Friday, December 6, 2013

வ.உ.சி. வாழ்வில் இரண்டுமுறை விளையாடிய காந்தி


தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் வ.உ.சி.க்காக அனுப்பிய பணத்தை தன்னிடமே வைத்திருந்து "அந்தப் பணத்தை நான் அனுப்பிவிட்டேனா"என்று வ.உ.சிக்கே 21.04.1915 ல் கடிதம் எழுதிய காந்தி,20.01.1916 வரை தொடர்ந்து கடிதம் எழுதிய பிறகு 347 ரூபாய் 12 அணாவை காந்திக்கு அனுப்பினார் என்பது பழைய கதை.

அதற்குப் பிறகு வ.உ.சி.சிறையிலிருந்த காலத்தில் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த வேதியன் பிள்ளையும்
அவரின் சகலை  தண்டபாணிப் பிள்ளையும் 1912ல் ஐயாயிரம் ரூபாய்கள் வசூலித்து இந்தியா திரும்பியதும் வ.உ.சி.யிடம் தரும்படி காந்தியிடம் தந்தனுப்பினார்கள். 1920 வரை,அதாவது எட்டாண்டுகள் அந்தப் பணத்தை வ.உ.சி.யிடம் காந்தி கொடுக்கவில்லை.1915-1920 பலமுறை காந்தி வ.உ.சி.யை சந்தித்த போதும் அந்தப் பணம் தன்னிடம் இருப்பதைத் தெரிவிக்கவில்லை.

அதன்பின் வேதியன் பிள்ளை இந்தியா வந்தபிறகு சபர்மதி ஆசிரமத்திற்கே சென்று காந்ட்தியை சந்தித்துக் கேட்டபோது,
அந்தப் பணம் வேறு வகையில் செலவாகிவிட்டதாக சொன்ன காந்தி முன்பையைச் சேர்ந்த இசுலாமிய வணிகர் ஒருவருக்குக் கடிதம் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளச் சொன்னாராம்.

திலகரும் இந்த விஷயத்தில் தலையிட 1920 மே மாதம் மும்பையைச் சேர்ந்த இசுலாமிய வணிகர் கோபாளி எட்டாண்டுகளுக்கான வட்டியுடன் ஐந்தாயிரத்தை வ.உ.சி.யிடம் தர, "காந்தியின் தவறுக்கு நீங்கள் ஏன் வட்டி தர வேண்டும்"என்று வ.உ.சி. அசலை ம்ட்டும் பெற்றுக் கொண்டாராம்.

வேதியன் பிள்ளையின் மகனும் சிறந்த தமிழறிஞருமான திரு.வே.தென்னன் இன்றும் கோவையில் வாழ்கிறார்.88 வயதான இவரை நான் நன்கறிவேன்.


 இந்த விபரங்களடங்கிய கட்டுரை,வழக்கறிஞர் திரு.அனிதா.கு.கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ள "காந்தி கணக்கு" என்ற நூலில் இடம் பெற்றிருக்கிறது. இந்த நூலை வைத்துப் பார்த்தால் வ.உ.சி.வாழ்வில் காந்தி இரண்டுமுறை விளையாடியது தெரிகிறது. காந்தியுடன் நெருங்கிப் பழகியும் வ.உ.சி.தொடர்பான விபரங்கள் காந்தியின் அரசியல் வாழ்வு குறித்த எந்தப் பதிவிலும் இடம் பெறாமை குறித்தும் நூலாசிரியர் கேள்விகள் எழுப்புகிறார். இன்னும் பல அழுத்தமான செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

நூல் : காந்தி கணக்கு (விலை ;ரூ.100/)
நூலாசிரியர் : அனிதா.கு.கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு சூரியன் பதிப்பகம்
                  லியோலேபிள் கட்டடம்
                  இடுவம் பாளையம்
                   திருப்பூர்-641 687
                   தொ.பே: 94437 22618
                   தொடர்புக்கு :  anithaakrishnamoorthy@gmail.com
                                           

Monday, December 2, 2013

எல்லாம் அவனே


பொன்னிநதி தீரத்தில் புறப்பட்ட கங்கையென
புனிதத்தின் அலைவீசி வந்தான்
அன்புநதி கடலாகி ஆர்ப்பரிக்கும் விதமாக
ஆனந்த அலையிங்கு தந்தான்
துன்பநதி நடுவினிலே தூசாகி அலைபவர்க்கு
திருவடிகள் படகாக்கித் தந்தான்
இன்பநதி சிவமாக இருகரையே தவமாக
"இதிலிருநீ மீனாக" என்றான்

கண்ணீரின் சுகவெள்ளம் கங்குகரை காணாமல்
கன்னத்தில் வழிந்தோடச் செய்தான்
மண்ணெங்கும் உலவுகிற மூலிகைத்தேன் காற்றாக
மனிதர்க்கு இதம்செய்ய வந்தான்
விண்ணென்ற ஒன்றைநாம் வாழ்கின்ற வையத்தில்
விரித்திடவே வழிசொல்லித் தந்தான்
வண்ணங்கள் கதைபேசும் வானவில்லின் முதுகேறி
வானுக்கும் புதுசேதி சொன்னான்

கருவென்ற சிறைதேடிக் கால்சலிக்க நடக்கின்ற
கணக்குகளைக் களவாடிக் கொண்டான்
ஒருநூறு பிறவிகளின் ஓயாத சங்கிலியை
ஒருமூச்சில் பொடியாக்கித் தந்தான்
குருவென்னும் அற்புதமாய் வரம்பொங்கும் கற்பகமாய்
குளிர்கொண்ட கனலாக வந்தான்
இருளென்றும் ஒளியென்றும் இலதென்றும் உளதென்றும்
எல்லாமே அவனாகி நின்றான்

Friday, November 29, 2013

முதன்முதலாய் காசி போன போது...3

"கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்" என்று குகனை அறிமுகப்படுத்துவார் கம்பர்.இன்றும் கங்கைக்கரையில் கணக்கில்லாத நாவாய்கள் நிற்கின்றன.படகுக்காரர்களும் வேட்டைக்காரர்கள் போல் வாடிக்கையாளர்களைக் குறிவைத்துக் காத்திருக்கிறார்கள் .இரண்டு மணிநேரப் படகுப்பயணத்திற்கு 250 ரூபாய் என்று பேசிப் படகேறினோம்

.கங்கைக்கரையிலிருந்து நதிக்குள் படகு புகுமுகத்தில் போக்குவரத்து நெரிசல்.படகின் கயிறவிழ்த்த கையோடு முட்டிக் கொண்டு நிற்கும் பத்துப் பதினைந்து படகுகளைக் கைகளால் தள்ளிக்கொண்டே படகோட்டி கங்கைக்குள் பிரவேசம் நிகழ்த்தினார்.ஒவ்வொரு படித்துரைக்கும் "காட்" என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.உடன் வந்த நண்பர்கள் காட் கதைகள் கேட்கக் காதுகளைத் தீட்டிக் காத்திருக்க மனம் கங்கைக்குள் இறங்கியிருந்தது.ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்ப் பிரவாகத்தில் இருக்கும் நீர்த்தடத்தில் இறங்கியிருப்பது ,தொடர் பிறவிகளின் ஆன்மப் பயணத்தில் ஒரு மைல்கல் என்று பட்டது. 
 இரவு ஏழு மணியளவில் நடைபெறும் கங்கா ஆரத்தி,கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும் என்று முன்பே சொன்னார்கள்.அதுவரை எங்கள்படகு கங்கையிலேயே திரிந்து கொண்டிருந்தது.
ஒரே நேரத்தில் இருவேறிடங்களில் நடந்தது கங்கா ஆரத்தி.ஜோதிமயமாய்அமைந்திருந்த அந்த ஆரத்தியை அர்ச்சகர்கள் இசைக்கேற்ப தாள அசைவுகளுடன் நிகழ்த்தினர்.ஒருபுறம் ஏழு பேரும் மற்றொரு புறம் ஐந்து   பேரும் நிகழ்த்தின ஆரத்தி ஒருமணிநேரம் நீடித்தது.கங்கையை உள்ளபடியே தெய்வமாய் வணங்குகிறார்கள் என்பது சந்தோஷமாக இருந்தது.மறுநாள் காலை கங்கையில் குளிக்கிற போது,அருகே ஒரு பெண் கால் செருப்புடன் துணியை அலச கங்கையில் இறங்க,"கங்கா மாதா கீ... செப்பல்?' என்று சீறிக்கொண்டு கரை நோக்கிப்
 பாய்ந்தார் ஒருவர்.
பத்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் தீபமும் மலர்களும் கொண்ட தொன்னைகளை வாங்கி கங்கையில்  மிதக்க விடுவது மிகவும் இதமான அனுபவம்.கங்கைக் குளியல் சர்வ நிச்சயமாய் சிலிர்ப்பைக் கொடுக்கிற விஷயம்.எத்தனையோ நதிகளில் இறங்கியிருந்தாலும் கங்கைக் குளியல் தனிதான். அடுத்த தீபாவளிக்கு 'கங்கா ஸ்நானம் ஆச்சா" என்று யாராவது கேட்டால் "அச்சா' என்று பதில் சொல்லலாம்.
கோடைக்காலம் ஆதலால் தெளிந்தோடிக் கொண்டிருந்த கங்கையின் குளுமையில் தாய்மையின் பெருக்கம்.நீண்ட நேரம் நீராடச் சொல்லும் அழைப்பு அலையலையாய் வந்தது.

காசியிலிருந்துடெல்லிக்கு வாகனப் பிராப்தி ரயில்.ஆதித்யா சர்மா என்ற வயதுச் சிறுவன் எங்களிடம் வழிநெடுக பேசிக்கொண்டே வந்தான் .அவ்வப்போது அவன் சொன்ன அங்கிள்ஜீ என்ற சொல்லையும் எம்.பி. மெமோரியல் ச்கூல் என்பதையும் தவிர வேறேதும் புரியவில்லை.எங்கலோடு அமர்ந்து அளவளாவ அனுமதித்த அவனின் அப்பா சர்மாவுக்கும்,தாத்தா சர்மாவுக்கும் எங்களிடம் அவன் பிஸ்கட் பெறுவதை அனுமதிக்க முடியவில்லை.குளிர்சாதனப் பெட்டிக்குள் அவர்களின் ஆசாரம் புழுங்கியது.
காசிக்கு ஒருமுறையேனும் போக வேண்டும் என்னும் எண்ணம் நிறைவேறிய நிறைவில் இருந்த போது அடுத்தடுத்த அழைப்புகளை  காசி கொடுக்குமென்று நான் நினைக்கவில்லை. சற்றே துயரமான சூழலில் காசியை நோக்கிய அடுத்த யாத்திரை வாய்த்தது.

(தொடர்வோம்)

Wednesday, November 27, 2013

முதன்முதலாய் காசி போன போது.......2

 
 
 
பாலத்தின் மேல் தடதடத்த ரயிலிலிருந்து பார்த்த போது, கம்பீரமான பிரவாகத்தில் இருந்தாள் கங்காமாதா.வாரணாசி ரயில்நிலையத்தில்காலை எட்டரை மணிக்கு இறங்கும்போதே வெறித்தனமான பக்தியுடன் வெய்யில் காசியை வலம்வரத் தொடங்கியிருந்தது.நாட்டுக்கோட்டை நகரத்தார் காசி விசுவநாதரின் நித்திய பூஜைக்குப் பொறுப்பேற்றிருந்ததால் தஞ்சை நகரத்தார் சங்கத்திலிருந்து கடிதம் பெற்று வந்திருந்தார் நண்பர் செழியன்.நகரத்தார் சங்கம் என்றால்
யாருக்கும் தெரிவதில்லை."நாட்கோட் சத்ரம்" என்றால் வீதியில் வெறுமனே நிற்கும் மாடுகள் கூட வாலைச் சுழற்றி வழிகாட்டுகின்றன.எண்பது ரூபாய் கேட்டார் ஆட்டோக்காரர்.அவர் கடந்த தொலைவுக்கு நம்மூரில் நிச்சயம் இருநூறு ரூபாய் கேட்டிருப்பார்கள்.ஒற்றையடிப்பாதைதான் எல்லா வீதிகளும்.சென்னை மவுண்ட் ரோடினும் சந்தடி அதிகம்.வழிமறிக்கும் தாதாக்களாய் வழியெங்கும் கோமாதாக்கள்.இருமுறை நின்ற ஆட்டோவை ஆசுவாசப்படுத்தி "நாட்கோட் சத்ரம்" வாசலில் விட்ட ஆட்டோக்கிழவருக்கு 100 ரூபாய் தந்து மீதி வேண்டாம் என்றதும்,கணக்கை நேர் செய்வது போல் இருபது முறை கும்பிட்டார்.
தமிழ்க்குரல்களால்  நிரம்பி வழிந்தது நாட்டுக்கோட்டை சத்திரம்.150க்கும் அதிகமான அறைகள்.ஏசி அறைகள் ஏதுமில்லை என்றாலும் கிகக் குறைந்த கட்டணத்தில் வசதியான விசாலமான அறைகள் தருகிறார்கள். காலைப் "பலகாரம்" இருபது ரூபாய். மதியம் அருமையான தென்னிந்திய உணவு-30 ரூபாய்.இரவுப்பலகாரமும் 20 ரூபாய்.

