Sunday, October 13, 2013

வந்தாள் கண்ணெதிரே

 
 
அவளுக்கு வடிவம் கிடையாது
அழகுகள் எல்லாம் அவள் வடிவே
அவளுக்குப் பெயரொன்று கிடையாது
ஆயிரம் பெயர்களும் அவள்பெயரே
அவளுக்கு நிகரிங்கு கிடையாது
அவளுக்கு அவள்தான் ஒருநிகரே
கவலைகள் எனக்கினி கிடையாது
காளிவந்தாள் என் கண்ணெதிரே

தோய்ந்திடும் நடுநிசி நிறமல்லவா
தாமரை வதங்கிய நிறமல்லவா
பாய்ந்திடும் மின்னலை போல்சிலிர்ப்பு
பைரவி வருகிற விதமல்லவா
ஆய்ந்திட முடியா அவள்கருணை
அமுதம் பெருகிடும் வகையல்லவா
கோயிலில் வீதியில் தொடர்வதனை
காட்டிடும் குங்கும மணமல்லவா


வைத்த கொலுவில் அவள்பொம்மை
வாழ்வில் அவள்மட்டும் தானுண்மை
பொய்த்த கனவுகள் நிஜமாக
பாதை வகுப்பதே அவள்தன்மை
கைத்துப் போன வாழ்வினிலே
கட்டிக் கரும்பாய் அவள் அண்மை
வைத்தியச்சி வருகின்றாள்
வாரித் தருவாள் பலநன்மை