Tuesday, October 12, 2010

அம்பிகை வந்ததென்ன

 
 வானங் கறுத்தது வானங் கறுத்தது
வஞ்சி முகம் போலே-இடி
கானமிசைத்தது கானமிசைத்தது
காளிகுரல் போலே
தேனுமினித்தது தேனுமினித்தது
தேவியவள்போலே  -இனி
நானுந் தொலைந்திட நீயுந் தொலைந்திடு
நங்கையருளாலே
 
தேகத்தின் இச்சைகள் தூண்டி விடுவது
தாயவள் மாயையன்றோ-உள்ளே
நாகத்தின் வேகத்தில் ஓடிடும் சக்தியும்
நாயகி சாயையன்றோ
தோகையின் வண்ணத்தில் தோன்றிடும்பேரெழில்
மாதங்கி ரூபமன்றோ-இடப்
பாகத்தைத் தந்தவன் தேகத்தை ஆள்வதும்
பைரவி லீலையன்றோ
 
மூர்க்கம் வளர்த்திடும் மோதல் பலகண்டு
மூக்கறு பட்டதென்ன-அவள்
தீர்க்க விழிநெஞ்சில் தோன்றிய பின்னரென்
வாக்கெடு பட்டதென்ன
ஆக்கும் எதனையும் காக்கும் துணையென
அம்பிகை வந்ததென்ன
போக்கு வரவுகள் ஆக்கவும் சேர்க்கவும்
பேரருள் செய்வதென்ன
 
ஆலத்தை உண்டவன் நீலத் திருக்கண்டம்  
அம்பிகை கைவண்ணமோ-முழு
மூலத்தை ஆக்கிடும்  சீலத்தை செய்வதும்
மோகினி கண்வண்ணமோ
சூலத்தை ஏந்திடும் கோலத்தைக் காட்டிடும்
சிந்துரப் பொன்வண்ணமோ-முக்
காலத்தைப் பந்தெனக் காலில் உதைப்பவள்
காருண்யம் என்வண்ணமோ?
 
 

No comments: