Tuesday, March 17, 2015

ஈஷாவில் இருக்கின்ற மாயம்




 இல்லாது போதெலெனும் பொல்லாத போதைதான்
  ஈஷாவில் இருக்கின்ற மாயம்
நில்லாத வினைகளெலாம் செல்லாது போக குரு
நாதனவன் நிகழ்த்துகிற ஜாலம்
சொல்லாத வலிகளையும் கிள்ளாமல் கிள்ளிவிட
சுட்டுவிரல் கட்டைவிரல் சேரும்
கல்லாத கல்வியினைஎல்லாரும் அடைந்திடவே
குன்றின்கீழ் ஒளிர்கின்ற கூடம்


வார்த்துவைத்த மாதிரிகள் வாழ்க்கையினை ஆக்ரமிக்க
வாட்டத்தின் வலிகனிந்த பிறகு
பார்த்துவந்த மானிடர்கள் சேர்த்தளித்த சுமையிறக்க
பரமநிழல்தேடுகிற பொழுது
தீர்த்தத்தில் தலைமுழுகி தீர்ப்புக்குத் தலைவணங்கி
திரும்புகையில் முளைக்குமிரு சிறகு
வேர்த்தநடை தகிப்பாற வேண்டிநின்ற கனல்மேவ
வைத்திருந்த அகந்தையெலாம் விறகு

கைநிறைய வேம்புதரும் பைரவியின் பார்வையிலே
கண்கலங்கி நின்றிருக்கும் தருணம்
பொய்மனதின் கூச்சலெலாம் போயடங்க தியானலிங்கப்
பெருமௌனம் பருகுகிற தருணம்
வையகத்தில் வாழ்ந்தபடி வேறுநிலை எய்தும்படி
வித்தகனார்  ஆக்கிவைத்த தருணம்
நைந்தநிலை மாற்றிமிக நன்மையெல்லாம் கூட்டுகிற
நாயகனார் திருவடிகள் சரணம்