Saturday, January 23, 2010

இப்படித்தான் ஆரம்பம்-3

ரொட்டிக்கடை வீதி கலகலத்துக் கொண்டிருந்தது.அன்று கண்ணதாசன் விழா. ரொட்டிக்கடை வீதி தெருமுனையிலேயே மாலைநிகழ்ச்சி. தெருவெங்கும் டியூப்லைட் கட்டி,சீரியல் பல்ப் போட்டு காலையிலிருந்தே ஏற்பாடுகள் களைகட்டிக் கொண்டிருந்தன.
காலை பத்து மணிக்கு முதல் நிகழ்ச்சியாக மைக்செட்காரருடன் தகராறு.ஒலிபெருக்கிகளைக் கட்டியதுமே,ஒலிப்பரிசோதனைக்காக முதல் கேசட்டைப்போட்டார்."தொட்டால் பூ மலரும்' என்று பாடல் ஒலித்ததும்,வீதியின் வெவ்வேறு இடங்களில் தோரனம் கட்டிக்கொண்டிருந்த பேரவை நண்பர்கள் சொல்லி வைத்தாற்போல மைக்செட்காரரிடம் ஓடினோம்."யோவ்! யோவ்! அது கண்ணதாசன் பாட்டு இல்லேய்யா"என்று நாங்கல் கத்த,"டெஸ்டிங்குக்காக தாங்க போட்டேன்"
என்று சமாதானம் சொல்ல முயன்றார் அவர்.
"இன்னைக்கு வேற யார் பாட்டையும் போடக்கூடாது"என்று நாங்கள் போட்ட சத்தத்தில் ஆடிப்போனார் அவர்.விழா முடிந்தபோது ஜன கண மண கூடப் போடவில்லை பாவம்.அந்த
வீதியோரக்கூட்டத்தின் முக்கிய நிகழ்ச்சி கவியரங்கம்.ஏற்பாடு நாந்தான்.
கவிஞர் கோமகன் கவியரங்கத் தலைவர். .

கவியரசு கண்ணதாசன் என்கிற பொதுத்தலைப்பில்
மண்ணுலகில்,பெண்ணுலகில்.பண்ணுலகில்,விண்ணுலகில் என்று நான்கு தலைப்புகள் தந்திருந்தோம்.கடைசித் தலைப்பு எனக்கு.பங்கேற்கும் கவிஞர்களின் பெயர்கள்
தனியாக அமைக்கப்பட்டிருந்தன.

இறையன்பு சின்னக்கண்ணதாசன்
முத்தையா அரசு பரமேசுவரன்
என்று, பட்டிமண்டபத்தில் போடுவதுபோல் போட்டிருந்தார்கள்.நான்கு மணிக்கே நான் கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டேன்.பட்டு ஜிப்பா குர்தா என்று சூழலுக்குப் பொருந்தாத கெட்டப்பில் வீதியெங்கும் நான் அலைந்து திரிந்ததைப் பார்க்க "சாளரம் தோறும் தாமரை பூத்தன".அப்படியொரு வேடிக்கைக்காட்சியை அந்த வீதி அதுவரை கண்டிருக்கவில்லை போலும்.

கவியரங்கத்தலைவர் கோமகன் என்று ஞாபகம் இருக்கிறது.விழாத்தலைவர் வேறு யாரோ. அவர் வராத காரணத்தால் அருகில் குடியிருந்த தமிழாசிரியர் ஒருவரை அழைத்து வந்தோம்.அவர் அருகில் குடியிருப்பவர் மட்டுமல்ல.சாயங்காலமானால் கோப்பையிலே குடியிருப்பவர்.முழுபோதையில் மேடைக்கு வந்தார்.கண்ணதாசனைப்பற்றி பத்து நிமிடங்கள்
பேசிவிட்டு அழைப்பிதழைப் பார்த்து அறிவித்தார்."இன்று நடைபெறவுள்ள கவியரங்கில்
இறையன்பு என்பவர்,சின்னக்கண்ணதாசன் என்ற தலைப்பிலும்,முத்தையா என்பவர்,அரசு பரமேசுவரன் என்ற தலைப்பிலும் கவிதை வாசிப்பார்கள்' .
கோமகனின் ஆவேசமான கவிதைகளில் அவர் சார்ந்திருக்கும் கம்யூனிசக் கொள்கையின் அனல் வீசியது.
"சாகக் கிடக்கையிலும்-இந்த
சாண்டில்யக் கிழவனுக்கு
மோகத்தைப் பற்றித்தான்
நாவல் வருகிறதாம்
அவன் வீட்டில்
மூன்று வேளையும்
முருங்கைக்காய் சாம்பாரோ"
என்ற அவரின் வரிகள் நினைவிலிருக்கின்றன.

"கண்ணதாசனைப்போல் தண்ணியடித்தால்
கவிதைவரும் என்றார்கள்!
நானும் அடித்தேன்!
வந்தது...
கவிதையல்ல வாந்தி"
என்று இறையன்பு பாடியதாக ஞாபகம்.

விண்ணுலகில் கண்ணதாசன் என்று நான் பாடிய கவிதை ,என்னை உட்பட யாருக்குமே
புரியவில்லை.கண்ணதாசன் விண்ணுலகில் எப்படியிருப்பார் என்று கற்பனையில் சொன்ன சந்தக்கவிதை அது.

விழாவுக்குப்பிறகு புதிதாக உறுப்பினர்கள் சேர்ந்தார்கள்.பேரவை நண்பர்கள் வந்து உட்கார்ந்திருப்பது ஓவிய வேலைகளுக்கு இடைஞ்சல் என்று யார் நினைத்தார்களோ இல்லையோ,ரவியின் பங்குதாரரும் சுமாரான ஒவியருமான இந்திரஜித்துக்கு அந்த எண்ணம் இருந்தது.

பேரவைக்காரர்களிடம் அவசரப்பட்டு சண்டை போட்டுவிடுவார் இந்திரஜித்.ஆனால் பேரவை நண்பர்களால் அவருக்குக் காரியம் ஆக வேண்டியும் இருந்தது.ரவியின் ஒவியக் கூடத்தில்பெரிய பெரிய போர்டுகளை எழுதுவார்கள்.அந்த போர்டுகளை ஸ்கூட்டரில் வைத்து எடுத்து வரும்போது பின்னால் அமர்ந்து பிடித்துக்கொள்ள பேரவை ஆட்களின் தயவு அவருக்குத் தேவையாயிருந்தது.

"ஹலோ! போயிட்டு வந்துடலாம் வாங்க!'என்று கெஞ்சலும் மிரட்டலும் கலந்த தொனியில் அழைப்பார் இந்திரஜித்.இதற்காகவே சண்டை போட்டவர்களிடம் வலிய சென்று சமாதானம் பேசுவார் .அதற்கு அவர் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டு வந்த சமாதான வசனம்,கேட்பவரை குலைநடுங்கச் செய்யும்."சரி விடுங்க பாஸ்! இப்பொ சங்கடமாயிடுச்சு!
நாளைக்கு நீங்க டெத் ஆயிட்டா நான் வந்து அழுவேன்!நான் டெத் ஆயிட்டா நீங்க வந்து அழுவிங்க!"
இதற்கு பயந்து கொண்டே இந்திரஜித் சமாதானம் பேசும்முன்னால் தாமாகவே வலியப்போய் பேசிவிடுவார்கள் பேரவை நண்பர்கள். (சில வருடங்கள் கழித்து இந்திரஜித் சாலை விபத்தில் இறந்தார் என்று பின்னால் எங்கேயோ கேள்விப்பட்டேன்.)

