Saturday, May 29, 2010

இப்படித்தான் ஆரம்பம் - 27

காமராஜர் மீது கண்ணதாசன் கொண்டிருந்த பக்தி அபாரமானது. காமராஜர் மீதிருந்த ஈர்ப்பும், திராவிட இயக்கம் மீதிருந்த வெறுப்பும் சேர்ந்து கொண்டது. கவிஞரின் பாட்டுடைத் தலைவனாய் விளங்கினார் காமராஜர்.
 
"முழந்துண்டு சட்டைக்கும் முதலில்லாத் தொழிலாளி
  பழனிமலை ஆண்டிக்குப் பக்கத்தில் குடியிருப்போன்
 அரசியலைக் காதலுக்கு அர்ப்பணிப்போர் மத்தியிலே
 காதலையே அரசியலில் கரைத்துவிட்ட கங்கையவன்"
என்ற வரிகளும்,
 "ஆண்டி கையில்ஓடிருக்கும் அதுவும் உனக்கிலையே"
என்ற வரியும் காமராஜ் நேசர்களால் காதலுடன் உச்சரிக்கப்படுபவை. காமராஜரின் தலைமைப் பண்பு பற்றிய கவிஞரின் பிரமிப்பு, லால்பகதூர் சாஸ்திரியை காமராஜர் பிரதமராக்கிய சாதுர்யத்தை விவரிக்கிறபோது விகசிக்கிறது.
 
நேரு மறைந்தபோது, அடுத்த பிரதமர் யார் என்ற குழப்பமேற்பட்டது.
மாளவியா, ஜெகஜீவன், மொரார்ஜி தேசாய் போன்றோர் எல்லாம் போட்டியிடுவார்களென்றும், கடும் மோதல் நிகழுமென்றும் கருத்துக்கள்
பரவிய காலமது
 
 
"மாளவியா முழங்குகிறார்;மௌனம் கிழித்தெழுந்து
 ஜகஜீவன் பாடுகிறார்;தங்கத்தின் விலைகுறைத்த
தேசாய் தனக்கில்லா மீசையினை முறுக்குகிறார்
மேனன் கிளம்புகிறார் மேல்நாடும் கீழ்நாடும்
வேடிக்கை பார்க்க விளையாடப் போகின்றார்
என்றெல்லாம் வதந்திக்குத் தந்தி கொடுப்பவர்கள்
ஏட்டுச் சுதந்திரத்தில் நீட்டிப் படுப்பவர்கள்
பேசினார்;அந்தப் பேச்சுக்கே நாட்டுமக்கள்
கூசினார்;கூனிக் குறுகினார்" என்கிறார் கவிஞர்.
 
தர்மசங்கடமான சூழலில் காமராஜர் சூழலைக் கையிலெடுத்துக் கொண்டார். அவர் பேசிய பேச்சுக்கு டெல்லி தலைவணங்கியது.பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அவர் நுழைந்தபோது அங்கிருந்த அத்தனை பேரும் எழுந்து நின்றதை வரலாறு வாஞ்சையுடன் பதிவு செய்துள்ளது.அந்தச் சூழலை காமராஜர் கையாண்ட விதத்தைக் கவிதையாக்குகிறார் கவிஞர்.
 
வெட்டவெளி வானத்தோர் விடிவெள்ளி வந்ததம்மா
வெள்ளெருக்கங் காட்டினிலோர் முல்லைமலர் பூத்ததம்மா
பட்டுப்போகாமல் பசுமரத்தைக் காப்பதற்கு
பாலே மழையாக பாரதத்தில் வீழ்ந்ததம்மா என்று சிலாகிக்கிறார்.
 
பாராளுமன்றமே பக்கத்தில் வந்ததம்மா!
லால்பகதூர் தான்நமது நாட்டின் தலைவரென்றான்
ஐந்நூற்ற்றுபதுபேர் ஆமென்றார்'காத்திருந்த
தோல்பகதூர் எல்லாம் சுருண்டு படுத்துவிட்டார்;
நந்தா விளக்கொன்று நாட்டுக்கோர் சஞ்சீவி
தந்தான்!என் தாயகத்தைத் தலைநிமிர்த்தி வைத்துவிட்டான்!
 
கறுத்த நிறங்கொண்ட காமராஜர்,கண்ணாதாசனின் கண்களுக்குக் கண்ணனாகவே தெரிகிறார். அதில் வியப்பில்லை.பாரத மாதா குந்திதேவியாகத் தெரிகிறாள்.கண்ணனைத் தேடிவந்த பஞ்ச பாண்டவர்களும் இங்கே இருக்கிறார்கள்.
 
 
தருமனைப் போலொரு ஜனாதிபதியைத்
தந்து வளர்த்த தாயவள் இல்லையோ
அர்ஜுன சாஸ்திரி அளித்தவளில்லையோ
பீமன் சவானைப் பெற்றவளில்லையோ
நகுலனைப் போலொரு நந்தா இல்லையோ
சகாதேவன் நிகர் சாக்ளா இல்லையோ
இத்தனை படையையும் இயக்கும் சக்தியாம்
கண்ணனைப் போலொரு காமராஜ் இல்லையோ
என்று உருவகப்படுத்தினார் கவிஞர்.
 
காமராஜர் மீது கவிஞர் கொண்ட பற்று சாஸ்திரி மீதும் பெரிய பிரியமாய் வளர்ந்தது. சாச்திரியின் சென்னை வருகையின்போது வரவேற்புக் கவிதை
வாசித்தளித்தார் கவிஞர்.
 
 
அறிவே வருக! அனலே வருக!
அமைதிப் புனலே தெளிவே வருக!
உருவில் சிறிதாய் உரத்தில் பெரிதாய்
உடைவாள் எடுத்த உயிரே வருக!
என்று பாடிய கவிஞர்,பாகிஸ்தான் போரின் வெற்றியைக் குறிக்க,
 
 
மூவடி மண்ணில் முன்னடி தொடங்கி
ஓரடியாலே உலகையளந்து
மாவலி தலையின் மமதை யளந்த
வாமனா வருக! மன்னவா வருக!
நாலடி உருவென நகைத்த சூரனை
வேலடி அடித்த வேலவா வருக என்கிறார்.
 
காமராசரின் பிறந்தநாள் கவியரங்கில் பாடிய கவிஞர்,ஜனநாயக சோஷலிசத்தின் முக்கியத்துவத்தை விளக்க முற்பட்டார்.
 
கத்திரியில் வெண்டைக்காய் காய்த்துக் குலுங்குமென்றால்
தத்துவத்தில் ஏதோ தகராறு என்றுபொருள்
சிங்கந்தான் மான்குலத்தை சீராட்டி வளர்க்குமென்றால்
அங்கத்தில் ஏதோ அடிவிழுந்தது என்றுபொருள்
தனியார் தொழிலால்தான் சமதர்மம் வளருமென்றால்
தலையிலே ஏதோ தகராறு என்று பொருள்  என்று தனக்கேயுரிய பாணியில் விவரிக்கிறார் கவிஞர்.
 
இன்று அப்துல்கலாம் புண்ணியத்தில் வாயில்லா ஜீவன்கள் கூட வல்லரசு என்று சொல்லிப் பழகிவிட்டன.ஜனநாயக சமதர்மம்தான் வல்லரசுக்கு வழி
என்று காமராஜர் பிறந்த நாளில் கவிதை பாடினார் கவிஞர். அதற்கு அவர் சொல்லும் காரணம் சுவையானது
 
.............................................................சிலநாட்டில்
ஜனநாயகம் உண்டு ; சமதர்மப் பேச்சில்லை
சமதர்மம் உளநாட்டில் ஜனநாயகம் இல்லை
................................................................
இங்கேதான் அந்த இரட்டைக் குழந்தைதனைப்
பெற்றெடுத்தார் நேரு;பிழைக்குமென நம்பிவந்தார்
இந்தக் குழந்தைமட்டும் எழிலாய் வளர்ந்துவிட்டால்
இன்னும் சிலநாளில் இந்தியா வல்லரசு!  
என்கிறார் கவிஞர்.
 
 காமராஜர் மீதான கவிஞரின் வருத்தம் உரைநடையில் தென்படுகிறது. கவிதையில் கரைகாணாத காதலின் பிரவாகம். அந்தக் காதலின் இன்னொரு முகம் இன்னொரு தலைவரின் மீதான வெறுப்பாகவும் வெடித்தது..அந்த வெறுப்புக்கு ஆளானவர்...ராஜாஜி!!
 

Wednesday, May 26, 2010

இப்படித்தான் ஆரம்பம் - 26

"அடிக்கடி கட்சி மாறுகிறீர்களே" என்று கவிஞர் கண்ணதாசன் அவர்களிடம் கேட்டபோது, "நான் மாறவில்லை! என் தலைவர்கள் மாறுகிறார்கள்!" என்று சொன்னார். அவருடைய மற்ற அரசியல் அறிவிப்புகளைப்போலவே தமிழகம் இதையும் வேடிக்கையாக எடுத்துக் கொண்டதுதான் வருத்தமான விஷயம்.
          
தாங்கள் வகுத்த கொள்கைகளிலிருந்து தலைவர்களே முரண்படுகையில் அந்தத் தலைவர்களுடன் கவிஞர் முரண்பட்டார் என்பதுதான் அந்த வாக்குமூலத்தின் பொருள். கவிஞர் கண்ணதாசன் மேற்கொண்ட அரசியல் மதிப்பீடுகளும், மாற்றிக்கொண்ட நிலைப்பாடுகளும் அவசரப்பட்டு எடுத்த முடிவுகள்போல் தோன்றக் கூடும். உணர்ச்சி வேகம் உந்தித் தள்ளி ஒவ்வொரு முடிவையும் அவர் எடுத்தார் என்று கருதுவதில் நியாயமிருக்கிறது. ஆனால் தீர யோசித்தால் அறஞ்சார்ந்த ஆவேசமும், மிகக் கூர்மையான உள்ளுணர்வுகளுமே அவரை அத்தகைய அதிரடி முடிவுகளுக்கு ஆற்றுப்படுத்தின என்று தோன்றுகிறது.

இயக்கங்களின் கோட்பாடுகளுடன் அவர்கொண்ட மோதல் தத்துவ அடிப்படையில் மட்டுமின்றி தனிமனித அடிப்படையிலும் நிகழ்ந்தவை. தாங்கள் பேசிய தத்துவங்களுக்கு, தலைவர்களே உண்மையாக இல்லாதபோது அவர் அவர்களை நேர்படச் சாடினார்.  கவிஞரின் அரசியல் வாழ்க்கை  பற்றிய  வெள்ளைப்பதிவுகள் அவரது  கட்டுரைகளில்  பெருமளவு காணக்கிடைக்கின்றன. மனவாசம், வனவாசம், நான்கண்ட அரசியல்  தலைவர்கள் போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.

அவை ஓரளவு சமநிலையோடும் தர்க்கரீதியான பார்வையோடும் உருவானவை. ஆனால் அலைவீசும் உணர்ச்சி வேகத்தில் அவரது பொதுவாழ்க்கைப்பயணம் சுடச்சுடப் பதிவானதென்னவோ அவருடைய தனிக்கவிதைகளில்தான். அவரது கவிதைத் தொகுதிகளின் அடிப்படையில் பார்ப்பவர்களுக்கு, தத்துவங்களுக்கும் தலைவர்களுக்கும் நடுவே இருந்த முரண்பாடுகளே  கவிஞர்  கால்மாறி ஆடக்காரணம் என்பது தெரியும்.ஆம்.. அரசியல் அம்பலத்தில் கவிஞர் கால்மாறியவரே தவிர பால்மாறியவர் அல்லர்.

கவிஞரின் வாயில் விழுந்து புறப்பட்ட தலைவர்களை நாம் இவ்வாறு வகைப்படுத்திக் கொள்ளலாம். கவிஞரால் முதலில் இகழப்பட்டு, பிறகு புகழப்பட்டவர்கள் ஒருவகை. புகழப்பட்டு பின்னால் இகழப்பட்டவர்கள் இன்னொருவகை. வாழுங்காலம் முழுதும் இகழப்பட்டு மரணத்தின்போதுமட்டும் புகழப்பட்டவர் ஒருவர். கவிதைகளில் புகழ்மொழிகளுக்கு மட்டுமே ஆளானவர் ஒருவர். இதுதவிர  மாறிமாறி சிலரைச் சாடியும் பாராட்டியும் இருக்கிறார். அவர்கள் கவிஞருக்குத் தலைவர்களில்லை. சமகாலத் தோழர்கள்.

முதலில் இகழப்பட்டு பின்னால் புகழப்பட்டவர்,நேரு. தொடக்கத்தில் புகழப்பட்டு பிற்காலத்தில் இகழப்பட்டவர் அண்ணா.வாழும்போது மிகக் கடுமையாய் சாடப்பட்டு, அஞ்சலிக்  கவிதையில்  மட்டுமே  பாராட்டப்பட்டவர்   ராஜாஜி.  கவிதைகளைப் பொறுத்தவரை காமராஜர் பற்றிய புகழ்மொழிகளே பொங்கிப் பிரவகிக்கின்றன. ஆனால்பிற்காலத்தில் சில கட்டுரைகளில் கமராஜரை கவிஞர் விமர்சித்திருக்கிறார். அப்படி  விமர்சித்த இடங்களில் அண்ணாவுடன் ஒப்பிட்டு அண்ணாவின் உயர்குணங்களை  விவரித்திருக்கிறார்.தோழராக விளங்கிய ஈ.வெ.கி.சம்பத் சில கவியரங்கக கவிதைகளில் பாராட்டப்பட்டிருக்கிறார்.ஆனால் எந்த சம்பத்துக்காக அண்ணாவை விட்டு விலகினாரோ,அதே சம்பத்தின் பிற்கால நடவடிக்கைகளை மனவாசத்தில் குறிப்பிட்டு," ஒருவகையில் சம்பத்தை விட அண்ணா உயர்ந்தவர்" என்று எழுதினார் கவிஞர்.



கலைஞர் அவரது சமகாலத்தோழர். கவிதைகளிலும் கட்டுரைகளிலும் பாராட்டும் விமர்சனமும் கதம்பம் போலக் கலந்தே வருகின்றன. எம்.ஜி.ஆர்.பற்றிய விமர்சனங்கள் கட்டுரைகளிலும்,புனைகதைகளிலும் காணப்பட்டாலும் வாழ்வின் இறுதிக்காலங்களில் எம்.ஜி.ஆரைத் தனது கவிதைகளில் பலவாறு புகழ்கிறார். அதற்கான காரணத்தைத் தமிழகம் அறியும் இந்தப் பின்னணியில் கவிஞரின் கவிதைகளையும்,அவற்றில் ஏற்றியும் இறக்கியும் வைக்கப்படுகிற தலைவர்களையும் பார்ப்பது சுவாரசியமாக இருக்கும்.  


