Tuesday, November 25, 2014

வந்தாள் ஒருநாள் தானாக




இந்தச் சிறுமியை துணைக்கழைத்தால்-வினை
ஏதும் செய்திட முடிவதில்லை
சொந்தப் புத்தியும் இயங்கவில்லை-இவள்
செய்கைகள் எதுவும் விளங்கவில்லை
வந்தாள் ஒருநாள் தானாக -என்னை
வாட்டி வதைக்கிற தேனாக
அந்த நாள்முதல் நானுமில்லை-அட
அதன்பின் எனதென ஏதுமில்லை

ஒப்பிட  முடியாக் குறும்பியென-மெல்ல
உள்ளே தள்ளிக் கதவடைத்தேன்
அப்பொழுதும் அவள் அயரவில்லை-தனியே
ஆடிக் களிக்கும் குரல் கேட்டேன் 
எப்படி சாத்தியம் என்றறிய -நான்
எட்டிப் பார்த்தேன் மனமழிந்தேன்
சொப்புச் சாமான் வரிசையிலே -அவள்
சுற்றும் கோள்களை வைத்திருந்தாள்


நட்சத்திரங்களை சோழியென்றாள்-அவள்
நாளையும் நேற்றும் தோழியென்றாள்
உச்சிப் பொழுதினில் நள்ளிரவில்-அவள்
ஊரினைச் சுற்றி ஓடுகிறாள்
பச்சை நிறமா புதுசிகப்பா-அவள்
பேரெழில் நிறமும் புரியவில்லை
பிச்சியைப் போல்சில பொழுதுகளில்-இந்தப்
பேரெழில் கண்மணி ஆட்டுவிப்பாள்

ஏற்றிய தீபம் போலிருப்பாள்-அவள்
எரிமலை போலவும் சீறிடுவாள்
காற்றினில் தென்றல் இவளென்பேன் -ஒரு
கணத்தினில் புயலென்று காட்டிடுவாள்
ஈற்றோ முதலோ இல்லாமல் -அந்த
ஈசனின் இதயத்தில் வாழ்பவள் முன்
தோற்றே ஜெயித்தேன் நானவளை-அவள்
தோல்விகள் வெற்றிகள் தாண்டி நிற்பாள்


ஆயுள் பிச்சை அவள்கொடுப்பாள் -பல
ஆயிரம் இச்சைகள் வளர்த்திடுவாள்
தாயென்றும் சேயென்றும் உருமாறி-பல
தகிடு தத்தங்கள் செய்திடுவாள்
கோயில்கள் தோறும் சிலையாவாள் -அந்தக்
கோலங்கள் கடந்த நிலையாவாள்
மாயைக்கும் மாயை ஆனவளை- பாழ்
மனதினில் வைத்தே ஒளியடைந்தேன்
 

Saturday, November 22, 2014

ஏதும் குறையில்லை யே


சூல்கொண்டு நீலம் சுடரும் முகிலதுவும்
பால்கொண்ட பிச்சி பெருமுலையோ-மால்கொண்ட
நெஞ்சின் கனமோ நகருகிற வானமோ
நஞ்சுண்ட கண்டம்தா னோ


சாவா திருக்க சுடுங்கவலை யாலிங்கு
மூவா  திருக்க மருந்துண்டு-ஏவாத
அம்பால் புரமெரித்து ஆனை உரிபோர்த்த
நம்பன் தருகின்ற நீறு


பூதங்கள் ஐந்தின் பொறியகற்றும் போர்க்களத்தே
நாதன்தாள் தானே நமதரணாம்-சீதங்கொள்
வேலையெழும் நஞ்சை விருந்தாகக் கொண்டவனின்
சூலமே நீயே சுடு.


நீறோடு நீறாய் நெடுமேனி ஆகும்முன்
ஆறோடே ஆறாய் அழியும்முன் -ஏறேறும்
நாதன் கழலே நினையாயென் நெஞ்சமே
ஏதும் குறையில்லை யே



தந்தோன் அவனே தருதல் மறுப்பானோ
செந்தமிழ் வல்லநம் சொக்கேசன் -சிந்தையில்
சொல்லாய் பொருளாய் சுடர்விடும் கற்பனையாய்
எல்லாமாய் உள்ள அவன்


எல்லையொன் றில்லாத ஏகன் அநேகனவன்
வில்லை வளைக்கையில் ஏன்சிரித்தான் இல்லையென
சொல்வார் வினைகளையும் சேர்த்தே எரிக்கின்ற
நல்லான் நகைபூத்தான் நன்று

Thursday, November 13, 2014

சிங்கப்பூர் வருகிறேன்

வாய்ப்புள்ள நண்பர்கள் வருகைதர அழைக்கிறேன்

Saturday, November 1, 2014

கிழக்கு பார்த்த வீடு


கிழக்குப் பார்த்த வீட்டில் நுழைந்தால்
கீற்று வெளிச்சம் முதலில் தெரியும்.
அரக்குப் பட்டின் அதீத வாசனை;
அதன்மேல் பிச்சி செண்பக நறுமணம்;

கனக்கும் வெளிச்சம் கனலும் சுடர்கள்;
'கலகல' வென்று வெண்கலச் சிரிப்பு;
ஒளிக்கும் ஒளிதரும் ஒய்யாரக் கருமை;
ஒவ்வோர் உயிரையும் உலுக்கும் தாய்மை;

துளித் துளியாக துலங்கும் அழகு;
தொடர்ந்தும் தொட்டிட முடியாக் கனவு;
பளிங்குக் கண்களில் படரும் குறும்பு;
பக்கத் தொலிக்கும் பண்தமிழ்,பழமறை;


மேலைத் திசையில் மணிவிழி பதித்து
 வாலையைப் பார்ப்பான் அமுத கடேசன்;
கோலத் திருவிழி கிழக்கே பதிய
நாதனைக் காண்பாள் நம் அபிராமி;


நுதல்விழி கொண்ட நூதன இணைகள்
முதல்விழி மூடி மோனத்திருக்க
இதம்தரும் நான்கு இணைவிழி கலந்து
விதம்விதமான சரசத்தில் லயிக்க
நிரந்தரமான நிலைபேறழகி
அருள்தரும் கடவூர் அணுகுக மனமே !