பிறந்தநாள் விழாவுக்குப்பின்னர் அதற்குப்பின்னால் அக்டோபரில் கண்ணதாசன் நினைவுவிழா.250 ரூபாய் வசூலாகியிருந்தது.கவியரங்கம் வேண்டாம் என்ற தீர்மானத்தை நானே முன்மொழிந்தேன்.கருத்தரங்கமும் பட்டிமண்டபமும் நடத்த முடிவானது.
கருத்தரங்கத் தலைவருக்கு பத்து ரூபாய் தர பட்ஜெட்டில் இடமிருந்தது.யாரை அழைக்கலாம் என்று எங்கள் பள்ளித் தமிழாசிரியரும்,கம்பன் கழகச் செயலாளருமான புலவர்,க.மீ.வெங்கடேசன் அவர்களிடம் கேட்டபோது அவருக்குத் தெரிந்த தமிழாசிரியர் ஒருவர் பெயரைச் சொன்னார்."நீங்க பத்து ரூபாய் கொடுங்க! அதை உங்க மன்ற வளர்ச்சி நிதிக்காக
தந்துடச் சொல்றேன்.அவரையே தலைவராப் போடுங்க"
.
ஆசிரியர் சொன்ன யோசனையில் அகமகிழந்து,"அவர் தலைவர்! அன்னவர்க்கே சரண் நாங்களே'
என்று அவரையே தலைவராகப் போட்டோம்.விழாநாளில்,பள்ளியில் ஆறாவதோ ஏழாவதோ படிக்கும் மகனுடன் வந்துவிட்டார் விழாத்தலைவர்.
மன்றப்பொருளாளருக்கு ஒரு யோசனை.பணம்கொடுத்தால் திருப்பித் தரப்போகிறார்.நாகரீகத்திற்காவது நாம் மறுக்க வேண்டும்.அவர் வேண்டாமென்பார்.மீண்டும் வற்புறுத்த வேண்டும்.எதற்கிந்த தர்மசங்கடம்..பணத்தையே கொடுக்காமல் பெரிய கும்பிடாகப்போட்டு வழியனுப்பினோம்.

சில நாட்களுக்குப் பிறகுதான் விஷயம் தெரிந்தது.நன்கொடையாகப் பத்து ரூபாயைத் தருகிற எங்கள் தமிழாசிரியரின் யோசனையைவிழாத்தலைவர்தள்ளுபடி செய்துவிட்டார்.பத்துரூபாயை எதிர்பார்த்தே வந்திருக்கிறார்.நாங்கள்பணம் தராததால் சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரமுள்ள வீட்டிற்கு மகனுடன் நடந்தே போயிருக்கிறார் பாவம்!!

இதற்கிடையில் பேரவையில் சில புதிய முகங்கள் பொறுப்பேற்றன.கருத்தரங்கத் தலைவரை கால்நடையாய் அனுப்பிய சோகவரலாறுகள் தொடராமல் இருக்க வேண்டுமென்றால் மன்ற
வளர்ச்சிநிதிக்காக நாடகம் போடுவதென்று முடிவானது.பாப்பநாயக்கன்பாளையத்தில் வீதிக்கொரு நாடகக்கலைஞர் இருப்பார்.அதே பகுதியில் இருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் திரைத்துறையில்
ஜெயித்த பிறகு பாப்பநாயக்கன் பாளையத்தில்வீட்டுக்கொரு நாடகக் கலைஞர் தோன்றத் தொடங்கினார்.

ஆனால் உள்ளூர்க்காரர்களை மட்டும் வைத்து நாடகம் நடத்தாமல் சினிமா நட்சத்திரம் ஒருவரை
அழைப்பது என்று முடிவானது.அப்போது பேரவையின் தலைவராக இருந்தவர் சென்னையிலிருந்து கோவைக்கு வந்தவர்.ரஜினிகாந்த்துடன் ரம் சாப்பிட்டதாகத் தொடங்கி,ரகம் ரகமாய் அனுபவக்கதைகளை அள்ளிவிடுவார்.தன்பெயருக்குப்பின்னால் இரண்டு எம்,ஏ.பட்டங்களைப் போட்டிருந்தார்.அவரை பேரவை ஏகமனதாக நம்பியது.இரண்டு எம்.ஏ.பட்டங்களுக்கான நான்கெழுத்துக்கள் நடுவே புள்ளிவைக்கக் கூடாது என்பது எங்களுக்கு அப்போது புரியவில்லை.

ஜெய்சங்கர் ,விஜயகுமார் இருவரில் யாரையாவது ஒப்பந்தம் செய்வதாய்ச்சொல்லி,அவரும் இன்னொரு நண்பரும் சென்னைக்கு ரயிலேறினார்கள்.நான்கு நாட்களுக்குப்பின் திரும்பியவர்கள்,"கண்டேன் சீதையை" என்று சொல்ல வேண்டியதுதானே!

சென்னை பல்லவனின் டவுன்பஸ் சீட்டுக்களில் 52 சீட்டுக்களை அள்ளி "எவ்வளவு அலைஞ்சுட்டு வந்திருக்கோம் பாருங்க"என்று செயற்குழுவின் முன் போட்டார்கள்.அலைந்து திரிந்து ,அவர்கள் நாடகத்திற்காக ஒப்பந்தம் செய்து வந்திருந்த நடிகர்......லூஸ்மோகன்!!

-தொடரும்

Wednesday, January 20, 2010

இப்படித்தான் ஆரம்பம் -2

கோவை மாநகருக்குள்ளேயே அதன் புராதன அமைப்பையும் அழகையும் தொன்மத்தையும் தரிசிக்க விரும்புகிறவர்கள் பாப்பநாயக்கன்பாளையத்தைப் பார்க்க வேண்டும்.பெருமாள்கோவில்,பிரகாரவீதிகள்,பிளேக் நோய் பரவிய காலத்தில் மக்களைக்காத்த பிளேக் மாரியம்மன் கோவில்,சின்னதாய் ஒரு திண்ணைமடம் என்று மனசுக்கு இதமாக இருக்கும்.அங்கேதான் நான் படித்த மணிமேல்நிலைப்பள்ளியும் இருக்கிறது.
கிழகு மேற்கு வடக்கு தெற்கு என்று நான்காகப் பிரியும் பெரிய சாலைகளில்,தென்புறச்சாலை தொடங்குமிடத்தில் இரண்டு மைதானங்களுடன் கம்பீரமாய் பரந்து விரிந்திருக்கும் எங்கள் பள்ளி.

அதற்கு எதிரே வடக்குப் பக்கமாய் உள்ள வீதியில் நடந்தால் காந்தி சங்கம் ஒன்று.அடுத்து
வலது பக்கம் சுதா ஸ்டோர்ஸ்.இடது பக்கம் பிந்து ஸ்டோர்ஸ்.இரண்டிலும் மாணவ மாணவிகள்
மொய்த்துக் கிடப்போம்.பிந்து ஸ்டோர்ஸில் கணேஷ் என்றோர் அண்ணன்.இலக்கிய ஈடுபாடு உண்டு.நான் ஏதாவது கவிதைகள் எழுதிக் கொண்டுபோய் காட்டினால்,"இது போன வாரம்தான்
குமுதத்திலே வந்தது.காது குத்தாதே'என்பார் இரக்கமேயில்லாமல்!!
அதே வீதியில் இன்னும் நேராக நடந்தால் நான்கு குறுகிய சாலைகள் பிரியும்.மேற்கே திரும்பினால் செந்தில் உணவு விடுதி.பாக்யராஜை வைத்து திரைப்படங்கள் தயாரித்த நஞ்சப்பன்
சகோதரர்கள் நடத்தி வந்த உணவகம்.சைவக்குடும்பத்தில் பிறந்த நான் அநேக வகை அசைவ உணவுகளுக்கு நன்கு பழகியது அங்கேதான்.மேற்கே திரும்பாமல் கொஞ்சதூரம் நடந்து இடதுபுறம் திரும்பினால் ரொட்டிக்கடை வீதி தொடங்கும். அந்த வீதியின் தொடக்கத்திலேயே இருந்ததுதான் ரவியின் ஓவியக்கூடம்.அந்த ஓவியக்கூடத்திலேயே ரவி,மனோகரன் ஆகிய இரண்டுபேர் சேர்ந்து தொடங்கியிருந்ததுதான் கவிஞர் கண்ணதாசன் நினைவு மன்றம்.

ஒடிசலாய்,உயரமாய்,சிகப்பாய் இருப்பார் ரவி. தாய்மொழி மலையாளம்.கண்ணதாசன் பாடல்களில் தீராத காதலுடையவர்.பத்துக்குப் பத்து அலவில்தான் அவருடைய ஓவியக்கூடம்.ரவியின் கைவண்ணத்தில் கண்ணதாசனின் கம்பீரமான ஒவியம் ஒன்று வீதிநோக்கி வைக்கப்பட்டிருந்தது.எங்கள் பள்ளிச் சுவரில் கண்ணதாசன் படத்தை
வரைந்திருந்தவரும் அவரே.மனோகரன்,ஆலைத் தொழிலாளி.அவர்களிடம் வலிய சென்று அறிமுகப்படுத்திக் கொண்டேன்.இந்த நேரத்திற்குள் கண்ணதாசன் கவிதைகள் பலவும் எனக்கு மனப்பாடம் ஆகியிருந்தன.

