Thursday, October 31, 2013

சத்குரு அவர்களை வரவேற்று....



(2010 ஆம் ஆண்டு..மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அயல்நாட்டுப் பயணங்களிலிருந்து சத்குரு திரும்பினார். சுவாமி ஆதிரூபா கேட்டபடி சத்குருவை வரவேற்று எழுதித் தந்த பாடல் இது...)


பல்லவி
வருக வருக எங்கள் வான்மழையே-எங்கள்
வாழ்வில் இனிக்கிற தேன்துளியே
தருக தருக உந்தன் தரிசனமே-எட்டுத்
திசைகள் அளந்துவரும் பூரணமே
 
சரணம்-1
திருவடி பாராமல் திருமுகம் காணாமல்
தினமொரு யுகமாய் கழிந்தது
குருநிழல் சேராமல் அருள்மொழி கேளாமல்
திசைகளும் இருளாய் இருந்தது
 
மாதங்கள் பறந்தன மாதவமே
மனமெங்கும் நிறைந்தது உன்முகமே
வான்வழி வந்தது எம்தவமே-எங்கள்
வாசலில் நின்றது வானகமே
 
 
சரணம்-2
ஒளிதரும் கிழக்காக கலங்கரை விளக்காக
பகலிலும் இரவிலும்  துணைநீ
துளிவினை படியாமல் தொடர்கதை தொடராமல்
தூயவனே எங்கள் கதிநீ
 
நீவரும் திசையினில் கண்ணிருக்க-உன்
நினைவினில் எப்போதும் நெஞ்சிருக்க
தாய்முகம் தேடிடும் சேய்களைப்போல்-எங்கள்
தவிப்பிலும் உந்தன் சிரிப்பிருக்க....

வருக வருக எங்கள் வான்மழையே-எங்கள்
வாழ்வில் இனிக்கிற தேன்துளியே
தருக தருக உந்தன் தரிசனமே-எட்டுத்
திசைகள் அளந்துவரும் பூரணமே
 

Monday, October 28, 2013

சத்குருவின் மஹாபாரத்-வாழ்க்கை வலியா?வரமா?

சத்குருவின் மஹாபாரத் நிகழ்ச்சிக்காக, மகாபாரதக் கதையைப் பின்புலத்தில் கொண்டு வாழ்வின் அடிப்படைகளை வினவும் விதமாய் ஒரு பாடல் வேண்டுமென சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர் கேட்டிருந்தார்கள். அவர்களுக்குத் தந்த பாடல் இது:


 யாரும் போடாத பாதை- இது
   எங்கோ போகின்ற சாலை
  வேர்கள் இல்லாத மரமா-இந்த
   வாழ்க்கை வலியா வரமா



  முடிவே இல்லாத பயணம்-அட
  முனிவன் நெஞ்சிலும் சலனம்
  விடிந்த பின்னாலும் இருளா-இந்த
   வாழ்க்கை புதிரா பதிலா



  தர்மம் வனத்தினில் பதுங்கும்-இங்கு
  தலைக்கனம் ஆட்சியைத் தொடங்கும்
  மர்மம் நிறைகிற கதையா- இந்த
  வாழ்க்கை கனவா நனவா



  மண்ணால் எழுந்தது யுத்தம்-இங்கு
  பெண்ணால் வளர்ந்தது யுத்தம்
  கண்ணா நாடகம் எதற்கு-இது
  கழித்தல் கூட்டல் கணக்கு



  காலம் உருட்டிடும் பகடை -இதில்
  காய்களுக் கேனோ கவலை
  மூலம் அறிந்தவன் ஒருவன் -இதை
  முடிக்கத் தெரிந்த தலைவன்



  நம்பிய எதுவும் மாறும்-இதில்
  நிஜமும் பொய்யாய் ஆகும்
  தம்பியைக் கொல்பவன் அண்ணன் -இதில்
  தர்மத்தின் குரலாய் கண்ணன்

Sunday, October 27, 2013

சத்குருவின் மஹா பாரத் நிகழ்ச்சி...அரங்கேறாத பாடல்




(2012 ல் சத்குரு ஈஷாவில் நடத்திய மஹாபாரத் நிகழ்ச்சியில் பாட சவுண்ட்ஸ் ஆஃப்  ஈஷா குழுவினருக்கு சில பாடல்கள் எழுதினேன். அவற்றில் அரங்கேறாத பாடல் இது )

வீணைகள் உறங்கிய இரவினிலே
   ராகங்கள் உறங்கவில்லை
 சேனைகள் தூங்கிய வேளையிலும்
   கோபங்கள்  தூங்கவில்லை

போர்க்களம் சிவந்தது போதாதோ
பாண்டவர் கௌரவரே
வாள்களின் பசியென்ன தீராதோ
  வீரர்கள் மாண்டனரே

குருதியின் நதியில் குளிக்கிறதே
  இதற்கா குருஷேத்ரம்
அருகினில் இறைவன் இருக்கின்றான்
   சாட்சி நிலைமாத்ரம்

உங்களின் வன்மம் தீர்வதற்கே
 உயிர்கள் மாளுவதோ
எங்கும் ரணகளம் ஏற்படுத்தி
  எவர்தான் ஆளுவதோ

மண்ணில் விழுந்த மனிதர்களோ
ஆயிரம் ஆயிரமே
கண்ண்முன் இன்றும் நடப்பதென்ன
பாரதக் காவியமே

Friday, October 25, 2013

போதிதர்மர்- அகலாத மர்மங்கள்



அறிய வேண்டிய ஆளுமைகள் ஆயிரமாயிரம் என்றாலும் அறிந்தே ஆக வேண்டிய ஆளுமைகளாக காலம் முன்னிறுத்தும் கம்பீரமான ஆளுமைகளில் ஒருவர், போதிதர்மர்.ஜென் தியான மார்க்கத்தின்
பிதாமகர்களில் ஒருவராகக் கருதப்படும் இவரை வண்ணத்திரை புதிய தலைமுறையின் பார்வைக்குக் கொண்டு வந்தது.
  
போதிதர்மர் பற்றிய முரண்பட்ட பல தகவல்கள்
கலவையாகக் கலந்து கிடக்கின்றன.அப்படியிருந்தாலும் தமிழகத்திலிருந்து
சென்ற இளவரசர் சீன மண்ணின் வழிபாட்டுக்குரிய குருவாய் வளர்ந்தார் என்பது எல்லா வகையிலும் பிரம்மிக்கத்தக்க வரலாறுதான்.

