Tuesday, September 30, 2014

தேவியர் மூவர்

மலையரசி மாதங்கி மாதரசி அருளாலே
மலைநாடு தனில்வந்து சேர்ந்தேன்
கலையரசி வெண்கமலக் கவியரசி திருநாளில்
கைகூப்பி அவள்பாதம் வீழ்ந்தேன்
உலையரிசி தனில்தொடங்கி உயர்வரசு வரைவழங்கும்
திருவரசி பதமலரில் தோய்ந்தேன்
நிலையரசு தேவியரின் அருளரசு என்பதனால்
நிமலையரின் கருணைகொண்டு வாழ்ந்தேன்

மூன்றுபெரும் அன்னையரும் மோகனமாய் புன்னகைக்க
மூளும்வினை ஓடிவிடப் பார்த்தேன்
தோன்றிவரும் உத்தியிலே தொழிற்படுமென் புத்தியிலே
தோகையரின் உந்துதலைப் பார்த்தேன்
ஆன்றவரும் அறிஞர்களும் அன்பர்களும் பாராட்டும்
அன்பினிலும் தாயரையே பார்த்தேன்
ஏனெனக்கு இவ்வளவு ஏற்றமென எண்ணுகையில்
எதிலுமவர் பெருங்கருணை பார்த்தேன்

மாயமிந்த வாழ்க்கையென மனம்சலிக்கும் வேளையிலே
மீட்டுகிற வீணையொலி கேட்கும்
தோயும்புகழ் செல்வமெலாம் தேர்கையிலே திருமகளின்
தூயவிழி பாதையினைக் காட்டும்
காயமிதன் உள்ளொளிரும் கண்காணா உயிருக்கும்
கனியமுதை சக்திகரம் ஊட்டும்
தாயரிந்த மூவரென்ற தூயவொரு நிம்மதியில்
தாவும்மனம் நூறுவித்தை காட்டும்
 


Monday, September 29, 2014

அபிராமி நீயெனது பக்கம்

 
 
 ஒருநூறு கதைபேசும் கண்கள்-உன்
  ஒளியிதழில் உருவாகும் பண்கள்
கருவாகும் முன்பேநான் கண்டேன்-உனைக்
காணத்தான் பலபிறவி கொண்டேன்

செங்கமலம் போல்நான்கு கரங்கள்-அவை
சிந்துகிற எல்லாமே வரங்கள்
தங்கமுகம் பார்த்தாலே போதும்-எனத்
தவமிருக்கும் ஒருநான்கு வேதம்


கடவூரின் கோவிலிலே நின்றாய்-அமுத
கடேசனுள்ளம் கண்வீச்சில் வென்றாய்
உடலூரில் உயிர்தீபம் தந்தாய்-அதன்
ஒளிபெருக என்னுள்ளே வந்தாய்

தபவாணர் தேடுகிற பதங்கள் -என்
துயர்தீர்த்து செய்கின்ற இதங்கள்
அபிராமி நீயெனது பக்கம்-இனி
அண்டாது ஒருபோதும் துக்கம்

கண்சிமிட்டி நீபார்க்கும் பார்வை-அதன்
கனமௌனம் இசைகூட்டும் கோர்வை
விண்முழுதும் நீதெரியும் அழகு-நீ
வீசிவிட்ட தாடங்கமே நிலவு

வரம்கேட்ட மறுநொடியே கொடுப்பாய்-நீ
வழியெங்கும் துணையாக இருப்பாய்
 தரம்கெட்ட என்னைப்போய் வளர்ப்பாய்-கொஞ்சம்
தடுமாறும் படிசெய்து சிரிப்பாய்

தள்ளாடி விழப்போகும் மகவு-தரை
தொடும்முன்னே அணைப்பதுந்தன் கனிவு
உள்ளோடி நீயிருக்கும் பொழுது-உண்டோ
உலகத்தில் திறக்காத கதவு?? 

வியாச மனம்-8 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)


படிக்கும் போதெல்லாம் சற்றே நெருடக்கூடிய திருக்குறள் ஒன்றுண்டு."நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்"என்பதே அது.பிறருக்கு துன்பம் செய்தவர்களே நோய்வாய்ப்படுகிறார்கள் என்பது உண்மையாகவே இருக்கட்டும்.அதற்காக,ஏற்கெனவே நோயில் நொந்து நொம்பலப்படுபவனை இப்படி மறுபடியும் குத்தலாமா என்று திருவள்ளுவரிடம் கேட்கத் தோன்றும்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒருவனை திருவள்ளுவர் பார்க்கப் போனால் அவன் என்ன கதிக்கு ஆளாவான் என்பதை யோசித்துப் பாருங்கள்.

ஹிரோஷிமா குண்டு வெடிப்பு பற்றிய ஓர் ஆவணப்படமுண்டு.உடலெல்லாம் காயமாய் துவண்டு கிடக்கும் சிறுவன் ஒருவனை மருத்துவமனைக்குத் தூக்கி வருவார்கள்.ஏற்கெனவே காயங்களால் துடிக்கும் அந்தச் சிறுவனுக்கு ஊசி போட அவன் முகம் கூடுதல் வலியில் சுருங்க ஏங்கியழுவான். அப்படி ஊசி போடும் மருத்துவராக திருவள்ளுவர் எனக்குத் தெரிகிறார்.ஆம்...அந்தக் குறள் நலன் பயக்கும் ஊசிதான்.

 தான் யாருக்கோ துன்பம் செய்ததால்தான் தனக்கு துன்பம் வந்திருக்கிறது என்னும் எண்ணம் ஏற்பட்டு விட்டால் யார்மீதும் வருத்தம் வராது. அந்த நோயைப் பொறுத்துக் கொள்வதும்,பிறருக்கு துன்பம் செய்யக்கூடாது என்னும் எண்ணமும் ஒரு தவமாகவே மாறிவிடும்.

"உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
  அற்றே தவத்திற் குரு."
என்னும் நிலையை எளிதில் எட்டிவிடலாம்.
1996ல் நான் முதன்முதலாக ஈஷா யோக மையத்தின் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்தேன்.அந்த வகுப்புகளில்  போதனையாக மட்டுமின்றி, வாழ்க்கை அனுபவமாக அவர்கள் நம் எண்ணப் போக்குகளில் நுழைக்கும் அம்சங்களில் ஒன்று, "ஏற்கும் தன்மை".ஏற்கும் தன்மையில் இருப்பவனுக்கு அடிபட்டால் வலிக்காதா என்ற கேள்விக்கு சத்குரு அன்று சொன்னது இன்றும் மனதில் ஆழப் பதிந்திருக்கிறது."வலி இருக்கும்,துன்பம் இருக்காது". There will be pain,but no suffering.

தான் ஒரு நோயாளி என்பதை பிரக்ஞைபூர்வமாக ஏற்றுக் கொண்டவனாக விசித்திர வீரியனை முதற்கனல் காட்டுகிறது.
நூற்றியோரு மருத்துவர்களின் பாதுகாப்பில் ஆதுரச் சாலையில் பன்னிரண்டு ஆண்டுகளாக இருக்கிறான்  விசித்திர  வீரியன்.
அவனுடைய வீரியத்தைப் பெருக்கி எப்படியேனும் ஒரு குழந்தையைத் தரும் தகுதியை உருவாக்க வேண்டும் என்பதற்காக தேசத்தின் பல பகுதிகளிலிருந்தும் வாஜி கல்ப நிபுணர்கள் வந்து கொண்டேயிருக்க,அவர்களின் அத்தனை பரிசோதனை முயற்சிகளுக்கும் ஆளான விசித்திர வீரியனின் தோற்றம் பற்றிய வர்ணனை பதட்டமூட்டுவதாக இருக்கிறது.


"விசித்திரவீரியன்,சுண்ணாம்பு போல வெளுத்த உடலும்,மெலிந்து நடுங்கும் உதடுகளும்,மஞ்சள் படர்ந்த கண்களும்,கொண்டிருந்தான்.அவன் உடலெங்கும் நரம்புகள் நீலநிற சர்ப்பக் குழவிகள் போலச் சுற்றிப் படர்ந்து,இதயத்துடிப்புக்கு ஏற்ப அதிர்ந்து கொண்டிருந்தன.மெலிந்த கைகால்களில் மூட்டுகள் மட்டும் பெரிதாக வீங்கியிருக்க,தசைகள் வற்றி எலும்புகளில் ஒட்டியிருந்தன.இள வயதில் வந்து வந்து சென்று கொண்டிருந்த மூட்டு வீக்கத்தால் அவன் வெளியே நடமாடி அறியாதவனாக இருந்தான்.ஒவ்வொரு நாளும் பிரம்ம முகூர்த்தத்திலேயே அவன் மருத்துவர்களால் எழுப்பப்பட்டு,பலவகையான மருத்துவ முறைகளுக்கு ஆளாக்கப்பட்டான்.இளமைமுதல் அவன் அறிந்ததெல்லாம் மருத்துவம் மட்டுமே."(ப-128)


நாகபுட மருத்துவத்தில் அவனின் உயிர்வேகம் அதிகரித்ததறிந்து வேசர நாட்டு மருத்துவருக்கு பொன்னும் பாராட்டும்  சத்தியவதி  தந்தனுப்ப,விசித்திர வீரியன் கிடந்த கிடப்பை ஜெயமோகன் இப்படி எழுதுகிறார்.

"சித்திரமெத்தையில் சாய்ந்து நரம்புகளில் விஷம் ஓடும் குளம்படியைக் கேட்டபடி அரைக்கண்மூடிக் கிடந்த விசித்திர வீரியன்".(ப-129)


அவனுக்குத் துணையாக இருக்கும் ஸ்தானிகரிடம்,மருத்துவத்தின் ஒரு பகுதியாக நாகசூதனைப் பாட அனுமதிக்கும்படி கேட்கிறார் வேசர நாட்டு மருத்துவர்.அதன் மூலம் இச்சா சக்தி பெருகும் என்றவர் சொல்ல,ஸ்தானிகர்"அவர் எந்தக் கதைக்கும் காதுள்ளவராகவே இதுநாள்வரை இருந்திருக்கிறார் என்றார்.விசித்திர வீரியன் "காது மட்டும்தான் உழைப்பில்லாமல் பணியாற்றும் உறுப்பு ஸ்தானகரே"என்றான். ஸ்தானகர்,"அதனால்தான் இச்சாசக்தியான நாகங்களுக்குக் காதுகள் இல்லை போலும்"என்றார். விசித்திர வீரியன் உரக்கச் சிரித்தான்.(ப-129)

என் நினைவு சரியாக இருக்குமேயானால்,விசித்திர வீரியன் முதற்கனலில் பேசுகிற முதல் வாசகமே இதுதான்.கடும் நோய்நிலையை வர்ணித்துவிட்டு நோயாளியை சிரிப்பும் கும்மாளமும் மிக்கவனாய் அறிமுகம் செய்கையில் வாசகனுக்குக் கண்கள் மலர்கின்றன.


நாகவிஷம் இச்சா சக்தியை தூண்டக் கூடியதாய் ஏன் அறியப்படுகிறது  என்பதும் முதற்கனலில் விளக்கப்பட்டுள்ளது.ஆலகாலம் உண்ட சிவன், வாசுகியை ஆசீர்வதித்து அனுப்பிவைக்க நாகலோகத்திற்கு வாசுகி திரும்புகையில் கொண்டாட்டம் நிகழ்கிறது.


பன்னிரண்டாயிரம் கோடி நாகங்கள் பிணைந்து நெளிந்தாடி நடனமிட,அந்த அசைவில் பாதாளமே குலுங்கியது.பாதாளம் மீதமர்ந்த பூமி அசைந்தது.நாகங்களின் மதநீரின் மணம் எழுந்தபோது,மண்ணின் மீது நூறாயிரம் காடுகளின் அத்தனை மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்கின.மரங்களுக்குள் அரக்காகவும்,மலர்களுக்குள் தேனாகவும்,கனிகளின் சாறாகவும் நாகங்களின் மதநீரே ஆனது.

நாகமதத்தின் வாசனையை உணர்ந்து மண்மீதிருந்த அத்தனை ஆண்களும் காமம் கொண்டனர்.அத்தனை பெண்களும் நாணம் கொண்டனர்.யானைகள் துதிக்கை பிணைத்தன்.மான்கள் கொம்புகள் பூட்டின.நாரைகள் கழுத்துகள் பின்னின.தேனீக்கள் சிறகுகளால் இணைந்தன. புழுக்கள் ஒன்றை ஒன்று உண்டன."
(ப-133)

ஜெயமோகனை பலரும் ராட்சசன் என்று சொல்வதற்கான காரணங்களை இந்தப் பத்தி நியாயப்படுத்துகிறது.

விசித்திரவீரியனின் ஆன்மாவிலேயே உற்சாகம் படிந்திருப்பதை நாம் உணர முடிகிறது. ஸ்தானிகரிடம் விசித்திரவீரன் மனம் திறக்கும் இடம், அவனை இன்னும் நெருக்கமாய் நாம் உணர வழி செய்கிறது.

"ஸ்தானிகரே! இத்தனை நாளில் ஒருகணம் கூட நான் மரணத்தை அஞ்சியதில்லை என்றறிவீர்களா" என்றான்."எனக்கு நான்கு வயதாக இருந்தபோது,ஒருநாள் காய்ச்சலில் படுக்கையில் இருந்தேன்.என்னைத் தொட்டுப் பார்த்த அரண்மனை மருத்துவர்,அந்திக்குள் நான் உயிர்துறப்பது உறுதி என்று சொன்னார்.நான் கண்களை மூடிக் கொண்டேன்.அந்தி வர எவ்வளவு நேரமிருக்கிறது என்று தெரிந்திருக்கவில்லை.ஆகவே ஒவ்வொரு கணமாக நான் செலவிடத் தொடங்கினேன்,என் அன்னையை எண்ணிக் கொண்டேன்.அவள் வலுவான கரங்களையும் விரிந்த விழிகளையும் கண்முன்னால்  கண்டேன்.என் தமையனின் அழகிய முகத்தையும் இறுகிய சிலையுடலையும் அணு அணுவாகப் பார்த்தேன்.நான் உண்ட இனிய உணவுகளை,பார்த்த அழகிய மலர்களை,கேட்ட இனிய இசையை என ஒவ்வொன்றாக எண்ணிக் கொன்டேயிருந்தேன்.

ஸ்தானிகரே, முடிவேயில்லாமல் வந்து கொண்டிருந்தன நினைவுகள். எவ்வளவு அதிகமாக வாழ்ந்துவிட்டேன் என்று பிரமித்துப் போய்க் கிடந்தேன்.....
அன்று தூங்கிப் போனேன்.விழித்தபோதும் நான் இருந்தேன்.என்மீது குனிந்த அன்னையிடம்,"அன்னையே !நான் சாகவில்லையா?"என்றேன்."விசித்திரவீரியா!நீ இருக்கிறாய்"என்றாள்.அந்த வரி என் ஆப்த வாக்கியமானது.நானறிந்த ஞானமெல்லாம் அதன்மேல் கனிந்ததுதான்.நான் இருக்கிறேன்.அதைப் பலகோடி முறை எனக்குள் சொல்லிக் கொண்டேன்.இங்கே இதோ நானிருக்கிறேன்.அவ்வரியிலிருந்து ஒவ்வொரு கணமும் நான் முடிவில்லாமல் விரிகிறேன்...

ஸ்தானிகர் அவன் முகத்தில் விரிந்த புன்னகையைப் பார்த்தார்.அது காலத்துயர் அணுகாத யட்சர்களின் புன்னகை".(ப-229-230)

நோயின் மீதான சலிப்பை விடவும் நோயையே தன் வாழ்வின் ஆதாரமாக்கிக் கொண்ட விசித்திர வீரியன் உண்மையிலேயே விசித்திரமான வீரியன்தான். இந்த உலகின்மீது அபரிமிதமான நம்பிக்கையை நன்றியுணர்வை தன் நோயிலிருந்தே பெறுபவன் ஒருவகையில் ஞானிதான்.

