Wednesday, June 15, 2011

உளிகள் நிறைந்த உலகமிது-5



கடிதம் எழுதியவர் கணேஷ் பாலிகா என்றாலும், சென்னை மாபோஸேல் நிறுவனத்திலிருந்து அவர் எனக்கு எழுதவில்லை. அவர் கையொப்பத்திற்குக் கீழே மேனேஜிங் டைரக்டர்-பிஃப்த் எஸ்டேட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று இருந்தது. நேரில் வரசொல்லி எழுதியிருந்தார்.

மா போஸேல் சென்னையில் சந்திக்க முடியாததில் வியப்பில்லை. முன்னனுமதி பெறாமல் போயிருந்தேன். இப்போது வேறொரு முகவரியில் இருந்து வரச்சொல்லி கடிதம் போட்டிருக்கும் மர்மமென்ன? நேரில் போனபோதுதான் விஷயம் விளங்கியது. என்னுடன் நேர்காணல் மேற்கொண்ட பிரசாத் பரவசமாய் என்னைப்பற்றிச் சொல்லி, "உங்களை
சந்திக்க அழைக்கட்டுமா?" என்று கேட்ட போது, சில விநாடிகள் யோசித்து விட்டு, வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார் கணேஷ் பாலிகா.

பிரசாத்துக்கு அதிர்ச்சி. புதிய திறமைகளை அடையாளம் காண்பதிலும் ஊக்குவிப்பதிலும் கணேஷ் பாலிகா முதலிடம் வகிப்பவர். ஆனால்,அப்போதே அவர் மனதில் வேறொரு திட்டம் இருந்திருக்கிறது. மா போஸேல் நிறுவனத்திலிருந்து விலகி, பிஃப்த் எஸ்டேட் என்ற பெயரில் விளம்பர நிறுவனம் தொடங்கும் முகாந்திரப் பணிகளை அப்போதே மேற்கொண்டிருந்திருக்கிறார். பிரசாத்தின் எடைபோடும் திறமையில் அவருக்கு அபார நம்பிக்கை. தன்னுடைய புதிய நிறுவனத்துக்கு நான்தான் தமிழ் விளம்பர எழுத்தாளர் என்று என்னைப் பாராமலேயே முடிவெடுத்திருக்கிறார். என் விண்ணப்பத்தை வாங்கி வைத்துக் கொண்டாரே தவிர என்னை சந்திப்பதைத் தவிர்த்துவிட்டார். புதிய நிறுவனம் தொடங்கியதும் அழைத்துக் கொண்டார்.

சென்னை, திறமைகளுக்கான ஆடுகளம். அங்கே எனக்கு ஒருவாசல் மூடி மறுவாசல் திறந்தவர் கணேஷ் பாலிகா. விளம்பர உலகின் மூன்று நிபுணர்கள் சேர்ந்து பிஃப்த் எஸ்டேட் நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார்கள். நிர்வாக இயக்குநர்,கணேஷ் பாலிகா. ராமகிருஷ்ணா,விவேகானந்தன் ஆகியோர் இயக்குநர்கள். படைப்பாக்கப் பிரிவுக்கு ராமகிருஷ்ணா (ராம்கி) தலைவர். மீடியா எனப்படும் ஊடகப் பிரிவுக்கு விவேகானந்தன் தலைவர்.

படைப்புத்திறன் கொண்ட விளம்பர நிபுணர்களில், ராம்கி போல் மென்மையும் மேன்மையும் கொண்ட ஒருவரை நான் இதுவரை சந்திக்கவில்லை . நல்ல உயரம். ஒற்றைநாடி உடம்பு. சிவந்த நிறம். குறுந்தாடி. சிரிப்பும் தீட்சண்யமும் மின்னும் கண்கள். விவேக் அடிக்கடி பதட்டமாகக் கூடியவர். கணேஷ் பாலிகா இருவரின் குணங்களையும் கலந்த கலவை. பனிமலையும் எரிமலையும் பாதிப்பாதி.

