Thursday, March 25, 2010

இப்படித்தான் ஆரம்பம் - 12

ஒருபுறம் உலக இன்பங்களைத் துய்ப்பதில் கண்ணதாசன் காட்டிய ஈடுபாடும், மறுபுறம் கண்ணனில் மூழ்கித் திளைத்த மனப்போக்கும், வாழ்க்கை அனுபவங்களை சாட்சிபூர்வமாகப் பார்க்கும் சமநிலையை அவரிடம் ஏற்படுத்தியிருந்தது. கண்ணனின் வாழ்வில் நடந்ததாக சொல்லப்படும் சில சம்பவங்களின் ஊடே புகுந்து நிகழ்காலம் குறித்த சில சுவையான பிரகடனங்களைக் கவிஞர் வெளிப்படுத்துவார். இலக்கண பாஷையில் இதைத் தற்குறிப்பேற்றம் என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம்.ஆனால் அதையும் தாண்டிய அபூர்வமான தொடுகை ஒன்றில் அவர் கவித்துவமாய் சில மாயங்களைச் செய்வார். தண்ணீர்ப்பாம்பில் ஏன் விஷமில்லை என்பதற்குஅவர் சொல்லும் காரணத்தை கிருஷ்ணகானத்தில் கேட்டிருப்பீர்கள்.

"கண்ணனவன் நடனமிட்டு காளிந்தியைக் கொன்றபின்தான்
தண்ணிப் பாம்பில் நஞ்சு இல்லை ராமாரி!-அவன்
கனியிதழில் பால்குடித்து பூதகியைக் கொன்ற பின்தான்
கன்னியர்பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி
ராமாரி-ஹரே-கிருஷ்ணாரி"

இது மிகவும் கோலாகலமான பாடல். வாழ்க்கையில் புரிதல் அடிப்படையில் சில சம்பவங்கள் நம்மை மயக்கும். உணர்தல் அடிப்படையில் சில சம்பவங்கள் நம்மை மயக்கும். உள்மனதில் ஊற்றெடுக்கும் காதலிலோ பக்தியிலோ சில பரவசமான பொற்கணங்கள் பூப்பதுண்டு. புரியவைக்க முயன்றால் அது பெருந்தோல்வியில் முடியும். ஏனெனில் அது உணர்தலின் பாற்பட்டது. தத்துவத் தேடலில் முதல் கேள்வி என்ன என்றொரு சீடர் ஜென் குருவிடம் கேட்டாராம்.அதற்கு அந்த குரு, "முதல் கேள்வியை உனக்கு நான் சொன்னால் அது இரண்டாவது கேள்வியாகிவிடும்" என்றாராம். முதல் கேள்வியின் தீவிரம் கேட்கப்படுவதல்ல-அது ஒரு வேட்கை என்பார் ஓஷோ. தாகம் புரிதலின் எல்லைக்குள் வராதது.உணர்வில் மட்டும் உன்னதங்களை நிகழ்த்துவது. அப்படி சில நிமிஷங்களை இந்தப் பாடலில் எழுதியிருப்பார் கவிஞர்.

"குளத்தில் முங்கிக் குளிக்கையிலே கோவிந்தன் பேரைச் சொன்னால்
கழுத்திலுள்ள தாலி மின்னுது ராமாரி-சேலை
திருத்தும்போது அவன்பெயரை ஸ்ரீரங்கா என்றுசொன்னால்
அழுத்தமான சுகமிருக்குது கிருஷ்ணாரி
ராமாரி-ஹரே-கிருஷ்ணாரி"

இந்த வரிகளைப் புரியவைக்க முயன்றால் அது மிக அபத்தமான முயற்சியாகப் போகும். பொழிப்புரைகளுக்கு எட்டாத பொழிவு இது. பக்தியை ஓர் இயக்கமாக ஏற்படுத்தியவர்கள் மக்கள் மத்தியில் தங்கள் நம்பிக்கைகளைக் கொண்டுசேர்க்க, சில அற்புதங்களை மையமிட்டுத் தொடங்குவார்கள்.பின்னர் அவர்களுக்கும் இறைவனுக்கும் இடையே அந்தரங்கமான உரையாடல் நிகழத் தொடங்கும். மேலே சொன்ன வரிகள் அந்த அந்தரங்க உணர்வின் வெளிப்பாடுகள்.ஆனால் இந்தப் பாடல், கண்ணனின் அற்புதங்களைப் பொதுவில் பாடிக்கொண்டாடும் விதமாகத்தான் தொடங்குகிறது.

கோகுலத்துப் பசுக்களெல்லாம் கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால்கறக்குது ராமாரி-அந்த
மோகனனின் பேரைச்சொல்லி மூடிவைத்த பாத்திரத்தில்
மூன்றுபடி நெய்யிருக்குது கிருஷ்ணாரி
ராமாரி-ஹரே-கிருஷ்ணாரி

பக்தியில் ஈடுபடும் மனம் பொதுத்தன்மையிலிருந்து தனித்த அனுபவம் நோக்கி நகரவதன் படிநிலைகள் இந்தப் பாடலில் படிப்படியாக வெளிப்படுவதைப்பார்க்கலாம்.