மன்றத்தில் சேர வந்திருக்கும் பள்ளிச்சிறுவன் என்று சாவகசமாக பேசத்தொடங்கினர் இருவரும்."கண்ணதாசன் பாட்டெல்லாம் கேட்டிருக்கீங்களா தம்பி?"பிரியமாகக் கேட்டார் மனோகரன்.கண்ணதாசன் பாடல்களையும் கவிதைகளையும் நான் சரளமாக சொல்லத் தொடங்கியதும் இருவருக்கும் சொல்ல முடியாத சந்தோஷம்.டீ வாங்கிக் கொடுத்தார்கள்.நிறைய பேசவிட்டுக் கேட்டார்கள்.அன்றிலிருந்து அன்றாடம் மாலைநேரம் மன்றம்நோக்கித் தானாக நகரத் தொடங்கின கால்கள்.

ரவி,மனோகரன்,தீபானந்தா என்று புனைபெயர் வைத்திருந்த போலீஸ்காரர் ஒருவர்,சத்யநாராயணன் என்று மன்றம் விரிவடைந்து கொண்டே போனது.
சாயங்காலமானால் எல்லோரும் கூடிவிடுவோம்.பேச்சும் கும்மாளமுமாய் அந்த வீதியே ரெண்டுபடும்.ரவி பெரும்பாலும் புன்னகை பொங்க அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பார்.

அதற்கிடையில் என் வகுப்புத்தோழன் விஜயானந்த் .பள்ளித் தோழன் அசோக்குமார் ஆகியோரை உறுப்பினர்களாகச் சேர்த்திருந்தேன்.மன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரை,பள்ளி
மாணவர்களாகிய நாங்கள் மூவர்தான் கொஞ்சம் வசதியான பின்புலத்தைச் சேர்ந்தவர்கள்.ஆனாலும்
எங்களை அந்த ரீதியில் பயன்படுத்த அந்த நண்பர்கள் சிறிதும் முயலவில்லை என்பதை இப்போது நினைத்தால் வியப்பாக இருக்கிறது.

எங்கள் வீட்டுக்கு எங்கள் பூர்வீக ஊரிலிருந்து ஜோதிடர் ஒருவர் வந்திருந்தார்.அகோரம் என்று பெயர். ஒரு குச்சியை வைத்துக் கொண்டு மணிபார்க்கும் கணக்கை கற்றுக் கொடுத்திருந்தார்.ஒரு குச்சியை எடுத்துக்கொள்ள வேண்டும்.16 விரற்கடைகள் அளந்து மீதமுள்ள பகுதியை உடைத்து வீசிவிட வேண்டும்.பிறகு தரையில் ஊன்றிப்பார்த்தால் அதன் நிழல் விழும்.
நிழலின் அளவு போக குச்சியின் உயரத்தைக் கணக்கிட வேண்டும்.உச்சிப் பொழுதுக்குப் பிறகு குச்சியின் உயரத்தை விட நிழலின் அளவைக் கணக்கிட வேண்டும் என்று குழப்பமாக ஏதோ சொன்னார்.
அதற்கு அவர் சொன்ன இரண்டுவரிப்பாடலை மறுநாளே சபையில் அரங்கேற்றினேன்.

"காட்டுத் துரும்பெடுத்துக் கண்டம் பதினாறாக்கி
நீட்டிக் கிடந்தது போக நின்றதொரு நாழிகை".


இதுவே உச்சிப்பொழுதுக்குப் பிறகு ..

"நீட்டி நின்றதுபோகக் கிடந்ததொரு நாழிகை".

இந்தப் பாட்டைக்கேட்டதும் மனோகரனுக்கு பயங்கர உற்சாகம்.'இனிமே வாட்சை அடகு வச்சா
மீக்கற வேலையில்லை! ஒரு குச்சி இருந்தா போதும்' என்றபடியே ஒரு குச்சியை உடைத்து
பரிசோதனைகள் செய்து நிழலை அளந்து,குச்சியை அளந்து பதினைந்து நிமிடங்கலுக்குப் பிறகு,"ரவி!! பணி பதினொண்ணு' என்று அறிவித்தார்."ஆமாம்!நீ கண்டுபுடிச்சு சொல்றதுக்குள்ளே
மணி கேட்டவன் போத்தனூரு போயிடுவான்'என்று கிண்டலடித்தார் ரவி.

கண்ணதாசன் மன்றம் வைத்தாயிற்று.கண்ணதாசனுக்கு விழா எடுக்க வேண்டாமா? கண்ணதாசன் பிறந்தநாளாகிய ஜூன் 24ல் விழா நடத்த முடிவாயிற்று.கவியரங்கம் நடத்தும் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன்.கோவையில் கல்லூரி மாணவர்களில் இலக்கிய ஆர்வமுள்ளவர்களை இணைத்து கலைத்தேர் இலக்கிய இயக்கம் கண்ட அரசு.பரமேசுவரன்,தென்றல் ராஜேந்திரன் ஆகியோர் எனக்கு நண்பர்களாகியிருந்தார்கள்.அப்போது அவர்கள் டி.ராஜேந்தர் தலைமையில் கவியராங்கம் நடத்த வேண்டும் என்ற உத்தேசத்தோடு,கண்ணில் பட்டவர்களிடமெல்லாம் டி,ராஜேந்தர் நம்பர் கிடைக்குமா என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். கோவையில் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவப் பேச்சாளர்களும் கலைத்தேர் இலக்கிய இயக்கத்தில் இருந்தனர்.
அந்தக் குழுவிலேயே நான் ஒருவன்தான் பள்ளிமாணவன். தொடர்பு வசதிகள் இந்த அளவு இல்லாத காலத்தில் பரமேசுவரனும் ராஜேந்திரனும் அலைந்து திரிந்து உருவாக்கிய அமைப்பு அது.

அவர்கள் துணையுடன் கவியரங்கம் அமைப்பது ஒன்றும் பெரிய காரியமில்லை. போதாக்குறைக்கு
கலைத்தேர் நடத்திய கவியரங்கம் ஒன்று ஏற்கெனவே நடந்திருந்தது.மொத்த செலவி 25 ரூபாய்.அரங்க வாடகை 10 ரூபாய்.அருட்தந்தை ஜான் பீட்டர் எங்கள் மேல் இரக்கப்பட்டு திவ்யோதயா அரங்கில் ஒர் அறையை அளித்திருந்தார்.அழைப்பிதழ் அச்சாக்க செலவு 15 ரூபாய்.பரமேசுவரன்,ராஜேந்திரன்,நான் ஆகியோர் ஆளுக்கு 5 ரூபாய் அளித்திருந்தோம்.
மீதம் 10 ரூபாயைத் தந்தவர் கவியரங்கிற்குத் தலைமை தாங்கிய வேளாண் பலலைக்கழக
மாணவர். 10 ரூபாய் தந்திருக்காவிட்டாலும் அவர் தலைமையில்தான் கவியரங்கம் நடந்திருக்கும்.
மாணவர்கள் மத்தியில் அந்த மாணவர் அன்றே பிரபலம்.இன்று அவர்பெயர் வெ.இறையன்பு.ஐ.ஏ.எஸ்

-தொடரும்

இப்படித்தான் ஆரம்பம்

எனக்குப் பிடித்த பித்துகளில் முதல் பித்து கண்ணதாசன் பித்து.ஒன்பதாம் வகுப்பு படிக்கிற போது பிடித்த பித்து.இதுவரை தெளியாமல் என்னை இன்றும் இயக்குகிற பித்து.1981 அக்டோபர் 17ல்'கண்ணதாசன் இறந்தார்.1981 ஜூன் மாதம் தொடங்கிய கல்வியாண்டு என்னைப் பரம எதிரியாய்க் கருதியிருந்தது.நானும் பதில்சண்டை போடாமல் பள்ளிச்சீருடையிலேயே பள்ளிக்குப் போவதாய் சொல்லிவிட்டு ஊர்சுற்றத் தொடங்கியிருந்தேன்.
எங்கள் ஓவிய அசிரியர் திரு.தண்டபாணி தொடங்கிய ஸ்வீட் என்கிற சிறுவர் இதழின் துணை ஆசிரியராகவோ உதவி ஆசிரியராகவோ வேறு நியமனமாகியிருந்தேன்.
ஆசிரியர் சொல்லாமல் நானாக மேற்கொண்ட வேலை ,தினந்தோறும் பள்ளி நேரங்களில் டவுன்ஹால் காந்திபுரம் என்று பகுதி பகுதியாகப் போய் ஸ்வீட் விற்பனை எப்படி இருப்பது என்று விசாரிப்பது.ஸ்வீட்டும் சரியாகப் போகவில்லை.நானும் பள்ளிக்கு சரியாகப் போகவில்லை.

