Saturday, October 4, 2014

என்ன நாடகம் இது



வெள்ளிச் செதில்கள் மின்னும் ஒருகயல்
வெள்ளப் பெருக்கில் திரிகிறது
துள்ளும் நதியின் அலைகள் நடுவே
தூண்டில் எங்கோ தெரிகிறது

கொள்ளை அழகில் மின்னும் பனியில்
கொஞ்சும் ஈரம் உலர்கிறது
வெள்ளைப் பனியை விசாரிக்கத்தான்
வெய்யில் மெல்ல வருகிறது

பொற்குடம் தன்னில் நிறையத் தானே
பசும்பால் அன்று பெருகியது
கள்குடம் நிறைத்து தீஞ்சுவை திரித்து
கடவுளின் நாடகம் தொடங்கியது

வேலன் திருவடி சேரத்தானே
வண்ணச் சிறுமலர் அரும்பியது
காலம் அதனைக் குரங்கின் கைகளில்
கொடுத்துப் பார்க்க விரும்பியது

அழகாய் வளர்ந்த சிறுகொடி முற்றி
 அடடா விறகாய் மாறுவதோ
எழுதா விதியை எழுதிய பின்னே
எவர்தான் அதனை மீறுவதோ


ஏற்றிய சுடரில் கூட்டிய திரியில்
என்றோ இருட்டு தொடங்கிடலாம்
காற்றின் கைகள் தீண்டும் வரையில்
காக்கும் கைகள் காத்திடலாம்