 
அவசரம் அவசரமாய்த் தயாராகி வரும்போது சிற்றுண்டிக்கான நேரம் கடந்திருந்தது. வாடகைக்கார் பிடித்து உள்ளூர்க் கோயில்கள் சிலவற்றுக்குப் போனோம். துர்கா கோவில் அனுமார் கோவில், காலபைரவர் கோவில்.கோவில் மாதிரியே இல்லை.பளிங்கு பங்களாக்களில் கடவுள்கள் காட்சி தருகிறார்கள்.காலபைரவர் பிரசித்தி பெற்றவர்.ஒரே சங்கடம் அங்குள்ள ஆன்மீக அடியாட்கள். இருபது ரூபாய் கொடுத்து இறைவனுக்கு நீங்கள் வாங்கிச் சென்ற மாலையை   
உங்கள் கண்முன்பே அடுத்தவருக்கு மாட்டிவிட்டு ஐம்பது ரூபாய் வாங்கிவிடுவார்கள்.
 
அவர்கள் கண்களைப்பாராமல் கடந்து போனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. பார்த்து விட்டால் உங்களின் எந்தக் கெஞ்சலும் எடுபடாது."தண்டம்" என்று அதட்டுவார்கள்.அவர்களுக்கெப்படி தெரியும் என்று ஆச்சரியம் வேண்டாம். "தண்டம்" என்றால் குனிய வேண்டும் என்று அர்த்தமாம். உங்கள் முதுகுத்தண்டில் ஒங்கி அறைந்து,திட்டுவதுபோல் மந்திரம் சொல்லிவிட்டு, ஐம்பது நூறு என்று தண்டம் அழ வைக்கிறார்கள்."கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல' என்றெழுதிய வள்ளுவர் காலத்திலேயே காசி காலபைரவர் கோவில் வந்திருக்க வேண்டும்.சந்நிதியில் இந்த சங்கடத்திலிருந்து தப்பி வந்தாலும் பிரகாரத்தில் அவர்களின் படைகள் படமெடுத்து ஆடுகின்றன. மயிலிறகும் கையுமாய் உட்கார்ந்திருப்பவர்கள் வருந்தி அழைத்து உடம்பை மயிலிறகால் வருடி தட்சிணை வாங்கி விடுகிறார்கள்.
அவர்களில் ஒரு சிறுவன். அதிகம் போனால் வயது 15 இருக்கும்.தென்னிந்தியர்கள் அனைவருமே ஆந்திரர்கள் என்பது அவன் அபிப்பிராயம்."அண்ணா !தப்புலேது! ரண்டி" என்கிறான்.
இவர்கள் அத்தனை பேரிடமிருந்தும் பாக்கெட்டுக்கு சேதாரமில்லாமல் தப்பித்தவன் நான்மட்டும் என்பதை அதாரபூர்வமாய் அறிவிக்கிறேன்.  அங்கிருந்து போனது சாரநாத் . புத்தர் ஞானம் பெற்று வந்ததும் முதன்முதலாய் உபதேசம் செய்த இடம்.அங்கேயே அசோகர் நிறுவிய 1500 ஆண்டுகால ஸ்தூபி ஒன்றும் உள்ளது.
வெய்யிலிலும் அனற்காற்றிலும் ஏசி கார் புழுங்கித்தள்ளியது. சத்திரம் திரும்பி உண்வும் ஒய்வும் கொண்டபிறகு,சத்திர உதவியாளர் முத்து கதவைத்தட்டினார்."ஒருவரை உடனனுப்புகிறேன்.கோவிலுக்குப் போய் வந்து விடுங்கள்"என்றார்.பாதுகாப்புக் காரணங்களுக்காக வாட்ச்,பேனா,செல்ஃபோன் அனுமதியில்லை.

கோவிலுக்கு மிக அருகில் சாட்சி விநாயகரைக் காட்டி வணங்கச் சொன்னார்கள். நாம் காசிக்கு வந்தோம் என்பதற்கு அவர்தான் சாட்சி சொல்வாராம். பலத்த பாதுகாப்பைக் கடந்து அன்னபூரணி முன்உருகி நின்று தள்ளும் கூட்டத்தின் இடிபாடுகளைச் சமாளித்து, வாசலில் வாங்கிய பால்கிண்ணத்தைக் குத்து மதிப்பாய்க் கவிழ்த்து, விரல்கள் விட்டுத் துழாவியபோது,நம் கைகளுக்குத் தட்டுப்படுகிறார் விசுவநாதர். அந்த சில விநாடிகளுக்கு விலைமதிப்பில்லை, அந்தத் தாக்கம் கலையாமல் விசாலாட்சி சந்நிதிக்கு வந்தால்  ஆற அமர தரிசனம்.
 
அதுவரை இருந்த சுற்றுலா மனப்பான்மை விசுவநாதரின் ஸ்பரிசத்துடன் விடைபெற்று உள்ளே சட்டென்று அமைதி பரவியது.கங்கைக் கரைநோக்கிக் கால்கள் நடக்க, ஒரு சுழல்போல உள்ளே உருக்கொண்டது பாடல்.
 
 
விநாடிநேரம் விரல்பிடித்த விஸ்வநாதம்-என்
வினைகளெல்லாம் அவன்மடியில் விழுந்த கோலம்
கனாவில் அவன்முகம் குலாவும் தினம் தினம்
வினாமலர்ந்த நேரமவன் விடைகள் சாஸ்வதம்

ஓமப்புகை வந்து உயிரினை வருடிட
ஈமப்புகை கங்கைக் கரையினில் எழுந்திட
நாமம் மொழிந்திடும் நாவில் கமழ்ந்திடும்
ஞானம் எனும் லயமே
மோகம் விளைந்திடும் தேகம் இதுஇனி
நாளும் சிவமயமே
ஹரஹர ஷிவஷிவ எனும்நதி அலைகளில்
அமிழ்ந்திட வினைவிழுமே
திருவடி சரணென உளமிக உருகிட
சிவனருள் துணைவருமே
 
 
வேர்விடும் அகந்தையும் விழுகிற தருணம்
நேர்வரும் விஷ்வேஷ்வரனே சரணம்
காரணி அன்ன பூரணி அன்னை
கண்முன் நின்றுவிடு
காட்சி தரும்விசா லாட்சியின் சந்நிதி
கதியென்று விழுந்துவிடு
அம்பிகை துணையென நம்பிடும் மனதினில்
நன்மைகள் நிரந்தரமே
செம்பினில் ஏந்திய கங்கையின் தீர்த்தமும்
சங்கரன் தரும்வரமே 

 
கங்கைக் கரையில் நின்ற போது அங்கே சித்தித்த வாகனப் பிராப்தி-படகு
(தொடரும்)

Tuesday, November 26, 2013

முதன்முதலாய் காசி போன போது.......

(சத்குரு அவர்களுடன் காசியில் நிகழ்ந்த உரையாடலின் ஒளிப்பதிவு தற்போதுஸ்டார் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது. அது நான்காவது முறையாய் காசி சென்றபோது கிட்டிய பெரும்பேறு.2009ல் முதன்முதலாய் காசி சென்ற அனுபவங்களை அப்போது இணையக் குழுமம் ஒன்றில் எழுதியிருந்தேன்.அவை இப்போது உங்களுக்காக..)
 
கல்கத்தாவின் அவ்வளவு பெரிய விமான நிலையத்தில் என் கண்கள் வேறெதையும் தேடவில்லை. என் பெயர் எங்கே தட்டுப்படுகிறது என்றுதான் தேடினேன்.தேடுங்கள் கண்டடைவீர்கள் என்பதற்கேற்ப,என் பெயரையும்,உடன் வந்த நண்பர் மாரியப்பனின் பெயரையும்துவாலைச்சீட்டு ஒன்றில் (துண்டுச்சீட்டை விட சற்றே பெரிது)எழுதிப் பிடித்தபடி பான் மணக்கும் வாயோடும்,தூக்கக் கலக்கம் மிதக்கும் கண்களோடும் நின்றிருந்தார் ஒருவர்.விமானத்தில் இருந்து இறங்கிய கையோடு அவசரம் அவசரமாய் பாரதீய பாஷா பவன் போய் சேர்வதற்குள் கவிஞர் வைரமுத்துவிற்கு சரஸ்வதி சம்மான் விருது கொடுத்து முடித்திருந்தார்கள். விருது பெற்ற சக எழுத்தாளர்கள் அவரவர் மொழியில் ஏற்புரை வாசிக்க கொஞ்சமும் புரியாததால் கரம் சாயா குடிக்கப் போய்விட்டேன்.திரும்ப வந்து இருக்கையில் அமரவும் கவிஞர் வைரமுத்து ஏற்புரை தொடங்கவும் சரியாக இருந்தது.
 
"சங்கம் வளர்த்த மண்ணிலிருந்து வங்க மண்ணுக்கு வந்திருக்கிறேன். மீசை வைத்த பாரதி மண்ணிலிருந்து தாடி வைத்த தாகூர் மண்ணுக்கு வந்திருக்கிறேன்" என்று அவர் தொடங்கிய போது தமிழகத்திலிருந்து போயிருந்த 54 சொச்சம் பேர்களும் கல்கத்தா தமிழ்ச்சங்கத்தினரும் எழுப்பிய கரவொலியில் அரங்கம் அதிர்ந்தது என்றால் நீங்கள் நம்பத்தான் வேண்டும்.ஏனென்றால் அரங்கத்தின் அறுதிப் பெரும்பான்மை இந்தக்கூட்டம்தான்.எப்போதும் போல் இயல்பாக தேநீர் பருகிக் கொண்டு விழாவை நடத்தி முடித்து விடலாம் என்று நினைத்த பாஷா பரிஷத்தின் பாச்சா எங்களிடம் பலிக்கவில்லை.தென்மாவட்டங்களிலிருந்தும் தஞ்சை திருச்சியிலிருந்தும்  கிளம்பி வந்திருந்த எங்கள் பேரவை நண்பர்களின் ஆர்வ அலையில் அரண்டு போனார்கள் பாவம்.விழா முடிந்தது..புகைப்படப் படலம் தொடர்ந்தது
 
பாரதீய பாஷா பவன் நிர்வாகம் வருந்தி அழைத்த விருந்தைப் புறக்கணித்து விட்டு நல்ல வங்காள உணவு எங்கே கிடைக்கும் என்று விசாரித்தோம்.ஜமுனா சினிமா எதிரில் உள்ள கஸ்தூரி உணவகத்தை உள்ளூர்க்காரர்கள் பரிந்துரைத்தார்கள்.கொழுத்த மீன்களும்,நெய்மணக்கும் சோறும்கமகமத்தன.கடல்மீன்களின் கலம்பகம் மேசையெங்கும்.ஓரிரு நாட்களுக்கு முன் திறந்த வாயோடு நீந்திய மீன்கள் நீங்காத் துயிலில் கிடக்க, நாங்கள் பிளந்த வாய்களுடன் சாப்பிடவும் மறந்து சிலையானோம்.அப்புறம் மீனோடு மீனாகிய என்னை நண்பர்கள் கரைசேர்த்தனர்.
 
மயூரி ஹோட்டலில் எங்களைக் கொண்டு வந்து சேர்த்த அந்த ஓட்டுநரை அப்போதுதான் இன்னும் சரியாகக் கவனித்தேன்.அழுக்குப் படிந்த அலட்சிய வெள்ளையில் குர்தா-பைஜாமா.கல்கத்தாவிலேயே கிடந்துழன்றும்,கல்கத்தா வீதிகள் குறித்து அறியாமை,வங்கால மொழி தெரியாத எங்களைப் பார்த்து அவ்வப்போது சிநேகமாய் சிரிக்கும் கண்கள்.தட்சிணேஸ்வரம் போய் வந்த பிறகு அவர் விடைபெற,சமீபத்தில் திறக்கப்பட்ட தென்னிந்திய உணவகம் தேடிக் கிளம்பினார்கள் நண்பர்கள். எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊரின் உணவு ரகங்களுக்குமுதலிடம் தருவதென் வழக்கம்.ஆனாலும் கூட்டணி தர்மத்தைக் கைவிடாமல் அவர்களுடன் கிளம்பினேன்.அப்புறம்தான் தெரிந்தது,அடுத்த வீதிகூடத் தெரியாமல் இருப்பதுதான் கல்கத்தாவில் டாக்ஸி ஓட்ட அடிப்படைத் தகுதி என்று.
 
நாங்கள் ஐந்து பேர். முன்னிருக்கையில் ஒருவர்தான் அமர வேண்டும் என்று ஒட்டுநர்கள் பதறுகிறார்கள்.மீறி ஏறிவிட்டால்,சிரித்துக் கொண்டே தலையில் அடித்துக் கொண்டு வண்டியைக் கிளப்பி விடுகிறார்கள்.நாங்கள் சொன்ன வழியும் புரியாமல்,போகும் திசையும் தெரியாமல் அந்த ஓட்டுநர் பத்து நிமிடங்களுக்குள் ஏழு முறை தலையில் அடித்துக் கொண்டார். உழைப்பாளர்களின் உரிமையை உரக்கப் பேசும் வங்க மாநிலத்தில் இன்னும் கைரிக்ஷாக்கள் புழக்கத்தில் இருப்பதுதான் பெரிய வியப்பும் வலியும் .கொளுத்தும் வெய்யிலில் கால்செருப்புக்கூட இல்லாமல் அவர்கள் ரிக்ஷா இழுக்க, பேன்ட்போட்ட-சுடிதார் அணிந்த புளிமூட்டைகள் குடைபிடித்து உட்கார்ந்தபடி கின்லே தண்ணீர் குடிக்கின்றன.
 
