Thursday, October 2, 2014

திருவடி சரணம் அம்மா






ஒருபெண்ணைச் சொல்லும் போதோ
 உன்னைத்தான் உவமை சொல்வார் 
வரும்பொருள் எல்லாம் உந்தன்    
 விழிபடும்    மகிமை என்பார் 
கருநிறம் கொண்ட மாலின் 
    கமலத்து மார்பில் நின்றாய் 
 திருவெனும் தேவி உந்தன்
    திருவடி சரணம் அம்மா

கடைந்தபாற் கடலை விட்டுக்
 கிளம்பிய அமுதம் நீதான்
 நடந்த காகுத்தன்  பின்னே
 நடைபயில் சீதை நீதான்
 உடைந்துபோய் அழுவோரெல்லாம் 
ஒருவாறு தேருமாறு 
அடைந்திடும்  ஊக்கம் நீதான் 
அடையாத கதவம் நீதான்

பொன்னிற மாதே நீயும் 
புயல்வண்ணன் தோள்கள் சேர்ந்தாய்
 செந்நிறக் கமலம் நின்றாய்
 சேவடி தொழுவோர்க்கெல்லாம் 
எண்வகைக் காட்சி தந்தாய் 
எண்ணிய எல்லாம் நல்கும் 
புண்ணியத் திருவே உன்னைப்
பணிந்தவர் பணியார் மண்ணில்

மைவிழி கமலமாகும் 
மாதவன் ஏங்கிப் பற்றும் 
கைகளும் கமலமாகும்
கால்களைக் கமலம் தாங்கும்
 நெய்விளக் கொளியில் வந்து 
நேர்பட நிற்கும் தாயே 
நைந்திடும் நிலையைமாற்றி 
நல்வழி சேர்ப்பாய் நீயே