Thursday, April 4, 2013

தெய்வம் தெரிகிறது


 வானம் எனக்கென வரைந்து கொடுத்த
 வரைபடம் ஒன்றுண்டு
நானே என்னைத் தேடி அடைந்திட
நேர்வழி அதிலுண்டு
ஊனெனும் வாகனம்   ஓட்டி மகிழ்வது
ஒருதுளி உயிராகும்
ஏனென்றும் எங்கென்றும் யார்தான் கேட்பது
எங்கோ அதுபோகும்
 
காலம் அமைக்கிற சாலைகள் எல்லாம்
காலுக்குச் சுகமில்லை
ஆலாய்ப் பறந்து அடைந்தவை போலே
வேறெதும் சுமையில்லை
நீலம் பரவிய வானிலிருந்து
நகைப்பது கேட்கிறது
ஆலம் பரவிய கண்டத்திலிருந்து
அதுவாய் எழுகிறது
 
மாற்று வழிகளில் புகுந்தவன் வந்தேன்
மறுபடி கருப்பைக்கு
நேற்று வரைக்கும் நான்செய்த எல்லாம்
நிரம்பும் இரைப்பைக்கு
கீற்றென எழுகிற வெளிச்சத்தின் வகிடு
கிழக்கே நீள்கிறது.
ஊற்றெழும் அமுதம் ததும்பும் கோப்பை
உள்ளே வழிகிறது

பொன்னை எண்ணிப் பூமியைத் தோண்ட
பூதம் வருகிறது
ஜன்னல் மூடிய நெஞ்சுக்குள்ளே
புழுக்கம் நிறைகிறது
தன்னைக் கொஞ்சம் தள்ளி வைத்தால்
தெய்வம் தெரிகிறது
மின்னல் கொஞ்சும் முகிலாய் ஆனால்
மழையாய்ப் பொழிகிறது

ஆகாயத்தின் வரைபடம் புரிந்தால்
அடிகள் வைத்திடலாம்
பாகாய் உருகும் பக்குவம் வந்தால்
பாரை அளந்திடலாம்
நோகச் சொன்ன வார்த்தைகள் கனிந்து
நேயம் கமழ்ந்திடலாம்
வேகம் தணிந்து வேட்கை அவித்தால்
வேதம் விளங்கிடலாம்