போக்குவரத்து குறித்த எந்தப் பிரக்ஞையும் இல்லாத கல்கத்தா வீதிகளில் காலாற நடந்து காயம் படாமல் கின்னஸ் சாதனை புரிந்தோம். திடீர் திடீரென்று பிரசன்னமான டிராம்களும்
விற்பனையாளர்களின் தொந்தரவும் கலந்து கலகலத்தது கல்கத்தா.மேல்பாக்கெட்டில் பணமோ செல்போனோ வைக்காமல் போனால் கல்கத்தா காளியை தரிசிக்கலாம் என்றார்கள். தட்சிணேஸ்வரத்தில் பரமஹம்ஸர் கும்பிட்ட காளியைப் பார்த்த நிறைவில் அங்கு செல்லவில்லை
 
மறுநாள் காலை சொன்ன நேரத்திற்கு வந்து சேர்ந்தார் அதே ஓட்டுநர். விக்டோரியா மஹாலுக்கு அழைத்துச் சென்றார். நம் தேசியத் தலைவர்களின் அபூர்வமான கறுப்பு வெள்ளைப்படங்களையும் ஒவியங்களையும் தவிர    பெரிதாக ஒன்றுமில்லை.கட்டிடம்தான் பிரம்மாண்டம்.ஒட்டுநரின் பெயரை அப்போதுதான் கேட்டுக் கொண்டேன்.  டி.பண்டிட் என்று கனகம்பீரமாய் உச்சரித்தார்..மதியம் காசிக்கு ரயிலில் கிளம்ப வேண்டும். ரயில் நிலையத்தில் எங்கள் பெட்டிக்குப் பக்கத்திலேயே காரைக் கொண்டு வந்து நிறுத்தும்படி வாய்த்தது பண்டிட்டிற்கு.
 
அவர் கணக்கைத்தீர்த்துவிட்டு,காரிலேயே பெட்டிகளை வைத்துவிட்டு மதிய உணவை முடித்துக் கொண்டோம் .வெய்யிலின் வீச்சு தங்காமல் எங்கள் குளிர்பதனப் பெட்டிகளைத் தேடி பெட்டிகளுடன் விரைந்தோம்.ஏறப்போன எங்களைத் தடுத்தர் பண்டிட். டிப்ஸ் தான்கொடுத்து விட்டோமே என்று குழப்பமாகப் பார்த்த போது,பைஜாமா பாக்கெட்டில் கைவிட்டார். வெளியே எடுத்தவையோ வேலைப்பாடுகளுடன் அமைந்த செயற்கைப்பூக்கள்.கூடவே,திரவியங்களில் நனைக்கப்பட்ட டிஷ்யூ பேப்பர்.முகம் முழுக்க நெகிழ்வும் சிரிப்புமாய் ஆளுக்கொன்றைத் தந்துவிட்டு கண்களில் வெளிச்சம் மின்ன கைகுலுக்கி விடைபெற்றார் பண்டிட்ஜீ!!அதுவரை எங்களை அமர வைத்துக் கார் ஒட்டிய பண்டிட், எங்கள் உள்ளங்களில் வசதியாய்ச் சாய்ந்து உட்கார்ந்து கொள்ள ,குலுங்கிக் கிளம்பியது ரயில்.......காசி நோக்கி!

(தொடரும்)

Monday, November 25, 2013

நாவலர்கள் நால்வருக்கு நல்ல விழா



சில விழாக்கள்,தனிமனிதர்களைக் கொண்டாடும். சில விழாக்களோ வெற்றிகளைக் கொண்டாடும்.அபூர்வமாய் சில விழாக்கள்தான் வாழ்க்கையைக் கொண்டாடும். அப்படியொரு விழாவை தமிழ் மணக்க மணக்க நிகழ்த்தியது திருச்சி நகைச்சுவை மன்றம்.நவம்பர் 24 ஞாயிறு மாலை 6.00 மணிக்கு திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதன் பள்ளி கலையரங்கில் விழா நிகழ்ந்தது.

தமிழ் மேடைகளை நெடுங்காலமாய் தாங்கிப் பிடிக்கும் நாவன்மை மிக்க பேரறிஞர்கள்,பெரும்புலவர்.பா.நமசிவாயம்,
நாவுக்கரசர். சோ.சத்தியசீலன்,ஆய்வுரைத் திலகம் அறிவொளி,நகைச்சுவைத் தென்றல் இரெ.சண்முகவடிவேல் ஆகியோருக்கு வணக்கம் செலுத்தி விருதளித்த விழா,அனைத்து வகைகளிலும் அர்த்தமுள்ள விழா.

நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் திரு.திருச்சி சிவா விருதுகளை வழங்க, விருதாளர்களின் வியக்கத்தக்க மேன்மைகளை பேராசிரியர்.இரா.மாது அறிமுகம் செய்ய,
சொல்வேந்தர் திரு.சுகிசிவம்,அவர்களும் நானும் வாழ்த்துரை வழங்கினோம்.

என்னுடைய வாழ்த்துரையில்,
"சமயாச்சாரியர் நால்வர்,சந்தானக் குரவர்கள் நால்வர் என்பதுபோல் மேடைத்தமிழின் ஆச்சாரியர்கள் இந்த நால்வர்.
தமிழ் மேடைகள் என்கிற களத்தையும் தளத்தையும் வடிவமைத்துக் கொடுத்ததில்,இவர்களுக்கு மகத்தான பங்கு உண்டு.தமிழிலக்கிய மேடை என்பது யாரும் நடக்காத காட்டுப் பாதையாக இருந்தபோது,அதில் காலடிகள் பதித்து ஒற்றையடிப் பாதையை உருவாக்குவதில் வாரியார் சுவாமிகள்,கி.வா.ஜ.,பேராசிரியர் ராதாகிருஷ்ணன் போன்றோர் பெரும்பங்காற்றினர்.

அந்த ஒற்றையடிப் பாதையை நெடுஞ்சாலையாக விரிவு செய்ததில் இந்த நால்வருக்கு மகத்தான பங்கும் பணியும் உண்டு. திரு.சுகிசிவம்,இந்த நெடுஞ்சாலையை தங்க நாற்கர சாலைபோல் விரிவு செய்து கொடுத்ததால் அவர்களின் அடியொற்றி வந்திருக்கும் எங்கள் தலைமுறைப் பேச்சாளர்கள் எளிதாகவும் விரைவாகவும் பயணம் செய்ய முடிகிறது.இவர்கள் நால்வருமே திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் மேடைக்கு வந்தவர்கள்.ஆனால்,ஆன்மீகத் தமிழை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் திராவிட இயக்கங்களையும் எதிர்கொண்டு  வளர்ந்தார்கள்.எழுந்தார்கள்.
அதனால்தான் இந்த மேடையில் பக்தி சிவமும் இருக்கிறார். பகுத்தறிவு சிவமும் இருக்கிறார்"என்றேன்..

நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் திரு.சிவா பேசும்போது,
"தமிழகத்தில்தான் மக்கள் திரண்டு வந்து மேடைப்பேச்சைக் கேட்கும் முறை இருக்கிறது. இதனை மக்கள் மத்தியில் நிலைக்கச் செய்ததில் இந்த நால்வருக்கும் மகத்தான பங்கிருக்கிறது. இவர்கள் தமிழை மக்களை இணைக்கும் கருவியாகப் பயன்படுத்தினார்கள். இத்தனை ஆயிரம்பேர் இந்தக் கூட்டத்திற்கு வந்ததே அவர்கள் தமிழ்கேட்டு அவரவர்கள் வாழ்வில் பெற்ற உயரங்களுக்கு நன்றி செலுத்தத்தான்.தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டுமென்று நாடாளுமன்றத்தில் நான் தனிநபர் மசோதா கொண்டு வந்தேன்.
தமிழை மக்கள் உள்ளங்களில் நிலையான ஆட்சி செலுத்த வைத்த அறிஞர்களைக் கொண்டடுவது நான் கடமை. இவர்கள் இங்கே விருது பெற்றார்கள் என்று சொல்வது பிழை. விருதினை ஏற்றார்கள் என்று சொல்வதே முறை.

நான் என் கைகளில் விருதினை வைத்துக் கொண்டு அவர்களை ஏற்குமாறு கேட்டுக் கொண்டேன்.இவர்கள் பக்திநெறியை மக்கள் மத்தியில் கொண்டு செல்கிற போதும் தமிழைக் கொண்டு போய் சேர்த்தவர்கள்"  என்று புகழாரம் சூட்டினார்.

சொல்வேந்தர் திரு.சுகிசிவம் பேசும்போது "நாங்களெல்லாம் பேச்சாளர்களாக வசதியுடன் இருக்கிறோம்,விமானத்தில் பறக்கிறோம் என்றால்,அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர்கள் இந்த நான்குபேர்கள். இவர்களுக்கு நன்றி செலுத்துகிற கடமை எங்களுக்கு உண்டு.இந்த விழாவில் கலந்து கொண்டு நன்றி செலுத்தும்  வாய்ப்பைத் தந்தமைக்காக
அமைப்பாளர்களுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.

ஒரு பேச்சாளன் என்பவன் தனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்பவன் அல்ல. எதிரில் இருப்பவர்களுக்கு என்ன தர வேண்டும் என்று சிந்தித்துப் பேசுபவனே சிறந்த பேச்சாளன்.
அவனுக்கு சமரசம் கூடாது. இந்த நான்குபெரும் சொன்னதையே திரும்பச் சொல்லும் பௌராணிகத்துக்கும் போகாமல் முழுக்கமுழுக்க கடவுள் எதிர்ப்பையும் மேற்கொள்ளாமல்  இரண்டுக்கும் நடுநிலையிலே நின்று தங்கள் கொடிகளை உயர்த்திப் பிடித்தவர்கள். அதனாலேயே இருதரப்பாரின் எதிர்ப்புகளையும் எதிர்கொள்ள வேண்டி வந்தவர்கள்.

இவர்கள் தமிழை ஆழ்ந்து கற்று அதன்வழியே மேடைக்கு வந்தவர்கள்.இன்று தமிழகத்தில் ஓர் ஆபத்தான சூழல் இருக்கிறது.ஆழ்ந்த புலமையோ சிந்தனைத் தெளிவோ இல்லாமல் வெறும் தொலைக்காட்சி புகழை வைத்துக் கொண்டே பெரிய பேச்சாளர்களாக சிலர் பிரபலம் ஆகிறார்கள்.
ஆனால் தங்கள் தகுதியாலேயே தலைநிமிர்ந்தவர்கள் இவர்கள்" என்றார்.

விழாவை பல மாதங்கள் முன்பே  கனவு கண்டு,திட்டமிட்டு வெற்றிவிழாவாக ஆக்கித்தந்தவர் நகைச்சுவை மன்ற செயலாளர் திரு,ஜி.சிவகுருநாதன். அவரே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மன்றத் தலைவர் திரு.பாலசுப்பிரமணியன் தலைமை தங்கினார்.அறங்காவலர்கள் டாக்டர் ஜெயபால்,திரு.செல்லப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அறங்காவலர் திருமதி கௌரி ஜெகதீசன் நன்றி நவின்றார்.

விழா நாயகர்கள் நால்வரில் மூவர் அரங்கை அலங்கரிக்க,
ஆய்வுரைத் திலகம் அறிவொளி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலும் விழா அரங்கிற்கு வெளியே ஆம்புலன்ஸில் படுத்திருந்த வண்ணமே சிறிது நேரம்  விழா நிகழ்வுகளைக் கேட்டுக் கொண்டிருந்தார் என்ற செய்தி அறிவிக்கப்பட்டபோது அரங்கம் நெகிழந்தது.தகைசால் தமிழறிஞர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்தியபடியே கலைந்து சென்றனர் பங்கேற்ற பொதுமக்கள்.

இன்று காலை கோவை திரும்பியதும் அந்த விழாவின் அதிர்வுகள் ஆழ்மனதில் நிறைவின் பாரத்தைத் தந்தன. எத்தனை சுகமான பாரமாயிருந்தாலும் எழுத்தில்தானே இறக்கி வைக்க முடியும்...

மலைக்கோட்டை நகர்முழுதும் மல்லி வாசம்
முழுநிலவைக் கண்டலர்ந்த அல்லி வாசம்
கலைக்கோட்டை அரண்களான நால்வருக்கு
கவின்மிக்க விழாக்கண்ட நன்றி வாசம்
தலைக்கோட்டை தமிழுக்கே இவர்தான் என்று
தாரணியே சொன்னாலும் அகந்தையின்றி
நிலைக்கோட்டை போல்நிற்கும் நால்வருக்கும்
நகைச்சுவைமன்றம் தெளித்த பன்னீர் வாசம்

பகைச்சுவையே அறியாத பண்பின் மிக்கார்
பெரும்புலவர் நமசிவாயம் அய்யாவுக்கும்
தொகைச்சுவையே அறியாமல் தொண்டுக்காக
திசையளக்கும் சத்யசீலன் அய்யாவுக்கும்
வகைவகையாய் தமிழ்நூல்கள் வடித்தளிக்கும்
வியனறிவு வித்தகராம் அறிவொளிக்கும்
நகைச்சுவையே வடிவான ஆருர்ச் செல்வர்
சண்முகவடிவேலர்க்கும் விருதுக் கோலம்

திருச்சியிலே வதிகின்ற தமிழர் எல்லாம்
திருவிழாக் கூட்டம்போல் தேடிவந்தார்
திருமுறைக்கு வழிவகுத்த நால்வர்போல
தமிழ்வளர்க்கும் நால்வரையும் வணங்கி நின்றார்
ஒரு-முறைக்கு செய்வதுபோல் இன்றி, உள்ள்ம்
ஒருமித்து விழாக்கண்ட உயர்ந்த பண்பால்
வருகின்ற தலைமுறைக்கும் பெருமை சேர்த்த
விழாக்குழுவை விருப்பமுடன் வாழ்த்தி நின்றார்

ஆயிரமாய் தமிழ்மக்கள் திரண்டிருந்தோம்
அவைமகிழ அவர்சிறப்பை நினைந்திருந்தோம்
தூயவர்க்கு விருதளித்து மகிழ்ந்திருந்தோம்
தொண்டுநலன் தனைநினைந்து வணங்கி நின்றோம்
தாயகமே!தென்தமிழே!குறளே!எங்கள்
தீஞ்சுவைசார் இலக்கியமே !திசைகள் எட்டே!
நாயகமாம் இவர்நால்வர் நலன்கள் வாழ்க
நாளெல்லாம் இவர்தொண்டில் தமிழும் வாழ்க!