பிஃப்த் எஸ்டேட் நேர்காணலில் என்னிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி,"எப்போது வேலைக்குச் சேருகிறாய்"என்பதுதான். கணேஷ் பாலிகாவும் ராம்கியும் எவ்வளவு பெரிய விளம்பர மேதைகள் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. சென்னையில் வேலைவாய்ப்பு என்ற பெருங்கனவின் நிறைவேற்றமே போதுமானதாக இருந்தது.அது 1993. நாலாயிரத்து சொச்சம் ரூபாய் சம்பளத்தில் சென்னையில் பணி. விளம்பர நிறுவனங்களுக்கே உரிய சுதந்திரமான சூழல்.

விளம்பரங்கள் உருவாக்கத்தின் நுட்பங்களை நான் கற்றுக் கொண்டது அங்கேதான். பணியில் இறங்கும் முன், ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டிருந்த வேலைகளைப் பார்த்தபோது மிரண்டு போனேன்.

மின்சார வயர்களை இணைக்கும் அதெஸிவ் டேப் ஒன்றிற்கான விளம்பரங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. அந்த டேப்பின் பெயர் மேஜிக். எனவே மேஜிக் சம்பந்தப்பட்ட எல்லா கதைகளையும் அடிப்படையாகக் கொண்டு ராம்கி, விளம்பரங்களை உருவாக்கினார். அலாவுதீனும் அற்புத விளக்கும், சிந்த்ரெல்லா என்று விதம்விதமான தளங்களை அடிப்படையாகக் கொண்டு விளம்பரங்கள் உருவாயின.



அப்போதுதான் மேஜிக் நிறுவனம் கார்பெரேட் அட்வர்டைஸ்மென்ட் ஒன்றை வெளியிட விரும்பியது. கார்பரேட் அட்வர்டைஸ்மென்ட் என்பது, ஒரு நிறுவனம், தன்னுடைய நிறுவனப் பெருமைகளைப் பேசுவது. உருவான ஆண்டு, ஏற்படுத்திய சாதனைகள், பெற்ற விருதுகள் நிறுவனத்தின் கொள்கைகள் போன்றவற்றைப் பேசுவது, கார்பரேட் அட்வர்டைஸ்மென்ட்.

சமூக நலனுக்காக தாங்கள் செய்த பணிகளையெல்லாம் பட்டியலிட்டு டாடா நிறுவனம், "வீ ஆல்ஸோ மேக் ஸ்டீல்"என்று செய்திருந்த விளம்பரம், கார்பரேட் அட்வர்டைஸ்மென்ட்டுக்கு மிகச்சிறந்த உதாரணம். தயரிப்பின் தன்மைகள், அதன் சிறப்பம்சங்கள் குறித்த விளம்பரங்களை, புரோடக்ட் அட்வர்டைஸ்மென்ட் என்பார்கள். மேஜிக் டேப்பின் புரோடக்ட் அட்வர்டைஸ்மென்ட்டுகளுக்கு, மாயாஜாலக் கதைகளை மையமாகக் கொண்டு பல விளம்பரங்கள் செய்யப்பட்டு விட்டன.

கார்பரேட் விளம்பரமோ ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற நாளிதழ்களில் வெளிவர வேண்டும். தீவிரமாக சிந்திக்கும் போது கூட ராம்கியின் முகத்தில் புன்னகை நிரம்பிக் கிடக்கும். அப்படி தீவிரமாக சிந்தித்து, அந்த விளம்பரத்தின் உயிர்நாடியாகிய வரியை ஹெட்லைனாக ஆங்கிலத்தில் எழுதினார் ராம்கி. கொட்டை எழுத்துக்களில்,  When Electricity was introduced for the first time,people thought it was a magic என்று எழுதிவிட்டு, சற்றே சின்ன எழுத்துக்களில் சப் ஹெட்லைனாக, They were right in a way  என்று எழுதினார்.

"முதன்முதலில் மின்சாரம் அறிமுகமான போது மக்கள் அதனை மேஜிக் என்று கருதினார்கள்.சொல்லப்போனால் அதுவும் சரிதான் " என்றெழுதிவிட்டு", மேஜிக் டேப் இல்லாத மின்சார இணைப்பு சாத்தியமா என்ன" என்று விளம்பரம் தொடரும். ஒரு விளம்பரத்துக்கான கருத்துருவாக்கம்(கான்செப்ட்) உருவாக்கப்பட்டால் அதை எப்படியெல்லாம் செழுமைப்படுத்த வேண்டுமென்று நான் கற்றுக் கொண்டது அப்போதுதான்.

