Sunday, August 21, 2011

உளிகள் நிறைந்த உலகமிது - 14

வாடிக்கையாளர்களின் உணர்வுகளும் அபிமானங்களும்
 விளம்பரங்களின் அடித்தளங்கள்.ஒரு மனிதனை அறிவு ரீதியாய்
அணுகுவதை விட உணர்வு ரீதியாய் நெருங்குவது மிகவும் எளிது. பார்த்த மாத்திரத்தில் புன்னகையை உருவாக்குவது வெற்றிகரமான விளம்பரத்தின் இலக்கணம்.

மனிதனின் மென்னுணர்வுகள் நோக்கி வீசப்படும் எந்த மலரையும் யாரும் புறக்கணிப்பதில்லை. திருமணம், குழந்தை வளர்ப்பு கிரஹப்பிரவேசம் போன்ற சந்தோஷமான சூழல்களை மையப்படுத்தும் விளம்பரங்கள் வெற்றிபெற இதுதான் காரணம். தனியார் தொலைக்காட்சிகள் அதிகமுள்ள இந்தக் கால கட்டத்தில் இத்தகைய விளம்பரங்களை உருவாக்குவது எளிது மட்டுமல்ல. அவை வெகு விரைவில் நுகர்வோர் மனங்களில் இடம் பிடிக்கவும் செய்கின்றன.

ஆனால் அச்சு விளம்பரங்களே அதிகம் செய்யப்பட்ட காலங்களில் விளம்பரத்தின் தலைப்பு வாசகங்களை வைத்துத்தான் மென்னுணர்வின் வட்டத்திற்குள் முத்திரை பதிக்க முடியும்.

ஈரோடு பரணி சில்க்ஸ் நிறுவனத்தின் கல்யாணப்பட்டு ஜவுளிகளுக்கு பல்லாண்டுகள் முன்னர் எழுதிய தலைப்பு வாசகம் இன்னும் என் நினைவில் இருக்கிறது.

"பத்துப் பொருத்தமும் இருக்கு! பட்டுப் பொருத்தமும் இருக்கு!"




பெரும் பொருள்செலவில் வாங்கப்படும் சாதனங்களைத் தவிர வாழ்வுக்குத் தேவையான பிற அம்சங்களை மனிதர்கள் உணர்வு ரீதியாகத்தான் பார்க்கிறார்கள்.இன்று குடும்பம் என்பதுகூட குழந்தைகளை மையப்படுத்திய விஷயமாகத்தான் பெற்றோர்களால் பார்க்கப்படுகிறது. பெற்றோர்களுக்கே அப்படியென்றால் குழந்தைகளுக்குக் கேட்கவும் வேண்டுமா? தங்கள் நலனைச் சுற்றியே தாயும் தந்தையும் இயங்குவதை அவர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

என் நண்பர் ஒருவர் தன் எட்டு வயது மகனுடன் கம்ப்யூட்டர் டேபிள் வாங்கப் போனார். "சின்ன டேபிளாக இருந்தால்தான் ஃபியூச்சரில் இடம் மாற்றிப் போட வசதியாக இருக்கும்"என்று தன் மனைவியிடம் அவர் சொலதைக்கேட்ட மகன் வியப்புடன் கேட்டான்.. "ஃபியூச்சரா?அப்ப நான்தானே இருப்பேன். நீங்க ரெண்டு பேரும் இருக்க மாட்டீங்க தானே!"

வாழ்க்கையை அனுபவிக்காமல் வேகவேகமாக ஓடும் நடுத்தர வயதினர் தங்களுக்குத் தாங்களே சொல்லிக் கொள்ளும் சமாதானம், "இதெல்லாம் யாருக்காக? நம்ம குழந்தைங்களுக்காகத்தானே!" இந்த சென்டிமெண்ட்டை குறிபார்த்துத் தாக்கும் விளம்பரங்களுக்குப் பஞ்சமேயில்லை.குழந்தைகள் கல்விக்கான சேமிப்பு, குழந்தைகள் ஆரோக்கியத்துக்கான பானம்,சோப், தண்ணீர் சுத்திகரிப்புக் கருவி என்று எல்லாமே...

அதேநேரம் தொழில்நுட்பத்தின் அதிரடி மாற்றங்களை மூத்த  தலைமுறையின் புரிதல் வளையத்துக்குள் கொண்டு சேர்க்கும் முயற்சிகளும் விளம்பரங்கள் வாயிலாகவே நடைபெறுகின்றன. இன்றைய தலைமுறையினர் சாஃப்ட்வேர் சாம்ராஜ்யத்தின் முடிசூடா அரசர்களாகவும் அரசிகளாகவுமே இருக்கிறார்கள்.

அவர்கள் வேலை, அவர்கள் சம்பளம் வீட்டுக்கு வந்தாலும் சதா சர்வநேரம் கம்ப்யூட்டர் முன்பாகவே இருக்கும் அவர்களின் தேடல் எதுவுமே பெரும்பாலான பெற்றோர்களுக்கு புரிவதில்லை. வரன் பார்க்கலாமா என்று கேட்டாலும் சண்டைதான் வருகிறது. மேட்ரிமோனி சேவைகள் பற்றிய அபிப்பிராயம் எதுவும் பெற்றோருக்குக் கிடையாது.