ஏழாம் அறிவு படத்தில் வருகிற அம்சங்களையும் கடந்து சில தகவல்கள்
போதிதர்மன் குறித்து கிடைக்கின்றன. பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் பவுத்தம் தமிழகத்தில் செல்வாக்கு பெற்றிருந்த
நிலையில்,பல்லவ மன்னன் கந்த வர்மனின் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் போதிதர்மர். குடும்பத்தில் கடைசிப்பிள்ளையை பௌத்த சமயத்துக்கு அர்ப்பணிப்பதென்ற மரபுப்படி பௌத்த வர்மனை கந்தவர்மன் குருகுலத்திற்கு அனுப்ப, பிரஜ்னதார குரு என்பவரிடம் அனுப்பப்பட்டு அவர் போதிதர்மன் ஆகிறார். போதிதர்மனின் இயல்பான அறிவும் களரி
குங்ஃபூ போன்ற வீர வெளிப்பாடுகளும் பிரஜ்னதார குருவை பெரிதும் கவர தன்னுடைய மடாலயத்தின் குருவாக போதிதர்மனை நியமித்தார் என்றொரு கருத்து நிலவுகிறது.

கந்தவர்மன் மரணப்படுக்கையில் இருந்தபோது, மூன்றாவது மகனையே பட்டத்திற்கு நியமித்ததாகவும் அதனால் சகோதரர்கள் போதிதர்மனை கொல்ல முயன்றதாகவும் இன்னொரு கதை நிலவுகிறது.
ஆனால் போதிதர்மர் ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபட்டு சீனா செல்ல
முயன்றதாகவும், அப்போது பல்லவ மன்னனாக இருந்த போதிதர்மனின் அண்ணன் மகன் தன் சித்தப்பாவை சீன அரசன் ராஜ மரியாதையுடன் வரவேற்க வேண்டிய ஏற்பாடுகள் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

பௌத்தத்தில் மதிக்கத்தக்க இடத்தைப் பெற்ற போதிதர்மரை சீன அரசர் மரியாதையுடன் வரவேற்க பரிந்துரை கூட தேவைப்பட்டிருக்காது. அப்போது நடந்தவொரு விசித்திரமான சம்பவம் பற்றி ஓஷோ ஓரிடத்தில் சொல்கிறார்.அரச மரியாதை போன்ற சடங்குகளிலும்
சம்பிரதாயங்களிலும் போதிதர்மனுக்கு பெரிய விருப்பம் ஏதுமில்லை.எனவே
அரசரும் மக்களும் பெருந்திரளாக வரவேற்கக் காத்திருக்கும் வந்தடைந்த போது,தன்னுடைய காலணிகளைத் தலையில்
தூக்கி வைத்திருந்தாராம்.அரசர் காரணம் கேட்டபோது,"இவை என்னை எவ்வளவு தூரம் சுமந்திருக்கின்றன!! இவற்றை சிறிது நேரம் சுமப்பதில் என்ன தவறு?" என்றாராம். தலையில் மகுடத்தை சுமப்பது பெரிய விஷயமும் இல்லை, காலணிகளை சுமப்பது கேவலமும் இல்லை
என்ற புரிதலை அரசனுக்கு ஏற்படுத்தவே இது நடந்தது போலும்!

போதிதர்மர் சீனாவை சென்றடைந்தது ஐந்தாம் நூற்றாண்டென்று
கருதப்படுகிறது.அநேகமாக அவர் நான்காம் நூற்றாண்டில் பிறந்தவராய் இருக்க வேண்டும். கி.பி547 ல் யாங் சூவான் சி என்பவர் எழுதிய
புத்தகத்தில் யாங் நிங் ஆலயத்தில் அவர் போதிதர்மரை சந்தித்ததாகவும்
அப்போது போதிதர்மருக்கு வயது நூற்றைம்பது என்றும் குறிப்பிடுகிறார்.அவர் சென்னையிலிருந்து கடல்வழியாக கங்ஸாவூ என்னும் இடத்திற்கு வந்து அங்கிருந்து தரை மார்க்கமாக நன்ஜிங் வந்ததாக சிலர் கருதுகிறார்கள். இன்னும் சில ஆய்வாளர்கள்,அவர் நிலம் கடந்து பாலைவனங்கள் கடந்து கால்நடையாகவே மஞ்சள் நதிக்கரை வந்தடைந்தார் என்கிறார்கள். எப்படியிருந்தாலும் அது ஆபத்துகளைத் தாண்டிவரும்
அதிதீரப் பயணம்தான்.

கி.பி.465 முதல் 550 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்த வூ டாய் என்ற அரசரின்
அரசவையில் சிறிது காலம் போதிதர்மர் இருந்தார் என்று கருதப்படுகிறது.பின்னர் சீனாவின் வடபகுதிக்கு நகர்ந்த
போதிதர்மருக்கு பௌத்தர்களிடமிருந்தும் சில எதிர்ப்புகள்
கிளம்பியிருக்கின்றன.பௌத்த நூல்களுக்கு புத்த விகாரங்கள் அதிக
முக்கியத்துவம் தருவதை அறிந்த போதிதர்மர்," ஞானமடைவதற்கான கருவிகளே புத்தகங்கள். புத்தகங்களே உங்களுக்கு ஞானம் தந்துவிடாது"என்று சொல்லவும் சிலர் கடுப்பானார்கள்.
போதிதர்மருக்கு எதிர்ப்பானார்கள். "ஞானம் அடையும் வழியில் புத்தர்
எதிர்ப்பட்டால் அவரையும் கொல்" என்பது போன்ற சூட்சுமமான ஜென்,அவர்களின் புரிதல் எல்லைக்கு அப்பாற்பட்டிருந்தது ஆச்சரியமில்லை.

அதன்பின்னர் போதிதர்மர் வந்து சேர்ந்த இடம்,ஹெனன் பகுதியில் உள்ள ஷாவொலின் ஆலயம். 495ல் இங்கே வந்து சேர்ந்த போதிதர்மர் ஒன்பது வருடங்கள் மௌனத்தில் இருந்தாராம்.இந்தியாவில்
போர்வீரர்களுக்கு தரப்பட்ட மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தற்காப்புப்
பயிற்சிகளைத்தான் அவர் சீனநாட்டில் போதித்தார்.இதற்கொரு சுவாரசியமான காரணமும் சொல்லப்படுகிறது.தன்னுடைய தியான மார்க்கத்தின் தீவிரத்தன்மையைத் தாங்க முடியாத அளவு சீனத் துறவிகள் பலரும் பலவீனமாக இருப்பதைப் பார்த்து இந்த தற்காப்புப் பயிற்சிகளை துணைப்பாடங்களாகத்தான் தந்திருக்கிறார் போதிதர்மன்.

