Friday, October 11, 2013

பரிபுரை திருவுளம்


அவள் தரும் லஹரியில் அவளது பெயரினை
உளறுதல் ஒருசுகமே
பவவினை சுமைகளும் அவளது திருவிழி
படப்பட சுடரெழுமே
சிவமெனும் சுருதியில் லயமென இசைகையில்
சிறுமியின் பரவசமே
புவனமும் அவளது கருவினில் தினம்தினம்
வளர்வது அதிசயமே

நதிமிசை பெருகிடும் அலைகளில் அவளது
நெடுங்குழல் புரண்டு வரும்
சிதைமிசை எழுகிற கனலினை அவளது
சிறுவிரல் வருடிவிடும்
விதியதன் முதுகினில் பதிகிற எழிற்பதம்
வினைகளைக் கரையவிடும்
மதியென எழுகிற திருமுக ஒளியினில்
கதிர்மிசை சுடருமெழும்

கனல்பொழி நுதல்விழி கருணையின் இருவிழி
கயலென சுழன்றிடுமே
மனமெனும் சிறுகுடில் தனிலவள் நுழைகையில்
மிகுமங்கு   ஸ்ரீபுரமே
பனிபடர் மலரிடை பரவிடும் சுகந்தமும்
பரிபுரை திருவுளமே
இனிவரும் உயிர்களும் இவளது மடியினில்
இருந்தபின் கரைந்திடுமே

நிலமிசை நெளிகிற சிறுபுழு அசைவுகள்
நிகழ்வதும் அவளருளே
மலைகளை விழுங்கிடும் பிரளய வரவுகள்
அதிர்வதும் அவள்செயலே
உலைகொதி அரிசியில் உலகெழு பரிதியில்
உமையவள் அருள்நலமே
இலைபயம் இலையென இதழ்வரும் ஒளிநகை
எமைநலம் புரிந்திடுமே