"கண்ணனவன் நடனமிட்டு காளிந்தியைக் கொன்றபின்தான்
தண்ணிப் பாம்பில் நஞ்சு இல்லை ராமாரி"

என்ற வரி எனக்குள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.அதன் விளைவாக புதுக்கோட்டை கம்பன் கழகம் கேட்டுக்கொண்டபடி, அவர்களின் மலருக்காக கம்பன் பற்றி ஒரு கவிதை எழுதினேன்.

'காற்றிலாடும் பனைமரங்கள் கனவுகண்டன
கற்பகமாய் மலர்வதுபோல் நினைவு கொண்டன
நோற்பதுபோல் ஒற்றைக்காலில் நின்றிருந்தன
நனவாகும் நமதுகனா என்றிருந்தன

சாமமாகும் போதுகூட விழித்திருந்தன
சாவிலாத வாழ்வுகாணத் துடித்திருந்தன
ராம ராம என்றுசொல்லி ஜபித்திருந்தன
நாமம்சொல்லும் பரவசத்தில் லயித்திருந்தன
உதயவேளை தன்னிலங்கே ஒருவன் தோன்றினான்
ஓலைகளைப் பறித்தெடுத்துக் கொண்டுபோயினான்
பதப்படுத்தி ஆணிதொட்டு வரையலாயினான்
புண்ணியப்பூங் கவிதைகளைப் புனையலாயினான்

தேனலைகள் புரண்டெழுந்து திசைநனைத்தன
தெய்வங்களும் இறங்கிவந்து தமிழ்படித்தன
கானம்பாடும் பறவைகளும் குரல்கொடுத்தன
'கம்பநாடன்'என்றுசொல்லிச் சிறகசைத்தன

ஓலைகளில் அமுதவாரி ஊற்றெழுந்தது                       
உலகமெங்கும் கவிதையின்பக் காற்றெழுந்தது
காலம்நின்று பார்த்துவிட்டுக் கால்நடந்தது
தேரெழுந்தூர் தச்சன்செய்த தேரசைந்தது

பனைமரங்கள் அவனிடத்தில் பக்திகொண்டன
பாட்டரசன் தொட்டவையோ முக்தி கொண்டன
கனவு நனவானதென்று கண்டு கொண்டன
கவியமுதை ஓலைகளில் மொண்டு தந்தன

கம்பநாடன் விழிமலர்கள் கருணை தந்தன-அவன்
கவிதைகள்தாம் பனையின் நுங்கில் சுவையும் தந்தன
அன்றுமுதல் பனைமரங்கள் உயரமாயின
விண்ணிலுள்ள கம்பனுக்கு விசிறியாயின"

கண்ணதாசனின் தற்குறிப்பேற்ற உத்தியைப் பின்பற்றி எழுதிப்பார்க்கும் ஆசையால் எழுந்தகவிதை இது.(இந்தக் கவிதையில் கவிஞர் வைரமுத்து சொன்ன கருத்தின் அடிப்படையில் இரண்டுவரிகளை மாற்றியது பற்றி 'ஒரு தோப்புக் குயிலாக' நூலில் எழுதியிருக்கிறேன்) கவிதை எழுதுவதில் மட்டுமின்றி,அப்போது நான் மேற்கொண்ட விளம்பர எழுத்தாளர் பணியிலும் புதுமைகள் செய்ய கண்ணதாசனின் உத்திகள் மிகவும் உதவியாய்இருந்தன.

விளம்பர வாசகங்கள் எழுதித் தருபவர்களை அந்தத் துறையில் 'காப்பி ரைட்டர்' என்பார்கள்.காப்பி ரைட்டர் என்ற சொல் பொதுவில் பலருக்கும் புரியாது. படியெடுத்து எழுதுகிற வேலை என்று நினைத்துக் கொண்டு, "ஏன்! உங்க ஆபீஸிலே ஜெராக்ஸ் மெஷின் கிடையாதா?"என்று அனுதாபத்துடன் விசாரிப்பார்கள். விளம்பர எழுத்தாளர் என்றாலும் விளங்காது. சிலர்,சுவரில் விளம்பரம் எழுதும் வேலை என்று நினைக்கத் தொடங்கினார்கள். இப்படியே விட்டால் சரிப்படாதென்று தோன்றியது. ஒரு தயாரிப்பை சிலாகித்து எழுதுகிற வேலைதான் காப்பிரைட்டர் வேலை என்பதை உணர்த்துவதற்காக,என் பதவியைக்குறிக்கும் விதமாய் சமஸ்கிருதத்தில் ஒரு பதத்தை உருவாக்கினேன். 'சிலாகித்ய வாக்ய சிருஷ்டி கர்த்தா' என்று சொல்லத் தொடங்கினேன்.இப்போதும் யாருக்கும் புரியவில்லை.ஆனால் மரியாதையாகப் பார்த்தார்கள்.