தன்னுடைய அரசியல் வாழ்வை திராவிட இயக்கச்சார்போடு தொடங்கிய கவிஞர்,இந்தி எதிர்ப்புக்கவிதைகளில் சன்னதம் கொண்டு சுழன்றாடுகிறார்.  அப்போது அவர் சுழற்றுகிற சாட்டையில் நேருவும் தப்பவில்லை.
"லம்பாடி லம்பாடி லம்பாடிப்பேய்
 தொங்குமொழி ஓசையிலே பிறந்த பாடை(பாஷை)" என்று இந்தியைச் சொல்கிறார் கவிஞர். மேலே போடப்பட்ட கோட்டில் எழுதுகிற எழுத்துக்கள் காரணமாய் இந்தியைத் தொங்குமொழி என்றார் கவிஞர். கோட்டைப்பிடித்துத் தொங்குவதால் இந்தி அவர்   கண்களில்  குரங்காகவும்  தெரிகிறது  


"பொன்வீட்டில் குரங்குமொழி-பிறந்த காலம்
புரியாத தமிழ்மொழியோ கொல்லைமேட்டில்
 கண்மூடு தமிழ்மகனே உறங்கு நன்றாய்
கழுத்தறுந்து சாகும்வரை திறக்க வேண்டாம்" என்று  எழுதிய கவிஞர் 
பிற்காலத்தில் இந்தப் பார்வையை மாற்றிக் கொள்கிறார். நேரு  இந்தித் திணிப்பை முன்னெடுக்கிறார் என்றதும்"பாதக்குறடெடுத்து பண்டித நேருவை பன்னூறு அடி அடிப்போம்" என்று பாடினார் கவிஞர்.

அப்போது சென்னை வந்த நேருவுக்கு திராவிட இயக்கத்தினர் கறுப்புக்கொடி காட்டினார்கள். அந்த நேரத்தில் நேருவின் முகம் எப்படியிருந்தது என்று கவிஞர் எழுதுகிறார்.
"கருங்குதிரை முகமென்பேனா -சுட்ட
கத்திரிக்காய் முகமென்பேனா" என்று கேலி செய்கிறார்.நேரு என்னதான் ஆணழகனென்றாலும் வந்த இடத்தில் வராதே என்று சொலும்போது முகம் வாடும். கறுத்தும் போகும்.இதைத்தான் சொல்கிறார் கவிஞர்.

ஆனால் 1963 ல் நேரு சென்னை வரும்போது கவிஞர் தேசீய நிரோட்டத்தில் கலக்கிறார்.நேருவை வரவேற்று கவிதை எழுதி அதன்ஆங்கில மொழிபெயர்ப்பை நேருவின் கைகளிலேயே தரும்விதமாய் காட்சிகளை மாற்றுகிறது காலம்.
 
"எங்கள் தலைவனே!இதயமே வருக!
 இனிய புன்னகைக் கலைஞனே வருக!
 சங்கத் தமிழின் சாரமே வருக!
  தர்ம தேவனின் தூதனே வருக!
கங்கை வெள்ளமே கருணையே வருக!
காந்தி நாயகன் செல்வமே வருக!
சுட்ட போதிலும் மாற்று விடாததோர்
தூய தங்கமே!தாய்மையே வருக!
பூமி முற்றிலும் போர் மறுத்திடும்
புத்த தேவனின் தத்துவம் வருக!
கண்ணில் மணியெனக் காத்த கொள்கையை
மண்ணில் ஊன்றிய மன்னனே வருக!
நாக்கு நீண்டவர் தாக்கும் வேளையும்
போக்கு மாறிடாப் பொறுமையே வருக!"

என்ரெல்லாம் அந்தக் கவிதை நேருவின் பெருமையை நீட்டி முழக்கும் .அதன் மொழிபெயர்ப்பை நேருவிடம் தந்த போது நேரு அதைத்தன்  ஷெர்வானியில்  பத்திரப்படுத்திக் கொண்டார். அவர் கால்களைத் தொட்டு வணங்கினார் கவிஞர்.நேரு மறைந்தபின் அந்த அனுபவத்தை ஒரு கவியரங்கில் கவிஞர் குறிப்பிட்டார்:

"சூடிக் கொடுத்த சுடர்க்கொடிபோல் பாட்டுப்
 பாடிக் கொடுத்தேன்; பண்டிதனின் கால்தொட்டேன்-கன்னியரின்
தோள்தொட்ட போதும் தோன்றாத சுகம்,அன்னான்
கால்தொட்ட போது கண்டேன் களிகூர்ந்தேன்" என்று பரவசப்படுகிறார் இந்த ஆண் ஆண்டாள். நேருவுக்கு அவர் எழுதிய அஞ்சலிக் கவிதைகள், அமரத்துவம் வாய்ந்தவை.அவறைப் பின்னால் காண இருக்கிறோம்.

அண்ணா அவர்களின் உரைகளால் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்தில் ஈடுபட்டவர் கவிஞர். இன்னா நாற்பது ,இனியவை நாற்பது போல
"அண்ணா நாற்பது"பாடியவர் கவிஞர்.

 (அண்ணா, காமராஜர், கண்ணாதாசன்)


"முகம்பார்த்தே அகங்காணும் மூடாத விழிகள்
  முதலாளி கண்டஞ்சும் நிறங்கண்ட இதழ்கள்
 செகங்கண்டு சிலிர்ப்பேறும் சீரான கைகள்
 தென்னாட்டின் அன்பெல்லாம் துயில்கொள்ளும் நெற்றி
அகம்பற்றி உரைத்தற்கோர் அழகான வார்த்தை
அய்யய்யோ உலகத்தில் இனுந்தோன்றவில்லை
யுகந்தேய்ந்து போனாலும் பெயர்நிற்குமென்றால்
ஒருவர்க்கே அண்ணாவென் றுரைநாற்பதென்ப" என்று பாடினார்.இராமனின் அழகைப்பாட வார்த்தை கிடைக்காத கம்பன் "அய்யோ" என்றான்.கவிஞர் "அய்யய்யோ'என்கிறார்.

 "செம்பொன் மணியாரத்தொடு செல்வம் பலதரலாம்
 தம்பிப்படை யாவும்பல தங்கத் திரள்தரலாம்
 நம்பித்தமிழ் முறைபாடிடும் நலமேநிறை அண்ணன்
 தெம்புக்கது குறைவே அவர் திறனுக்கது சிறிதே" என்றும் பாடினார் கவிஞர்.
அண்ணாவின் சொல்வன்மை,மாற்றுக் கருத்துடையவரையும் பிணிக்க வல்லது. இதைச் சொல்ல ஓர் அருமையான உத்தியைக் கைக்கொள்கிறார் கவிஞர்.பகுத்தரிவு இயக்கத்தால் கடும் சாடலுக்குள்ளான இரண்டு
பிராமணர்கள் அண்ணாவின் பேச்சு பற்றிப் பேசிக்கொள்கிறார்களாம்:

"சாஸ்திரிவாள்!தெரியுமோ?சூத்திரன்தான்
  தமிழினிலே அழகாகப் பேசுகிறான் ஓய்
 நாஸ்திகந்தான் பேசுகிறான் என்றாலும் ஓய்
 நன்னாவே பேசுகிறான்!என்னங்காணும்..
 ஆஸ்திகத்தை அவன்தாக்கும்முறையைப்பார்த்தால்
ஆபத்து தான்காணும் எதிர்காலத்தில்
  வாஸ்தவத்தில் அவன்நல்ல மூளைக்காரன்
  மகதேவன் அவதாரம் என்பார் ஐயர்!"

 (கண்ணதாசன் ஈ.வெ.கி.சம்பத்துடன்)


இப்படி ஆராதிக்கப்பட்ட அண்ணாவை, கடுமையாக  சாடி  பின்னாளில்  கவிதை  படைக்கிறார் கவிஞர்.ஈ.வெ.கி.சம்பத்துடன் இணைந்து  தி.மு.க.விலிருந்து  வெளியேறுகிறார் கவிஞர்.திராவிட நாடு கொள்கையை அண்ணா  கைவிட்டதும் அதைக் கிண்டல் செய்து ஊரூராய்  கவியரங்கம்  நடத்தினார். இதைத்தான் நாங்கள் முன்பே சொன்னோம் என்று ஏகடியம் பேசினார்."திண்ணையிலே படுத்தாவது திராவிடம் காண்பேனே தாவிர கண்ணதாசன்,சம்பத்தைப்போல் விலகிச்செல்ல மாட்டேன் என்று அண்ணா முன்பு சொன்னார்.அதை நினைவுபடுத்தி..

"சொன்னோம் ஒருநாள்!தூயவரே;அண்ணாவே:
எந்நாள் பிறந்தாலும் இன்பத் திராவிடத்தின்
பொன்னாள் பிறக்காது!பொழுதென்றும் விடியாது!
செத்த பிணத்தைச் சிரந்தூக்கி வலம்வருதல்
 புத்தியுள்ளார் செய்கையல்ல;புதைத்துக் குடமுடைப்போம்
சக்தியுளமட்டும் ஜனநாயக வழியில்
பக்தியுடன் செல்வோம் பாராளும் நிலைபெறுவோம்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
செந்தமிழும் சேர்ந்து திராவிட நாடாவதென்றால்
பட்டப் பகலில் படுத்துறங்குவோன் காணும்
வெட்டிக் கனவு!விட்டுவிட்டு வாருமென்றோம்
முக்கண்ணன் போல முகத்திலொரு கண்திறந்து
அக்கண்ணன் தம்பியரின் அறிவுக்கோர் அண்ணனவன்
திக்கெட்டும் நடுநடுங்க தீயோய் சிறுமதியோய்
திண்ணையிலே காண்பேன் திராவிடநாடென்றானே!
திண்ணையிலே காண்பதற்கு திராவிட நாடென்பதென்ன
தொன்னையிலே நெய்யா?சோற்றுப்புளிக்குழம்பா?
போட்டுப் புரட்டிப் பொழுதை செலவழிக்கும் 
சீட்டு விளையாட்டா சிறுபிள்ளைத் தனமில்லையா.. "

இது, பானை பானையாய் கவிஞர் வடித்த பகடிச்சோற்றின் சில பருக்கைகள் மட்டுமே!! ஆனால் அண்ணா மீது அவருக்கு அந்தரங்கத்தில் தனியான பாசமும், அவரது மேடைத்தமிழில் ஒரு மயக்கமும் கடைசிவரை இருந்தது. காங்கிரஸில் சேர்ந்த பிறகு, 1964ல் அழகப்பா கல்லூரியில் "மறுமலர்ச்சி' என்றொரு கவியரங்கில் தலைமையேற்றுப் பாடினார் கவிஞர். எவையெல்லாம் மறுமலர்ச்சி என்று பட்டியலிட்டுவிட்டு

"தண்ணார்ந்த பூந்தமிழை மேடைக்கே தந்தவர்யார்?
 அண்ணாதுரை என்றால் அணுவளவும் குற்றமில்லை!
 தட்டுகிறான் தம்பி,அவர் தலைவரென நான்நம்பி
வளர்ந்திருந்த காலத்தை மறக்கவில்லை பாடிவிட்டேன்"  என்று குறிப்பிட்டார்

தமிழ்த்தேசியக்கட்சியை ஈ.வெ.கி.சம்பத்துடன் இணைந்து உருவாக்கியவர்களில்  கவிஞரும் ஒருவர்.திராவிட முன்னேற்றக் கழகத்தைப்
பார்த்து, "தடை எங்கே படை இங்கே இன்று கேட்ட
               தானையிளந் தலைவர்களே நானுரைப்பேன்
                தடை இங்கே படை எங்கே தலைவரெங்கே
                தமிழ்ச்சேனை வெள்ளத்தின் தன்மை எங்கே?
                தொடையின்று நடுங்குவதேன்"        


என்றெல்லாம் எக்காளமிட்டார்.தமிழ்த்தேசியக் கட்சி செம்மையும் நீலமும் கலந்த கொடியொன்றினைக் கொண்டிருந்தது. நிலம் சிவப்பு, கடல்நீலம் என்று அதற்கும் ஒரு விளக்கக் கவிதை எழுதினார் கவிஞர்.தமிழன் மண்ணை செம்மையாக்கினான்.நாவாயேறிக் கடலில் நான்கு திசைகளும் போனான் என்பது கவிஞர் தந்த விளக்கம்.கட்சியின் விளக்கமும் அதுதானா என்று தெரியவில்லை. காலப்போக்கில் கட்சி தடுமாறியது.காங்கிரஸில் இணைந்தது.அங்கே போய்ச் சேர்ந்தபோது கவிஞரின் கவிதைகளுக்குக் கிடைத்த காவிய நாயகனே...காமராஜர்!!

(தொடரும்)

Saturday, May 22, 2010

இப்படித்தான் ஆரம்பம்-25

ஒரு மனிதன் தன்னையே ஆய்வு செய்கிறபோது கிடைக்கிற தெளிவு ஆயிரமாயிரம் அறநூல்களை வாசிப்பதால் வருகிற தெளிவைக்காட்டிலும் தெளிந்தது. உடல்நலனை ஆய்வு செய்ய மனிதனின் இரத்தமும் கருவிகளும் பயன்படுகின்றன. இந்த எச்சங்களாலும் ஒருவனைத் தக்கான், தகவிலன் என்று வரையறை செய்ய இயலும். அதேபோல மனிதனின் செயல்களே அவனைஅளப்பதற்கான கருவிகள். உணர்ச்சியின் கைப்பொம்மையாய் உலவுவதும், அறிவின் துணைகொண்டு ஆளுவதுமான இரண்டு வழிமுறைகளில் மனிதன் எதைத் தேர்வு செய்கிறான் என்பதை அவன் ஆய்வு செய்ய மறக்கும்போதுதான் அவனைப் பற்றி அடுத்தவர்கள் அதிகம் பேசுகிறார்கள்.
கவிஞர் கண்ணதாசன், தன்னை ஆய்வு  செய்து  கொள்வதில்  தயவு  தாட்சண்யமில்லாதவர். அப்படி ஆய்வு செய்து அவர் வெளியிட்ட அறிக்கைகளில் முக்கியமானவை என்று நான் கருதுபவை  இரண்டு..


நானிடறி வீழ்ந்த இடம்  நாலாயிரம் அதிலும்    நான்போட்ட முட்கள் பதியும்
நடைபாதை வணிகனெனெ   நான்கூவி விற்றபொருள்    நல்லபொருள் இல்லை அதிகம்



"இடறி விழும் இடங்களில் எல்லாம் முட்கள் தைக்கின்றன.அவை ஒரு காலத்தில் நானே போட்டவை".இந்தத் தெளிவு வருகிறபோது யாரையும் குறைசொல்லத் தோன்றாது. அதேபோல,தான் கடைவிரித்துக் கூவி விற்றவற்றில் நல்லபொருட்கள் அதிகமில்லை என்று கவிஞர் சொல்கிறார்.அதற்கான காரணங்களை,இந்தக் கவிதையின் தொடக்கத்தில் சொல்கிறார்.