அம்பிகையிடம் பேசும்போது விசித்திரவீரியன் ஒரு கட்டத்தில் சொல்லும் வார்த்தைகள், அவன் மீதான எல்லையற்ற வாஞ்சையை ஏற்படுத்துகின்றன.
"சிறு நாய்க்குட்டிகள் கண்திறந்த மறுநாளே மனிதர்களை நம்பிப் பின்னால் வெல்வதுபோல நான் உலகை நம்புகிறேன். இவ்வுலகிலுள்ள அத்தனை பேரும் என்னைவிட வலிமையானவர்கள்.வலிமையானவர்கள் ஒருபோதும் பலவீனர்களைத் துன்புறுத்துவதில்லை.எல்லா மனிதர்களும் நெஞ்சுக்குள் ஒரு சிறு முலையையாவது வைத்திருக்கிறார்கள்"(ப-243,244)


அதனால்தான் முதலில் விசித்திர வீரியனை மஞ்சத்தில்முதன் முதலாக சந்திக்கும் தருணத்தில் காவன் தன்னைத் தீண்டக் கூடாது என்றே எண்ணும் அம்பிகை சிறிது நேர உரையாடலிலேயே அவனை அள்ளி அணைத்து இறுக்கிக் கொள்கிறாள்.அவனை கைக்குழந்தையாக்கி தன் கருவறையில் செலுத்திக் கொள்ள ஏங்குகிறாள்.(ப-242).

ஓர் ஆணுக்குரிய அலைபாய்தல் இல்லாத இயல்பான கண்கள் விசித்திரவீரியனுக்கு இருப்பதாய் தன் நெடுநேரப் பேச்சுக்குப் பின் அம்பிகைசொல்கிறாள்.


"நான் ஏன் இவற்றை உங்களிடம் சொல்கிறேன் தெரியுமா?என்று அம்பிகை கேட்டாள்."சொல்"என்றான் விசித்திரவீரியன்."உங்கள் விழிகள்.அவற்றில் ஆணே இல்லை.".
விசித்திரவீரியன் சிரித்து,"அதைத்தான் மருத்துவர்கள்தேடிக் கொண்டிருந்தார்கள்"என்றான். (ப-247)
துளியும் தன்னகங்காரம் இல்லாதவனுக்குத்தான் தன்னைத்தானே இப்படி கேலி செய்து கொள்வது சாத்தியம்.


"ஆண்களின் கண்களில் உள்ளவை இருவகை உணர்வுகள்.ஒன்று வேட்கை.எப்போதும் எரியும் சுவாலை.அதன் சுவாலை விலகினால் தெரிவது .புறக்கணிப்பின் ஏளனம்.அதையே   ஆண்மை என்கிறார்கள்.அவை உங்கள் கண்களில் இல்லை.இவை என் அன்னையின் கண்கள் போலிருக்கின்றன.".(ப-248)   என்கிறாள் அம்பிகை.

 அப்படி வேட்கை தெரியும் கண்களுள்ளவர்களில் பீஷ்மரும் விதிவிலக்கில்லை என்று சொல்லும்போதுதான் அம்பை கவனித்ததை   அவளும் கவனித்திருப்பது தெரிகிறது 



கருத்தரிக்க உகந்த நாளென்று கருநிலவு நாளில் அம்பிகை விசித்திரவீரியனின் முதலிரவை சத்யவதி  ஏற்பாடு செய்திருந்தும் உரையாடலிலேயே அந்த இரவு கழிகிறது.அதைத் தெரிந்து கொள்ளும் சத்யவதி  சீற்றத்துடன் விசித்திர வீரியனிடம் பேச அங்கே அவன் சொல்லும் பதில் மிக முக்கியமானது..


"சத்யவதி சீறும் முகத்துடன்,'உனக்கு வெட்கமாக இல்லையா?நீ ஓர் ஆணென ஒரு கணமும் உணர்ந்ததில்லையா?'என்றாள்.விசித்திர வீரியன் விழிகளை அவளை நோக்கித் திருப்பி,"நான் ஆணென்று உணராத ஒருகணமும் இல்லை அன்னையே"என்றான். "சொல்லப்போனால் இவ்வுலகின் ஒரே ஆண் என்றும் உணர்ந்திருக்கிறேன்" (ப-250)

இந்தச் சொற்கள் எவ்வளவு உள்ளர்த்தம் மிகுந்தவை என்பதை சத்யவதி விசித்திரவீரியனின் மரணத்தின்பின்னால் உணர்ந்து கொள்வதோடு அதைபீஷ்மனிடம் பகிர்ந்து கொள்ளவும் செய்கிறாள்.
"அந்தக் காசிநாட்டு இளவரசி அழுததைப் பார்த்தேன்.அக்கணமே நெஞ்சு திறந்து இறந்துவிடுபவள்போல..அப்போதுதான் என் மனம் நிறைந்தது.ஒரு பெண்ணின் மனதை நிறைத்துவிட்டுச் செல்வதுதான் ஆண்மகன் ஒருவன் மண்ணில் வாழ்ந்தமைக்கான அடையாளம்.(ப-285)

"ஒரு பெண்ணை யாரோ ஓர் ஆண்தான் முழுப்பெண்ணாக்குகிறான் என்பது தெரியுமா உனக்கு?அப்படிப்பட்ட ஆணைச் சந்திப்பவளே நல்லூழ் கொண்டவள்..ஆனால் ஒன்று சொல்கிறேன்.அந்த ஆணைத் தன் மகனாகக் கொண்டவள்,பெரும்பேறு பெற்றவள்.அவள் நான்".(ப-285-286)

தன்னாலேயே பிரம்மச்சர்ய விரதம் மேற்கொண்ட பீஷ்மனிடம் ஒரு பெண்ணை முழுமையாக்குபவன்தான் ஆணென்று சத்யவதி சொல்வது விதியின் உச்சகட்ட நகைச்சுவை உணர்வன்றி வேறென்ன?

(தொடரும்)

Sunday, September 28, 2014

பேசவே முடியாதபெருமை


ஒளிமஞ்சள் பூச்சிலே ஓங்காரப் பேச்சிலே
ஒய்யாரி நிற்கின்ற கோலம்
களிதுள்ளும் கண்ணிலே கதைபேசும் போதிலே
கலியெல்லாம் தீர்கின்ற ஜாலம்
கிளிசொல்லும் சொல்லிலே கமலத்தின் கள்ளிலே
கொஞ்சிவரும் பைரவியாள் நாமம்
எளிவந்த அன்பிலே ஏங்கிடும் நெஞ்சிலே
"ஏனெ"ன்று வருகின்ற மாயம்

வீரத்தின் விளைநிலம் வெற்றியின் தாய்மடி
வற்றாத கருணையின் ஊற்று
ஈரத்தின் குளிரென இளங்காலைத் தளிரென
இதயத்தை வருடிடும் காற்று
நேரத்தின் கணங்களாய் காலத்தின் துளிகளாய்
நொடிதோறும் ஒலிக்கின்ற பாட்டு
பாரத்தில் வாடினால் பாதங்கள் தேடினால்
புலனாகும் நம்பிக்கைக் கீற்று

பாஷைகள் எல்லாமும் படைகொண்டு வந்தாலும்
பேசவே முடியாதபெருமை
ஈஷாவின் ஜோதியாய் இலங்கிடும் பைரவி
ஈடேதும் இல்லாத கருணை
தூசாகும் துன்பங்கள் தூளாகும் அச்சங்கள்
துணையாக வருகின்ற மகிமை
ஆசைகள் ஓய்ந்தபின் அனைத்துமே தீர்ந்தபின்
அவள்தானே நமக்கான தனிமை


வியாச மனம்-7 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)


பீஷ்மருடனான முந்தைய சந்திப்பில் எவ்வளவு ஆற்றாமையும் சினமும் அம்பைக்கு இருந்ததோ இப்போது அதே அளவு அம்பையின் மனதில் பீஷ்மர் மீதான பிரியம் எழுந்து படகில் வழிந்து நதியை நிரப்பியது என்றே தோன்றுகிறது.

அவளுக்குள் தூண்டப்பட்ட சுடர் வழியெங்கும் எப்படி விகசித்தது   என்பதை ஜெயமோகன்,ஒளிமிகும் உவமை ஒன்றினால் விளக்குகிறார்.

"நெய்விழும் தீப்போல அவ்வப்போது சிவந்தும்,மெல்லத் தணிந்தாடியும்,சுவாலையென எழுந்தும் படகுமூலையில் அவள் அமர்ந்திருக்கையில்,படகு ஒரு நீளமான அகல்விளக்காக ஆகிவிட்டதென்று நிருதன் எண்ணிக் கொண்டான்.இரவு அணைந்தபோது, வானில் எழுந்தபலகோடி விண்மீன்களுடன் அவள் விழியொளியும் கலந்திருந்தது.இரவெல்லாம் அவளுடைய கைவளை குலுங்கும் ஒலியும் மூச்செழுந்தடங்கும் ஒலியும் கேட்டுக் கொண்டிருந்தன.பகலொளி விரிந்தபோது சூரியனுடன் சேர்ந்து படகின் கிழக்கு முனையில் உதித்தெழுந்தாள்".(ப-153)


முன்னர் இதே படகில் பிரபஞ்சத்தால் கைவிடப்பட்ட கோள்போல் இருந்த அம்பை ,இப்போது பிரபஞ்சத்தின் ஒவ்வோர் அசைவிலும் அங்கமாயிருந்து தனக்குள் அந்த இரவில் அபரிமிதமான சக்தியை சேமித்திருக்கக் கூடும்.பிரபஞ்சம் அவளுக்குள் இறக்கியிருந்த அபரிமிதமான சக்தி அவளை அடுத்த பரிணாமத்திற்கு தயார்படுத்தியிருக்க வேண்டும்.
'

    அம்பை வருவதை முன்கூட்டியே அறிந்திருந்த பீஷ்மர்,தன் கைகளில் ஓர் ஒளிவாளை ஏந்தி அதன் கருக்கை வருடியபடியே அமர்ந்திருந்தார் என்கிறது முதற்கனல்.ஆயினும் அம்பையின் கூரிய ஆயுதங்களுக்கு முன்ர் அவர் நிராயுதபாணியாய் நிற்பதை அடுத்தடுத்த காட்சிகள் காட்டுகின்றன.


தன் மனதிலிருப்பதை அம்பை சொல்லும் முன்னரே மெல்லிய நடுக்கத்திற்கு ஆளாகும் பீஷ்மர்,உரையாடத் தொடங்குகையில் தடுமாறும் இடங்கள் பீஷ்மர் என்னும் ஆளுமையை நிறைகுறைகளுடன் அறிந்து கொள்ளப் பெரிதும் பயன்படுகிறது.  

"நான் வந்தது உங்களைத் தேடி" என அம்பை பகிரங்கமாகப் பேசத் தொடங்கும் நொடியிலிருந்தே எப்படியாவது தப்பித்துச் செல்ல முடியுமா என பீஷ்மர் தடுமாறுகிறார்.

"வேட்டை நாய்முன் சிக்கிக் கொண்ட முயல்போல பீஷ்மர் அச்சத்தில் சிலிர்த்து அசைவிழந்து நின்றார்".(ப-155)

ஒரு நீண்ட இரவு அம்பைக்கு சுயம்வர மண்டபத்தில் நிகழ்ந்தவற்றை மீண்டும் மனதில் ஓடவிட்டுப் பார்க்கும் அவகாசத்தைத் தந்திருந்தது போலும்! எல்லா முனைகளிலிருந்தும் அவளுடைய சரமாரி தாக்குதல்கள் பீஷ்மரை உலுக்கத் தொடங்கின.

அம்பை-பீஷ்மர் உரையாடல் மிகவும் சுவையான பகுதி. ஆனால் முதற்கனல் முன்னிறுத்தும் உரையாடல்  பீஷ்மரின் தடுமாற்றமும் முரண்பட்ட சொற்களும் அவர் மேற்கொண்ட விரதம் திணிக்கப்பட்டதுதானோ என்னும் கேள்வி பலப்படுகிறது.

பொதுவாக தலைமைப் பாத்திரங்களின் தடுமாற்றங்களை காவியகர்த்தா திரைபோட்டு மறைக்க முற்படுவதுண்டு. சில நேரங்களில் அந்தத் திரை காற்றில் அசைந்தேனும் அந்தப் பாத்திரத்தின் அந்தரங்கத்தை காட்டிக் கொடுத்துவிடும்.

இராமகாதையில், சூர்ப்பநகை-இராமன் உரையாடலின்போது இராமனின் தரப்பில் சின்னஞ்சிறிய சறுக்கல் ஒன்று நிகழும்.  
 அந்தணப் பெண் வடிவில் வந்து நிற்கும் சூர்ப்பநகையிடம்,"நீ அந்தணப் பெண்,நான் அரசகுலத்தவன்.நாம் எப்படி மணந்து கொள்வது"என்றெல்லாம் பேசுவாரே தவிர தனக்குத் திருமணம் ஆகிவிட்டதை சொல்ல மாட்டார்.

இது சிறிய விஷயம்தான்.விளையாட்டாகக் கூட சொல்லியிருக்கக்கூடும்.ஆனால் இதற்குப் பின்னால் உள்ள மனநிலை ஆழமான ஆய்வுக்குரியது.    

ஆனால் முத்ற்கனலில் அப்படி எந்தத் திரையும் இல்லை.விலகும் திரைகளே அதிகம்.

"நான் காமத்தை ஒறுக்கும் நோன்பு கொண்டவன்.என் தந்தைக்குக் கொடுத்த வாக்கு அது.அதை மீற முடியாது"என்று பீஷ்மர் சொன்னதும் அம்பை அதை சற்றும் பொருட்படுத்தாமல் எதிர்பாராத கோணத்தில் அம்பு தொடுப்பதை முதற்கனல் காட்டுகிறது."நம் கண்கள் சந்தித்த போது..நீங்கள் முன்பு என்னைப் பார்த்த முதல் பார்வையே 
பெண்ணின் பார்வைதான்" (ப-156)

எப்போதுமே தர்க்கரீதியான சமாதானங்களால் உள்ளுணர்வின் கூரிய அவதானிப்புகளை எதிர்கொள்ள முடியாது.தர்க்க அறிவு மிகவும் தக்கையானது.

சுயம்வர மண்டபத்துக்குள் நுழைந்து நாணொலி செய்த பீஷ்மர்,அனிச்சையாக தன்னைத் தூக்க நான்கடிகள் எடுத்து வைத்ததை சுட்டிக் காட்டியும்,பீஷ்மரின் அகத்துடன் உரையாடிய முதல்பெண் தானே என்றும் அம்பை பேசப் பேச பீஷ்மர் பதட்டமுறுகிறார்(ப-156)

அவர் காத்திரமாக மறுக்க மறுக்க உரையாடலில் அம்பை அனாயசமாய் முன்னேறுவதை நாம் உணர முடிகிறது. தாய்மையின் கனிவுடன் "ஏனிந்த பாவனைகள்.எதற்கு உங்களை இப்படி வதைத்துக் கொள்கிறீர்கள்"என அம்பை கேட்கிறாள்.

கங்கதேசத்தவர்கள் அஸ்தினபுரியை ஆளக்கூடாதென்பதற்காக சந்தனு செய்த அரசியல் உத்தியே பீஷ்மர் மீது திணிக்கப்பட்ட தேவவிரதம் என அம்பை சொன்னதும் சீண்டப்பட்ட பீஷ்மர்,"என் ஒருவில் போதும் பாரத வர்ஷத்தை  சட்டப்படி வென்றெடுக்க"என்கிறார்.