விளம்பரங்கள் எழுதுவது சில சமயங்களில் ஆங்கிலத்தில் இருப்பதை மொழிபெயர்ப்பதாகத்தான் இருக்கும்.ஏனென்றால் எல்லா மொழிகளிலும் விளம்பரங்கள் ஒரே நேரத்தில் வெளியாகும்.அதனால்மூலக்கருவை ஆங்கிலத்தில் உருவாக்கிக் கொண்டு வெவ்வேறு மொழிகளில் மாற்றிக் கொள்வார்கள்.வரிக்குவரி மொழிபெயர்க்காமல் முடிந்தவரை தமிழிலேயே உருவாக்கப்பட்ட தொனியை விளம்பரங்களில் கொண்டு வந்துவிடுவேன்.The pride posession of a privileged man என்ற வாசகத்திற்கு நான் செய்த மொழிபெயர்ப்பு "பீடுமிக்க ஆடவரின் பெருமைகளில் ஒன்று". விளம்பரப்படுத்தப்பட்ட பொருள் என்னவென்று சொல்லவில்லையே..ஆண்களின் உள்ளாடை!. Bare essentials என்று பொஸிஷனிங் செய்திருந்தார்கள். அதற்கு தமிழில் நான் கொடுத்த வாசகம் "அந்தரங்க சொந்தம்". எல்லாம் கவிஞரின் தாக்கத்தில்தான்...

(தொடரும்...)

Tuesday, March 23, 2010

இப்படித்தான் ஆரம்பம்-11

கண்ணன் மீதான கண்ணதாசனின் ஈடுபாடு,அவருடைய புனைபெயருக்கும் பிந்தியது. பத்திரிகை ஒன்றில் வேலை தேடிப்போன போது,"என்ன புனைபெயரில் எழுதி வருகிறீர்கள்?"என்று பத்திரிகை ஆசிரியர் கேட்டாராம்.கம்பதாசன்,வாணிதாசன்
போன்ற பெயர்கள் அப்போது பிரபலமாக இருந்ததால்,சிறிது யோசித்துவிட்டு "கண்ணதாசன்"என்று சொல்லிவிட்டாராம்.பத்திரிகை ஆசிரியர் "ஆமாம் !பார்த்திருக்கிறேன்"என்று வேறு சொன்னாராம்.


அந்தக் காலங்களில் கண்ணதாசனுக்குக் கண்ணன் மீது பெரிய பக்தி இருந்ததில்லை.
காலப்போக்கில் கிருஷ்ணபக்தராகவே கனிந்தார் கண்ணதாசன்.தன்னிடம் வாக்களித்துவிட்டு வேறொருவருக்கு வாடகைக்கு விட்ட ஸ்டூடியோ அதிபரிடம்
'உன் ஸ்டூடியோ தீப்பிடித்து சாம்பலாகப் போகும்'என்று சாபமிட்டு கண்ணதாசன் வீடு திரும்பினாராம். வீட்டுக்குள் வந்ததுமே,மின்கசிவினால் அந்த ஸ்டூடியோ தீப்பிடித்ததாகத் தொலைபேசியில் செய்தி வந்ததாம்
"கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்"என்று கவிஞர் எழுதிய பல்லவிக்கு இது போன்ற சம்பவங்களே காரணம் என்று அவரே எழுதியிருக்கிறார்.

கண்ணனை, மிக அந்தரங்கமான துணையாய் அவர் உணர்ந்திருக்கிறார்.தனிக்கவிதை ஒன்றில் இதனைப் பதிவு செய்தும் இருக்கிறார்.

"நள்ளிராப் போழ்தினில் நானும் என் கண்ணனும்
 உள்ளுறும் பொருள்களை உரைப்பதும் உண்டுகாண்!
கள்ளினும் இனிய என் கண்ணன் சொல்வது
'பிள்ளைபோல் வாழும்நீ பிதற்றலும் கவிதையே"
என்று கண்ணனுக்கும் தனக்குமான உரையாடலை எழுதுகிறார்.

ஸ்ரீகிருஷ்ண போதையின் உச்சத்தில் ஓரிரு நாட்களுக்குள் எழுதப்பட்ட பாடல்கள் கிருஷ்ணகானம் இசைத்தொகுப்பில் உள்ளவை.ஒவ்வோர் இசைக்கலைஞரும்
உருகி உருகிப் பாடியிருப்பார்கள்.

உள்ளே முழு விழிப்புநிலையில் இருப்பதையே பரந்தாமனின் அரிதுயில் என்று வைணவம் சொல்கிறது.அறிதுயில் என்கிற தத்துவத்தை அனாயசமாகப் பாடுகிறார் கண்ணதாசன். பாட்டு என்னவோ தாலாட்டுப் பாடல்தான்.

'ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில்
கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ"

என்ற பாட்டு. அதில்...

'நாகப்படம் மீதிலவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டான் தாலேலோ!அவன் மோகநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்,யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ"

என்கிற  வரிகளில் தத்துவத் தெறிப்பும் தாய்மைத் தவிப்பும் சேர்ந்து விளையாடும்.

