Thursday, June 16, 2011

உளிகள் நிறைந்த உலகமிது - 6

தொண்ணூறுகளின் தொடக்கம், காட்சி ஊடகங்களின் ஆட்சி தொடங்கிய காலம். தனியார் தொலைக்காட்சிகள் தலையெடுக்கத் தொடங்கிய நேரம். தொலைக்காட்சி விளம்பரங்களை உருவாக்கும் பணிகளிலும் பிஃப்த் எஸ்டேட் நிறுவனம் ஈடுபட்டது.

சசியில் இருந்தபோது, காட்சி ஊடகங்கள் மூலம் கவனம் ஈர்க்கும் விளம்பரங்களை உருவாக்குவதில் கைதேர்ந்தவரான சந்திரசேகர் துடிப்பும் துள்ளலுமாக பல வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்தார். நடிகை ஹீராவைக் கொன்டு தயாரிக்கப்பட்ட ஏவிடி பிரீமியம் டீக்கான "பார்த்தீங்களா! பார்த்தீங்களா!, கேட்டீங்களா! கேட்டீங்களா! சாப்டீங்களா? சாப்டீங்களா?"என்ற விளம்பரம் பெரும்புகழ் பெற்றது. அப்போது சசியில் சந்திரசேகருக்குத் .துணையாய் பணிபுரிந்த அனுபவம் இருந்தது.
.
காட்சி விளம்பரங்களுக்கு வாடிக்கையாளர்களின் ஒப்புதல் பெற ஸ்டோரி போர்ட் தயார் செய்ய வேண்டும். ஒரு காகிதத்தை மேலிருந்து கீழாய் நேர்க்கோட்டில் இரண்டாகப் பிரித்துக் கொள்வோம். இடதுபுறம் விஷுவல் என்றும் வலது புறம் ஆடியோ என்றும் தலைப்பிட்டுக் கொள்வோம். இடதுபுறம் ஒன்றின்கீழ் ஒன்றாக காட்சி விவரங்களும் எதிர்புறம் அவற்றுக்கான விளம்பரப் பாடல்வரியோ, உரையாடலோ, அறிவிப்பு வாசகங்களோ இடம்பெற்றிருக்கும்.

காட்சிப் படிமம் காணப்படுகிறது என்கிற விழிப்புணர்வு, விளம்பர எழுத்தாளர்களுக்கு மிகவும் அவசியம். காட்சிகளுக்கான நேர்முக வர்ணனையாக விளம்பரங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. பழைய காலத் திரைப்படங்களில் நியூஸ் ரீல் காட்டுவார்கள். ஆறு சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும்."இதுதான் ஆறு" என்பார் வர்ணனையாளர். பிறகு ஒரு பாலத்தைக் காட்டுவார்கள்

அலுப்பூட்டும் இந்த வகைமைக்கொரு மாற்றாக வந்தவையே விளம்பரங்கள். இருபதே விநாடிகளில் ஒரு கதையைச் சொல்ல வேண்டும். அந்தக் கதை யாருக்கு சொல்லப்பட வேண்டுமோ, அவர்களை ஈர்க்கவும் வேண்டும். இருபது விநாடிகளின் எல்லையில் பார்ப்பவ்ர்களை அது செயல்படவும் தூண்ட வேண்டும்.

பிஃப்த் எஸ்டேட் நிறுவனத்தில் எனக்குத் தரப்பட்ட முதல் காட்சி விளம்பர வாய்ப்பு, டால்மியா சிமெண்ட்டுக்கானது. "தலைமுறைகள் எங்களுடன் நிலைத்து நிற்கும்" என்ற வாசகத்தில் மையங்கொண்டு, அதன் விளம்பரங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு விளம்பரத்துக்குமான தேவை என்ன, அந்த விளம்பரம் நிகழ்த்திக் காட்ட வேண்டியதென்ன என்றெல்லாம் அதற்குரிய அலுவலர் தருகிற விவரணைகளுக்கு ப்ரீஃப் என்று பெயர். (ஒருமுறை உள்ளாடை நிறுவனம் ஒன்றுக்கு விவரணைகள் வழங்கிய இளம் அலுவலர் ஒருவர்,"ப்ரீஃப் விக்கணும்! அதுதான் ப்ரீஃப்!" என்றார்).



டால்மியா சிமெண்ட் அப்போது 53 கிரேட் சிமெண்ட்டை அறிமுகம் செய்திருந்தது. 53 கிரேட் வகை சிமெண்ட் தமிழ்நாட்டில் எல்லா சிமெண்ட்டிலும் உண்டு. கேரளாவில் இல்லை. அந்தவகையில் கேரளாவை மையப்படுத்தும் விதத்தில் விளம்பரம் இருக்க வேண்டும். ஆனால் கேரளாவில் முதல்முறையாக என்பது போன்ற வாசகங்கள் கூடாது.

இதற்காக நான் ஒரு ஸ்டோரி போர்ட் உருவாக்கினேன். இருபது விநாடிகளில் பதினைந்து விநாடிகள் வெறும் இசை மட்டும்தான். காட்சியிலோ, கேரளக் கோயில்களின் மரபில் அலங்கரிக்கப்பட்ட யானைகள், செண்டை, பம்பை போன்ற வாத்தியங்கள் முழங்க வந்து ஒரு கட்டிடத்துக்குள் கலந்து காணாமல் போகும். கடைசி யானை கட்டிடத்துக்குள் சங்கமிக்கும்போது ஒரு குரல், "உங்கள் கட்டிடங்களுக்குக் கொடுங்கள் யானை பலம். டால்மியா சிமெண்ட்" என்னும்.