மானிடரைப் பாடிஅவர்  மாறியபின் ஏசுவதென்   வாடிக்கையான பதிகம்
மலையளவு தூக்கிஉடன்   வலிக்கும்வரை  தாக்குவதில் மனிதரில்   நான் தெய்வ மிருகம்

இக்கவிதைக்கு சுவையானதொரு பின்னணி உண்டு. முரண்படக்கூடிய மனிதர்களைப் பாடுவதலேயே கவிஞர் கண்ணதாசன் கவிதைகளில் முரண்பாடுகள் தோன்றுவதாகவும், எனவே மனிதர்களைப் பாடுவதைக் குறைத்துக் கொண்டால் கவிதைகளில் முரண்பாடு குறையுமென்றும், கவிஞரை மேடையில் வைத்துக் கொண்டு ஒரு மேடையில் சிலம்புச் செல்வர்.ம.பொ.சி.சொன்னாராம்.அந்த வாரமே இந்தக்கவிதையை எழுதினாராம் கவிஞர்.திரு.தமிழருவி மணியன் அவர்கள் இதை மேடைகளில் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.
அதற்கு அடையாளமாக,இந்தக் கவிதையில்


செப்பரிய தமிழ்ஞானச்    சிவஞானம் சொன்னமொழி   சிந்தையிடை வைத்துவிட்டேன்
 தேன்வாழும் மலர்கொண்டு   திருமாலை கட்டியதைத்  தெருக்கல்லில் சார்த்த மாட்டேன்
 வைப்பதொரு பூவேனும் பொன்னேனும் மனங்கொண்டு மறைசக்தி அடியில் வைப்பேன்
 வானளவு வாழ்ந்தாலும்  மலையளவு கொடுத்தாலும்  மனிதரைப் பாடமாட்டேன் என்கிறார் கவிஞர்.


சொன்னாரே தவிர, அவரால் அப்படி நீண்ட நாட்கள் இருக்க  முடியவில்லை. மனிதர்களைப்  பாடினார். மனசாட்சி  கேள்விகேட்ட  போது ,"மனிதரைத் தான்பாட  மாட்டேனேயல்லாமல்  புனிதரைப்  பாடுவேன்" என்று சமாதானம் சொல்லிக் கொண்டார்   .

ஆனாலும், தான் செய்தது தவறு என்கிற எண்ணம் அவரை உறுத்திக்  கொண்டேயிருந்தது .
  

ஊர்நெடுக என்பாட்டை உளமுருகப் பாடுகையில் ஓர்துயரம் என்னுள்வருமே
 உதவாத பாடல்பல உணராதார் மேற்பாடி ஓய்ந்தனையே பாழும்மனமே
என்னுந் தன்னிரக்கத்தை அவரால் தவிர்க்கவே முடியவில்லை.

ஆனால் இதன் விளைவாக அவருக்கு ஏற்பட்ட பக்குவம் அளவில்லாதது. வாழ்வில் ஒன்று தேவைப்படும்போது வேறொன்று வரும், அதை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிடவேண்டுமே தவிர மலைத்துப்போய் உட்கார்ந்தால் மனச்சோர்வுதான் மிஞ்சும் என்பது அவர் கண்ட அனுபவம்.
  


பசித்த வேளையில் பாழும் கஞ்சியும்
  பசியிலாப் போழ்தில் பாலும் தேனும்
  கொடுத்த தேவனைக் கோபிக்கலாமா?
   குறைந்த என்பசியைக் குறைசொல்லலாமா?

என்பது அவர் முன்வைத்த சமாதானம். அதேநேரம் வாழ்க்கை என்னும் மாபெரும் விடுகதைக்கு இந்தப் பக்குவத்தால்   பதில் கண்டுவிட்டதாகவும் அவர் கருதவில்லை.

 குறையென் மீதோ குற்றம் யாதோ
  குலைத்து நிமிர்த்தும் கொற்றவன் யாரோ என்று உருட்டப்பட்ட பகடையின் உள்ளப்பாங்கோடுதான் உலகவாழ்க்கையை அவர் எதிர்கொண்டார்.

பலன்கள் பற்றிய பதைப்பைப் பெரிதும் வெளிப்படுத்தாமல்,பணிகளைத் தொடர்வது என்கிற கர்மயோக மனநிலை அவருக்குக் கைகூடியது.வாழ்க்கை என்றல் என்னவென்ற கேள்வியை, தன்னிடமிருந்தே தொடங்கியதால் அவருக்கு இந்தநிலை பிடிபட்டது. பலரும் நடக்கிற சம்பவங்களை மட்டுமே வைத்து வாழ்வை எதிர்கொள்ளும்போது பதட்டம் மிஞ்சுகிறது.அனால் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் தன்னுடைய பங்களிப்பும் இருக்கிற என்பதை உணரும்போது மனம் சமநிலை கொள்கிறது. அந்தச் சமநிலையே, நடப்பது நடக்கட்டும் என்கிற சரணாகதி நிலையையும் ஏற்படுத்துகிறது.

நீரோ நெருப்போ நிகழ்வன யாவையும்
ஈசன் பொறுப்பென இயக்கிய நடையை 
இன்னும் தொடரக் கால்வலுவுண்டு
எங்கே எப்படி என்ன நிகழுமோ என்கிறார் கவிஞர்.


அதற்காக வாழ்வாசை அற்றுப்போன நிலையில் அவரில்லை. பிரியங்களும் பந்தங்களும் ஒருபுறம், பட்டுணர்ந்த ஞானம் ஒருபுறம் என்று இரண்டுக்கும் நடுவே தானாடிய ஊஞ்சலை உள்ளூர ரசித்திருக்கிறார்.


முக்காற் பயணம் முடித்த கிழவனும்
முதலடி வைக்கும் முதிரா இளைஞனும்
நடுவழி நிற்கும் நானும்போவது
ஆசை என்னும் அழகிய ரதத்தில் என்னும்போது, வாழ்க்கைப் பயணத்திற்கான வாகனம் ஆசையே என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார்.


இந்த ஊஞ்சலின் இருமுனைகளுக்கும் மாறிமாறி உந்தித்தள்ளி ஊஞ்சலாடியதில்தான் அவரது படைப்பியக்கம் விசைகொண்டது. 
இந்தப் புரிதல் தந்த தெளிவு, ஒரு காலகட்டத்தில் எதையுமே பதட்டமின்றி ஏற்கும் பக்குவமாய் மலர்ந்தது. இது காலகாலங்களுக்கும் அவருக்குள்ளே நிலைத்திருந்ததா என்றால்..தெரியாது. ஆனால் கவிதை வரிகளாய் அவை நிலைபெற்றன.

மனிதனின் கவலைகள், நோய்கள்,தேடல்கள், தவிப்புகள் அனைத்தையுமே
சமநோக்கோடு பார்த்து கவிஞர் கண்ணதாசன் எழுதிய அபூர்வமான வரிகள் 
இவை.

காக்கை குருவியைப்போல் கவலையின்றி நீயிருந்தால்
யாக்கை கொடுத்தவனை யார்நினைப்பார் இவ்வுலகில்

சட்டியிலே வேகின்ற சத்தெல்லாம் சரக்கானால்
மட்டின்றிப் படித்துவந்த மருத்துவர்க்கு வேலையென்ன

கடலருகே வீற்றிருந்தும் கடுந்தாகம் வரும்பொழுதே
கடவுளெனும் ஒருவனது கைசரக்கு நினைவுவரும்

இன்னதுதான் இப்படித்தான் என்பதெல்லாம் பொய்க்கணக்கு
இறைவனிடம் உள்ளதடா எப்போதும் உன்வழக்கு

எல்லாம் அவன்செயலே என்பதற்கு என்னபொருள்
உன்னால் முடிந்ததெல்லாம் ஓரளவே என்றுபொருள்   
கோடைநாளில் மேற்கொண்ட சாலைவழிப்பயணத்தில் வழியில் தென்பட்ட
காற்றோட்டமான கோயில் மண்டப நிழல்போல் இதமான வரிகள் இவை.

 (தொடரும்...)

Thursday, May 20, 2010

இப்படித்தான் ஆரம்பம் - 24

கவிஞர் கண்ணதாசனின் கவிதைகள் சுயவிமரிசனத்திலே தொடங்கி சுயதரிசனத்திலே சென்று முடிகின்றன. அவருடைய கவிதைகளில் பெரும்பாலானவை,தன்னுணர்ச்சிப்பாடல்களே என்று பல விமர்சகர்கள் எழுதியுள்ளனர். உண்மைதான். ஆனால் அந்தத் தன்னுணர்ச்சி, வெறும் வாக்குமூலங்களாக நின்றுவிடுவதில்லை.சுய விமரிசனமாய் வளர்ந்து, சுய தரிசனமாய்க் கனிந்தன என்பதுதான் இதுவரை வெளிவந்துள்ள அவரது கவிதைகளின் ஏழுதொகுதிகளும் நமக்குக் காட்டுகிற உண்மை. (இதுவரை வந்துள்ள தொகுதிகள் என்று நான் சொல்லக்காரணம், கவிஞரின் மீதமுள்ள கவிதைகளைத் தொகுத்தால் இன்னும் இரண்டு தொகுதிகள் கொண்டுவரலாம் என்று சில ஆண்டுகளுக்குமுன் கவிஞரின் உதவியாளர் திரு. இராம.கண்ணப்பன் எழுதியிருந்தார்.அவரும் மறைந்துவிட்டார். மீதமுள்ள கவிதைகளைக் கொண்டுவருவதாக கவிஞரின் புதல்வர் திரு.காந்தி கண்ணதாசன் என்னிடம் உறுதி கூறியுள்ளார்)


கண்ணதாசனை, பலவீனங்கள் நிறைந்த கவிஞர் என்று பேசுவதில் பலருக்கும் ஒரு மகிழ்ச்சி. அந்த பலவீனங்களை அவரே பட்டியலிட்டதால் வந்த வினை இது. அவர்கள் ஒன்றை மறந்துவிடுகின்றனர். தன்னுடைய பலவீனங்கள் என்னவென்று தெரிந்து கொண்டிருப்பதுதான் ஒரு மனிதனின் மிகப்பெரிய பலம். பலவீனங்கள் இருக்கட்டும். தன்னுடைய பலங்கள் என்று கவிஞர் மூன்று அம்சங்களைக் கருதினார்.1.இறையருள் 2 .தமிழூற்று 3.அனுபவங்கள்.இவற்றில் இறைவனைக்கூட, சிலசமயங்களில் தன்னைக் கைவிட்டுவிட்டதாய் கடிந்துகொள்கிறார்.ஆனால் தன் அனுபவங்களையும் தமிழையும் தலையாய பலங்களாகவே அவர் கருதுகிறார்


தன்னையே முழுமையான சுய ஆய்வுக்குட்படுத்தி கவிஞர் பாடிய தொகைகளில் தலையாயது "அவிவேக சிந்தாமணி". அளவுகடந்த தன்னிரக்கத்தின் ஆர்ப்பரிப்பு அது. அதிலும்கூட தன் பலங்களைப் பற்றிய பிரகடனங்களை இடையிடையே செய்துவிடுகிறார் கவிஞர்.





"தான்பெற்ற செல்வனை ஏன்பெற்றோம் என்றுதான் தாயன்று மாண்டுபோனாள்
தந்தையும் இப்பிள்ளை உருப்படாதென்றுதான் தணலிலே வெந்துபோனான்
ஊன்பெற்ற யானுமே உயிர்கொள்ள வைத்தவன் உயரத்தில் ஒளிந்து கொண்டான்
உதிரத்தில் என்றென்றும் தமிழன்னை மட்டுமே உறவாக வந்துநின்றாள்
வான்பெற்ற பேறுபோல் யான்பெற்று வாழவே வையையில் பூத்தமலரே
மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தாலாட்டிடும் மதுரைமீனாட்சி உமையே"



என்றார் கவிஞர். தன் சிறப்புகள் அனைத்திற்குமே தேடிப் படித்த தமிழும் தேடிக்கொண்ட அனுபவங்களுமே காரணம் என்பதில் அவருக்கிருந்த உறுதியே, வாழ்க்கை மீதான அவரின் நன்றியுணர்வு, சலிப்பு இரண்டுக்குமே காரணமானது.



"பூர்வத்தில் செய்ததோ இந்நாளில் செய்ததோ புண்ணியம் உண்டு கொஞ்சம்
பொருளாகத் தந்ததோ அருளாக வந்ததோ புகழாரம் உண்டு கொஞ்சம்
ஆர்வத்தில் சேர்த்ததோ அனுபவம் ஈந்ததோ அறிவினுக்கில்லை பஞ்சம்
அமைதியில்லாதவன் துயில்கொண்டு தேறவே ஆண்டவன் விரித்த மஞ்சம்-
வார்க்கின்ற கவியன்றி வேறொன்றும் இல்லையே வையையில் பூத்த மலரே
மலர்கொண்டகூந்தலைத் தென்றல்தாலாட்டிடும் மதுரைமீனாட்சி உமையே" என்ற பாடல் இதற்கோர் உதாரணம்.



எல்லையில்லாத கருணையுடன் தனக்குத் தமிழ்வளம் தந்த தெய்வங்கள், வாழ்வில் பலநேரங்களில் தன்னைக்கைவிட்டு விட்டதாகவே கவிஞர் பாடினாலும், அவை குற்றச்சாட்டுக்களாக இல்லாமல் செல்லச் சிணுங்கல்களாகவே உள்ளன. தவறு செய்பவர்களுக்குத் தெய்வம் துணைபோவது போலவும். தர்மத்தின் பாதையில் நடப்பவனைக் கைவிட்டது போலவும், சிலநேரங்களில் தெரிகிறது. ஆனால் அதர்மத்தில் செல்பவன் ஆயிரம் வளங்கள் பெற்றிருந்தும் நிம்மதியின்றித் தவிக்கிறான்.தர்மத்தின் பாதையில் செல்பவன் வாழ்வியல் இழப்புகளைக் கண்டாலும் கடவுள் துணையிருப்பதை உணர்கிறான். எனவேதான் தன் பயணத்தைத் தொடர்கிறான்.



"திருடனும் அரகரா சிவசிவா என்றுதான் திருநீறு பூசுகின்றான்
சீட்டாடும் மனிதனும் தெய்வத்தின் பேர்சொல்லி சீட்டைப் புரட்டுகின்றான்
முரடனும் அரிவாளில் காரியம் பார்த்தபின் முதல்வனை வணங்குகின்றான்
முச்சந்தி மங்கையும் முக்காடு நீக்கையில் முதல்வனைக் கூவுகின்றாள்
வருடுவார் கைக்கெலாம் வளைகின்ற தெய்வம்-என் வாழ்க்கையைக் காக்கவில்லையே
மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தாலாட்டிடும் மதுரைமீனாட்சி உமையே" என்பதைத் தான் செல்லச் சிணுங்கல் என்கிறேன்.


இதில் இன்னொன்றும் தெரிகிறது. மனிதமனம் மறந்துபோக நினைக்குமளவு கடும் சோதனைகள் வாழ்வில் வருகின்றன. இவை கடவுளின் சோதனைகள் என்பது கண்ணதாசனின் முடிவு. ஆனால் எவ்வளவு கசப்பான அனுபவங்களைக் கொடுத்தாலுமவற்றை சுவையான கவிதைகளாக்கி இறைவனுக்கே நிவேதனமாக்கும் கவிஞனின் எக்காளம் இத்தகைய கவிதைகளில் தென்படுகின்றன. இறைவன் வைத்த சோதனைகளை இதய சுத்தியுடன் எதிர்கொண்ட நாயன்மார்கள் இதைத்தான் செய்தார்கள். அவற்றை அச்சுறுத்தும் சவால்களாகப் பாராமல் ஆண்டவனின் கட்டளைகளாகவே பார்த்தார்கள். வாழ்வில் பெற்ற வருத்தங்களையும் வலிகளையும் ஏதோ விருதுபெற்ற பெருமிதத்தில் இவர் பாடுவதும் இதனால்தான்.