பெரியாழ்வார் ஒரு சித்திரத்தைக் காட்டுகிறார்.கண்ணன் யசோதையிடம் முலையமுதம் உண்டு முடித்ததும் அவனைத் தங்கள் வீட்டுக்கு அள்ளிப்போக பெண்கள் காத்திருக்கிறார களாம்.அவர்களின் வாழ்க்கை இலட்சியமே ,கண்ணனைப்போலொரு குழந்தையைப் பெறுவதுதான்.

"பெண்டிர் வாழ்வார் நின்னொப்பாரைப் பெறுதும் என்னும் ஆசையாலே"

கண்ணனைப் போல் ஒரு பிள்ளை பெறுவது சாத்தியமில்லையே! அதனால்
கண்ணனைக் கொஞ்சி,அவனை முத்தமிடச் சொல்லி ரகசியமாய்க் கெஞ்சத்தான்
அவனை பெண்கள் வீட்டுக்குக்குத் தூக்கிப் போவார்களாம்.

"வண்டுலாம் பூங்குழலினார் உன் வாயமுதம் உண்ணவேண்டி
கொண்டுபோவான் வந்து நின்றார் கோவிந்தாநீ முலையுணாயே"
என்பது பெரியாழ்வார் பாடல்.

"கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ-அவன்
பொன்னழகைப் பார்ப்பதற்கும் போதைமுத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ" 

என்ற கண்ணதாசனின் வரிகள் எனக்குப் பெரியாழ்வாரை ஞாபகப்படுத்தும்.
(பெரியாழ்வாரை ஞாபகப்படுத்துவதில் இருபத்தோராம் நூற்றாண்டின் தாய்மார்களும்

சளைத்தவர்களில்லை.அதிகாலையில் குழந்தைகளை அரைத்தூக்கத்தில் எழுப்பி,அலற அலறக் குளிப்பாட்டி,அழுவதற்காகத் திறந்த வாய்க்குள் இட்லியைத் திணித்து,குழந்தையையே சீருடைக்குள் திணித்து,வாசலில் அலறும் ஹாரன் சத்தம் கேட்டு குழந்தையை புத்தகமூட்டையோடும் சாப்பாட்டு மூட்டையோடும் ஆட்டோவில் திணித்து,ஆட்டோ நகர நகர,அழுது கொண்டே கையசைக்கும் குழந்தையைப் பார்த்து கண்களைத் துடைத்துக் கொண்டே உள்ளே போகும் தாய்மார்களை வீதிதோறும் பார்க்கிறீர்கள்தானே!இதை ஒரே வரியில் பெரியாழ்வார் படம் பிடித்திருக்கிறார்."தம்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மார் ஆவர் தரிக்க இல்லார்" என்கிறார் பெரியாழ்வார்)

கண்ணதாசனின் கிருஷ்ண கானங்களில் தாய்மையுண்ர்வு தூக்கலாக இருக்கும். குறிப்பாக,

"குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்"
என்ற பாடல்.

குருவாயூர்க் கோவிலில் கண்ணன் கருவறையில் மட்டுமா காட்சி
தருகிறான்?இல்லை என்கிறார் கண்ணதாசன். குழந்தைக்கு முதல்முதலாக சோறூட்டும் வைபவம்குருவாயூரில்  தினமும் நடக்கும்.
கண்ணனைக் காண்பது கருவறையில் மட்டுமில்லையாம்

குருவாயூருக்கு வாருங்கள் -ஒரு
குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்
ஒருவாய் சோறு ஊட்டும் தாய்முன் 
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்
என்கிறார் கவிஞர்.

தன் குழந்தையைப் பார்த்து சிலிர்ப்பவள் தாய்.எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் சிலிர்ப்பதே தாய்மை.அதுவே பிரபஞ்சத் தாய்மை.யசோதை கண்ணனை வாய்திறக்கச் சொன்னபோது உள்ளே பிரபஞ்சமே தெரிந்ததாம்.அந்த விநாடியில் யசோதை பிரபஞ்சத்தையே தன் குழந்தையாக உணர்ந்திருப்பாள். சராசரியான தாய்க்கு தன் பிள்ளையே பிரபஞ்சம்.புவனம் முழுதுடைய தாய்மைக்கு பிரபஞ்சமே பிள்ளை. இந்த உணர்வை ஊட்டத்தான் கண்ணனும் கந்தனும் குழந்தைகளாகக் காட்சி தருகிறார்கள். குருவாயூர்ப் பாலகனுக்கு ஒவ்வொரு பொழுதுக்கும்  ஒவ்வோர் அலங்காரம் நடக்கிறது. அதைப்பார்க்கும் போது தாய்மைக்கு என்ன நிகழ்கிறது?
கவிஞர் எழுதுகிறார் பாருங்கள்:

உச்சிக் காலத்தில் ஸ்ருங்காரம்-அவன்
ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்
பச்சைக் குழந்தையைப் பார்க்கும் போதே
பாவையர் தாய்மை ரீங்காரம்.

நம்மில் இருக்கும் தாய்மை உணர்வைத் தூண்டி ரீங்காரமிடச் செய்வதுதானே கடவுளின் கனவு!!

