Tuesday, January 19, 2010

நிலாப்பாட்டு

கம்பன் கவியாய் கலையெழிலாய்
அம்புலி சிரித்திடும் அழகாக
அம்மன் வீசிய தாடங்கம்
அதைத்தான் நிலவென்பார் பொதுவாக

மின்னல் இழைகளின் கோலங்கள்
முழுமை பெறுவதே முத்துநிலா
தென்றல் கடைந்த வான்தயிரில்
திரளும் வெண்ணெய் பட்டுநிலா

கனவில் சூரியன் காணுகிற
காதல் முகமே அழகுநிலா
மனதில் தினமும் பௌர்ணமியாய்
மல்லிகை மலர்த்தும் முழுமைநிலா

கோள்களாம் அகல்களின் ஒளியினிலே
கார்த்திகை தீபம் ஏற்றும்நிலா
நாள்கள் என்கிற நாடகங்கள்
நகையுறக் கண்டே நகரும்நிலா

கார்த்திகைப் பெண்களின் முலைப்பாலாய்
கந்தன் கனியிதழ் வழிந்தநிலா
கார்நிறக் கண்ணன் வேய்குழலின்
கானம் போலப் பொழிந்தநிலா

தரையோ கடலோ மலைமுகடோ
தாரைகள் பொழியும் தாய்மைநிலா
நரையோ திரையோ வாராமல்
நித்தம் ஒளிரும் தூய்மைநிலா

ஒலியே இல்லா இசையாக
உயிரை வருடும் நாதநிலா
வலியே இல்லா வலியாக
வாட்டியெடுக்கும் போதைநிலா

திரையே இல்லா அழகாக
திசைகள் துலக்கும் கோலநிலா
உரையே இல்லாக் கவியாக
உயிரை உலுக்கும் ஞானநிலா

No comments: