Monday, May 7, 2012

சித்த பீடம்

பொன்னைத் தேடிப் பொருந்தும் ஒளிபோல்
உன்னைத் தேடி உன்குரு வருவார்
தன்னைத் தேடித் தனக்குள் சென்றபின்
இன்னும் தேட எதுவும் இல்லையே
 
நீண்ட கிளைகளின் நிழலுக் கடியில்
மூண்ட கனல்போல் முனிவர்கள் பிள்ளை
தூண்டா விளக்காய்த் தண்ணொளி பரப்ப
வேண்டா இருளும் விலகி ஓடுமே
 
ஓசையின் மௌனம் ஓங்கும் இடத்தினில்
காசியின் மௌனம் காணும் தலத்தினில்
பேசும் மௌனம் பொருள்கடந் தேகிட
ஈசனின் மௌனம் எளிதில்கை கூடுமே
 
காற்றின் மந்திரம் ககனம் உலுக்க
ஈற்றின் எல்லையில் இதயம் லயிக்க
ஊற்றெழும் கங்கை உரசும் கரையென
வீற்றிருந்தனளே வாலையும் எதிரே
 
குண்டலினிப் பெண் குடிகொள் கோயில்
மண்டலம் வந்தோர் மந்திரம் பெற்றோர்
பண்டொரு தொடர்பில் பக்தியில் வருவோர்
கண்டறி யாதன கண்டிருப்பாரே
 
கன்னல் துவர்க்கக் கனிவுறு மந்திரம்
மின்னல் தெறிக்க  மழைபோல் சொல்பவள்
தென்றல் திகைக்க திசைகளை அளப்பாள்
இன்னல் தவிர்க்க எண்ணுவோர் சூழ்வரே
 
புண்டரீகனுக்கும் புலப்படாச் செம்மையை
அண்டம் தின்றவன் அறிந்திடா உண்மையை
கண்டு தெளிந்த கயிலைமா முனிவரும்
வண்டென சூழ்ந்து வாழிடம் இதுவே
 
ஆசனம் இதுவென அரூபமாய்ச் சிலபேர்
சாசனம் பயின்றிட சொரூபமாய் சிலபேர்
பூசனை செய்திடும் புண்ணியர் சிலபேர்
ஆசையில் வந்தே ஆசைகள் விடுவரே
 
கண்டுங் காணாக் காரிகை ஒருத்தி
விண்டுணராத வாக்கியம் சொல்பவள்
தண்டுகொண்டிருந்த தன்மலை விட்டு
உண்டுறங்குபவள் போல் உலகு வந்தனளே
 
ஒருகுடம் மதுவே உலகரை ஈர்க்கும்
வெறுங்குடம் அசைந்தும் வேடிக்கை காட்டும்
பெருங்குடம் உடைக்கும் பூதல வாழ்வினில்
நிறைகுடம் ஒன்று நிர்மலை வடிவிலே
 
காவலர் படைபோல் கானுறு மந்திரம்
ஏவலர் படைபோல் எட்டுத் திசைகளும்
பூவென மலர்ந்த புண்ணிய்ள் தலத்தினில்
ஆவல் பொங்கிட அரணாய் நிற்குமே