Sunday, May 31, 2015

ஒருசொல்


ஒருசொல் ஒலித்திடும் சந்நிதியில்-அதை
உண்மையில் அவள்தான் சொல்வாள்
ஒருபூ உதிர்ந்திடும் பீடந்தனில்-அந்த
உன்னதம் அவள்தான் செய்வாள்
ஒருவில் தெரியும் செங்கரும்பில்-அதில்
ஒருகணை அவள்தான் எய்வாள்
ஒருகண் தெரியும் திருநுதலில்-அதில்
உறுகனல் வினைமேல் பெய்வாள்

குவியும் மாலைகள் நடுவினிலே-அவள்
குளிர்முகம் குறும்பாய் சிரிக்கும்
தவங்கள் எத்தனை செய்தோமோ-அவள்
திருமுன் எல்லாம் பலிக்கும்
கவலைக் குமிழ்கள் எல்லாமே- அவள்
கடைவிழி பட்டுத் தெறிக்கும்
சிவனின் கண்டம் பதிந்தவிரல்-வரும்
ஜென்மத் தொடர்ச்சிகள் அறுக்கும்

கடவூர் வீதிகள் அனைத்திலுமே -அவள்
கால்கள் பதித்து நடந்தாள்
தொடரும் சலங்கை ஒலியாக -நம்
திசைகள் அனைத்தையும் அளந்தாள்
 இடர்களின் சுமையில் திணறுகையில்-அவள்
 இருதோள் பலமென எழுந்தாள்
முடிவில்லாத  கதைகளுக்கோ -அவள்
முற்றுப் புள்ளியாய் மலர்ந்தாள்


ஆலய மணியின் அதிர்வலைகள் -அவள்
அழகிய மலர்ப்பதம் தேடும்
கோலக் குங்கும கதகதப்பில் -நம்
குழப்பங்கள் எல்லாம் தீரும்
வாலைத் திருவுரு அபிராமி -அவள்
வாசலில் நம்முயிர் வாழும்
நீலியின் மர்மப் புன்னகையில் -இந்த
நிகழ்கணம் நிகழ்ந்திடலாகும் 

Wednesday, May 6, 2015

ஏகலைவம்

( இதுவும் முகநூலில் இரண்டிரண்டு வரிகளாய் எழுதியதன் தொகுப்புதான்)

 ஏவிய அம்பை எதிர்கொள்ளும் போது
பீஷ்மர் கொஞ்சம் பதறிப் போனார்
உதறித் திரியும் துரியோதனர்க்காய்
பதறும் விதுரன் பண்ணுவதென்ன..


வார்ப்படம் செய்தது தருமனைப் படைக்க
வார்த்தபின் சகுனி வந்து தொலைக்க...


திருதிராஷ்டிரனுக்கு காட்சிகள் இல்லை
சஞ்சயன் சொல்லுக்கு சாட்சிகள் இல்லை

குருஷேத் திரத்தில் குவிந்த படைகள்
விஜயன் கேள்விக்கு விதியின் விடைகள்

மோதத் துடிப்பவர் மூர்க்கத்தில் இருந்தே
கீதையின் முதல் சொல் கண்ணன் புனைந்தான்

அர்ச்சுனன் மனதை ஆட்டிய கேள்விகள்
துரியோ தனனுக்குத் தோன்றவே இல்லையே

நதியில் போக்கிய பிள்ளையை மறுபடி
விதியில் போக்கவே வந்தாள் குந்தி

கேட்டதைக் கொடுத்தவன் கர்ணன் ஆயினும்
கேட்டதும் கொடுத்தவன் ஏகலைவனே

ஏய்ப்பவருக்கு சிலைவைக்கும் மரபை
ஏகலைவனே முதலில் தொடங்கினான்

ராஜ குமாரர்கள் தந்தது தட்சணை
ஏகலைவன் ஈந்தது பிச்சை

Tuesday, May 5, 2015

+2 தேர்வு முடிவுகள்: வந்ததும் செய்ய வேண்டியதென்ன....?



+2 தேர்வு  முடிவுகள் வெளிவந்ததுமே பெற்றோர்களும் மணவர்களும் கூட்டணி அமைத்து உடனடியாக செய்ய வேண்டிய செயல்கள் சில உண்டு.

