Wednesday, August 7, 2013

சிவலயம்


எதிர்பார்த்து நின்றவர்க்கோ
ஏதொன்றும் புரியவில்லை
ஏறெடுத்தும் பாராதார்
எல்லாமே அறிந்திருந்தார்:

புதிர்போட்ட மனிதருக்கே
பதில்மறந்து போயிருக்க
விதியெல்லாம் கடந்தவர்தான்
விடைதாண்டிப் போயிருந்தார்

விதைபோட்டு வளர்த்தவரோ
வெய்யிலிலே காய்ந்திருக்க
பதறாமல் இருந்தவரே
பழம்பறித்துப் புசித்திருந்தார்

முதல்போட்ட வணிகருக்கோ
மூலதனம் கரைகையிலே
முதல்-ஈறு தெரிந்தவரே
முழுசெல்வம் அடைந்திருந்தார்

சதையெலும்பே சதமென்றோர்
சஞ்சலத்தில் அலைபாய
சிதைநெருப்பின் நடுவினிலும்
சிவனாண்டி சிரித்திருந்தார்

நதிபாய்ந்த நேரத்தில்
நனையவந்தோர் ஏமாற
நதிகாய்ந்த வேளையிலும்
நிர்மலரே குளித்திருந்தார்

மூடிவைத்த கைபோன்ற
முழுவாழ்வின்சூனியத்தில்
பாடிவந்த பரஞானி
பிரிந்தவிரல் அறிந்திருந்தார்  

தேடிவந்த தத்துவங்கள்
தொலைத்துவிட்டுத் தடுமாற
கூடிவந்த நிஷ்டையிலே
கோமணாண்டி கண்டிருந்தார்

ஆடிவந்த நாடகங்கள்
அதன்போக்கில் கதைமாற
பாடிவந்த பரதேசி
பொதுவெளியில் நடம்புரிந்தார்


நாடியவர் உறவென்று
நம்பியவர் அலைமோத
நாதன்தான் உறவென்றோர்
ஞானத்தில் லயித்திருந்தார்

கூடியவர் பிரிந்ததிலே
 கோடிப்பேர் தடுமாற
கூடாமல் கூடியவர்
கோடியின்பம் கண்டிருந்தார்

மாடிமனை கட்டியவர்
முகம்புதைக்க மடிதேட
வீடுவெட்ட வெளியென்று
வாழ்ந்தவரே வாழ்ந்திருந்தார்

Tuesday, August 6, 2013

ஆடிக்கு வந்தாள் அபிராமி


 உற்சவக் கோலத்தில் உலாப்போகும் நேரத்தில்
 உற்சாக அலங்காரமோ
கற்பகத் தாருவாம் கடவூராள் எழில்பார்க்க
கண்கோடி இனிவேண்டுமோ
பொற்பதம் மலர்க்கரம் பூமுகம் எங்கெங்கும்
பூவாரம் எழில்சிந்துமோ
கற்பனைக்கெட்டாத காருண்ய நாயகி
கடைக்கண்கள் எமைத்தீண்டுமோ

மின்னாயிரம் சேர்ந்த மலர்மேனி நிறமென்ன?
மைவண்ணக் கறுப்பல்லவோ
இந்நேரம் உற்சவத் திருமேனி எழில்மட்டும்
இதமான சிகப்பல்லவோ
பெண்ணாகப் பிறந்தார்க்கு புறப்பாட்டு நேரத்தில்
பூச்சொன்றும் புதிதல்லவோ
கண்ணான மாதரசி கவின்மஞ்சள் வண்ணத்தில்
கிளம்புவதே அழகல்லவோ

பெருவீதி நான்கினிலும் பெண்ணரசி வருகின்றாள்
பொன் ஆடிப் பூரத்திலே
ஒருநீதி நிலையாக ஒருகோடி கதிர்போல
ஒளிசிந்தும் மோனத்திலே
திருமாதர் விளக்கேந்த திசையெட்டும் கைகூப்பித்
தொடர்கின்ற நேரத்திலே
அருளாய மழைவீசி அபிராமி வருகின்றாள்
அரசாளும் கோலத்திலே

ஏறுகிற சிவிகையாய் என்னெஞ்சை பாவித்தால்
இந்தவிதி மாறிடாதோ
மாறுகிற விதியுந்தன் மணிவிழியின் சுடர்பட்டு
முற்றிலும் தீர்ந்திடாதோ
கூறுகிற தோத்திரம் குழைசெவியில் கேட்டதும்
கணநேரம் புன்னகைப்பாய்
 தேறும்வகை காட்டவே தேனமுதம் ஊட்டவே
தேரேறி வந்துநிற்பாய்