற்கென்று ஆவலுடன் காத்திருப்பார்கள்.நெடுங்காலமாய் சுமக்கும் அந்த மூட்டை முடிச்சுகளை அவர்களிடமிருந்து தனியே பிரித்தறியும் அற்புதமே அற்புதருக்குத்தான் சாத்தியம். தங்கள் மூட்டைகளைத் தங்களிடமிருந்து பிரிக்கவும்,தங்கள் முன்னிலையிலேயே அவற்றை எரிக்கவும் அவர்கள் அற்புதரையே பெரிதும் நம்பியிருப்பார்கள்.

கைகளில் இருக்கும் மூட்டைகளை மட்டுமின்றி அவர்கள் பெயரில் பதிவான சரக்குகளையும் கைப்பற்றி எரிப்பதில் கைதேர்ந்தவர்அற்புதர். எனவே அவர்களின் பயணிகள் தங்களின் உடமைகள் பத்திரமாய் களவு போயிருக்கும் என்ற நிம்மதியுடன் காணாமல்போவார்கள்.
                                                   

பலரும் பயணம் போவதாய் நினைத்துக் கொண்டு ரங்கராட்டினத்தில்
ஏறிவிட்டு தொடங்கிய இடத்திற்கே திரும்பத் திரும்ப வந்து கொண்டும் வழியெங்கும் கதறிக் கொண்டும் இருக்கும்போது, அற்புதரின் வாகனத்தில் ஏறியவர்களால் விரும்பிய இடத்திற்கு விரைந்து செல்ல முடிந்தது. ஒருபோதும் திரும்பத் தேவையில்லாதஉல்லாசப் பயணம் அது.

ஒருதிசைக்கும் மறுதிசைக்குமான பயணமா?ஒருகரைக்கும் மறுகரைக்குமான பயணமா? என்றெல்லாம் விசாரித்துக் கொண்டிருப்பவர்கள் வந்துசேரக் காலம் பிடிக்கும் என்பதை அற்புதர் அறிவார். விரும்பி வரும் பயணிகளே காத்திருப்போர் பட்டியலில்இருக்க ஒருசில பயணிகளுக்காக அற்புதர் காத்திருப்பதும் உண்டு.

செல்ல வேண்டிய பாதையாகவும் சென்று செலுத்தும் வாகனமாகவும் சேர வேண்டிய ஷேத்திரமாகவும் தானேயானதை ஒருபோதும் அற்புதர் அறிவித்ததேயில்லை.செல்பவர்கள் கண்டதில்லை.சென்றவர்கள் சொன்னதில்லை.

Tuesday, November 20, 2012

அற்புதர்-12

                                                        
சின்ன வயதிலிருந்தே சிகரங்கள் என்றால் அற்புதருக்கு மிகவும் பிரியம்.அவரது பாதங்களிலும் பாதுகைகளிலும் வாகனச்சக்கரங்களிலும் மலைவாசனையும் வனவாசனையும்வந்து கொண்டேயிருக்கும்.முன்பொரு காலத்தில் பரமனின் பாதங்கள் பதிந்த மலைத்தடங்களில்
அற்புதர் தன் குருநாதரை தரிசித்தார்.எனவே மலைகளின் தரிசனம், அவருக்கு தாய்முலை கரிசனம்.


அன்று தொடங்கி எல்லாச் சிகரங்களிலும் அவருக்கான பாதைகள் விரியத் தொடங்கின.சமவெளிகளில்அற்புதர் நடந்து வரும்போதெல்லாம் ஒரு சிகரம் நடந்து வருவதைப்போலவே இருக்கும். மலையேறும்
மனிதர்கள் அடிவாரங்களில் இளைப்பாறி அதன்பின் தொடங்குவதுபோல் அவருடைய திருவடிகளில்இளைப்பாறி ஆன்மீகச் சிகரங்கள் நோக்கி ஆயிரமாயிரம்பேர் தங்கள் தேடல்களைத் தொடங்கினர்.