Sunday, November 24, 2013

இந்த நம்பர் பிஸியாக உள்ளது

"அலோ!' மரபின்மைந்தருங்களா?"

"ஆமாங்க!வணக்கம்"

வணக்கம்யா! நீங்க ஏடு படிப்பீகளா?"

காலை ஆறரை மணிக்கு இந்த அழைப்பு வந்தபோது தஞ்சாவூர் ஞானம் ஹோட்டல் அறையில் பயணக்களைப்பு நீங்க படுத்துக் கிடந்த   எனக்கு ஒன்றும் புரியவில்லை.

"என்னங்க கேட்டீங்க?"

"அதாம்யா! ஏடு படிப்பீகளான்னு கேட்டேன்.எங்கூட்ல எங்க முப்பாட்டன் காலத்து ஏடுகள்லாம் கெடக்கு. நீங்க படிச்சுச் சொல்லுவீகளா?"

"அதெல்லாம் நமக்கு பழக்கமில்லையே"

"அப்படியா?பின்ன  நீங்க என்னமோ கவிஞ்சருன்னு போட்டிருக்கு!!"

"எதிலீங்க போட்டிருக்கு?"
"இன்னைக்கு தினமலருல ஒங்க போட்டா போட்டு நம்பரப் போட்டு கவிஞ்சருன்னு போட்டிருந்தது.நீங்க எழுதப் படிக்கத் தெரியாதுங்கறீய!"

"அய்யா! ஏடு படிக்கத் தெரியாதுன்னுதான் சொன்னேன்"

"அதாங்க நானுஞ் சொன்னேன்! வச்சுரவா"

சில வாரங்களுக்கு முன்னால் மதுரையில் இன்றைய  நெல்லை ஆட்சியரின் துணைவியும் கோவை மாநகரக் காவல்துறை துணை ஆணையருமான அமரர் திருமதி ஹேமா கருணாகரனின் படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசினேன்.அப்போது தினமலர் நாளிதழ் சார்பாக சந்தித்துப் பேசிவிட்டு தொலைபேசி எண்ணுடன் வெளியிடப் போவதாக சொன்னார்கள் .
அடுத்தடுத்து அழைப்புகள்."கவிதை எழுதி தமிழ் வளர்க்கும் ஆர்வம் இருந்தும் நேரம் கிடைக்கவில்லை.என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்கும் குரல்கள்,சினிமா பாடலாசிரியராக குறைந்தது எத்தனை கவிதை தொகுப்புகள் எழுதியிருக்க வேண்டும் என்ற சந்தேகம்.

"கண்ணதாசந்தான் ஒங்க கவிதை குரு ன்னு சொல்லியிருக்கீங்களே! நீங்களும் நாட்டுக்கோட்டை செட்டியாரா?"என்று கேட்ட ஒருவர் 'இல்லை' என்றதும் "அதனாலென்ன பரவாயில்லை" என்று போனை வைத்து விட்டார்.
அவரே சிறிது நேரத்துக்குப் பின் அழைத்து,"சார்! தப்பா நெனச்சுக்காதீங்க! நீங்க என்ன ஆளுங்க?" என்றார். "பிள்ளைமார்"என்றதும், "நெனச்சேன்! ஜெயகாந்தனை யாரும் தாண்ட முடியாதுன்னு சொல்லியிருக்கீங்களே!" என்றார்.

காலை தஞ்சாவூர் சித்த ஆஸ்ரம விழாவில் கலந்து கொண்டதால் போனை ஒலியெழுப்பா நிலையில் வைத்திருந்தேன்.பலர் அழைத்திருந்தார்கள்.
அந்தப் பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே ஒருவர் அழைத்தார். எடுக்கும் முன் துண்டித்தார். சாப்பிட்டு வருவதற்குள் அவரிடமிருந்தே நான்கைந்து அழைப்புகள்,வந்த வேகத்திலேயே துண்டிக்கப்பட்டன. திரும்ப அழைத்தேன். அவர் சற்று எரிச்சலுடன் பேசினார்.'சார்! ஒங்க தினமலர் பேட்டியை பார்த்துட்டு பாராட்டறதுக்காக ரொம்ப நேரமா மிஸ்டு கால் விட்டுகிட்டே இருக்கேன்..கூப்பிட மாட்டேங்கறீங்களே சார்!! "

Wednesday, November 6, 2013

சீண்டும் சவால்கள்



நாற்றுகளின் தலைகலைத்து நடக்கும் தென்றல்
நாளைகளின் மெல்லரும்பை சீண்டிப் பார்க்கும்
கீற்றுகளைக் கொட்டுகிற முழுவெண் திங்கள்
குளத்திலுள்ள அல்லிகளை சீண்டிப் பார்க்கும்
நேற்றுகளின் நினைவுகளோ இன்று வந்து
நிகழ்கணத்தை மெதுவாக சீண்டிப் பார்க்கும்
ஊற்றெடுக்கும் உன்சக்தி என்னவென்றே
உருவாகும் சவால்களெல்லாம் சீண்டிப் பார்க்கும்


தன்போக்கில் நடக்கின்ற நதிக்குக் கூட
தடைகள்தான் உந்துசக்தி யாகும்- இங்கே
உன்போக்கில் வாழ்வதென்று நினைத்தால் கூட
உலகத்தின் போக்குன்னை உந்தித் தள்ளும்
மின்போக்கில் போகுமொளி போலே நீயும்
முன்னேற்றப் பாதையிலே மோகம் கொண்டால்
முன்போகும் உன்பின்னே உலகம் போகும்
முன்வைக்கும் உன்னடிகள் பாதை போடும்

போர்வைக்குள் சுகங்கண்ட மனிதனுக்குப்
புதுவிடியல் புதிராகத் தோன்றும்-இங்கே
சோர்வுதனை சுட்டெரிக்கும் சுடராய் ஆனால்
சூரியப்பூ நீதிரும்பும் திசையைப் பார்க்கும்
தீர்வுகளை சாதிக்க நீயே போதும்
திணறல்தான் நீந்திவர நல்ல பாடம்
ஆர்வமெனும் ஆயுதம்நீ கொண்டால் போதும்
ஆயிரமாய் வெற்றிகளும் உன்னைச் சேரும்

(2013 நவம்பர் மாத "நமது நம்பிக்கை" மாத இதழில்... )

Saturday, November 2, 2013

-ஜெராக்ஸின் அசல் ஹீரோக்கள்


" இந்த பேப்பரை ஜெராக்ஸ் எடுத்துட்டு வாங்க"என்று நாம் சொல்லாத நாட்களே இல்லை.நகலெடுப்பதை ஆங்கிலத்தில் ஜெராக்ஸ் எடுப்பதென்றுதான் பலரும் சொல்கிறோம்.நியாயமாகப்
பார்த்தால் "ஃபோட்டோ காப்பி எடுத்து வாங்க" என்றுதான் சொல்ல வேண்டும்.நகலெடுக்கும் எந்திரத்தை
உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் ஜெராக்ஸ். இந்த டிசம்பர் மாதம் 19ஆம்தேதியுடன் ஜெராக்ஸ் நிறுவனத்தின் முக்கிய ஹீரோவுக்கு வயது 103.

ஜே.சி.வில்சன்
நியூயார்க் அருகிலுள்ள ரோசஸ்டர் என்னும் இடத்தில்,1909 டிசம்பர் மாதம் 19ஆம்தேதி பிறந்தார்ஜோசஃப் சேம்பர்லெய்ன் வில்சன்.இவரை செல்லமாக ஜே.சி.வில்சன் என்றே அழைப்போம். இவர்அசலா ஜெராக்ஸா என்று பார்த்தால் அசலென்றும் சொல்லலாம்.ஜெராக்ஸ் என்றும் சொல்லலாம்.
ஏனென்றால் இவருடைய தாத்தா பெயரும் ஜோசஃப் சேம்பர்லெய்ன் வில்சன்தான்.ஆனால் தாத்தாஅரசியல்வாதி.அவர்களுக்கு அரசியலை பரம்பரைத் தொழிலாய் செய்தால் நல்ல ஆதாயம் கிடைக்கும் என்ற
சூட்சுமம் புரியவில்லை.அதனால் அவருடைய மகன் ஜோசஃப்.ஆர்.வில்சன் ஹெலாய்ட் என்ற நிறுவனத்தைநிர்வகித்து வந்தார்.அவருடைய மகன்தான் ஜெராக்ஸின் அசல் ஹீரோ ஜே.சி.வில்சன்.
புகைப்படங்களை டெவலப் செய்வதற்குத் தேவையான ரசாயனங்களைத் தயாரித்து வந்தது ஹெலாய்ட்நிறுவனம்.தன் 21ஆவது வயதில் குடும்பத் தொழிலுக்கு வந்த ஜே.சி.வில்சன்,நகலெடுத்தலை எளிமையாக்க
சில ஆராய்ச்சிகளை ஆர்வமுடன் செய்து வந்தார்.இதன் விளைவாக 1930ல் அறிமுகமானதுதான் ஹெலாய்ட் ரெக்கார்ட். இது அந்தக் காலத்தில் நகலெடுக்கப் பயன்பட்ட காகிதத்தை விட மேம்பட்டதாய்
இருந்தது.அறிமுகமானதுமே அபார வெற்றியைப் பெற்றது ஹெலாய்ட் ரெக்கார்ட்.ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ.படித்தது வீணாகவில்லை என்று குடும்பம் அவரைக் கொண்டாடியது.
ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். உலகம் ரெண்டுபட்டாலும் சாமர்த்தியசாலிகளுக்குக் கொண்டாட்டம்தானே தவிர திண்டாட்டம் அல்ல.  இரண்டாம் உலக யுத்த காலத்தில் நகலெடுத்தல் தொடர்பான உற்பத்திகளில் அப்பாவும் பிள்ளையும் சுறுசுறுப்பாக
வேலை பார்த்து நல்ல காசு பார்த்தார்கள்.ஆனாலும் புதிய தலைமுறையில் பூத்த ஜே.சி.வில்சன்புதிய தொழில்நுட்பமே எதிர்காலத்திலும் தாக்குப்பிடிக்கும் என்று தீர்க்கமாக நம்பினார்.
"எங்கே?எங்கே?" என்று தேடலுடன் காற்றில் அலைந்த அவருடைய கைகளைப் பற்றிக் கொள்ள வேண்டிய ஒரு சாதனைக்கரமோ வாழ்க்கைச் சுழலிலிருந்து தன்னைக் கரை சேர்க்கக்கூடிய
ஆதரவுக் கரத்தைத்தேடி தத்தளித்துக் கொண்டிருந்தது.1906 பிப்ரவரி மாதம் எட்டாம் தேதிபிறந்த செஸ்டர் ஃபிலாய்ட் கார்ல்சன் (இனி செல்லமாய் கார்ல்சன்) நகலெடுப்பதை விரைவாகவும்
எளிதாகவும் ஆக்கும் முறைகள் பற்றி ஆய்வுகள் மேற்கொண்டிருந்தார்.
போராடித்தான் வாழ்வை நடத்தியாக வேண்டும் என்பது கார்ல்சனுக்குக் காலம் கற்றுத் தந்தபாடம்.17 வயதில் தன் தாயையும் 27 வயதில் தன் தந்தையையும் இழந்த கார்ல்சன் பள்ளிமாணவராய் இருக்கும்போதே குடும்பத்துக்கான சம்பாத்தியத்தை ஈட்டித் தர வேண்டியவர்
ஆகிவிட்டார்.பத்து வயதிலேயே பத்திரிகை நடத்திய கார்ல்சன்,அத்தை கொடுத்த பொம்மை டைப்ரைட்டரில்தான் விளையாடுவார்.இயற்பியல் பட்டப் படிப்பு முடித்த கார்ல்சன்வேலை கேட்டு விண்ணப்பித்தார்...விண்ணப்பித்தார்...விண்ணப்பித்துக் கொண்டேயிருந்தார்.
அப்படி அவர் விண்ணப்பித்த நிறுவனங்களின் எண்ணிக்கை 82!!
கார்ல்சன்
ஒருவழியாக பெல் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அந்நிறுவனத்தின் காப்புரிமைப் பிரிவில்வேலை பார்த்ததால் தன் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை வாங்கும் அவசியம் கார்ல்சனுக்குத்தெரிந்தது.வாரம் 35 டாலர்கள் சம்பளத்துக்கு வேலைபார்த்தபடியே தன் குறிப்பேட்டில் 400க்கும்
அதிகமான கண்டுபிடிப்புகளுக்கான யோசனைகளைக் குறித்து வைத்திருந்தார் கார்ல்சன்.
அவருடைய பரிசோதனைகளுக்கு அவர் மனைவி ஆதரவாய் இருந்தார்.பரிசோதனைக்கூடம்அமைக்க வசதியில்லை.தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டின் சமையலறைதான்
பரிசோதனைக்கூடம்.  சில நேரங்களில் பரிசோதனை ரசாயனங்கள் எசகுபிசகாகி மொத்தக் குடியிருப்பும் "லொக் லொக்" என்று இருமும்படியாக  புகை சூழ்ந்து கொள்ளும்.
அதிவிரைவில் நகலெடுக்கும் தொழில்நுட்பத்தை கார்ல்சன் கடைசியில் 
கண்டறிந்துவிட்டார்.ஆனால் அவர் கண்டுபிடிப்பை முக்கிய நிறுவனங்களுக்கு விற்க முனைந்தபோது,
"போங்க சார்! விளையாடாதீங்க!இதெல்லாம் சாத்தியமே இல்லை"என்று திருப்பிஅனுப்பிய திருவாளர்கள் பட்டியலில்,ஐபிஎம்,ரெமிங்டன்,ஜெனரல் எலக்ட்ரிக் போன்றஜாம்பவான்களும் உண்டு. தன் கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை 1942 அக்டோபர் 6ஆம் தேதி பெற்றார் கார்ல்சன்.
இதற்கிடையே வில்சனின் ஹெலாய்ட் நிறுவனத்தில் ஆராய்ச்சி இயக்குநராகப்பணிபுரிந்த ஜான்.ஹெச்.டெஸாவர், பழைய பேப்பர்களைப் புரட்டிக் கொண்டிருந்த போதுரேடியோ நியூஸ் என்ற பத்திரிகையில் கார்ல்சனின் கண்டுபிடிப்பு பற்றிய செய்திவெளியாகியிருந்தது.  ஹெலாய்ட் நிறுவனம் நகலெடுப்பதற்கான ரசாயனக் கலவை கொண்ட
காகிதத்தைத் தயாரிப்பது பற்றிய ஆய்வில் இருந்தது.ஆனால் கார்ல்சன்  மாற்றி யோசித்திருந்தார்.ஒரு ரசாயனப் பவுடரைக் கொண்ட கருவி போதும் என்றார் அவர்.1938ல் வடிவமைக்கப்பட்ட இந்தக் கருவிக்கு 
ஆறாண்டுகள் தாண்டி விடிந்தது.அதன்பின் இரண்டாண்டுகள் தீவிரமான முன்னேற்பாடுகள் நடந்தன.இன்னொரு நிறுவனத்துடன் இணைந்து ஹெலாய்ட் நிறுவனம் 1948ல் இந்த வசதியை மக்களுக்கு
அறிமுகம் செய்தது.
இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஜெராக்ஸ் நிறுவனம்,பிரம்மாண்டமாக வளர்ந்தது.1968ல்கார்ல்சன் அமெரிக்காவின் முக்கிய செல்வந்தர்களில் ஒருவராக பார்ச்சூன் பத்திரிகையில்
குறிப்பிடப்பட்டார்.காரணம் 1956 முதல் 1965 வரை காப்புரிமை வழியாக உலகெங்கும் எடுக்கப்படும் ஒவ்வொரு நகலுக்கும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் கார்ல்சனுக்கு ராயல்டியாகக் கிடைத்தது!!!
தன் வாழ்வின் கடைசிக்காலத்தில் இந்து சமயத்தின் வேதாந்தத்திலும் ஜென் புத்த மார்க்கத்திலும்பேரார்வம் காட்டினார் கார்ல்சன்.முதல் மணமுறிவுக்குப்பின் அவர் வாழ்வில் வீசிய இரண்டாவது வசந்தமாகிய டோரியின் அறிமுகமே இந்த ஆன்மீகம்.1968 செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி கார்ல்சன் மறைந்தார்.
அவருடைய வெளிச்சத்தையும் சுபிட்சத்தையும் பகிர்ந்து கொண்ட ஜே.சி.வில்சன் 1971 நவம்பர் 22ல்மறைந்தார். நம்மூரில் அவர்கள் வாழ்க்கையை விளக்க கவியரசு கண்ணதாசனின் பல்லவி
ஒன்றே போதும்.. "இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கேதான் எதிர்காலம்! பகைவர்களே ஓடுங்கள்!புலிகள் இரண்டு வருகின்றன!"