இது ஒருவகையில் பீஷ்மரின் சுதர்மத்திற்கானமுரண்பாடு. எந்த தேசத்தை கட்டிக் காக்க தீராப் பழியையும் ஏற்கத் துணிந்தாரோ அந்த தேசத்தை தன்னால் வெல்ல முடியும் என்று வீரம் பேசுவது சமன் குலைந்த பேச்சே ஆகும்.
அந்த விநாடியே அம்பை திருப்பியடிக்கிறாள்."பார்த்தீர்களா! நான் உங்கள் வீரத்தைக் குறைத்து எண்ணிவிடக் கூடாதென நினைக்கிறீர்கள்.நான் சொல்வதெற்கெல்லாம் இதுதான் ஆதாரம்.எந்த ஆணும் காதலியிடம் பேசும் பேச்சுதான் இது"என்றாள்"(ப-157)

அம்பையை வீழ்த்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில்,பீஷ்மர் 
"நீங்கள் அன்புக்காக வாதிடுகிறீர்கள்.அபத்தத்தின் உச்சமென்றால் இதுதான்"(ப-158) என்று தன் முதல் வெற்றிக்கனியைப் பறிக்கிறார்.

வாதங்களின் தொடர்ச்சியில் பீஷ்மர் சொல்லும் ஒரு வாக்கியத்தை, "அழுக்கின் மீதேறும் மூதவி"என்று வர்ணிக்கிறார் ஜெயமோகன்.

"என்னைக் கிழித்துப் பார்க்கும் பெண்ணருகே என்னால் வாழ முடியாது.எனக்குத் தேவையானவள் ஒரு பேதை.நான் கண்ணயர விழைவது ஒரு பஞ்சு மெத்தையில்,கூரிய அம்புகளின் நுனியில் அல்ல"(ப-160)

இதற்கு எதிர்வினையாய் அம்பை அழுது உடைந்து முழங்காலிட்டுக் கெஞ்ச, அவளை அளியெடுக்கும் வேகத்தை சிரமப்பட்டு பீஷ்மர் அடக்கிக் கொண்டதாய் முதற்கனல் சொல்கிறது.

பீஷ்மர் சொன்ன சொற்களை விடவும் அதிகமாய் அம்பையை காயப்படுத்தியது,காதல் கனிய அவள் நின்ற நிலையில்,பீஷ்மரே அறியாமல் அவர் இதழ்களில் எழுந்த
ஏளனச் சுழிப்பு என்றும் முதற்கனல் சொல்கிறது.(ப-161)

அதன்பின்னர்தான் அம்பை சந்நதம் கொள்கிறாள்."இடிபட்டெரியும் பசுமரம்போல் சுருங்கி நெரிந்து துடித்த அவளுடலில் இருந்து சன்னதம் கொண்டெழும் மயான சாமுண்டியின் பேரோலம் கிளம்பியது.ரத்தமும் நிணமும் சிதற எலும்பை உடைத்து இதயத்தைப் பிழிந்து வீசுபவள்போல் மார்பை ஓங்கியறைந்து சினம் கொண்ட சிம்மக் கூட்டம் போலக் குரலெழுப்பியபடி அவள் வெளியே பாய்ந்தாள்"(ப-161)

இங்கே நாம் பீஷ்மரை இன்னும் நெருக்கமாகப் புரிந்து கொள்ள ஏற்கெனவே மேற்கோள் காட்டப்பட்ட அவரின் வாக்குமூலம் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.


   "என்னைக் கிழித்துப் பார்க்கும் பெண்ணருகே என்னால் வாழ முடியாது.எனக்குத் தேவையானவள் ஒரு பேதை.நான் கண்ணயர விழைவது ஒரு பஞ்சு மெத்தையில்,கூரிய அம்புகளின் நுனியில் அல்ல".

அம்பையை அவமானப்படுத்தும் நோக்கில் சொல்லப்பட்டாலும் தன் அடிமனதில் என்ன விதமான பெண்ணுக்கான தேடல் இருக்கிறது என்று பீஷ்மர் தன்னையுமறியாமல் சொல்லிவிட்டது போலத் தோன்றுகிறது.
இரண்டாவதாக இது பீஷ்மர் தனக்குத் தானே விடுத்துக் கொண்ட தீச்சொல் என்றும் நமக்குத் தோன்றுகிறது.அன்பின் பெருக்கத்தில் நின்ற பெண்ணை அம்புப் படுக்கை என்று இழித்துரைத்ததன் பலன்,பீஷ்மர் தன் இறுதிநாட்களை அம்புப் படுக்கையில் செலவிட வேண்டி வந்ததோ என்று தோன்றுகிறது. இந்தப் புரிதல் நோக்கி ஜெயமோகன் மெல்ல வாசகரை நகர்த்துகிறார் என்றும் தெளிவாகிறது.

அடுத்ததாக முதற்கனலின் சித்தரிப்பை மையப்படுத்தி,பீஷ்மரை நாம் புரிந்து கொள்ள முற்படுகிறோம். அவருடைய பிரம்மச்சர்யம் இயல்பானதா,திண்மையானதா என்கிற கேள்விக்கு முதற்கனலினூடாக விடை தேட முயல்கிறோம்.

இங்கே நாம் கம்பனை துணைக்கழைக்கலாம். இராமனை திரும்பவும் அயோத்திக்கு அழைத்துச் செல்ல பரதனும் சத்ருகனனும் வருவதை அவர்கள் படையெடுத்து வருவதாய் தவறாகப் புரிந்து கொண்டு  பொங்கியெழுகிற குகன் பரத சத்ருகனரை நெருக்கத்தில் பார்த்ததும் உண்மையை உணர்கிறான். அப்போது அவன் சொல்வதாய் கம்பன் எழுதும் வரிகள் இவை.

"நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்.அயல்நின்றான்
 தம்பியை ஒக்கின்றான்:தவவேடம் தலைநின்றான்
 துன்பமொரு முடிவில்லை,திசைநோக்கித் தொழுகின்றான்
எம்பெருமான் பின்பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு"


பரதனைப்பார்த்தால் குகனுக்கு இராமனைப்போல் இருக்கிறது.சத்ருகனைப் பார்த்தால்,இலக்குவனைப்போல் இருக்கிறது.இதுவல்ல விஷயம்.

மாறுவேடப் போட்டியில் இரண்டு குழந்தைகள் ஒரே வேடத்தில் வந்தால் யாருக்கு அந்த வேடம் பெரிதும் பொருந்துகிறது என்ற அடிப்படையில் முதல் பரிசுக்குரியவரை தேர்வு செய்வார்கள். இராமனின் அடியவனாய்,பக்தனாய்,தீராக்காதலனாய் அறியப்படும் குகன் பரதனைத்தான் தேர்ந்தெடுக்கிறான்என்பதால் "தவவேடம் தலைநின்றான்"என்கிறான்.

இராமனின் தவவேடம் சிற்றன்னை சொல்லியதால் ஏற்கப்பட்டது.பரதனின் தவவேடமோ அண்ணன் மீதுள்ள பாசத்தால் தானாக முன்வந்து தரித்தது.

பீஷ்மனோ அவன் பிள்ளைகளோ நாடாள மாட்டார்கள் என்னும் உறுதியை சத்தியவதிக்கு எப்படித் தருவதென சந்தனு சங்கடப்பட்டதால் பீஷ்மர் மேற்கொண்டது பிரம்மச்சர்யம்.


மகாபாரதத்தில் முனிவர்களே இல்லறத்தில் இயல்பாக ஈடுபட்டும், "பிள்ளைவரம்" கொடுத்தும்  காவியத்தை நடத்த பீஷ்மர் வலிந்தேற்ற பிரமச்சர்யம், அவரை வாழ்நாள் முழுவதும் அம்புப் படுக்கையில்தான் கிடத்தியிருந்ததோ என்னும் எண்ணத்தை முதற்கனல் ஏற்படுத்துகிறது.     

      

Saturday, September 27, 2014

வியாச மனம்-6 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)

 இராமன் தோன்றுவதற்கு முன்னரே வான்மீகி இராமாயணத்தை எழுதிவிட்டார் என்று சொல்லப்படுவது பற்றி ஓஷோவிடம் அவருடைய சீடர்கள் கேட்டார்கள்."முன்னரே எழுதப்பட்டது என்று பொருளல்ல. முன்னரே எழுதிவிடக்கூடிய அளவு கணிக்கக்கூடிய வாழ்க்கைமுறைதான் இராமனுடைய வாழ்க்கை.அவர் ஒரு சூழலில் எத்தகைய முடிவுகளை எடுப்பார் என்று கணித்துவிட முடியும் என்கிற பொருளிலேயே இவ்வாறு சொல்லியிருக்கக் கூடும்"  என்றார் ஓஷோ.

ஆனால் மகாபாரதம் ஒழுங்கின்மைகளின் கருவூலம். ஆதி பருவம் தொடங்கி வேறெங்கும் கேள்வியுறாத உறவுமுறைகளும் பிள்ளைப்பேறுகளும் நிகழ்களம்.அதிலும் மேலோட்டமாகக் காணும்போது புலப்படாத அம்சங்களையும்,பல நிகழ்வுகளைப் பின்னின்றியக்கும் உளவியல் நுட்பங்களையும் முதற்கனல் ஒளிபாய்ச்சிக் காட்டுகிறது.

சௌப நாட்டிலிருந்து காசி நோக்கிச் செல்லும் அம்பை,தாய்வீடு தன்னைத் தள்ளாதென்ற நம்பிக்கையுடன் படகை விட்டிறங்குகிறாள்.ஆனால் அது தந்தை ஆள்கிற நாடென்பதை மறந்துவிட்டிருந்தாள்."அஸ்தினபுரியின் அரசி முறையான அனுமதியின்றி வரக்கூடாது அமைச்சரே " என்னும் அரசனின் குரல் அம்பையை நிலைகுலையச் செய்கிறது.

அடுத்த நாட்டுக்கு மணமாகிப் போன இளவரசி தந்தையின் நாட்டுக்கு வருவதற்கான விதிமுறைகளை அமைச்சர் ஃபால்குனர் வேறு வழியில்லாமல் உயிரற்ற சொற்களில் சொன்னார் என்று ஜெயமோகன் எழுதினாலும் அந்த விதிமுறைகள் சுவாரசியமாயிருக்கின்றன.


"முதலில் அஸ்தினபுரியில் இருந்து வருகைத் திருமுகம் இங்கு வரவேண்டும்.தூதர்கள் வந்து வழிமங்கலம் அமைக்க வேண்டும்.சத்ரமும் சாமரமும் உடன்வர வேண்டும்.தங்கள் அரசரோ,அவரது உடைவாளை ஏந்திய தளபதியோ,மைந்தரோ துணைவராமல்,தாங்கள் நாடுவிட்டு எழுந்தருள நூல்நெறிகள் அனுமதிப்பதில்லை".(ப-144)


இத்தனையையும் அம்பை பீஷ்மரால் சால்வனிடம் அனுப்பப்பட்டு,சால்வனால் திருப்பியனுப்பப்பட்ட செய்தியை அறிந்துகொண்டே அரசரும் அமைச்சரும் பேசுகின்றனர்.

தான் வாழ்ந்த அரண்மனையை ஏக்கத்துடன் நிமிர்ந்து பார்த்த அம்பை,அமைச்சரிடம் "அப்படியானால் இந்த அரண்மனையில் எனக்கினி இடமேஇல்லையா?" என்று ஒரு சிறுமிபோல் கேட்கையில் ஏழு மகள்களைப் பெற்ற ஃபால்குனர் ஒரு கணம் தன் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொள்ள எண்ணியதாகவும் தன் மகள்களின் முகங்கள் நினைவில் நிழலாடி அவ்வாறு செய்யவொட்டாமல் தடுத்ததாகவும் ஜெயமோகன் சொல்வது, ஃபால்குனரின் குணசித்திரத்தைத் தீட்டித் தந்து விடுகிறது.

"அஸ்தினபுரியின் அரசியே!அத்தனை கன்னியருக்கும் ஒரு தருணத்தில் பிறந்த இல்லம் அந்நியமாகி விடுகிறது என்று ஃபால்குனர் சொன்னதும் சரடுகள் அறுபட்ட கூத்துப்பாவை போல் அம்பையின் கைகளும் கால்களும் விழுந்தன" என்கிறார் ஜெயமோகன்.(ப-146)

கங்கை நோக்கி நடந்த அம்பை ஊர்த்துவபிந்து என்னும் பெருஞ்சுழியில் குதிக்க முற்பட்ட போது அவளைத் தொடர்ந்து வந்த மூன்று நிழல்கள் குறித்து சூதர்கள் பாடியதை முதற்கனல் சொல்கிறது.பொன்னிறம் செந்நிறம் பச்சைநிறமென மூன்று நிறங்கள் கொண்ட அந்த நிழல்களில் பொன்னிறம் கொண்ட தேவதை அம்பையை பற்றிக் கொண்டு பேசத் தொடங்குகிறது.(ப-147)

ஒரு பெண்குழந்தை பிறந்ததிலிருந்து துணைசெய்யும் சுவர்ணை என்ற அந்த தேவதையும்,கன்னிப் பருவத்தில் துணை செய்யும் சோபை என்னும் தேவதையும் உரையாடி நகர,விருஷ்டி எனும் தேவதை அருகில் வந்து பேசத் தொடங்குகிறது.முதற்கனல் நூலின் கவித்துவம் நிறைந்த பகுதிகளில் இதுவும் ஒன்று. அம்பை மழலைப் பருவத்திலிருந்தே தன்னை தாயாக உணர்ந்ததையும் ,அம்பையின் கருப்பையிலிருந்து புளகமெய்தச் செய்யும் சிருஷ்டி தேவதையே விருஷ்டி என்றும் அறிமுகப் படலம் நிகழ்கிறது.

முளைப்பதிலெல்லாம் தன் வாசனை இருப்பதை உணர்த்தும் விருஷ்டி அம்பை பீஷ்மன் மீது காதல் கொண்ட தருணத்தில் அவளை கையிலெடுத்துக் கொண்டதாய் சொல்ல அவள் சினக்கிறாள்.


அப்போது விருஷ்டி தரும் விளக்கம் அபாரமானது."காதல்கொண்ட ஒருவனைத் தேடிச் செல்லும்போது உள்ளூர இன்னோர் ஆணை என்னும் கீழ்மகளா நான்"என அம்பை கொதிக்கும்போது விருஷ்டி சொல்கிறாள்,"இல்லை.நீ ஒரு பெண்.உன் கருப்பை ஆசை கொண்டது.தீராத்தனிமையுடன் நின்றிருந்த மாவீரனைக் கண்டதும்,அவன் முன் மண்டியிடவும்,உன்னுடன் இணைத்துக் கொண்டு அவனை ஒரு குழந்தையாகப் பெற்று மடியில் போட்டுக் கொள்ளவும் அது விழைந்தது.அதுவே இப்பூவுலகை உண்டாக்கி நிலைநிறுத்தும் இச்சை.நான் அதன் தேவதை என்றாள் விருஷ்டி."(ப-151)

பீஷ்மன் மேல் தனக்குக் காதல் உள்ளூர உள்ளதை மெல்ல மெல்ல அம்பை உணரத் தொடங்குகையில் விருஷ்டி அடுத்து சொல்லும் வாசகங்கள் அவளை கங்கை மைந்தன் மீதான காதலில் மெள்ள மெள்ள அமிழச் செய்கின்றன.

"அவன் ஆணுருவம் கொண்ட நீ.நீ,பெண்வடிவம் கொண்ட அவன்.நெருப்பு நெருப்புடன் இணைவது போல நீங்கள் இணைய முடியும்".(ப-152).

ஒரு பெண்ணின் பல்வேறு குணாதிசயங்களிலும் குணபேதங்களிலும் கருப்பையின் தாக்கம் மிகப்பெரிது.
விலக்கு நாள்களில் அவளின் தோற்றத்திற்கும் கருவேற்கத் தக்க நாட்களின் பொலிவுக்கும் கருப்பையின் தன்மையே காரணம் என உடற்கூறியல் அறிந்தோர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.எனவேதான் விருஷ்டி,"இதயம் மிகச் சிறியது.கருப்பையோ முடிவற்றது" என்கிறாள்.


