Friday, October 11, 2013

துயரம் தீர்ப்பாள் மஹாலஷ்மி



அலைகள் புரண்டெழும் ஓசையிலே-ஓர்
அழகியின் சிரிப்பொலி கேட்கிறது
விலைகள் இல்லாப்  புதையல்களில்-அவள்
வண்ணத் திருமுகம் தெரிகிறது
நிலைபெறும் பாற்கடல் பாம்பணையில்-அந்த
நாயகி சரசம் நிகழ்கிறது
வலைவிழும் மீன்களின் துள்ளலைப்போல்-அவள்
விழிபடும் இடமெலாம் கொழிக்கிறது
அறிதுயில் கொள்ளும் பரந்தாமன் -அவன்
அமைதிக்குக் காரணம் மஹாலஷ்மி
வறுமையைக் களையும் வரலஷ்மி-நல்
வளங்கள் தருவாள் தனலஷ்மி
மறுவே இல்லா நிலவாக-நம்
மனங்களில் உதிப்பவள் கஜலஷ்மி
மறுபடி மறுபடி வரும்பசியை-மிக
மகிழ்வாய் தணிப்பாள் சுபலஷ்மி
தானியக் களஞ்சியம் நிரம்பிடவும்-மிகு
தங்கம் வைரம் நிறைந்திடவும்
தேனினும் இனிய நல்வாழ்வில்-எட்டுத்
திசையும் புகழே சூழ்ந்திடவும்
ஞானம் வீரம் வெற்றியெலாம்-வந்து
நேர்பட நம்மைச் சேர்ந்திடவும்
தானாய் இரங்கி அருள்தருவாள்-நம்
துயரம் தீர்ப்பாள் மஹாலஷ்மி

 
மாலவன் மனைநலம் காபவளாம்-நல்ல
மாதர்கள் முகத்தில் குடியிருப்பாள்
காலம் விதிக்கும் சோதனைகள்-தமை
கருணைப் பார்வையில் துடைத்தெடுப்பாள்
ஓலம் இடுகிற பக்தர்கள் முன் -அவள்
ஒடி வந்தே துயர்துடைப்பாள்
நீல வண்ணனின் நெஞ்சினிலே-ஒளி
நித்திலமாவாள் மஹாலஷ்மி