(என்னுடைய 51 ஆவது நூலாகிய,"அறிய வேண்டிய ஆளுமைகள்" தொகுப்பில் இடம்பெற்ற கட்டுரை.வெளியீடு:விஜயா பதிப்பகம்)

Friday, November 1, 2013

சத்குரு சந்நிதி...

சத்குருவின் ஞானோதயத் தலம்..சாமுண்டி மலையில்...


பார்க்க நினைத்துத் தவித்திருப்பேன் -உனைப்
பார்த்ததும் கண்கள் பனித்துவிடும்
கேட்க நினைத்த கேள்விகளை -மனம்
கணப்பொழு துக்குள் தொலைத்துவிடும்
மூர்க்கத் தினவுகள் அவிந்தடங்கி-ஒரு
மழலையைப் போலெனைக் குழைத்துவிடும்
தீர்க்க முடியாப் புதிர்களையோ- உன்
தீட்சண்யப் பார்வை எரித்துவிடும்

அத்தன் அன்னை உடன்பிறந்தோர்-என
அத்தனை உறவுகள் இருந்துமென்ன
எத்தனை காதல் உன்னிடத்தில்-இது
எப்படி மலர்ந்தது என்னிடத்தில்
சித்தன் யோகி என்றெல்லாம் -உனை
சிமிழுக்குள் அடைக்க முடியாதே
பித்து மனதின் புலம்பலைப்போல்-நல்ல
பிரார்த்தனை பிரபஞ்சத்தில் கிடையாதே

சாமானியன் போல் தோன்றுவதும்-பல
சாகச விந்தைகள் பேசுவதும்
நாமம் தன்னைச் சொன்னாலே-அடி
நாபியில் புயலைக் கிளப்புவதும்
பூமி அண்டம் தனக்குள்ளே-எனும்
புனித அனுபவம் பெருக்குவதும்
ஆமாம் உனக்கே சாத்தியமாம்-நீ
ஆச்சரியங்களின் களஞ்சியமாம்

குவிந்த உன்னிரு கைகளிலே-இந்தக்
குவலயம் அடைக்கலம் ஆகிவிடும்
சிவம்தான் கனிந்த சுடர்விழியில்-ஒரு
சின்னப் புன்னகை கோலமிடும்
தவம்தான் எழுந்து நடந்தாற்போல்-மெல்லத்
திருவடி பதிக்கும் சத்குருவை
இவன்தான் பாடிட இயன்றிடுமோ-அந்த
இமயம் கைகளில் அடங்கிடுமோ

உன்னை குருவாய் அடைந்தவர்கள்-இந்த
உண்மைக்கு சாட்சியம் ஆகிடுவார்
உன்னை நன்றாய் உணர்ந்தவர்கள்-நீ
உலவும் உன்னதம் என்றறிவார்
ஜன்னல் பார்வை பார்ப்பவர்கள்-இந்த
ஜன்மத்தில் வானை உணர்வதில்லை
தன்னில் கதவுகள் திறக்காமல்-குளிர்
தென்றலை உணர்ந்தவர் எவருமில்லை

தீபாவளி வாழ்த்துகள்


Thursday, October 31, 2013

சத்குரு அவர்களை வரவேற்று....



(2010 ஆம் ஆண்டு..மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அயல்நாட்டுப் பயணங்களிலிருந்து சத்குரு திரும்பினார். சுவாமி ஆதிரூபா கேட்டபடி சத்குருவை வரவேற்று எழுதித் தந்த பாடல் இது...)


பல்லவி
வருக வருக எங்கள் வான்மழையே-எங்கள்
வாழ்வில் இனிக்கிற தேன்துளியே
தருக தருக உந்தன் தரிசனமே-எட்டுத்
திசைகள் அளந்துவரும் பூரணமே
 
சரணம்-1
திருவடி பாராமல் திருமுகம் காணாமல்
தினமொரு யுகமாய் கழிந்தது
குருநிழல் சேராமல் அருள்மொழி கேளாமல்
திசைகளும் இருளாய் இருந்தது
 
மாதங்கள் பறந்தன மாதவமே
மனமெங்கும் நிறைந்தது உன்முகமே
வான்வழி வந்தது எம்தவமே-எங்கள்
வாசலில் நின்றது வானகமே
 
 
சரணம்-2
ஒளிதரும் கிழக்காக கலங்கரை விளக்காக
பகலிலும் இரவிலும்  துணைநீ
துளிவினை படியாமல் தொடர்கதை தொடராமல்
தூயவனே எங்கள் கதிநீ
 
நீவரும் திசையினில் கண்ணிருக்க-உன்
நினைவினில் எப்போதும் நெஞ்சிருக்க
தாய்முகம் தேடிடும் சேய்களைப்போல்-எங்கள்
தவிப்பிலும் உந்தன் சிரிப்பிருக்க....

வருக வருக எங்கள் வான்மழையே-எங்கள்
வாழ்வில் இனிக்கிற தேன்துளியே
தருக தருக உந்தன் தரிசனமே-எட்டுத்
திசைகள் அளந்துவரும் பூரணமே
 

Monday, October 28, 2013

சத்குருவின் மஹாபாரத்-வாழ்க்கை வலியா?வரமா?

சத்குருவின் மஹாபாரத் நிகழ்ச்சிக்காக, மகாபாரதக் கதையைப் பின்புலத்தில் கொண்டு வாழ்வின் அடிப்படைகளை வினவும் விதமாய் ஒரு பாடல் வேண்டுமென சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர் கேட்டிருந்தார்கள். அவர்களுக்குத் தந்த பாடல் இது:


 யாரும் போடாத பாதை- இது
   எங்கோ போகின்ற சாலை
  வேர்கள் இல்லாத மரமா-இந்த
   வாழ்க்கை வலியா வரமா



  முடிவே இல்லாத பயணம்-அட
  முனிவன் நெஞ்சிலும் சலனம்
  விடிந்த பின்னாலும் இருளா-இந்த
   வாழ்க்கை புதிரா பதிலா



  தர்மம் வனத்தினில் பதுங்கும்-இங்கு
  தலைக்கனம் ஆட்சியைத் தொடங்கும்
  மர்மம் நிறைகிற கதையா- இந்த
  வாழ்க்கை கனவா நனவா



  மண்ணால் எழுந்தது யுத்தம்-இங்கு
  பெண்ணால் வளர்ந்தது யுத்தம்
  கண்ணா நாடகம் எதற்கு-இது
  கழித்தல் கூட்டல் கணக்கு



  காலம் உருட்டிடும் பகடை -இதில்
  காய்களுக் கேனோ கவலை
  மூலம் அறிந்தவன் ஒருவன் -இதை
  முடிக்கத் தெரிந்த தலைவன்



  நம்பிய எதுவும் மாறும்-இதில்
  நிஜமும் பொய்யாய் ஆகும்
  தம்பியைக் கொல்பவன் அண்ணன் -இதில்
  தர்மத்தின் குரலாய் கண்ணன்

Sunday, October 27, 2013

சத்குருவின் மஹா பாரத் நிகழ்ச்சி...அரங்கேறாத பாடல்




(2012 ல் சத்குரு ஈஷாவில் நடத்திய மஹாபாரத் நிகழ்ச்சியில் பாட சவுண்ட்ஸ் ஆஃப்  ஈஷா குழுவினருக்கு சில பாடல்கள் எழுதினேன். அவற்றில் அரங்கேறாத பாடல் இது )

வீணைகள் உறங்கிய இரவினிலே
   ராகங்கள் உறங்கவில்லை
 சேனைகள் தூங்கிய வேளையிலும்
   கோபங்கள்  தூங்கவில்லை

போர்க்களம் சிவந்தது போதாதோ
பாண்டவர் கௌரவரே
வாள்களின் பசியென்ன தீராதோ
  வீரர்கள் மாண்டனரே

குருதியின் நதியில் குளிக்கிறதே
  இதற்கா குருஷேத்ரம்
அருகினில் இறைவன் இருக்கின்றான்
   சாட்சி நிலைமாத்ரம்

உங்களின் வன்மம் தீர்வதற்கே
 உயிர்கள் மாளுவதோ
எங்கும் ரணகளம் ஏற்படுத்தி
  எவர்தான் ஆளுவதோ

மண்ணில் விழுந்த மனிதர்களோ
ஆயிரம் ஆயிரமே
கண்ண்முன் இன்றும் நடப்பதென்ன
பாரதக் காவியமே

Friday, October 25, 2013

போதிதர்மர்- அகலாத மர்மங்கள்



அறிய வேண்டிய ஆளுமைகள் ஆயிரமாயிரம் என்றாலும் அறிந்தே ஆக வேண்டிய ஆளுமைகளாக காலம் முன்னிறுத்தும் கம்பீரமான ஆளுமைகளில் ஒருவர், போதிதர்மர்.ஜென் தியான மார்க்கத்தின்
பிதாமகர்களில் ஒருவராகக் கருதப்படும் இவரை வண்ணத்திரை புதிய தலைமுறையின் பார்வைக்குக் கொண்டு வந்தது.
  
போதிதர்மர் பற்றிய முரண்பட்ட பல தகவல்கள்
கலவையாகக் கலந்து கிடக்கின்றன.அப்படியிருந்தாலும் தமிழகத்திலிருந்து
சென்ற இளவரசர் சீன மண்ணின் வழிபாட்டுக்குரிய குருவாய் வளர்ந்தார் என்பது எல்லா வகையிலும் பிரம்மிக்கத்தக்க வரலாறுதான்.

ஏழாம் அறிவு படத்தில் வருகிற அம்சங்களையும் கடந்து சில தகவல்கள்
போதிதர்மன் குறித்து கிடைக்கின்றன. பல்லவர்கள் ஆட்சிக்காலத்தில் பவுத்தம் தமிழகத்தில் செல்வாக்கு பெற்றிருந்த
நிலையில்,பல்லவ மன்னன் கந்த வர்மனின் மூன்றாவது மகனாகப் பிறந்தவர் போதிதர்மர். குடும்பத்தில் கடைசிப்பிள்ளையை பௌத்த சமயத்துக்கு அர்ப்பணிப்பதென்ற மரபுப்படி பௌத்த வர்மனை கந்தவர்மன் குருகுலத்திற்கு அனுப்ப, பிரஜ்னதார குரு என்பவரிடம் அனுப்பப்பட்டு அவர் போதிதர்மன் ஆகிறார். போதிதர்மனின் இயல்பான அறிவும் களரி
குங்ஃபூ போன்ற வீர வெளிப்பாடுகளும் பிரஜ்னதார குருவை பெரிதும் கவர தன்னுடைய மடாலயத்தின் குருவாக போதிதர்மனை நியமித்தார் என்றொரு கருத்து நிலவுகிறது.