இப்போது கங்கையை நோக்கி நகரும் அம்பை சௌப நாட்டிலிருந்து ஆவேசமாய் வந்தமர்ந்த அதே படகில் மென்மையும் அழகிய சலனமும் கொண்டவளாய் சென்றமர்ந்தாள்.ஒரு தெய்வம் இறங்கிச் சென்று பிறிதொரு தெய்வம் வந்து படகேறியதாய் படகை செலுத்திய நிருதன் உணர்ந்தான் என்கிறது முதற்கனல். (ப-153)
 

காசியிலிருந்து சிறையெடுக்கப்பட்டு கங்கையில் பீஷ்மனிடம் அம்பைபேசிய அனல்பேச்சு தாளாமல் அவளை நிருதனின் படகில்தான் பீஷ்மர் ஏற்றி அனுப்பியிருந்தார்.

அம்பையை அஸ்தினபுரிக்கு சிறையெடுத்துச் செல்வது என்பதில் உறுதியாயிருந்த பீஷ்மரை பதறிப்போய் படகில் அம்பையை எந்தச் சொல் ஏற்ற வைத்தது??

இதற்கு மிகவும் அழகான உத்தியை முதற்கனலில் ஜெயமோகன் பின்பற்றுகிறார். 'சால்வனின் குழந்தையை மட்டுமே என் வயிற்றில் சுமப்பேன்.வேறெவரின் குழந்தையாவது என் கருவில் வளர்ந்தால் அதனை இந்த கங்கையில் மூழ்கடிப்பேன்"என்று அம்பை சீறியதும் அனல்பட்டதுபோல் சீறும் பீஷ்மர் அவளைப் படகிலேற்றி அனுப்புகிறார்.

இந்த உடனடி செய்கையை எதிர்பாராத அம்பை,"பீஷ்மருக்கும் கங்கைக்கும் என்ன சம்பந்தம் என்று வினவுகிற போதுதான் அவர் கங்கையின் மைந்தர் என்பதும்,அவருக்கு முன்னர் பிறந்த ஏழு குழந்தைகள் கங்கையில்   மூழ்கடிக்கப்பட்டனர் என்றும் அவளுக்குத் தெரிய வருகிறது.

தன் புதிய பிரதியில் ஜெயமோகன் எடுத்துக் கொள்ளும் இத்தகைய சுதந்திரங்கள் சுவையான உத்தியாகத் திகழ்வது மட்டுமின்றி கதைப்படகின் விசைப்பயணத்தை ஒழுங்கமைக்கின்றன.

 
அப்போது நிருதனின் படகிலேறிய அம்பைக்கு நிருதனின் பணிவும் நேயமும் பக்தியும் பெரும் ஆறுதலாய் அமைகிறது.
சால்வனைத் தேடிச் செல்லும் வேளையில் அம்பையின் மனநிலை எப்படி இருந்தது என்பதற்கு ஜெயமோகன் ஓர் உவமை சொல்கிறார்."பிரபஞ்சத்தில் கைவிடப்பட்டு திசை வெளியில் அலையும் அடையாளம் காணப்படாத கோளத்தைப் போலத் தன்னை உணர்ந்தாள்"(ப-137)

நிருதன் தன்னைப் பற்றி சொல்லத் தொடங்குகிறான். இராமனை படகிலேற்றிச் சென்ற குகன்,தன் குலமூதாதை என்றும், குகனின் தோளை இராமன் தழுவிய அந்த நினைவை வழிவழியாய் ஆபரணமாய் அணிந்திருப்பதாகவும் கூறி தன் தோளைக்காட்டுகிறான்.

பழுக்கக் காய்ச்சிய இரும்பால் போடப்பட்ட மூன்று காடுகள் இராமனின் விரல்களின் தொடுகையை நீட்டித்திருந்தன.
"இன்றும் நாங்கள் தசரதனுக்கும் இராமனுக்கும் நீர்க்கடன் செலுத்துகிறோம் அன்னையே" என்கிறான் நிருதன் (ப-138)

குகனுக்கு இராமன் தன்னை முதலில் தோழன் என்று சொன்னதே பெரும் பரவசத்தைத் தந்திருந்தது."தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ" என ஆனந்தக் கூத்தாடுகிறான்.

பின்னாளில் குகனை தன் நான்காவது தம்பியென்று தழுவிக் கொள்கிறான் இராமன்.
"என்னுயிரனையாய் நீ; இளவலுன் இளையான் இந்
நன்னுதலவள் நின் கேள்;இந் நளிர்கடல் நிலமெல்லாம்
உன்னுடையது : நானுன் தொழிலுரிமையில் உள்ளேன்"
                                                                                (கம்பன்)

இராமனின் இந்தச் சொல்,மகாபாரதக் காலத்திலும் அவன் சந்ததியினரை விசுவாசம் மாறாமல் வைத்திருக்கிறது என்பது சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.

குகனை தன் சகோதரன் என்று இராமன் சொன்னது, தசரதனை வேட்டுவர் குலத்தின் தந்தையாக்கி இராமனை தமையனாக்கி தலைமுறைகள் கடந்தும் நீர்க்கடன் செய்யும் நிலைக்குக் கொண்டுபோய் நிறுத்துகிறது.


பத்தாண்டுகளுக்கு முன்னர் கோவையில் காந்தியின் பெயரால் நிகழும் ஓர் அமைப்பின் சார்பில் காந்தியடிகள் நினைவுநாள் கூட்டத்தில் பேச அழைக்கப்பட்டிருந்தேன். விழா ஏற்பாட்டாளர்கள் பத்துப்பேர், அன்று அதிகாலை பேரூர் நொய்யலாற்றங்கரையில் போய் நீர்க்கடன் செய்து  மொட்டை போட்டுக் கொண்டுவந்திருந்தார்கள். "தேசத்தந்தை" என்கிற சொல் அவர்களிடையே அப்படியொரு நெருக்கத்தை வளர்த்து விட்டிருந்தது."சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ".


 (தொடரும்)

ஈடாக ஒருதெய்வமோ?

 
 
பெருங்கொண்ட வனந்தனில் பசிகொண்ட வேங்கையின்
பார்வைக்குக் கனல்தந்தவள்
கருக்கொண்ட சிசுவுக்கு பசிதாகம் போக்கவே
கொடியொன்று தருவித்தவள்
உருக்கொண்டு வந்தாலும் அருவமாய் நின்றாலும்
உயிருக்குத் துணையானவள்
சரக்கொன்றை சூடுவோன் சரிபாதி மேனியில்
சரசமாய் அரசாள்பவள்

சுடர்வீசும் தீபத்தில் சுந்தர நகைகாட்டி
சூழ்கின்ற ஒளியானவள்
இடரான பிறவியும் இல்லாமல் போகவே
இறுதிநாள் இரவானவள்
கடலாடும் அலையெலாம் கைநீட்டும் நிலவினில்
கலையாவும் அருள்கின்றவள்
படையோடு வரும்வினை அடியோடு சாயவே
பாசாங்குசம் கொண்டவள்
நாமங்கள் ஆயிரம் நாவாரச் சொன்னாலும்
நாயகி பேராகுமோ
ஆமெந்த சொல்லிலும் அடங்காத பேரெழில்
அர்ச்சனை மொழியாகுமோ
காமங்கள் மாற்றிடும் காருண்யை பார்த்தபின்
காலங்கள் நமைவாட்டுமோ
ஈமங்கள் தீர்கையில் இருக்கின்ற பெருந்துணை
ஈடாக ஒருதெய்வமோ?

 
ஒன்பது கோள்களும் ஒன்பது இரவிலும்
ஓங்காரி முன்சூழுமே
தன்னரும் அடியவர் விதியினை மாற்றுவாள்
தாமாக நலம்சூழுமே
இன்னிசை பாட்டெலாம் ஏத்திடும் அம்பிகை
இதழ்சுழி அதுபோதுமே
என்னவென் தலையினில் நான்முகன் சுழித்தாலும்
இந்நொடி அது தீருமே

Friday, September 26, 2014

வியாச மனம்-5 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)

21 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் நெருங்கிய உறவில் ஒரு திருமணம்.என் ஒன்றுவிட்ட சகோதரர்தான் மணமகன். திருமணம் முடிந்து மறுநாள் மாலை வேறோர் ஊரில் வரவேற்பு.மணமகளுக்கு அப்பா மட்டும்தான்.அம்மா இல்லை. அவர் மணமகன் வீட்டிற்கு வரவில்லை.மறுநாள் நேராக வரவேற்புக்கு வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தார்.

வரவேற்பு மேடைக்கு போவதற்கு முன்னர்,இப்போது எனக்கு அண்ணியாகிவிட்ட மணமகள்(பெயர் வண்டார்குழலி) தலைவலிக்கிறது என்று சொல்ல,பொறுப்புள்ள கொழுந்தனாய் மாத்திரை வாங்கிக் கொண்டு வருவதற்குள் மணமக்கள் மேடையேறியிருந்தனர். அப்போதுதான் உள்ளே நுழைந்திருந்த மணமகளின் தந்தைமண்டப வாயிலில் இருந்து தொலைவிலிருந்த மேடையைப் பார்த்தார். நெற்றி சுருங்கியது.உள்ளே வந்து கொண்டிருந்த என்னிடம் கேட்டார்,"குழலிக்கு தலைவலியா?".

தாய்மைக்கு நிகரானது தந்தைமை என்றறிந்த தருணம் அது.அம்பை,அம்பிகை,அம்பாலிகை ஆகிய மூன்று மகள்களின் தந்தை என்பதில் மிகுந்த பெருமை கொண்டிருந்தவன் காசி நகரின் மன்னன் பீமதேவன்.ரஜோ குணம்,சத்வ குணம்,தமோகுணம் ஆகிய முக்குணங்களும் காசி மன்னனுக்கு மகளாகப் பிறந்ததாய் நிமித்திகர்கள் சொன்னார்களாம்.(ப-99).

அம்பை தழல்போன்றவள், அம்பிகை குளிர்ந்தவள்,அம்பாலிகை விளையாட்டுப்பெண் என்கிறது முதற்கனல் ,பீமதேவன்,"விழிகளால் அம்பையையும் கைகளால் அம்பிகையையும் உதடுகளால் அம்பாலிகையையும் கொஞ்சினான்"(ப-209) என்கிறது முதற்கனல்.

மூன்று மகள்களுடன் ரதத்தில் செல்லும்போது,உஷையும் சந்தியையும் ராத்ரியும் துணைவரும் சூரியன்போல் தன்னை உணர்வான் பீமதேவன் (ப-210)

நுண்ணுணர்வுகளின் கண்ணிகொண்டு புதல்வியரைச் சுற்றி பொன்வேலி அமைத்திருந்ததாலோ என்னவோ,அவர்களின் சுயம்வர நாளன்று சற்றும் நிலை கொள்ளாதவனாகக் காட்டுகிறது முதற்கனல்.அவன் மனைவி புராவதிக்கும் அதே நிலைதான்.

புதல்வியர் மூவரும் சுயம்வரத்திற்குத் தயாராகும் முகமாய் ஆலயங்களில் வழிபாடுகள் நிகழ்த்திவிட்டு கன்னிமை நிறைவுப்பூசை மேற்கொள்கையில் அவர்தம் உடல்களில் குடியிருந்த தேவதைகளும் காவலிருந்த தேவர்களும் பலியேற்று  விடைபெறுவதாய் முதுபூசகி சொல்கிறாள்."இனி உங்கள் கற்பே உங்களுக்குக் காவலாகும்"என்கிறாள்.(ப-111)


தமிழ்மரபில் கன்னிப் பெண்ணுக்குத் துணையாக ஆயம்,காவல்,தாய் என மூன்று குழுக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை  தோழியர் கூட்டம், காவல் செய்யும் செவிலியர்,தாய் என்றே புரிந்து கொண்டிருக்கிறோம்.திருமணம் நிகழும் வரை இந்த மூவரின் துணை இருக்கும்.பின்னர், கணவனே அந்த மூவகைப்பொறுப்புக்கும் உரியவன்.

சிலப்பதிகாரத்தில் மாதரியிடம் கண்ணகியை அடைக்கலப் படுத்துகையில் கவுந்தியடிகள்"ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத் தாயும் நீயே ஆகித் தாங்கு" என்கிறார். இந்த மூன்றுமாய் இருக்க வேண்டிய கணவன் இனி திரும்பப் போவதில்லை என்பதை குறிப்பால் உணர்த்துவது  போல் கவுந்தியடிகளின் கூற்று அமைகிறது.


சால்வனால் நிராகரிக்கப்பட்டு தந்தையிடம் அடைக்கலம் தேடி வரும் அம்பையின் முன் இந்த  தேவதைகள் தோன்றிப் பேசுவதையும் முதற்கனல் பின்னால் காட்டுகிறது.

எனவே தமிழ்மரபில் குறிக்கப்படும் "காவல்" என்பது சூட்சும வட்டத்தில் செயல்படும் இந்த தேவதைகளைக் குறிக்கிறதா என்பது ஆய்வுக்குரிய ஒன்று.இந்த அத்தியாயத்தில் இன்னோர் இடமும் சிலப்பதிகார சொற்பிரயோகம் ஒன்றை நினைவூட்டுகிறது.அம்பையை சால்வன் சுயம்வர மண்டபத்தில் முதன்முதலாகக் காண்கையில் சற்றே அச்சம் கொள்கிறான்.

"திரையை ஒரு சேடி விலக்க,உள்ளே அம்பை,செந்நிறமான ஆடையுடன் செந்நிறக் கற்கள் பொறிக்கப்பட்ட மணிமுடியும்,ஆபரணங்களும் அணிந்து நெய்யுண்ட வேள்விச்சுடர் போலக் கைகூப்பி நின்றாள்.அவளை முதல்முறையாக நேரில் பார்க்கும் சால்வன்,மெல்லிய அச்சத்துடன் தன்னருகே அமர்ந்திருந்த தமகோஷனின் கைகளைப் பற்றிக் கொண்டான்.தமகோஷன்,"பாய்கலை ஏறிய பாவை போலிருக்கிறார்"... என்றான்".

(ப-117)

பாய்கலைப் பாவை என்பது பாய்ந்து செல்லும் மானை வாகனமாகக் கொண்ட துர்கையைக் குறிக்கும்.வேட்டுவ வரியில் இப்பெயர் வருகிறது. கானகம் வழியே செல்கையில் வனமோகினி வழிமறிக்கும்போது கோவலன் பாய்கலைப் பாவை மந்திரம் சொல்லி வனமோகினியை விரட்டியதாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

அம்பை ரஜோகுணம் கொண்டவள் என்பதைக் குறிக்கும் விதமாய்,பீஷ்மர் சிறையெடுக்க வந்ததும் கங்கநாட்டு மன்னனின் உடைவாளை உருவி தன்னைத் தொட வந்த பீஷ்மனின் மாணவனை வீழ்த்தி மற்ற மாணவர்கள் மத்தியில் சுற்றிச் சுழன்று போரிட்டதாக முதற்கனல் சொல்கிறது. (ப-120)

மற்ற மன்னர்கள் துரத்த முயன்று தோற்க சால்வன் மட்டுமே மூன்று நாழிகைகள் தொடர்ந்து போரிட்டுத் தொடர்ந்ததோடு பீஷ்மரின் ரதத்தின் கொடிமரத்தை உடைத்து,அர்த்த சந்திர அம்பு கொண்டு அவரது கூந்தலை வெட்டுகிறான்.பீஷ்மர் முகம்மலர்ந்து அவனை வாழ்த்துகிறார்.(ப-123)



ஆனால் இளவரசியர் மூவரை படகிலேற்றிச் செல்கையில் தான் சால்வனை விரும்புவதாக அம்பை சொல்ல, அவனைக் குறித்த தன் துல்லியமான கணிப்பை முதன்முதலில் வெளியிடுகிறார் பீஷ்மர்.

"தேவி,அவனை நானறிவேன்.என்னை வெல்ல முடியாதென்றாலும் என்னை எதிர்த்தேன் என்ற பெயருக்காகவே,என் பின்னால் வந்தவன் அவன்.அதாவது,சூதர் பாடல்களுக்காக வாழ முனையும் எளிய ஷத்திரியன்."(ப-126)

இது எவ்வளவு துல்லியமான உண்மை என்பதை  சௌப நாட்டுக்கு அம்பை போனதும் சால்வன் சொல்கிற சொற்களே நிறுவுகின்றன. தன் விருப்பத்தையறிந்து பீஷ்மர் தன்னை அனுப்பி வைத்தார் என்று அம்பை சொன்னதும் சால்வனுக்கு கோபம் வருகிறது.