மேஜிக் அதெஸிவ் டேப் என்கிற தயாரிப்பு பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. அதையே காரணமாக்கி மக்களை அச்சுறுத்தாமல், மாயாஜாலம் என்ற கருத்துருவாக்கத்தை கையிலெடுத்து ராம்கி நடத்திய சித்து விளையாட்டு எனக்குள் பல ஜன்னல்களைத் திறந்தது.

கொடியசைந்ததும் காற்று வந்ததா காற்றடித்ததும் கொடியசைந்ததா என்ற கேள்வி போலவே, விளம்பரத்தில் காணப்படும் ஓவியம் அல்லது புகைப்படத்துக்கு வாசகமா அல்லது வாசகத்திற்கேற்ப காட்சியா என்ற கேள்விக்கும் பிஃப்த் எஸ்டேட்டில் ஒரு புதிய விடை கிடைத்தது. விளம்பரத்தை எழுதுபவரே கூட காட்சிப்பூர்வமாக எழுத வேண்டும் என்பதுதான் அது.

மேஜிக் விளம்பரம் ஒன்றை எழுத வேண்டிய நேரத்தில் ராம்கி ஏதோ குத்துமதிப்பாய் கிறுக்கிக் கொன்டிருந்தர்ர். தனித்தனியாக இரண்டு வயர்களை  வரைந்து கொன்டிருந்தார்.முதல் பார்வையிலேயே ஒரு வயர் ஆண் என்றும் இன்னொரு வயர் பெண் என்றும் கண்டுபிடிக்க முடிந்தது. பெண்ணுடலின் வளைவுகள் ஒரு வயரில்...அந்த பெண் வயர் சிந்திப்பதாக ஒரு வளையம் போட்டு ராம்கி எழுதினார்..If i could reach him.... it will be Magic!!! "அவரை மட்டும் நான் சென்று சேர்ந்து விட்டால் அது நிச்சயம் மேஜிக்தான்!!"

இரண்டு வயர்களின் இணைப்பு என்னும் அலுப்பூட்டும் விஷயத்தை, இரண்டு இதயங்களின் இணைப்பு என்று உருவகப்படுத்தும்போது ராம்கிக்குள் இருக்கும் பேனா கேமராவாகவும் செயல்பட்டது.

எனக்கு இரண்டு கயிறுகளை கந்தன் என்றும் வள்ளி எனறும் உருவகப்படுத்திய மகாகவி பாரதி நினைவுக்கு வந்தார். ராம்கி அந்தக் கவிதையைப் படித்திருக்க வாய்ப்பில்லை.ஏனெனில் அவருக்கு தமிழ் தெரியாது!!
(தொடரும்)

2 comments:

Murugeswari Rajavel said...

ஒவ்வொரு கலைக்குள்ளும்(விளம்பரம்) கவிதை!ரசனையோடு செய்யப்படும் எந்தக் காரியமும் மிளிரும்.

நிலாமகள் said...

ஒரு விள‌ம்ப‌ர‌த்துக்கான‌ க‌ருத்துருவாக்க‌த்தை செழுமைப்ப‌டுத்தும் வித‌த்தை ப‌டிப்ப‌டியாக‌ தாங்க‌ள் விவ‌ரிக்கும் வித‌ம் அத்துறை ப‌ற்றி ஏதும‌றியா என்போன்றோர்க்கும் விய‌ப்பும் ப‌டிப்பினையும் அளிப்ப‌தாய் இருக்கிற‌து.
மேலும் எந்த‌வொரு வேலையிலும், த‌ம் மேல‌திகாரிக‌ளின் மேல் ம‌திப்பும் ம‌ரியாதையும் உள்ள‌வ‌ர்க‌ளே அவ்வேலையை சிற‌ப்பாக‌ செய்ய‌க் க‌ற்கின்ற‌ன‌ர் என்ப‌தை த‌ங்க‌ள் விள‌ம்ப‌ர‌ நிறுவ‌ன‌ இய‌க்குந‌ர்க‌ள் ப‌ற்றிய‌ க‌ண்ணிய‌மான‌ விவ‌ரிப்பு எங்க‌ளுக்கும் அவ‌ர்க‌ள் மேல் த‌னி ம‌ரியாதையை ஏற்ப‌டுத்துமாறு உள்ள‌து.