வெளிப்படையாகக் கேரளாவை பற்றிப் பேசாமல் அதேநேரம் கேரளாவை நினைவூட்டுவதோடு, யானைபலம் என்னும் பொதுத்தன்மை வாய்ந்த கருத்துருவாக்கத்தால் அந்த விளம்பரத்துக்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் ஒப்புதல் தந்தது .

இதன்பிறகு , தமிழகமெங்கும் உள்ள டால்மியா சிமெண்ட் டீலர்களைக் கூட்டி ஒரு பயிலரங்கை நிகழ்த்த டால்மியா சிமெண்ட் நிர்வாகத்தினர்கள் விரும்பினார்கள். ஒரு கட்டிடத்துக்கு எந்த சிமெண்ட் வாங்குவதென்று, யாரெல்லாம் முடிவு செய்யும் நிலையில் இருப்பார்கள், அவர்களை எவ்விதங்களில் எல்லாம் அணுகலாம் என்றெல்லாம் டீலர்களுக்கு விளக்க விரும்பினார்கள். ஒரு கட்டிடத்தின் ஆர்கிடெக்ட், என்ஜினியர், மேஸ்திரி, ஸ்டாக்கிஸ்ட்-இவர்கள் நால்வரும் தருகிற ஆலோசனையில்தான் சிமெண்ட் வாங்குவதில் முடிவு செய்கிறார்கள் என்று கள ஆய்வில் கண்டறிந்தார்கள்.

பெரிய நிறுவனங்களுக்கான விளம்பரங்களை உருவாக்குவதன் முன்னால் இத்தகைய கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதுண்டு. இந்தைய விளம்பர உலகில் மிக முக்கிய ஆளுமையாக அறியப்பட்டவர் அலிக் பதம்ஸீ. புகழ்பெற்ற பல விளம்பரங்களை உருவாக்கியவர். லிரில் சோப் விளம்பரம் அவரால் உருவாக்கப்பட்டது.ஒரு பெண், மலையருவியில் குறைந்தபட்ச
ஆடைகளுடன் குளிக்கும் அந்த விளம்பரம் அதிகபட்ச விமர்சனங்களுக்கு ஆளானது. ஆனால் லிரில் சந்தையில் மாபெரும் வெற்றியைப் பெற்றது.


இதற்குக் காரணம்,கள ஆய்வில் கண்டறியப்பட்ட சுவாரசியமான உளவியல் அம்சம் ஒன்று, அந்த விளம்பரத்தில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டதுதான். அதிகாலை தொடங்கி பம்பரம் போல் பரபரப்பாக சுற்றுகிற பெண்கள், வீட்டுக் கடமைகள், அலுவலகக் கடமைகளுக்கு நடுவே தனக்கே தனக்கான பிரத்யேக நிமிடங்களாக உணர்வது, குளியலறையில் செலவிடும் அந்த சில நிமிஷங்களைத்தான் என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.

அதுபோல, சிமெண்ட் வாங்கும்போது அதைத் தீர்மானிக்கும் சக்திகளாக விளங்கும் ஆர்கிடெக்ட், என்ஜினியர், மேஸ்திரி ஸ்டாக்கிஸ்ட் ஆகியோரை எந்த எந்த அம்சங்கள் கவரும் என்றும், அந்த அம்சங்கள் டால்மியா சிமெண்ட்டில் இடம்பெற்றிருக்கும் விதம் குறித்தும் விளக்குகிற செய்திப்படம் ஒன்றை சுவாரசியம் குறையாமல் உருவாக்க வேண்டும்.

அதற்கான மூலக்கருவை ராம்கி உருவாக்கினார். தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து வருகிற ஸ்டாக்கிஸ்டுகள் டால்மியாவின் வெற்றியில் சம்பந்தப்பட்டிருந்தார்கள். எனவே அந்தப் படத்தை சுவாரசியம் மிக்கதாக்குவதற்காக அந்த பட்ஜெட் படத்தில் கமலும் ரஜினியும் சம்பந்தப்பட்டார்கள்!!

(தொடரும்)

1 comment:

நிலாமகள் said...

இருபதே விநாடிகளில் ஒரு கதையைச் சொல்ல வேண்டும். அந்தக் கதை யாருக்கு சொல்லப்பட வேண்டுமோ, அவர்களை ஈர்க்கவும் வேண்டும். இருபது விநாடிகளின் எல்லையில் பார்ப்பவ்ர்களை அது செயல்படவும் தூண்ட வேண்டும்.//திற‌மைக்கு ச‌வாலான‌ காரிய‌ம்தான்!

ஹீராவின் 'வாங்கிட்டீங்க‌ளா வாங்கிட்டீங்க‌ளா' இன்னும் ம‌ன‌த்திரையில் அழியாம‌ல்!

'ப்ரீஃப் விக்க‌ணும்; அதுதான் ப்ரீஃப்' எத்த‌ருண‌த்திலும் ந‌ம்மை விட்ட‌க‌லாத‌ உண‌ர்வு ந‌கைச்சுவை அல்ல‌வா...

டால்மியாவுக்கான‌ யானை ப‌ற்றிய‌ ப‌டிம‌ம், நுட்ப‌ அறிவே இத்துறைக்கு அவ‌சிய‌மென‌ புரிய‌ வைத்த‌து.