கந்தவர்மன் மரணப்படுக்கையில் இருந்தபோது, மூன்றாவது மகனையே பட்டத்திற்கு நியமித்ததாகவும் அதனால் சகோதரர்கள் போதிதர்மனை கொல்ல முயன்றதாகவும் இன்னொரு கதை நிலவுகிறது.
ஆனால் போதிதர்மர் ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபட்டு சீனா செல்ல
முயன்றதாகவும், அப்போது பல்லவ மன்னனாக இருந்த போதிதர்மனின் அண்ணன் மகன் தன் சித்தப்பாவை சீன அரசன் ராஜ மரியாதையுடன் வரவேற்க வேண்டிய ஏற்பாடுகள் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

பௌத்தத்தில் மதிக்கத்தக்க இடத்தைப் பெற்ற போதிதர்மரை சீன அரசர் மரியாதையுடன் வரவேற்க பரிந்துரை கூட தேவைப்பட்டிருக்காது. அப்போது நடந்தவொரு விசித்திரமான சம்பவம் பற்றி ஓஷோ ஓரிடத்தில் சொல்கிறார்.அரச மரியாதை போன்ற சடங்குகளிலும்
சம்பிரதாயங்களிலும் போதிதர்மனுக்கு பெரிய விருப்பம் ஏதுமில்லை.எனவே
அரசரும் மக்களும் பெருந்திரளாக வரவேற்கக் காத்திருக்கும் வந்தடைந்த போது,தன்னுடைய காலணிகளைத் தலையில்
தூக்கி வைத்திருந்தாராம்.அரசர் காரணம் கேட்டபோது,"இவை என்னை எவ்வளவு தூரம் சுமந்திருக்கின்றன!! இவற்றை சிறிது நேரம் சுமப்பதில் என்ன தவறு?" என்றாராம். தலையில் மகுடத்தை சுமப்பது பெரிய விஷயமும் இல்லை, காலணிகளை சுமப்பது கேவலமும் இல்லை
என்ற புரிதலை அரசனுக்கு ஏற்படுத்தவே இது நடந்தது போலும்!

போதிதர்மர் சீனாவை சென்றடைந்தது ஐந்தாம் நூற்றாண்டென்று
கருதப்படுகிறது.அநேகமாக அவர் நான்காம் நூற்றாண்டில் பிறந்தவராய் இருக்க வேண்டும். கி.பி547 ல் யாங் சூவான் சி என்பவர் எழுதிய
புத்தகத்தில் யாங் நிங் ஆலயத்தில் அவர் போதிதர்மரை சந்தித்ததாகவும்
அப்போது போதிதர்மருக்கு வயது நூற்றைம்பது என்றும் குறிப்பிடுகிறார்.அவர் சென்னையிலிருந்து கடல்வழியாக கங்ஸாவூ என்னும் இடத்திற்கு வந்து அங்கிருந்து தரை மார்க்கமாக நன்ஜிங் வந்ததாக சிலர் கருதுகிறார்கள். இன்னும் சில ஆய்வாளர்கள்,அவர் நிலம் கடந்து பாலைவனங்கள் கடந்து கால்நடையாகவே மஞ்சள் நதிக்கரை வந்தடைந்தார் என்கிறார்கள். எப்படியிருந்தாலும் அது ஆபத்துகளைத் தாண்டிவரும்
அதிதீரப் பயணம்தான்.

கி.பி.465 முதல் 550 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்த வூ டாய் என்ற அரசரின்
அரசவையில் சிறிது காலம் போதிதர்மர் இருந்தார் என்று கருதப்படுகிறது.பின்னர் சீனாவின் வடபகுதிக்கு நகர்ந்த
போதிதர்மருக்கு பௌத்தர்களிடமிருந்தும் சில எதிர்ப்புகள்
கிளம்பியிருக்கின்றன.பௌத்த நூல்களுக்கு புத்த விகாரங்கள் அதிக
முக்கியத்துவம் தருவதை அறிந்த போதிதர்மர்," ஞானமடைவதற்கான கருவிகளே புத்தகங்கள். புத்தகங்களே உங்களுக்கு ஞானம் தந்துவிடாது"என்று சொல்லவும் சிலர் கடுப்பானார்கள்.
போதிதர்மருக்கு எதிர்ப்பானார்கள். "ஞானம் அடையும் வழியில் புத்தர்
எதிர்ப்பட்டால் அவரையும் கொல்" என்பது போன்ற சூட்சுமமான ஜென்,அவர்களின் புரிதல் எல்லைக்கு அப்பாற்பட்டிருந்தது ஆச்சரியமில்லை.

அதன்பின்னர் போதிதர்மர் வந்து சேர்ந்த இடம்,ஹெனன் பகுதியில் உள்ள ஷாவொலின் ஆலயம். 495ல் இங்கே வந்து சேர்ந்த போதிதர்மர் ஒன்பது வருடங்கள் மௌனத்தில் இருந்தாராம்.இந்தியாவில்
போர்வீரர்களுக்கு தரப்பட்ட மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தற்காப்புப்
பயிற்சிகளைத்தான் அவர் சீனநாட்டில் போதித்தார்.இதற்கொரு சுவாரசியமான காரணமும் சொல்லப்படுகிறது.தன்னுடைய தியான மார்க்கத்தின் தீவிரத்தன்மையைத் தாங்க முடியாத அளவு சீனத் துறவிகள் பலரும் பலவீனமாக இருப்பதைப் பார்த்து இந்த தற்காப்புப் பயிற்சிகளை துணைப்பாடங்களாகத்தான் தந்திருக்கிறார் போதிதர்மன்.

எந்தப் பயிற்சி இருப்பதிலேயே  சிரமமோ அதை முயலுங்கள்" என்கிற சித்தாந்தத்தில் ஒவ்வோர் உடம்பையும் புடம் போடுவது போல்
பக்குவம் செய்து தந்தார் போதிதர்மன்."சஞ்சின் கதா" என்ற பெயரில்
போதிதர்மர் போதித்த கலையிலிருந்து பிறந்ததே கராத்தே.என்கிறார்கள். அதேபோல கிபா தாச்சி என்ற முறையும் போதி தர்மரால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான்.குனிந்திருக்கும் குதிரை போன்ற
இந்த ஆசனம் உடற்பயிற்சியாகவும் தியானமாகவும் இருக்கிறது.

ஓர் ஊதுபத்தி எரிந்து முடிகிற நேரம்-அதாவது ஒருமணிநேரம் வரை அந்த
ஆசனத்தில் அமர்ந்திருக்கும் கடும் பயிற்சியை போதிதர்மர் தந்த
பொக்கிஷங்களில் ஒன்று என்கிறார்கள்.
தன்னுடைய போதனைகள் எழுதப்படக்கூடாதென்றும் நேரடி போதனையாகவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தரப்பட வேண்டுமென்றும் போதிதர்மர் மிகவும் உறுதியாகக்
கூறிவிட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுதான் தசைமாற்றம் மஜ்ஜை மாற்றம் போன்றவை குறித்த போதிதர்மரின் போதனைகள் புத்தக வடிவம் பெற்றன.இரத்ததையும் மஜ்ஜையையும் தூய்மை செய்து,அதன்மூலம் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி அதையே ஞானமடையும் பாதையாகப்
பயன்படுத்தும் யுக்திகள் போதிதர்மரின் கொடைகளாகத் தொகுக்கப்பட்டன.

அவருக்கு விஷம் கொடுத்துக் கொன்றார்கள் என்பது போன்றவற்றுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை.அதேநேரம் அவர் எந்த வயதில் எப்படி இறந்தார் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை. முற்றாகவும் முழுதாகவும் பொழிந்துவிட்டுக் கரைந்து போகும் முகில்களுக்கு முகவரிகள்இல்லாதது
போல்;போதிதர்மரின் வாழ்வு பற்றிய  செய்திகள் கைவசமில்லை.ஆனால் அந்த ஆளுமையிடமிருந்து நாம் அறிய வேண்டிய செய்தி இதுதான். கலைகள் எத்தனை அரிதானவை என்றாலும் அவை
ஞானம் அடைவதற்கான கருவிகளே! த்ற்காப்புக் கலையிலும் இருக்கிறது
தியானத்தின் அம்சம்!!

Wednesday, October 23, 2013

படுவதே பாடம்



வாழ்க்கையின் அபத்தம் புரிந்துவிட்டால் அது
 வாழ்வின் அற்புதம் ஆகும்
கூக்குரல் அழுகைகள் அடங்கிவிட்டால்-வரும்
மௌனம் நிரந்தரம் ஆகும்
கேட்கிற கதைகள் புரிவதில்லை-யாரும்
கேளாதிருப்பதும் இல்லை
வேட்கையும் பசியும் வளர்த்ததன்றி-ஒன்றும்
வெட்டி முறிக்கவும் இல்லை

 மமதையில் ஆடிடும் வேளைகளில்-விதி
 முகமூடிக்குள் சிரிக்கும்
நமதெனும் மிதப்பில் இருக்கையிலே-அதன்
நிழலும் பதுங்கிக் கிடக்கும்
திமிறிய மனிதன் நிமிருமுன்னே -அடி
தலைமேல் விழுந்து தொலைக்கும்
குமுறல்கள் கதறல்கள் பயனுமில்லை-அதன்
கணக்குகள்   மட்டும் நிலைக்கும்

உற்றவர் பாதையில் தென்படலாம்-அவர்
உடன்வரப் போவதும் இல்லை
பெற்றதும் சுமப்பதும் வினைவழியே-பிறர்
பாரங்கள் பெறவழி யில்லை
கற்றதும் மறந்ததும் வேடிக்கைதான் -அவை
கடைவழிக் கொருதுணை யில்லை
பற்றுகள் எல்லாம் விலங்குகள்தான் -இது
புத்தியில் புலப்பட வில்லை

கட்டிய கற்பனைக் கோட்டைகளை-வந்து
காலால் மிதிக்குது காலம்
எட்டிய வரைக்கும் எனது பலம் -எனும்
எண்ணத்தைப் புழுதியும் மூடும்
கிட்டிய தெல்லாம் கடவுள்செயல் -எனக்
கருதி யிருப்பதே லாபம்
ஒட்டியும் ஒட்டா திருப்பதுதான் -இந்த
உயிர்பெறும் அனுபவ ஞானம்

அவனது கணக்கு


 குதிரைகள் லாயத்தில் கூடும்-ஒரு
 கணத்திலே நரியாக மாறும்
 புதிரைப் போட்டவன் சிவனே -இதன்
பதிலும் தெரிந்தவன் அவனே

வித்துகள் நடுவோம் வயலில் -அவை
வளர்வதும் சிதைவதும் மழையில்
எத்தனை எத்தனை பார்த்தோம்-அட
இருந்தும் வாழ்ந்திடக் கேட்டோம்
 
மணநாள் வேள்வியும் புகைதான் -அந்த
மயான வேள்வியும் புகைதான்
குணமும் பணமும் பொய்யே-அட
கண்கள் கசக்குதல் மெய்யே

எத்தனை உயிர்கள் படைப்பான் -அவன்
எத்தனை ஓலைகள் கிழிப்பான்
பித்தன் என்றதும் சரிதான் -அவன்
பிழைகள் எல்லாமே சரிதான்

கூட்டல்தெரியும் நமக்கு-அதில்
கழித்தல் அவனது கணக்கு
ஏட்டில் எழுதி மறைத்தான்- அதை
மறைத்ததில் தானவன் ஜெயித்தான்

வருவதும் போவதும் கனவு-இதில்
விதம்விதமாய் பல நினைவு
தருவதும் பறிப்பதும் அவனே-இந்த
தர்க்கத்தின் பதிலும் சிவனே

Monday, October 21, 2013

ஜெயமோகனும் ராஜேஷ்குமாரும்..

ஜெயமோகனும் நானும் பேருந்தொன்றில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். அது வித்தியாசமான பேருந்து.உணவு வகைகள் ஆர்டர் செய்யலாம். அசைவ உணவு வகைகளின் பட்டியல் கொண்ட மெனுகார்டை பேருந்தில் உள்ள சர்வர் நீட்டுகிறார்.கேட்கும் உணவு ரகங்கள் எதுவுமில்லை.அதற்குள் நாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வருகிறது.

இறங்கியதும் ஜெயமோகனின் வாசகர் ஒருவர் எதிர்ப்படுகிறார். அவரிடம் நல்ல உணவகம் எங்கே என்று விசாரிக்கிறோம்.அவர் வழி சொல்லிக் கொண்டே அருகிலுள்ள வீட்டைக் காட்டி "இதுதான் எழுத்தாளர் ராஜேஷ்குமார் வீடு" என்று காட்டுகிறார்.

உடனே நான்,"இல்லையே! அவர் குயூரியோ கார்டனில் அல்லவா இருக்கிறார்"என்று யோசிக்கிறபோதே கொசுவலை அடிக்கப்பட்ட ஜன்னல் வழியே ராஜேஷ்குமார் கைகாட்டுகிறார். எங்களைப் பார்த்துவிட்டு சட்டையில்லாத உடம்புடன் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ஆர்வமாக வெளியே வருகிறார்.

ஜெயமோகனும் ராஜேஷ்குமாரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்கிறார்கள்.உடனே நான் என் டேப் ஐ எடுத்து புகைப்படம் எடுக்க ஆயத்தமாகிறேன்."சட்டை மாட்டிக் கொண்டு வருகிறேனே" என்று புறப்படும் ராஜேஷ்குமாரைத் தடுத்து "சும்மா அப்படியே நில்லுங்க!தகழி சிவசங்கரன் பிள்ளை மாதிரி இருக்கட்டும்" என்றதும்  ராஜேஷ் குமார் திடுக்கிடுகிறார். ஜெயமோகன்,"கடுப்பேத்துகிறார் மைலார்ட்" என்பது போல் பார்க்கிறார். நான் புகைப்படம் எடுக்கிறேன்.

அருகிலொரு மண்டபத்தில் விஷ்ணுபுரம் அரங்கசாமி உள்ளிட்ட நண்பர்கள் இருக்கிறார்கள்.அவர்களிடம் புகைப்படத்தைக் காட்ட ஒரே கூச்சலும் சிரிப்பும்..அந்த சப்தத்திலேயே விழித்துக் கொள்கிறேன்.



இப்படியொரு கனவு எப்படி வந்தது?நேற்று சென்னையில் இருந்த போது சிரிப்பொலி  சேனலில் சந்தானம் ,கார்த்தியிடம் "ராஜேஷ்குமார் நாவலில கூட ஹீரோயின் யாருன்னு ரெண்டாவது பக்கத்திலேயே சொல்லீடுவாங்க கமல்சார் "என்று சொன்ன காட்சியைப் பார்த்ததும்,மாலை பயணத்தில் ஜெயமோகனின் "வெண்கடல் " படித்துக் கொண்டு வந்ததும் குழம்பி விட்டது போல....நல்லவேளை ! விஷ்ணுபுரம் விருது ராஜேஷ்குமாருக்கு கொடுப்பது போல் கனவு வராமல் இருந்ததே!!

Thursday, October 17, 2013

பகவான் ரமணர்



நீரில் நனைந்தும் நனையாத அக்கினியை
வேரினில் கொண்டானே வித்தகன்-நாரிலே
கல்லுரிக் கும்சிவனை காணுமண் ணாமலையில்
உள்ளுரித்துக் கண்டான் உவந்து.

ஆனை புகுந்தவுடல் ஆக உடலசைய
ஞான முனிவன் நடைபயின்றான் -தேனை
அருந்திச் செரித்த அறுகாலாய் ஜென்ம
மருந்தாய் அமர்ந்தான் மலர்ந்து.

உள்ளம் தனைக்கொன்றே ஊனில் புதைத்தவனோ
தள்ளிநின்று தன்னை தரிசித்தான் -பள்ளம்
புகமண்டும் கங்கைப் புனலாய் சிவனும்
அகம்வந்து சேர்ந்தான் அறி.

பாதாள லிங்கம் புடம்போட்ட தங்கம்தான்
ஆதாரம் தன்னை அறிந்தது-சேதாரம்
மேனி தனில்நேர, மேன்மைதவம் செய்கூலி
ஞானமென ஏற்கும் நயந்து

இந்நாளில் அவன்தூங்கப் போனான்


இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன்
இசைபோல வடிவின்றி ஆனான்

கண்ணா என்றழைக்கின்ற நாவும்-அதில்
களிகொண்டு விளைகின்ற பாவும்
எண்ணாத விந்தையென யாரும்-தினம்
எண்ணியெண்ணிக் கொண்டாடும் சீரும் கொண்டு

இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன்
இசைபோல வடிவின்றி ஆனான்

குழந்தைக்கு நிகரான உள்ளம் -அதில்
குமுறிவரும் தமிழ்க்கவிதை வெள்ளம்
எழுந்தாலும் இருந்தாலும் அழகன்-என
எல்லோரும் கொண்டாடும் இணையில்லாக் கவிஞன்

இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன்
இசைபோல வடிவின்றி ஆனான்

திரையோடு தீராத அலைகள்-அவன்
மழைபோல பொழிகின்ற வரிகள்
முறையோடு தமிழ்கற்றதில்லை-ஒரு
முறைகூட அவன்தந்த தமிழ்தோற்றதில்லை

இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன்
இசைபோல வடிவின்றி ஆனான்

பிட்டுக்கு மண்சுமந்த சிவனும்-மழைக்
கொட்டுக்கு மலைசுமந்த ஹரியும்
மெட்டுக்கு இவன்தந்த வரியில்-மிக
மயக்கங்கள் உருவாகி வருவார்கள் புவியில்

இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன்
இசைபோல வடிவின்றி ஆனான்

ஐம்பத்து நான்கேதான் அகவை-அவன்
அழியாத புகழ்கொண்ட கவிதை
உம்பர்க்கும் கிட்டாத அமுதை-தன்
உயர்வான தமிழாக்கி பறந்திட்ட பறவை

இந்நாளில் அவன்தூங்கப் போனான்-தன்
இசைபோல வடிவின்றி ஆனான்

சென்னையில் கண்ணதாசன் விழா


Tuesday, October 15, 2013

ஆனாலும் நீதான் கடல்


கடவுளின் கைப்பேசி பார்த்தேன் -அவர்
கூப்பிட்ட ஒரே நண்பன் நீதான்
நடைபோட்டு உன்வாசல் சேர்ந்தேன் -என்
வழியெங்கும் ஒரேகாவல் நீதான்
தடைபோட்ட எல்லாமே மாறி-உன்
திசைகாட்டி நிற்கின்றதே
விடைகேட்டு போகின்ற எல்லாம் -உன்
வழிகேட்டு வரப்போகுதே

ஆனந்த அலையாக வந்தாய்
ஆனாலும் நீதான் கடல்
வானாக விரிகின்ற ஈசா-உன்
விழிபார்க்க எந்தன் மடல்

எங்கெங்கே யார்தோன்ற வேண்டும்
எல்லாமே நீபோட்ட கோடு
மங்காமல் ஆனந்தம் பொங்கும்
உன்னோடு நானுள்ள போது
பொங்காதோ நெஞ்சங்கள் இங்கே-ஒரு
பொன்வார்த்தை நீசொல்லும் போது
எல்லாமும் அடங்காதோ இங்கே-உன்
ஏகாந்த மௌனத்தின்  போது  

ஆனந்த அலையாக வந்தாய்
ஆனாலும் நீதான் கடல்
வானாக விரிகின்ற ஈசா-உன்
விழிபார்க்க எந்தன் மடல்

கண்ணீரில் அலைபாயும் நேரம்
கணநேரம் உன்பாதம் காட்டு
எண்ணங்கள் எல்லாமே பாரம்
எரியட்டும் உன்தீயை மூட்டு
எனக்கென்று வினையேதும் இல்லை-அட
எல்லாமே உன்பாதம் சேரும்
கணக்கேது வழக்கேது நாதா-என்
கடனெல்லாம் உன்னாலே தீரும்

ஆனந்த அலையாக வந்தாய்
ஆனாலும் நீதான் கடல்
வானாக விரிகின்ற ஈசா-உன்
விழிபார்க்க எந்தன் மடல்

Sunday, October 13, 2013

வந்தாள் கண்ணெதிரே

 
 
அவளுக்கு வடிவம் கிடையாது
அழகுகள் எல்லாம் அவள் வடிவே
அவளுக்குப் பெயரொன்று கிடையாது
ஆயிரம் பெயர்களும் அவள்பெயரே
அவளுக்கு நிகரிங்கு கிடையாது
அவளுக்கு அவள்தான் ஒருநிகரே
கவலைகள் எனக்கினி கிடையாது
காளிவந்தாள் என் கண்ணெதிரே

தோய்ந்திடும் நடுநிசி நிறமல்லவா
தாமரை வதங்கிய நிறமல்லவா
பாய்ந்திடும் மின்னலை போல்சிலிர்ப்பு
பைரவி வருகிற விதமல்லவா
ஆய்ந்திட முடியா அவள்கருணை
அமுதம் பெருகிடும் வகையல்லவா
கோயிலில் வீதியில் தொடர்வதனை
காட்டிடும் குங்கும மணமல்லவா


வைத்த கொலுவில் அவள்பொம்மை
வாழ்வில் அவள்மட்டும் தானுண்மை
பொய்த்த கனவுகள் நிஜமாக
பாதை வகுப்பதே அவள்தன்மை
கைத்துப் போன வாழ்வினிலே
கட்டிக் கரும்பாய் அவள் அண்மை
வைத்தியச்சி வருகின்றாள்
வாரித் தருவாள் பலநன்மை

வழிகாட்டாய்


 மனக்கேடு கொண்டெழுப்பும் கோட்டை-அது
  மணல்வீடாய் சரிந்துவிழும் ஓட்டை
 குணக்கேடு தீரேன்நீ பராசக்தி பாரேன்என்
  ஏட்டை-என்ன -சேட்டை

குச்சியிலே கோடிழுத்தா கோலம்?-எனை
குற்றம்சொல்லி துப்புதடி காலம்
உச்சகட்டம் என்நடிப்பு உள்ளகதை உன்நினைப்பு
தூலம்-அலங்-கோலம்

 கோயிலுக்குள் நின்றுகொண்ட கள்ளி-இவள்
  கொஞ்சுகிறாள்பிள்ளையினைக் கிள்ளி
 தாய்மிதித்துப் பிள்ளையழ நாமங்களை சொல்லியழ
  தள்ளி -சென்றாள்-துள்ளி
   
எத்தனைநாள் இப்படியுன் ஆட்டம்-என்
இமைநடுவே கண்ணீரின் மூட்டம்
வித்தகியுன் கைவிரல்கள் பற்றியிங்கே பலவகையாய்
காட்டும்-பொம்ம- லாட்டம்

இப்போதென் அழுகுரலைக் கேட்டாய்-எனை
இப்படியே விட்டுவிட மாட்டாய்
தப்பேது செய்தாலும் கற்பகமே உன்கரங்கள்
நீட்டாய்-வழி-காட்டாய் 


இவ்வளவு நாள்பொறுத்தேன் தாயே-இந்த
இன்பதுன்பம் அத்தனையும் நீயே
கவ்வுகிற பேய்முதலை கால்நெருங்க உள்ளமிரங்
காயே-மஹா-மாயே

அழுதுவிடு! தொழுதுவிடு!


அர்ச்சனை நேரத்தில் இட்டமலர்
அரைநாள் சென்றால் சருகாகும்
உச்சி முகர்பவர் சொல்லொருநாள்
உதறித் தள்ளும் பழியாகும்
பிச்சியின் கூத்துகள் இவையெல்லாம்
பாடம் நமக்கு நடத்துகிறாள்
இச்சைத் தணலை அவித்துவிட்டு
இலையைப் போடவும் சொல்லுகிறாள்

மண்ணில் இறக்கி விட்டவள்தான்
மழலை ஆட்டத்தை ரசிக்கின்றாள்
கண்கள் கசக்கி அழுவதையும்
கண்டு தனக்குள் சிரிக்கின்றாள்
எண்ணி ஏங்கி அழுகையிலே
இடுப்பில் சுமக்க மாட்டாளோ
வண்ணப் பட்டால் விழிதுடைத்து
விளையாட்டுகளும் காட்டாளோ

படுவது பட்டுத் தெளிவதுதான்
பக்குவம் என்பாள் பராசக்தி
கெடு வைப்பதற்கு நாம்யாரோ
கேட்டால் சிரிக்க மாட்டாளோ
விடுநீ மகனே வருந்தாதே
விடியும் என்று சொல்கின்றாள்
தடுமாறாமல் துயிலவிட்டு
தானாய் நாளை எழுப்பிடுவாள்

அன்னையின் பிள்ளைகள் நாமெல்லாம்
அவலம் நேரப் போவதில்லை
முன்னை வினைகள் முகங்காட்டும்
முள்ளை எடுத்தால் சோகமில்லை
இன்னும் அழுதால் அழுதுவிடு
இமைகள் துடைத்துத் தொழுதுவிடு
மின்னும் சிரிப்புடன் எழுந்துவிடு
மாதங்கி பதங்களில் விழுந்து எழு  

கொலுவிலேறினாள்

கொட்டோடு முழக்கோடு கொலுவிலேறினாள் -அன்னை
கொள்ளையெழில் பொங்கப் பொங்க மனதிலேறினாள்
பொட்டோடு பூவோடு மாதர்வாழவே -அன்னை
பூரணமாய் கருணைதந்து பரிவுகாட்டினாள்

தீபத்தின் ஒளியினிலே தகதகக்கிறாள்-அன்னை
திருவிளக்கின் சுடராகத் தானிருக்கிறாள்
நாபிதனில் ஒலியாக  நிறைந்திருக்கிறாள்-அன்னை
நாதத்துள் மௌனமென மறைந்திருக்கிறாள்

சாமரங்கள் வீசியுப சாரம்செய்கையில்-அவள்
சிலையெனநாம் செம்பட்டு சார்த்தி நிற்கையில்
நாமங்களோர் ஆயிரமும் நவின்றிருக்கையில்-அன்னை
நேர்படவே மழலையாக வந்துநிற்கிறாள்

கோடிமலர் பாதமிட்டும் தீரவில்லையே-அவள்
கொலுவழகைப் பார்க்கும்வேட்கை ஆறவில்லையே
தோடெறிந்த தேவதேவி தென்படுவாளே-வினை
தானெரிந்து போகும்படி அருள்தருவாளே

சந்தனமும் சரமலரும் சூட்டும் போதிலே-சிறு
சலங்கையொலி மெல்லமெல்லக் கேட்கும் காதிலே
மந்திரங்கள் சொல்லச் சொல்ல ரூபம்தோன்றுதே-இனி
மறுமையென்னும் ஒன்றில்லாமல் முடிந்து போகுதே

மங்கலை கொண்டாள் மகாவெற்றி

சங்கல்பம் கொண்டு சமர்செய்ய வந்திங்கு
மங்கலை கொண்டாள் மகாவெற்றி-எங்கெங்கும்
நல்லவையே வென்றுவர நாயகி நாமங்கள்
சொல்லிப் பணிந்தால் சுகம்.