ஒருமுறை கடையொன்றில் இதழ் பற்றி நான் கேட்க,உள்ளே எங்கேயோ வைத்திருந்த கடைக்காரர் தேடத் தொடங்கினார்.எங்கள் உரையாடலைக்கேட்டுக் கொண்டிருந்த ஒருவர்,"ஸ்வீட்னு ஒரு பத்திரிகையா?ரெண்டு ரூபா தானா? கொடுங்க பார்க்கலாம்"என்று
கேட்டுநின்று கொண்டிருந்தார்.பத்திரிகை கிடைத்தபாடில்லை.ஸ்வீட் வாசகராகியிருக்க வேண்டி விரும்பிக்கேட்ட அவர் சர்க்கரை நோயாளியாக இருந்திருப்பாரோ என்று இப்போது சந்தேகம் வருகிறது.ஆனாலும் வாரம் மூன்று நாட்களாவது கடைகளில் என் அதிரடி சோதனையும்,அதைத்தொடர்ந்து காலை பத்து மணிக்கு ஏதாவதொரு காலைக்காட்சியும் வாடிக்கையாகிப்போனது.

மதிப்பெண்கள் "சரசர"வென்று குறையத்தொடங்கின.வீட்டில் ஏச்சும் பேச்சும் அதிகரிக்க,காலைக்காட்சியுடன் மேட்னிஷோவும் சேர்த்துப் பார்க்கத் தொடங்கினேன்.
எங்கள் உறவினர் திரு.சிவசுப்பிரமணியம் கோவை மதுரா வங்கியில் கிளை மேலாளராக இருந்தார்.சிதம்பரத்தில் புகழ்பெற்ற குடும்பம் அவருடையது.ஆஜானுபாகுவாய் சிவந்த நிறமாய்
சிரித்த முகமாய் இருப்பார்.என்போன்ற சிறுவர்களையும் 'வாங்க போங்க' என்றுதான் பேசுவார்.
பள்ளி அளவிலான பேச்சுப்போட்டிகளில் நான் வெட்டி முறிப்பதைக் கேள்விப்பட்டு,ஊக்கம் கொடுப்பார்.1981 ஆகஸ்ட் 1ல் என் பிறந்தநாளைக்கு கண்ணதாசன் கவிதைகள் ஆறாவதுதொகுதியையும் மேத்தாவின் அவர்கள் வருகிறார்கள் தொகுப்பையும் பரிசாகத் தந்தார்.
அன்று பிடித்த பைத்தில்,கண்ணதாசன் கவிதைகள் தொகுதி என்னுடன் எல்லா சினிமாக்களுக்கும் வரத்தொடங்கிவிட்டது.இதைக்கேள்விப்படாமலேயே கவிஞருக்கு உடல்நலம் குன்றியது.அமெரிக்கா போனார்.அமரரானார்.அவரை வெறியுடன் படிக்கத் தொடங்கியது அப்போதுதான்.

இடையில் ஸ்வீட் விற்பனை கவலைக்கிடமாய் இருந்தது.ஒருநாள் தண்டபாணி ஆசிரியர் அறையில் ஆசிரியர் குழு கூட்டம் கூடியது.என் வகுப்புத் தோழன் கதிர்வேலும் நானும் குழுவில் இருந்தோம்.அவன் கதிர் என்ற பேரில் எழுதுவான்.தண்டபாணி ஆசிரியர்,ஸ்வீட் சிறுவர் இதழாக இல்லாத பட்சத்தில் இன்னும் நன்றாகப்போகும் என்று நம்பிக்கை கொடுத்தார்.அதற்கு அவர் அறிவித்த திட்டம்தான் அதிரடியானது.

ஸ்வீட் இதழின் அட்டையில் சில்க் ஸ்மிதா படத்தைப்போடுவதுதான் அந்தத் திட்டம்.எங்கள் ஆலோசனையைக் கேட்டார்."சரிங்க சார்' என்பதுதான் எங்கள் பதிலாக இருந்தது.ஏனென்றால் நாங்கள் அப்போது பெரிய பத்திரிகையாளர்கள் ஆகியிருந்தோம்.புகழ்பெற்ற பத்திரிகை துணை ஆசிரியர் ஒருவர்,தன்னிடம் வந்த சிறுகதைகளை மேலோட்டமாகப்படித்துவிட்டு 'குப்பை.குப்பை' என்று சொன்னதாய் எதிலோ படித்தேன்.அந்த ஹோதா எனக்கு ரொம்பப்பிடித்துவிட்டது.வகுப்புத் தோழர்களிடம்,"கதை எழுதிக்கொடுத்தால் ஸ்வீட்டில் போடுவேன்" என்று ஆசைகாட்டுவேன்.எழுதிக் கொண்டுவந்து தருவார்கள்.அலட்சியமாய் பக்கங்களைப் புரட்டிவிட்டு "குப்பை,குப்பை" என்று சொல்ல கதிர் ஆரவாரமாய் சிரிப்பான்.முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன்கள் மறுநாளும்
கதை எழுதிக் கொண்டுவருவார்கள்.

அப்படித்தான் கே.தேவராஜ் எழுதிக் கொண்டுவந்த கதை.திருப்பதியில் அர்ச்சனைக்குத் தேங்காய் பழம் வாங்கிய ஒரு மனிதனைப்பற்றியது.தேவராஜ் திருப்பதி பார்த்ததில்லை.ஆனால் உள்ளூர்க்கோயில் வாசல்களில் தேங்காய் பழக்கடைகளைப் பார்த்திருக்கிறான்.இது போதாதா?
கதையின் நாயகன் திருப்பதியில் தேங்காய் பழம் வாங்கி காசு கொடுக்காமல் கோயமுத்தூர் வந்துவிடுகிறான்.கடைக்காரனும் பின்தொடர்ந்து அதே பஸ்ஸில் ஏறி வருகிறான்.வீட்டுக்குள்
நுழைந்து கதவை சார்த்திக்கொள்கிற கதாநாயகன்,கடைக்காரன் கதவைத்தட்டினால் தான் இல்லையென்று சொல்லச் சொல்லிவிடுகிறான்.இவன்குணம் தெரிந்த கடைக்காரன்,மணிஆர்டர் வந்திருப்பதாக சொல்ல கதாநாயகன் வெளியே வந்து கடைக்காரனிடம் மாட்டிக் கொள்கிறான்.

இந்த நீதிக்கதையை எழுதிய கே.தேவராஜ் பத்திரிகை தர்மத்தை மீறிச் செய்த ஒரு காரியம்தான் என் கோபத்தைக்கிளறியது.வகுப்பில் நான் கடைசி பெஞ்ச் என்று இந்நேரம் யூகித்திருப்பீர்கள்.கே.தேவராஜ் முதல் பெஞ்ச்.கிளாஸ் லீடர் வேறு.கடைசி பெஞ்ச்சுக்கு வந்து கதையைக் கொடுத்துவிட்டு காத்திருப்பதுதான் பத்திரிகை தர்மம்.ஆனால் முதல் பெஞ்ச்சில் போய் உட்கார்ந்துகொண்டு,ஓணான் போல் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டு நான் படித்து முடித்ததும்,அங்கிருந்தே "எப்படி" என்றான்.அரைகிலோ அதிக அழுத்தத்துடன் "குப்பை குப்பை" என்று நான் குரல் கொடுக்க அவனுக்குக் கோபம் வந்துவிட்டது."போடா டேய்" என்று கத்த பதிலுக்கு நான் கத்த ஒரே ரகளை.