(தொடரும்)

Sunday, March 21, 2010

இப்படித்தான் ஆரம்பம்-10

மாநிலந் தழுவிய இயக்கமொன்று கண்ணதாசன் பெயரில் உருவாக வேண்டுமென்று கனவு கண்டவர்களில்  முக்கியமானவர்,மதுரையைச் சேர்ந்த திரு.இரா.சொக்கலிங்கம்."மனிதத் தேனீ'"என்பது இவருக்குத் தரப்பட்ட பட்டப்பெயர்.மிகவும் சுறுசுறுப்பானவர்.மதுரை கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர்.1994 என்று ஞாபகம்.திரு.தமிழருவி மணியனின் "கம்பன் காட்டும் இந்திரசித்தன்" நூல் வெளியீட்டு விழா முடிந்து இரவு பத்து மணியளவில் இதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.பீளமேடு பேரவை நண்பர்கள் வந்திருந்தார்கள்.

கண்ணதாசனை மையமாகக் கொண்டு தொடங்கப்படுவது,நிச்சயம் இலக்கிய அமைப்பாகத்தான் இருக்க முடியும்.சமூக மாற்றங்களை முன்னெடுக்கும் அமைப்பாகவோ,அரசியல் அமைப்பாகவோ உருவாக வாய்ப்பில்லை.கம்பன் கழகம் போல் இந்த அமைப்பு செயல்படும்.இதற்கு மாநிலந்தழுவிய நிரல் எதுவுமில்லை என்று தோன்றியது.எனவே இந்த ஆலோசனையில் நான் அதிக ஆர்வம் காட்டவில்லை.இரவு 12 மணியளவில் இந்தக் கூட்டம் முடிவடைந்தது.


கண்ணதாசனுக்கு பொதுமக்கள் மத்தியில் உள்ள அபரிமிதமான செல்வாக்கையே களமாக்கிக் கொண்டால் போதும்.ஓரிரு ஆண்டுகளுக்கு முன் கோலலலம்பூரில் கண்ணதாசன் அறவாரியத்தின் செயலாளர் கரு.கார்த்திக்கிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார்,"இங்கனக்குள்ள கண்ணதாசன் விழா நடக்குதுன்னு ஒரு தட்டி எழுதி வைச்சாக்கூட போதும்ணே!சாயங்காலம் ஒரு ஐந்நூறு பேரு வந்திடுவாஹ"என்று.உண்மைதான்.

கண்ணதாசனைக் கொண்டாடுவது மிக இயல்பான எளிதான விஷயம்.பீளமேடு கண்ணதசன் பேரவை நண்பர்கள் விழா தொடங்கும்போது "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே"என்ற பாடலைப் பாடுவார்கள்.

தங்களுக்குப் பாடத் தெரியாதே என்பது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.பாடலின் இறுதியில் "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே !எங்கள் கண்ணதாசன் புகழ் பாடுங்களேன்" என்று முடிக்க வேண்டும்.அதுதான் அவர்களுக்கு முக்கியம்.அப்போதெல்லாம் திரைப்பாடல்களைப் பட்டிமண்டபங்களில் பாடுபவர்கள் மிகக் குறைவு.பேரா.சரசுவதி ராமநாதன்,புலவர்.கோ.சாரங்கபாணி.திருமதி.சி.எஸ்.விசாலாட்சி,என்று விரல்விட்டு எண்ணிவிடலாம்.அவர்களும் நான்கு வரிகளைப் பாடிவிட்டு விஷயத்திற்கு வந்து விடுவார்கள்.

அந்தத் தாக்கத்தில் நான்கூட கண்ணதாசன் பட்டிமன்றம் ஒன்றில் நான்கு வரிகள் பாடிக் காண்பித்தேன்.அடுத்து கோவையைச் சேர்ந்த கவிஞர் உமாமகேஸ்வரி பேச வந்தார்.எடுத்த எடுப்பிலேயே மிக அமைதியாக ஆரம்பித்தார்.அப்போதே எனக்கு சந்தேகம்."நான் பல மேடைகளில் மரபின்மைந்தன் பேசிக் கேட்டிருக்கிறேன்.இன்றுதான் பாடிக் கேட்கிறேன்." சில விநாடிகள் அமைதி காத்துவிட்டு அடுத்த வரியைச் சொன்னார்.."இரண்டுக்கும் அதிக வித்தியாசமில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்'. இப்படி ஆளுக்காள் அநியாயத்திற்கு உண்மை சொல்லத் தொடங்கிய பிறகு நான் மேடைகளில் பாடிக்காட்டும் முயற்சியைக் கைவிட்டு விட்டேன்.