1) வருகிற தேர்வு முடிவுகளை மனதார ஏற்றுக் கொள்ளுங்கள்.மிக மிக அரிதாக,மறு மதிப்பீட்டுக்கு தேவையான சூழல் ஏற்படக்கூடிய மிகச்சிலரைத் தவிர மற்றவர்கள் "இப்படி வந்திருக்கலாமே,அப்படி வந்திருக்கலாமே" என்பது போன்ற வீண் விவாதங்களையும் பதட்டங்களையும் தவிர்த்து விடுங்கள்.

2) குடும்பத்துடன் அமர்ந்து சில நிமிடங்கள் கண்மூடி பிரார்த்தனை செய்யுங்கள். முன்னதாகவே கல்லூரி விண்ணப்பங்களை வாங்கி வைத்திருப்பீர்கள். இப்போது மதிப்பெண்கள் அடிப்படையில் உங்கள் விருப்பக் கல்லூரிகளை இடம் கிடைப்பதற்கான சாத்தியக்கூற்றின் அடிப்படையில் ஒன்று இரண்டு மூன்று என வரிசைப்படுத்தி அனுமதி பெறுவதற்கான முதல் சுற்று முயற்சிகளுக்கு ஆயத்தமாக்குங்கள்.

3) இதில் இடையூறாக இருக்கக் கூடியவை உறவினர்கள் மற்றும் நண்பர்களின் தொலைபேசி/அலைபேசி அழைப்புகள்தான். இந்த அழைப்புகள் ஒவ்வொன்றுக்கும் நீங்கள் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் நேரமும் சக்தியும் வீணாகும்.'இவ்வளவு மதிப்பெண்கள் தானா ' என்பது போன்ற சிலரின் இங்கிதமில்லாத வினவுதல்கள் உற்சாகம் குறையச் செய்யும். இதற்கு ஒரே வழிதான் இருக்கிறது. உங்கள் தொலைபேசி/அலைபேசிகளின் ஆன்ஸரிங் மெஷினை பயன்படுத்துங்கள். "வணக்கம். எங்கள் மகன்/மகள் +2 தேர்வுகளில் வெற்றிகரமாக தேறியிருக்கிறார்.______ மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த மதிப்பெண்கள் எங்களுக்கு மிகுந்த மனநிறைவு தருகிறது. கல்லூரி சேர்க்கைக்கான வேலைகளில் இப்போதே இறங்கிவிட்டோம். விரைவில் நல்ல செய்தியுடன் தொடர்பு கொள்கிறோம். எங்கள் குழந்தைக்கு உங்கள் அன்பும் ஆசியும் என்றும் தேவை" என்று ஒலிப்பதிவு செய்து வைத்துவிடுங்கள். ஒவ்வொரு தொலைபேசிக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

4) வெற்றி வாய்ப்பை இழந்த குழந்தைகளையும் இதே நிதானத்துடன் கையாளுங்கள். அடுத்தது என்ன (What Next Attitude)  என்னும் அணுகுமுறையை பின்பற்றுங்கள். உதாரணமாக ஒரு நல்ல டூட்டோரியலில் சேர்ப்பது பற்றி குழந்தையுடன் கலந்து பேசுங்கள்.உங்கள் குழந்தையின் வகுப்பில் யாரும் தோல்வியுற்றிருந்தால் அந்தக் குழந்தையை தோல்வியின் விரக்தியிலிருந்து விரைவில் மீட்க இது போன்ற ஆலோசனைகளை அவர்களின் பெற்றோர்களுக்குக் கொடுங்கள்

5)  குழந்தையின் மேல்படிப்பு பற்றி யாரிடம் வேண்டுமானாலும் ஆலோசனை கேளுங்கள். ஆனால் மற்றவர்கள் முடிவெடுக்க அனுமதிக்காதீர்கள். ஒரு கட்டத்துக்கு மேல் குழந்தைகளின் விருப்பங்களுக்கும் தீர்மானங்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்

6) தேர்வின் வெற்றி தோல்வி,வாழ்வின் வெற்றி தோல்வியை ஒருபோதும் நிர்ணயிக்காது. எனவே குழந்தையின் மனவுறுதி ,உணர்வு நலம் போன்றவற்றை முக்கியமாகக் கருதி செயல்படுங்கள். தேர்வின் முடிவு எப்படியாயினும் நீங்கள் உங்கள் குழந்தைமேல் நிபந்தனையில்லா அன்பும் ஆதரவும் செலுத்துவதை உணரும் விதமாய் நடந்து கொள்ளுங்கள்..

வாழ்த்துகள்