Friday, January 25, 2013

ஓடாத்தூர்.மு.அர்ச்சுனன்



பெரிய கல்வி நிறுவனங்களை உருவாக்கி வைத்திருக்கும் ஒருவர்,மதுரைக்குப் போகும் வழியில் தன் அலுவலர் ஒருவரிடம் சிலவற்றை சொல்வதற்காக அலைபேசியில் அழைத்திருக்கிறார்."மதுரைக்குப் போகாதேடீ"என்ற பாடல் ஒலித்ததும்
அதிர்ந்து போன அவருக்கு சொல்ல வந்தது மறந்துபோனது.

அவர் மதுரைக்குப் போனார்.அந்த அலுவலர் அடுத்த நிமிடமே அந்தப்
பாட்டை மாற்றிக் கொடுக்குமாறு கேட்டு அந்த அலைபேசி நிலையத்துக்கே
போனார்.ஒருகாலத்தில் நான் மதுரைக்கு மாதம் ஒருமுறையாவது போவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அதாவது
தொண்ணூறுகளின் தொடக்கத்தில்....

ஒரே நேரத்தில் கொத்துக் கொத்தாய் எனக்கு இலக்கிய நண்பர்கள் ஏகத்துக்குக் கிடைத்தது மதுரையில்தான்.மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில்
இருக்கும் ஹோட்டல் பிரேம்நிவாஸ் என் வழக்கமான வாசஸ்தலமாக
மாறியிருந்தது. அப்போதெல்லாம் அங்கே அடிக்கடி வந்து தங்குபவர்களில்
திரு.தமிழருவி மணியன் குறிப்பிடத்தக்கவர்.

பிரேம்நிவாஸ் ஹோட்டல்
மனிதத்தேனீ இரா.சொக்கலிங்கம், திரு.பாபாராஜ்,திரு.வீரபாண்டியத்
தென்னவன் என்று நீளுமந்தப் பட்டியலில் முக்கியமான இரண்டு பேர்கள்
கவிஞர் மு.அர்ச்சுனனும் கவிஞர் இரா.பொற்கைப் பாண்டியனும்.
இவர்களில் அர்ச்சுனன் புதுக்கவிஞர்.சங்க இலக்கியம் தொடங்கி சமகால
இலக்கியம் வரை நல்ல வாசிப்பும் விமர்சனமும் உள்ளவர்.பொற்கை
பிடிவாதமான மரபுக்கவிஞர்.சுவைமிக்க கவிதைகளை வடிப்பவர்.

மதுரைக்கு நான் வரும்போதெல்லாம் இவர்கள் இருவருமே என்னுடன்
அதிகநேரம் இருப்பார்கள். இருவருக்குமான பொதுக்குணம், வெள்ளந்தியாகப் பழகும் இயல்பு.கூர்மையான இலக்கியப் பார்வையும்,
அதனினும் கூர்மையான நகைச்சுவையும் அர்ச்சுனனின் இயல்புகள்.
ஒரு நகைச்சுவையை அதன் கடைசிச் சொட்டு வரையில் உள்வாங்கி,
அதற்குரிய முழுமையான சிரிப்பை உடல் குலுங்க,கண்கள் கலங்க,
கொட்டிவிட்டு,தன் சிரிப்பின் எதிரொலியாகத் தொடர்ந்து சிரித்துக்
 கொண்டிருப்பார். அவர்களெல்லாம் சேர்ந்து நற்கூடல் இலக்கியக் கழகம்
என்னும் அமைப்பை நடத்திக் கொண்டிருப்பார்கள்.