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடல் பற்றியும் நான் மேடைகளில் சொல்வதுண்டு.பட்டுப்போன மூங்கில்தான் புல்லாங்குழல் ஆகும்.புல்லாங்குழல்தான் புருஷோத்தமனைப் பாடும்.ஆனால் கவிஞரோ 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்'என்று எழுதுகிறார்.ஒவ்வொரு மூங்கிலுக்கும் புல்லாங்குழல் ஆக வேண்டும்,பரந்தாமன் கைகளில் தவழ வேண்டும் என்ற கனவு இருக்கும்.மூங்கில்,இந்த இடத்தில் மனிதனுக்கான குறியீடு.பட்டுப்போன மூங்கில் புல்லாங்குழலாவது போல உலக ஆசைகள் பட்டுப்போன மனிதன் பரம்பொருளைச் சேர்கிறான்.எனவே மூங்கில்கள் புருஷோத்தமனைப்பாடி தாங்களும் புல்லாங்குழல்களாவதற்குத் தவம் செய்ய வேண்டும்.
இந்த வரிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு.பகவத்கீதையில்,கண்ணன்,பசுக்களில் காமதேனுவாயிருக்கிறேன்,யானைகளில் ஐராவதமாயிருக்கிறேன்,என்றெல்லாம் சொல்வான்.அப்படியானால்,மற்ற பசுக்களிலும் யானைகளிலும் கண்ணன் இல்லையா என்றொரு சீடர் கேட்ட கேள்விக்கு ஓஷோ ஒரு விளக்கம் தருவார். பசு என்ற படைப்பின் உச்சம்,காமதேனு.
யானை என்கிற படைப்பின் உச்சம்,.ஐராவதம்.உண்மையில் ஒவ்வொரு பசுவும் காமதேனுவாகிற சாத்தியத்துடன் படைக்கப்பட்டதுதான்.ஒவ்வொரு யானையும் ஐராவதமாகும் சாத்தியமும் சக்தியும் கொண்டதுதான்.தன் படைப்பின் உச்சத்தை உனர்பவர் யாரோ அவருக்குள் இறைத்தன்மை அல்லது விழிப்பு நிகழ்கிறது.தன்னை உணர்ந்த ஒவ்வோர் உயிரிலும் இறைவன் உண்டு என்பார் ஒஷோ.மூங்கிலின் உச்சம்,புல்லாங்குழலாவது.அதற்கு வழி புருஷோத்தமனைப் பாடுவது.
அடுத்த வரியில் "வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே !எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்"என்கிறார் கவிஞர்.மலர்களில் இருக்கும் மது தேடி வண்டுகள் வருகின்றன.நந்தவனம்,இந்தப் பிரபஞ்சத்தைக் குறிக்கிறது.மலரில் உள்ள மது,உலக இன்பங்களுக்கும் வண்டுகள் மனிதர்களுக்குமான குறியீடு.
உலக வாழ்வின் இன்பங்களை நுகர்வதை விட்டு விட்டு,மதுசூதனன் என்கிற தெய்வீகத் தேன்துளியைத் தேடச் சொல்கிறார் கவிஞர்.கண்ணனின் திருவுருவை,"கார்மேனி'என்று வர்ணிப்பது வைணவ இலக்கியங்களில் நிறைய உண்டு.
அந்த மேகங்கள்,கண்ணனின் திருவுருவ அழகுக்கு ஈடுதர முடியாமல்,அதில் ஈடுபட்டு புகழ்ந்துபாட வேண்டுமாம்."பன்னீர் மலர்சொரியும் மேகங்களே!எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களேன்" என்கிறார் கவிஞர்.

திருவரங்கத்தில்.பெருமாள் தெற்குநோக்கி,வடதிசைக்கு முதுகுகாட்டிப் பள்ளிகொண்டிருக்கிறார்.தெற்குத்திசை,ஆழ்வார்களின் ஈரப்பசுந்தமிழ் படிந்தமையால் தென்திசையைப் பார்த்துப் பள்ளி கொண்டிருக்கிறான் பரந்தாமன் என்று வைணவ உரையாசிரியர்கள் குறிப்பிடுவார்கள். தென்திசைக்கு அப்படியொரு பெருமை.பாடலின்
நான்காவது வரியில்.'தென்கோடித் தென்றல்தரும் ராகங்களே!எங்கள் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்' என்கிறார் கவிஞர்.
இந்தப் பாடலில்தான் பெருமாளின் நின்ற கோலம்,இருந்த கோலம்,கிடந்த கோலம் ஆகியவற்றுடன் நில்லாமல் தவழ்ந்த கோலத்தையும் பாடுகின்றார்.


"குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் -ஒரு

கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்

திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் -அந்த

ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்.
பாரதக்கதையின் நான்குவரிச் சுருக்கமும் இந்தப் பாட்டில் உண்டு.

பாஞ்சாலி புகழ்காக்கத் தன்-கை கொடுத்தான் -அன்று
பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் -நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்.
ஸ்ரீ கிருஷ்ண கானத்தின் ஒவ்வொரு பாட்டும் இப்படி நயங்களின் சுரங்கம்தான்!!

(தொடரும்)

Monday, March 8, 2010

இப்படித்தான் ஆரம்பம் -9

கடைக்கோடி மனிதனின்மனசு வரைக்கும் கண்ணதாசன் ஊடுருவியிருப்பதுபோல் இன்னொரு கவிஞர்
ஊடுருவியிருப்பாராஎன்பது சந்தேகமே.கண்ணதாசனின் இந்த வெற்றிக்கு என்ன காரணம் என்று பலமுறை யோசித்திருக்கிறேன்.
மனித சமூகத்திற்கு எப்போதுமே இரண்டுபேர் தேவை.ஓர் உல்லாசி.ஓர் உபதேசி.தமிழ்ச்சூழலில் இந்த இரண்டுமாக இருந்தவர் கண்ணதாசன்.மிதமிஞ்சிய உல்லாசங்களே உபதேசங்களை உருவாக்குமல்லவா?
இன்றும் சமூகம் வாழ்வைத் துய்ப்பவனை வியப்போடு பார்க்கிறது.வாழ்க்கை என்றால் என்னவென்று விளக்குபவனை மதிப்போடு பார்க்கிறது.

வியப்போடும் மதிப்போடும் கண்ணதாசனை ஆராதித்த பீளமேடு கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை நண்பர்கள் கண்ணதாசனைப் போலவே வெள்ளந்தி மனிதர்கள்.கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள காமராஜ் சாலையில் கண்ணதாசன் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் அவருடைய படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும்.கண்ணதாசன் விழாக்களின் போது அடிப்படை ஏற்பாடுகளில் அந்தப் பகுதி பொதுமக்களும் தாங்களாக வந்து பங்கேற்பார்கள்.

கண்ணதாசனை நான் ரசித்து ரசித்துப் பேசப் பழகியது கூட அவர்கள் மத்தியில்தான்.கண்ணதாசனின் கவிதைகளில் திளைத்திருந்த நான் அவருடைய திரைப்பாடல்களின் ஆழ அகலங்களை அறிந்ததும் பகிர்ந்ததும் அங்கேதான்.ஒரு பாடலை,பகுதி பகுதியாகப் பிரித்துக்கொண்டு அவற்றின் இடையே
கண்ணுக்குப் புலப்படாத கவித்துவச் சங்கிலியால் கண்ணதாசன் இணைத்திருக்கும் நுட்பங்களை நான்
இனங்கண்டதும் அங்கேதான்

தம்பதிகள் மத்தியிலான நெருக்கத்தை கவிஞர் சொன்ன பாணி பற்றி அவர்களிடையே ஒருமுறை சொன்னேன்.
"வண்டு வருகின்றது-மலரில் அமர்கின்றது-உண்டு சுவைக்கின்றது-உறங்கி விழுகின்றது".
பெண்ணை மலரென்றும் ஆணை வண்டென்றும் சொல்கிற வழக்கம் காலங்காலமாய் உள்ளதுதான்.ஆனால்
அந்தப்பெண் மனைவியா அல்லது விலைமகளா என்பதை கண்ணதாசன் இங்கே நுட்பமாக உணர்த்துகிறார்.
"உண்டு சுவைக்கின்றது-உறங்கி விழுகின்றது" என்ற வரி ,அது காமத்தையும் தாண்டிய உறவையும் காதலையும் உணர்த்துகிறது.இது காதல் உறவிலும் தாம்பத்யத்திலும்தான் சாத்தியம்.
தனக்கு விருப்பமான பெண்ணுடன் மகிழ்ந்திருந்துவிட்டு அவளது மெல்லிய தோள்களில் உறங்கி விழுவதை ஒப்பிட்டால் சொர்க்கம் மிகவும் சாதாரணமான விஷயம்தான் என்கிறார் திருவள்ளுவர்.
"தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு"என்பது திருக்குறள்.


"வண்டு வருகின்றது-மலரில் அமர்கின்றது-உண்டு சுவைக்கின்றது-உறங்கி விழுகின்றது".என்பது தாம்பத்ய சங்கீதம்.இதுவே ஒரு விலைமகளுடனான உறவாக இருந்திருந்தால்
"வண்டு வருகின்றது-மலரில் அமர்கின்றது-உண்டு சுவைக்கின்றது-சென்று விடுகின்றது'என்று கவிஞர் எழுதியிருக்கக் கூடும்.

அந்தரங்கமான அந்த சொந்தத்தை நாகரீகம் குறையாமல் கவிஞர் வர்ணிக்கும் பாங்கு அத்துடன் நிற்கவில்லை.அடுத்த வரிகளைப் பாருங்கள்.
"வானம் பொழிகின்றது-பூமி நனைகின்றது-மேனி குளிர்கின்றது-வெள்ளம் வடிகின்றது".
அடுத்த சரணத்தில் வைகறைப் பொழுதைக் காட்டுகிறார் கவிஞர்.

"இரவு விடிகின்றது-இளமை எழுகின்றது,குளித்து வருகின்றது கூந்தல் முடிக்கின்றது.
அருகில் அமர்கின்றது-அத்தான் என்கின்றது,ஆண்மை விழிக்கின்றது,அள்ளி அணைக்கின்றது"

இங்கே ஒரு நிமிஷம் நிறுத்துவேன்."அப்புறமென்ன? அதன்பின் மீண்டும் வண்டு வருகின்றது மலரில் அமர்கின்றது என்று முதல் சரணத்தையே ஆரம்பிக்க வேண்டியதுதான்.அது அவரவர் வசதி'என்றதும் அவை ஆரவாரிக்கும்.

