Thursday, March 5, 2015

பஞ்ச பூதங்களும் ஒரு பறவையும்-3 (சக்திஜோதி கவிதைகளை முன்வைத்து)








பதட்டமுறுகிற ஆண் தனக்குத் தானே புதிராய் தெரிவான்.அதுவும்,தெளிவான ஒரு பெண்ணுக்கு முன்னால் அவன்
சமனப்பட முடியாமல் தடுமாறுவது பரிதாபமானதுதான்.அந்த விநாடியில் பெண்மையை,காதலை,தாய்மையை மீறி பெண்மனதில் இருக்கும் பகடை உருளத் தொடங்கிவிட்டால் அங்கே உறவுகள் உருக்குலைகின்றன.

மாறாக அவனை சாந்தப்படுத்தி,சமநிலைக்குக் கொணர்ந்து,
இதம்செய்து.இதம் பெறும் காத்திருப்பின் கருணை அந்தப் பெண்ணை அற்புதமானவள் ஆக்குகிறது.

அந்தக் காத்திருப்பின் நிறைவில் அவளும் பெறுகிறாள் என்றாலும் அவள் தருகிற பங்கே அதிகம்.சொல்லப்போனால் அந்தக் கணத்தை அவளே நிகழ்த்துகிறாள்.

“ஆழக்கடல் நடுவே மௌனம் காத்து
 காலம் வருகையில் மேலெழுந்து
 மெல்ல இதழ்விரித்து மழைவாங்கி
 வெண்சிறு முத்தாகிறாள்.
காத்திருப்பின் சிப்பி அவள்.

உண்மையில் ஒவ்வொரு பெண்ணும்
அப்படித்தான் இருக்கிறாள்.
ஓர் ஆணுக்கு
ஒரு காதலுக்கு
ஓர் அன்பிற்கு எனக் காத்திருக்கிறாள்.

நிறைக அன்பே என்று
காலமெல்லாம் காத்திருக்கிறாள்
அதன்பொருட்டே எல்லாவற்றையும் தாங்குகிறாள்
எல்லாவற்றையும் ஏற்கிறாள்
மேலும்
எல்லாவற்றையும் நிறைக்கிறாள்”
(மீன் நிறத்திலொரு முத்தம்-ப-27)



தனக்கு எவ்விதத்திலும் பிடிமானம் இல்லாத சூழலை ஒருபெண் ஒருபோதும் விரும்புவதில்லை.ஒரு வீணையில் சுதிகூட்டுகிற லாவகத்துடன் சூழலை தனக்கு சாதகமாக ஒழுங்கு செய்பவள் அவள்.

விசைத்தெழும் இந்தப் பெண்ணின் சத்திய தரிசனத்தில் தயங்கியோ,தடைப்பட்டோ தேங்கியோ .ஓர் ஆண் அடிவாங்கிய அகங்காரத்துடனோ அச்சுறுத்தும் தாழ்வு மனப்பான்மையோடோ நின்றுவிடக்கூடும்.அங்கும் அவளே அவனை ஆற்றுப் படுத்துகிறாள்.

“பலா வெடித்து
தேனீக்கள் ரீங்காரமிடுகின்றன

வனமெங்கும் அதன் வாசனை
உன் அருகாமையை நினைவூட்டுகிறது

இந்தக் குளத்தில்
அல்லி மலர்கள்
இதழ்விரிந்து கிடக்கின்றன”

கள்ளுறை பலா,தேனீக்கள்,அல்லி மலர்கள் ஆகியன,உள்ளுறை உவமங்கள்.

பலா வெடித்து
தேனீக்கள் ரீங்காரமிடுகின்றன

வனமெங்கும் அதன் வாசனை
உன் அருகாமையை நினைவூட்டுகிறது

இந்தக் குளத்தில்
அல்லி மலர்கள்
இதழ்விரிந்து கிடக்கின்றன”

என,முந்தைய வரிகளுக்கு கவிதையின் அடுத்த வரிகள் உரையெழுதுகின்றன.

“மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் பறவைகள்
நம்மை ஏளனம் செய்வது
வனமெங்கும் ஒலிக்கிறது”

ஊரார் அலர் தூற்றுவதன் உருவகம் இது. சங்க இலக்கிய நேர்த்தி சக்தி ஜோதியின் நவீன கவிதைகளில் லாவகமாக கைகூடும் இடங்களில் இதுவும் ஒன்று.
அந்தத் தலைவியின் தவிப்பை, தேடலை, கரைமீறும் ஆசையை அழுத்தமாக ஒற்றை வரியில் சொல்கிறார்.

“குளம் தளும்பிக் கொண்டிருக்கிறது”

இந்த ஈற்று வரியில்  அக இலக்கியத்தின் அழகியலும் பெண்மனதின் உளவியலும் துலங்குகின்றன.

நிலவுக்கும் பெண்ணுக்குமான ஒப்பீடு,மேலோட்டமாகப் பார்த்தால் அழகு சார்ந்த வர்ணனையாகத் தெரியும்.ஆனால் ஒரு பெண்ணின் உடலியலோடும் உளவியலோடும் நிலவுக்கு ஆழமான தொடர்புண்டு.கீழைத்தேய ஜோதிட மரபில் நிலவை அடிப்படையாகக் கொண்ட கணித முறைக்கு இதுவே காரணம்.