                                                           
ஒரு மலையை நாம் ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது. கரடு முரடான பாதைகள் கொண்டதென்றுமலைகளைப் புரிந்து வைத்திருப்பவர்களுக்கு அங்கே மெல்லிய மலர்கள் கிள்ளல் பயமின்றி கிளுகிளுத்துச் சிரிப்பதை உணரவே முடியாது. பறவைகளும் விலங்குகளும் தங்கள் இயல்புப்படிமலைகளில் வாழ்வது போல், அற்புதரின் அணுக்கத்தில் ஒவ்வொரு மனிதரும் தங்கள்
உயிரியல்பை உணரத் தொடங்கினர்.ஆனால் அற்புதரின் பிரம்மாண்டம் மட்டும் அவர்களுக்குமுற்றாகப் பிடிபடவில்லை.

                                                             
கரிய பாறைகளின்மேல் கண்ணுறங்கும் முகில்களைப்போல் அற்புதரின் தோள்களில் சுமைகளைவைத்து தாள்களில் துயின்றன பல்லாயிரம் உயிர்கள்.மலையெங்கும் ஆங்காங்கே ஊஞ்சல் கட்டும்வெள்ளி அருவிகளாய் கண்கள் ஊற்றெடுக்க மூடிய இமைகள் மூடியவண்ணம் தியானத்தில் இருந்தனர்மனிதர்கள்.காற்றின் அசைவில் சிலிர்த்தசையும் மரங்களாய் அற்புதரின் சுவாசத்தில் சிலிர்த்தன மனங்கள்.

மலையில் ஆங்காங்கே தென்படும் காட்டு நெருப்பாய் தவத்தின் உச்சியில் அவ்வப்போது சிலரின் வினைக்காடுகள்எரியும்போதும் மௌனசாட்சியாய் அசையாதிருந்தார் அற்புதர். பனிபடர்ந்த சிகரமுகடுகளின் சொல்லொணா வசீகரம்அற்புதர் விழிமூடியமரும்தருணங்களில் கவிவதும், அவரின் விழிகள்மலரும்பொழுதில் உயிர்களெங்கும் வெய்யில் படர்வதும்
அவர் அசலர் என்பதை அடிக்கடி உணர்த்தின.



இருளின் விழுதுகள் பிடித்திறங்கி நட்சத்திரங்களும் நிலவும் மலைகளில் உலவ வரும் இரவுகளின்இரகசியக் குறிப்பை சில்வண்டுகள் பரிமாறிக்கொள்வதுபோல், அற்புதருக்கும் ஆகாயத்துக்கும் நடக்கும்
தகவல் பரிமாற்றத்தை இரவு நட்சத்திரக் கண்கள் மினுங்க கேட்டுக் கொண்டிருக்கும்.


அந்த இரவுகளின் சூட்சுமக் குறிப்புகளை மொழிபெயர்த்து அற்புதர் என்னும் கருணைச்சிகரத்தின்அடிவாரத்தில் வந்தமரும் வசந்தகாலப் பறவையொன்று வாய்விட்டுப் பாடியது

                                                

"சிகரத்தில் ஏறும் எந்த மனிதனும்
சிகரம் வென்றவன் இல்லை
உயரத்தைத் தொட்டவன் எல்லா நேரமும்
உயரத்தில் நிற்பதும் இல்லை
சிகரம் தீண்டிய முகிலகளும் பனியும்
சுவடே இன்றிக் கரையும்
சிகரம் என்பதே கரையச் சொல்வது
எத்தனை பேருக்குப் புரியும்?"

அந்தப் பாடலின் வரிகள் தோறும் வெளிச்சம் போட்டது,அற்புதரின் புன்னகை,



Monday, November 19, 2012

அற்புதர்-11

                                             


ஆகாயத்தைக் குறிவைப்பவர்களில் அற்புதரும் ஒருவர். ஆனால் அவர் குறிவைப்பது, தான் ஏற்கெனவே வென்றுவிட்ட ஆகாயத்தை. நெற்றிப் புருவங்கள் நடுவே வந்து நின்ற வெட்டவெளியின் விரிவை வெளியிலும் காண்பதால் அவர்பார்க்கும் ஆகாயம், அவருடைய ஆகாயம்.

ஆனால் ஆகாயத்தைக் குறிவைத்து அவர் எய்யும் அம்புகள் எதையும் கிழிக்கும் அம்புகளல்ல.கிழிந்த ஆகாயத்தைத் தைக்கும் அம்புகள்.பூமியை நாணாக்கி மேல்நோக்கி மெல்ல மெல்ல எழும் அம்புகளை அவர் எய்த வண்ணம் இருக்கிறார்.




                                                         
அற்புதரின் படைவீரர்கள் அல்லும்பகலும் அந்த அம்புகளை எய்தவண்ணம் இருக்கிறார்கள். அகஆகாயத்தின் ஆனந்தம் உணர்ந்த அற்புதர் புற ஆகாயத்தின்காயங்களை ஆற்றப் பச்சைப் பசுங்கணைகளை விண்நோக்கி விடுத்தவண்ணம் இருக்கிறார்.

"அம்பு காயத்தை ஆற்றுமா?"என்றொரு விமர்சகர் எழுப்பிய கேள்விக்கு அற்புதரின் படையிலிருந்தொருவர் பதில்சொன்னார். "அன்பு காயத்தை ஆக்குமென்றால் அம்பு காயத்தை ஆற்றாதா என்ன?"

"ஆகாயம் நோக்கிய ஆன்மீகத்தவம், வான்கருணையை வரவழைப்பது போல் ஆகாயம் நோக்கிய தாவரத்தவம், வான்மழையை வரவழைக்கும்" என்றார் அற்புதர். விரல் சொடுக்கியதும் பல இலட்சம் பசிய அம்புகள் வான்நோக்கி எழுந்ததை உலகின் வெற்றி ஆவணங்கள் சாதனை என்று சொன்ன போதுஅற்புதர் சொன்னார்,

"இது சாதனையா என்று தெரியவில்லை. அப்படியிருந்தால் ஒரு வேண்டுகோள். யாரேனும் ஒருவர் இந்த சாதனையை முறியடித்து இந்தசாதனையிலிருந்து மீண்டுவர எனக்கு உதவுங்கள்".

"அப்படியானால் இது சாதனையில்லையா?" அதிர்ச்சியுடன் கேட்டவர்களுக்குஅற்புதர் தந்த பதில் இது. "இந்த அம்புகள் நம் அகிம்சைச் சகோதரர்கள். நம்வெளிமூச்சு இவர்களின் சுவாசம். அவர்களின் வெளிமூச்சு நம் சுவாசம். இவர்களுடன் நமக்கிருப்பது இரத்த பந்தமல்ல. சுவாச பந்தம்"

அற்புதரின் அமைதிப்படை தொடுக்கும் பசிய அம்புகளின் பாய்ச்சலைப் பார்த்த உலகம் ஆகாயம் நோக்கிய இந்த ஆக்கபூர்வமான அம்புகள், கந்தலாகிவிட்ட ஆகாயத்தின் ஆடையைத் தைக்கும் ஊசிகள் என்பதை உணர்ந்தார்கள்.


                                            
அற்புதர்பால் கொண்ட அன்பால், அவரை "மரம் நடும் சாமி'என்று மற்றவர்கள்சொன்னபோது, ஆகாயத்தைக் குறிவைத்துக் கொண்டிருந்த அற்புதர்அவசரமாய்ச் சொன்னார், "நான் வந்தது மரங்களை வளர்க்க அல்ல..உயிர்களை மலர்த்த.. இது காலத்தின் தேவைக்குக் கைகொடுக்கும் வேலை. உலகைக்காக்க ஆகாயத்தின் ஓசோனை உறுதிசெய்ய என்னில் அங்கமாய் இருக்கும் பசுமைக்கரங்களால் மரங்கள் வளரும். ஆனால் என் சொந்த நந்தவனத்தில் காற்றின் அமுதத்தை உள்வாங்கி உயிரென்னும் பூக்கள் மலரும். உயிர்கள் மலர்த்துவதே என் வேலை. மரங்கள் வளர்ப்பது என் லீலை"