Friday, October 11, 2013

சொல்லாய் மலர்கிறவள்


ஏந்திய வீணையில் எழுகிற ஸ்வரங்கள்
எண்திசை ஆண்டிருக்கும்
மாந்திய அமுதம் பொய்யென தெய்வங்கள்
மதுரத்தில் தோய்ந்திருக்கும்
பூந்தளிர் இதழ்களில் பிறக்கிற புன்னகை
புதுப்புது கலைவளர்க்கும்
சாந்தமும் ஞானமும் சரஸ்வதி தேவியின்
சந்நிதி தனில்கிடைக்கும்


படைப்புக் கடவுளின் பத்தினித் தெய்வம்
படையல் கேட்கிறது
விடைக்கும் மனங்களின் அறியாமை தனை
விருந்தாய்க் கேட்கிறது
நடையாய் நடந்து நல்லவை தேடிட
நிழல்போல் தொடர்கிறது
படைகள் நிறைந்த மன்னவர் பணியும்
பெருமிதம் தருகிறது

பனையோலை முதல் கணினித் திரைவரை
பாரதி ஆளுகிறாள்
தனையே பெரிதென எண்ணிடும் மூடர்முன்
திரைகள் போடுகிறாள்
நினையும் நொடியில் கவியாய் கலையாய்
நர்த்தனம் ஆடுகிறாள்
வினைகள் ஆயிரம் விளையும் விரல்களில்
 வித்தகி வாழுகிறாள்

சின்னஞ் சிறிய மழலையின் நாவினில்
சொல்லாய் மலர்கிறவள்
கன்னஞ் சிவந்த கன்னியர் அபிநயக்
கலையாய் ஒளிர்கிறவள்
மின்னல் ஒளியாய் உளியின் முனையில்
மெருகுடன் மிளிர்கிறவள்
இன்னும் பலவகைக் கலைகளில் எல்லாம்
இன்பம் தருகிறவள்

வாணியின் நிழலில் வாழ்கிற பொழுதில்
வருத்தம் சுடுவதில்லை
தூணின் அழகிலும் தெரிகிற தேவியின்
தூய்மைக்கு நிகருமில்லை
காணும் திசைகளில் கவின்மிகு வடிவில்
காட்சி கொடுக்கின்றாள்
பேணத் தெரிந்தவர் வாழ்வினில் எல்லாம்
புத்தொளி தருகின்றாள்