இத்தகைய அதிகாரங்களைத் தக்க வைத்துக் கொள்ள சில்க் ஸ்மிதா படத்தை அட்டையில் போடுவதே சிறந்த வழி என்று தோன்றியது.தீவிரமாக யோசித்த தண்டபாணி ஆசிரியர்,
"முத்தையா!நாளைக்கு வர்றபோது சில்க் பற்றி ஒரு கவிதை எழுதிக்கிட்டு வா! அவங்களும் உழைச்சுதான் மேலே வந்திருக்காங்க!இதை உணர்த்தற மாதிரி இருக்கணும்"என்றார்.
அடுத்த நாளே கவிதையைக் கொண்டுபோய் 'பிடிசாபம்' என்று அவர் கைகளில் கொடுத்துவிட்டேன்.

"உழைப்பதில் எண்ணம்
உயர்வது திண்ணம்
தழைத்தே சிலுக்கு வாழ்க"

என்பதாகத் தொடங்கும் அந்தக் கவிதையின் முதல்வரி மட்டும் நினைவிலிருக்கிறது. ப்டித்துப்பார்த்த அசிரியரின் முகம் இருண்டது.அப்புறம் ஸ்வீட் இதழ் வரவில்லை.சில்க்கின் தற்கொலையும் தள்ளிப்போனது.என் உறவினர்கள் பலரிடம் 20 ரூபாய் சந்தா வேறு வசூல் செய்து கொடுத்திருந்தேன்.அவர்களில் பெரும்பாலோருக்கு அது ஞாபகத்தில் இல்லை என்பது எனக்கு ஆறுதலாக இருந்தது.

ஸ்வீட் நின்ற சோகத்தில் இருந்தஎன்னை நிலைகுலையச் செய்தது கண்ணதாசனின் மரணச்செய்தி.
தோல்வி பயமும் தாழ்வு மனப்பான்மையும் மண்டிக்கிடந்த பொழுதுகளில்,"உனக்குள்ளும் இருக்கிறது தமிழ்" என்று என்னை உசுப்பியவை அவருடைய வரிகள்.

தினத்தந்தியில் வந்த கண்ணதாசனின் புகைப்படத்தை வெட்டி,சயின்ஸ் நோட் அட்டையில் ஒட்டி,
வீட்டு மாடியில் இரங்கல் கூட்டம் நடத்தினேன்.எதிர்வீட்டில் இருந்த சஜ்ஜி,(இன்று சுயமுன்னேற்றப் பயிற்சியாளராக அறியப்படும் சஞ்சீவ் பத்மன்) அடுத்த வீட்டில் இருந்த பொடியன்கள் கணேஷ் மகேஷ் ஆகியோர் என் மிரட்டலின் பேரில் இரங்கல்கூட்டத்தில் கலந்து கொண்ட மூன்றே மூன்று பார்வையாளர்கள்.கவிஞர் படத்தை சுவரோடு திருப்பி வைத்து விட்டு,"இப்போது படத்திறப்பு" என்று அறிவித்துவிட்டு படத்தை நேராக வைத்தேன்.பிறகு இரங்கலுரையும் ஆற்றினேன்.
அந்தப்படத்திற்கு தினமும் ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிப்போடத் தொடங்கினேன்.இன்னும் என்னென்ன விதங்களில் கண்ணதாசன் நினைவைக் கொண்டாடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது,எங்கள் பள்ளிச்சுவரிலேயே கவிஞரின் உருவப்படத்துடன் பலவண்ணங்களில் மின்னிக் கொண்டிருந்தது "கவிஞர் கண்ணதாசன் நினைவு மன்றம்"என்ற விளம்பர அறிவிப்பு!!

-தொடரும்

Tuesday, January 19, 2010

நிலாப்பாட்டு

கம்பன் கவியாய் கலையெழிலாய்
அம்புலி சிரித்திடும் அழகாக
அம்மன் வீசிய தாடங்கம்
அதைத்தான் நிலவென்பார் பொதுவாக

மின்னல் இழைகளின் கோலங்கள்
முழுமை பெறுவதே முத்துநிலா
தென்றல் கடைந்த வான்தயிரில்
திரளும் வெண்ணெய் பட்டுநிலா

கனவில் சூரியன் காணுகிற
காதல் முகமே அழகுநிலா
மனதில் தினமும் பௌர்ணமியாய்
மல்லிகை மலர்த்தும் முழுமைநிலா

கோள்களாம் அகல்களின் ஒளியினிலே
கார்த்திகை தீபம் ஏற்றும்நிலா
நாள்கள் என்கிற நாடகங்கள்
நகையுறக் கண்டே நகரும்நிலா

கார்த்திகைப் பெண்களின் முலைப்பாலாய்
கந்தன் கனியிதழ் வழிந்தநிலா
கார்நிறக் கண்ணன் வேய்குழலின்
கானம் போலப் பொழிந்தநிலா

தரையோ கடலோ மலைமுகடோ
தாரைகள் பொழியும் தாய்மைநிலா
நரையோ திரையோ வாராமல்
நித்தம் ஒளிரும் தூய்மைநிலா

ஒலியே இல்லா இசையாக
உயிரை வருடும் நாதநிலா
வலியே இல்லா வலியாக
வாட்டியெடுக்கும் போதைநிலா

திரையே இல்லா அழகாக
திசைகள் துலக்கும் கோலநிலா
உரையே இல்லாக் கவியாக
உயிரை உலுக்கும் ஞானநிலா

திருக்கடையூர்-பாடசாலைப் பசங்கள்

திருக்கடையூரில் பிச்சைக்கட்டளை எஸ்டேட் சார்பில் தேவாரப் பாடசாலை ஒன்றையும் தாத்தா நடத்தி வந்தார்கள்.திருமுறைகள், அபிராமி அந்தாதி ,திருப்புகழ் போன்றவற்றைப் பயிற்றுவிக்கும் வகுப்புகள் தினமும் நடக்கும்.பயிற்சி முடிவில் சான்றிதழ்கள் தரப்படும்.
பயிற்சி பெற்றவர்கள்,கோயில்களில் ஓதுவார்களாகப் பணிக்குச் சேரலாம்.பல ஆண்டுகள் தங்கிப்பயில வேண்டிய குருகுலமாக இருந்தது அது. திருத்தணி சுவாமிநாதன் கூட்தொடக்கத்தில் அங்கே பயின்றவர்தான்.
பாடாசாலைக்கென்றே தேவார ஆசிரியர், புல்லாங்குழல் வித்வான் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
படிக்க வரும் பசங்களுக்கு உணவு, தங்குமிடம், ஆடைகள் ,அனைத்தும் இலவசம்.
ரத்தினம் பிள்ளை என்பவர் தேவார ஆசிரியர். "வாத்தியாரய்யா" என்பது பொதுப்பெயர்.அவருக்கு வீடு கொடுதது
வீட்டைத் தொட்டாற்போல பாடசாலையையும் அமைத்திருந்தார்கள். ரத்தி்னம் பிள்ளை சிதம்பரத்துக்காரர்.
உயரத்தைக் கூட்டிக் காட்டும் ஒற்றை நாடி தேகம். தான் மிகவும் கறார் பேர்வழி என்பதை,கிராப்பிலேயே காட்டுவார்.நரைத்த தலை நட்சத்திர உணவகங்களின் புல்வெளி போல் சீராக வெட்டப்பட்டிருக்கும்.குறைந்தபட்ச சிகையையும் என்ணெய் தடவி வாரியிருப்பார். நெற்றியில் திருநீறு.புருவங்கள் மத்தியில் குங்குமம்.கழுத்துக் கண்டத்தை ஒட்டி ஒற்றை ருத்திராட்சம்
சிவப்புக் கயிற்றில் கட்டப்பட்டிருக்கும். வேட்டியு்ம் மேல்துண்டும் அணிந்து சீராகக் கைகளை வீசி
அவர் நடந்து வரும் பாங்கே "நான் வாத்தியார்! நான் வாத்தியார்!" என்று பறைசாற்றுவது போலிருக்கும்.
தன் மனைவியோடும் மகளோடும் குடியிருந்தார் அவர்.மகள் கொஞ்சம் அசடு.
ஒரே நேரத்தில் பாட சாலையில் பத்துப் பதினைந்து பையன்கள் தங்கிப் படிப்பார்கள்.அத்தனை பேருக்கும் உணவு பாடசாலையிலேயே தயாராகும்.குழம்பு ரசம் அனைத்தையும் தாத்தா தினம் ருசி பார்ப்பார்.