எந்தப் பயிற்சி இருப்பதிலேயே  சிரமமோ அதை முயலுங்கள்" என்கிற சித்தாந்தத்தில் ஒவ்வோர் உடம்பையும் புடம் போடுவது போல்
பக்குவம் செய்து தந்தார் போதிதர்மன்."சஞ்சின் கதா" என்ற பெயரில்
போதிதர்மர் போதித்த கலையிலிருந்து பிறந்ததே கராத்தே.என்கிறார்கள். அதேபோல கிபா தாச்சி என்ற முறையும் போதி தர்மரால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான்.குனிந்திருக்கும் குதிரை போன்ற
இந்த ஆசனம் உடற்பயிற்சியாகவும் தியானமாகவும் இருக்கிறது.

ஓர் ஊதுபத்தி எரிந்து முடிகிற நேரம்-அதாவது ஒருமணிநேரம் வரை அந்த
ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கடும் பயிற்சியை போதிதர்மர் தந்த
பொக்கிஷங்களில் ஒன்று என்கிறார்கள்.
தன்னுடைய போதனைகள் எழுதப்படக்கூடாதென்றும் நேரடி போதனையாகவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தரப்பட வேண்டுமென்றும் போதிதர்மர் மிகவும் உறுதியாகக்
கூறிவிட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் தசைமாற்றம் மஜ்ஜை மாற்றம் போன்றவை குறித்த போதிதர்மரின் போதனைகள் புத்தக வடிவம் பெற்றன.இரத்ததையும் மஜ்ஜையையும் தூய்மை செய்து,அதன்மூலம் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி அதையே ஞானமடையும் பாதையாகப்
பயன்படுத்தும் யுக்திகள் போதிதர்மரின் கொடைகளாகத் தொகுக்கப்பட்டன.

அவருக்கு விஷம் கொடுத்துக் கொன்றார்கள் என்பது போன்றவற்றுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை.அதேநேரம் அவர் எந்த வயதில் எப்படி இறந்தார் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை. முற்றாகவும் முழுதாகவும் பொழிந்துவிட்டுக் கரைந்து போகும் முகில்களுக்கு முகவரிகள்இல்லாதது
போல்;போதிதர்மரின் வாழ்வு பற்றிய  செய்திகள் கைவசமில்லை.ஆனால் அந்த ஆளுமையிடமிருந்து நாம் அறிய வேண்டிய செய்தி இதுதான். கலைகள் எத்தனை அரிதானவை என்றாலும் அவை
ஞானம் அடைவதற்கான கருவிகளே! த்ற்காப்புக் கலையிலும் இருக்கிறது
தியானத்தின் அம்சம்!!

Wednesday, October 23, 2013

படுவதே பாடம்



வாழ்க்கையின் அபத்தம் புரிந்துவிட்டால் அது
 வாழ்வின் அற்புதம் ஆகும்
கூக்குரல் அழுகைகள் அடங்கிவிட்டால்-வரும்
மௌனம் நிரந்தரம் ஆகும்
கேட்கிற கதைகள் புரிவதில்லை-யாரும்
கேளாதிருப்பதும் இல்லை
வேட்கையும் பசியும் வளர்த்ததன்றி-ஒன்றும்
வெட்டி முறிக்கவும் இல்லை

 மமதையில் ஆடிடும் வேளைகளில்-விதி
 முகமூடிக்குள் சிரிக்கும்
நமதெனும் மிதப்பில் இருக்கையிலே-அதன்
நிழலும் பதுங்கிக் கிடக்கும்
திமிறிய மனிதன் நிமிருமுன்னே -அடி
தலைமேல் விழுந்து தொலைக்கும்
குமுறல்கள் கதறல்கள் பயனுமில்லை-அதன்
கணக்குகள்   மட்டும் நிலைக்கும்

உற்றவர் பாதையில் தென்படலாம்-அவர்
உடன்வரப் போவதும் இல்லை
பெற்றதும் சுமப்பதும் வினைவழியே-பிறர்
பாரங்கள் பெறவழி யில்லை
கற்றதும் மறந்ததும் வேடிக்கைதான் -அவை
கடைவழிக் கொருதுணை யில்லை
பற்றுகள் எல்லாம் விலங்குகள்தான் -இது
புத்தியில் புலப்பட வில்லை

கட்டிய கற்பனைக் கோட்டைகளை-வந்து
காலால் மிதிக்குது காலம்
எட்டிய வரைக்கும் எனது பலம் -எனும்
எண்ணத்தைப் புழுதியும் மூடும்
கிட்டிய தெல்லாம் கடவுள்செயல் -எனக்
கருதி யிருப்பதே லாபம்
ஒட்டியும் ஒட்டா திருப்பதுதான் -இந்த
உயிர்பெறும் அனுபவ ஞானம்

அவனது கணக்கு


 குதிரைகள் லாயத்தில் கூடும்-ஒரு
 கணத்திலே நரியாக மாறும்
 புதிரைப் போட்டவன் சிவனே -இதன்
பதிலும் தெரிந்தவன் அவனே

வித்துகள் நடுவோம் வயலில் -அவை
வளர்வதும் சிதைவதும் மழையில்
எத்தனை எத்தனை பார்த்தோம்-அட
இருந்தும் வாழ்ந்திடக் கேட்டோம்
 
மணநாள் வேள்வியும் புகைதான் -அந்த
மயான வேள்வியும் புகைதான்
குணமும் பணமும் பொய்யே-அட
கண்கள் கசக்குதல் மெய்யே

எத்தனை உயிர்கள் படைப்பான் -அவன்
எத்தனை ஓலைகள் கிழிப்பான்
பித்தன் என்றதும் சரிதான் -அவன்
பிழைகள் எல்லாமே சரிதான்

கூட்டல்தெரியும் நமக்கு-அதில்
கழித்தல் அவனது கணக்கு
ஏட்டில் எழுதி மறைத்தான்- அதை
மறைத்ததில் தானவன் ஜெயித்தான்

வருவதும் போவதும் கனவு-இதில்
விதம்விதமாய் பல நினைவு
தருவதும் பறிப்பதும் அவனே-இந்த
தர்க்கத்தின் பதிலும் சிவனே

Monday, October 21, 2013

ஜெயமோகனும் ராஜேஷ்குமாரும்..