"பொய்யப்பன் சபையிலே கைகட்டி நிற்பனேல் பொருளப்பன் துணைகிடைக்கும்
பொருளப்பன் துணையோடு சூதாடிப் பார்ப்பனேல் புகழப்பன் நிலைகிடைக்கும்
மெய்யப்பன் தன்னையே நம்பினேன் அவனெனை வீணப்பன் ஆக்கிவிட்டான்
வினையப்பன் என்பவன் விதியப்பன் தன்னோடு வீட்டுக்கே வந்துவிட்டான்
மையப்பும் கண்ணினால் அப்பனை அம்மைநீ வாங்கிக்கொள் வண்ணமயிலே
மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தாலாட்டிடும் மதுரைமீனாட்சி உமையே" . இந்தப்பாடலில் தொனிக்கும் பெருமிதம், அனுபவங்களால் புடம்போடப்பட்ட ஆணிப்பொன் இதயத்தில் மட்டுமே உருவாகும்.



இந்தத் தெளிவின் காரணமாய், எதைப்படித்தாலும் அதன் சாரத்தை சட்டென்று பற்றிக் கொள்கிற தெளிவு, புத்தியில் புலர்கிறது. இராமாயணம்,
மகாபாரதம் போன்றவற்றை பிரம்மாண்டமான இலக்கியக் கட்டமைப்புகளாகவும் தத்துவக் கருவூலங்களாகவும் காண்பதொரு வகை. ஆனால் அவை எதைச் சொல்ல வருகின்றன என்று, ஒரே வீச்சில் உணர்வது மற்றொரு வகை.



"காடுசென்றே கொண்ட மனைவியைத் தோற்றவன் காகுத்தன் என்ற கதையும்
காடுசெல்லாமலே கவத்திலே தோற்றவன் கண்ணனால் வென்ற கதையும்
வீடுகொண்டே பிறன் மனைவியைச் சார்ந்தவன் மேனிப்புண் கொண்ட கதையும்
வெற்றியும் தோல்வியும் தேவர்க்குக் உண்டென்ற வேதத்தைச் சொல்லவில்லையோ?
மாடுவென்றால் என்ன?மனிதன் வென்றால் என்ன? வல்வினை வெற்றி மயிலே..
மலர்கொண்ட கூந்தலைத் தென்றல் தாலாட்டிடும் மதுரைமீனாட்சி உமையே" என்று வெற்றி தோல்விகளைப்பற்றிய அபிப்பிராயங்களையும் அச்சங்களையும் அனாயசமாக உடைத்துப் போடுகிறார் கவிஞர்.


இன்னல்களின் மடியில் கண்ட இந்தத் தெளிவும்,வருத்தங்களின் பிடியில் விளைந்த சமநிலையும் கண்ணதாசனின் கவிதைகளை சில இடங்களில் சித்தர் மரபின் நீட்சி என்று நினைக்கத்தக்க இடத்தில் சென்று நிறுத்துகின்றன. கற்றுணர்ந்ததைக் காட்டிலும் கண்டுணர்ந்ததில் கனந்தவற்றையே நாம் தத்துவம் என்கிறோம். அப்படியானால் கண்ணதாசனின் கவிதைகள் அசலான தத்துவங்கள்.

பாசம், நட்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தருகிற வாழ்வில் எவையெல்லாம் மிஞ்சுகின்றன என்பதைச்சொல்ல வருகின்ற கண்ணதாசன் போகிற போக்கில் பட்டியல் போடும் விஷயங்கள் நம்மை அதிரச் செய்கின்றன.

'தாசியின் மார்பிலும் தவுல்கொண்ட தோளிலும் தழும்புதான் மிச்சமாகும்
சந்யாசி பையிலும் சாவுண்ட மெய்யிலும் சாம்பல்தன் மீதமாகும்
பாசத்து நெஞ்சிலும் பழக்கத்து நட்பிலும் படும்பாடு கோடியாகும்
பல்லோர்க்கும் நல்லவன் பொல்லாதவன் எனும் பழம்பாடல் வாழுமுலகில்
மாசற்ற பொன்னொடும் வைரமும் மணிகளும் மார்பாட வாழும் சிலையே
மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தாலாட்டிடும் மதுரைமீனாட்சி உமையே' என்கிறார்.

பாசத்தையும் நட்பையும் உண்மையாகக் காட்டுபவன் படாத பாடு படும்போது, பொல்லாதவர்களே நல்ல பெயர் எடுக்கும் நில்லா உலகியல்பை நயமாகச் சொல்கிறார் கவிஞர் . மாசற்ற பொன்,வைரம், மணி ஆகியவை மீனாட்சியம்மையின் மார்பில் அணிகலன்களாய் மின்னுவதுபோல், மாசற்ற பாசமும் நட்பும் மனிதர்களால் புரிந்துகொள்ளப்படாமல் போனாலும் கடவுளின் அங்கீகாரத்தைப் பெறும் என்ற கவிஞரின் நம்பிக்கையும் இதிலே வெளிப்படுகிறது.



உலகில் எத்தனையோ விஷயங்களைப்பார்த்ததில் தனக்குக் கிடைத்தவை என்ன என்பதைக் கவிஞர் சொல்கிறார்.


"ஆற்றிலும் குளித்தேன் சேற்றிலும் குளித்தேன்
காற்றிலும் பறந்தேன் கல்லிலும் நடந்தேன்
ஊற்றுப் புனலில் ஒளியினைக் கண்டேன்
மாற்றுப் பொன்னிலும் மாசினைப் பார்த்தேன்
பார்த்தது கோடி பட்டது கோடி
சேர்த்தது என்ன?சிறந்த அனுபவம்"

அனுபவங்களின் அமுத சாரமே கண்ணதாசன் கவிதைகள்



(தொடரும்...)










Saturday, May 15, 2010

இப்படித்தான் ஆரம்பம்-23




கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலுள்ள ஈஷா யோக மையத்துடன் எனக்கு நெருங்கிய தொடர்புண்டு. அங்கே அமைந்திருக்கும  தியானலிங்கம், பிராணப் பிரதிஷ்டையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.யோக மரபில் , மனித உடலில் ஏழு சக்கரங்கள் இருப்பதாகச் சொல்வார்கள். அந்த  ஏழு சக்கரங்கள்  தியானலிங்கத்திலும் அமைந்துள்ளன. எழு சக்கரங்களும் முழுவீச்சில் தூண்டப்படுவதே பிராணப்பிரதிஷ்டை.. சக்தி முழுவீச்சில் தூண்டப்படுகையில் சிவம் எனும் அம்சம் அங்கே நிகழ்கிறது. இதுதான் பிராணப் பிரதிஷ்டையின் தாத்பர்யம்..

ஒரு மனிதனுக்குள் இந்த சக்திநிலை தூண்டப்படும் போது அவன் சிவனாகவே கருதப்படுகிறான்.திருமூலர்,இதைத்தான்,  "குருவே சிவமெனக் கூறினன் நந்தி" என்கிறார். இருக்கட்டும்...இதற்கும் கண்ணதாசனுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

இந்தத் தத்துவங்களில் ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்ட எனக்கு, திருவருட்செல்வர் திரைப்படத்தில், கவிஞர் கண்ணதாசனின் ஒரு பாடலைக் கேட்டபோது தூக்கிவாரிப் போட்டது. சுந்தரரை சிவபெருமான் ஆட்கொள்கிற இடம்."சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே"என்ற பாடல்...

"பக்திப் பெருக்கினிலே ஊனுருக-அந்தப்
பரவசத்தில் உள்ளே உயிருருக
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக-என்
சந்ததியே உந்தனுக்கு அடிபணிய..."
என்றெழுதியிருப்பார் கவிஞர்.
சக்திநிலையின் திரட்சியே சிவம் என்ற யோக மரபிலான கருத்தை ஒருவரியில் சொல்லியிருந்தார் கவிஞர்.

 இதேபோல் இன்னொரு  விஷயம். யோகமரபில்  சிவபெருமான் ஆதிகுருவாக  வணங்கப்படுபவர்.  அவர்களுக்கு முருகப்பெருமானும் ஒரு யோகிதான். முருகனுக்கு ஆறுமுகங்கள் என்பதற்கு புராணம் சொல்லும் காரணம் பலரும் அறிந்தது. சிவபெருமானின் ஐந்து முகங்களுடன்,அதோமுகம் என்ற ஆறாவது முகத்தையும் உருவாக்கி அவற்றில் எழுந்த கனலில் உதித்தவனே கந்தன் என்பது கந்தபுராணம்.



ஆனால் யோகமரபில் இதற்குச் சொல்லப்படுகிற காரணம் வேறு. முருகன் என்னும் யோகி, ஓருடலுக்குள் ஆறு உயிர்களை நிலைநிறுத்தி கடுந்தவம் இயற்றியவர். அந்த  ஆறு உயிர்களேஆறுமுகங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
முக்காலம் உணர்ந்த ஞானிகளும் அதிசயித்துப்பார்க்கும் இத்தவத்தை நிகழ்த்திய யோகி கர்நாடகா மாநிலத்திலுள்ள சுப்ரமண்யா எனும் குமார பர்வதத்தில் வாழ்ந்தவர் என்றும், நின்ற நிலையிலேயே அவர் சமாதியடைந்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்தக் குமாரபர்வதம், அறுபடை வீடுகளில் ஒன்றென்று பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார் குறிப்பிட்டுள்ளார். கந்தன் கருணை படத்தில் எது புதியது என்று  முருகன்  கேட்க  அந்தக்கேள்விக்கு மட்டும் கவிஞரின் பாடல் இடம் பெற்றிருக்கும். முந்தைய மற்ற கேள்விகளுக்கெல்லாம் அவ்வையின் அசல் பதில் பாடல்கள்.

அந்தப் பாடலில் வருகிற ஒருவரி, "மூன்றுகாலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது". யோக மரபில் இத்தகைய கருதுகோள் இருப்பது கவிஞருக்குத் தெரியுமா, அல்லது அதைத்தான் சொல்கிறாரா என்பதெல்லாம் கூட அனாவசியம். அவருடைய வாக்கில் சில தெய்வீக உண்மைகள் தங்களைத் தாங்களே வெளிப்படுத்திக் கொள்கின்றன.

அதே பாடலில், கந்தனைப் பொறுத்தவரை எவையெல்லாம் புதியது என்று சொல்லிக்கொண்டே வருவார் கவிஞர். அவற்றில் ஒரு வரி: திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன்மேனி புதியது

திருப்பாவையில் கண்ணனின் முகத்தைச்சொல்ல வந்த ஆண்டாள், "கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்" என்பார். அதற்கு உரையெழுதியவர்கள் கதிர்போன்ற ஒளியும், நிலவு போன்ற குளுமையும் கொண்டதால் அது கதிர்மதியம் போன்ற முகம். அதேபோல  கந்தனின் திருமேனி திங்களின் தண்மையினையும் கதிரவனின் ஒளியையும் கொண்டுள்ளது.


இப்பாடலின் முத்தாய்ப்பு வரி, உனது தந்தை பரமனுக்கோ வேலும் மயிலும் புதியது என்பதுதான். வேலும் மயிலும் சிவபெருமானுக்குப் புதியதா?அவற்றை அவர் பார்த்ததேயில்லையா? சிவபெருமான் அழிக்கும் கடவுள்.அவருடைய கையிலிருப்பது சூலாயுதம். அதற்கு அழிக்கத்தான் தெரியும்.ஆனால் மாமர உருவில் சூரன் நிற்க முருகன் எறிந்த வேல்பட்டு சேவலாகவும் மயிலாகவும் சூரன் உருமாறினான் என்பது புராணம். பகைவனை அழிக்க வேண்டிய ஆயுதம், வனை உருமாற்ற, வாகனமாகவும் கொடியாகவும் ஆட்கொண்டார் முருகன். அழிக்கும் கடவுளாகிய சிவபெருமானுக்கு ஆயுதம் கொண்டு ஆக்கவும் முடியும் என்று காட்டியதால் பரமனுக்கு வேலும் மயிலும் புதியது...


புராணப்படங்களுக்குப் பாடல்கள் எழுதும்போது அதற்காகத் தனியாக பக்தி இலக்கியங்களைப் படித்தவரில்லை கவிஞர். ஏற்கெனவே அவற்றில் ஆழங்கால் பட்டிருந்தார். எனவே மறைபொருளான விஷயங்களைக்கூட
அவரால் அனாயசமாக எழுதிச்செல்ல முடிந்தது.

திருமறைக்காட்டில் உள்ள சிவாலயத்தில் வேதங்கள் வழிபாடு நிகழ்த்தி வாசல்கதவை அடைத்து விட்டதாக ஐதீகம். திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் திருமறைக்காட்டில் எழுந்தருளிய போது, திருநாவுக்கரசர் பதிகம் பாட கதவு திறந்தது. திருஞானசம்பந்தர் பதிகம் பாடிக் கதவை மீண்டும் மூடினார்.  இது திருத்தொண்டர் புராணம் வாயிலாகவும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பதிகங்கள் மூலமாகவும் அறியக் கிடைக்கிற செய்தி.

பண்ணினேர் மொழியாள் உமைபங்கரோ
மண்ணினார் வலம்செய் மறைக்காடரோ
கண்ணினால் உமைக் காணக் கதவினை
திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே
என்பது திருநாவுக்கரசர் தேவாரம்.இந்தப்பாடல்தான் திருமறைக்காட்டில் 
திருநாவுக்கரசர் பாடிய பதிகத்தின் முதல் பாடல்.

இந்த மூலப்பாடலையே தொகையறாவாகக் கொண்டு திருவருட் செல்வர் திரைப்படத்தில்
தாழ்திறவாய்-மணிக்கதவே தாழ்திறவாய்-ஆலய மணிக்கதவே தாழ்திறவாய்
மறைநாயகன் முகம்காண ஆலய மணிக்கதவே தாழ்திறவாய்
என்று தொடங்கும்  பாடலெழுதியிருப்பார் கவிஞர். புராணச் செய்திகள் குறித்த ஆழ்ந்த புரிதல் அவருக்கிருப்பதை இந்தப்பாடலின் பல இடங்களில் உணரமுடியும்.

மனக்கதவம் திறந்த பரம்பொருளே
திருக்கதவம் திறக்க வரமருளே
இருகரம் கூப்பி உன்னை வலம்வரவே-எங்கும்
சிவமயமாய் மலர தாழ்திறவாய்
என்றெழுதும்போது, சிவபக்தர்களுக்கு, "கைகாள் கூப்பித் தொழீர் "என்ற திருநாவுக்கரசர் தேவாரம் நினைவுக்கு வராமல் போகாது.


பத்து பாடல்கள் பாடியும் திருக்கதவம் திறவாமை கண்டு பதினோராவது பாடலில்,
"அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானே
சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக்காடரோ
சரக்க இக்கதவம் திறப்பிம்மினே" என்று பாடினார் திருநாவுக்கரசர். கோயில் கதவு திறந்தது.இதையே..

ஆடும் திருவடி கோலம் அறிந்திட
அரனே தாழ்திறவாய்
அன்னையின் மார்பினில் பொன்மணி கண்டிட
சிவனே தாழ்திறவாய்
அருள்நெறி தெளிவுற திருமுறை புகழ்பெற
அன்பே தாழ்திறவாய்
ஒருமுறை இருமுறை பலமுறை கேட்டேன்
ஒளியே தாழ்திறவாய்

என்றெழுதுகிறார் கவிஞர். பத்து பாடல்கள் பாடியும் கதவு திறக்கவில்லை என்கிற புராணச் செய்தியை

ஒருமுறை இருமுறை பலமுறை கேட்டேன்
ஒளியே தாழ்திறவாய்
என்ற வரி புலப்படுத்துகிறது.

அதே திரைப்படத்தில் அப்பூதியடிகள் புராணம் காட்சியாகியிருக்கும். திருநாவுக்கரசரையே குருவாக வழிபடும் அப்பூதியடிகளின் வீட்டிற்கு எழுந்தருள்வார் திருநாவுக்கரசர். உணவு படைக்க வாழையிலை அறுத்துவரும் அப்பூதியடிகள் மகனை நாகம் தீண்டி இறந்துவிடுவான். திருநாவுக்கரசர், சிறுவனின் உடலை திருக்கோயிலுக்குச் சுமந்து சென்று பதிகம்பாடி, பிள்ளையை உயிர்ப்பிப்பார்..
  திருநாவுக்கரசரின் விடந்தீர்த்த திருப்பதிகம் இப்படித் தொடங்கும்.
ஒன்று கொலாம் அவர்சிந்தை உயர்வரை
ஒன்றுகொலாம் உயரும்மதி சூடுவர்
ஒன்றுகொலாம் இடு வெண்தலை கையது
ஒன்றுகொலாம் அவர் ஊர்வதுதானே

என்று தொடங்கி ,"இரண்டுகொலாம்", "மூன்றுகொலாம்" என்று பத்துவரையில் எண்ணலங்காரமாய் அமைந்திருக்கும் அந்தத் தேவாரம்.பதிகம் முழுவதிலும் மொத்தம் நாற்பது இடங்களில்"கொலாம்" என்று  வருமாறு  பதிகம் பாடியிருப்பார்  திருநாவுக்கரசர். நிகழ்ந்த சம்பவம் பற்றிய குறிப்பே பதிகத்தில் இல்லையே என்று  சிலர்  கருதுவர் . இந்த  ஐயத்தைத்  தீர்த்துவைத்தவர், பேரறிஞர் அமரர் தி.வே.கோபாலய்யர்.சமணத்தில் விடம் இறக்குவதற்கான  மந்திரம், "லாம்" என்பது.சமணராயிருந்து,சமணர்களாலேயே "தங்களின்  மேலாம் தருமசேனர்'என்று பட்டம் தரப்படும் அளவு உயர்ந்து  நின்றவர்  திருநாவுக்கரசர். விடமிறக்கும் மந்திரத்தை இடையிலே  பெய்து சிவபெருமானின்  சிறப்புகளைச் சொல்லும் விதமாகவும் இந்தப் பதிகத்தை அமைத்திருக்கிறார் திருநாவுக்கரசர்.இந்த நுட்பம் கோபாலய்யர் போன்றோருக்குப்  புரியும். சாதாரணர்களுக்குப் புரியுமா? திருநாவுக்கரசர் நிலையில் நின்று கவிஞர் எழுதிய அற்புதமான பாடல் இது

 நாதர்முடி மேலிருக்கும் நல்ல பாம்பே-உனக்கு
நல்லபெயர் வைத்தவர்யார் சொல்லுபாம்பே
ஆதிசிவன் தலையமர்ந்த ஆணவமா-அவன்
அங்கமெல்லாம் விளையாடும் தைரியமா

 இறைவனின் கோபத்திற்கு ஆளானாலும் இறையடியார் கோபத்திற்கு
ஆளாகக் கூடாது. "ஈசனெதிர் நின்றாலும் ஈசனருள் பெற்றுயர்ந்த நேசரெதிர் நிற்பது அரிதாமே"என்பது பழம்பாடல். பரமசிவன் கழுத்துப் பாம்பு கருடனை சவுக்கியமா என்று கேட்கலாம். சிவனடியாரைக் கேட்க முடியுமா? அதட்டுகிறார் திருநாவுக்கரசர். அஞ்சி வருகிறது நாகம்.

ஊர்கொடுத்த பால்குடித்து உயிர்வளர்த்தாய்-பால்
உண்டசுவை மாறும்முன்னே நன்றிமறந்தாய்
வஞ்சமற்ற தொண்டருக்கே வஞ்சனை செய்தாய்-அவர்
பிஞ்சுமகன் நெஞ்சினுக்கே நஞ்சுகலந்தாய்

பெயருக்குத் தகுந்தாற்போல் மாறிவிடு-எங்கள்
பிள்ளையை மறுபடியும் வாழவிடு
நெஞ்சம் மாறிவிடு-பிள்ளையை வாழவிடு
கதைச்சூழலும் இங்கே வந்துவிடுகிறது.

சங்கம் அமர்ந்தொரு முத்தமிழ் பாடிய
சங்கரன் மீதினில் ஆணை
சங்கப் புலவர்கள் நாவினில் அடங்கிய
செந்தமிழ் மீதினில் ஆணை
மங்கலக் குங்குமம் மஞ்சள் நிறைந்த
சங்கரி மீதினில் ஆணை
மாதொரு பாகன் சூடிய நாகப் பாம்பே
உன்மேல் ஆணை

கயிலாயத்திற்கு "திருமலை"என்றுபெயர். திருத்தொண்டர் புராணத்தில்
"திருமலைச் சருக்கம்' என்றொரு பகுதியே உண்டு. அந்தப் பெயரை மிகப் பொருத்தமான இடத்தில் பயன்படுத்துகிறார் கவிஞர்:

தேவன் மீதில் ஆணை-அவன் திருவடி மீதும் ஆணை
திருமலை மீதும் ஆணை -என் திருநாவின்மேல் ஆணை
பண்மேல் ஆணை-சொல்மேல் ஆணை
என்மேல் ஆணை-உன்மேல் ஆணை

தெய்வீக இலக்கியங்களை அவற்றின் ஆழம் மாறாமல் பாமரர்களுக்கும்
பாடல்கள் வழியே சென்று சேர்க்க அவர்போல் யாருண்டு நமக்கு??

(தொடரும்...)

Friday, May 14, 2010

பிச்சியின் தாய்மை வேகம்

தூளி அசைத்திடும் காளி வளைக்கரம்
தூங்க விடாதொரு நேரம்-அவள்
ஆளும் இரவினில் ஆடும் சதங்கைகள்
ஆயிரம்- செவிகளின் ஓரம்
நாளில் படர்ந்திடும் மூல இருளெங்கள்
நாயகி அவளது கோலம்-மலர்த்
தாள்கள் அசைவினில் தாவி யெழுந்திடும்
தந்திமி தோம்திமி தாளம்

தாயவள் அள்ளித் தோள்களில் இடுவாள்
தணலும் குளிரும் தழுவும்
சேயெனக் கொஞ்சிச் சிறுமுத்தம் இடுவாள்
செய்வினை எல்லாம் நழுவும்
பேயென சினந்து பூமியில் எறிவாள்
பதட்டத்தில் உயிரும் உலரும்
மாயையின் கருவில் மறுபடி இடுவாள்
மறுநொடி பவவினை தொடரும்

பிள்ளையின் கைகளில் பொம்மைகள் தந்தால்
பேசாதிருக்குமே பாவம்
பிள்ளைகள் தமையே பொம்மையாய் ஆட்டும்
பிச்சியின் தாய்மை வேகம்
வெள்ளமாய்ப் பொழிபவள் வெய்யிலாய்த் திரிபவள்
வேடிக்கை காட்டிடும் கோலம்
தள்ளுவாள் அள்ளுவாள் தேவியின் தாய்மைதான்
 விசித்திர வித்தையின் ஜாலம்

சூரிய விழுதினில் தொட்டிலைக் கட்டியே
சூனியம் எங்கணும் அசைப்பாள்
வீரிய நகங்களில் பிள்ளையைக் கிள்ளியே
வீறிடல் கண்டவள் நகைப்பாள்
நீரில் நெருப்பினில் வானில் ஒளிந்தந்த
நீலி அழவிட்டுச் சிரிப்பாள் 
காரியக் காரிதன் பிள்ளையை வினைகளின்
காற்று படாவண்ணம் அணைப்பாள்

ஊட்டி வளர்ப்பினும் வாட்டி வதைப்பினும்
உயிர்நிழல் அவளன்றி யாரோ
வீட்டினில் சேர்க்கிற வரைநம்மை அதட்டி
வழியெங்கும் வருபவள் யாரோ
மூட்டிய நெருப்பினில் முழுவினை எரிப்பவள்
மூலத்தை உணர்ந்தவர் யாரோ
கூட்டினில் உயிரினைப் பூட்டினள் எமன்வந்து
சாவியைத் தொடவிடுவாளோ

Thursday, May 13, 2010

இப்படித்தான் ஆரம்பம் - 22

நிறம் மாறாத பூக்கள் படம். பாடலுக்கான சூழலை, கவிஞர் கண்ணதாசனிடம் விளக்கினார் இயக்குநர் பாரதிராஜா. "யார் ஹீரோ?" வினவினார் கவிஞர். 'புதுப்பையன்தாண்ணே! ஒண்ணு ரெண்டு படங்களிலே  நடிச்சிருக்கான். "என்றார் பாரதிராஜா. "ஹீரோயின்?" அதுவும் புதுசுதாண்ணே! நம்ம ராதா அண்ணன் பொண்ணு..நான்தான் அறிமுகப்படுத்தினேன். இந்தப்படத்திலே  வில்லன் கூட புதுசுதாண்ணே" என்றார். கவிஞர்  முகம்  மலர்ந்தது. "அடேடே! எல்லாருமே புதுசா! வரட்டும் வரட்டும்! நல்லா வரட்டும்.!" மனங்கனிந்த  அவருடைய வாழ்த்து மங்கலமான பல்லவியாகவும் மலர்ந்தது..


"ஆயிரம் மலர்களே மலருங்கள்!அமுத கீதம் பாடுங்கள்!ஆடுங்கள்!காதல்
தேவன் காவியம்- நீங்களோ..நாங்களோ..நெருங்கி வந்து சொல்லுங்கள்!சொல்லுங்கள்!"

கவிஞரின் வாழ்த்தோ வசையோ பலிக்கும் என்கிற நம்பிக்கை, அவர் காலத்தில் பரவலாக இருந்தது. அவருக்கு வாடகைக்குக் கொடுப்பதாக வாக்களித்த ஸ்டூடியோ அதிபர், கூடுதல் பணம் வாங்கிக்கொண்டு வேறொருவருக்கு வாடகைக்கு விட்டாராம். கோபத்தில் கவிஞர் 'உன் ஸ்டூடியோ தீப்பிடிச்சு சாம்பலாப்போகும்' என்று ஏசிவிட்டுத் திரும்ப, அவர்   வீடு சென்று சேரும்முன் மின்கசிவினால் அந்த ஃபுளோர் தீப்பிடித்ததாம். "கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்"என்று எழுதியவர் கவிஞர்.

காவியங்களில்,பாத்திரங்களின் குரலாக இன்றி, கதைப்போக்கு பற்றியோ, பொதுச்செய்தியாகவோ, காவியகர்த்தாவே சில கருத்துக்களைச் சொல்வதுண்டு. இதற்குக் கவிக்கூற்று என்று பெயர். திரைப்படங்களில், பாத்திரங்களின் குரலாக இல்லாமல் பின்னணியிலோ அல்லது  மையப்பாத்திரங்களுக்குத் தொடர்பில்லாத மூன்றாம் குரலாகவோ ஒலிக்கும் கவிஞர் கண்ணதாசனின் பல பாடல்கள் தனித்தன்மை வாய்ந்தவை.

கற்பனைக்களஞ்சியம் என்றழைக்கப்பட்ட அருளாளர், துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். நால்வர் நான்மணி மாலை உள்ளிட்ட அற்புதமான இலக்கியங்களைப் படைத்திருக்கிறார். நன்னெறி என்னும் நூலில், அருமையான  வெண்பாக்கள் இயற்றியுள்ளார். அவற்றில் ஒன்று. பலவீனமானவர்கள், தங்களினும் பலமடங்கு வலிமை வாய்ந்தவர்களைத் துணையாகக் கொண்டுவிட்டால், தங்களின் பலம்பொருந்திய எதிரிகளைப் பார்த்து அஞ்ச மாட்டார்கள் என்ற கருத்தை சொல்ல வந்த அவர், அதற்கோர் உதாரணத்தையும் சொல்கிறார். கருடனின் நிழல்பட்டாலே கலங்கக்கூடியது பாம்பு. ஆனால்,சிவபெருமானின் தலையில் அமர்ந்திருக்கும் துணிவில் கருடனைக்கண்டு அஞ்சாதாம்!!

மெலியோர் வலிய விரவலரை அஞ்சார்
வலியோர் தமைத்தாம் மருவில்-பலியேல்
கடவுள் அவிர்சடைமேற் கட்செவியஞ் சாதே
படர்நிறைப் புள்ளரசைப் பார்த்து.
இதுவே நாட்டார் வழக்கில், சிவபெருமான் தலையில் இருந்த பாம்பு கருடா சவுக்கியமா, என்று கேட்டதாம். என்று கதையாக வழங்கி வருகிறது.


போதிய சம்பாத்தியமில்லாமல் தாழ்வு மனப்பான்மையில் தவிக்கிற கணவனுக்கும் மனைவிக்கும் நடுவே நிகழும் மனப்போராட்டங்களைப்பாட இந்தப் பழம்பாடலின் பொறியைப் பல்லவியாக்கியிருப்பார் கவிஞர்

"பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது-கருடா சவுக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே
கருடன் சொன்னது-அதில் அர்த்தமுள்ளது".இந்தப் பாடலில் கவிஞரே திரையில் தோன்றி நடிப்பார். டி.எம்.எஸ்.பாடியிருப்பார். கவிஞருக்கு திரைப்படத்தில் சொந்தக்குரலில் பாடுகிற ஆசை இருந்ததாம். இசையமைப்பாளர் ஒருவர், கவிஞரிடம், அவர் குரல் எத்தனை கட்டை என்று கேட்கிற அர்த்தத்தில், "உங்களுக்கு என்ன கட்டை?' என்று கேட்க, அருகிலிருந்த கலைஞர், "புத்தி..புத்திதான் கட்டை" என்று சொல்லிச் சிரித்தாராம். சூரியகாந்தியிலும் இரத்தத்திலகத்திலும் மேடையில் தோன்றி தன் பாடலுக்குத் தானே வாயசைத்திருப்பார் கவிஞர்.