எங்கள் பண்ணைவீட்டிலிருந்து இருபதடி தள்ளி்த்தான் பாடசாலை.ருசி பார்ப்பதென்றால் கிண்ணங்களில்
குழம்பு ரசத்தைப் பண்ணை வீட்டுக்குக் கொண்டு வந்தால் போதும்தானே? தாத்தா ஒத்துக் கொள்ள மாட்டார.
வாத்தி்யாரும் பிறரும் தங்களுக்கு் சமைத்துக் கொள்ளும் உணவை ருசி பார்க்க அனுப்பி விட்டு பைய்யன்களுக்கு மட்டமான உணவைப் போட்டு விட்டால்??
அதற்கொரு விதி செய்தார் அவர். சொக்கலிங்கமும் பெரிய ரெட்டியாரும் குழம்பு ரசம் தயாரானதும்
தவலையோடு பண்ணை வீட்டுக்குத தூக்கி வரு்வார்கள்.பெரிய ரெட்டியாருக்கு சற்றே கூன் விழுந்திருக்கும்.
தவலைக்குக் காதுகளாக பெரிய இரும்பு வளையங்கள் இருக்கும் .ஒரு காதைப் பற்றிக் கொண்டு சொக்கலிங்கம் முனனால் நடக்க,ஒரு கையால் தவலையின் காதைப் பிடித்துக் கொண்டு
பூமியைப் பார்த்த வாக்கில் இன்னொரு கையை சொக்கலிங்கத்தின் முழங்கைக்கு மேலே ஊன்றிக்கொண்டு
காலை அகட்டி அகட்டி வருவார் பெரிய ரெட்டியார்.

திருக்கடையூ்ரில் மாதவிக்குளம் போலவேஆனைகுளம் பூ்சை குளம் ஆகியவையும் உண்டு,பாடசாலைப் பசங்கள் அனைவரும் கண்டிப்பாக சனிக்கிழமையன்று அந்தக் குளங்களில் எண்ணெய்தேய்த்துக் குளிக்க வேண்டும்.சின்னப் பசங்களுக்கு எண்ணெய் தேய்க்கவும், குளத்தில் குளிக்கையில் கண்காணிக்கவும் பண்ணை ஆட்கள் போவார்கள்.அன்று பசங்களுக்கு மதிய வகுப்பு கிடையாது.சனிக்கிழமையன்று மதிய சாப்பாடுபருப்பு்த்துவையல்,மிளகுக்குழம்பு,பூண்டு ரசம்,சுட்ட அப்பளம்.அன்று மட்டும் மோர் கி்டையாது.

பல நாட்கள் எங்களுக்குப் பொழுது விடிவதே பாடசாலைப் பசங்களின் குரல் கேட்டுத்தான். பூஜையறைக்கு முன்னர் உள்ள பரந்த முற்றத்தில் கெட்டி ஜமுக்காளம் வி்ரித்து மலைப்ப்பாம்பு போல் நீ.....ண்ட
ஒரே தலையணையைப் போட்டு பேரப்பிள்ளைகள் அனைவரும் படுத்திருப்போம்.எங்களை எழுப்பாமல் தாத்தா பூஜை செய்தாலும் தீபாராதனையின் போது பாடசாலைப் பசங்கள் கூட்டாக தேவாரம் பாடுவார்கள்.அவர்களுக்கு
காலை வகுப்பு, மதிய வகுப்பு என்றிருந்தாலும், எங்களுடன் விளையாடுவதற்காக சுழற்சி முறையில"டெபுடேஷனில்" வருவதும் உண்டு.ராஜேந்திரன்,கட்டையன் என்னும் செல்வராஜ்,மாரிமுத்து,தாமோதரன் ஆகியோரைத்தான் இப்போதுஞாபகமி்ருக்கிறது .

இருப்பவர்களிலேயே குட்டையானவனும் குறும்பானவனும் செல்வராஜ்
எனும் கட்டையன்தான்.ஆனால் எங்கள் தாத்தாவிடம் ரொம்ப நல்ல பெயர் அவனுக்கு.தாத்த கோவைக்கு வரும்போது உடன் வரக்கூடிய எடுபிடிகளில் அவனும் மாரிமுத்துவும் இருப்பார்கள்.கட்டையன் "குறத்தி வாடி என் குப்பி" பாட்டை நன்றாகப் பாடுவான்.கோவைக்கு வந்திருந்தபோது கட்டையன் மாரிமுத்து ஆகியோரை எங்களுக்குத் துணைக்கு வைத்துவிட்டு
பெரியவர்கள் வெளியே போய் விட்டார்கள். எல்லோரும் தரையில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டி ருந்த போது அந்தப் பாட்டைப் பாடச் சொல்லி மாரிமுத்து நச்சரித்துக் கொண்டேயிருந்தான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கட்டையன் தன் கணீர்க்குரலில்"குறத்தி வாடி என் குப்பி"
என்று இழுத்துவிட்டு "ங்ஞா ங்ஞா ங்ஞா" என்று வருகிற இடத்தில் ஒவ்வொரு ங்ஞாவுக்கும் மாரிமுத்தை உட்கார்ந்த வாக்கிலேயே எட்டி எட்டி
உதைத்து உருட்டினான்.யாராவது "கட்டையா" என்ரு குரல் கொடுத்தால்
"ஏன்" என்று அவன் தரும் பதில்குரலின் அதிர்வு அடங்கும் முன்பே முன்னே வந்து நிற்பான்.
இந்தப் பசங்களுக்கும் வாத்தியார் குடும்பத்திற்கும் அவ்வளவாக ஆகாது.
குறிப்பாக வாத்தியார் மனைவிக்கு.அவர் சொல்கிற வேலைகளைப் பசங்கள் செய்வதில்லை என்பதில் கடுப்பாகி, "கட்டேல போக" என்று அந்த அம்மாள் திட்ட, பசங்கள் கோரஸாக "பல்லாக்கில் போக" என்று கத்திவிட்டு ஓடி வந்து விடுவார்கள்.

அவர்களுக்கு சொல்லித் தரவென்றோ அல்லது பக்க வாத்தியமாகவோ புல்லாங்குழல் தாத்தா என்றழைக்கப்பட்ட ராஜாமணி அய்யர் இருப்பார். அவரை ஒரு கைக்குட்டைக்குள் மடித்து விடலாம்.தீவிர எம்.ஜி.ஆர்.ரசிகர்.
மூத்து முதிர்ந்த குள்ள உருவம். உதடுகளும் கைகளும் நடுங்க ஈனஸ்வரத்தில் புல்லாங்குழல் வாசிப்பார்.அப்புறம் ஓர் ஓரமாய் கண்ணுக்குத் தெரியாவண்ணம் குறுக்கிக் கொண்டு உட்கார்ந்திருப்பார்.

கோடை விடுமுறையில் தாத்தா எங்களை 10-15 நாட்கள் சுற்றுலா அழைத்துச் செல்லும்போது பையன்கள் சுழற்சி முறையில் உடன்வருவார்கள். அவர்களும் சிறுவர்கள்தான் என்பது அப்போது சிறுவர்களாக இருந்த எங்களுக்கு உறைக்காது.

திருச்செந்தூரில் கோயில் அருகிருந்த கடைகளில் நங்கள் ஆரவாரமாகப் பொருட்களை அள்ளிக்கொண்டிருந்த போது ஓரமாக ஒதுங்கி நின்றிருந்த தாமோதரனிடம் எங்கள் பெரியம்மாவோ அம்மாவோ
யாரோ ஒருவர் "உனக்கு என்னடா வேணும் " என்று வற்புறுத்திக் கேட்ட பிறகு, தலையைக் குனிந்து கொண்டே
நாணிக்கோணி "மோதிரம்" என்று கேட்டு ஒரு பிளாஸ்டிக் மோதிரத்தை
ஆசையாகக் கேட்டு வாங்கிக் கொண்டது ஞாபகமிருக்கிறது.