ஜெயமோகனும் நானும் பேருந்தொன்றில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். அது வித்தியாசமான பேருந்து.உணவு வகைகள் ஆர்டர் செய்யலாம். அசைவ உணவு வகைகளின் பட்டியல் கொண்ட மெனுகார்டை பேருந்தில் உள்ள சர்வர் நீட்டுகிறார்.கேட்கும் உணவு ரகங்கள் எதுவுமில்லை.அதற்குள் நாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வருகிறது.

இறங்கியதும் ஜெயமோகனின் வாசகர் ஒருவர் எதிர்ப்படுகிறார். அவரிடம் நல்ல உணவகம் எங்கே என்று விசாரிக்கிறோம்.அவர் வழி சொல்லிக் கொண்டே அருகிலுள்ள வீட்டைக் காட்டி "இதுதான் எழுத்தாளர் ராஜேஷ்குமார் வீடு" என்று காட்டுகிறார்.

உடனே நான்,"இல்லையே! அவர் குயூரியோ கார்டனில் அல்லவா இருக்கிறார்"என்று யோசிக்கிறபோதே கொசுவலை அடிக்கப்பட்ட ஜன்னல் வழியே ராஜேஷ்குமார் கைகாட்டுகிறார். எங்களைப் பார்த்துவிட்டு சட்டையில்லாத உடம்புடன் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ஆர்வமாக வெளியே வருகிறார்.

ஜெயமோகனும் ராஜேஷ்குமாரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்கிறார்கள்.உடனே நான் என் டேப் ஐ எடுத்து புகைப்படம் எடுக்க ஆயத்தமாகிறேன்."சட்டை மாட்டிக் கொண்டு வருகிறேனே" என்று புறப்படும் ராஜேஷ்குமாரைத் தடுத்து "சும்மா அப்படியே நில்லுங்க!தகழி சிவசங்கரன் பிள்ளை மாதிரி இருக்கட்டும்" என்றதும்  ராஜேஷ் குமார் திடுக்கிடுகிறார். ஜெயமோகன்,"கடுப்பேத்துகிறார் மைலார்ட்" என்பது போல் பார்க்கிறார். நான் புகைப்படம் எடுக்கிறேன்.

அருகிலொரு மண்டபத்தில் விஷ்ணுபுரம் அரங்கசாமி உள்ளிட்ட நண்பர்கள் இருக்கிறார்கள்.அவர்களிடம் புகைப்படத்தைக் காட்ட ஒரே கூச்சலும் சிரிப்பும்..அந்த சப்தத்திலேயே விழித்துக் கொள்கிறேன்.



இப்படியொரு கனவு எப்படி வந்தது?நேற்று சென்னையில் இருந்த போது சிரிப்பொலி  சேனலில் சந்தானம் ,கார்த்தியிடம் "ராஜேஷ்குமார் நாவலில கூட ஹீரோயின் யாருன்னு ரெண்டாவது பக்கத்திலேயே சொல்லீடுவாங்க கமல்சார் "என்று சொன்ன காட்சியைப் பார்த்ததும்,மாலை பயணத்தில் ஜெயமோகனின் "வெண்கடல் " படித்துக் கொண்டு வந்ததும் குழம்பி விட்டது போல....நல்லவேளை ! விஷ்ணுபுரம் விருது ராஜேஷ்குமாருக்கு கொடுப்பது போல் கனவு வராமல் இருந்ததே!!

Thursday, October 17, 2013

பகவான் ரமணர்



நீரில் நனைந்தும் நனையாத அக்கினியை
வேரினில் கொண்டானே வித்தகன்-நாரிலே
கல்லுரிக் கும்சிவனை காணுமண் ணாமலையில்
உள்ளுரித்துக் கண்டான் உவந்து.

ஆனை புகுந்தவுடல் ஆக உடலசைய
ஞான முனிவன் நடைபயின்றான் -தேனை
அருந்திச் செரித்த அறுகாலாய் ஜென்ம
மருந்தாய் அமர்ந்தான் மலர்ந்து.

உள்ளம் தனைக்கொன்றே ஊனில் புதைத்தவனோ
தள்ளிநின்று தன்னை தரிசித்தான் -பள்ளம்
புகமண்டும் கங்கைப் புனலாய் சிவனும்
அகம்வந்து சேர்ந்தான் அறி.

பாதாள லிங்கம் புடம்போட்ட தங்கம்தான்
ஆதாரம் தன்னை அறிந்தது-சேதாரம்
மேனி தனில்நேர, மேன்மைதவம் செய்கூலி
ஞானமென ஏற்கும் நயந்து

இந்நாளில் அவன்தூங்கப் போனான்


இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன்
இசைபோல வடிவின்றி ஆனான்

கண்ணா என்றழைக்கின்ற நாவும்-அதில்
களிகொண்டு விளைகின்ற பாவும்
எண்ணாத விந்தையென யாரும்-தினம்
எண்ணியெண்ணிக் கொண்டாடும் சீரும் கொண்டு

இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன்
இசைபோல வடிவின்றி ஆனான்

குழந்தைக்கு நிகரான உள்ளம் -அதில்
குமுறிவரும் தமிழ்க்கவிதை வெள்ளம்
எழுந்தாலும் இருந்தாலும் அழகன்-என
எல்லோரும் கொண்டாடும் இணையில்லாக் கவிஞன்

இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன்
இசைபோல வடிவின்றி ஆனான்

திரையோடு தீராத அலைகள்-அவன்
மழைபோல பொழிகின்ற வரிகள்
முறையோடு தமிழ்கற்றதில்லை-ஒரு
முறைகூட அவன்தந்த தமிழ்தோற்றதில்லை

இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன்
இசைபோல வடிவின்றி ஆனான்

பிட்டுக்கு மண்சுமந்த சிவனும்-மழைக்
கொட்டுக்கு மலைசுமந்த ஹரியும்
மெட்டுக்கு இவன்தந்த வரியில்-மிக
மயக்கங்கள் உருவாகி வருவார்கள் புவியில்

இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன்
இசைபோல வடிவின்றி ஆனான்

ஐம்பத்து நான்கேதான் அகவை-அவன்
அழியாத புகழ்கொண்ட கவிதை
உம்பர்க்கும் கிட்டாத அமுதை-தன்
உயர்வான தமிழாக்கி பறந்திட்ட பறவை

இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன்
இசைபோல வடிவின்றி ஆனான்

சென்னையில் கண்ணதாசன் விழா


Tuesday, October 15, 2013

ஆனாலும் நீதான் கடல்


கடவுளின் கைப்பேசி பார்த்தேன் -அவர்
கூப்பிட்ட ஒரே நண்பன் நீதான்
நடைபோட்டு உன்வாசல் சேர்ந்தேன் -என்
வழியெங்கும் ஒரேகாவல் நீதான்
தடைபோட்ட எல்லாமே மாறி-உன்
திசைகாட்டி நிற்கின்றதே
விடைகேட்டு போகின்ற எல்லாம் -உன்
வழிகேட்டு வரப்போகுதே

ஆனந்த அலையாக வந்தாய்
ஆனாலும் நீதான் கடல்
வானாக விரிகின்ற ஈசா-உன்
விழிபார்க்க எந்தன் மடல்

எங்கெங்கே யார்தோன்ற வேண்டும்
எல்லாமே நீபோட்ட கோடு
மங்காமல் ஆனந்தம் பொங்கும்
உன்னோடு நானுள்ள போது
பொங்காதோ நெஞ்சங்கள் இங்கே-ஒரு
பொன்வார்த்தை நீசொல்லும் போது
எல்லாமும் அடங்காதோ இங்கே-உன்
ஏகாந்த மௌனத்தின்  போது  

ஆனந்த அலையாக வந்தாய்
ஆனாலும் நீதான் கடல்
வானாக விரிகின்ற ஈசா-உன்
விழிபார்க்க எந்தன் மடல்

கண்ணீரில் அலைபாயும் நேரம்
கணநேரம் உன்பாதம் காட்டு
எண்ணங்கள் எல்லாமே பாரம்
எரியட்டும் உன்தீயை மூட்டு
எனக்கென்று வினையேதும் இல்லை-அட
எல்லாமே உன்பாதம் சேரும்
கணக்கேது வழக்கேது நாதா-என்
கடனெல்லாம் உன்னாலே தீரும்

ஆனந்த அலையாக வந்தாய்
ஆனாலும் நீதான் கடல்
வானாக விரிகின்ற ஈசா-உன்
விழிபார்க்க எந்தன் மடல்

Sunday, October 13, 2013

வந்தாள் கண்ணெதிரே

 
 
அவளுக்கு வடிவம் கிடையாது
அழகுகள் எல்லாம் அவள் வடிவே
அவளுக்குப் பெயரொன்று கிடையாது
ஆயிரம் பெயர்களும் அவள்பெயரே
அவளுக்கு நிகரிங்கு கிடையாது
அவளுக்கு அவள்தான் ஒருநிகரே
கவலைகள் எனக்கினி கிடையாது
காளிவந்தாள் என் கண்ணெதிரே

தோய்ந்திடும் நடுநிசி நிறமல்லவா
தாமரை வதங்கிய நிறமல்லவா
பாய்ந்திடும் மின்னலை போல்சிலிர்ப்பு
பைரவி வருகிற விதமல்லவா
ஆய்ந்திட முடியா அவள்கருணை
அமுதம் பெருகிடும் வகையல்லவா
கோயிலில் வீதியில் தொடர்வதனை
காட்டிடும் குங்கும மணமல்லவா


வைத்த கொலுவில் அவள்பொம்மை
வாழ்வில் அவள்மட்டும் தானுண்மை
பொய்த்த கனவுகள் நிஜமாக
பாதை வகுப்பதே அவள்தன்மை
கைத்துப் போன வாழ்வினிலே
கட்டிக் கரும்பாய் அவள் அண்மை
வைத்தியச்சி வருகின்றாள்
வாரித் தருவாள் பலநன்மை

வழிகாட்டாய்


 மனக்கேடு கொண்டெழுப்பும் கோட்டை-அது
  மணல்வீடாய் சரிந்துவிழும் ஓட்டை
 குணக்கேடு தீரேன்நீ பராசக்தி பாரேன்என்
  ஏட்டை-என்ன -சேட்டை

குச்சியிலே கோடிழுத்தா கோலம்?-எனை
குற்றம்சொல்லி துப்புதடி காலம்
உச்சகட்டம் என்நடிப்பு உள்ளகதை உன்நினைப்பு
தூலம்-அலங்-கோலம்

 கோயிலுக்குள் நின்றுகொண்ட கள்ளி-இவள்
  கொஞ்சுகிறாள்பிள்ளையினைக் கிள்ளி
 தாய்மிதித்துப் பிள்ளையழ நாமங்களை சொல்லியழ
  தள்ளி -சென்றாள்-துள்ளி
   
எத்தனைநாள் இப்படியுன் ஆட்டம்-என்
இமைநடுவே கண்ணீரின் மூட்டம்
வித்தகியுன் கைவிரல்கள் பற்றியிங்கே பலவகையாய்
காட்டும்-பொம்ம- லாட்டம்

இப்போதென் அழுகுரலைக் கேட்டாய்-எனை
இப்படியே விட்டுவிட மாட்டாய்
தப்பேது செய்தாலும் கற்பகமே உன்கரங்கள்
நீட்டாய்-வழி-காட்டாய் 


இவ்வளவு நாள்பொறுத்தேன் தாயே-இந்த
இன்பதுன்பம் அத்தனையும் நீயே
கவ்வுகிற பேய்முதலை கால்நெருங்க உள்ளமிரங்
காயே-மஹா-மாயே

அழுதுவிடு! தொழுதுவிடு!