"உயர்ந்த நிலையில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்-உன்
நிலைமை கொஞ்சம் இறங்கிவந்தால் நிழலும்கூட மிதிக்கும்" என்றும்

"வண்டி ஓட சக்கரங்கள் இரண்டுமட்டும் வேண்டும்-அந்த
இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்"
என்றும் அபாரமான வரிகள் அந்தப்பாடலில் உண்டு. அதேநேரம், கணவனின் நிலையில் நின்றுபாடும்போது அவனுடைய தாழ்வு மனப்பான்மையையும் உளவியல் ரீதியாய் அலசுவார் கவிஞர். பொதுவாக ஆணை அகாயம் என்றும் பெண்ணை நிலவு என்றும் சொன்னால் ஆணாதிக்க உள்ளங்கள் ஆனந்தம் அடையும். ஆனால் கவிஞரோ இதில் பெண்ணை ஆகாயமாக்கி ஆணை நிலவாக்குகிறார். நிலவு போல் தேய்ந்து வளரும் நிலையில்லாத மனம் காரணமாய் நாயகனுக்கு இந்த உவமை பொருந்துகிறது. சொல்லப்போனால் கதாநாயகனின் பிரச்சினை தன் மனைவியின் வளர்ச்சிதான். மற்றபடி இவன் தேய்வதற்குக் காரணமேயில்லை.




நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே.இதில் நீ-நான்,  நிலவு-வான் என்று நிரல் நிரையணியை அழகாகப் பயன்படுத்துகிறார் கவிஞர். நான்நிலவுபோலத் தேய்ந்துவ்ந்தேன் நீ வளர்ந்ததாலே. பிரச்சினையின் மையத்தைப் பாடலிலேயேதொட்டுக் காட்டிவிடுகிறார் கவிஞர்.

திரைப்பாடல்களில் பெருமளவு விரும்பப்பட்ட பாடல்களில் ஒன்று, "மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா" என்ற பாடல். ஒவ்வொரு மனிதனும், தன்னுடைய துன்பத்தையே உலகின் தலையாய துன்பம் என்று கருதுவான். அவனுடைய துன்பம் ஒன்றுமேயில்லை என்ற உணர்வை உருவாக்குவது மிகக் கடினம்.முதல் சரணத்திலேயே அதை வெற்றிகரமாக நிகழ்த்திவிடுகிறார் கவிஞர்.

வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடிநின்றால் ஓடுவதில்லை

இன்றைய நவீன நிர்வாகவியல், what next attitude என்பதை சமீபகாலமாய் வலியுறுத்துகிறது.அடைந்த பின்னடைவிலேயே நின்றுவிடாமல் அடுத்தது என்ன என்று நகர்கிற மனோபாவத்தை இந்தப் பாடல் வெகு இயல்பாக வலியுறுத்துகிறது. தோல்வி நேர்ந்தாலும் எதிர்காலத்தில் எட்ட நினைக்கும் வெற்றிகளை மனதில் கற்பனை செய்து கொள்வதை, ஆட்டோ சஜஷன் என்கிறார்கள். அந்தக் கற்பனை  எப்படியிருக்க வேண்டும்?கவிஞரைக் கேளுங்கள்..

 ஏழை மனதை மாளிகையாக்கி
 இரவும் பகலும் காவியம் பாடு
 நாளைய பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு என்கிறார்.

அடுத்தவனின் துன்பம் தன்னுடையதைவிடப் பெரிதாக இருந்தால் அது மகிழ்ச்சிக்குரிய விஷயமில்லை. ஆனால் நம்முடைய நிலை எவ்வளவோ தேவலை என்று கருதினாலேயே நம்பிக்கையுடன் அடுத்த முயற்சியைத் தொடங்கலாம். முந்நூற்று சொச்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த குமரகுருபரர், "தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை அம்மா பெரிதென்று அகமகிழ்க" என்றார்.

கவிஞர் அதனை உள்வாங்கிக் கொண்டு,
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்று பாடுகிறார்.

படத்தின் கதையைக் கருத்தில் கொள்ள அவசியமேயில்லாமல் பொதுவில் நின்று பாடுகிற போதும் நம்மை ஈர்க்கிற பாடல்களில் இவையும்  சில. அதே நேரம், கதைச்சூழலோடு நகமும் சதையுமாய் பொருந்துகிற பல பாடல்களை கவிக்கூற்றாக கவிஞர் எழுதியுள்ளார். அவற்றில்  முக்கியமானது, 47 நாட்கள் படத்தில் வரும் மான்கண்ட சொர்க்கங்கள் என்ற பாடல். அந்தக்காலத்தில்அமெரிக்க மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்து  கொண்டு  போய் வஞ்சிக்கபடுகிற கட்டுப்பெட்டியான பெண்ணின்  நிலை  பற்றிய  சிவசங்கரியின் கதை அது. அந்தப்  பெண்ணின்  மனநிலையை  நான்கு  சரணங்கள் கொண்ட பாடலில்  அற்புதமாகப் படம் பிடித்திருப்பார் கவிஞர்.




கண்ணீரில் நீராடக் கடல்தாண்டி வந்தாளே பொன்மங்கை
என்ற ஒற்றை வரியே போதுமானது.

தாம்பத்ய சங்கீதத்தின் விளைவாய் கரு உருவாகிவிடுகிறது.சந்தோஷம் தந்த தாய்மையே அவளை சஞ்சலம் கொள்ள வைக்கிறது.

ஆசையில் ஒருநாளில் பாடிய ஒருபாட்டில்
தாயென ஆனோமே சேயினைக் கொண்டோமே
ஏனிந்த சேயென்று தாளாத நோய்கொண்டாள் இப்போது
பாசத்தில் நீராடி பந்தத்தில் போராடி
வேஷத்தைத் தொடர்வாளா வேதனை பெறுவாளா
ஊரில்லை உறவில்லை தனியாக நின்றாளே பூமாது

 என்ற சித்தரிப்பு, ஆயிரம் காமராக்களின் காரியத்தைச் செய்துவிடுகிறது.
திருமணமாகிப் போகிற பெண் , தாய்வீட்டின் குலதெய்வ வழிபாட்டைக்கூட
துறந்து விடுகிறாள். அந்நிய நாட்டில் மொழி தெரியாத நிலையில் கடும் சீதோஷ்ணமும் அவளை வருத்துகிறது.தாய்வீட்டு நினைவும் தாய்நாட்டு நினைவும் அவளுக்கு எழுகிறது.துறந்த தெய்வங்கள் துணைக்கு வருமா என்று கவிஞர் கேட்கிறார்.

தன்வழி செல்கின்றாள் சஞ்சலம் கொள்கின்றாள்
எவ்விடம் செல்வாளோ எவரிடம் சொல்வாளோ
எங்கெங்கும் மேகங்கள் எங்கெங்கும் பனிமூட்டம் இப்போது
இந்தியத் தாய்நாட்டை எண்ணுகிறாள் பாவை
சென்றிட வழியில்லை தேம்புகிறாள் நின்று
தாய்வீட்டு தெய்வங்கள் துணையாக வாராதா இப்போது..

47 நாட்கள் நாவலையும் படிக்காமல். படத்தையும் பார்க்காமல் விட்டவர்களுக்கு இந்த ஒரு பாடல் போதும். படமும் நாவலும் காட்டாத காட்சிகள் மனக்கண்களில் நிழலாடும்.

(தொடரும்...)

Tuesday, May 11, 2010

இப்படித்தான் ஆரம்பம் - 21

"சரஸ்வதியின் கையிலுள்ள வீணைபோல் இருக்கிறீர்களே! உங்களை கவனிக்க யாருமில்லையா?"  என்று கவிஞர் கண்ணதாசனிடம் கேட்டவள், அவரிடம் கொஞ்ச நேர உறவுக்காக வந்த பெண்ணொருத்தி. அந்தச் சொல்லே, வசந்தமாளிகை திரைப்படத்தில் "கலைமகள் கைப்பொருளே!உன்னை கவனிக்க ஆளில்லையோ!விலையில்லா மாளிகையில் உன்னை மீட்டவும் விரலில்லையோ" என்ற பல்லவியாய்ப் பூத்தது.
கவிஞர் அத்தகைய பெண்களை அன்புடனும் புரிதலுடனுமே அணுகிவந்திருக்கிறார் என்பது அவருடைய படைப்புகள் வழியாகவும் பாடல்கள்வழியாகவும் நமக்குப் புலப்படுகின்றன.

அவர்பால் இதய அன்பு வைத்து, இன்பம்கொடுத்த பெண்ணொருத்தி இளைய வயதிலேயே இறந்தது குறித்து அவர் எழுதிய இரங்கற்பா ஒன்று ஒப்பற்ற உணர்ச்சிப்படைப்பாய் ஒளிர்கிறது.

நேருவுக்கும், டி,என்.ராஜரத்தினம்பிள்ளைக்கும், பெரியாருக்கும், காமராஜருக்கும், அண்ணாவுக்கும் , கலைவாணருக்கும் ஆகச்சிறந்த இரங்கற்பாக்களை ஆக்கி, தனக்குத்தானே இருந்துபாடிய இரங்கற்பாவையும் எழுதிக்கொண்டகவிஞர், பெயர் தெரியாத அந்தப் பெண்ணுக்காகவும் அந்தரங்க சுத்தியுடன் அழுது எழுதிய அஞ்சலிக் கவிதையின் தலைப்பு, "நான்மட்டும் அறிந்த கதை".

"தைமாத மேகமெனத் தள்ளாடும் பூங்கொடியே
 கையோடு நீயிணைந்தால் கற்பனைகள் ஊறுமடி!

  பொங்குதடந்தோளில் புல்லரித்து வீழ்ந்துவிட்டால் தங்குதடை இல்லாமல் தமிழ்ப்பாடல் தோன்றுமடி!

 வாழைத் தொடையிரண்டில் வசமிழந்த வேளையிலே
ஏழைபோல் தோன்றிடுவேன் என்னதான் விந்தையடி!

 செவ்வாயில் ஒருநிமிடம் ஜீவனுறப் பாய்ந்துவிட்டால்
 தெவ்வாதி தேவருக்கும் தேராத இன்பமடி!

 தொட்டிலிலே பேரன்மார் தூங்குகிற வயதினிலும்
கட்டிலிலே நீகொடுத்த கதையே நினைக்குதடி!

ஊர்பேர் அறியாமல் உயிர்துறந்த பைங்கிளியே
ஊமைமனதுமட்டும் உனைத்தேடி வாடுதடி"   என்றெல்லாம்  எழுதிவிட்டு

"அன்பே உன் ஆன்மா அமைதியுற வேண்டுமென்று
 என்பாடல் ஒன்று எழுதி முடிந்ததடி"  என்று கண்ணீ ர் அஞ்சலிசெலுத்தினார் கவிஞர்.

உரைநடையில், அத்தகைய பெண்களைப்பற்றிச் சொல்கையில், "பொருளாதாரத்தின் பொதுக்குழந்தைகள்" என்றெழுதுவார். தமிழில் பரத்தைமை என்கிற பிரிவு சங்க இலக்கியம்தொட்டுப் பேசப்பட்டிருக்கிறது. சரியான பொருளில் பார்த்தால்,பரத்தையரும் கணிகையரும் வேறு வேறு தகுதிகள் கொண்டவர்கள்.பரத்தையரில்
ஆடல், பாடல் போன்ற கலைகளில் தேர்ந்தவர்களே கணிகையர்கள் என்றழைக்கப்பட்டனர் . ஆனால் பரத்தையருக்கான பொதுச்சொல்லாக
கணிகை என்ற பெயர் வழங்கலாயிற்று. 
 கண்ணதாசன்,மாதவி பற்றிய கவிதையொன்றில், "உன்னைக் கணிகையென்றால் உலகே கணிகைமயம்"என்பார். தகுதியாலும் குண இயல்புகளாலும், மதிக்கத்தக்க இடத்தை  மாதவி பெற்றாள். சிலப்பதிகாரத்தில் மாதவி பற்றிய ஒரு வரி என்னைப்  பெரிதும்  யோசிக்க  வைத்தது. 

"சிறப்பிற் குன்றா செய்கையிற் பொருந்திய பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை" என்பார் இளங்கோவடிகள். பெண்ணுக்கு மெல்லிய தோள்கள்தானே அழகு! "பெருந்தோள் மடந்தை"என்கிறாரே இளங்கோ! அறிஞர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்களிடத்தில் கேட்டேன். "சேக்கிழார்,திருஞான சம்பந்தரை சிறிய பெருந்தகை என்றது போல்தான் இதுவும்" என்றார் அவர். தோள்வலிமை காக்கும் தொழிலின் அடையாளம். தன் நடனத் திறனால் பரிசும் பொன்னும் பெற்று குடும்பத்தைக் காக்கிறாள் மாதவி என்பது கூட அதற்குக் காரணமாயிருக்கலாம்.
நீதிநூல் என்ற அளவில் பரத்தைமையைக் கண்டிக்கத் தலைப்பட்ட வள்ளுவர், சற்று கடுமையாகப் பாடிவிடுகிறார்.
பொருட்பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று"   "என்கிறார். 
பணத்துக்காகப் பொய்யாகத் தழுவும்பெண்களுடன் உறவு  கொள்வது  ,  இருட்டறையில் அனாதைப்பிணத்துடன் உறவு கொள்வதைப் போன்றது என்று கடுமையாக சாடுகிறார் திருவள்ளுவர். அறிவுலகின் நெடும்பரப்பில் வள்ளுவர் எடுத்து வைத்த இந்த வாதத்தை, கவிஞர் கண்ணதாசன்தான் எதிர்கொள்கிறார். அந்தப் பெண்களின் உணர்வுகளுக்கு  முதலிடம் தந்து மாற்றுக்கேள்வி எழுப்புகிறார்:


"தொட்டவுடன் ஒட்டிகொள்ள சட்டிப்பானையா?-வந்த
  தோளுக்கெல்லாம் மாலைபோடக் கோயில்யானையா?" என்கிறார்.

காசு கொடுத்தால் மாலை போடும் கோயில்யானைகளுடன் விலைமகளிரை ஒப்பிடும் விரிந்த உள்ளம் கவிஞருக்கே வரும்.

சூழ்நிலைக்கைதிகளாய் வாழ்விழந்த அந்தப்பெண்களை கவிஞர் புரிதலுடன் அணுகியிருக்கிறார். பரிவுடன் நடத்தியிருக்கிறார். அவரது தனிக்கவிதை ஒன்று திரைப்பாடலாகவும் உலா வந்தது:



"கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம்
 கடைத்தெருவில் நிற்குதடா ஐயோ பாவம்!
 காசிருந்தால் வாங்கலாம் ஐயோ பாவம்!"
இந்தப் பாடலில் விலைமகளிரின் வழக்கறிஞராகவே மாறியிருப்பார் கவிஞர்.

"வண்டு வந்து தேன்குடித்தால் மலருக்குத்தான் தண்டனை
வழுக்கிவிழும் பெண்களுக்கோ சட்டத்திலும் வஞ்சனை"என்பது திரைப்பாடல் வடிவம்.

இதன் மூலமாகிய தன் தனிக்கவிதையில்,
"பணமிருப்போர் தவறுசெய்தால் பாதுகாக்கும் சட்டமே-நீ
வலையைவீசிப் பிடிப்பதெல்லாம் ஏழைகளை மட்டுமே"என்பார் கவிஞர்.

அந்த ஊரில் ஒரு வேசி இருந்தாள்". என்று ஒருவர் கதை எழுதியிருந்தாராம். ஜெயகாந்தன் அதைப் படித்துவிட்டு, "என்னடா எழுதியிருக்கிறான்?அந்த ஊரில் ஒரு பெண் இருந்தாள்.அங்கிருந்த ஆண்களெல்லாம் சேர்ந்து அவளை வேசியாக்கினார்கள்என்றல்லவா எழுதியிருக்க வேண்டும்" என்றாராம்.

கவிஞர், பெண்ணை ஆண்கள் எப்படியெல்லாம் வேசியாக்கினார்கள் என்று பட்டியலிடுவார்.

"குணமிருந்தும் தவறுசெய்வாள் குழந்தைக்காக ஒருத்தி-இந்தக்
கொடுமைசெய்ய உடன்படுவாள் குடும்பம் காக்க ஒருத்தி
 படித்திருந்தும் வேலையின்றிப் பள்ளிகொள்வாள் ஒருத்தி-திரைப்
படத்தொழிலில் ஆசைவைத்து பலியானாள் ஒருத்தி" என்பார்.

கண்ணீரில் மிதக்குதடா கற்பு எனும் ஓடம்-இது
கம்பனுக்கும் வள்ளுவருக்கும் கடவுளுக்கும் பாடம்" என்று முடிக்கும்போது கவிஞரின் கனிவு புலப்படும்.

தப்புத்தாளங்கள் படத்தில்
"நினைவெங்கும் மாங்கல்யம் தாய்மை
 நிதந்தோறும் விளையாட்டு பொம்மை
பொருளாதாரம் செய்த விந்தை-இவள்
பொருள்தாரம் ஆகிவிட்ட சந்தை"என்றெழுதியிருப்பார் கவிஞர்.

விளிம்புநிலை மனிதர்கள் மீது அவருக்கிருந்த அன்பும் அனுதாபமும் இந்தப்  படப்பாடல்களில் வெளிப்படும். எதிர்மறை வாழ்வை ஏற்றுக் கொண்டவன் குரல் இந்தப் படத்தின் பாடல்களில் ஒங்கிக் கேட்கும்.

"படிக்க ஆசவச்சேன் முடியலே
 உழைச்சு பாத்துபுட்டேன் விடியலே 
பொழைக்க வேறுவழி தெரியலே
 நடந்தேன் நான்நெனச்ச வழியிலே...
இதுக்குக் காரணந்தான் யாரு..?
படைச்ச சாமியப்போய் கேளு
இதுக்குப்போய் அலட்டிக்கலாமா..
என்ற பாடலும் தப்புத்தாளங்கள்-வழி தவறிய பாதங்கள் என்ற பாடலும்
விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரங்கள்.

அந்த நாட்களில், ஜனதா கட்சியில்,தலைப்பாகையும் தாடியுமாய் ராஜ்நாராயணன்  என்ற மனிதர், தான்தான் அடுத்த பிரதமர் என்று ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருப்பார். அதில் கவிஞர் கண்ணதாசனுக்கிருந்த எரிச்சல், இந்தப் பாடலில் வெளிப்பட்டிருக்கும்

பாராளும் வேஷங்கள் பரதேசிக் கோலங்கள்
விதி-வழி-தினமோடும் ஓடங்கள்

(தொடரும்...)

Saturday, May 8, 2010

இப்படித்தான் ஆரம்பம் - 20

திருமண வரவேற்பு மேடையில் மாலையும் கழுத்துமாய் நின்ற அந்த இளம்பெண்ணுக்குக் கண்கள் அடிக்கடி கலங்கின. அடிக்கடி வாசலைப் பார்த்துக் கொண்டாள். காதல் கணவன் கைகளை மெல்ல அழுத்தும் போதெல்லாம் பளிச் புன்னகை ஒட்டிக் கொள்ளும். பெற்றோரின் சம்மதமில்லாமல் செய்து கொண்ட திருமணம். பெற்றோர் காலையில் கோயிலில் நடந்த திருமணத்திற்கும் வரவில்லை. வரவேற்புக்கும் வரவில்லை. வீட்டுக்குத் தெரியாமல் வந்த பெரியப்பா மகளைப் பார்த்ததும் அழுகை பீறிட்டு வந்தது மணப்பெண்ணுக்கு.. பரிசுப் பொருளுடன் வரிசையில் அடுத்தாற்போல் நின்றிருந்த எனக்கு, அவளுடைய பெரியப்பா பெண் சொன்ன ஆறுதல் வார்த்தைகள் காதில் விழுந்தன. "உஷ்! அழக்கூடாது! ஒரு குட்டிப்பாப்பா பொறந்தா எல்லாம் சரியாயிடும்..என்ன??" எனக்கென்னவோ நம்பிக்கையில்லை.அழுகையை நிறுத்துவதற்காக சொல்லப்படும்  ஆறுதல் வார்த்தைகள் அவையென்று பட்டது. அந்தப் பெண்ணின் அப்பாவை எனக்குத் தெரியும்.வீம்புக்கார மனுஷர்.


இரண்டாண்டுகளுக்குப் பிறகு அந்தப் பெண்ணை சந்தித்தேன்.கைகளில் ஒருவயதுக் குழந்தை.என்னைப் பார்த்ததும் முகம் மலர்ந்தாள். வணக்கம் சொல்லி சிறிது நேரம் பேசிவிட்டு விடைபெறும்போது வெகு இயல்பாகச் சொன்னாள்.."அப்பா உங்களைப் பத்தி போனவாரம் கூட விசாரிச்சாங்க!" தாங்கள் சமாதானமாகி விட்டதை எனக்குத் தெரிவிக்க அவள் மேற்கொண்ட உத்தி அது. பெரியப்பா பெண்ணின் ஆரூடம் பலித்துவிட்டது.மாப்பிள்ளை மீது மட்டும் இன்னும் கோபம் ஆறவில்லை. மகள் பேரனைத் தூக்கிக் கொண்டு வாரம் ஒருமுறையாவது வந்துவிடவேண்டும். ஆடு பகை -குட்டி உறவு. கொஞ்ச நாட்களில் மாப்பிள்ளையும் அந்த  வீட்டுப்  படியை  மிதிக்கத்தான் போகிறார்.

அவர்களைப் பற்றி யோசித்துக் கொண்டே நகர்ந்தபோது கவிஞரின் பாடல்  நினைவுக்கு வந்தது . கர்ணன் படப்பாடல்.கர்ணனின் மனைவி, குழந்தையுடன் தாய்வீட்டிற்குத் தயங்கித் தயங்கிச் செல்வாள். தந்தையும் ஓர் அரசன் .தந்தையின் ஒப்புதலின்றி நடந்த திருமணம்.துரியோதனின் மனைவி ஆறுதல் சொல்லி ஆற்றுப்படுத்துவாள்

"போய்வா மகளே போய்வா
கண்களில் புன்னகை சுமந்து போய்வா மகளே போய்வா" என்பது பாடலின் பல்லவி. கையில் குழந்தையுடன் தாய்வீடு செல்லும் எந்தப்  பெண்ணையும் இந்த இடத்தில் நாம் வைத்துப் பார்க்க முடியும்

தாய்வீடென்பதும் நம்வீடே
தந்தையின் நாடும் நம்நாடே
சேயும் சேயும் வரக்கண்டால்
திறவாக் கதவும் திறவாதோ
ஒருநாள் கோபம் ஒருநாளே-அதிலும்
உற்றவர் கோபம் வளராதே
மணநாள் மன்னன் உனைக்கண்டு-மதி
மயங்குகிறான் நீதளராதே

உறவுகளின் இயல்பு பற்றியும் உளவியல் பற்றியும் பாடுகிற இந்தப் பாடலில், தந்தையின் வாயிலுக்குப் போனதும் என்ன நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது .மனைவிக்குப் பாதுகாப்பாக கர்ணன் சேனையை அனுப்புகிறான்.ஆனால் மகளுக்கு வரவேற்பு தடபுடலாக இருக்கப் போகிறது. பேச முடியாத பாசத்திற்குப் பார்வைதானே மொழி!!

காவலன் சேனை நின்றிருக்கும்-தந்தை 
கண்களும் உன்னைக் கண்டிருக்கும்
பாவலர் தோழியர் இசைகேட்கும்-அன்புப்
பார்வையெல்லாம் உன்னை வரவேற்கும்
என்று உற்சாகம் தந்து வழியனுப்புகிறாள் தோழி. இதில் வேடிக்கை என்னவென்றால், மகாபாரதத்தில் இப்படியொரு காட்சி கிடையாது. திரைப்படத்திற்காக சேர்க்கப்பட்ட கற்பனை இது. காவியங்களில் இல்லாத காட்சிகளைக் கற்பனையில் சேர்ப்பதில் கண்ணதாசன் கைதேர்ந்தவர்

ரோஜாவின் ராஜா என்றொரு படம்.சிவாஜியும் வாணிஸ்ரீயும்  காதலர்கள். சிவாஜியின் நண்பர் ஏவிஎம் ராஜன். பெண்பார்க்கப் போன இடத்தில் தன் காதலியையே நண்பனுக்குப் பெண்பார்க்க வந்திருப்பது நாயகனுக்குத் தெரிகிறது. பெண்ணைப் பாடச்சொல்லிக்கேட்பது அந்தக்காலத்துப் பழக்கம்.தன் நிலையையே பாடுகிறாள் நாயகி. சீதையின் சுயம்வரத்தையே உருவகித்துப் பாடுகிறாள்.

இராமனும் சீதையும் திருமணத்திற்கு முன்னரே ஒருவரையொருவர் பார்த்து இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர் என்பது வான்மீகியில் இல்லாத காட்சி. கம்பனின் கற்பனை. அதையே களமாக்கிப் பாடுகிறபோது கம்பன் கூட சொல்லாத ஒரு காட்சியைத் தன் கற்பனையில் உருவாக்கித்தருகிறார் கண்ணதாசன்.

ஜனகனின் மகளை மணமகளாக இராமன் நினைத்திருந்தான்-
ராஜாராமன் நினைத்திருந்தான்-அவள்
சுயம்வரம் காண மன்னவர் பலரும் 
மிதிலைக்கு வந்திருந்தார்....மிதிலைக்கு வந்திருந்தார் என்பது பல்லவி.

மணிமுத்து மாணிக்க மாடத்தில் இருந்து ஜானகி பார்த்திருந்தாள்-இரு
மைவிழி சிவக்க மலரடி கொதிக்க இராமனைத் தேடிநின்றாள்
நாணம் ஒருபுறம் ஆசை ஒருபுறம்
கவலை ஒருபுறம் அவள் நிலைமை திரிபுரம்
கொதிக்கின்ற மூச்சும் மாலையில் விழுந்து மணியும் கருகியதே-அவள்
கூந்தலில் இருந்த மலரும் ஜானகி நிலைமைக்கு உருகியதே
 இதுவரையில், பெண் இராமாயணத்தைப் பாடுவது போல்தான் தெரிகிறது. சுற்றியுள்ள மற்றவர்களுக்குத் தெரியாது.அடுத்த சரணம் ஆரம்பமாகிறது.

வந்திருப்பவனே மாப்பிள்ளை என்று பேசி முடிவுசெய்தால் என்ன செய்வது?  சபையில் தன் மனவோட்டத்தை அவள் மறைக்க முயல்கிறாள். முடிகிறதா??


நெஞ்சை நினைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை-அவள்
மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீர் மறைத்தும் மறையவில்லை
முனிவன் முன்புறம்-ஸ்ரீராமன் பின்புறம்
சீதை தனியிடம்-அவள் சிந்தை அவனிடம்
இதுவரை சீதையின் நிலையையும் நாயகியின் நிலையையும் சேர்த்தாற்போல் பாடுகிறார் கவிஞர்.. அடுத்து அவர் பாடுகிற கற்பனைதான் கம்பனில் கூட இல்லாதது.

மன்னவரெல்லாம் சுயம்வரம்நாடி மண்டபம் வந்துவிட்டார்-வேறு
மன்னவன் யாரோ வில்லை எடுத்தான் ஜானகி கலங்கிவிட்டாள் என்கிறார் கவிஞர்.

கம்பனைப் பொறுத்தவரை சுயம்வரத்திற்கு வந்தமற்றவர்களால் அந்த வில்லைஅசைக்கக்கூட முடியவில்லை. விசுவாமித்ரர்,இராமனை, சுயம்வரத்திற்கு வந்ததாகவே ஜனகனிடம் அறிமுகப்படுத்தவில்லை. இங்கு நடக்கும் விருந்தை வேடிக்கை பார்க்கத்தான் வந்தார்கள். உன் வில்லையும் ஒரு கை பார்ப்பார்கள் என்று கிண்டலாகச்சொல்கிறார் விசுவாமித்ரர்.
"விருந்து காணிய வந்தார்-உன் வில்லும் காண்பார்" என்பது கம்பன் வாக்கு. ஆனால் காதலன் முன்னிலையிலேயே வேறொருவன் பெண்பார்க்க வந்ததை, "வேறு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான் ஜானகி கலங்கி விட்டாள்" என்று கவிஞர் பாடும் உத்தி காட்சிக்குப் புதிய கனத்தையே கூட்டி விடுகிறது.

இன்னொரு பாடல்..
இராமன் சீதை சந்திப்பு மிதிலை வீதிகளில் எதிர்பாராமல் நிகழ்ந்ததாகத்தான் கம்பன் கூடப் பாடுகிறான். இருவரும் எதேச்சையாக சந்தித்த பிறகுதான் பாற்கடலில் பிரிந்தவர்கள் மீண்டும் கூடினால் அங்கே பேசவும் வேண்டுமோ என்கிறான் கம்பன்
"கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப்போய்
 பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ" என்பது கம்பனின் செஞ்சொற்கவி. .  
ஆனால் கண்ணதாசனோ,இராமன் வருகையை எதிர்நோக்கியே சீதை மாடத்தில் நின்றதாகப் பாடுகிறார்.கண்ணதாசன் கண்ட இராமன் முதல்சந்திப்பிலேகூட சீதைக்குப் புதியவனில்லை.அது எதிர்பாராத சந்திப்புமில்லை.

"அழகிய மிதிலை நகரினிலே
 யாருக்கு ஜானகி காத்திருந்தாள்?"
இது கவிஞர் எழுப்பும் கேள்வி.
"பழகும் இராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்"
இது அவரே சொல்லும் பதில்.

பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால்
பார்ப்பவர் மனதில் என்ன வரும்?
என்றொரு கேள்வியை எழுப்புகிற கவிஞர்,
இளையவர் என்றால் ஆசைவரும்
முதியவர் என்றால் பாசம்வரும்!"
 என்று தானே பதிலையும் சொல்கிறார்.

நெஞ்சிருக்கும் வரை படத்தில் கவிஞரின் பாடல் நினைவுக்கு வருகிறதல்லவா!  மணமகள் மேடைக்கு வரும்போது, கூடியிருந்த தாய்மார்கள்  எல்லாம் தங்கள் மகளே வருவதுபோல் மனமகிழ்ந்து பார்த்தார்களாம்

மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க
மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க
காதலாள் மெல்லக் கால்பார்த்து நடந்துவர
கன்னியவள் கைகளிலே கட்டிவைத்த மாலைதர..   என்ற பாடலுக்கு கவிஞருக்கு ஆதர்சமாக இருந்தவனும் கம்பன்தான்.

இராமனின் மணக்கோலத்தை வர்ணிக்கும்போது "மாதர்கள் வயதின்மிக்கார் கோசலை மனதை ஒத்தார்" என்பான் கம்பன்.

அக்காலம் அந்நாளில் அழகுவெண்ணெய்நல்லூரில் கம்பனது வீட்டில் கணக்கெழுதி வாழ்ந்தேனோ என்று தனிக்கவிதையில் எழுதினார் கவிஞர்.

கம்பன்மேல் அவருக்கு அவ்வளவு ஈடுபாடு!!

(தொடரும்..)

Wednesday, May 5, 2010

இப்படித்தான் ஆரம்பம் - 19


அழுத்தமாக ஒட்டிக் கொள்ளும் தரமான கோந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, தன் பொதுப்பங்குகளை அறிவிக்க முற்பட்ட போது தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பை மட்டுமின்றி பங்குகள் அறிவிப்பதையும் குறிக்கும் வி தமாக  விளம்பரம் வெளியிட விரும்பியது. நவீன ஓவியர் ஒருவரை அர்த்தநாரீசுவரர் ஓவியத்தை வரையச் சொல்லி அதன்கீழ் ஒரு வாசகம் எழுதினோம்....The Ultimate Bond என்று. ஒவ்வொன்றுக்கும் உச்சப் படிமம் ஒன்றுண்டு. ஒருங்கிணைப்பின் உச்சப் படிமம் அர்த்தநாரீசுவரர். Bond  என்கிற ஆங்கிலச் சொல்லின் இரண்டு அர்த்தங்கள் இங்கே கைகொடுத்தன. யானைகளின் உச்சம் ஐராவதம் என்பதாலும், பசுக்களின் உச்சம் காமதேனு என்பதாலும், "யானைகளில் நான் ஐராவதமாயிருக்கிறேன், பசுக்களில் நான் காமதேனுவாயிருக்கிறேன்" என்று கீதையில் கண்ணன் சொல்கிறார் என்பது ஓஷோவின் அபிப்பிராயம். தன்னுடைய ஆற்றலின் உச்சம் தொடும் ஒவ்வோர் உயிரிலும்  இறைத்தன்மை  வெளிப்படுகிறது என்பதுதான் இந்தக் கருதுகோளின் தாத்பர்யம்.

காதலியர் அனைவருமே தங்கள் காதலனில் கண்ணனைக் காண்கிறார்கள்
"காதல்கொண்டோர் சொல்லும் சொல்லென்னவோ -என்
 கண்ணா என்பாரன்றி வேறென்னவோ
சாதல் வந்தால்கூடக் கவலையில்லை-என்
சங்கீதம் அவனன்றி யாருமில்லை" என்று கவிஞர் ஒரிடத்தில் எழுதுகிறார்.

 காதலின் உச்சப் படிமம் கண்ணன்.காதல் என்ற சொல் எங்கெல்லாம் செல்லுபடியாகுமோ அங்கெல்லாம் இந்தப் படிமம் கவிஞரின்  பாடல்களில் வந்து விழுகிறது. இறைவனிடம் பக்தன் செலுத்தும் அன்பு, பிள்ளையிடம் தாய் செலுத்தும் அன்பு, காதலர்களிடையிலான அன்பு, என்று எல்லாவற்றிலும் கண்ணா என்ற சொல் கவிஞருக்குக் கைகொடுக்கிறது.
திரைப்படம் ஒன்றில் ஒரு பெண் தன் தாயைக் கனவில் கண்ட அனுபவத்தைப் பாடுவதாக கவிஞர் எழுதியிருப்பார். கனவில் வந்த அன்னைமுகம் எப்படியிருக்கும் என்கிற வர்ணனையும் அதிலே இருக்கும்.
 
 "குங்குமம் இருந்தது நெற்றியிலே -ஒரு
குழப்பம் இருந்தது கண்களிலே   
தங்கம் போன்ற இதழ்களிலே-ஒரு 
தயக்கம் பிறந்தது வார்த்தையிலே"

மனம் குழம்பியிருக்கும் நேரங்களில் மறைந்த குடும்பப் பெரியவர்கள் கனவில் வருவது பலருக்கும் நிகழ்ந்திருக்கக் கூடிய அனுபவம்தான். ஆனால்,படத்தில் இதைப் பாடுபவள் ஒரு பெண். அன்னையைக் கனவில் கண்ட அனுபவத்தை அவள் பல்லவியில் தொடங்குகிற விதமே புதுமையாய் இருக்கிறது.

"ஒருநாள் இரவு பகல்போல் நிலவு
 கனவினிலே என் தாய்வந்தாள்!
கண்ணா சுகமா?கிருஷ்ணா சுகமா?
கண்மணி சுகமா சொல்லென்றாள்"

பெண்ணை கண்ணா என்றும் கிருஷ்ணா என்றும் அன்னை கொஞ்சுவதன் அடிப்படையில் ஓர் உளவியல் உண்டு குழந்தைகள் இருக்கிற வீட்டில் கோகுலாஷ்டமி கொண்டாட்டம் விமரிசையாக இருக்கும். 
   அதுவரை வீட்டுக்குள் கண்ணன் பாதங்களைக் கோலமாய் வரைந்து கொண்டிருந்தவர்கள்,  குழந்தை வீட்டிலிருந்தால் அதன் பிஞ்சுப் பாதங்களைக் கோலமாவில் தோய்த்து வீடு முழுக்கப் பதிப்பார்கள். எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் இரண்டு வயதுக் குழந்தை ஒன்று பாதங்களைக்  கோலத்தில்  நனைத்து வீடு முழுக்கப் பதிக்கும்போது அழுது தீர்த்தது. தன் கால்களின் அச்சு  கீழே இருப்பதைப் பார்த்துவிட்டு, தனக்கு கால்கள் இனி கிடையாது என்று நினைத்துவிட்டது அது.


பெண் குழந்தைக்கும் கண்ணன் வேடமிட்டு புகைப்படம் எடுத்துக் கொள்பவர்கள் பலருண்டு. குழந்தையைக் கண்ணனின் அம்சமாகக் காண்பது நம் மரபு. பாஞ்சாலிக்கு கிருஷ்ணை என்றொரு பெயரும் உண்டு. எந்தத் தாயின் மனதிலும் தன் மகளை கண்ணனாகப் பார்த்த குழந்தை பருவ பிம்பம் மனதிலே பதிந்திருக்கக் கூடும். கதையின்படி கூட, இந்தப் பெண்ணுக்கே பாதுகாப்பற்ற மனவுணர்வின்போது தன் குழந்தை பருவத்தில் தாய் கொஞ்சிய கதகதப்பு கனவாக வெளிப்பட்டிருக்கக் கூடும். 

இதையெல்லாம் தாண்டி கவிஞர் கண்ணதாசனின் சொந்த அனுபவம் ஒன்றுண்டு. கண்ணனைப் போலவே கண்ணதாசனும் தத்துப் பிள்ளையாய்ப் போனவர்தான். பெற்றெடுத்த அன்னை, தத்தெடுத்த அன்னை இருவரும் மறைந்து நீண்ட காலங்களுக்குப் பிறகு, பெற்ற அன்னையைக் கனவில் கண்டாராம் கவிஞர். அந்தக் கனவு அவர் மனதில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

 ஒருநாள் இரவு பகல்போல் நிலவு
கனவினிலே என் தாய்வந்தாள் என்ற பல்லவிக்கு இதுதான் மூலம்.

 இப்படியிருக்க, ஆண்குழந்தையைக் கண்ணனாகக் காண்கிற மரபில் எந்த அதிசயமும் இல்லை. கண்ணனின் வடிவாய் மகனை கனிவுமிக்க தாய் பார்ப்பதற்கும், கண்டிப்புமிக்க தந்தை பார்ப்பதற்கும் இருக்கும் நுட்பமான வேறுபாட்டை தங்கப்பதக்கம் படப்பாடலில் காணமுடியும். குழந்தை பருவத்தில் இருவரும் குழந்தையைக் கண்ணனாகத்தான் பார்க்கிறார்கள்.

"தத்திச் செல்லும் முத்துக்கண்ணன் சிரிப்பு -அள்ளித்
தாலாட்டும் அன்னைபெற்ற மதிப்பு"
என்று மகனின் மழலைப்பருவம் கண்டுமனம் குளிர்ந்து போகிறார்கள்.  தந்தை காவல்துறை அதிகாரி. வளர்ந்த நிலையில்மகன் குற்றங்கள் செய்பவனாய் உருவெடுத்து வருகிறான். வீட்டில் நடக்கிற விருந்தொன்றில் குடும்பமே கூடிப் பாடுகிறது. தாய்பாடும் வரிகளில் சந்தோஷம் தெறிக்கிறது.தந்தையின் குரலில் சந்தேகமும் கண்காணிப்பும் தொனிக்கிறது.

"எங்கள் வீடு கோகுலம்
 என்மகன்தான் கண்ணனாம்
 தந்தை வாசுதேவனாம்
தங்கமான மன்னனாம்"

"வெள்ளம்போல ஓடுவான்
வெண்மணல்மேல் ஆடுவான்
கானம்கோடி பாடுவான்
கண்ணன் என்னைத் தேடுவான்"

என்கிறாள் தாய் .அவள் மனநிலையில் களங்கமற்ற கடவுளாகிய கண்ணனுக்கும் வேறுபாடே இல்லை.
"கோலம்கொண்ட பாலனே
கோயில் கொண்ட தெய்வமாம்
தாயின்பிள்ளைப் பாசமே
தட்டில்வைத்த தீபமாம்" என்று மகன்பால் நிபந்தனையில்லாத பாசமும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறாள் அன்னை. ஆனால் அப்பா அப்படியில்லை.மகனின்மேல் அவருக்குக் கொஞ்சம் சந்தேகம் உண்டு.

"மாயம் செய்யும் மகன்வந்ததும்
 ஆயர்பாடி பயம் கொண்டது
 அந்தப்பிள்ளை செய்யும் லீலை நானறிவேன்" என்கிறார் தந்தை.

 அந்த வரிகளின் அழுத்தம், நடனம் முடியும் தறுவாயில் வந்த ஓலையைப் படித்துக் கொண்டே மாடிக்குப் போய், காவல் சீருடை மாட்டிக் கொண்டு, கீழே வந்து, மகன் பக்கம் கைகாட்டி "அரஸ்ட் ஜெகன்" என்று சௌத்ரியாய் வரும் சிவாஜியின் கர்ஜனையில் புரியும்.

கண்ணனைக் கடவுளாகக் காண்பவர்களில் கூட, இருவேறு இயல்புகள் கொண்டவர்களைக் காட்டுகிறார் கவிஞர். கறுப்பு நிறப்பெண்ணொருத்தியை புறக்கணிப்பின் சூடு வருத்துகிறது.கருமைநிறக் கண்ணனிடம் முறையிடுகிறாள்.

"உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை-என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை"என்று மறுகுகிறாள்.

 அதேநேரம், வாழ்க்கை எத்தனை புயல்களை அனுப்பினாலும்,வாழ்க்கை அனுபவங்களும், வலிகளால் வாடாத வைராக்கியமான பக்தியும் என்னென்ன உறுதிகளை உள்ளத்தில் ஏற்படுத்தும் என்பதற்கும் ஒரு பாத்திரத்தையே சாட்சியாக்குகிறார் கவிஞர். திருநாவுக்கரசரின் தேவாரத்தில் வருகிற ஒரு வரி, "ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே". அதையே பல்லவியாக்கி எழுதும் பாடலில் கவிஞர் சொல்கிறார்:

"கடலளவே ஆனாலும் மயங்க மாட்டேன் -அது
கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா-இதை
உணர்ந்துகொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா"

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்-அந்தப்
பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையிலுன்னை என்ன கேட்பேன்-இன்னும்
நன்மைசெய்து துன்பம் வாங்கும் உள்ளம்கேட்பேன்"

புகார் சொல்லாத இந்தப் பக்குவம்தான்,பயன்கருதாத பக்தியின் பரிசு.
காதலனைக் கண்ணனாகக் காணும் ஏராளமான பாடல்களைக் கவிஞர் எழுதியிருக்கிறார். அவற்றில் என்னைப் பெரிதும் கவர்ந்தபாடல் இது. காதலர்கள்  பிரிகிறார்கள். இவளுக்கு வேறொரு முரடனுடன் திருமணமாகிறது. குழந்தையும் பிறக்கிறது. அந்தக் குடியிருப்புப்  பகுதியிலேயே காதலன்  வசிக்க வருகிறான்.அவன் புல்லாங்குழல் கலைஞன். குழந்தைக்குத்  தாலாட்டு பாடிக்கொண்டே தன் கதையையும் கூறுகிறாள் .

"இப்படியோர் தாலாட்டு  பாடவா-அதில்
அப்படியே என்கதையைக் கூறவா?
கைப்பிடித்த நாயகனும் காவியத்து நாயகனும்
எப்படியோ வேறுபட்டார் என்மடியில் நீவிழுந்தாய்" என்பது பல்லவி.

"அன்றொருநாள் மீராவும் கண்ணனை நினைந்தாள்-ஏனோ
அவளுடைய தலையெழுத்து மன்னனை மணந்தாள்
அதுவரைதான் தன்கதையை என்னிடம் சொன்னாள்-நான்
அதிலிருக்கும் என்கதையை உன்னிடம் சொன்னேன்"


என்ற வரிகளில்,  இணைய முடியாத நிலையிலும் இருவரும் இதயத்தால் பிரியாத உயிர்ப்பான காதல் உணர்த்தப்படுகிறது. குழந்தையைத் தொட்டிலில் போட்டுவிட்டு கைவேலையாய் நகர்கிறாள். குழந்தை அழுகிறது. அருகிலுள்ள வீட்டிலிருந்து அவன் குழல் வாசிக்கிறான். குழலிசை கேட்டபடியே குழந்தை துங்கி விடுகிறது. தூங்கிவிட்ட குழந்தையைப் பார்த்துக்கொண்டே தூங்காத தன் காதலைப் பாடுகிறாள் நாயகி. 

"கண்ணனவன் கைகளிலே குழலிருந்தது-அந்த
கானம்தானே மீராவைக் கவர்ந்துவந்தது
இன்றுவரை அந்தக்குழல் பாடுகின்றது-அதன்
இன்னிசையில் என்குழந்தை தூங்குகின்றது"

கடவுளோ, காதலனோ, குழந்தையோ... அவர்களை முன்னிறுத்தி, தங்களுக்குள் ஊற்றெடுக்கும் அன்பின் உச்சத்தைத் தொட ஒவ்வொருவரும் தவிக்கிறார்கள். எனெனில் அந்த அன்பின் உச்சத்தில் தெய்வசுகம் இருக்கிறது. அந்த சுகத்தின் குறியீடு கண்ணன். கண்ணனுக்கு தாசன்..கண்ணதாசன்!!

(தொடரும்..)