Tuesday, April 22, 2014

குயிலின் கூட்டில் கொஞ்ச நேரம்

"அண்ணா! உங்களை வாணிம்மா கூப்பிடறாங்க"! பல்லாண்டுகளுகளுக்கு முன்னர் ஒரு செப்டம்பர் 23ல் ஈஷா திருநாள் விழாப்பந்தலருகே ஈஷா பிரம்மச்சாரி ஒருவர் அழைத்தார்.
  ஈஷா திருநாளில் "ஷாந்தி உத்ஸவ்"என்ற பெயரில் திருமதி வாணி ஜெயராம் அவர்களின் இசைநிகழ்ச்சி. அதில் என் இரண்டு பாடல்களுக்கு அவரே இசையமைத்துப் பாடுவதாக ஏற்பாடு.
பாட்ல்களை எழுதி அனுப்பியிருந்தேனே தவிர   அவர்களை நேரில் சந்தித்ததில்லை. மேடைக்குப் பின்னால் இருந்தார்.பரஸ்பர அறிமுகத்திற்குப்பின் என் பாடலின் ஒரு சொல்லில் ஒரேயோர் எழுத்தை மாற்றிக் கொள்ள அனுமதி கேட்டுத்தான் அழைத்திருந்தார் என்று தெரிந்து நெகிழ்ந்து போனேன்.


"அஷ்டாங்க யோகம் " என்ற தொகையறாவில் தொடங்கி "மூலாதாரம் ஸ்வாதிஷ்டானம்" என்ற பல்லவியுடன் தொடங்கும் பாடல். "வைபவ் ஷிவா வைபவ் ஷிவா" என்று இன்னொரு பாடல்.இரண்டு பாடல்களையும் அற்புதமாக இசையமைத்துப் பாடினார்."வைபவ் ஷிவா" என்ற பாடலின் முடிவில் "ஆ.."என்றொரு நெடிய ஆலாபனை.அந்தப் பாடல் என் அலுவலகத்தில் நெடுநாள் ஒலித்துக் கொண்டிருக்கும்.எழுத்தாளரும் கணினி வரைகலை வல்லுனருமான சுதேசமித்திரன்,"கடைசியிலே ஆ...ன்னு எழுதி கலக்கீட்டீங்க"என்று என்னைக் கலாய்த்துக் கொண்டிருப்பார்.
கவியரசு கண்ணதாசன் பாடி வாணிம்மா பாடிய "எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது!அது எந்த தேவதையின் குரலோ!" என்ற பாடலுக்கு நான் பாண்டிய நாட்டையே எழுதிக் கொடுத்திருப்பேன்.தமிழின் மிக அபூர்வமான பாடல்கள்
அவருடையவை.


கவியரசு கண்ணதாசன் பால் பெரும் ஈடுபாடு கொண்ட திரு.கோவை கிருஷ்ணகுமார் கோவை கண்ணதாசன் கழகம் சார்பில்கடந்தஆறாண்டுகளாய் "கண்ணதாசன் விருது"நிறுவி வழங்கி வருகிறார். ஒவ்வோர் ஆண்டும் படைப்பிலக்கிய ஆளுமை ஒருவருக்கும் கலையுலக ஆளுமை ஒருவருக்கும் வழங்கப்படும் இந்த விருது தலா ரூ.50,000/ மற்றும் பாராட்டுப் பட்டயம் கொண்டது.

இந்த ஆண்டு அந்த விருதினை திருமதி வாணி ஜெயராமுக்கு சமர்ப்பிக்க கண்ணதாசன் கழகம் முடிவெடுத்தது.இதனை வாணிஜெயராம் அவர்களிடம் தெரிவிக்க கொஞ்சம் தயங்கினேன். முந்தைய சந்திப்பு அவருக்கு நினைவிருக்குமோ இல்லையோ! திடீரென்று யாரோ அழைத்து "கோவைக்கு வாருங்கள்,விருது தருகிறோம் "என்றால் மிரட்சிதான் வரும்.எனவே கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் உதவியை நாடினேன்.அவர் வாணி ஜெயராம் அவர்களை உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு கண்ணதாசன் கழகம் குறித்தும் திரு.கிருஷ்ணகுமார் குறித்தும் என்னைக்குறித்தும் விரிவாக அறிமுகம் செய்தார். ஏப்ரல் 19ம் நாள் அவர்களை நேரில் சந்திப்பதாக ஏற்பாடு.

வாணி-ஜெயராம் தம்பதியுடன் திரு.கிருஷ்ணகுமார்,நின்ற கோலத்தில் திரு.வி.பி.குமார்
நுங்கம்பாக்கம் ஹடாவ்ஸ் முதல்தெருவில் கான்க்ரீட் மரம் ஒன்றின் மூன்றாம் அடுக்கில் அந்தக் குயிலின் கூடு. அழைப்புமணியை இசைத்ததும் திரு.ஜெயராம் கதவைத் திறந்தார். கண்ணதாசன் கழக நிறுவனர் திரு.கோவை கிருஷ்னகுமார், இலக்கிய நேசர் திரு.வி.பி.குமார் ஆகியோரின் அறிமுகப் படலம் முடிந்தது.
அப்போதுதான் வாணிம்மா அந்த செய்தியைச் சொன்னார். "சமீபத்தில காந்தி கண்ணதாசன் கூப்பிட்டிருந்தார். கவிஞரோட கிருஷ்ண கவசம் பாடிக் கொடுக்கணும்னு கேட்டார். நான் சொன்னேன்,"உங்கப்பா என்னை மூத்த மகள்னு சொல்வார். நான் பாடறேன்.ஆனா எனக்கு காலணா தரக்கூடாதுன்னு நிபந்தனை போட்டு போன சனிக்கிழமைதான் பாடிக் கொடுத்தேன். நாலே நாள்..நீங்க கண்ணதாசன் கழகத்திலிருந்து 50,000/விருதுன்னு சொல்லி கூப்பிடறீங்க. அவர் பெயரும் முத்தையா,உங்க பெயரும் முத்தையா..இது அவரோட ஆசீர்வாதம்தானே"!


நான் அவரிடம் மிகவும் தர்மசங்கடமான கேள்வியைக் கேட்டேன். "நீங்க பாடின கவிஞர் பாடல்களிலே உங்களுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு எது?"தீவிரமான சிந்தனைக்குப் பிறகு,"எல்லாமேதான் சார்!எத்தனையோ பாட்டு! ஓடம் கடலோடும், அப்புறம் "கண்ணனை நினைக்காத நாளில்லையே" சொல்லிக் கொண்டே போகிறார்.
அரசியல் ரீதியாய் கவிஞருக்குஏற்பட்ட அலைக்கழிப்புகள் பற்றி பேச்சு திரும்புகிறது."பா ஆஆவம்.... பச்சைக் குழந்தை"என்று அங்கலாய்த்த அவருக்கு கண்கள் கலங்குகின்றன . தான் எழுதிய நூலை ஏற்கெனவே கையொப்பமிட்டு தயார் நிலையில் வைத்திருந்தார். அவர் தந்த பழரசத்தைப் பருகி முடிக்கும் முன்  எத்தனையோ பாடகர்கள் பாடியகவிஞரின் பாடல் வரிகளை சொல்லிச் சொல்லி பரவசமடைந்தார்.


தன் மூத்த மகள் விருது பெறுவதைக் காணவாவது கவியரசர் ஜுன்22 கோவை வருவார்தானே!!