அர்ச்சனை நேரத்தில் இட்டமலர்
அரைநாள் சென்றால் சருகாகும்
உச்சி முகர்பவர் சொல்லொருநாள்
உதறித் தள்ளும் பழியாகும்
பிச்சியின் கூத்துகள் இவையெல்லாம்
பாடம் நமக்கு நடத்துகிறாள்
இச்சைத் தணலை அவித்துவிட்டு
இலையைப் போடவும் சொல்லுகிறாள்

மண்ணில் இறக்கி விட்டவள்தான்
மழலை ஆட்டத்தை ரசிக்கின்றாள்
கண்கள் கசக்கி அழுவதையும்
கண்டு தனக்குள் சிரிக்கின்றாள்
எண்ணி ஏங்கி அழுகையிலே
இடுப்பில் சுமக்க மாட்டாளோ
வண்ணப் பட்டால் விழிதுடைத்து
விளையாட்டுகளும் காட்டாளோ

படுவது பட்டுத் தெளிவதுதான்
பக்குவம் என்பாள் பராசக்தி
கெடு வைப்பதற்கு நாம்யாரோ
கேட்டால் சிரிக்க மாட்டாளோ
விடுநீ மகனே வருந்தாதே
விடியும் என்று சொல்கின்றாள்
தடுமாறாமல் துயிலவிட்டு
தானாய் நாளை எழுப்பிடுவாள்

அன்னையின் பிள்ளைகள் நாமெல்லாம்
அவலம் நேரப் போவதில்லை
முன்னை வினைகள் முகங்காட்டும்
முள்ளை எடுத்தால் சோகமில்லை
இன்னும் அழுதால் அழுதுவிடு
இமைகள் துடைத்துத் தொழுதுவிடு
மின்னும் சிரிப்புடன் எழுந்துவிடு
மாதங்கி பதங்களில் விழுந்து எழு  

கொலுவிலேறினாள்

கொட்டோடு முழக்கோடு கொலுவிலேறினாள் -அன்னை
கொள்ளையெழில் பொங்கப் பொங்க மனதிலேறினாள்
பொட்டோடு பூவோடு மாதர்வாழவே -அன்னை
பூரணமாய் கருணைதந்து பரிவுகாட்டினாள்

தீபத்தின் ஒளியினிலே தகதகக்கிறாள்-அன்னை
திருவிளக்கின் சுடராகத் தானிருக்கிறாள்
நாபிதனில் ஒலியாக  நிறைந்திருக்கிறாள்-அன்னை
நாதத்துள் மௌனமென மறைந்திருக்கிறாள்

சாமரங்கள் வீசியுப சாரம்செய்கையில்-அவள்
சிலையெனநாம் செம்பட்டு சார்த்தி நிற்கையில்
நாமங்களோர் ஆயிரமும் நவின்றிருக்கையில்-அன்னை
நேர்படவே மழலையாக வந்துநிற்கிறாள்

கோடிமலர் பாதமிட்டும் தீரவில்லையே-அவள்
கொலுவழகைப் பார்க்கும்வேட்கை ஆறவில்லையே
தோடெறிந்த தேவதேவி தென்படுவாளே-வினை
தானெரிந்து போகும்படி அருள்தருவாளே

சந்தனமும் சரமலரும் சூட்டும் போதிலே-சிறு
சலங்கையொலி மெல்லமெல்லக் கேட்கும் காதிலே
மந்திரங்கள் சொல்லச் சொல்ல ரூபம்தோன்றுதே-இனி
மறுமையென்னும் ஒன்றில்லாமல் முடிந்து போகுதே

மங்கலை கொண்டாள் மகாவெற்றி

சங்கல்பம் கொண்டு சமர்செய்ய வந்திங்கு
மங்கலை கொண்டாள் மகாவெற்றி-எங்கெங்கும்
நல்லவையே வென்றுவர நாயகி நாமங்கள்
சொல்லிப் பணிந்தால் சுகம்.

புத்தி வலிவும் பொருள்பலமும் பாங்கான
உத்தி பலமுமே உத்தமிதான் -சத்தியவள்
போடும் கணக்கின் பதிலீட்ட வேண்டியே
ஆடும் விதியாம் அரவு.

வண்ணத் திருவடிகள் வையத்தின் ஆதாரம்
கண்கள் கருணைக் கருவூலம்-பண்ணழகோ
தேவி குரலாகும் தேடும் மனவனத்தே
கூவி வருமே குயில்.

பொன்கயிலை ஆள்கின்ற பேரரசி மாதங்கி
மென்மயிலைப் போற்ற மனம்மலரும்-மின்னொயிலை
காணுதற்கும் நெஞ்சம் குழைவதற்கும் நாமங்கள்
பேணுதற்கும் தானே பிறப்பு.

 அத்தனுண்ட நஞ்சை அமுதாக்கித் தந்தவளை
 தத்துவங்கள் ஆள்கின்ற தத்துவத்தை-பித்துமனத்
தாய்மையை எங்கள் திருவை கலையழகை
போய்வணங்கச் சேரும் புகழ்.

காசி விசாலாட்சி கங்கை தனில்நீந்தும்
ஆசை மிகுமன்ன பூரணி-தேசுடைய
மீனாட்சி காமாட்சி மிக்க வடிவுகளில்
தானாட்சி செய்யும் திறம்.

எங்கள் அபிராமி; ஈசன் நடனத்தில்
சங்கமம் ஆகும் சிவகாமி-பொங்குமெழில்
கற்பகத்தாள் கோலவிழிமுண்டகக் கண்ணியின்
பொற்பதங்கள் நாளும் பணி.

கோனியன்னை எங்களது கோவையிலே தண்டுமாரி
ஞான மருள்பச்சை நாயகியாள்-ஆனைமலை
மாசாணி பண்ணாரி மாரியன்னை பேரருளால்
ஆசைநிச மாகும் அறி.

சித்தம் பதமாகும் செய்கை ஜெயமாகும்
நித்தம் விடியல் நலமாகும்-புத்தம்
புதிய புகழும் பலசேரும் தாயை
இதயம் தனிலே இருத்து.

