Thursday, June 30, 2011

உளிகள் நிறைந்த உலகமிது - 9

ஒருநாள் காலை அனுமதி பெற்று கணேஷ் பாலிகாவின் அறைக்குள் நுழைந்த நான், மெல்லச் சொன்னேன், "Sir, i am resigning". அவர் அதிர்ச்சியடையவில்லை. இந்த மனநிலைக்கு நான் வந்து கொண்டிருந்ததை அவர் ஏற்கெனவே உணர்ந்திருந்தார். ஒரேயொரு காரணம்தான். சென்னை வாழ்க்கை எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. பருவநிலை, தண்ணீர் என்று பல விஷயங்கள் சரிப்படவில்லை.

சசி விளம்பர நிறுவனம், பிஃப்த் எஸ்டேட் இரண்டு நிறுவனங்களுமே எனக்கொரு பாடத்தைக் கற்றுத் தந்தன. எந்த விளம்பர நிறுவனத்திலும் தமிழ் விளம்பர எழுத்தாளருக்கு முழுநேர வேலை இருக்காது என்பதுதான் அது. ஒரு மாதத்தின் சில நாட்களில் முக்கிய பங்களிப்பு இருக்கும். அதுவும் அதிவிரைவாக வேலை செய்து  பழகுபவர்களுக்கு நிறைய நேரம் இருக்கும். ஒரே நிறுவனத்துக்குள் உட்கார்ந்து கொண்டு என்ன செய்வதென்று தெரியாது. பிஃப்த் எஸ்டேட் நிறுவனத்தில் ஃப்ரீலான்ஸ் செய்யத் தடையெதுவும் இல்லை. என்றாலும் சென்னை வாழ்க்கை எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை.

எனவே வேலையை விட்டு விலகுவதென்றும், கோவையில் இருந்தபடி ஃப்ரீலான்ஸ் முறையில் பல நிறுவனங்களுக்கு விளம்பரங்கள் எழுதித் தருவதென்றும் முடிவெடுத்தேன். விலகுவதாக சொல்லிவிட்டு கணேஷ் பாலிகாவிடம் கேட்டேன்,"சார்! எங்கேயோ இருந்த என்னை அழைத்து வேலை கொடுத்தீர்கள். இப்போது ஊர் ஒத்துக் கொள்ளவில்லை என்று
விலகுகிறேன். ஆனால் ஊரில் இருந்து கொண்டே இதே வேலையைத்தான் செய்யப்போகிறேன். எனக்கு பிஸினஸ் கொடுப்பீர்களா?"

என்னை கூர்ந்து பார்த்து கணேஷ் கேட்டார், "நேரடி பதில் வேண்டுமா?" ஆமாம் என்றேன்."நிச்சயம் தருவேன்" என்று சொல்லிவிட்டு கணேஷ் தொடர்ந்தார். "எங்களை தொழில் நிபுணர்கள் என்ற முறையிலும் தனிமனிதர்கள் என்ற நிலையிலும் நீ புரிந்து கொள்ள வேண்டும். (you should understand us as individuals and professionals)". அந்த ஒற்றை வரியிலேயே சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டார்.

அதாவது, சென்னையில் என்னால் தொடர்ந்து வசிக்க முடியாது என்பதை மனிதாபிமான அடிப்படையில் அவர் புரிந்து கொண்டார். அதேநேரம் தொழில்ரீதியில் என் வேலை  பிடித்திருப்பதால், கோவையில் நான் இருந்தாலும் தொடர்ந்து வேலை கொடுப்பதாக முடிவு செய்திருந்தார்.

அந்த நேரத்தில்தான் எனக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்தது. திருமணத் தேதி வைத்த பிறகும் துணிச்சலாக வேலையை விட்டிருந்தேன். இப்போது யோசித்தால், அது அசட்டுத்துணிச்சலா, அசாத்திய நம்பிக்கையா என்று என்னை நானே கேட்கிறேன். இரண்டும்தான் என்பது எனக்குக் கிடைக்கிற பதில்.

செய்கிற வேலை மனதுக்குப் பிடித்ததாகவே இருந்தாலும், வேலை செய்கிற ஊரும் சூழலும்கூட பிடித்தமானதாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகமாகக் கூட இருக்கலாம். இன்னொரு பக்கம், எழுத்தில் ஆர்வம் இருக்கும் யாருக்கும், சென்னையில் வேலைவாய்ப்பு என்பது ஒரு வரப்பிரசாதம்தான். அடுத்த கட்டமாக கலையுலக முயற்சிகளுக்கு அது பெரிய படியாக அமையும். எனக்கோ சென்னையில் தங்க இடமும் இருந்தது. வருமானத்துக்கு வழியும் இருந்தது. வீட்டுக்குப் பணம் அனுப்ப வேண்டிய அவசியமும் இல்லை. ஆனாலும் சென்னையிலிருந்து கிளம்ப முடிவெடுத்தேன் என்பது வியப்பை ஏற்படுத்தலாம். கலையுலகக் கனவுகள் என் இமைகளில் கூடுகட்டவில்லை என்பது எனக்கே ஆச்சரியமான உண்மை. நான் எடுத்த முடிவு சரியானதென்றே அப்போதும் இப்போதும் தோன்றுகிறது.