ஒருநாள் திருக்கடையூரில் எங்கள் வீடு அல்லோலகல்லோலப்பட்டது.
பாடசாலைப் பசங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்களி ல்
பெரும்பாலோர் அழுது கொண்டிருந்தனர். ரத்தினம் பிள்ளை குடும்பத்தினர் பற்றி,ஆனைகுளத்தின் படித்துறைகளில் பையன்கள் கேலிச்சித்திரம் வரைந்திருந்தனர்.
ரத்தினம் பிள்ளை அன்று ஆடிய ருத்திரதாண்டவம்,பசங்களுக்கு விழுந்த
அடி,"அய்யய்யோ கும்பிடறேஞ் சாமி"என்ற தாமோதரனின் அலறல்,
இவையெல்லாம் இன்னும் காதுகளில்,ஒலிக்கிறது.
வாத்தியார் சொல்லித் தந்த தேவாரப் படல்களைப் பசங்கள்பாடக் கேட்டதுண்டு. , அவர் குடும்பத்தைப்பார்த்து
பசங்கள் தாமாகவே வரையக் கற்றுக்கொண்ட கேலிச்சித்திரங்களை அப்போது பார்க்க முடியவில்லை.ஆனைகுளமும் இப்போது வறண்டிருக்கும்.
அடுத்த முறை திருக்கடையூர் போகும் போது அதன் சுவர்களையாவது பார்த்து விட்டு வர வேண்டும்.

திருக்கடையூர்-"சாப்பிட வாங்க"

சென்னையில் உள்ள உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கர் ஒருமுறை என்னிடம்,கோவைக்காரர்களுடன் சாப்பிட உட்காரும்போது ஒரு சிரமம்.வேண்டாம் வேண்டாம் என்றாலும் வற்புறுத்தித் திணிக்கிற "அக்ரஸிவ் ஹாஸ்பிடாலிடி"
உண்டு என்றார். அந்த வார்த்தை எனக்குப் புதுசு.ஆனால்,திருக்கடையூரில்எங்கள் தாத்தா வீட்டில் இந்த விதமான விருந்தோம்பலை எல்லா நாட்களும் பார்க்கலாம்.விருந்தாளிகள் சாப்பிட மறுக்கும் போது,விருந்தோம்பலை ஒரு நிகழ்த்துகலையாகவும் வன்முறையாகவும் நிகழ்த்துவார் எங்கள் தாத்தா, கனகசபைப்பிள்ளை.
எங்கள் தாத்தா கனகசபைபிள்ளை திருக்கடவூரில் பெரிய நிலச்சுவான்தார். அபிராமி அம்பாள் ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர் குடும்பம் எங்களுடையது .350 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் முன்னோரில் ஒருவரான பிச்சைப்பிள்ளை என்பவர்,(அபிராமி பட்டருக்கு சமகாலத்தவராக இருக்கக் கூடும்)அபிராமி அம்பாள் அலயத்திற்கு 1500 ஏக்கர் நிலம் எழுதி வைக்க அது பிச்சைக்கட்டளை என்ற அறக்கட்டளையாக உருவெடுத்தது அதிலிருந்து எங்கள் குடும்பத்தினரே பரம்பரை அறங்காவலர்கள்.அந்த வரிசையில் எங்கள் தாத்தாவின் காலம் பொற்காலம். எல்லா மிராசுதார்களையும் போலவேகாங்கிரஸ் தலைவர்களுடனும் திராவிட இயக்கத் தலைவர்களுடனும் சமமாகப் பழகிய சாமர்த்தியசாலி. பள்ளி,கல்லூரி,மருத்துவமனை என்று பல தர்ம காரியங்கள் செய்தவர்.அவர் வீட்டில் தினமும் நூறு பேருக்காகவது உணவு தயாராகும்.அடையாக் கதவு.அணையா அடுப்பு.


அன்றாடம் காலையில் எட்டு மணிக்கெல்லாம் முழுச்சாப்பாடு சாப்பிடும் பழக்கம் அவருக்கு.
அதற்கு முன் அவர் குளித்துத் தயாராகி பூசை நிகழ்த்தி பாராயணம் செய்யும் வைபவம் பரபரப்பாக நடக்கும்.ஓர் ஆணின் குளியல் வேடிக்கை பார்க்கப்பட்டதென்றாலது அவருடைய குளியல்தான் என்று நினைக்கிறேன்.பெரிய ரெட்டியார் என்ற பணியாளர் கொதிக்கக் கொதிக்க வெந்நீர்த் தவலையைத் தூக்கிக் கொண்டு குளியலறைக்குள் நுழைவார்.தண்ணீரை விளாவி வைத்து விட்டு முதற்கட்டுக்குத் தகவல் அனுப்புவார்.அதற்குள் குளியலறையில்
மைசூர் சாண்டல் சோப் மற்றும் வாசனாதி திரவியங்கள் ,சிகைக்காய் பொடி முதலியன தயார் செய்யப்படும். சொக்கலிங்கம்,மாரிமுத்து,சுந்தரராசு,தம்பான் ஆகிய நான்கு பணியாட்கள் சூழ தாத்தா குளியலறையில் பிரவேசிப்பார்.
வேட்டி களைந்து கோவணத்துடன் நிற்கும் அவரிடம் சுந்தரராசு குவளையில் தண்ணீரை நீட்ட,சூடு போதுமா என்று தொட்டுப் பார்த்து தாத்தா தலையசைத்ததும் முழங்கால் அளவில் ஆரம்பித்து தண்ணீரை மெல்ல மெல்ல மேலுக்கு வார்ப்பார் சுந்தரராசு.
சொக்கலிங்கமும் மாரிமுத்துவும் பரபரவென்று கைகால்களைத் தேய்த்துவிட்டு சோப்புப் போடத் தொடங்கும் போது தம்பான் ஒரு காரியம் செய்வார்.பெரிய சைஸ் பனை ஓலை விசிறியை எடுத்து விசிறத் தொடங்குவார்!!
துவட்டி விடுவது, கோவணம் களைந்து மாற்றுவது, சலவை வேட்டியை உதறிக்கட்டுவது போன்ற வேலைகளையும் இந்த நால்வரணி தான் செய்யும்.
அதன்பிறகு அவர் வருகிற இடம் எங்கள் ஆயியின் சாம்ராஜ்யமான இரண்டாம் கட்டு.அங்கே அமைந்திருந்த விஸ்தாரமான ஊஞ்சலில் அவர் வந்து அமர்கிற போது ஏற்கெனவே தயாராக இருக்கும் தவிசுப்பிள்ளை ,எங்கள் ஆயி,
பெரிய தம்பி என்ற பணியாளர், சின்ன ரெட்டியார் என்ற பணியாளர் அகியோருடன் சுந்தரராசுவும் மாரிமுத்துவும் சேர்ந்து கொள்வார்கள்.அவர் ஊஞ்சலில் வந்தமரும் முதல் சில நிமிஷங்கள்
அவரது பொன்னிற மேனியில் வாசனை பிடிக்க போட்டி போடும் பேரப்பிள்ளைகளான எங்களுக்கானவை.எங்களை நாசூக்காக விலக்கிவிட்டுஅவர் நிமிர்வதற்கும், பெரிய அளவிலான முகம் பார்க்கும் கண்ணாடியை பெரியதம்பி அவர் முன் நீட்டவும் சரியாக இருக்கும்.பொதுவாக இந்த நேரங்களில் அதிகமாகப் பேச மாட்டார் தாத்தா.வலது கையை நீட்ட ,சின்ன ரெட்டியார் தந்தச் சீப்பை அதிலே வைப்பார். தன் தலையில் ஒரு வகிடு எடுத்து விட்டு சீப்பைத் திருப்பித் தந்து விடுவார். தாத்தாவின் தலையில் இருக்கும் எழுபது எண்பது முடிகளையும் சீவிவிடும் "தலையாய' கடமை
சின்ன ரெட்டியாரைச் சேர்ந்தது.அதன்பின் தண்ணீரில் தயாராகக் குழைத்து வைக்கப்பட்டிருக்கும் திருநீறை எடுத்து நெற்றியில், மார்பில்,தோள்பட்டைகளில் முன்னங்கைகளில் மூன்று பட்டைகளாகப் பூசிக் கொள்வார்.அப்போது அவர் உதடுகள் எதையோ முணுமுணுக்கும்.
அதன்பின் ஆயியின் கைகளில் இருக்கும் காபி வட்டா டம்ளர் அவர் கைக்குப் போகும்.காபியை மெல்லப் பருகிக் கொண்டே எங்களிடம் பேச்சுக் கொடுப்பார் தாத்தா. அடுத்தது, தவிசுப்பிள்ளை என அழைக்கப்படும் சமையற்காரரான சண்முகம் பிள்ளையின் "டர்ன்'.பொடி பொடியாய் நறுக்கப்பட்ட,நெய்யில் வறுக்கப்பட்ட சின்ன வெங்காயங்களை கிண்ணம் நிறையப் போட்டு,ஸ்பூனுடன் நீட்டுவார்பிறகு காலை வேளைக்கான மாத்திரைகளைப் பெரியதம்பி நீட்டுவார். விழுங்கிவிட்டு,பூஜை அறைக்குப் பக்கத்திலுள்ள பாராயண அறைக்குக் கிளம்புவார் தாத்தா.அங்கே அவர் பாராயணம் செய்யும் தேவாரம் திருவாசகம்,அபிராமி அந்தாதி உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள்,அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