ஓடாத்தூர்.மு.அர்ச்சுனன்
வித்தியாசமான சூழல்களைச் சொல்லி பாடல்கள் எழுதச் சொல்வார் அர்ச்சுனன்.அவர் சொல்கிற கதைச்சூழல்கள் கறுப்புவெள்ளை காலத்துக்
காட்சியமைப்பாக இருந்தாலும் மிகவும் சுவாரசியமாக இருக்கும். என்னை
"முத்தையன்"என்றழைக்கும் வெகுசில நண்பர்களில் அவரும் ஒருவர்.
"முத்தையன்! இது நடந்த சம்பவம்னே வெச்சிகிடுங்களேன்.ஒரு பஸ்
கிளம்பப் போகுது. ஒரு சீட்லே ஒரு பொம்பளை.பஸ் நகரத் தொடங்கற
போது இன்னொரு பொம்பளை ஓடிவந்து ஏறி அவ பக்கத்திலேயே
உட்கார்றா.

ஒருத்தர ஒருத்தர் பார்த்துகிட்டு அதிர்ச்சியாகறாங்க. விஷயம் என்னன்னா,
ரெண்டு பேரும் கோர்ட்டுக்குதான் போறாங்க.ஒரு கொலைக்கேசில அன்னைக்கு தீர்ப்பு. ஒருத்தி,செத்தவனோட பொண்டாட்டி. இன்னொருத்தி
வெட்டினவனோட பொண்டாட்டி. அசந்தர்ப்பமா நடந்துபோன விசயம்.
ஒருத்தி இறுக்கமா இருக்கா. முகத்தில பழி வாங்கற உணர்ச்சி. இன்னொருத்தி அழுதுகிட்டே வர்றா. புருஷன் தப்பிக்கணுமேங்கிற ஏக்கம்.
இப்ப பாட்டு தொடங்கணும். கோர்ட் வாசல்லே பஸ் நிக்கறப்போ பாட்டு
முடியணும்.எழுதுங்களேன்!"என்பார்.

"கட்டிய துணியையும் மீறி-அதோ
 கண்ணீர் வடிக்குது நீதி
ஒருவிழி விடுத்லை தேடி
மறுவிழிக்கென்னடி சேதி "

என்ற பல்லவியுடன் தொடங்கி எழுதிய அந்தப் பாடலின் கடைசிச் சரணம்
மட்டும் இப்போது நினைவிருக்கிறது.

"கணவனை இழந்த கண்ணகி கொதிப்பு
 கோப்பெருந்தேவி தவிக்கிற தவிப்பு
ஒவ்வொரு மனதிலும் ஒரு எதிர்பார்ப்பு
யாருக்கு வருமோ இன்றைய தீர்ப்பு ".

அர்ச்சுனனுக்கு "ஆஹா"என்றும் சொல்ல வராது. "ஆகா!ஆகா!" என்பார்.
அவர் சொன்ன இன்னொரு கதைச்சூழல்."முத்தையன். ஒரு கிராமத்துப்
பொண்ணுக்கு வேற ஒரு ஆளோட காதல். அவ மாமன் குடிகாரன்.
மகா முரடன்.இவளைக் கட்டிவைக்கச் சொல்லி மிரட்டிகிட்டே இருக்கான்.
அம்மாகாரி படுத்த படுக்கையா கெடக்கா. அண்ணனும் அந்த மாமனுக்குதான் சப்போர்ட்டு.ஒருநா ராத்திரி காதலனோட ஒடிப் போக
அந்தப் பொண்ணு முடிவெடுத்து பெட்டியோட வெளிய வர்றா.அண்ணன்
ஊரில இல்லை. உள்ளறையிலே அவங்க அம்மா உயிர் பிரியுது."அத்தே!
போயிட்டீகளே"ன்னு அந்தப் பொண்ணோட அத்தாச்சி  அழுவுற சத்தம்
கேக்குது.

நின்னா கொஞ்ச நாளிலே மாமனுக்குக் கட்டி வெச்சுடுவாங்க.நிக்கறதா,
போறதா,நிக்கறதா,போறதாங்கிற போராட்டத்தில அழுதுகிட்டே பெட்டியோட நடக்கறா. இதுக்கு தொகையறாவோட ஒரு பாட்டு வேணும்.
சீர்காழி பாடற மாதிரி உச்ச ஸ்தாயியில தொகையறா இருக்கணும்" என்றார்
அர்ச்சுனன். ஏதோ பொழுதுபோக்குக்காக கதைச்சூழல் சொல்கிறோம் என்கிற எண்ணம் அவருக்கு இருக்காது. மாலையே பாடல் ஒலிப்பதிவு
செய்து,மறுநாளே படப்பிடிப்பு என்பது போன்ற தீவிரமான முகபாவனையில் இருப்பார்.