Friday, October 11, 2013

துயரம் தீர்ப்பாள் மஹாலஷ்மி



அலைகள் புரண்டெழும் ஓசையிலே-ஓர்
அழகியின் சிரிப்பொலி கேட்கிறது
விலைகள் இல்லாப்  புதையல்களில்-அவள்
வண்ணத் திருமுகம் தெரிகிறது
நிலைபெறும் பாற்கடல் பாம்பணையில்-அந்த
நாயகி சரசம் நிகழ்கிறது
வலைவிழும் மீன்களின் துள்ளலைப்போல்-அவள்
விழிபடும் இடமெலாம் கொழிக்கிறது
அறிதுயில் கொள்ளும் பரந்தாமன் -அவன்
அமைதிக்குக் காரணம் மஹாலஷ்மி
வறுமையைக் களையும் வரலஷ்மி-நல்
வளங்கள் தருவாள் தனலஷ்மி
மறுவே இல்லா நிலவாக-நம்
மனங்களில் உதிப்பவள் கஜலஷ்மி
மறுபடி மறுபடி வரும்பசியை-மிக
மகிழ்வாய் தணிப்பாள் சுபலஷ்மி
தானியக் களஞ்சியம் நிரம்பிடவும்-மிகு
தங்கம் வைரம் நிறைந்திடவும்
தேனினும் இனிய நல்வாழ்வில்-எட்டுத்
திசையும் புகழே சூழ்ந்திடவும்
ஞானம் வீரம் வெற்றியெலாம்-வந்து
நேர்பட நம்மைச் சேர்ந்திடவும்
தானாய் இரங்கி அருள்தருவாள்-நம்
துயரம் தீர்ப்பாள் மஹாலஷ்மி

 
மாலவன் மனைநலம் காபவளாம்-நல்ல
மாதர்கள் முகத்தில் குடியிருப்பாள்
காலம் விதிக்கும் சோதனைகள்-தமை
கருணைப் பார்வையில் துடைத்தெடுப்பாள்
ஓலம் இடுகிற பக்தர்கள் முன் -அவள்
ஒடி வந்தே துயர்துடைப்பாள்
நீல வண்ணனின் நெஞ்சினிலே-ஒளி
நித்திலமாவாள் மஹாலஷ்மி

நானிலம் காப்பாள் மடியில்

பச்சைப் பட்டின் முந்தானை -அந்தப்
பரமனின் நெற்றியை ஒற்றும்
பச்சை வண்ணத் திருமேனி-எங்கள்
பரமனின் பாதியைப் பற்றும்
பச்சைப் புயலாம் மயிலினிலே-ஒரு
பிள்ளை பூமியை சுற்றும்
பச்சை மாமலை திருமாலோ-அவள்
பிறந்த வகையின் சுற்றம்

மாம்பழம் பெற்ற முதல்பிள்ளை -எங்கள்
மாதுமை மடியினில் துஞ்சும்
தேம்பி யழுத பிள்ளைக்கோ-பால்
திருஞானத்துடன் விஞ்சும்
சாம்பல் மேட்டினில் சாம்பசிவம்-உடன்
சாம்பவிக் கொடிநின்று கொஞ்சும்
கூம்பிய உயிர்கள் மலர்ந்துவிட-அவள்
குளிர்மலர் அடிகளே தஞ்சம்

நாயகிஎங்கள் சிவகாமி -இந்த
நானிலம் காப்பாள் மடியில்
தாயாம் எங்கள் அபிராமி-துயர்
துடைத்திட வருவாள் நொடியில்
ஆய கலைகள் அனைத்தையுமே-அவள்
ஆதரிப்பாள் கைப்பிடியில்
மாயைகள் தீர்க்கும் மஹாமாயை -நம்
முன்வருவாள் பல வடிவில்   

தேரின் வடம்தொடும் கைகள்-அதில்
தேவதேவியின் முத்தம்
வேருக்கு நீர்விடும் கைகள் -தமை
வித்தகி கைகளும் பற்றும்
பேருக்கு ஆசையில்லாமல்-பணி
புரிபவர் மனமவள் முற்றம்
காருக்கும் நீர்தரும் கருணை-நிறை
கடைவிழி யால்புவி சுற்றும்

அடக்கும் அங்குசம்



கட்டிவைத்தும் மனக்களிறு கட்டுப்படாது-அது
காமங்கொண்டு பிளிறுவதை விட்டுவிடாது
தட்டிவைக்க அவள்வராமல் தலையடங்காது-எங்கள்
தேவதேவி குரல்தராமல் நிலையடங்காது

அங்குசத்தைக் கொண்டுநின்றாள் ஆலயத்திலே-நம்
அகந்தையெல்லாம் தளரவைக்கும் ரௌத்திரத்திலே
அங்கயற்கண் பார்வைபட்ட ஆனந்தத்திலே-அட
ஆனையெல்லாம் பூனையாகும் சிவலயத்திலே!

பாணமைந்தும் கரும்புவில்லும் பூங்கரத்திலே-ஒரு
பார்வையிலே மனமடங்கும் அவள்பதத்திலே
கோணங்களோ ஒன்பதுஸ்ரீ சக்கரத்திலே-நவ
கோள்களெல்லாம் வணங்கிநிற்கும் ஸ்ரீபுரத்திலே 

சிந்துரத்தில் தோய்ந்தபாதம் சமர்க்களத்திலே-கொடும்
சினமெழுந்து சூலமேந்தும் அமர்க்களத்திலே
வந்தபகை மாய்க்கும் அன்னை ஒளிரதத்திலே-அவள்
வைத்தசுடர் பற்றிக்கொள்ளும் வினைப்புனத்திலே

சொல்லாய் மலர்கிறவள்


ஏந்திய வீணையில் எழுகிற ஸ்வரங்கள்
எண்திசை ஆண்டிருக்கும்
மாந்திய அமுதம் பொய்யென தெய்வங்கள்
மதுரத்தில் தோய்ந்திருக்கும்
பூந்தளிர் இதழ்களில் பிறக்கிற புன்னகை
புதுப்புது கலைவளர்க்கும்
சாந்தமும் ஞானமும் சரஸ்வதி தேவியின்
சந்நிதி தனில்கிடைக்கும்


படைப்புக் கடவுளின் பத்தினித் தெய்வம்
படையல் கேட்கிறது
விடைக்கும் மனங்களின் அறியாமை தனை
விருந்தாய்க் கேட்கிறது
நடையாய் நடந்து நல்லவை தேடிட
நிழல்போல் தொடர்கிறது
படைகள் நிறைந்த மன்னவர் பணியும்
பெருமிதம் தருகிறது

பனையோலை முதல் கணினித் திரைவரை
பாரதி ஆளுகிறாள்
தனையே பெரிதென எண்ணிடும் மூடர்முன்
திரைகள் போடுகிறாள்
நினையும் நொடியில் கவியாய் கலையாய்
நர்த்தனம் ஆடுகிறாள்
வினைகள் ஆயிரம் விளையும் விரல்களில்
 வித்தகி வாழுகிறாள்

சின்னஞ் சிறிய மழலையின் நாவினில்
சொல்லாய் மலர்கிறவள்
கன்னஞ் சிவந்த கன்னியர் அபிநயக்
கலையாய் ஒளிர்கிறவள்
மின்னல் ஒளியாய் உளியின் முனையில்
மெருகுடன் மிளிர்கிறவள்
இன்னும் பலவகைக் கலைகளில் எல்லாம்
இன்பம் தருகிறவள்

வாணியின் நிழலில் வாழ்கிற பொழுதில்
வருத்தம் சுடுவதில்லை
தூணின் அழகிலும் தெரிகிற தேவியின்
தூய்மைக்கு நிகருமில்லை
காணும் திசைகளில் கவின்மிகு வடிவில்
காட்சி கொடுக்கின்றாள்
பேணத் தெரிந்தவர் வாழ்வினில் எல்லாம்
புத்தொளி தருகின்றாள்

இது இராமாயணம் அல்ல....




