Friday, February 19, 2010

காசிக்காற்று

காசிநகரில் கங்கை வீசும் நதியலைகள்
பேசும் மொழிநமசி வாயம்
கீசுகீசெனவே பூசலிடுங்கிளிகள்
பாஷை அதுநமசி வாயம்
ஆசைவிடும்தருணம் ஆகிவரும் மரணம்
வாசல் வரும்நமசி வாயம்
பாசம் விடும்மனதும் பாரம் சுடும்நொடியில்
ஈசன் குரல்நமசி வாயம்

இமைகள் கதவடைய இதயம் மடையுடைய
அமைதி அதுநமசி வாயம்
சுமைகள் சிறகசைய சுடலை விறகெரிய
சுடரும் ஒளிநமசி வாயம்
இமயம் மனவெளியில் எழும்பும் ஒருநொடியில்
நிரம்பும் பனிநமசி வாயம்
சமயம் அமைந்துவர சுயங்கல் உணர்ந்தவுடன்
கனியும் கனிநமசி வாயம்

கடலில் புயலசைய திசைகள் அதிர்ந்தசைய
நடன கதிநமசி வாயம்
இடர்கள் மனம்கடைய தொடரும் வலிநிறைய
இழையும் சுகம்நமசி வாயம்
தடைகள் உடைந்துவிழ விழிகள் தொடர்ந்துஅழ
நிகழும் அருள்நமசி வாயம்
கடையன் இவன்வினைகள் முழுதும் தகர்ந்துவிழ
படரும் இருள்நமசி வாயம்

No comments: