Friday, April 30, 2010

இப்படித்தான் ஆரம்பம் - 17

கவியரசர் கண்ணதாசன் மறைந்து சிலநாட்களுக்குப் பின், ஒரு கச்சேரிக்கான விமர்சனத்தில், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் கலை விமர்சகர் சுப்புடு. "கண்ணதாசனை தமிழில் புதிய சாகித்யங்கள் நிறைய எழுதுமாறு நான் கேட்டுக் கொண்டிருந்தேன். செய்து தருவதாக சொல்லியிருந்தார். அதற்குள் மறைந்து விட்டாரே'  என்று ஆதங்கப்பட்டிருந்தார் அவர். தமிழ் இசைமரபுக்கு மிகவும் புதிதான அம்சங்களை திரைப்பாடலிலேயே செய்தவர் கண்ணதாசன் என்பதால் தான் அப்படிக்கேட்டுக் கொண்டதாக சொன்ன சுப்புடு, "விரக தாபம் என்கிற விஷயம் இசைப்பாடல்களில் எழுதப்பட்டு வந்த விதத்தையும்  கண்ணதாசன் கையாண்ட புதுமையையும் மேற்கோள் காட்டியிருந்தார்.
"காலம் காலமாகவே தமிழில் விரகதாபம் என்றால் பால் கசக்கும் பழம் புளிக்கும். இதையே வைத்துக் கொண்டு மன்னன் எப்படி மாற்றுகிறார் பாருங்கள். 
"பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது!பஞ்சணையில் காற்று வரும்
தூக்கம் வராது".
மேற்கண்ட வரிகளை இதயம் பேசுகிறது இதழில் சுப்புடு எழுதியதாக  நினைவு. வரிகள் நினைவிருக்கின்றன. வருடமோ இதழோ  நினைவிலில்லை . அப்போது நான் பள்ளி மாணவன்.

"கட்டவிழ்ந்த கண்ணிரண்டும் உங்களைத் தேடும்-பாதிக்
கனவுவந்து மறுபடியும் கண்களை மூடும்
பட்டுநிலா வான்வெளியில் காவியம் பாடும்-கொண்ட
பள்ளியறைப் பெண்மனது போர்க்களமாகும்"



என்று நயமும் நளினமுமாய் நகரும் அந்தப் பாடல். கண்ணதாசன்  பெண்களின் விரகம் குறித்து எழுதும்போது சில அற்புதமான நியதிகளைக் கையாள்கிறார். வேட்கை மீதூற பெண் பாடுகிற போதுகூட அவள் காமுகியாக சித்தரிக்கப்பட்டுவிடக்  கூடாது என்பதில் அவர் காட்டும் கவனம் நுட்பமானது "யார் நீ"  என்றொரு படம். தான் கைப்பிடித்தவள் பெண்ணா பேயா என்று தெரியாத குழப்பத்தில் நாயகன் விலகியே இருக்கிறான்.
அவனை மெல்ல ஆசுவாசப்படுத்தி அணைத்துக் கொள்ள முயல்கிறாள் நாயகி

"பொன்மேனி தழுவாமல் பெண்ணின்பம் அறியாமல் 
போக வேண்டுமா
கண்ணோடு கண்சேர உன்னோடு நான்சேர
தூது வேண்டுமா"
என்பது பல்லவி.

இதில் நாயகி மட்டுமே பாடுகிறாள்.ஆசைக்கும் அச்சத்திற்கும் இடையில் நாயகன் தடுமாறுகிறான்.
"இரவென்பதே நம்வாழ்விலே இல்லாமல் போகுமோ
உறவென்பது உன்நெஞ்சிலே இன்றேனும் தோன்றுமோ"

சராசரியான பாடலாசிரியர்களாக இருந்திருந்தால் அடுத்த வரியில் போதையை ஏற்றியிருப்பார்கள். ஆனால், பெண்மையின்மீது கவிஞருக்கிருக்கும் மரியாதை கண்மலர்த்துகிறது.
"நீசொல்வதை நான்சொல்வதா இது நீதியாகுமா?
தாளாத பெண்மை தீண்டும்போது மௌனமாகுமா?  
என்று பாடவைத்து விடுகிறார்.

விரகம் வளர்க்கும் சூழல் என்றாலும் அடுத்த சரணத்தில் காதலின் தளும்பலையே கவிஞர் பாடலாக்குகிறார்,

"மழைமேகமே என் தீபமே என்காதல்தெய்வமே
மறுவாழ்விலும் உன்னோடுநான் ஒன்றாக வேண்டுமே
நீயென்பதும் நானென்பதும் ஒருராகம் அல்லவா..
நாமொன்று சேர்ந்து பாடும்போது வார்த்தை வேண்டுமா"
என்று காமக் கடலில் இறங்கிய பாட்டு காதல் கரையில் சேர்கிறது.
இந்த நாசூக்கு பாரதியிடம் உண்டு. குயில்பாட்டில் குயில் காளையைக் காதலிக்கும்.

"காமனே மாடாகக் காட்சிதரும் மூர்த்தியே
பூமியிலே மாடுபோல் பொற்புடைய சாதியுண்டோ?
காளையர்தம் முள்ளே கனம் மிகுந்தீர்,ஆரியரே!
நீள முகமும்,நிமிர்ந்திருக்கும் கொம்புகளும்
பஞ்சுப் பொதிபோல் படர்ந்த திருவடிவும்
மிஞ்சு புறச்சுமையும் வீரத் திருவாலும்...'
என்றெல்லாம் நீளப் புகழ்ந்துவிட்டு,

"காளை யெருதரே,காட்டிலுயர் வீரரே
தாளைச் சரணடைந்தேன் தையலெனைக் காத்தருள்வீர்
காதலுற்று வாடுகிறேன்!காதலுற்ற செய்தியினை
மாதருரைத்தல் வழக்கமில்லை யென்றறிவேன்.
ஆனாலும் என்போல் அபூர்வமாங் காதல்கொண்டால்
தானா வுரைத்தலன்றிச் சாரும் வழியுளதோ?"

என்று அதற்கான நியாயத்தையும் கற்பிக்கும். காதலை வெளிப்படுத்தும்போதுகூட  அதில் கவனமாயிருக்கும் கலையை  தன்  நாயகியருக்கு கவிஞரும் கற்றுக் கொடுக்கிறார். (இடையில் ஒரு செய்தி .கவிஞருக்கு பாரதியின் குயில்பாட்டில் மிகுந்த  ஈடுபாடு உண்டு. பாரதி குயில்பாட்டை எழுதும்போது என்ன மனநிலையில் இருந்திருப்பான் என்றொரு கவிதையில் சொல்கிறார்.

"ஓராயிரங் குயில்கள்
உட்காரும் சோலையிலே
ஓர் குயிலைக் கண்டானடி-பாரதி
உடன்குயில் ஆனானடி"
என்பது கவிஞரின் கவிதை)
நாயகியும்,நாயகனும் தங்களுக்குள் ஏற்படும் பிணக்கை பிள்ளையிடம் பாட்டுப்பாடி தீர்த்துக் கொள்கிறார்கள். காத்திருந்த கண்கள் படத்தில்

"வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா-அவள்
வடித்துவைத்த ஓவியத்தைப்  பாரடா கண்ணா  
 என்ற பாடல்.அதில் நாயகன் கேட்பான்,

தினம்தினம் ஏன் கோபம்கொண்டாள் கூறடா கண்ணா-அவள்
தேவையென்ன ஆசையென்ன கேளடா கண்ணா!
அங்கே இருப்பது குழந்தையும் கணவனும்தான்.ஆனால் நாயகி என்ன சொல்கிறாள்?

நினைப்பதெல்லாம் வெளியில்சொல்ல முடியுமா கண்ணா-அது
நீபிறந்த பின்புகூட இயலுமா கண்ணா!
இது,கதாபாத்திரத்தின் கனத்தைக் கூட்ட கவிஞர் சேர்க்கும் தங்கம்.


தமிழிலக்கியத்தில் காலங்காலமாகவே தலைவி - தோழி உரையாடல் மரபு உண்டு.தலைவி என்றால் தோழி முக்கியம் என்பதை
இப்போதுகூட தமிழ்நாட்டில் நாம் பார்க்கலாம். தன் காதல் தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியும் தோழியும் உரையாடிக் கொள்வதாக ஒரு பாடலை,கவிஞர் பச்சை விளக்கு படத்தில் எழுதியிருப்பார்.

தூது சொல்லவொரு தோழி இல்லையெனத்
துயர்கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்றுவந்து மெல்ல சேலைதொட
சுகம்கண்டாயோ தலைவி
என்று கேட்பாள் தோழி.

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை
என்ன செய்வதடி தோழி
தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி
கண்கள் வாடுதடி தோழி
என்பாள் தலைவி.இந்தப் பாடலின் இரண்டாவது சரணத்திற்கு காப்பிய அந்தஸ்தே கொடுக்கலாம்.

முத்தும் மணியும் கருகிடும் வண்ணம்
மோகத்தில் ஆழ்ந்தாள் தலைவி
என்று தோழி சொன்னதுதான் தாமதம்.....
முத்தத்தை மறந்தவள் சித்தத்தில் இருந்ததை
மௌனத்தில் அறிந்தாள் தோழி
என்று நாயகி பாடுவாள்.  தன் விரகத்தை அவள் மறந்தும் தன் தோழியிடம்கூட சொல்லவில்லையாம்.தோழி தானாகக்
கண்டுபிடித்துவிட்டால் அதற்கு தலைவி பொறுப்பில்லையல்லவா!!
கோவலனைப் பிரிந்திருந்த கண்ணகி தன் பிரிவாற்றாமையை தோழி தேவந்தியிடம் கூடப்பேசவில்லை. சோமகுண்டம்,சூரியகுண்டம்
ஆகியவற்றில் நீராடினால் கணவன் திரும்பக்கூடும் என்று பரிகாரம் சொல்கிற தோழியிடம்,"பீடன்று" என்று மறுத்துவிடுகிறாள் கண்ணகி. அப்படி பரிகாரம் செய்தால் தான் துன்பத்தில் இருப்பது தோழிக்கும் ஊருக்கும் தெரிந்துவிடும் என்பது கண்ணகியின் எண்ணம். இந்த நினைவு நமக்கே வருகிறபோது கவிஞருக்கு வராதாஎன்ன?பாடல் தொடர்கிறது.

காவிரிக்கரையின் ஓரத்தில் இவ்விதம்
காத்திருந்தாள் அந்தத் தலைவி
காவிய நாயகன் காதலன் வணிகன்
கோவலன் என்பாள் மனைவி!!

பெண்மையில் இன்னொரு வகையும் உண்டு. வாழ்வையே குடும்பத்திற்காகக் கரைத்துவிட்டு தன் ஆசைகளை அவித்துக் கொண்டு
தவமிருக்கும் பெண்கள். இவர்களுக்கெல்லாம் முன்னோடி ,பெரிய புராணத்தில் வருகிற திலகவதியார். திருநாவுக்கரசரின் தமக்கை.
நிச்சயிக்கப்பட்ட கணவர் போரில் மாள்கிறார். அந்த அதிர்ச்சியில் பெற்றோரும் மறைகின்றனர். இறந்து போகலாம் என்றால் சிறுவனாகிய தம்பியின் கதி? எனவே திருமணமே செய்து கொள்ளாமல் வீட்டிலேயே தவம்புரிகிறார் திலகவதியார். தம்பி வாழவேண்டும் என்ற தயையுணர்வே காரணம். அதை சேக்கிழார் சொல்கிறார்:

"தம்பியார் உளராக வேண்டுமென வைத்த தயா
உம்பர் உலகு அடையவுறும் நிலைவிலக்க உயிர்தாங்கி
அம்பொன்மணி நூல்தாங்காது அனைத்துயிர்க்கும் அருள்தாங்கி
இம்பர்மனைத் தவம்புரிந்து திலகவதியார் இருந்தார்"

கவிஞர் வாழ்ந்த இருபதாம் நூற்றாண்டிலும் தன்னையே தன் குடும்பத்திற்காக அர்ப்பணித்த முதிர்கன்னிகள் உண்டு. அவர்கள் திலகவதியார்போல் ஆசையை அவித்தவர்களில்லை.ஆனால் அவர்கள் மனதில் ஆசையே கிடையாது என்று கருதி குடும்பத்தினர் தங்கள் ஆசைகளுக்கான வாகனமாய் அவர்கள் உழைப்பை உறிஞ்சுகின்றனர். அவர்கள் மனதில் இருப்பதை அறிந்தவர்கள்யார்? ரவி அறியாததையும் கவி அறிவான் என்றொரு  மலையாளப்  பழமொழியைக்  கேள்விப்பட்டதுண்டு. அப்படியொரு பெண்ணைப்பற்றிய கவிஞரின் பாடல் இது:

கண்ணிலே என்ன உண்டு கண்கள் தானறியும்
கல்லிலே ஈரமுண்டு கண்களா அறியும்?
என்மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்?

இந்த மூன்று வரிகளில், அந்தரங்க வலி,தனிமையின் அழுத்தம்,நிராதரவான நிலை எல்லாம் வெளிப்படுகின்றன.
அந்தப்பெண்ணுக்குள்ளும் ஒரு நெருப்பு இருக்கிறது...



"நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்
நான்கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு
யாரணைப்பாரோ இறைவனின் பொறுப்பு"

கனலும் தவிப்பையும் காத்திருப்பையும் இதைவிட அழகாய் சொல்ல முடியாது. அதேநேரம் அந்தப்பெண்ணை இந்தத் தனிமை
பலவீனப்படுத்தவில்லை.அனுபவங்களும், காயங்களும்அந்தப்பெண்ணுக்குள் ஒரு ஞானத்தை வளர்த்திருக்கிறது.மேனி அழகாய் இருந்தாலும் ஞானம் உள்ளே ஒளிர்கிறது.ஞானிகள் தடுமாறினாலும் தான் தடுமாற மாட்டேன் என்று தருக்கிச் சொல்கிறாள் அவள்.
"சேலைக்குள் ஆடும் மங்கையின் மேனி
மேனிக்குள் ஆடும் மனம் எனும் ஞானி
ஞானியின் மனமும் ஆசையின் கேணி
நானொரு ராணி பெண்களில் ஞானி"
அரசர்களில் ஞானி,ஜனகர் என்கிறார்கள்.ஜனரஞ்சகமான நாயகி ஒருத்தியை அந்த உயரத்திற்கு உயர்த்திவிடுகிறார் கவிஞர்..
(தொடரும்)

Tuesday, April 20, 2010

இப்படித்தான் ஆரம்பம்-16

"எட்டாம் வகுப்புவரை எட்டத்தான் என்பெற்றோர்
விட்டார் பின்னென்னை ஏழ்மையிலே விட்டார்" என்கிறார் கவிஞர் கண்ணதாசன். ஆனாலும் இலக்கண அறிவில் அவர் யாருக்கும் சளைத்தவரில்லை. வெண்பா தவிர மற்ற வடிவங்களில் எல்லாம் விளையாடியிருக்கிறார். குறிப்பாக அறுசீர் விருத்தத்தில் மன்னன். சினிமாவிலும் இலக்கண அதிசயங்களை வலிக்காமல் புகுத்தியவர் அவர். அதற்கோர் உதாரணம், அந்தாதி....ஒரு வாசகத்தின் கடைசிச்சொல் அடுத்த வாசகத்தின் ஆரம்பமாக இருப்பதே அந்தாதி.... இலக்கியத்தில் பொன்வண்ணத்தந்தாதி, கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி, அபிராமி அந்தாதி என்று பலவகைகள் உண்டு
மூன்று முடிச்சு படத்தில் முக்கோணக் காதலில் மூன்று பேரும் பாடும் விதமாக அவர் எழுதிய அந்தாதிப் பாடல் வெகு பிரபலம்.

"வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்" என்கிற பாடல் நம்மில் பலரும் நன்கறிந்ததுதான்.இருவருக்கு வசந்தகால நதியாகத் தோன்றுவது ஒருவருக்கு வெந்நீர் நதியாகத் தோன்றுகிறது.நாயகன் நீரில் விழுந்ததும் வில்லனுக்கு அது வசந்தகால நதியாகத் தோன்றுகிறது.நீர்வழிப்படூஉம் புணை என்பது வாழ்வின் நிலையாமை குறித்த சங்க காலச்சிந்தனையின் வெளிப்பாடு.

அதே நதியின் மடியில் காதலும் மரணமும் மாறி மாறிப் பாய்விரிக்கும் அற்புதத்தைக் கவிஞர் நிகழ்த்துகிறார்.நாயகனின் நண்பனே வில்லன்.வில்லன் படகோட்ட நாயகனும் நாயகியும் காதல் கீதமிசைக்கிறார்கள்நாயகன் தண்ணீரில் தவறிவிழ கதாநாயகி மன்றாடியும் காக்கவில்லை வில்லன்.அவனுடைய மனநிலையை
இரண்டே வரிகளில் கவிஞர் படம்பிடிக்க, அந்தாதி முற்றுப்பெறுகிறது.

வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மிதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
 நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் தொடர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்

மலர்க்கணைகள் பாய்ந்துவந்தால் மடியிரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளிகொண்டால் மனமிரண்டும் தலையணைகள்
தலையணையில் முகம்புதைத்து சரசமிடும் புதுக்கலைகள்
புதுக்கலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்..

இதுவரை நாயகனும் நாயகியும் பாடுகிறார்கள்.நாயகன் தண்ணீரில் விழ நண்பனாய் நடித்த வில்லன் சுய ரூபத்தைக் காட்டுகிறான்.

மணவினைகள் யாருடனோ மாயனவன் விதிவலைகள்
விதிவகையை முடிவுசெய்யும் வசந்தகால நதியலைகள்...

காதலனைக் கைப்பிடிக்கும் கனவோடு படகில் ஏறினாள் பாவை. காதலன் நதியில் விழுந்ததும் தானே மணவாளன் என்று தப்புக் கணக்கு போட்டான் வில்லன். இருவர் கணக்கும் பொய்யாகிற போது அந்த வைரமணி நதியலைதான் விதிவகையை முடிவு செய்கிறது என்பதை ரசிகன் புரிந்து கொள்ளும் விதமாகப் பாடல் போகிறது.  கதைச்சூழலைத் தாண்டிய தத்துவ வரிகள் காட்சிக்கும் கதைக்கும் கனம் சேர்க்கின்றன. இதுபோன்ற பங்களிப்புகள்தான் கண்ணதாசனை தமிழ்சினிமா கையெடுத்துக் கும்பிடக் காரணம். இதே படத்தில் அந்தாதி நடையில் இன்னொரு பாடல்உண்டு. உண்மையில் அது அந்தாதியல்ல. காதலைக் கடந்து காமம் முகிழ்க்கும்  நுட்பமான மனநிலையை வெளிப்படுத்தும் பாடல் அது.

"ஆடி வெள்ளி தேடியுன்னை நானடைந்த நேரம்
கோடியின்பம் தேடிவந்தேன் காவிரியின் ஓரம்
(எண்சீர் விருத்தத்தில் இது ஒரு வரி. அடுத்த வரி..)

ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன்கவிதைச் சாரம்
ஓசையின்றிக் கேட்குமது ஆசையென்னும் வேதம்
வேதம் சொல்லி மேளமிட்டு மேடைகண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தைபல நாடும்

"பொய்யும் வழுவும் தோன்றிய காலை, ஐயர் யாத்தனர் கரணம்" என்பது இலக்கணச்சூத்திரம். காமத்தையும் வேதம்என்று சொல்லி, அது   திருமணத்தின் மூலம் முறைப்படுத்தப்படுகிறது  என்பதைக் காட்டவும் "வேதம்" என்ற சொல்லை வெகு நுட்பமாகக் கையாள்கிறார் கவிஞர். மனதில் காமம் மலர்ந்தாலும் அந்தப்பெண் அதை வெளிப்படப் பேசவில்லை. மௌனம் காக்கிறாள். ராகங்களைத் தனக்குள்ளேயே
மூடிவைத்திருக்கும் வீணை போல் இருக்கிறாளாம் அவள்.

நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசும்மொழிமௌனம்
ராகந்தன்னை மூடிவைத்த வீணையவள் சின்னம்
இந்த வீணையின் மௌனம் எப்போது கலையும் என்கிற தவிப்பு அவனுக்கு.வாய்விட்டுக் கேட்கிறான்.அவளும் பதில் சொல்கிறாள்.

சின்னம்மிக்க அன்னக்கிளி வண்ணச்சிலைக்கோலம்
என்னையவள் பின்னிக்கொள்ள என்றுவரும் காலம்
காலமிது காலமிது காதல்தெய்வம் பாடும்
கங்கைநதி பொங்கும் கடல் சங்கமத்தில் கூடும்

"ஆடிவெள்ளி" என்று தொடங்கிய பாடல் "கூடும்" என்று முடிவதாலேயே இது அந்தாதியில்லை என்று சொல்லிவிட முடியும்தான். ஆனால் இதை அந்தாதி என்று ஒப்புக்கொள்ளவும் ஒரு முன்னுதாரணம் இருக்கிறது. அந்தாதி முறையை நமக்கு அறிமுகம் செய்யும் மிகப்பழைய இலக்கியம்,பதிற்றுப்பத்து. இதில் நான்காம் பத்து மட்டும் அந்தாதி முறையின்படி முடியவில்லை. எனினும் அந்தாதி என்கிற இலக்கணத்திற்கு முன்னுதாரணமாக பதிற்றுப்பத்து பேசப்படுகிறது. அந்த விதிவிலக்கைக் கொண்டு பார்த்தால் இதுவும் அந்தாதிதான்!!எல்லாவற்றுக்கும் இடம் கொடுக்கிறது கவிஞரின் பாடல்.

கதைச்சூழலோடு பின்னிப் பிணைந்து வரும் கவிஞரின் பாடல்கள் ஒருவிதம் என்றால், கதை என்னவென்ற கேள்வியே எழாமல், அந்தரத்தில் நாட்டியமிடும் மின்னல்கள்போல் வெடிக்கும் பொதுவான வாசகங்கள் சிலவும் கவிஞரின் பாடல்களில் பொங்கிப் பிரகாசிக்கும்.

ஏதோவொன்றை எண்ணிக் கலங்கி, தயங்கி நிற்கும் போது யாரோ எங்கோ  பேசிச்செல்லும்  வார்த்தை நமக்கு வாசல் திறந்துவிட்டுப் போகும். எதிர்பாராத நிலையில் எவரோ ஒருவரின் வருகை நம் குழப்பத்திற்கான தீர்வாகிப் போகும்.இத்தகைய நேரங்களில் நான் அடிக்கடி நினைத்துக் கொள்கிற பாடல் ஒன்றுண்டு.

"எங்கிருந்தோ ஒரு குரல்வந்தது-அது
எந்த தேவதையின் குரலோ
 எங்கள் தீபங்களில் ஒளிவந்தது-அது
எந்தக் கைகள் தந்த ஒளியோ"
இது அந்தப்பாடலின் பல்லவி.இடையிடையே இதேபோல இன்னும் சில வரிகள்.

"மாளிகையில் ஒரு மதிவந்தது-அது
எந்த வானத்து மதியோ
 மாயமாக ஒரு ஒலி வந்தது-அது
எந்த ஆலயத்து மணியோ"

இரண்டாம் சரணம், நாயகியின் காதலுள்ளத்தைக் காட்டும் புதிய பரிமாணத்தை எடுக்கிறது. அதில்கூட ,ஆண்டாளின் வாரணமாயிரம்
பாசுரங்களின் சாரத்தையும் அதற்கடுத்த படிநிலையையும் இரண்டே வரிகளில் முடிக்கிறார் கவிஞர்.

"கதிரிள தீபம் கலசம் ஏந்தி
கண்ணன் வருகின்ற கனவு
கண்டனள் ஒருத்தி வந்தனன் கண்ணன்
கண்கள் தூங்காத இரவு"

கோபுரம்போல் உயர்ந்து நிற்கும் இந்தப் பாடலுக்குக் கலசம் வைக்க வேண்டாமா! முத்தாய்ப்பு வைக்கிறார் பாருங்கள் கவிஞர்....

"கங்கையிலே புதுப்புனல் வந்தது-அது
எந்த மேகம்தந்த புனலோ
மங்கையிடம் ஒரு அனல் வந்தது-அது
எந்த மன்னன் தந்த அனலோ"

இப்படி ஆகாயத்தின் அடுக்குகளில் அவர் விட்டுச்சென்ற அபூர்வ ராகங்கள்......ஆயிரம் ஆயிரமாய் !!!

(தொடரும்..)

Saturday, April 10, 2010

இப்படித்தான் ஆரம்பம்-15

கண்ணதாசனின் கவித்துவம் கனல்வதற்கு முக்கியக் காரணம், வார்த்தைகள் வந்து விழும் அனாயசம். இந்த அனாயசத்தையும் எளிமையையும் விளக்க முடியாமல் இன்று பலரும் திணறுகிறோம். கண்ணதாசன் பாடல்களில் எளிமையாக வந்து விழும் வார்த்தைகளுக்குள் நூல்பிடித்துக் கொண்டே போனால் அது நம்மை வைரச்சுரங்கங்களிலே கொண்டுபோய் சேர்த்து விடுகிறது.

நீண்ட நாட்களுக்குப்பின் "கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா" பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பொதுவாக காதல் பாடல்களில் வரும் வர்ணனைகள் பெண்ணை ஆதர்சப் பெண்மையாகவும், தாய்மையின் தழலாகவும் சித்தரிப்பது ரொம்ப அபூர்வம். சீதைக்கு, வனவாசத்தில் தன் வேதனைகளைப் பகிர்ந்து கொள்ள நல்ல பெண்துணை கிடையாது. அசோகவனத்தில் இருந்த பத்துமாதங்களில் கொஞ்சம் ஆதுரமாய்ப்பேச திரிசடை கிடைத்தாள். அவளும் அருகே அரக்கியர் இல்லாத போதுதான் ஆறுதலாய்ப்பேச முடியும்.



நாட்டுக்கு வந்த பிறகு காட்டுக்கு மீண்டும் போய் பிள்ளைகளைப் பெறுகிறாளே அப்போதாவது பெண்குழந்தை பிறந்ததா?ஆண்கள். அதுவும் இரட்டையர்கள். சீதையால் மாமியார்களிடம் பேச முடியாது. சகோதரிகளாகவே இருந்தாலும் அயோத்தி மருமகள்களாகிய மற்றமூவருக்கும் எத்தனையோ பிரச்சினைகள். சீதைக்கொரு மகள் இருந்திருந்தால் மனம்விட்டுப் பேசி அழுதிருப்பாள். தன்னுடைய நாயகி சீதைக்கு மகளாகப் பிறந்திருந்தால் அவள் பூமியைப் பிளந்து கொண்டு போயிருக்க மாட்டாள் என்று கவிஞருக்குத் தோன்றியிருக்க வேண்டும். எனவே, "கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா" என்கிறார்.

 நாயகியிடம் தாய்மைப்பண்பு இருக்கிறதென்றால், அவள் சீதைக்குத் தாயாகத்தானே ஆகியிருக்க வேண்டும் என்று சிலர் கேட்கலாம். சீதை,  மண்மகளுக்கு மகள். அவளுக்குத் தேவைப்பட்ட உறவெல்லாம் தாய்மையின் கனிவுமிக்க ஒரு மகள்தான் கவிஞர் பாடும் நாயகியின் தாய்மைப்பண்பு அடுத்த வரியிலேயே வெளிப்படுகிறது. விசுவாமித்திரருக்கும் மேனகைக்கும் மகளாகப் பிறந்தவள் சகுந்தலை. பெற்றோர் இருவரும் பிள்ளையைக் காட்டில் விட்டுப் போக, மயில்கள் தங்கள் தோகைகளால் மூடி குழந்தையைப் பாதுகாக்க, கண்வ முனிவர் கண்டெடுத்து வளர்த்ததாய் கதை போகிறது. தாயின் அரவணைப்பில்லாமல் வளர்ந்தவள் சகுந்தலை.

அவளுக்கு தாய்மையின் பரிவை உணர்த்தத் தன் நாயகியால்தான் முடியும் என்று கவிஞர் கருதுகிறார்."காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா" என்கிறார்.சீதைக்கு கனிவு மிக்க மகளாகவும்,சகுந்தலைக்கு பரிவுமிக்க தாயாகவும் ஆகும் தகுதியோடு பிரபஞ்சத்தின் பேரன்பையெல்லாம் இழைத்துச் செய்த வடிவாக எழுந்து நிற்கிறது கவிஞர் ஆராதிக்கும் பெண்மை.


இவ்வளவு கனிவுமிக்க பெண் பேசுகிற சொல் எப்படியிருக்கும்? திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்பது பழமொழி. இதை உள்வாங்கி வைத்துக் கொண்டு உரிய இடத்தில் பயன்படுத்துகிறார் கவிஞர்.

"கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக்கனி ஆக்குமுந்தன் ஒருவாசகம்".

திருவாசகத்தின் இயல்பு கல்மனதைப்பிசைந்து கனியாக்குவது. இது, தன் நாயகியின் ஒரு வாசகத்திற்கே உண்டு என்றால் அவள் அன்பின் பிழம்பாய் அல்லவா இருக்க வேண்டும் . போதாக்குறைக்கு பேரழகியாகவும் இருக்கிறாள். அமராவதியின் இடத்தை ஈடு செய்யக்கூடியவளாக இருக்கிறாள். கலைசிந்தும் கண்கள், உண்டென்று சொல்லும் வண்ணக் கண்கள். இல்லையென்று சொல்லும் இடை. பிறருக்கே வாழ்கிற இந்தப்பெண்ணுக்கு கண்ணுறக்கம் இரண்டு முறை. பிறப்பில் ஒருதூக்கம். இறப்பில் மறுதூக்கம்.அவளுடைய இயல்பு, பாலிலும் வெண்மை. பனியிலும் மென்மை. கண்ணதாசன் வெவ்வேறு பாடல்களில் குழைத்து வைத்திருக்கும் வண்ணங்களைத் தொட்டுத் தொட்டுத் தீட்டினால் ஒப்பற்ற பெண்மையின் உயிர்ச்சித்திரம் அல்லவா உருவாகிறது!!

பிரபஞ்சத் தாய்மை போன்ற பெரிய வார்த்தைகளைக் கூட அறியாத எளிய அன்பில் கண்ணதாசனின் பெண்கள் உருவெடுக்கின்றனர். கம்பனில், இராமன் திருமணத்தின்போது, வயது மூத்த பெண்கள் எல்லாம் கோசலையின் மனநிலையில் இருந்து, இராமனைத் தங்கள் மகனாகவே வரித்து மணக்கோலத்தை ரசித்திருந்தார்களாம். "மாதர்கள் வயதின் மிக்கார் கோசலை மனதை ஒத்தார்'என்றெழுதினான் கவிச்சக்கரவர்த்தி கம்பன்.

இதை மிக நுட்பமாக உள்வாங்கிக் கொண்ட கவிஞர், "பூமுடிப்பாள் இந்தப் பூங்குழலி'பாடலில், "மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க' என்று பாடுவார். பெண்ணுக்கான முகங்கள் ஏராளம். கடவுளைப்போல.கடவுளுடைய சிறப்பே எல்லா முகங்களும் அழகாயிருப்பதுதான். புகுந்த வீட்டில் காட்டுகிற முகம் ஓரழகென்றால் பெண் பிறந்த வீட்டில் காட்டுகிற பாசம் பேரழகு.ஆணுக்கு அத்தகைய  பெருந்தன்மை கிடையாது. பெண்ணெடுத்த வீட்டில் இறுதி வரை தலைமை விருந்தினனாய் இருக்கவே ஆண் ஆசைப்படுகிறான். 

கணவன் அழகற்றவனாய்,ஊனமுற்றவனாய் இருந்தாலும் அவனை உச்சிமேல்  வைத்துக் கொண்டாடுகிறாள் பெண். 'கைகால்கள் விளங்காத கணவன் குடிசையிலும் காதல்மனம் விளங்க வந்தாள் அன்னையடா! காதலுக்கும் பெருமையில்லை கண்களுக்கும் இனிமையில்லை கடமையில் ஈன்றெடுத்தாள் உன்னையடா" என்று கணவன்தான் தாழ்வு  மனப்பான்மை தொனிக்க  பிள்ளைக்குத் தாலாட்டுப் பாடுகிறான். கண்ணதாசன்  காட்டும் காதல் தலைவி கணவனின் குறையை ஒப்புக்  கொள்வதேயில்லை.

 "தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ -உங்கள்
 அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ'" என்று அரவணைத்துக் கொள்கிறாள்.

கால்களில்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா-அது
கைகளில்லாமல் மலர்களை அணைத்து காதல் தரவில்லையா" என்று ஆறுதல் சொல்கிறாள்."

அதே நேரம், மணவாழ்வின் பூரிப்பில் மனம் மயங்கிக் கிடந்தாலும் பிறந்த வீட்டின் வாசலிலும் பருவமழையாய்ப் பொழிய அவள் தவறுவதில்லை.

 "பூமணம் கொண்டவள் பால்மணம் கொண்டாள்
  பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள்ரெண்டில் மாமன் தெய்வம் கண்டான்"

என்று சகோதரனைக் குளிர்விக்கும் தங்கையாக மிளிர்கிறாள்.

"காலமகள் கண்திறப்பாள் சின்னையா- நாம்
கண்கலங்கி கவலைப்பட்டு என்னையா' என்று தலையை வருடித் தூங்க வைக்கும் தமக்கையாகப் பொலிகிறாள்.
"அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்"  என்று தந்தை மெச்சும் மகளாக மலர்கிறாள்.

 "நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின்மேலே"என்று பெருமையடித்துக் கொள்ளும் கணவனிடம், "அந்தக் கருணைக்குநான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே" என்று பரிசளிக்கும் அரசியாகவும்  பரிவுமிக்க  மனைவியாகவும் ஒளிர்கிறாள்.

 "வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும் சக்கரம் சுழல்கின்றது-அதில்தான்சரித்திரம் நிகழ்கின்றது!
யாருக்கும் வாழ்வுண்டு அதற்கொரு நாளுண்டு அதுவரை பொறுப்பாயடா-மகனே -என் அருகினில் இருப்பாயடா"

என்று தத்துவம் கூரும் தெய்வீகத் தாயாய் தோற்றமளிக்கிறாள்
"ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ!
 மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ'" 

என்று முருகனைக்கூட   உரிமையுடன் கடிந்து கொள்ளும் தமிழ்ப்பாட்டியாய் தடியூன்றி  வருகிறாள். தாய் என்ற நிலையில் மட்டுமின்றி எல்லா நிலைகலிலும் தாய்மையின் தண்ணிழல் பரப்பி நிற்கிறார்கள் கண்ணதாசனின் கவிதை நாயகிகள்!!

(தொடரும்...)

Thursday, April 8, 2010

இப்படித்தான் ஆரம்பம்-14

கண்ணதாசனின் தைப்பாவை பல விதங்களிலும் வித்தியாசமான முயற்சி. திருப்பாவையிலும் திருவெம்பாவையிலும் பேசப்படும் பாவை நோன்புக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. தைமாதத்தையே ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி "தையாகிய பாவையே" என்று ஒவ்வொரு பாடலிலும் அழைக்கும் விதமாகத்தான்  தைப்பாவை அமைந்திருக்கிறது.


திராவிட இயக்கத்தின் தாக்கத்தில் கவிஞர் இருந்தபோது எழுதப்பட்டது தைப்பாவை.
            'எந்தமிழர் கோட்டத்திருப்பார் உயிர்வளர
             எந்தமிழர் உள்ளத்து இனிமைப் பொருள்மலர
             எந்தமிழர் கைவேல் இடு வெங்களம் சிவக்க
             எந்தமிழர் நாவால் இளமைத் தமிழ்செழிக்க'

தைமகளை வரவேற்றுத் தொடங்குகிறது தைப்பாவை.

அனாயசமான ஓசையழகுடன் அவர் எழுதியுள்ள இப்பாடல்களில் ஒரு காட்சி ஒழுங்கும் தானாகவே அமைந்துவிடுவதுதான் ஆச்சரியம். தைமாதம் முதல்நாளில் உழவர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை அங்கே எழும் ஓசைகள் வழியே உணர்த்துகிறார் கவிஞர்.

காளை மணியோசை களத்துமணி நெல்லோசை
வாழை இலையோசை வஞ்சியர்கை வளையோசை
தாழை மடலோசை தாயர்தயிர் மத்தோசை
கோழிக்குரலோசை குழவியர்வாய் தேனோசை
ஆழி அலையோசை அத்தனையும் மங்கலமாய்
வாழிய பண்பாடும் மாயமொழி கேட்டிலையோ
தோழியர் கைதாங்க தூக்கியபொன் அடிநோக
மேழியர்தம் இல்லத்து மேலழுவாய் தைப்பாவாய்

(மேழியர்-உழவர்)

வெவ்வேறு ஓசைகளின் பட்டியல் மட்டுமில்லை இது. காட்சி ஒழுங்கும் இதில் இருக்கிறது. மார்கழித்திங்களின் கடைசிநாளில் இரவு நேரமாகியும் கதிரறுப்பு முடிந்தபாடில்லை. அவ்வளவு அருமையான மகசூல். தைமுதல்நாள் புலர்வதற்கு சில மணிநேரங்கள் முன்பு வரை கூட,  நெல் ஏற்றப்பட்ட வண்டிகளைக் காளைமாடுகள் இழுத்துவர,களத்தில் நெல்மணிகள் கொட்டப்படுகின்றன.

   காளை மணியோசை-களத்துமணி நெல்லோசை

 ஆண்கள் இந்த வேலையில் பரபரப்பாக இருக்க,பெண்களோ பொங்கல் வைக்கும் வேலையில் சுறுசுறுப்பாக இறங்குகிறார்கள்.பொங்கல் பானைமுன் வாழை இலையை விரிக்கும் பெண்களின் கைவளையோசை
கேட்கிறது..

   வாழை இலையோசை-வஞ்சியர்கை வளையோசை

வீட்டிலுள்ள மற்ற பெண்கள்,குழந்தைகலின் தலையில் தாழம்பூக்களை வைத்துப் பின்னுகிறார்கள்.மூத்த தாய்மார்களோ,கதிரவன் உதித்துவிட்டால் தயிர் கடைந்து வெண்ணெயெடுக்க முடியாதென்ரு வேகவேகமாய் தயிர் கடைகிறார்கள்.

  தாழை மடலோசை-தாயர்தயிர் மத்தோசை

அடுத்து பொழுது புலர்கிறது.கோழி கூவுகிறது. பொங்கல் பொங்குகிறது.உடனே குழந்தைகள் "பொங்கலோ  பொங்கல்" என்று கூவுகின்றனர்

 கோழிக்குரலோசை - குழவியர்வாய் தேனோசை

கூடவே கடலலைகள் புரண்டெழும் ஓசையும் கேட்கிறது.இத்தனை ஒலிகளும் சேர்ந்து தைமகளை வரவேற்கின்றன.
இந்தக்காட்சிகளை மனக்கண்ணால் பார்த்தபடி பாடலை மீண்டும் பாருங்கள்,
காளை மணியோசை களத்துமணி நெல்லோசை
வாழை இலையோசை வஞ்சியர்கை வளையோசை
தாழை மடலோசை தாயர்தயிர் மத்தோசை
கோழிக்குரலோசை குழவியர்வாய் தேனோசை
ஆழி அலையோசை அத்தனையும் மங்கலமாய்
வாழிய பண்பாடும் மாயமொழி கேட்டிலையோ
தோழியர் கைதாங்க தூக்கியபொன் அடிநோக
மேழியர்தம் இல்லத்து மேலழுவாய் தைப்பாவாய்

எவ்வித முன்திட்டமும் இல்லாமல் பொங்கும் ஊற்றில் கூட ஆற்றின்
ஒழுங்கு அமைவதுபோன்ற அற்புதம்தான் கவிஞரின் கவியோட்டம்.

தமிழ்ச் சமுதாயத்தின் தொல்மரபுகளையெல்லாம் மீட்டெடுத்த களஞ்சியம் தைப்பாவை.
சங்க இலக்கியத்தில் போர்நிமித்தமாய் தலைவன் பிரிந்து செல்ல, தலைவி
துயருற்றிருப்பது குறித்து நிறைய பாடல்கள் உண்டு.அந்த சாயலில் தைப்பாவையில் ஒரு பாடல்.வாளேந்தும் வீரன் பெண்ணைத் தொடும்நேரம் பார்த்து போர்முகம்
வரச்சொல்லி ஓலை வருகிறது.இவள்தனிமையில் துயர்ப்படுகிறாள்.

 "வாளைத் தொடு காளை வடிவைத் தொடும் வேளை
  வேலைக்கென ஓலை விரைவுற்றது-சென்றான்
 நூலைத் தொடும் இடையாள் நோயுற்றனள் பாராய்
வேலைப்பழி விழியாள் வியர்வுற்றனள் காணாய்
ஆலந்தளிர்த் தத்தை அமைவுற்றிட இத்-தை
காலம்வரல்கூறாய் கனிவாய தைப்பாவாய்"

இதுபோன்ற செம்மாந்த பாடல்கள் தைப்பாவையில் ஏராளம். மூவேந்தர்கள் பற்றிய பாடல்களில் சேரனைப்பற்றிய பாடல் தனிச்சிறப்பு வாய்ந்தது.

"இருள்வானில் நிலவிடுவான் நிலவாழ்வை இருளவிடான்
 செருவாளில் கைபதிப்பான் கைவாளை செருவில்விடான்
மருள்மானை மனத்தணைவான் மனமானை மருளவிடான்
தரும்சேரன் பெற்றறியான் தழைக்கும்கோன் வஞ்சியிலும்
நிறையாயோ உலவாயோ நிலவாயோ தைப்பாவாய்"

இப்படி தைத்திங்களில் பாடி மகிழ நாளுக்கொரு பாடலாய் தைப்பாவை
நூலை உருவாக்கியிருக்கிறார் கவிஞர்.திருப்பாவை,திருவெம்பாவை ஆகியவற்றை பக்தி இயக்கங்கள் பரப்பியதுபோல், தைத்திங்களை தமிழர் புத்தாண்டாக அறிவித்துள்ள தமிழியக்கங்கள் தைப்பாவை நூலைப் பரப்பலாமே என்று தோன்றுகிறது.

(கடந்த அத்தியாயத்தில் நான் குறிப்பிட்டிருந்த கண்ணனுக்குதாசன் கண்ணதாசன்
பாடல்கள் காஸ்மிக் நிறுவனத்தால் ஸ்ரீ கிருஷ்ண கிருஷ்ண என்ற தலைப்பில் இசைவட்டாக வெளிவந்துள்ளது)

(தொடரும்)

Tuesday, April 6, 2010

அப்பாடா சாமி இது எப்போது முடியும்

திருப்பூரில் சில ஆண்டுகளுக்கு முன் ,சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் தேர்தல் அறிக்கைகள் அடங்கிய பிரசுரம் வெளியிடப்பட்டது. அதிலிருந்த வாக்குறுதிகளில் ஒன்றிரண்டு....

1.ஏற்றுமதிக்கு வசதியாக திருப்பூருக்குக் கடலைக் கொண்டு வருவது

2.எங்கள் ஆட்சியில் தேனும் பாலும் ஓடுமென்பதால் மொண்டு குடிக்க ஆளுக்கொரு டம்ளர் இலவசமாய்த் தருவது

என்று நீண்ட அந்தப் பட்டியலைக்கண்டு திகைத்த பொதுமக்கள் வேட்பாளரின் பெயரைப் பார்த்ததும்  . அவர்,சிற்பி இரகுநாதன். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேர்தலில் போட்டியிட்டார்.தேர்தல் ஆணையத்திடம் போராடி அவர் பெற்ற சின்னம், "சூட்கேஸ்".

இது போதாதென்று திருப்பூரில் ஒரே மேடையில் தோன்றிய சர்வகட்சி வேட்பாளர்கள் கூட்டத்திலும் பேசினார்.

தன் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டு விட்டு "ஆகவே உங்கள் பொன்னான வாக்குகளை, நாலரை கோடித் தமிழர்களின் நம்பிக்கை நாயகன், புரட்சித் திலகம், புதுமைத் தென்றல், வாரி வழங்கும் வள்ளல், வேந்தர், அருமை அண்ணன் சிற்பி இரகுநாதனாகிய எனக்கே போடும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று முடித்தார்.



ஆனாலும் தேர்தல் முறையைப் பகடி செய்வதுதான் தன் நோக்கமென்றும் தனக்கு வாக்களித்து யாரும் தங்கள் வாக்கை விரயம் செய்ய வேண்டாமென்றும் தேர்தலுக்கு முன்னர் தெளிவுபடுத்தினார். அதையும் மீறி முப்பது ஓட்டுகள் விழுந்ததில் அவருக்கு வருத்தம்தான்.

கூர்மையும் சமூக எள்ளலும் மிக்க நகைச்சுவை, சிற்பி ரகுநாதனின் நகைச்சுவை. பல நகைச்சுவைப் பேச்சாளர்கள் இருந்த போதும் அவருடைய தனித்தன்மையான பேச்சு, native humour எனப்படும் மண்ணின் மணம்கமழும் நகைச்சுவையால் முத்திரை பதித்தது.

குடும்பங்களில்,குடியிருப்புப் பகுதிகளில் பெண்களின் அரட்டை, சண்டைகள் போன்றவற்றை தத்ரூபமாக செய்து காட்டி விமர்சித்து, பெண்ணியவாதிகளின் கடும் விமர்சனத்திற்கு ஆளான போதும், பெண்கள் பற்றிய அவரின் விமர்சனங்களைக்கேட்டு விழுந்து விழுந்து சிரிப்பவர்கள் பெண்களே! பட்டிமன்றங்களின் பொதுத் தலைப்புகளான ஆணா பெண்ணா, மகிழ்ச்சி திருமணத்திற்கு முன்பா பின்பா என்பது போன்றவற்றைக்கூட தனித்தன்மையுடன் கையாள்வதில் சிற்பி சமர்த்தர். பட்டி மண்டபங்களில் குறைந்தது 45 நிமிடங்கள் வாதிடுவார். நடுவர்களுக்கு மணியடிக்கத் தோன்றாது.

மேடையைத் தவிர மற்றபடி இறுக்கமானவர் என்று கருதப்படும் சிற்பி,நெருங்கிப் பழகும்போது கலகலப்பானவர்தான்.பாலக்காடு அருகே ஓரிடத்தில் நிகழ்ச்சிக்குப் போயிருந்தோம். காபியும் மாரி பிஸ்கட்டும் கொண்டு வந்து வைத்தார்கள். சிற்பி என் காதருகே வந்து "இந்த பிஸ்கட்டைங்க..ஒரு பாக்கெட் வாங்கி வச்சுகிட்டா ஆறு மாசத்துக்காவது விருந்தாளிகளை சமாளிச்சுடலாம். ஒடைச்சு வீசீட்டா போதும். ஒருத்தனும் கிட்ட போக மாட்டான். பழைய மாதிரி எடுத்து பாட்டல்ல போட்டு வச்சுக்கலாம்" என்றார்.

'திருப்பூர் விகடகவி' என்ற தலைப்பில் சிற்றிதழொன்றையும் நடத்திவந்தார் அவர்.வள்ளலார் கருத்துக்களில் ஆழமான ஈடுபாடு உண்டு.கடவுள் நம்பிக்கை கிடையாது.எங்கேயும் தன்னை முன்னிறுத்தாதவர்..எளிய தொழிலாளியாய் வாழ்வைத் தொடங்கி முயற்சியாலும் புதுமைக் கண்ணோட்டத்தாலும் வளர்ந்தவர் சிற்பி.அசைவம் சாப்பிட மாட்டார். புகையோ மதுவோ தொடமாடார்.

அவருக்கு 17 வயதிலேயே திருமணம் ஆனது. ஒரே பெண். நாற்பதுகளிலேயே தாத்தா ஆகிவிட்டார். மார்ச் 31ஆம் தேதி நெருங்கிய நண்பர் ஒருவர் போன் செய்தார்."சிற்பி!அங்காடித்தெரு படம் பாருங்க!பிரமாதமா இருக்கு "கடைசியாக பெரியார் படம் வந்தபோது திரையரங்குக்குப் போனவர் சிற்பி இரகுநாதன்.

நண்பர் சொன்னதைக்கேட்டு அன்று மாட்னி ஷோ பார்த்திருக்கிறார். படம் மிகவும் பிடித்திருக்கிறது. வீடு திரும்பியவருக்கு மாலையில் உடல் நலமில்லை. என்று சோடா குடித்தவர் இரவு மயங்கி விழுந்திருக்கிறார். மருத்துவமனைக்குப் போவதற்குள் மரணம்.  ஐந்து மணிக்கே வந்த மாரடைப்பு சிற்பியுடனான பேச்சு சுவாரஸ்யத்தில் வந்த வேலையை மறந்துவிட்டு இரவு பத்து மணிக்கு அவரை அள்ளிக்கொண்டு போயிருக்கிறது. கூட்டங்களில் பேசும்போது, "அப்பாடா சாமியிது எப்போது முடியுமென்று அவஸ்தையுடன் நெளிகின்ற அவையோரே "என்று கிண்டல் செய்பவர், வாழ்க்கை என்கிற சொற்பொழிவை அவையடக்கம் பொங்க நிகழ்த்திவிட்டு 49ஆவது வயதில் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்"என்று முடித்து விட்டார்

ஏப்ரல் 1 காலை,சிற்பி இரகுநாதன் செல்போனில் இருந்து அழைப்பு நண்பர்களுக்கு வந்தது. அவருடைய நண்பர் பேசினார். சிற்பிஇரகுநாதன் மறைந்ததாக செய்தி கேட்டு ஏப்ரல்1க்கு சிற்பியின் ஏற்பாடு என்று சிரித்துக் கொண்டனர் நண்பர்கள்.வாழ்வின் நிகழ்வுகளைமுன்கூட்டியே

அனுமானிப்பதைவிட முட்டாள்தனம் ஏதும் உண்டா என்ன?

Monday, April 5, 2010

இப்படித்தான் ஆரம்பம்-13

கண்ணதாசனின் எழுத்துக்களில் இருக்கும் எளிமை,ஆபத்தான எளிமை.மேலோட்டமாகப் பார்த்தால், ஒன்றுமில்லாததுபோல் தோன்றிவிடும். ஆனால் ஆழமான விஷயங்கள்அனாயசமாய் சொல்லப்பட்டிருக்கும்.  வைணவத்தின் முக்கியமான தத்துவக்கூறு ஒன்றுண்டு. இறைவனை, ஐந்து நிலைகளில் வைத்துப் பார்க்கிறது வைணவம். பரம்பொருளாக செயல் கடந்த நிலையில் இருப்பது, பரநிலை. இருபுறமும் தேவியர் சூழ்ந்திருக்க, பள்ளி கொந்திருக்கும் நிலை, வியூக நிலை. பத்து அவதாரங்களாக பூமிக்கு வந்தது, அவதாரநிலை. ஆலயங்களில் மூர்த்தமாக எழுந்தருளியுள்ள நிலை, அர்ச்சை நிலை.காற்று, ஒளி, ஒலி, வெளிச்சம் என்று எங்கும் வியாபித்துள்ள நிலை, அந்தர்யாமி நிலை.

தனிக்கவிதையொன்றில்,போகிற போக்கில் கண்ணதாசன் இதைச் சொல்லிவிட்டு நிற்காமல் போய்க் கொண்டேயிருக்கிறார்.
                "மூலம் திருமாலாய்
                  முளைத்தெழுந்த  பெருமாளாய்
                  ஏலும் தனியறத்தில்
                  இயங்குகிற ராமனுமாய்
                  நாலு வடிவெடுத்த
                  நந்தகோபன் மகனை
                  மாலே மணிவண்ணா
                  வாராய் என அழைத்தால்
                  காலையிலே நம்வீட்டுக்
                   கதவைத் திறக்கின்றான்"
இதில். நாலு வடிவெடுத்த நந்தகோபன் மகனை என்பது, முதல் நான்கு நிலைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. சில வரிகளுக்குப்பிறகு அந்தர்யாமி நிலையையும் பாடிவிடுகிறார் கவிஞர்.
 
                    "காற்றாக வானாகக்
                     கனலாகப் புனலாக
                      ஊற்றாக உருவாக
                      ஒளியாக மழையாக
                      நேற்றாக இன்றாக
                       நாளைக்கும் நிலையாக
                       ஏற்றாத தீபத்தும்
                        எரிகின்ற ஜோதியவன்  "

இதில் வைணவத்தின் ஐந்து நிலைகளை வைத்துப் பாட வேண்டும் என்ற திட்டம் எல்லாம் அவருக்கிருந்ததாய்த் தெரியவில்லை.வெள்ளம் பெருக்கெடுக்கும் வேகத்தில் வந்து விழுகிற விஷயங்கள் இவை.