காத்துக் கிடந்தது குகன்படகு
கள்ளத் தோணிகள் திடீர் வரவு........

மோதிய அலைகளில் ஆடியபடியே
பாதங்கள் படுமென ஏங்கியபடியே
நாயகன் திருமுகம் தேடியபடியே
தோழமை எனும்சொல் சூடியபடியே

காத்துக் கிடந்தது குகன்படகு
கள்ளத் தோணிகள் திடீர் வரவு........

துடுப்புகள் ஏனோ அசையவுமில்லை
திடுக்கிட்ட வேடன் தெளியவுமில்லை
வழக்கத்தின் மாற்றம் விளங்கவுமில்லை
இலக்குவன் ஏதும் அறியவுமில்லை

காத்துக் கிடந்தது குகன்படகு
கள்ளத் தோணிகள் திடீர் வரவு........

சொந்த நதியிலா சொந்தம் தொலைவது
எந்தத் திசையில் நாவாய் செல்வது
வந்ததும் சென்றதும் விடுகதையானது
சந்தக் காவியம் சிறுகதையானது
 

காத்துக் கிடந்தது குகன்படகு
கள்ளத் தோணிகள் திடீர் வரவு........

குகனொடும் ஐவர் என்றதும் பொய்யா
வகையறியாதவர் வென்றது மெய்யா
சகலரும் காணச் சென்றனன் ஐயா
ரகுவரன் தோள்களில் ராவணன் கையா
 

காத்துக் கிடந்தது குகன்படகு
கள்ளத் தோணிகள் திடீர் வரவு........

வேர்விடும் சொந்தம் வருந்தியதென்ன
கூரிய கணைகள் குழம்பியதென்ன
கார்நிற வண்ணன் கணக்குகள் என்ன
மாறிய திசையின் மர்மங்கள் என்ன

காத்துக் கிடந்தது குகன்படகு
கள்ளத் தோணிகள் திடீர் வரவு........

பரிபுரை திருவுளம்


அவள் தரும் லஹரியில் அவளது பெயரினை
உளறுதல் ஒருசுகமே
பவவினை சுமைகளும் அவளது திருவிழி
படப்பட சுடரெழுமே
சிவமெனும் சுருதியில் லயமென இசைகையில்
சிறுமியின் பரவசமே
புவனமும் அவளது கருவினில் தினம்தினம்
வளர்வது அதிசயமே

நதிமிசை பெருகிடும் அலைகளில் அவளது
நெடுங்குழல் புரண்டு வரும்
சிதைமிசை எழுகிற கனலினை அவளது
சிறுவிரல் வருடிவிடும்
விதியதன் முதுகினில் பதிகிற எழிற்பதம்
வினைகளைக் கரையவிடும்
மதியென எழுகிற திருமுக ஒளியினில்
கதிர்மிசை சுடருமெழும்

கனல்பொழி நுதல்விழி கருணையின் இருவிழி
கயலென சுழன்றிடுமே
மனமெனும் சிறுகுடில் தனிலவள் நுழைகையில்
மிகுமங்கு   ஸ்ரீபுரமே
பனிபடர் மலரிடை பரவிடும் சுகந்தமும்
பரிபுரை திருவுளமே
இனிவரும் உயிர்களும் இவளது மடியினில்
இருந்தபின் கரைந்திடுமே

நிலமிசை நெளிகிற சிறுபுழு அசைவுகள்
நிகழ்வதும் அவளருளே
மலைகளை விழுங்கிடும் பிரளய வரவுகள்
அதிர்வதும் அவள்செயலே
உலைகொதி அரிசியில் உலகெழு பரிதியில்
உமையவள் அருள்நலமே
இலைபயம் இலையென இதழ்வரும் ஒளிநகை
எமைநலம் புரிந்திடுமே

Thursday, October 10, 2013

சிரித்து நிறைகின்றாள்


மலைமகள் இரவுகள் நிகழ்ந்திடும் பொழுதுகள்
மலேய நாட்டினிலே
கலைமகள் அலைமகள் கடைவிழி பதிந்திடும்
காவிய வீட்டினிலே
நலம்பல வழங்கிடும் நாயகி எங்கெங்கும்
நின்று ஜொலிக்கின்றாள்!
சிலைகளில் மலர்களில் பனியினில் வெயிலினில்
சிரித்து நிறைகின்றாள்

மங்கலத் திருவடி நடமிடும் கொலுசொலி
மழைவரும் ஒலிதானே!
பங்கயத் திருமுகம் பொலிந்திடும் கலைநயம்
பகலவன் ஒளிதானே!
அங்கென இங்கென ஆயிரம் மாயைகள்
அவளது களிதானே!
எங்களின் அன்னையின் கைவிரல் தாயங்கள்
எழுகடல் புவிதானே!

வீசிய பாதங்கள் விசைகொள்ளும் விதமே
வருகிற காற்றாகும்
பேசிய வார்த்தைகள் வேதமென்றே இந்த
பூமியில் நிலையாகும் 
ஆசையில் ஊட்டிய பருக்கைகள் சிந்தி
ஆயிரம் பயிராகும்
ஈசனின் பாகத்தில் ஏந்திழை சேர்ந்ததே
இரவொடு பகலாகும்

புன்னகையால் சில புதிர்களை அவிழ்க்கும்
பேரெழில் நாயகியாம்
இன்னமுதாகவும் கொடுமருந்தாகவும்
இலங்கிடும் பைரவியாம்
தன்னையும் கடந்தவர் தவத்தினில் லயிக்கையில்
தென்படும் தேன் துளியாம்
அன்னையின் தாண்டவம் அரங்கேறும் இடம்
அதுதான் வான்வெளியாம்!