"அப்படியென்றால் உன்னை எனக்கு பீஷ்மர் தானமாக அளித்திருக்கிறார் இல்லையா?உன்னை ஏற்றுக் கொண்டு நான் அவரின் இரவலனாக அறியப்படவேண்டும் இல்லையா?இன்று பீஷ்மரிடம் மோதியவன் என என்னை பாரத வர்ஷமே வியக்கிறது.அந்தப் புகழை அழிக்கவே உன்னை என்னிடம் அனுப்பியிருக்கிறார்.ரதத்தில் செல்லும் வணிகன் இரவலனின் திருவோட்டில் இட்ட பிச்சையா நீ என்றான்"(ப-140)

அம்பைக்கு அப்போதும் புரியவில்லை."என்மேல் உங்களுக்கு காதலே இல்லையா?"என்று கேட்க,சால்வன் தன் அமைச்சர் குணநாதரைக் காட்டி
"அக்காதலை இவர்தான் உருவாக்கினார்.இவர்தான் உன்னைக் கண்டுபிடித்துச் சொன்னார்"என்க, குணநாதரோ,"இளவரசியே!அரசர்களுக்கு அரசியலில் மட்டுமே காதல் இருக்க முடியும் "என்கிறார் (ப-141)

இதை வாசிக்கையில் நமக்கொன்று தோன்றுகிறது.ஒருவேளை அம்பை சால்வனை மணந்து வந்திருந்தாலும்,அதுவும் சிறையெடுப்பாகத்தான் இருந்திருக்கும்.அஸ்தினபுரிக்காக பீஷ்மர் அம்பின் முனையில் சிறையெடுத்தார்.சால்வனின் ஆயுதம் காதல்.

தன் கம்பீரம் மறந்து, தன்னையுமறியாமல் தளர்ந்து விழுந்தழுகிறாள் அம்பை.ஆனால் எது குறித்து மனவுறுதியை இழக்கிறார்களோ அதன் அடிப்படையிலேயே அதே உறுதியை பலமடங்கு கூடுதல் வல்லமையுடன் மீட்டெடுக்கும் வல்லமையை பெண்களுக்கு இயற்கை தந்திருக்கிறது.இறந்த உறவுக்காக என்றாலும் இழந்த காதலுக்காக என்றாலும் வீறிட்டழுது முடித்ததுமே வைராக்கியம் பிறந்து   விடுகிறது.

திடம் கொண்டு நடக்கும் அம்பையை தொடர்ந்து வந்த சால்வன், தன் அரசியல் சூழலைப் புரிந்து கொள்ளும்படி மன்றாடி"நீ பட்டத்தரசி ஆக முடியாது ,ஆனால் என் அந்தப்புரத்தில் இருக்கலாம்"என்றதும் மிதிபட்ட ராஜநாகமாய் சீறியெழுந்து அவனுக்கு உயிர்ப்பிச்சை தந்துவிட்டு விலகுகிறாள் அம்பை.(ப 142-143)


பீஷ்மருக்கஞ்சி அம்பையை சால்வன் திருப்பியனுப்பினான் என்று மகாபாரதத்தின் ஏனைய பிரதிகள் சொல்ல,சால்வனின் கபட நாடகத்தையும் விளம்பர மோகத்தையும் முதற்கனல் சொல்கிறது.

பெண்சாபம் விழுந்த மண்ணென்று குடிமக்கள் தூற்றி பாஞ்சால நாட்டுக்கு இடம்பெயர,சண்டி தேவிக்காக பூசனை செய்கிறான் சால்வன்.முதலில் வந்து பரிசினை ஏற்று வாழ்த்துப் பாட வேண்டிய முதுசூதர் "பெண்சாபம் கொண்ட சால்வனையும் அவனுடைய தேசத்தையும் சூதர்கள் இனி பாட மாட்டார்கள் என சூதர்களின் தெய்வமாகிய ஆதிசேடன் மீது ஆணையிட்டதையும்,முதிய உழத்தி ஒருத்தி சாபமிட்டதையும் சூதர்கள் வாயிலாக பீஷ்மர் கேள்வியுறுகிறார்.

தமிழில் சங்க இலக்கியத்தில் மன்னர்கள் "புலவர் பாடாது ஒழிக என் நிலவரை"என்று வஞ்சினம் உரைப்பர். அறமல்லாத ஒன்று நிகழ்கையில் புலவர்களும் சூதர்களும் புறக்கணிப்பார்கள் என்பது இதன்மூலம் உறுதிப்படுகிறது.


கூடவே இன்னொரு தகவலும் கிடைக்கிறது. சௌப தேசத்தின் செல்வத்துக்கரசியான சாவித்ரி நிலம் நீங்கிச் செல்ல, கைவிடப்பட்ட வீடுகளிலும்கலப்பை விழாத நிலங்களிலும் நாகங்கள் குடிபுகுந்தன என்பதே அது.

இங்கே பீஷ்மர் சொல்வதாக அவ்வையின் வாசகம் ஒன்றினை ஜெயமோகன் மேற்கோள் காட்டுகிறார். "வேதாளம் சேரும்..வெள்ளெருக்கு பூக்கும்...பாதாள மூலி படரும் ..சேடன் குடிபுகும்..அதுதான் சொல்லப்பட்டிருக்கிறது என்றார்"(ப-277)

அட்சரம் பிசகாமல் அவ்வை பாடலை மேற்கோள் காட்டியிருப்பதால் பீஷ்மர் அவ்வையை மேற்கோள் காட்டுவதாய் வாசகன் புரிந்துகொள்ள இடமிருக்கிறது. அவ்வைக்கு முன்னரே நீதிநூல்களில் இக்கருத்து இடம்பெற்றிருந்துஅதைத்தான் பீஷ்மர் சொல்வதாய் இருந்தால் கூட அவ்வையின் சொற்களால் அதை சொல்லியிருக்க வேண்டாம். பீஷ்மருக்கும் அவ்வைக்கும் இடையிலான பன்னெடுங்கால இடைவெளியை ஜெயமோகன் நன்கறிவார்.

அந்த சூட்டிலேயே அஸ்தினபுரத்திற்கு மட்டும் பரிசில் பெற சூதர்கள் வந்துள்ளனரே என பீஷ்மர் கேட்க சூதர்கள் "மன்னன் முதற்றே அரசு. நாங்கள் குருகுலத்தை ஆளும் விசித்திரவீர்யனின் நற்பண்புகள் கருதி வந்தோம்" என்கிறார்கள்.

"மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்"என்னும் சங்க இலக்கிய வரி இங்கு நம் நினைவில் நிழலாடுகிறது. எவ்வளவு பொன் கொடுத்தாலும் தகுதியற்றவர்களை  சூதர்கள் பாட மாட்டார்கள் என்பதை உணர்த்த பீஷ்மர் அம்பையிடம் சொல்வதாய் அற்புதமான சொற்றொடர் ஒன்றை ஜெயமோகன் அமைத்திருப்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

"இளவரசியே...சூதர் பாடல்கள் வேதவனத்தின் கிளிகள் போல.நீட்டிய கைகளை அவை அஞ்சும்.அவற்றை அறியாது தியானத்தில் இருக்கும் யோகியரின் தோள்களிலேயே அமரும் (ப-126)

தொடரும்
       
      
   

பைரவி திருக்கோலம்


குங்குமத்தில் குளித்தெழுந்த கோலமடி கோலம்
பங்கயமாய் பூத்தமுகம் பார்த்திருந்தால் போதும்
அங்குமிங்கும் அலைபாய்ந்து அழுதநிலை மாறும்
தங்குதடை இல்லாமல் தேடியவை சேரும்

கைகளொரு பத்தினிலும் காத்தணைக்க வருவாள்
நெய்விளக்கின் நடுவினிலே நித்திலமாய் சுடர்வாள்
வெய்யில்மழை சேர்த்ததுபோல் வெப்பமாகிக் குளிர்வாள்
பைரவியாள் தேரிலேறி பவனிவந்து மகிழ்வாள்

ஆயகலை யாவுமவள் வாயிலிலே கூடும்
தாயவளின் பார்வையிலே நின்றுவிளையாடும்
ஓயும்வினை ஓடவரும் ஓங்கார ரூபம்
வேய்குழலில் வீணையினில் வித்தகியின் நாதம்

பக்தரெல்லாம் பரவசத்தில் பாடியாடி சிலிர்க்க
முக்தரெல்லாம் மூன்றுவிழி மோகனத்தில் லயிக்க
சித்தெரெல்லாம் லிங்கரூப சக்திகண்டு களிக்க
வித்தையெல்லாம் செய்பவளை என்னசொல்லி விளக்க

Thursday, September 25, 2014

வியாச மனம்-4 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)

கடலின் அக அடுக்குகளிடையே உப்புச்சுவையின் திண்மையிலும் பாசிகளிலும் பவளங்களிலும் ஊடுருவி வெளிவரும் மீனின் அனுபவம்,ஒரு நீச்சல் வீரனுக்கு ஒருபோதும் வாய்க்காது. வாழ்வின் அத்தனை அம்சங்களுக்கும் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்துவிட்ட ஒருவன் கணங்களின் சமுத்திரத்தில் மீனாகிப் போகிறான். தனக்கான இரையையும் தனக்கான வலையையும் அவன் ஒன்றே போல் அறிகிறான்.



இந்த மனோலயத்திற்கு மிகச்சிறந்த உதாரணம்,பீஷ்மர்.விதம்விதமான மனப்போராட்டங்களில் தன்னை முன்னிலைப்படுத்தாமல் காலம் முதுகில் சுமத்தும் காரியத்தை மட்டுமே முன்னெடுத்துச் செல்பவர் அவர். பீஷ்மரின் பிரம்மச்சர்யமும்,அரசபதவியில் அமர்வதில்லை என்னும் சங்கல்பமும் அத்தகைய மனவோட்டத்தின் வெளிப்பாடுகளே. ஒரு நிமித்திகரை வருவித்து ,பாடல் வழியேஅவர் சொன்னதை யூகித்து காசிக்குச் செல்வதா வேண்டாமா எனும் இறுதி முடிவை வியாசரிடம் கலந்தாலோசித்த பின்னர் எடுக்கலாம் என்று கிளம்புகிறார்.

இங்கு,தீர்க்கசியாமர் என்னும் முதுநிமித்திகர் வாயிலாக பீஷ்மருக்கு சொல்லப்பட்டது,வியாசரின் தந்தை பராசரரின் வரலாறு.கருவிலிருந்து வளரும் சூழலில் என்னவெல்லாம் இருக்குமோ அவற்றின் அதிர்வுகள் கருவிலிருக்கும் குழந்தையை சென்றடையும். ஆதிவசிட்டரின் நூறாவது மகன் சக்தியை மணம்புரிந்த முனிகுமாரியாகிய அதிர்ஸ்யந்தியின் கருவில் இருக்கையில், துயரமான சூழலொன்றில் பராசரனுக்கு வேத ஞானம் வாய்க்கிறது.ஆதி வசிட்டருக்கு நூறு மகன்கள்.அவர்களில், சக்தி நீங்கலாக மற்ற மகன்களை கிங்கரன் பிடித்துத் தின்று விடுகிறான்.

புத்திர சோகத்திலிருந்து விடுபட  ஆதிவசிட்டர் மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியும் அவருக்கு உணர்த்தியவை என்ன என்பதை "முதற்கனல்" மிக அழகாக விவரிக்கிறது.


" துயரத்தால் நீலம் பாரித்துக் கருமையடைந்த வசிட்டர்,ஆயிரத்தெட்டு தீர்த்தங்களில் நீராடினார்.புத்திரசோகத்தை நீர் நீக்குவதில்லை என்று உணர்ந்து ஏழு அக்கினிகளில்மூழ்கி எழுந்தார்.துயரம்  இன்னும் பெரிய அக்கினி என்பதை மட்டுமே அறிந்தார்.இச்சைப்படி உயிர்துறக்கும் வரம் கொண்டவராதலால் தர்ப்பைப் புல்லைப் பரப்பி அமர்ந்து கண்மூடி தியானித்து தன் உடலிலிருந்து ஏழுவகை இருப்புகளை ஒவ்வொன்றாக விலக்கலானார்.
அதன் முதல்படியாக,அவர் தன் நாவை அடைந்த நாள்முதல் கற்கத் தொடங்கிய வேதங்களை ஒவ்வொரு மந்திரமாக மறக்கத் தொடங்கினார்."(ப-81)

அவையனைத்தும் அதிர்ஸ்யந்தியின் கருவிலிருந்த குழந்தையாகிய பராசரரை சென்றடைந்தன.பராசரருக்கும் மச்சகந்திக்கும் மகனாய்ப் பிறந்து,உறவுமுறையில் தனக்குத் தமையனான வியாசரை  சந்திக்கச் செல்கிறார் பீஷ்மர்.

அஸ்தினபுரியிலிருந்து வேதவனத்துக்குள் பீஷ்மர் நுழைவதை பாறையொன்றிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த சித்ரகர்ணி என்னும் சிங்கம்,வனம் வழியே வந்தாலும் உண்மையில் விதிவழியே வந்தது என்கிறார் ஜெயமோகன்.

பீஷ்மர் வியாசரின் குடிலருகே கட்டப்பட்டிருந்த கர்ப்பிணிப் பசுவாகிய கந்தினியைக் கண்டு ,அது எதையோ சொல்ல வருவதாய் உணர்ந்த வண்ணம் உள்ளே செல்கிறார்.பீஷ்மர் தன்னையும் வியாசரையும் எங்கே நிறுத்திக் காண்கிறார் என்பதை வியாசரிடம் அவர் சொல்லும் வார்த்தைகளினூடாக   முதற்கனல் உணர்த்துகிறது.

"மூத்தவரே! விண்ணிலிருக்கும் தூய ஒலிகளைத் தேடிச் சென்று கொண்டிருப்பவர் நீங்கள்.நான் மண்ணின் எளிய சிக்கல்களுடன் போரிட்டுக் கொண்டிருப்பவன்.எனக்குச் சொற்கள் கைகூடவேயில்லை.ஆகவே அம்புகளைப் பயிற்சி செய்கிறேன்...

...நான் என்னை மிகக்கூரியஆயுதமென்பதற்கு அப்பால் உணர்ந்ததேயில்லை.இவர்கள் சொல்லும் அன்பு பாசம் நெகிழ்ச்சி என்பதெல்லாம் என் முன் வந்து சேரும் மானுடப் பிரச்னைகளைப் புரிந்து கொள்வதற்கான வெறும் அடையாளங்களாகவே தெரிகின்றன".(ப-89)

இவை ஒரு கர்மயோகியின் மனநிலையா என்பதை காவியத்தின் இனிவரும் போக்குகளின் துணை கொண்டு பின்னர் காணலாம்.

பருந்தின் பிடியிலிருந்து தப்பி சிபியிடம் புகலடைந்த புறாவின் கதையை வியாசர் பீஷ்மருக்கு சொல்லத் தொடங்கினார். வெளியே சித்ரகர்ணியாகிய சிங்கம் கந்தினியாகிய கருவுற்ற பசுவை நெருங்கியது.கதையை வியாசர் முடிக்கவும்,சிம்மம் பசுவைக் கவ்வி தோளில் போட்டுக் கொண்டு ஓடி மறையவும் சரியாக இருந்தது.

வியாசரின் மாணவன் சுதன், மனம் வெதும்பி அந்த சிங்கத்துக்கு தீச்சொல் விடுக்க முற்பட்ட போது,வியாசர் தடுத்து,"நில் சுதனே...பசுவைக் கொல்வதுதான் சிங்கத்தின் தர்மம்.ஆகவே சிங்கத்துக்குப் பசுவாதையின் பாவம் கிடையாது"என்ற வியாசரின் கூற்றை பீஷ்மர் தனக்கான வழிகாட்டுதலாய் எடுத்துக் கொண்டு புறப்பட்டார் என்பதே இந்தக் கதைக்குப் போதுமானது.

