Monday, April 21, 2014

ஏகாம்பரனுக்கு ஏதாடை?



பேயைத்தா யென்பாய் பிடிசாம்பல் பூசுவாய்
சேயைப்போய் உண்பாய் சிவக்கொழுந்தே-தீயைப்போய்
ஏந்திக் களிப்பாய் எழிலார் அமுதிருக்க
மாந்துவாய் நஞ்சை மகிழ்ந்து


முப்புரங்கள் உன்சிரிப்பில் முற்றும் எரிந்ததாம்
அப்புறமேன் மேரு வளைத்தாய்நீ-இப்படித்தான்
பாசக் கயிறுபடப் பாய்ந்துதைத்தாய் இங்கெமது
பாசம் அறுபடவே பார்


பெண்கொடுத்தான் பர்வதன் கண்கொடுத்தான் வேடனும்
பண்கொடுத்தார் நால்வர்! பயனென்ன?-மண்ணெடுத்து
தின்ற திருமால் திரைகடலில் போய்த்தூங்க
நின்றாய் சுடலையிலே நீ.

பீதாம் பரம்பட்டு போர்த்தத் திருமாலாம்
ஏகாம்பரனுக்கு ஏதாடை? வாகாக
கொஞ்சிவெண்ணய் ஊட்டினார் கோபியர் மைத்துனர்க்கு-
நஞ்சருந்த மட்டுமோ நீ

யாகத்தில் பங்கில்லை என்றாராம் மாமனார்
தேகத்தில் பங்கெடுத்தாள் தேவியும்-யோகத்தை
ஏழு ரிஷிகளுக்கும்   எப்படியோ பங்கிட்டாய்
வாழும் வழியிது வோ?