"கருவோடு சுமந்த அன்னை காற்றோடு கலந்தாள்
 உருவாகி வந்தமகள் தெருவோடு நடந்தாள்
 வந்தமகள் கதறுகிறாள் சொந்தமகள் விலகுகிறாள்
 கண்ணீரின் காவியத்தை காலமகள் எழுதுகிறாள்"

என்ற தொகையறாவும்,

"கோயிலைப்போய் மலர்சேரும் காலமல்லவா
 கொடிசாய்ந்து கிடக்கிறதே பாவமல்லவா"
என்று தொடங்கும் பல்லவியின் இரண்டு வரிகளும் மட்டுமே இப்போது
ஞாபகத்திலிருக்கின்றன.

ஓடாத்தூர் கிராமத்தில் முழுநேர விவசாயியாக இருந்த அர்ச்சுனன் வான்
பொய்ப்பினும் தான்பொய்யா வையையும் பொய்த்த சூழலில் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றின் கள ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்லும் வேலையில் அமர்ந்தார். ஆனால் தன் இலக்கிய ஆய்வுகளை
நிறுத்திக் கொள்ளவேயில்லை. அவ்வப்போது வீட்டுக்கு வருவார். அலைபேசுவார்.ஊரில் உருப்படியான காரியம் ஒன்றை செய்து வருகிறார்.
மாலை வேளைகளில் பக்கத்து கிராமங்களுக்குப் போகிறார்.இளைஞர்களையும் விவசாயிகளையும் திரட்டுகிறார்.அவர்கள்
மொழியில் சங்க இலக்கியம் பற்றிப் பேசுகிறார்."சங்கப்பறவை" என்ற தலைப்பில் இதனைத் தொடர்ந்து செய்து வருகிறார்.


கவிஞர் கண்ணதாசனைப் பற்றிய அவருடைய புத்தகம்
ஒன்றினை கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டது. கோவையில்
கவியரசு கண்ணதாசன் நினைவுநாள் விழா ஒன்றில் பேசிவிட்டு ஊருக்குப்
போனார் அர்ச்சுனன்.

சில மாதங்களுக்குப் பின்னர் அழைத்தார்.ஊரில் நடந்த கலவரம் ஒன்றில்
அர்ச்சுனனின் கால் வெட்டுப்பட்டது. உடனடி சிகிச்சையால் சில வாரங்களில்
ஒன்றுசேர்ந்தாலும் சில மாதங்கள் படுக்கையிலேயே இருந்தார். "என்னோட
சுயமுயற்சி இருந்தாத்தான் நடக்க முடியும்னு டாக்டருங்க சொல்லீட்டாங்க
முத்தையன். வெட்டின பயகளும் வேண்டிய பயகதான்.என்ன செய்ய. "சரிசரி
போங்கடா"ன்னு சொல்லீட்டேன்.இனிமே நடக்கறதுலதான் கவனம் செலுத்தணும்.
கண்ணதாசன் வசனங்களைப் பத்தி ஒரு புத்தகம் எழுதணும்".

அடுக்கிக் கொண்டே போன அர்ச்சுனனிடம் சொன்னேன். "விடுங்க அர்ச்சுனன்.இந்த சம்பவத்தை மறந்துட்டு முன்ன மாதிரி நடக்கணும்ங்கிறதில
உறுதியா இருங்க.உங்களுக்காகவே கவிஞர் தில்லானா மோகனாம்பாளில
ஒருவரி எழுதியிருப்பார். "நடந்ததெல்லாம் மறந்திருப்போம்.நடப்பதையே
நினைத்திருப்போம்"னு!" என்றதும் அதிர்ந்து சிரித்த அர்ச்சுனன்,"ஆகா!ஆகா!"
என்றார்.