கண்ணதாசனின் பாடல்களுக்கான வாழும் உதாரணங்களையும் பேரவையில் பார்க்க முடிந்தது.
குணசேகரன் அப்படிப்பட்டவர்.ஆலை ஒன்றில் பணிபுரிகிற போது ஏற்பட்ட விபத்தில் தன்னுடைய
இடதுகையை இழந்தவர்.கண்ணதாசனின் அதிதீவிர ரசிகர்.நயமான இடங்கள் சொல்லப்படும்போது
கையால் தொடையைத் தட்டிக்கொண்டு கலகலவென்று சிரிப்பார்.அது ஆயிரம் கரவொலிகளுக்குச் சமம்.
அவருக்கு நிகழ்ந்தது காதல்திருமணம்.அவர் ஊனமடைந்த பின்னர்தான் காதல் அரும்பியது.கரத்தை அவர் இழந்தது1988ல்.திருமணம் நடந்தது 1990ல்.

"தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ?உங்கள்
அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ"
என்ற கவிஞரின் வரிகளுக்கு ஒரு நாயகி வாயசைத்துக் காட்டியுள்ளார்.குணசேகரனின் நாயகி வாழ்ந்து காட்டுகிறார்.

தன் கணவரின் குறை தன் கணவருக்குக்கூட தெரியக்கூடாது என்பதில் கவனமாயிருப்பவர் திருமதி சாவித்திரி குணசேகரன்.அதற்கொரு சம்பவம் சாட்சி சொன்னது.
மதுரையில் தமிழருவி மணியனின் நூல்வெளியீட்டு விழா ஒன்றிற்காக கண்ணதாசன் பேரவை நண்பர்கள் குடும்பத்துடன் படைதிரண்டு வந்திருந்தார்கள்.எல்லோருமாக கோவிலுக்குப்போனார்கள்.மீனாட்சியம்மன் சந்நிதியில் ஆண்கள் ஒருபக்கமும் பெண்கள் மறுபக்கமும் நின்றனர்.கையில் குங்குமம் வாங்கிய மறுவிநாடி ஆண்கள் பக்கத்திற்கு விரைந்த சாவித்திரி கணவனின் நெற்றியில் குங்குமத்தை இட்டுவிட்டு
பிறகே தான் இட்டுக் கொண்டார்.கனநேரமும் கூட தன் குறை குணசேகரனுக்குத் தெரியக்கூடாது என்பதில் அவ்வளவு கவனம் அவருக்கு.

திமுக அனுதாபியாக இருந்த குணசேகரன் தங்கள் மகளுக்கு உதயா என்று பெயர் சூட்டினார்.பிறகு மதிமுகவில் இணைந்தார்.இன்று அரசியல் சார்பில்லாமல்.கட்டிடப்பொருள் விற்பனையகம் ஒன்றை நிறுவி கணவனும் மனைவியுமாய் நடத்தி வருகிறார்கள்.

காளிதாசும் ஆலைப்பணியை விட்டுவிட்டு இருகூரில் தன் பரம்பரைத் தொழிலாகிய ஜோதிடத்தொழிலில்
கொடிகட்டிப் பறக்கிறார்.மகளிர் அணித்தலைவி விஜயசாந்தியை மணந்து கொண்டார் அவர்.பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் அவருடைய அலுவலகத்திற்குப் போனபோது கம்பீரமாக சிரித்துக் கொண்டிருந்தது,
கவிஞரின் புகைப்படம்.
கண்ணதாசன் பேரவையில் தங்கள் பெற்றோரின் துணையுடன் முழுமையாக ஈடுபட்டு பேரவையையே ஒரு குடும்பமாகக் கருதிவந்த கணேசன் என்கிற குலசேகரன்,மற்றும் அவருடைய சகோதரர் ஆனந்தன் ஆகியோர் அதே பாச உணர்வுடன் பேரவை நண்பர்களுடன் தொடர்பிலிருந்து கொண்டு தங்கள் அச்சகத்தை விரிவுபடுத்தி நடத்தி வருகிறார்கள்.

பள்ளிப்படிப்பு முடித்த கையுடன் என்னிடம் உதவியாளராக சேர்ந்த தேவ.சீனிவாசன்,வெவ்வேறு துறைகளில் பரிசோதனை முயற்சிகள் செய்துவிட்டு இன்று வரைகலை வடிவமைப்பாளரான தன் மனைவியின் துணையுடன் சுயதொழிலில் ஈடுபட்டிருக்கிறார். இப்படி கண்ணதாசன் பேரவை நண்பர்கள் வாழ்வின் நிர்ப்பந்தங்களால் தனித்தனி பிரயத்தனங்களில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் கூப்பிடு தூரத்திலேயே இருப்பதும் அவ்வப்போது பசுமைநிறைந்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதும் ஆறுதலான விஷயங்கள்.

கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப்பேரவை நண்பர்களை மையப்படுத்தி கண்ணதாசன் இயக்கத்தை
மாநிலந் தழுவிய இயக்கமாய் உருவாக்க மதுரையில் ஒரு கூட்டம் நடந்தது.அந்த நள்ளிரவுகூட்டம்,ஒரு
சுவாரசியமான அனுபவம்.

(தொடரும்)