ஆனால் முற்றிலும் வேறொரு புரிதலை நோக்கி இந்த அத்தியாயத்தில் ஜெயமோகன் பொன் மெழுகுகிறார். உள்ளே சிபிச்சக்கரவர்த்தியின் கதையை வியாசர் சொல்லும் போதே வெளியே சித்ரகர்ணியும் கந்தினியும் பேசிக் கொள்கின்றன.

"சித்ரகர்ணி கால்களைப் பரப்பி அடிவயிற்றைத் தாழ்த்தி நாசியை நீட்டி,மிக மெதுவாகத் தவழ்வது போல நகர்ந்து வாசலில் நின்ற வெண்பசுவை அணுகியது.கருவுற்றிருந்த கந்தினி என்ற வெண்பசு,"இம்முறை நான் அடைக்கலம் கோரியது அவன் காதில் விழவில்லை"என்று சொல்லிக் கொண்டது."(ப-94)

முந்தைய பிறவியில் சிபியாய் இருந்தவன் பீஷ்மனே என்றும்,செம்பருந்தாய் வந்ததே சித்ரகர்ணி என்றும்,பிரபை என்னும் வெண்புறாவாய் வந்தது கந்தினி என்றும் சொல்லவருவதன் மூலம், "முதற்கனல்"எதை உணர்த்துகிறது??

வினைப்பகடைகளான உயிர்களை அந்த வினைகள் தேயும் வரை காலம் தொடர்ந்து உருட்டி உருட்டி அதே விளையாட்டை விளையாடுவதாய் சொல்கிறதோ?

பீஷ்மரைப் பார்த்து தனக்குள் சித்ரகர்ணி சொல்வதாய் ஜெயமோகன் எழுதும் வரிகள் இதனை உறுதி செய்கின்றன.

"நீ என்னை அறிய மாட்டாய். நானோ ஒவ்வொரு பிறவியிலும் உன்னைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.உன்னுடைய ரதசக்கரங்கள் ஓடித் தெறிக்கும் கூழாங்கற்கள் கூட பிறவிகள்தோறும் உன்னைப் பின்தொடர்கின்றன என நீ அறியவும் முடியாது.நான் இந்த முதுமை வரை வேட்டையாடிக் கண்டறிந்தது ஒன்றே.காலத்தின் முடிவில்லா மடிப்புகளிலெல்லாம் பின்னிப் பின்னிச் செல்லும் அழியாத வலையொன்றின் வெறும் கண்ணிகள் நாம்".(ப-87)


இந்த இடத்தை நான் முக்கியமானதாகக் கருதுகிறேன்.புறச்சூழலில் பகை போல் தென்படும் உறவுகளும் நம் வினைத்தொகுதியைக் கரைக்க உதவுபவையே. முந்தைய ஏற்பாட்டில் சம்பவங்கள் நிகழ்கின்றன என்ற புரிதல் ஏற்படும் போது விழிப்புணர்வுடன் விதியின் விளையாட்டில் பங்கேற்ற வண்ணமே பார்வையாளர் மனநிலையை அடைகிறோம்.

இதையே பற்றற்ற நிலை என்கிறார்கள். பகைவன் எனும் போர்வையில் வருகிற மற்றொரு வினை மூட்டையின் பால் குரோதம் வளராமல் அன்பே மலர்கிறது. பகைவனுக்கருளுவது அனுபவரீதியாய் நிகழ்கிறது.

இந்த தன்மை "மீட்டிங்குவந்து வினைப்பிறவி சாராமே" என்று திருவாசகம் சொல்லும் உன்னதத்திற்கு நம் உயிரை மலர்த்துகிறது.

பரிவ்ராஜக வாழ்வு வாழ்ந்த காலத்தில் நரேந்திரர் ஒருமுறை பிச்சையேற்று வாழும் வாழ்வில் சலிப்படைந்தார். உணவைத்தேடிப் போவதில்லை என்னும் தீர்மானத்துடன்வனமொன்றில் மரநிழலில் அமர்கிறார். இந்த மரத்திலிருந்து உதிரும் சருகுகள் போல் இந்த உடம்பும் வற்றி உலர்ந்து உதிரட்டும் என்று கண்மூடி அமர்பவர்,நீண்ட நேரம் தியானத்தில் ஆழ்கிறார்.தன்னை யாரோ உற்று நோக்குவதாய் உணர்ந்து கண்விழித்தபோது மிக அருகில் ஒரு புலி அமர்ந்திருப்பதைக் காண்கிறார். அவர் இதழ்களில் ஒரு முறுவல் இழையோடுகிறது.

"பிச்சையேற்று இந்த உடம்பை எதற்கு வளர்க்க வேண்டும் என்று கருதினேன்.பசித்திருக்கும் புலியே,உனக்கிந்த உடம்பு உணவாகட்டும்"என்று மீண்டும் கண்மூடி அமர்ந்து கொள்கிறார்.

சிறிது நேரம் கழித்து கண்விழித்துப் பார்த்தால் அந்தப் புலியைக் காணவில்லை.
"தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு
  சிந்தையில் போற்றிடுவாய்
  அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்
  அவளைக் கும்பிடுவாய்"
என்று பாடிய பாரதியின் மனநிலை நரேந்திரருக்கு அனுபவமாகவே நிகழ்ந்தது.
ஒருவேளை  புலி அவரை அடித்திருந்தால் கந்தினிப் பசுவின் மனநிலையில்தான் இருந்திருப்பார் என்று தோன்றுகிறது.

இம்முறை மகாஞானியாகிய வேதவியாசரின் எல்லைக்குள் அதே விளையாட்டை விளையாடிய இரண்டும் என்னவாகியிருக்கும் என்ற கேள்வி எழுகிற போதே அவைபிறவாப் பெருநிலையை எய்தியிருக்கும் என்பதற்கான அனுமானங்களை முதற்கனல் வாயிலாகவே பெறுகிறோம்.

கந்தினிப் பசுவை தூக்கிச் செல்லும் சித்ரகர்ணி,அதனை எங்கே வைத்துக் கொல்கிறது என்று சொல்லும்போது,
"கங்கைக் கரையில் நீத்தார் சடங்குகள் செய்யும் ஹரிதகட்டம் என்னும் புனிதமான படித்துறைக்கு கந்தினியைக் கொண்டு சென்று போட்டு அதன் வயிற்றைக் கிழித்து,கருவை எடுத்து தலையை அசைத்தபடியும் உறுமியபடியும் சுவைத்து உண்டது சித்ரகர்ணி.

மனமும் வயிறும் நிறைந்தபின்,தொங்கும் உதடுகளிலும் மோவாய் மயிர்முட்களிலும் குருதி மணிகள் சிலிர்த்து நிற்க,
அருகே இருந்த பாறை மேல் ஏறி நின்று,வலது முன்காலால் பாறையை ஓங்கி அறைந்து,காடுகள் விறைக்க, மலையடுக்குகள் எதிரொலிக்க,கர்ஜனை செய்தது.அப்பால் ஒரு கடம்ப மரத்தடியில் யாழுடன் நின்று அதைப் பார்த்து பிரமித்த சூதனின் பாடலுக்குள் புகுந்து அழிவின்மையை அடைந்தது.(ப-95)

பாடலுக்குள் புகுவதெனில் புகழுடல் எய்தியிருக்கும் என்றும், புகழுடல் அடைவதெனில் ஊனுடலை உதறியிருக்க வேண்டுமென்றும் உய்த்துணர முடிகிறது.இதனை பின்னால் ஒரு காட்சியாகவே வைக்கிறார் ஜெயமோகன்.
பிறவித் தொடரின் கடைசிக் கடனை வியாசர் முன்னிலையிலேயே சித்ரகர்ணி கழிக்கிறது.

விருப்பு வெறுப்பின்றி,விழிப்புணர்வுடன் விதியின் விளையாட்டில் இறங்குபவர்கள் வினைத்தொகுதி கரைத்து விடைபெறுகிறார்கள் என்னும் உபதேசத்தை வியாசரும் சித்ரகர்ணியும் கந்தினியும் சேர்ந்து, பீஷ்மருக்கும் நமக்கும் முதற்கனல் வாயிலாய் வழங்குகிறார்கள். 

(தொடரும்)












   

 

கண்திறக்கும் கருணை


வைத்திருக்கும் கொலுநடுவே வைத்திடாத பொம்மையொன்று
மைத்தடங்கண் விழிதிறந்து பார்க்கும்
கைத்ததிந்த வாழ்க்கையென்று கண்கலங்கி நிற்பவர்பால்
கைக்கரும்பு கொண்டுவந்து சேர்க்கும்
மெய்த்தவங்கள் செய்பவர்கள் பொம்மையல்லஉண்மையென்று
மேதினிக்குக் கண்டறிந்து சொல்வார்
பொய்த்ததெங்கள் பாழும்விதி பேரழகி பாதம்கதி
பற்றியவர் பற்றறுத்து வெல்வார்

மான்மழுவை ஏந்துகரம் மாலையிட நாணும்முகம்
மாதரசி போலழகி யாரோ
ஊன்பெரிதாய் பேணியவர் தேன்துளியைஉள்ளுணர்ந்தால்
உத்தமியைத் விட்டுவிடு வாரோ
வான்பெரிது நிலம்பெரிது வாதமெல்லாம் எதுவரையில்?
வாலைமுகம் காணும்வரை தானே!
நான்பெரிது என்றிருந்த பேரசுரன், நாயகியாள்
நேரில்வர சாய்ந்துவிழுந் தானே!

தொட்டிலிலே பிள்ளையென தோட்டத்திலே முல்லையென
தேவியவள் கண்சிமிட்டி சிரிப்பாள்
வட்டிலிலே அமுதமென வாய்நிறையும் கவளமென
வேண்டுமட்டும் வந்துவந்து குவிப்பாள்
எட்டும்வரை நாம்முயல எட்டாத உயரமெல்லாம்
ஏற்றிவிட்டு சக்தியன்னை நகைப்பாள்
பட்டதெல்லாம் போதுமென போயவளின் முன்புவிழ
பாதநிழல் தந்தவளும் அணைப்பாள்

இங்கிவளைப் பாடும்கவி இப்படியே நீளுமினி
எழுதவைத்து எழுதவைத்து ரசிப்பாள்
எங்குவலை யார்விரித்தும் எங்கும்விழமாட்டாமல்
எப்போதும் தீமைகளைத் தடுப்பாள்
என்கவலை உன்கவலை எல்லாமே அவளறிவாள்
ஏக்கமெல்லாம் முந்திகொண்டு துடைப்பாள்
கண்குவளை பூத்திருக்க கைவளைகள் ஒலித்திருக்க
கால்சலங்கை கேட்கவந்து சிரிப்பாள் 
 

Wednesday, September 24, 2014

வியாச மனம்-3 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)

ஆளுமைகள் மீது நாம் கட்டமைக்கும் பிம்பங்கள் அளவில்லாதவை. அவர்களின் எல்லா பக்கங்களையும் கணக்கிலெடுத்துக் கொள்வதென்பது, அவர்களின் படுக்கையறையில் எட்டிப் பார்ப்பதல்ல. அவர்களை நிறைகுறைகளுடன் புரிந்து கொள்வது. மகத்துவம் பொருந்தியவர்களாய் மட்டுமே சித்தரிக்கப்படுபவர்கள் ,மறுவாசிப்பில் பகிரங்கமாகிற போது நம்முடன் இன்னும் நெருக்கமாகிறார்கள்.


சந்தனு தன் மகன் தேவவிரதனின்  இளமையை வாங்கிக் கொண்டு வாழ்ந்தார் என்பதும் ஒர் உபசார வழக்குதான். ஒருவகையில்.தேவவிரதனின் பிரமச்சர்யம் அவனை என்றும் வளரிளம் சிறுவனாக மட்டுமே கற்பனை செய்து தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ளும் சலுகையை சந்தனுவுக்கு வழங்கியதோ என்னவோ. மகன் தனியனாய் இருக்கும் வரை தன் தனிப்பட்ட சுதந்திரம் கேள்விக்குட்படாதது என்கிற எண்ணம் நடுத்தர வயது ஆண்கள் பலருக்கும் உண்டு.


சந்தனுவை முதற்கனல் அவனுடைய மரணத்தை முன்வைத்தே அறிமுகம் செய்கிறது.அந்தச் செய்தி வெளியாகும் தருணத்தை சூட்சும சமிக்ஞைகள் மூலம் முதற்கனல் சொல்கிறது.காரணம்,அது ஓர் அரசனின் மரணம் மட்டுமல்ல என்பதைக் குறிப்பால் உணர்த்துவதே நூலாசிரியரின் நோக்கம்.
 

 தொலைக்காட்சி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்தில்,தலைவர்கள் உடல்நிலை கவலைக்கிடமென்றால்,வானொலி ஒலிக்கும் பொது இடத்தில் மக்கள் கவலையுடன் கூடி நிற்பது வழக்கம்.
 

அதுபோல அரசருக்கு நிகழும் அசம்பாவிதத்தை உணர்த்த காண்டாமணி எந்நேரமும் ஒலிக்கும் என்னும் அச்சத்துடன் மக்கள் கூடியிருக்கிறார்கள்.அப்போது வெறி மின்னும் கண்களும் சடைவீழ் தோள்களும்,அழுக்காடைகளுமாய் ஒரு பித்தன் கூட்டத்தின் இடையில் வந்து நிற்கிறான்.


"காண்டாமணியின் ஓசை எழுவதற்குச் சில கணங்களுக்கு முன்பு,அரண்மனைக்கு மேலிருந்து ஒரு சிறிய வெண்பறவை எழுந்து வானில் பறப்பதை அவர்களனைவரும் கண்டனர்."அது பறந்து போய்விட்டது.அதோ,அது பறந்து போய்விட்டது"என ஆர்ப்பரித்தான். "சந்திர வம்சத்தின் மணிமுடி மீது வந்தமர்ந்த அந்தப் பறவை,அதோ செல்கிறது.குருவம்சத்தின் முடிவு நெருங்கி விட்டது "என்றான்.கூடியிருந்த அனைவரும் அதைக்கேட்டு நடுங்கி அதிர்ந்து சினம் கொண்டனர்.(ப-60)

அதற்குள்ளாக சந்தனுவின் மரணச்செய்தி வந்து சேர்கிறது.அந்தப் பித்தன்,ஒருகாலத்தில் அஸ்தினபுரியின் புகழ்பெற்ற நிமித்திகனாய் இருந்த அஜபாகன் என்றும் தெரிய வருகிறது.அவனுடைய இரண்டு வாசகங்கள் மிகவும் முக்கியமானவை.ஒன்று சந்தனுவைப் பற்றிய வாசகம்.அது தன் இச்சைக்காக குருகுல மரபின் சீரொழுங்கைக் குலைத்தது பற்றிய கூரிய விமர்சனம்."தர்மத்தின் மேல் இச்சையின் கொடி ஏறிவிட்டது"என்பதே அந்த வாசகம்.அடுத்த வாசகம், சந்தனுவின் இரண்டு பிள்ளைகளான சித்ராங்கதன்,விசித்திர வீர்யன் ஆகியோரின் எதிர்காலம் குறித்த வரைபடம்."வெற்று இச்சை,வீரியத்தைக் கோடைக்கால நதிபோல மெலியச் செய்கிறது.பலமிழந்த விதைகளை மண் விதைக்கிறது" (ப-61).அங்கேயே தன்னுள் வீசும் அனலழுத்தம் தாங்காமல் அஜபாகன் இறந்து போகிறான்.


அதன்பின் பதினாறாண்டுகள் ஆட்சி செய்த சித்ராங்கதன்,வேட்டைக்குப் போகும்போது நீரில் தன்னைப் போலவே தோற்றமளிக்கும் கந்தர்வனைத் தீண்ட எண்ணி நீரிலிறங்கி காணாமல் போகிறான்.இந்தச் சூழலில் பகையரசர்கள் போர்தொடுக்க வருவார்கள் என்னும் செய்தியைக் கையாள குழப்பமான சூழலில் வந்து போகிற அமைச்சர், அஜபாகன் என்னும் சிறுதெய்வத்தின் கோயிலில் நுழைகிறார்.இவன்தான் பதினாறாண்டுகளுக்கு முன்னர் குருகுலத்தின் வீழ்ச்சியை பிரகடனம் செய்த நிமித்திகன்.