நிலவின் சுழற்சியை மையமாகக் கொண்டே பெண்ணின் உடற்கூறு சார்ந்த மாற்றங்கள் நிகழ்கின்றன.எனவே ஒரு பெண்ணுக்கு நிலவு மிகவும் நெருக்கமானது.

 “வலப்பக்கத்திலிருந்து எழுந்த நிலவு
கவிதைக்கு
காட்சிகளை வெளிச்சமிடுகிறது

என்பதாக  சக்திஜோதியின் கவிதை ஒன்று தொடங்குகிறது. யோக மரபில் மனித உடலின் இடது பாகம் ஈடா என்றும் வலது பாகம் பிங்கலா என்றும் அழைக்கப்படுகிறது. இடது பாகத்தில் பெண்தன்மை அதிகம். வலது பாகத்தில் ஆண்தன்மை அதிகம்.
இதுதான் அர்த்தநாரீசுவர தத்துவம்.(இதை சமீபகாலம் வரை தமிழில் மாதொரு பாகன் என்று சொல்லி வந்தனர்) இடதும் வலதும் ஒன்றையொன்று ஈர்த்துக் கொண்டேயிருக்கும்.

வலம்சார்ந்த ஈர்ப்பின் மினுக்கு கவிதையின் முதல் வரியாகிறது.
   


“வலப்பக்கத்திலிருந்து எழுந்த நிலவு
கவிதைக்கு
காட்சிகளை வெளிச்சமிடுகிறது

அரும்புகிற கவிதை வரிகளை
மலரச் செய்கிறது

எழுதப்படாத சொற்களை
நிலவின்முன் வைத்துக் காத்திருக்கிறேன்”

என்கிறார் சக்திஜோதி.உண்மைதான்.நீங்கள் எழுதி முடித்த வரிகளை சூரியனுக்குக் கீழே வைத்துவிட்டுப் போய்விடலாம்.ஆனால் எழுதப் படாத சொற்களுடன் நிலவுக்காக காத்திருப்பதுதானே நியாயம்.

, துர்வாசரிடம் மந்திரோபதேசம் பெற்ற குந்தி சூரியனுக்கு பதிலாக சந்திரனை அழைத்திருந்தால் என்ன நடந்திருக்கும்? தனக்குக் கிடைத்த வரத்தின் குளுமையை முதல் அனுபவத்திலேயே குந்தி நன்கு உள்வாங்கியிருப்பாள்.

இப்படியோர் எண்ணத்தை இந்தக் கவிதையின் அடுத்த வரிகளே அளிக்கின்றன  

“நிலவு தன் ஒளிவரிகளால்
என்மீது
எழுதத் தொடங்குகிறது

பின்னிரவில்
வெப்பம் தணிந்த உடலின் கண்களில்
இரண்டு நிலவு மிதந்து கொண்டிருக்கிறது”

(எனக்கான ஆகாயம்31/32)

இந்தக் கவிதையை கடந்து செல்கையில் மகாகவி பாரதியின் கண்ணன் பாட்டில் வருகிற ஒரு வரி நினைவில் நிலவெரிக்கிறது.
“சந்திரன் ஜோதியுடையதாம்-அது
 சத்திய நித்திய வஸ்துவாம்- அதைச்
சிந்திக்கும் போதினில் வந்துதான் -நின்னை
சேர்ந்து தழுவி அருள்செய்யும்”.

மந்திரத்தால் குந்தி சந்திரனை அழைத்திருந்தால் என்ற கேள்வி இந்தக் கவிதை வரிகளினூடே எங்கிருந்து முளைத்ததென எனக்கு சொல்லத் தெரியவில்லை.ஆனால் குந்திக்கு சூரியனுடனான தாம்பத்யம் எவ்வாறாய் இருந்திருக்கும் என்கிற கேள்விக்கான பதிலும் சக்திஜோதியின் கவிதைகளில் நமக்குக் கிடைக்கிறது என்பது வியப்புதானே!

“தன்னுள் சுடர்ந்து கொண்டிருக்கும் அன்பை
யாவரிடமும் பொழியுமவள்
அதனை
சூரியனிடமிருந்தே கற்றுக் கொண்டாள்
சுடர்தல்
வெம்மை தருதல்
பகிர்தல்
யாவும் சூரியனின் குணங்கள் எனவும்,
எக்கணமும் ஒளித்து வைக்காமல்
யார்மீதும் பரவிவிடும் அதன் எளிமை எனவும்
ஒவ்வொன்றையும் அவள் அறிந்திருந்தாள்

நிலவும் நீரும் வளியும் நெருப்பும் வெளியும்
அதுவாகவே இருக்கும் மந்திரம்
சூரியனின் குழைந்தநெருப்பில் துவங்குவது போல
அவளிடமிருந்தே
இந்த உலகம் இயங்குவதாக நம்புகிறாள்
அதனால்
புவியியலைக் கற்றுக் கொள்வது போலவே
அவளின் உடலியலைக் கற்றுக் கொண்டிருந்தாள்
(மீன் நிறத்திலொரு முத்தம் ப-28)
   
சூரியனோடும் சந்திரனோடும் பிணைந்திருந்த ஆதித் தாய்மனம் நெஞ்சொடு கிளத்தும் நன்மொழி இது
 (பறவை வரும்)