அருவிகள் நடந்த வழித்தடமிருக்கும்
மலையின் மீது தழும்புகள் போல.
கரும்பாறைகளில் கசிவின் தடயங்கள்
இராணுவ வீரனின் கண்ணீர் போல.
மெல்லிய கீற்றாய் பறவையின் பாடல்
நேற்றைய கனவின் நிழலைப்போல.
மெளனப் பூக்கள் மலர்கிற உச்சியில்
கனல்கிற அமைதி கடவுளைப் போல.
வெளிப்படாத செளந்தர்யம் இன்னும்
கருவிலிருக்கும் குழந்தையைப் போல்.
துளையிடப்பாடாத புல்லாங்குழலில்
தூங்குகின்ற இசையைப் போல.
இத்தனை அழகிலும் இழையுதென் இதயம்
மலைமேல் பெய்கிற மழையைப்போல

No comments:
Post a Comment