சிறுதெய்வங்களுக்கும் கடவுளுக்குமான வேறுபாட்டை நன்குணர முதற்கனல் இங்கொரு வாய்ப்பளிக்கிறது. வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வங்களானவை மானுட வாழ்வை அவதானிப்பவை. விதியின் தீர்ப்புகளை முன்பே உணர்பவை. இந்தப் பின்புலத்தில் ஒரு காட்சியை ஜெயமோகன் காட்டுவதோடு "பளிச்'சென்று ஒரு வரியையும் எழுதுகிறார்.


"பலபத்ரர் தன் இல்லத்துக்குத் திரும்புகையில் கணிகர் வீதியின் மூன்று முனையில் இருந்த சின்னஞ்சிறு ஆலயத்தருகே ரதத்தை நிறுத்தினார்.உள்ளே ஒரு கையில் ஒருமை முத்திரையும்,மறு கையில் அறிவுறுத்தும் முத்திரையுமாக சிறிய கற்சிலையாய் அஜபாகன் அமர்ந்திருந்தான்.அருகே கல்லகலில் சுடர்மணி அசையாமல் நின்றது.

அந்தத் துயரம் நிறைந்த கண்களையே சிலகணம் பார்த்துநின்ற பலபத்ரருக்கு,தெய்வங்களின் கண்களில் துயரம் மட்டுமே இருக்க முடியுமென்று பட்டது.ஏனென்றால் அவை முடிவற்ற காலத்தில் மானுட வாழ்க்கையைப் பார்த்து நிற்கின்றன." (ப-66)

இறந்து பதினாறாண்டுகளில் சிறுதெய்வமாகக் கொண்டாடப்படுகிறான் அஜபாகன்.குருகுலத்திற்கு ஆபத்து வருமோ என்னும் அச்சத்தில் பலபத்ரர் தன்னையுமறியாமல் அவன் ஆலயத்தில் சென்று நிற்கிறார்.தன் கண்முன் கண்ட நிமித்திகனின் சிறுதெய்வ அதிர்வுகளை துணைக்கழைக்கும் இந்தத் தவிப்பு மிகத் துல்லியமாய் பதிவாகியிருக்கிறது.

சோ.தர்மனின் தூர்வை நாவலில் இப்படியொரு பாத்திரம் வரும்.பெரியபிள்ளை என்பவர் மாய மந்திரங்களில் வல்லவர். தன் கிராமத்தில் உள்ள ஒருவனின் பூசணித் தோட்டத்திற்குச் சென்று ஒரு காய் கேட்பார்."காலங்கார்த்தால ஓசிமயிரு கேக்க வந்துட்டீர்ல,நெறபொலியில கழுத வாய வச்சாப்ல' என அந்த மனிதன் சலித்துக் கொள்ள,"மனுசங்க கேட்டா தரமாட்டீங்கடா! எலிக்குதான் கொடுப்பீங்க" என்றபடியே வந்துவிடுவார்.மாலையில் நூற்றுக்கணக்கான எலிகள் ஒவ்வொரு காயையும் குடைய இவன் பெரிய பிள்ளையிடம் ஓடிப்போய் நிற்பான்.திருநீறு மந்திரித்துத் தந்து, "ஒரு திசைய  மட்டும் விட்டுட்டு தோட்டத்தில எல்லா திசையிலயும் தூவு. தூவுறப்ப பெரியபிள்ள பெரிய பிள்ள ன்னு சொல்லிகிட்டே தூவு' என்பார். விடுபட்ட திசை வழியாக அத்தனை எலிகளும் வெளியேறும்.


சில ஆண்டுகளில் பெரியபிள்ளை இறந்துபோக,சமாதி எழுப்புவார்கள்.அவர் மறைந்த நாளில் படையல் போடுவார்கள்.தோட்டத்தில் எலித் தொந்தரவு நிறைய இருந்தால் பெரியபிள்ளை சமாதியில் வேண்டிக் கொள்வார்கள் என சோ.தருமன் எழுதியிருப்பார்.

ஆதிகாலம் தொடங்கி சிறுதெய்வங்கள் இப்படித்தான் உருவாகின்றன என்று தெரிகிறது.
கங்காதேவிக்கும் சந்தனுவுக்கும் பிறந்த பீஷ்மர்,தேவவிரதனாய், மணம் செய்து கொள்ளாமல் வாழ,சத்யவதியின் மீது சந்தனு கொண்ட தீராக்காதலே காரணம் என்பதை பாரதம் சொல்கிறது. 

அந்தக் காதல் எத்தகையது என்பதை ஜெயமோகன் சொல்கிறார்.
"பதினெட்டு ஆண்டுகளும் சத்யவதியின் மேனியின் வாசனையன்றி வேறெதையும் அறியாதவராக அரண்மனைக்குள் வாழ்ந்தார் சந்தனு,ஒவ்வொரு நாளும் புதியநீர் ஊறும் சுனை.ஒவ்வொரு காலையிலும் புதுமலர் எழும் மரம்.ஒவ்வொரு கணமும் புதுவடிவு எடுக்கும் மேகம்,"
(ப-71)
"அன்னை மணம் அறிந்த கன்றின் காதுகளைப் போல அவர் புலன்கள் அவளுக்காகக் காத்திருந்தன"(ப 71-72).
முதல் மூன்று உருவகங்களும், அன்னை-கன்று உவமையும் சந்தனுவின் மிதமிஞ்சிய காதலை சுட்டும் விரல்களாய் நீண்டு கொண்டே போய் "சட்"டென்று வானை முட்டி நிற்கின்றன. அந்த அமுதமே சந்தனுவின் உயிரைப் பருகியது என்பதை உணர்த்தும் விதமாய் முது நிமித்திகரின் சொல்லாய் ஜெயமோகன் எழுதுகிறார்,"கன்றுக்குப் பாற்கடல் மரணமேயாகும்".(ப-72)

"கொற்றவை" நூலில் தன் கருத்தை முன்வைக்க,பழம்பாடல் சொல்லிற்று என்னும் உத்தியைப் பயன்படுத்தும் ஜெயமோகன், முதற்கனலில் தன் குரலை ஒலிக்கச் செய்ய சூதர்களையும் நிமித்திகர்களையும் துணைக்கழைக்கிறார்.


சிலம்பில் கோவலன் மாதவி மீது கொள்வதும் இதே போன்ற தீராக்காதலே ஆகும். புதிய முறையில் மாதவி தந்த இன்பத்தில் கோவலன் "விடுதல் அறியா விருப்பினன்" ஆகிறான். அதற்குக் காரணம், கண்ணகி போல் இல்லாமல் மாதவி "கூடலும் ஊடலும் கோவலற்களித்து" மகிழ்விக்கிறாள்.

ஆனாலும் மாதவியை விட்டு கோவலன் நீங்க ஒரு சிறு ஊடல் போதுமானதாய் இருக்கிறது.அந்த அளவிற்கு கோவலனின் தன்னகங்காரம்  தொழிற்படுகிறது.ஆனால் மாபெரும் குருகுல மரபின் தோன்றலாகவும் சக்கரவர்த்தியாகவும் திகழும் சந்தனு பேரழகியான மீனவப் பெண்ணிடம் தன்னை முற்றிலும் ஒப்புவித்து நிற்கிறான்.


அவ்வகையில் சந்தனு வெறிகொண்ட காதலன்.அத்துடன், இதற்கு முன்னர் கங்காதேவியிடம் கேள்வி கேட்டு,அவளை இழந்த அனுபவமும் ஓர் எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.

சித்ராங்கதன் இறப்புக்குப் பின்னர்,விசித்திரவீர்யனுக்கு மணமுடித்து வைத்தால் குருகுலம் தழைக்கும் எனும் எண்ணத்தில்,காசி மன்னன் பீமதேவன் தன் இளவரசியருக்கு அறிவித்திருக்கும் சுயம்வரம்  சென்று சிறையெடுத்து வருமாறு சத்யவதி பீஷ்மனுக்கு ஆணை பிறப்பிக்கும் இடத்தில் முதற்கனல் விசை கொள்கிறது.

பீஷ்மனுக்கு சத்யவதி பிறப்பிக்கும் ஆணை,"  நீ காசிநாட்டின் மீது படையெடுத்துப் போ..அந்த மூன்று பெண்களையும் சிறையெடுத்து வா" என்பதாகும் (ப-77).

ஆதுரச்சாலையில் நிரந்தர சிகிச்சை மேற்கொள்பவனாய் பலவீனனாய் இருக்கும் விசித்திர வீர்யனுக்காக மூன்று பெண்களை சத்யவதி சிறையெடுக்கச் சொல்வதில் இருக்கும் அகங்காரத்திற்கும் ஆத்திரத்திற்கும் காரணம்,சுயம்வரத்திற்கான அழைப்பு,  அஸ்தினபுரத்திற்கு அனுப்பப்படவில்லை என்பதே!


அது மட்டுமல்ல.காசி மன்னனிடம் பெண் கேட்டபோது,விசித்திர வீர்யனுக்கு வைத்தியம் செய்பவர்களை அனுப்புமாறும்,அவர்களிடம் கலந்தாலோசித்து முடிவு செய்வதாகவும்  அவன் அனுப்பிய ஓலையையும் சத்யவதி காட்டுகிறாள்.

திருமணத்திற்கு முன் மருத்துவப் பரிசோதனை அவசியம் என இன்று எழுந்திருக்கும் குரலுக்கான முன்னோடி, காசி மன்னன் பீமதேவனோ?


"அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுற்றி ஐம்பத்திநாலு அரிவாள்" என்றொரு பழமொழி உண்டு. வீண் ஜம்பத்தாலும் அகந்தையாலும் உந்தப்பட்டு  இயலாதவனான விசித்திரவீர்யனுக்கு பாரத வர்ஷத்தின் மூன்று பேரழகியரை சிறையெடுக்கச் சொல்வது பெண்மைக்கு ஒரு பெண் இழைத்த மாபெரும் அநீதி.


"அந்த சிற்றரசனுக்கு அத்தனை திமிரா"என்று கொதித்தெழும் பீஷ்மனை தன் ஆயுதமாக்கிக் கொள்கிறாள் சத்யவதி. பெண்களை சிறையெடுக்க அவன் எவ்வளவோ மறுத்தும் உத்திகளால் சம்மதிக்க வைக்கிறாள்.

இதற்கு முந்தைய அத்தியாயத்திலேயே ஒரு சூசகக் குறிப்பு சொல்லப்படுகிறது.


"அஜபாகனின் சொற்களிலிருந்து நிமித்திகர் ஊகித்த கடைசிச் செய்தியை அவர்கள் சத்யவதியிடம் சொல்லவில்லை.  குருகுல மன்னன் சந்தனு இறந்த அன்று அதே முகூர்த்தத்தில், பாரதவர்ஷத்தில் எங்கோ குருவம்சத்தை அழிக்கும் நெருப்பு பிறந்திருக்கிறது என அவர்கள் அறிந்திருந்தனர்.அருந்ததிக்கு நிகரான எரிவிண்மீன் என்ற சொல்,ஒரு பெண்ணைக் குறிக்கிறதென்றும் ஊகித்திருந்தனர்."(ப-62)

அந்த நெருப்பை சிறையெடுக்க சத்யவதி பீஷ்மனை வற்புறுத்தி,அதில் வெற்றியும் கண்டிருந்தாள். தொடர் தோல்விகளுக்கு அடித்தளம் அமைக்கும் வெற்றி அது!!
(தொடரும்)  
   


Tuesday, September 23, 2014

வியாச மனம்-2 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது.நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் விஜயதசமி பூஜை.அவர் வைதீக மரபில் வந்தவர். அவருடைய குடும்பத்தினரும் அவருடைய சகோதரர் குடும்பத்தினருமாக வந்து பூஜை ஏற்பாடுகளை ஒழுங்கு செய்து கொண்டிருந்தனர். இரண்டு வயது முதல் பதினான்கு வயதிலான குழந்தைகள் இருந்தனர். நிவேதனத்திற்காக வைக்கப்பட்டிருந்த இனிப்புகளையும் சுண்டல் வடைவகையறாக்களையும் பழங்களையும் தொடக்கூடாதென்று அந்த நண்பர் குழந்தைகளை எச்சரித்த வண்ணம் இருந்தார்.


அதேநேரம் அவருடைய சகோதரரின் இரண்டு வயதுக் குழந்தை இலையில் வைக்கப்பட்டிருந்த இனிப்பை எடுத்து வாயில் வைத்தது. அதை ரசித்துப் பார்த்த அந்த நண்பர் "வாழைப்பழம் சாப்பிடலையோ கண்ணா?'என்று இலையில் வைத்திருந்த வாழைப்பழத்தை உரித்து ஊட்டத் தொடங்கினார்.

"அவனுக்கு மட்டும் நைவேத்யம் பண்ணாமலேயே தரேளே"என்று மற்ற குழந்தைகள் ஆட்சேபிக்க,"சும்மாருங்கோ! அவன் குழந்தை.அவன் என்ன வேணும்னாலும் பண்ணலாம்.அவன் சாப்பிட்டா சாமியே சாப்பிட்ட மாதிரி"என்றார்.

மனித வர்க்கத்தில் மட்டுமல்ல.எல்லா உயிரினங்களுக்கும் இந்தச் சலுகை உண்டு. இதற்கு வேதங்களிலோ சாத்திரங்களிலோ நீங்கள் விதிமுறைகளைத் தேடக்கூடாது.இது ஒவ்வோர் உயிருக்குள்ளும் இருக்கும் தாய்மையின் தீர்ப்பு. பறவைக் குஞ்சுகளையும் விலங்குகளின் குட்டிகளையும் காணும் போதெல்லாம் தாயினும் சாலப் பரிகிற மனம் கடவுளின் நீட்சியாய் இயங்குகிறது.

 ஜனமேஜயன் சிறுவனாயிருந்த போது தன் தம்பியருடன் வனத்தில் விளையாடப்போன சம்பவம் ஒன்று,முதற்கனலில் வருகிறது. "வேள்வி செய்து விளையாடலாம்"என்று ஜனமேஜயன் சொல்கிறான். பெரியவர்கள் செய்வதை வேடிக்கை பார்க்கும் பிள்ளைகளுக்கு அவற்றை விளையாட்டாகச் செய்து பார்க்கத் தோன்றுவது இயல்பு. குதிரையைக் கட்டிவைத்து அசுவமேத யாகம் நிகழ்த்துவதை வேடிக்கை பார்த்துள்ள அந்தச் சிறுவர்கள் குதிரைக்கு பதிலாக ஏதேனும் விலங்கொன்றைக் கட்டி வைக்க முற்படுகிறார்கள்.

பிறந்து எட்டே நாட்களான நாய்க்குட்டி ஒன்று புதரிலிருந்து தலைநீட்ட அதைக் கட்டி வைத்து பிள்ளைகள் விளையாடத் தொடங்கினர்."அந்தக் குட்டியை அதன் அன்னை ஷிப்ரதேஜஸ் என்று அழைத்தது"என்கிறார் ஜெயமோகன் விளையாட்டுக் குணம் மிகுந்த அந்த நாய்க்குட்டி,ஆகுதிக்கு வைக்கப்பட்டிருந்த மாமிச வாசனையை உள்வாங்கி,கட்டுகளை விடுவித்து ஓடோடி வந்து மானிறைச்சியை நக்கத் தொடங்கிற்று.
உடனே ஜனமஜேயன்,அது விளையாட்டு  வேள்வி என்பதையும் மறந்து ,
அது சின்னஞ்சிறு குட்டி என்பதையும் மறந்து தர்ப்பையால் அதன் முகத்தில் ஓங்கியறைய,தர்ப்பை முட்கள் கண்களில் குத்த விழியிழந்து ஷிப்ரதேஜஸ் ஓலமிட்டழுதபடி கல்லிலும் முள்ளிலும் தட்டுத் தடுமாறி ஓடியது என்றொரு சம்பவத்தை ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.