தன் பெண்ணின் வாழ்க்கை முறைக்குப் பொருந்துகிற வரன் எங்கே கிடைக்கும் என்று கவலைப்படுகிற் பெற்றோருக்கு, அவர்கள் மகள் கட்டிக் கொண்டு அழுகிற கம்ப்பூட்டர் வழியாகவே வரன் அமையும் என்று தெரிந்தால் சந்தோஷம்தானே!!

மேட்ரிமோனி நிறுவனம் ஒன்றின் தொலைக்காட்சி விளம்பரத்திற்கு சில ஆண்டுகள் முன் ஒரு ஸ்டோரி போர்ட் உருவாக்கினேன். கம்ப்யூட்டர் முன்பாகவே அமர்ந்திருக்கிற மகளை அம்மாவும் அப்பாவும் கவலையுடன் பார்த்து கண்களால் பேசிக்கொள்கிறார்கள். உதட்டசைவு ஏதுமின்றி பின்னணியில் பாடல் ஒலிக்கிறது.

"பரபரப்பான சாஃப்ட்வேர் பெண்ணுக்கு மணமகன் கிடைப்பானோ!"

காலிங்பெல் ஒலிக்க பெண் வேகமாகச் சென்று பீட்சாவை வாங்கிக் கொண்டு அவசரம் அவசரமாய் கம்ப்யூட்டர் முன் மீண்டும் அமர்ந்து கொள்கிறாள்,பாடல் தொடர்கிறது..

"ஆர்டர் செய்தால் பீட்சா வரலாம் மாப்பிள்ளை வருவானோ!"
 
உண்மையில் மகள் கணினியில் பார்த்துக் கொண்டிருப்பது மேட்ரிமோனியல் தளத்தைத்தான். சரியான வரன் கிடைத்த மகிழ்ச்சியில் பெற்றோரை அழைத்துக் காட்டுகிறாள். அவர்கள் முகங்களில் சோர்வு மாறி ஆனந்தம், பரவசம், எல்லாமே.. பாடல் தொடர்கிறது...

"இதுவொரு புதுவித சுயம்வரமே
கணினியில் வரன்கள் வரும்வருமே
விரல்களின் நுனியில் உறவொன்று மலரும்
புதுவித அதிசயமே" 
 

மேட்ரிமோனி தளத்தின் பெயரைப்போட்டு புதுவித சுயம்வரம் என்ற வரிகளுடன் ஃப்ரீஸ் செய்யும் விதமாக அந்த ஸ்டோரிபோர்டை உருவாக்கிக் கொடுத்தேன்.

அதேபோல ஒரு நிறுவனத்தின் பெயர் மாற்றம் என்பது மிகவும் முக்கியமான விஷயம். தகவல்களை மையப்படுத்தித்தான் அந்த விளம்பரத்தை உருவாக்க முடியும்.ஆனால் அது வறண்ட அறிவிப்பாய் மாறிவிட வாய்ப்பிருக்கிறது.

ஈரோடு பரணி சில்க்சென்டர் பல வித்தியாசமான விளம்பரங்களுக்குப் பெயர் பெற்றது. அந்த நிறுவனத்தின் பெயர்  பரணிசில்க்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு விளம்பரம் வெளியிடுவதா வேண்டாமா என்று அவர்களுக்குள்ளாகவே விவாதித்து, விளம்பர வாசகம் சரியாக அமைந்தால் வெளியிடலாம் என்று முடிவெடுத்தார்கள்.

எழுதிக் கொடுத்த மறு விநாடியே மிகுந்த உற்சாகத்துடன் அனைவரும் ஏற்றுக்கொண்ட தலைப்பு வாசகம் இதுதான்..


 
"உங்களுக்குப் பிரியமான ஈரோடு பரணி சில்க் சென்டர்
  இனி செல்லமாய்................
  ஈரோடு பரணி சில்க்ஸ்!!"


விளம்பரம் வெளிவந்த அன்று கடைக்கு ஜவுளி எடுக்க வந்த பலரும் கேட்டது,"அப்படியே செல்லமா ஒரு டிஸ்கவுண்ட் போடுங்க பார்க்கலாம்!" அந்த வார்த்தை வாடிக்கையாளர்களிடம் புன்னகையை வரவழைத்ததுடன் மனதிலும் பதிந்தது. அதன் விளைவாக அந்த ஆண்டு பரணி சில்க்ஸுக்காக வானொலி தொலைக்காட்சி விளம்பரங்கள் உருவாக்கியபோது எழுதிக் கொடுத்த பாடல் இப்படித் தொடங்கியது..

  "கல்யாணப் பட்டெடுக்க செல்லமே செல்லம்
ஈரோடு பரணிசில்க்ஸ் செல்லமே செல்லம்


(தொடரும்)

1 comment:

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

விளம்பர வாசகங்கள் இன்னமும் ஞாபகம் வருகிறது..’மம்மி..மம்மி...மாடர்ன் பிரெட்..’ என்ற ரேடியோ விளம்ப தாக்கத்தில் ஒரு கிராம வாசி மளிகைக் கடைக்குப் போய்,” மம்மி..மம்மி..மாடர்ன் பிரெட் கொடுங்க” என்று கேட்டதாகச் சொல்வார்கள்..
இன்னொரு ரேடியோ விளம்பரம்..
“ கொடுத்து வைச்சவங்க..கேட்டு வாங்குவது லாலா மஸாலா...ஹா...ஹா..லாலா மசாலா..”
அவ்வளவு சுலபத்தில் இதையெல்லாம் மறக்க முடியுமா என்ன?