Thursday, February 26, 2015

கருப்பாயி என்றால்....

கருப்பாயி என்றால் கறுப்பென்றா அர்த்தம்?
கருப்பையிலே கொண்டாள் ககனம்- சிரிப்பாலே
மின்னல் உருவாக்கி மேக மெனப் பொழிவாள்
பின்னலிட்ட பிச்சியைப் பற்று

கோடை வருங்கால் குளிர்மழையும் ஆவாளே
மேடை வருங்கால் மனம்நிறைவாள் -ஜாடையில்
எந்தவொரு பெண்ணும் இவளோ எனும்படிக்கு
வந்துநிற்கும் பெண்ணை வழுத்து

கண்கள் விடுகதையாம் கால்களோ காவியமாம்
வண்ணச் சிறுகதையாம் வஞ்சியிடை-எண்ணிலொரு
நாவல் பழநிறத்து நாயகியாம் சாமளையாள்
காவலென்று வந்த கனிவு

தின்னும் கனிக்குள்ளே தேவி விதைவைத்தாள்
சின்ன மழலைக்குள் சொல்வைத்தாள்- கன்னியவள்
உன்னில் எதைவைத்தாள்? என்னில் எதைவைத்தாள்?   
தன்னையே வைத்தளித் தாள்.

Wednesday, February 18, 2015

இவன் ஆதியோகி ..இவன் ஆதியோகி....

(நான்கைந்து நாட்களுக்கு முன் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர் அழைத்தனர். ஆதியோகியாம் சிவனின் முரண் இயல்புகளை வர்ணிக்கும் பாடலடொன்றை எழுதித் தரக் கேட்டனர். திருமதி ஜெயஶ்ரீ அவர்கள் மஹாசிவராத்திரியில் இசைத்த அந்தப் பாடல்...இதுதான்)
     


இருளோடு ஜோதி... ஒளிவீசும் நீதி
எழில்மங்கை பாதி... இவன் ஆதியோகி

  நடமாட சுடலை.. பொடிபூசும் மேனி
உடனாட கணங்கள்... இவன் ஆதிஞானி

சடையோடு புனலாம்... கரமேந்தும் அனலாம்
சிரம்மீது நிலவாம்... விழிமூன்றும் வெய்யிலாம்

பொன்போல மேனி ...திருநீல கண்டம்
பொன்கூரை வீடு ...கையில்திரு ஓடு

விண்ணோரும் தேடி... அடையாத பாதம்
எண்தோள்கள் வீசி... நடமாடும் கோலம்

நெற்றிக்கண் திறப்பான்... காமனை எரிப்பான்
வெற்றிவடி  வேலன்... கண்வழியே பிறப்பான்

பருவங்கள் எல்லாம்... சிவன்பார்க்க மாறும்
துருவங்கள் எல்லாம்.... ஒன்றாக சேரும்

வேதங்கள் தேடி.... உணராத சித்தன்
ஓடோடி வந்து ...அருள்செய்யும் பித்தன்

யானைத்தோல் போர்த்து.... புலித்தோலை உடுப்பான்
திகம்பரன்  ஆகி ....திசையெங்கும் நடப்பான்

சிலநேரம் அகோரன் ....அதிரூப சுந்த்ரன்
அதிகாரம் செய்யும்... இவன்கால காலன்

கைலாச வாசி... ப்ரபஞ்ச யாத்ரி
மஹாயோகி ஆளும்... மஹாஷிவ ராத்ரி