அதற்கடுத்து ஜெயமோகன் செய்யும் புனைவு அற்புதமானது. மூலநூலில் இல்லாத காட்சி இது. ஜனமஜேயன் முன்னால் நாய்களின் அதிதேவதையான சரமை வந்து தோன்றுகிறது.ஜனமஜேயனிடம் சரமை சொல்லும் சொற்கள் வாசகனின் உயிரை உலுக்குபவை.


"ஒவ்வோர் உயிருக்கும் அதற்கான மனமும் உடலும் படைப்பு சக்தியால் அளிக்கப்பட்டிருக்கின்றன.அவை ஒவ்வொன்றையும் உணர்ந்து அவையனைத்தும் தங்களுக்கு உகந்தபடி வாழ்வதற்கு வழிசெய்வதே மன்னனின் கடமை.நக்குவது நாயின் இச்சையாகவும் தர்மமாகவும் உள்ளது. அதைச் செய்தமைக்காக நீ அதன் மெல்லிய சிறு கழுத்தையும் மலர்ச்செவிகளையும் வருடி ஆசியளித்திருக்க வேண்டும்.உன் மனம் அதைக் கண்டு தாயின் கனிவை அடைந்திருக்க வேண்டும்.ஆனால் நீ நெறி வழுவினாய் என்றது சரமை.தவறை உணர்ந்த ஜனமஜேயன் எழுந்து கண்ணீருடன் கைகூப்பி நின்றான்."தவறுக்கான தண்டனையை நீ அனுபவித்தாக வேண்டும்.இந்த விழியிழந்த நாய்போலவே நீ வாழ்நாள் முழுக்க இருப்பாய் என்று சொல்லி சரமை மறைந்தது."(ப-38)

பொதுவாக இது போன்ற சாபங்கள் எப்படி தொழிற்படுகின்றன என்று விவரிப்பவர்கள் அவன் நாயாக மாறினான் என்பார்கள்.அல்லது அடுத்த நொடியே கண்ணிழந்தான் என்பார்கள். அல்லது சரமையிடம் மன்றாடி பகலெல்லாம் அரசனாகவும் இரவில் மட்டும் கண்ணிழந்த நாயாகவும் மாற சலுகை பெற்றான் என்பார்கள்.ஆனால் இந்த சம்பவத்தை ஜெயமோகன் மேலெடுத்துச் செலுத்தும் விதம் அழகானது.


"கண்ணிழந்த நாயின் பதைப்பை அதன்பின் தன்னுள் என்றும் உணர்ந்து கொண்டேயிருந்தார் ஜனமஜேயன்.தெரியாதவற்றிலும் அறியாதவற்றிலும் முட்டி மோதிச் சரிவதையே தன் வாழ்க்கையாகக் கொண்டிருந்தார்.புரியாதவை எல்லாம் அகத்தில் எத்தனை பெரிதாகின்றன என்று அவர் அறிந்தார்" (ப-38).

அது ஒரு நாய்க்குட்டி என்கிற தகவலே போதுமானது.ஆனால் ஷிப்ரதேஜஸ் என்னும் அழகான பெயர் ஜெயமோகன் வைத்தது.அது அந்த நாய்க்குட்டியை நமக்கு மேலும் நெருக்கமாக்குகிறது. அது மட்டுமல்ல.உள்ளபடியே வேள்வியில் வைக்கப்பட்ட ஆகுதியாய் இருந்தாலும் அதன்மேல் இச்சை கொள்வது நாயின் இயல்பு என்பதை நிலைநிறுத்துவது நம் மரபில் சொல்லப்பட்ட பழைய உவமை ஒன்றை கேள்விக்குள்ளாக்குகிறது. 

இராவணன் கபட சந்நியாசி வேடத்தில் வந்து தன் இச்சையை சீதையிடம் சொல்லும் போது, "வேள்வியில் அளிக்கப்படும் ஆகுதிப் பொருளுக்கு நாய் ஆசைப்பட்டது போலல்லவா உன் ஆசை இருக்கிறது"என சீதை சீறுவதாய் கம்பர் எழுதுகிறார்.


"புவியிடை ஒழுக்கம் நோக்காய்; பொங்கெரி,புனிதர் ஈயும்
  அவியை நாய் வேட்டதென்ன என்சொனாய் தீயோய்"       என்கிறார்.
இந்த உவமையை உள்வாங்கிய பாரதி,அதனை சற்றே மாற்றி, பாஞ்சாலியை தருமன் சூதில் வைத்திழந்ததைச் சொல்ல "வேள்விப் பொருளினையே புலை நாயின்முன் மென்றிட வைப்பவர்போல்" என்று பாடுகிறான்.

இந்தப் பார்வையை புரட்டிப் போடும் விதமாய் முதற்கனலில் சரமையின் வருகை அமைகிறது. (பின்னர் வந்த புராணங்களிலேயே சரமை பற்றிய குறிப்பு இருப்பதாகவும் தன் புனைவில் அதனைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் ஜெயமோகன் தனிப்பட்ட உரையாடலில் என்னிடம் தெரிவித்ததையும் இங்கு பதிவு செய்கிறேன்.)  

மூன்றாவதாக இதிகாசங்களில் கதை மாந்தர்களின் சாபங்களை எந்த இடத்தில் சொன்னால் சரியாயிருக்கும் என்றும் ஓர் உத்தி உண்டு. ஜனமஜேயன் சின்ன வயதில் வேள்வி செய்து விளையாடிய போது சாபம் பெற்றார் என்னும் செய்தியை,அவன் சர்ப்பசாந்தி வேள்வி செய்து அதன் நிறைவு நாளில் வேள்விக்கூடத்திற்குள் நுழையும் தருணத்தில் முதற்கனல் சொல்கிறது.

"அந்த இறுதிநாளில் வேள்விக்கூடத்தினுள் நுழைந்த போது அங்கிருந்த நூற்றுக்கணக்கான பந்தற்கால்களில் அவருடைய பிரக்ஞை நிலையழிந்து முட்டி முட்டித் தத்தளித்தது"(ப-38)

இந்தத் தட்டழிதல், வேள்வியின் மூல சங்கல்பத்தையே உடைத்துப் போட வரும் சின்னஞ்சிறுவனாகிய ஆஸ்திகனுடன் வாதமிட்டு தோற்கும் போதும் வெளிப்படுகிறது.

நான்காவதாக,சரமை என்னும் நாய்களுக்கான அதிதேவதையின் வருகையை முன்வைத்து சில விஷயங்களை சிந்திக்க வேண்டும். ஒவ்வோர் உயிரினத்திற்கும் ஓர் அதிதேவதை உண்டு.ஓஷோவிடம் ஒருவர் கேள்வி கேட்டார்."யானைகளில் நான் ஐராவதமாக இருக்கிறேன், பசுக்களில் காமதேனுவாக இருக்கிறேன் என்று கீதையில் கண்ணன் சொல்கிறான்.அப்படியென்றால் மற்ற பசுக்களிலோ யானைகளிலோ கடவுள் இல்லையா"என்பது அந்தக் கேள்வி. 
அதற்கு ஓஷோ சொன்ன பதில் இது.
"ஒரு யானையின் உச்சகட்டமான சாத்தியங்கள் ஐராவதத்தில் வெளிப்படுகின்றன. ஒரு பசுவின் உச்சகட்டமான சாத்தியங்கள் காமதேனுவில் வெளிப்படுகின்றன. கடவுள் எல்லா உயிர்களிலும் உண்டு என்றாலும் தன்னுடைய உச்சகட்ட சாத்தியத்தைத் தொட்ட உயிர் தெய்வமாகிறது"என்றார். 
நாய்களுக்கான அதிதேவதைசரமை பற்றி முதற்கனலில் வாசித்தபோது இந்தச் செய்தியை நினைவுபடுத்திக் கொண்டேன்.


யாகத்தில்  ஆஸ்திகன் எழுந்து நின்று நடத்தும் போராட்டத்தில் தீர்ப்பு சொல்ல வியாசரை அழைத்து வருவதற்கு வைசம்பாயனரும் அமைச்சர் பத்மபாதரும் குருஷேத்திரம் அருகிலுள்ள குறுங்காடாகிய வியாசவனம் சென்று சேர்வதை ஐந்தாம் அத்தியாயம் சொல்கிறது. அந்த நாளில்தான் வியாச பாரதம் எழுதி முடிக்கப்பட்டது என்று சொல்ல வருவதன் மூலம் ஜெயமோகன் வியாச பாரத உருவாக்கம் குறித்து கவித்துவமான பதிவுகளை முன்வைக்கிறார்.

  "வியாசர் குருஷேத்திரத்தை விட்டு விலகிச் செல்வதையே தன் இலக்காகக் கொண்டு,பாரதவர்ஷமெங்கும் அலைந்தார்.பனிமுடிகள் சூழ்ந்த இமயத்தின் சரிவுகளிலும்,மழையும் வெயிலும் பொழிந்து கிடந்த தென்னகச் சமவெளிகளிலும் வாழ்ந்தார்.கற்கக் கூடிய நூல்களையெல்லாம் கற்றார்.மறக்க முடிந்தவற்றையெல்லாம் மறந்தார்.அத்தனைக்குப் பின்னரும்,குருஷேத்திரத்தின் கனவுருத் தோற்றம் அவருக்குள் அப்படியேதான் இருந்தது.அவருக்குள்ளும் வெளியிலும் வீசிய எந்தக் கொடுங்காற்றும் அந்த ஓவியத் திரையை அசைக்கவில்லை"(ப-48)

இதற்குப் பிறகு ஜெயமோகன் காட்டும்  காட்சிகள் சிலிர்ப்பூட்டுகின்றன. அவற்றில் முதலாவது, குமரி முனையில் பராசக்தியின் பாதம் படிந்த பாறையில் அமர்ந்த போது வியாச மகரிஷி தனக்குள் மோதும் மூன்று கடல்களைக் கண்டாராம். இரண்டாவது, குமரிக் கடலில் அவர் வந்து நின்றபோது மீனவப் பெண்ணின் மகனாகிய அவர் உடலில் மீன் மணம் நுகர்ந்து பல்லாயிரம் மீன்கள் அலைமோதினவாம்.மூன்றாவதாக அங்கே யோகத்தில் அமர்ந்த போதுதான் ஐந்தாம் வேதத்தின் முதல் சொல்லை வியாசர் கண்டடைந்தாராம். இந்த செய்தியை ஜெயமோகனின் சொற்களிலேயே வாசிப்பது நல்லது.


"மூன்று கடல்களின் அலைகளும் இணைந்து நுரைத்த குமரி முனையில்,நெடுந்தவ அன்னையின் ஒற்றைக்காலடி படிந்த பாறையுச்சியில் அமர்ந்து அலைகளை நோக்கி அமர்ந்திருந்த போது அவர் தன்னுள் மோதும் மூன்று கடல்களைக் கண்டு கொண்டார்.
நூறுநூறாயிரம் சொற்களுக்கு அப்பாலும் அவருடலில் எஞ்சியிருந்தமீன்மணம்கண்டு,கீழே நீல நீரலைகளில் மீன்கணங்கள் விழித்த கண்களுடன் வந்து நின்று அலைமோதின.கண்களை மூடி அவர் யோகத்திலமர்ந்த போது மீன்கள் ஒவ்வொன்றாக விலக,அவருக்குள்ளிருந்து மறைந்த அத்தனை சொற்களும் சென்ற வெளியில் நிறைந்த "மா"என்ற முதற்சொல்லைக் கண்டடைந்தார்." (ப-48)

வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் மகாபாரதத்தை எழுதினார் என்றும், அப்படிஎழுதும் வேகத்தில் எழுத்தாணி உடைந்துவிட தந்தத்தை உடைத்து விநாயகர் எழுதினார் என்றும் சொல்லப்படும் தொன்மத்தை ஜெயமோகன் எதிர்கொள்ளும் விதம் புதுமையானது.   

பாரதமெங்கும் அலைந்து திரிந்து சொற்களைக் கண்டடைந்த வியாசர் வியாசவனத்தில் குடியேறிய போது,புதர்களை விலக்கி எழுந்த மதகளிறு,துதிக்கை சுழற்றி ஓங்காரமெனப் பிளிறி,அவரிருந்த கல்லால மரத்தைக் குத்தியதாகவும்,அதன் தந்தங்களில் ஒன்று ஒடிந்து மரத்தில் பதிந்திருக்க அதை எடுத்து ஓம் என வெண்மணல் விரிந்த கதுப்பில் எழுதியதாகவும் குறிப்பிடுகிறார்.


இங்கு விநாயகரை விட்டுவிட்டு முதற்கனலை ஜெயமோகன் நடத்துகிறார் என்று கொள்வதற்கில்லை. வந்தவர் விநாயகர் என்றும் சொல்லாமல்,விநாயக அம்சத்தை பிரதிட்டை செய்து வியாசர் பாரதம் எழுதினார் என்று சொல்வதன் மூலம் தொன்மத்திற்கும் புனைவுக்கும் இடையே  சமன் செய்கிறார் ஜெயமோகன்.

" ஒற்றைக் கொம்புள்ள கணபதியை தன்முன் நிறுவி,அவர் எழுதிய காவியத்தின் கடைசிச் சொல்லாகவும் ஓங்காரமே அமைந்தது.அந்த ஒலி அவருள் மட்டுமே ஒலித்தது.முழுமையிலிருந்து முழுமை நோக்கி வழிந்த காவியத்தை எழுதி நிறுத்திய தாழை மடலை,மதகளிற்று முகத்தானின் மண்சிலைக்கு முன்னால் வைத்துவிட்டு,மெலிந்த கைகளைக் கூப்பியபடி,கண்களிலிருந்து கண்ணீர் சொட்ட அமர்ந்திருந்தார் வியாசர்" (ப-50)
வியாசர் சொல்லச் சொல்ல தன் தந்தமொடித்து மேரு மலையின் மேல் விநாயகர் மகாபாரதத்தை எழுதினார் என்பது பாரதநாட்டில் ஆழமாக வேர்விட்டிருக்கும் கருத்து.
விநாயகரைப் பற்றிச் சொல்லும் போது பகழிக் கூத்தர் திருச்செந்தூர் பிள்ளைத் தமிழில்,
"கனவட கிரிமிசை குருகுல மரபினர்
கதைதனை யெழுதிமு டித்த கருத்தினர்
" என்கிறார்.
பிற்காலத்தில் முத்தமிழில் பாடப்பட்ட பாரதத்தை முன்னதாக மேருமலையில் எழுதியவர் என்னும் பொருளில் அருணகிரிநாதர்,
"முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே"
என்று பாடுகிறார்.


மதகளிற்றின் உடைந்த தந்தம் என்று மட்டும் சொல்லி தொன்மத்தை சமன்படுத்த நினைத்த ஜெயமோகன்,பன்னெடுங்காலமாய் வேர்விட்டிருக்கும் நம்பிக்கையை முற்றாகக் கடந்து போக மனமின்றி, பாரதம் எழுதிய தாழைமடலை விநாயகர் திருவுரு முன்னர் வைத்து வியாசர் வணங்குவதாக எழுதியிருக்கக் கூடும்.அந்த விநாயகருக்குத்தான் வெளிச்சம்!!

ஆஸ்திகன் கேட்டபடி தட்சனும் அவன் மனைவியும் விடுவிக்கப்பட,தன் வேள்வி நோக்கம் நிறைவேறாமல் ஜனமஜேயன் திகைத்து நிற்க அந்த வேள்விக்கூடத்தில் வியாசரின் ஆணைப்படி வைசம்பாயனர் மகாபாரதத்தை வாசிக்கத் தொடங்குவதாய் ஒரு காட்சியை நிறுவி அதன்வழி  கதைக்குள் நுழைகிறது "முதற்கனல்".நாகங்களின் தலைவனான தட்சனை ஆஸ்திகன் மீட்ட நாளாகிய ஆடி மாத வளர்பிறை ஐந்தாம் நாளே "நாகபஞ்சமி"என்று கொண்டாடப்படுவதாய் "முதற்கனல்" சொல்கிறது.

(தொடரும்)