Friday, August 28, 2015

மக்கள் தொலைக்காட்சியில் என் புதிய நிகழ்ச்சி

இதுவரை மக்கள் தொலைக்காட்சியில் மகான்கள் பற்றி பேசி வந்தேன்...இனி திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.50 மணிக்கு "பிறவிப் பெருங்கடல்"என்னும் தலைப்பில் பேசுகிறேன்..

பிரியமான மனிதர்களிலிருந்து பிரம்மாண்டமான ஆளுமைகள் வரை.....

சின்னச் சின்ன சம்பவங்களில் இருந்து சிலிர்ப்பூட்டும் சாகசங்கள் வரை..

பலவும் பேசும் களமாய்..மக்கள்தொலைக்காட்சியின் காலை வணக்கம் நிகழ்ச்சியின் அங்கமாய்....
பிறவிப் பெருங்கடல்

Thursday, August 27, 2015

ஞானத் தனிநிழல்


(பூஜ்யஶ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள்  நலம்பெற வேண்டி...)

நல்லால மரமொன்று  நெடுநாளாய் இருக்கிறது
சொல்லாத வேதமெல்லாம் சொன்னபடி நிற்கிறது
கல்லால மரநிழலில் கால்மடித்த உபதேசி
நில்லாமல் தொடங்கிவைத்த நெடுமரபின் நீட்சியது;


வேதபுரப் பறவைகளும் வந்ததிலே கூடுகட்டும்
சாதகப் பட்சிகளும் சங்கீதப் பாட்டிசைக்கும்
ஆதாரம் வேரென்றே அறிந்துகொண்ட விழுதுகளும்
பாதார விந்தம்தொழ பூமியினைத் தொட்டிருக்கும் 

தென்றலை வடிகட்டும்; தெளிநிலவின் பாலருந்தும்;
மன்றங்கள்,  சபைகளுக்கு மரநிழலே மடிவிரிக்கும்
என்ன வயதானாலும் இந்தமரம் இறைவன்வரம்
நின்றொளிர வேண்டுமென நிலமிதனை வேண்டிநிற்கும்

வேர்சிறிதே அசைந்தாலும் வலிகொஞ்சம் தெரிந்தாலும்
தேர்போல நிற்பதுவே திசைகளுக்குப் பரவசமாம்;
ஊரொதுங்க ஒருநிழலாய், உயர்ஞான சாகைகளின்
சீர்விளங்க ஊன்றிநிற்கும் ஶ்ரீபாதம் கைதொழுவோம்





Wednesday, August 19, 2015

இதுவும் சேர்ந்ததே அது


பிம்பங்கள் எதுவும் பேசவில்லை-உன்
படங்களின் மௌனம் என்ன நிறம்?
நம்மிடை மலர்ந்தது நேசமெனில்-அதன்
நேர்த்தியும் பதமும் என்னவிதம்?
இம்மியும் நெருக்கம் குறையவில்லை-இரு
இதழ்களின் சுழிப்பாய் இந்த இதம்
நிம்மதி தருமுன் தழுவலினை-இந்த
நொடியினில் நினைத்தேன்..என்ன சுகம்!



ஆற்றின் குறுமணல் கைகளிலே-கொஞ்சம்
அள்ளியெடுக்கிற வேளையிலே
கீற்றென உரசும் குறுகுறுப்பில்-மெல்ல
கிளர்கிற புன்னகை உன்நினைவு
 நேற்றின் துவர்ப்பும் தேனினிப்பும்-எந்த
நொடியிலும் வெடிக்கும் கோபங்களும்
ஏற்றிய ஆசையின் தீபத்திலே-அடி
எண்ணெய் எப்படி வார்க்கிறது?



வார்த்தைகள் எத்தனை இறைத்திருப்போம்-அதன்
விளிம்பினில் மௌனங்கள் பூத்திருப்போம்
தீர்த்திடமுடியா  ரௌத்திரத்தை-ஒரு
திருட்டுச் சிரிப்பினில் உடைத்திருப்போம்
வேர்த்து முயங்கிய வேளைகளில் -ஒரு
வெப்பக் குளுமையின் விசித்திரத்தில்
பார்த்தும் தீரா பார்வைகளில்-பல
பாலைகள் சோலைகள் பார்த்துவந்தோம்



எழுதியும் தீரா வரிகளைப்போல் -இது
எத்தனை புதிதாய் இருக்கிறது
விழுவதும் எழுவதும் சகஜமென்றே-அட
விளையாட்டிங்கே தொடர்கிறது
அழுவதும் சிரிப்பதும் சீறுவதும்-இந்த
அவதாரத்தின் அற்புதங்கள்
மழையினில் நனையுது மனப்பறவை -அதன்
மனதினில் ஆயிரம் சித்திரங்கள்