புத்தி வலிவும் பொருள்பலமும் பாங்கான
உத்தி பலமுமே உத்தமிதான் -சத்தியவள்
போடும் கணக்கின் பதிலீட்ட வேண்டியே
ஆடும் விதியாம் அரவு.

வண்ணத் திருவடிகள் வையத்தின் ஆதாரம்
கண்கள் கருணைக் கருவூலம்-பண்ணழகோ
தேவி குரலாகும் தேடும் மனவனத்தே
கூவி வருமே குயில்.

பொன்கயிலை ஆள்கின்ற பேரரசி மாதங்கி
மென்மயிலைப் போற்ற மனம்மலரும்-மின்னொயிலை
காணுதற்கும் நெஞ்சம் குழைவதற்கும் நாமங்கள்
பேணுதற்கும் தானே பிறப்பு.

 அத்தனுண்ட நஞ்சை அமுதாக்கித் தந்தவளை
 தத்துவங்கள் ஆள்கின்ற தத்துவத்தை-பித்துமனத்
தாய்மையை எங்கள் திருவை கலையழகை
போய்வணங்கச் சேரும் புகழ்.

காசி விசாலாட்சி கங்கை தனில்நீந்தும்
ஆசை மிகுமன்ன பூரணி-தேசுடைய
மீனாட்சி காமாட்சி மிக்க வடிவுகளில்
தானாட்சி செய்யும் திறம்.

எங்கள் அபிராமி; ஈசன் நடனத்தில்
சங்கமம் ஆகும் சிவகாமி-பொங்குமெழில்
கற்பகத்தாள் கோலவிழிமுண்டகக் கண்ணியின்
பொற்பதங்கள் நாளும் பணி.

கோனியன்னை எங்களது கோவையிலே தண்டுமாரி
ஞான மருள்பச்சை நாயகியாள்-ஆனைமலை
மாசாணி பண்ணாரி மாரியன்னை பேரருளால்
ஆசைநிச மாகும் அறி.

சித்தம் பதமாகும் செய்கை ஜெயமாகும்
நித்தம் விடியல் நலமாகும்-புத்தம்
புதிய புகழும் பலசேரும் தாயை
இதயம் தனிலே இருத்து.

Friday, October 11, 2013

துயரம் தீர்ப்பாள் மஹாலஷ்மி



அலைகள் புரண்டெழும் ஓசையிலே-ஓர்
அழகியின் சிரிப்பொலி கேட்கிறது
விலைகள் இல்லாப்  புதையல்களில்-அவள்
வண்ணத் திருமுகம் தெரிகிறது
நிலைபெறும் பாற்கடல் பாம்பணையில்-அந்த
நாயகி சரசம் நிகழ்கிறது
வலைவிழும் மீன்களின் துள்ளலைப்போல்-அவள்
விழிபடும் இடமெலாம் கொழிக்கிறது
அறிதுயில் கொள்ளும் பரந்தாமன் -அவன்
அமைதிக்குக் காரணம் மஹாலஷ்மி
வறுமையைக் களையும் வரலஷ்மி-நல்
வளங்கள் தருவாள் தனலஷ்மி
மறுவே இல்லா நிலவாக-நம்
மனங்களில் உதிப்பவள் கஜலஷ்மி
மறுபடி மறுபடி வரும்பசியை-மிக
மகிழ்வாய் தணிப்பாள் சுபலஷ்மி
தானியக் களஞ்சியம் நிரம்பிடவும்-மிகு
தங்கம் வைரம் நிறைந்திடவும்
தேனினும் இனிய நல்வாழ்வில்-எட்டுத்
திசையும் புகழே சூழ்ந்திடவும்
ஞானம் வீரம் வெற்றியெலாம்-வந்து
நேர்பட நம்மைச் சேர்ந்திடவும்
தானாய் இரங்கி அருள்தருவாள்-நம்
துயரம் தீர்ப்பாள் மஹாலஷ்மி

 
மாலவன் மனைநலம் காபவளாம்-நல்ல
மாதர்கள் முகத்தில் குடியிருப்பாள்
காலம் விதிக்கும் சோதனைகள்-தமை
கருணைப் பார்வையில் துடைத்தெடுப்பாள்
ஓலம் இடுகிற பக்தர்கள் முன் -அவள்
ஒடி வந்தே துயர்துடைப்பாள்
நீல வண்ணனின் நெஞ்சினிலே-ஒளி
நித்திலமாவாள் மஹாலஷ்மி

நானிலம் காப்பாள் மடியில்

பச்சைப் பட்டின் முந்தானை -அந்தப்
பரமனின் நெற்றியை ஒற்றும்
பச்சை வண்ணத் திருமேனி-எங்கள்
பரமனின் பாதியைப் பற்றும்
பச்சைப் புயலாம் மயிலினிலே-ஒரு
பிள்ளை பூமியை சுற்றும்
பச்சை மாமலை திருமாலோ-அவள்
பிறந்த வகையின் சுற்றம்

மாம்பழம் பெற்ற முதல்பிள்ளை -எங்கள்
மாதுமை மடியினில் துஞ்சும்
தேம்பி யழுத பிள்ளைக்கோ-பால்
திருஞானத்துடன் விஞ்சும்
சாம்பல் மேட்டினில் சாம்பசிவம்-உடன்
சாம்பவிக் கொடிநின்று கொஞ்சும்
கூம்பிய உயிர்கள் மலர்ந்துவிட-அவள்
குளிர்மலர் அடிகளே தஞ்சம்

நாயகிஎங்கள் சிவகாமி -இந்த
நானிலம் காப்பாள் மடியில்
தாயாம் எங்கள் அபிராமி-துயர்
துடைத்திட வருவாள் நொடியில்
ஆய கலைகள் அனைத்தையுமே-அவள்
ஆதரிப்பாள் கைப்பிடியில்
மாயைகள் தீர்க்கும் மஹாமாயை -நம்
முன்வருவாள் பல வடிவில்   

தேரின் வடம்தொடும் கைகள்-அதில்
தேவதேவியின் முத்தம்
வேருக்கு நீர்விடும் கைகள் -தமை
வித்தகி கைகளும் பற்றும்
பேருக்கு ஆசையில்லாமல்-பணி
புரிபவர் மனமவள் முற்றம்
காருக்கும் நீர்தரும் கருணை-நிறை
கடைவிழி யால்புவி சுற்றும்

அடக்கும் அங்குசம்



கட்டிவைத்தும் மனக்களிறு கட்டுப்படாது-அது
காமங்கொண்டு பிளிறுவதை விட்டுவிடாது
தட்டிவைக்க அவள்வராமல் தலையடங்காது-எங்கள்
தேவதேவி குரல்தராமல் நிலையடங்காது

அங்குசத்தைக் கொண்டுநின்றாள் ஆலயத்திலே-நம்
அகந்தையெல்லாம் தளரவைக்கும் ரௌத்திரத்திலே
அங்கயற்கண் பார்வைபட்ட ஆனந்தத்திலே-அட
ஆனையெல்லாம் பூனையாகும் சிவலயத்திலே!

பாணமைந்தும் கரும்புவில்லும் பூங்கரத்திலே-ஒரு
பார்வையிலே மனமடங்கும் அவள்பதத்திலே
கோணங்களோ ஒன்பதுஸ்ரீ சக்கரத்திலே-நவ
கோள்களெல்லாம் வணங்கிநிற்கும் ஸ்ரீபுரத்திலே 

சிந்துரத்தில் தோய்ந்தபாதம் சமர்க்களத்திலே-கொடும்
சினமெழுந்து சூலமேந்தும் அமர்க்களத்திலே
வந்தபகை மாய்க்கும் அன்னை ஒளிரதத்திலே-அவள்
வைத்தசுடர் பற்றிக்கொள்ளும் வினைப்புனத்திலே

சொல்லாய் மலர்கிறவள்


ஏந்திய வீணையில் எழுகிற ஸ்வரங்கள்
எண்திசை ஆண்டிருக்கும்
மாந்திய அமுதம் பொய்யென தெய்வங்கள்
மதுரத்தில் தோய்ந்திருக்கும்
பூந்தளிர் இதழ்களில் பிறக்கிற புன்னகை
புதுப்புது கலைவளர்க்கும்
சாந்தமும் ஞானமும் சரஸ்வதி தேவியின்
சந்நிதி தனில்கிடைக்கும்


படைப்புக் கடவுளின் பத்தினித் தெய்வம்
படையல் கேட்கிறது
விடைக்கும் மனங்களின் அறியாமை தனை
விருந்தாய்க் கேட்கிறது
நடையாய் நடந்து நல்லவை தேடிட
நிழல்போல் தொடர்கிறது
படைகள் நிறைந்த மன்னவர் பணியும்
பெருமிதம் தருகிறது

பனையோலை முதல் கணினித் திரைவரை
பாரதி ஆளுகிறாள்
தனையே பெரிதென எண்ணிடும் மூடர்முன்
திரைகள் போடுகிறாள்
நினையும் நொடியில் கவியாய் கலையாய்
நர்த்தனம் ஆடுகிறாள்
வினைகள் ஆயிரம் விளையும் விரல்களில்
 வித்தகி வாழுகிறாள்

சின்னஞ் சிறிய மழலையின் நாவினில்
சொல்லாய் மலர்கிறவள்
கன்னஞ் சிவந்த கன்னியர் அபிநயக்
கலையாய் ஒளிர்கிறவள்
மின்னல் ஒளியாய் உளியின் முனையில்
மெருகுடன் மிளிர்கிறவள்
இன்னும் பலவகைக் கலைகளில் எல்லாம்
இன்பம் தருகிறவள்

வாணியின் நிழலில் வாழ்கிற பொழுதில்
வருத்தம் சுடுவதில்லை
தூணின் அழகிலும் தெரிகிற தேவியின்
தூய்மைக்கு நிகருமில்லை
காணும் திசைகளில் கவின்மிகு வடிவில்
காட்சி கொடுக்கின்றாள்
பேணத் தெரிந்தவர் வாழ்வினில் எல்லாம்
புத்தொளி தருகின்றாள்

இது இராமாயணம் அல்ல....




காத்துக் கிடந்தது குகன்படகு
கள்ளத் தோணிகள் திடீர் வரவு........

மோதிய அலைகளில் ஆடியபடியே
பாதங்கள் படுமென ஏங்கியபடியே
நாயகன் திருமுகம் தேடியபடியே
தோழமை எனும்சொல் சூடியபடியே

காத்துக் கிடந்தது குகன்படகு
கள்ளத் தோணிகள் திடீர் வரவு........

துடுப்புகள் ஏனோ அசையவுமில்லை
திடுக்கிட்ட வேடன் தெளியவுமில்லை
வழக்கத்தின் மாற்றம் விளங்கவுமில்லை
இலக்குவன் ஏதும் அறியவுமில்லை

காத்துக் கிடந்தது குகன்படகு
கள்ளத் தோணிகள் திடீர் வரவு........

சொந்த நதியிலா சொந்தம் தொலைவது
எந்தத் திசையில் நாவாய் செல்வது
வந்ததும் சென்றதும் விடுகதையானது
சந்தக் காவியம் சிறுகதையானது
 

காத்துக் கிடந்தது குகன்படகு
கள்ளத் தோணிகள் திடீர் வரவு........

குகனொடும் ஐவர் என்றதும் பொய்யா
வகையறியாதவர் வென்றது மெய்யா
சகலரும் காணச் சென்றனன் ஐயா
ரகுவரன் தோள்களில் ராவணன் கையா
 

காத்துக் கிடந்தது குகன்படகு
கள்ளத் தோணிகள் திடீர் வரவு........

வேர்விடும் சொந்தம் வருந்தியதென்ன
கூரிய கணைகள் குழம்பியதென்ன
கார்நிற வண்ணன் கணக்குகள் என்ன
மாறிய திசையின் மர்மங்கள் என்ன

காத்துக் கிடந்தது குகன்படகு
கள்ளத் தோணிகள் திடீர் வரவு........

பரிபுரை திருவுளம்


அவள் தரும் லஹரியில் அவளது பெயரினை
உளறுதல் ஒருசுகமே
பவவினை சுமைகளும் அவளது திருவிழி
படப்பட சுடரெழுமே
சிவமெனும் சுருதியில் லயமென இசைகையில்
சிறுமியின் பரவசமே
புவனமும் அவளது கருவினில் தினம்தினம்
வளர்வது அதிசயமே

நதிமிசை பெருகிடும் அலைகளில் அவளது
நெடுங்குழல் புரண்டு வரும்
சிதைமிசை எழுகிற கனலினை அவளது
சிறுவிரல் வருடிவிடும்
விதியதன் முதுகினில் பதிகிற எழிற்பதம்
வினைகளைக் கரையவிடும்
மதியென எழுகிற திருமுக ஒளியினில்
கதிர்மிசை சுடருமெழும்

கனல்பொழி நுதல்விழி கருணையின் இருவிழி
கயலென சுழன்றிடுமே
மனமெனும் சிறுகுடில் தனிலவள் நுழைகையில்
மிகுமங்கு   ஸ்ரீபுரமே
பனிபடர் மலரிடை பரவிடும் சுகந்தமும்
பரிபுரை திருவுளமே
இனிவரும் உயிர்களும் இவளது மடியினில்
இருந்தபின் கரைந்திடுமே

நிலமிசை நெளிகிற சிறுபுழு அசைவுகள்
நிகழ்வதும் அவளருளே
மலைகளை விழுங்கிடும் பிரளய வரவுகள்
அதிர்வதும் அவள்செயலே
உலைகொதி அரிசியில் உலகெழு பரிதியில்
உமையவள் அருள்நலமே
இலைபயம் இலையென இதழ்வரும் ஒளிநகை
எமைநலம் புரிந்திடுமே