கோவை திரும்பியதும் என்னுடைய ஃப்ரீலான்ஸ் நிறுவனத்துக்கு ஒரு பெயர் வைக்கத் தோன்றியது. அப்போது வைத்த பெயர்தான்,Copy Cats Creative Consultancy. விளம்பர எழுத்தாளர்கள் காப்பிரைட்டர்கள் என்று அழைக்கப்படுவதால், அந்தப் பெயரும், பொதுத்தன்மையில் அந்தப் பெயரில் இருக்கிற முரணும் எனக்குப் பிடித்திருந்தன.


சிகப்புப் பூனையொன்று நிறுவனத்தின் சின்னமாக வடிவமைக்கப்பட்டது. அதன் வால் பேனாவாக அமைக்கப்பட்டிருந்தது. தொலைபேசி எண் அருகே மியாவ் என்று அச்சிட்டிருந்தேன். இந்த வடிவமைப்பை, சசியில் வேலை பார்த்த பிரகாஷ் செய்து கொடுத்திருந்ததாக ஞாபகம்.

அடுத்து அலுவலகம் பார்க்க வேண்டும். எந்த வணிக உத்திரவாதமும் இல்லாமல் அலுவலகம் பார்ப்பது வெறுங்கையில் முழம் போடுவதுதான். அப்போது கோவைஅரசு மருத்துவமனை அருகே ஆண்டாள் கம்ப்யூட்டர்ஸ் என்கிற நிறுவனம், அலுவலக சேவைகளை வாடகைக்குத் தந்து கொண்டிருந்தது. 1500 ரூபாய் ஆண்டுக்கட்டணம். தொலைபேசி, ஃபேக்ஸ், கூரியர் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வரக்கூடிய தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்க உதவியாளர்களும் இருப்பார்கள். கூடுதலாகப் பணம் கட்டினால் அங்கேயே ஒரு கேபின் வாடகைக்குக் கிடைக்கும்.

1994ஆம் ஆண்டு அது. செல்ஃபோன் போன்ற வசதிகள் கிடையாது.வீட்டுக்கு அருகிலேயே ஆண்டாள் கம்ப்யூட்டர்ஸ் இருந்ததால் நான் கேபின் எடுத்துக் கொள்ளவில்லை.சென்னையில் மாபோஸல், பிஃப்த் எஸ்டேட், கவுண்ட்டர் பாய்ண்ட் போன்ற நிறுவனங்களுக்கு ஃப்ரீலான்ஸ் முறையில் எழுதிக் கொண்டிருந்தேன். கோவையில், மா போஸல், ப்ரோஃப் அட்ஸ், ஏ டூ இஸட் ஆகிய நிறுவனங்களுக்கு ரீடெய்னர் முறையில் எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு நிறுவனமும் சொற்ப தொகைதான் தரும்.ரீடெய்னர் வருமானம் நீங்கலாகப் பார்த்தால், ஃப்ரீலான்ஸ் வேலைகள் தொடர்ச்சியாக வருமென்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு கேம்பெய்ன் வந்தாலும் கணிசமான தொகை கிடைக்கும். முதல் மாதம் காப்பி கேட்ஸ் செய்த ஃப்ரீலான்ஸ் பில்லிங், 700 ரூபாய்கள்!!

விளம்பர உலகில் தொடர்ந்து கவனிக்கப்பட வேண்டுமென்றால், ஹிட் விளம்பரங்களைத் தொடர்ந்து தந்துகொண்டிருக்க வேண்டும். தொண்ணூறுகளில்தான், கொங்கு மாவட்டங்களில் ஜவுளிக்கடைகள், ஆடித்தள்ளுபடி விற்பனையைப் பெரிய அளவில் செய்து கொண்டிருந்தன. பின்னர் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் அது பரவியது. ஆடி மாதங்களில் ஷோபிகா, பட்டுப்புடவைகளுக்கென்றே பிரத்யேகமாய் பட்டுத் திருவிழா நடத்தும். மாபோஸல் நிறுவனத்தின் கோவைக்கிளை அதற்கான விளம்பரங்களை செய்து வந்தது. பட்டுத் திருவிழாவுக்கு எழுதித்தந்த விளம்பர வரிசைகள் என் மார்க்கெட்டை "மளமள"வென உயர்த்தப்போவதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.


(தொடரும்)


 

1 comment:

தமிழ் said...

///திருமணத் தேதி வைத்த பிறகும் துணிச்சலாக வேலையை விட்டிருந்தேன். இப்போது யோசித்தால், அது அசட்டுத்துணிச்சலா, அசாத்திய நம்பிக்கையா என்று என்னை நானே கேட்கிறேன்.///

சுய முன்னேற்ற பேச்சாளாராக, எழுத்தாளராக நான் உங்களை அறிவேன். பல பேச்சாளர்கள் நம்பிக்கை மிகு சிந்தனைகளை பேசும் போது இது வெறும் வார்த்தைக்காக தான் என்றெல்லாம் கூட எண்ணம் எழுவதுண்டு. இருந்தும் குறிப்பாக உங்கள் பேச்சில் எதோ ஒரு ஈர்ப்பும், ஊக்கமும் இருக்கும். கவியரசர் சொல்வது போல் சில அசலான அனுபவம் உங்களுக்கு வாய்க்க பெற்றதே உங்கள் பேச்சில் இத்தனை நம்பிக்கை நிரம்பி ததும்ப காரணம். நல்ல வித்யாசமான முயற்சி. மேலும் வாசிக்க ஆவல்!!