"எல்லா உயிரிலும் நானேயிருக்கிறேன் என்றனன் கண்ண பெருமான்' என்று கீதையின் சாரத்தை பாரதி பாடுவான் .கண்ணதாசனுக்கோ
எல்லா உயிர்களிலும் எல்லாப் பொருள்களிலும் கண்ணனைப் பார்க்க முடிகிறது.

                     "தந்தைதாய் மக்கள்
                       என்குலத்தின் உறவினர்கள்
                       முந்தைப்பிறவிகளில்
                       முன்பிருந்த பெரியோர்கள்
                       அத்தனையும் கண்ணனவன்
                       அவதாரம் என்றிருந்தேன்!
                       தாயாக வந்தக்கால்
                       தலைமாட்டில் நிற்கின்றான்
                       நோயாக வந்தக்கால்
                       நோய்மருந்தும் ஆகின்றான்
                       பாரதத்தில் அன்று
                       பார்த்தனுக்குச் சொன்னதெல்லாம்
                       ஓரளவு எந்தன்
                        உள்ளத்தும் சொல்கின்றான்"
என்கிறார் கண்ணதாசன்.

                      '  குருவாயூருக்கு வாருங்கள்-ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள்  " என்ற பாடலில்,

"பாத்திரம் கண்ணன் பால்போல் மக்கள்-பக்தியில் பிறந்த தனிநீதி"
 என்று பாடுகிறார் அல்லவா!!

தனிகவிதையில் அவர் குரலைக் கேளுங்கள்:
          
                "நாத்திகன் வீட்டிலும்
                  நடக்கும் சங்கமம்
                 ஆத்திகன் வீட்டிலும்
                 அருளும் சங்கமம்
                 சாத்திரக் கூட்டினுள்
                 தழைக்கும் தெய்வதம்
                 பாத்திரம் நான் -அதில்
                பால் என் கண்ணனே" 

உயிர்களைத் தாங்கும் பாத்திரமாய் கண்ணன் இருக்க கண்ணனைத் தாங்கும் பாத்திரமாய்
தன்னை வைத்துப் பார்க்கும் இடத்தில் கண்ணதாசனிடம் யசோதையின் தாயன்பு வெளிப்படுகிறது.

கண்ணனை ஆண்டாள் திருப்பாவையில் பாடுகிறார்.சிவபெருமானை மாணிக்கவாசகர் திருவெம்பாவையில் பாடுகிறார்.சமய உணர்வின் உச்சத்தில் இருப்பவர்களுக்கு பேதம் தெரியாது. திருப்பாவை திருவெம்பாவை பற்றி காஞ்சி மஹா பெரியவர் ஓரிடத்தில் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.

"இந்து சமயத்தின் இரண்டு கண்கள் சைவமும் வைணவமும் என்றால், அந்தக் கண்களின் இரண்டு பாவைகள்தான் திருவெம்பாவையும் திருப்பாவையும்.மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையின் முதல் பாடல்,
'ஆதியும் அந்தமுமில்லா அருட்பெருஞ்சோதியை''என்று தொடங்கும்.இதன் முதலெழுத்து திருப்பாவை பாடிய ஆண்டாளை நினைவுபடுத்துகிறது . திருப்பாவையின் முதல்பாடல், "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்"என்று தொடங்குகிறது. இதன் முதலெழுத்து,திருவெம்பாவை பாடிய மாணிக்கவாசகரை நினைவுபடுத்துகிறது. உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் இந்த இரண்டெழுத்துக்களையும் ஒன்றாக்கிப் பாருங்கள்-"ஆமா'என்று அதுவே சொல்லும்" என்றாராம் மஹாபெரியவர். சைவ சாத்திரங்களும் யாதொரு தெய்வத்தை நீங்கள் வணங்கினாலும் மாதொரு பாகர்தான் அந்த வடிவில்
வருவாரென்கிறது. இது சமய ஒற்றுமை சார்ந்த பிரச்சாரமல்ல. எல்லாக் கடவுளும் ஒன்றே என்ற புரிதல்.

கிருஷ்ண கானத்தில் அப்படியொரு பாடல் உண்டு:

"கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை
  கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான்
  மாதவப் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார்
  ஓதிய தமிழ்கேட்டு கண்ணன் வந்தான்"
எதைக் கண்டாலும் கண்ணனாகவே காண்கிற பக்தியின் உன்மத்தம் இந்தப்பாடலில்
வெகுஅழகாக வெளிப்படும்

"மார்கழித் திருநாளில்  மங்கையர் இளந்தோளில்
  கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான்"
என்பார் கவிஞர். கிருஷ்ண கானம் வந்து பல நாட்களுக்குப்பின்,கவிஞரின் மறைவுக்கு சற்று முன்போ பின்போ 'கண்ணனுக்கு தாசன் கண்ணதாசன்" என்றோர் இசைத்தொகுப்பு வெளிவந்தது. புகழ்பெற்ற பாடகர்களுடன் எம்.எஸ்.வி.,இளையராஜா ஆகியோரும் கவிஞரின் பாடல்களை அதில் பாடியிருப்பார்கள்.


நான் காசிக்குப் போயிருந்தபோது அதிலிருந்து ஒருபாடலை என் வாய் இடையறாமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

"கங்கைக் கரையினிலே-ஒரு
  கற்பகச் சோலையுண்டு
  மங்கையர் வந்துநின்றால்-அவர்முன்
 மாதவன் வந்துநிற்பான்

தேவன் நடனமிடும்-யமுனை
தீர்த்தக் கரையினிலே
பாவியர் வந்துநின்றால்-அவர்
பாவமும் தீர்ந்துவிடும்

பார்த்தனைக் காத்தவனே-தனது
பக்தரைக் காப்பவனாம்
ஆர்த்தெழும் சங்கினிலே -நமக்கோர்
அட்சதை வைத்தவனாம் "
என்ற பாடல்தான் அது.

கவிஞர் மொழிபெயர்த்த பஜகோவிந்தம் நூலின் சில பாடல்களை எம்.எஸ்.வி.யும் இளையராஜாவும் அதில் பாடியிருப்பார்கள்.

'பிருந்தாவனம் என்ன வெகுதூரமா-இந்தப்
பேதைக்கு அவனின்றிப் பரிகாரமா'என்ற பாடலை வாணிஜெயராம் பாடியிருந்ததாக ஞாபகம்.இப்போது அந்த கேசட் கிடைப்பதில்லை.ஆனால் கண்ணதாசன் கவிதைகள்
ஏழாவது தொகுதியிலும்,பஜகோவிந்தம் தொகுப்பிலும் அந்தப்பாடல்கள் உள்ளன.

கண்ணதாசனின் பக்தி அவரை எந்தவிதமான பக்குவத்திற்குக் கொண்டு செலுத்தியிருந்தது என்பதை உணர்த்தும் பாடலொன்று நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்களுக்கு மனதை உலுக்கக்கூடிய-உறுத்தக்கூடிய கேள்விகள் மூன்றுதான்.

கடவுள் நம்மை எத்தனைநாட்கள் இந்த மண்ணில் வைத்திருப்பார்? எப்போது அழைப்பார்?அழைத்தபின் முக்தியா-மறுபிறப்பா?
இந்த மூன்று கவலைகளும் தனக்கில்லையென்று கண்ணனிடம் சொல்கிறார் கண்ணதாசன்.

        "நின்றுவா என்றுநீ
          நீட்டினை கையெனில்
          நின்றுநான் பணிசெயக் கடவேன்!

          இன்றுவா என்பதே
         இட்ட கட்டளையெனில்  
          இப்பொழுதே வரத் துணிவேன்1

          சென்றுவா என்றெனைத்
          திரும்பவும் விட்டாயேல்
          திரும்பவும் தோன்றுவேன் நானே !

         கன்றினைத் தாயொடு
         கரந்தபேர் ஐயனே
         கர்த்தனே கண்ணபிரானே!"

(தொடரும்)