தாத்தாவின் பணியாளர்களுக்கு சீருடை கிடையாது.ஆனால் ஆடைகளை வைத்தே அவர்களின் அதிகார எல்லைகளைத் தெரிந்து கொள்ளலாம்.சுந்தரராசு,சொக்கலிங்கம்,தம்பான்,மாரிமுத்து போன்ற கடைநிலைப் பணியாளர்களுக்கு வேட்டி,தலையில் முண்டாசு மட்டும்.சின்ன ரெட்டியார்,பெரியதம்பி-மற்றும் இந்தக் கட்டுரையில்அறிமுகமாகாத ராமதாஸ் கோவிந்தராஜு போன்றவர்களுக்கு
வேட்டி ,முண்டா பனியன் .மேனேஜர் தாத்தா,ஆஸ்தான புலவரான நாராயணசாமி செட்டியார், அவரது மருமகனும், செட்டியார் மாப்பிள்ளை என்றழைக்கப்படுபவருமான கலியபெருமாள் ஆகியோருக்கு சட்டை அணியும் அதிகாரம் உண்டு.

தவிசுப்பிள்ளையான சண்முகம்பிள்ளைக்கு, வேட்டி,பனியன்,உபரியாக-சமையற்காரர்களின் டிரேட்மார்க்கான அழுக்குத் துண்டு.ஆள் குள்ளம் .கறுப்பு.வழுக்கைத் தலை. கொஞ்ச காலம் தாடி வைத்திருந்ததாய் நினைவு.வாயில் புகையிலை எப்போதும் இருப்பதால் அண்ணாந்துதான் பேசுவார்.

ஒருநாளைக்கு ஐம்பது முதல் ஐந்நூறு பேர் வரை சாப்பிடுவார்கள் என்பதால் குறிப்பிட்ட திட்டமோ குறைந்தபட்ச பொதுத் திட்டமோ
இல்லாமல் மன்மோகன்சிங் பழைய அமைச்சரவை போல் சமையல் கடமைகள் இருக்கும்.

காலையில் தாத்தாவின் சபை கூடும். கடிதங்கள் படிப்பது, முக்கிய முடிவுகள் எடுப்பதுஎன்று நிர்வாக வேலைகள் நடக்கும். அதன்பிறகு பதினொன்றரை மணிக்கு மேல்தான் பார்வையாளர் நேரம். பஞ்சாயத்து தொடங்கி, படிப்புக்கோ மருத்துவத்துக்கோ பணம் கேட்டு வருபவர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள், பிரபலங்கள் என்று பலரும் இந்தப் பட்டியலில் அடங்குவர்.தாத்தாவின் நிர்வாகசபை நடக்கிர போதே, சண்முகம் பிள்ளை
பார்வையாளர்கள் எவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள் என்று பார்வையிட்டு,உத்தேசமாய் சமைக்கத் தொடங்குவார்.
விருந்தினர்களிடம் தாத்தா பேசத் தொடங்குவார்.இப்போது, திண்டுகள் நிறைந்த கட்டிலில் சாய்ந்து கொண்டிருப்பார் அவர். எதிரே இருப்பவர் உள்ளூர்த் தலையாரியா உயர்நீதிமன்ற நீதிபதியா என்று கவலைப்படாமல் நாங்கள் அவரின் பொன்னார் மேனியில் ஏறி விளையாடிக் கொண்டிருப்போம். தன் பேரப்பிள்ளைகளை வந்திருப்பவர்களிடம்,கர்ம சிரத்தையாய் அறிமுகம் செய்வார் அவர். எங்கள் எல்லோரையும் அறிமுகப்படுத்த தாத்தாவிடம் இருந்த பொதுச்சொல் ஒன்றுண்டு."வெரி பிரைட் பாய்" என்பதுதான் அது.
வந்தவர்களுடன் உரையாடல் முடிந்ததும் "சாப்பிட்டுப் போங்க" என்பார் தாத்தா. வந்தவர்கள் மறுத்தால் அவர் முகம் மாறும்.
"எல்லாம் தயாரா இருக்கு ! சாப்பிடலாமே!" என்பார். வந்திருப்பவர்கள் தயங்கினாலோ மறுத்தாலோ "நல்லாருக்கு!" என்றபடி, "ஷண்முகம் பிள்ளை" என்று குரல் கொடுப்பார்."எஜமான்"
என்று வந்து நிற்கும் சமையற்காரரிடம் "இவங்க சாப்பிடலையாம்!" என்பார். அந்தக் குரலில் ஒரு பண்ணையாரின் கம்பீரம் இருக்காது. புகார் சொல்லும் பன்னிரண்டு வயதுச் சிறுவனின் ஆற்றாமை தொனிக்கும்.அவரினும் பதறும் சண்முகம்பிள்ளை, "இலை போட்டாச்சுங்கய்யா! சாப்பிட வாங்க!" என்று விருந்தினரிடம் இறைஞ்சுவார். மீண்டும் விருந்தினர்கள் மறுத்தால் நியாயமாக இந்த நடகம் இங்கே முடிய வேண்டும். மோர்,இளநீர் என்று சமரசமாகப் போய்விடலாம்தான்.ஆனால்
முடியாது.

தாத்தாவின் முகத்தைப் பார்ப்பார்சண்முகம் பிள்ளை. ஒரு சிறு தலையசைப்பு. அவ்வளவுதான். இடுப்பில் இருக்கும் துண்டை இறுக்கிக் கட்டிக் கொண்டு "அய்யா! நீங்க அவசியம் சாப்பிட்டுத்தான் போகணும் என்று, விருந்தினர் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுவார் சண்முகம் பிள்ளை.விருந்தினர்கள் பதறிவிடுவார்கள். சில நிமிடங்களிலேயே அவர்கள் இலைக்கு முன்னால் அமர்ந்திருப்பார்கள்.சாப்பாட்டில் காரம் இருக்காது.ஆனால் அவர்கள் கண்கள் கலங்கியிருக்கும். சற்று முன்னர் நடந்த சம்பவத்தின் சுவடே இல்லாமல் பரிமாறிக் கொண்டிருப்பார் சண்முகம் பிள்ளை.எய்யப்பட்ட அம்புக்கு ஏது உணர்ச்சிகள்....

Monday, January 18, 2010

அந்த சதுரங்கம் முடிந்துவிட்டது
அவர்களின் பக்கம் விடிந்துவிட்டது

வெட்டுப்பட்ட காய்கள்,வழியில்
தட்டுப்பட்டதால் இந்தத் தகவல் தெரிந்தது

குறுக்கும் மறுக்குமாய் குதிரைகள்திரிந்தன
மதங்கொண்ட யானைகள் மிதித்து எறிந்தன
கட்ட ஒழுங்குகள் காப்பாற்றப்படாததால்
சட்ட ஒழுங்கு சிதைந்து போனது

அந்த சதுரங்கம் முடிந்துவிட்டது
அவர்களின் பக்கம் விடிந்துவிட்டது

தளபதி ராஜா ராணிக் காய்களின்
தலைகளைப் பார்த்ததாய் தகவல் கிடைத்தது
பலகை முழுவதும் படர்ந்த குருதியை
உலக நாசிகள் முகர்ந்துபார்த்தன

முன்படை வெட்ட முனைப்புடன் சென்றவர்
தன்படை வெட்டால் தரையில் விழுந்தனர்
பின்படை ஒன்று பகடைகள் உருட்டி
நன்படை சாய்த்ததாய் நம்பகத் தகவல்
அந்த சதுரங்கம் முடிந்துவிட்டது
அவர்களின் பக்கம் விடிந்துவிட்டது