Monday, October 28, 2013

சத்குருவின் மஹாபாரத்-வாழ்க்கை வலியா?வரமா?

சத்குருவின் மஹாபாரத் நிகழ்ச்சிக்காக, மகாபாரதக் கதையைப் பின்புலத்தில் கொண்டு வாழ்வின் அடிப்படைகளை வினவும் விதமாய் ஒரு பாடல் வேண்டுமென சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர் கேட்டிருந்தார்கள். அவர்களுக்குத் தந்த பாடல் இது:


 யாரும் போடாத பாதை- இது
   எங்கோ போகின்ற சாலை
  வேர்கள் இல்லாத மரமா-இந்த
   வாழ்க்கை வலியா வரமா



  முடிவே இல்லாத பயணம்-அட
  முனிவன் நெஞ்சிலும் சலனம்
  விடிந்த பின்னாலும் இருளா-இந்த
   வாழ்க்கை புதிரா பதிலா



  தர்மம் வனத்தினில் பதுங்கும்-இங்கு
  தலைக்கனம் ஆட்சியைத் தொடங்கும்
  மர்மம் நிறைகிற கதையா- இந்த
  வாழ்க்கை கனவா நனவா



  மண்ணால் எழுந்தது யுத்தம்-இங்கு
  பெண்ணால் வளர்ந்தது யுத்தம்
  கண்ணா நாடகம் எதற்கு-இது
  கழித்தல் கூட்டல் கணக்கு



  காலம் உருட்டிடும் பகடை -இதில்
  காய்களுக் கேனோ கவலை
  மூலம் அறிந்தவன் ஒருவன் -இதை
  முடிக்கத் தெரிந்த தலைவன்



  நம்பிய எதுவும் மாறும்-இதில்
  நிஜமும் பொய்யாய் ஆகும்
  தம்பியைக் கொல்பவன் அண்ணன் -இதில்
  தர்மத்தின் குரலாய் கண்ணன்