Monday, March 31, 2014

வாக்களிக்க வாருங்கள்

வாசல்தேடிக் கும்பிடுவோர் விரலகள் பாருங்கள்-அவர்
விரல்களிலே என்ன கறை என்று தேடுங்கள்
பேசும்பேச்சில் உண்மையுண்டா என்று கேளுங்கள்-ஒரு
புதுவெளிச்சம் வரும்சுவடு தன்னைத் தேடுங்கள்

ஆட்டம்காணும் ஆட்சியிங்கு தேவையில்லையே-வெறும்
ஆள்பிடிக்கும் உத்திக்குநாம் அடிமையில்லையே
ஓட்டு வாங்கி மறப்பவரைரை ஓடச் செய்யுங்கள்-நல்ல
உயர்ந்த மாற்றம் தருபவரை ஆளச் செய்யுங்கள்

கொள்கைகளை அடகுவைக்கும் கட்சிகள்வேண்டாம்-வெறும்
கோஷ்டிகளை வளர்த்துவிடும் கட்சிகள் வேண்டாம்
உள்ளபடி நல்லபடி ஆள்பவர் யாரோ-அந்த
உயர்ந்தவரைக் கூட்டிவந்துஅமரச் செய்யுங்கள்

வல்லரசாய் வருவதற்கு வாய்ப்பு உள்ளதா-அந்த
வழியைக்கூட இதுவரைக்கும் காட்டவில்லையே
நல்லரசாய் அமையத்தானே நாமும் கேட்கிறோம்-அதை
நிகழ்த்தவேனும் வாக்களிக்க நீங்கள் வாருங்கள்

உங்கள் ஓட்டு உங்கள்தேர்வு உங்களுரிமை-அதை
உரியநாளில் பதிவதுதான் நமது கடமை
அங்குமிங்கும் கேட்கிறதே ஆயிரம்கோஷம்-நாம்
அணிதிரண்டால் பிழைத்துவிடும் பாரததேசம்

மேடையில் தந்த மணிவிழா வாழ்த்து

புகைப்படம்: சுகா
(இசைக்கவி ரமணன் அவர்களுக்கு ஒவ்வொரு பிறந்தநாளிலும் என் வாழ்த்துக் கவிதை சில ஆண்டுகளாய் இணைய வெளியிலே உலா வரும்.இந்தமுறை அவர் பிறந்தநாளையொட்டி"ஆனந்தம் ஆரம்பம்" என்னுந் தலைப்பில் அவருடைய மணிவிழா கவியரங்கிலேயே வாழ்த்துக் கவிதையையும் வாசிக்க முடிந்தது)

"குருவென்னும் போதையில் குளிர்கொண்ட கோடையில்
         குடிகொண்ட கவிதை மேகம்
         குழுவொன்றும் இன்றியே குதூகலச் சிறுவனாய்
          குலவிடும் இனிய நேயம்

அருளென்னும் கங்கையில் அன்றாடம் மூழ்கியும்
          அடங்காத ஆத்ம தாகம்
          அறுபதாம் அகவையாம்; அதற்கிவர் கவிதையாம்;
           அம்பிகை செய்கை யாவும்!

கருவென்னும் ஒன்றிலே குடியேறும் தகுதியோ
            கொஞ்சமும் இல்லை இனிமேல்,
             கவிகொஞ்சும் இசையோடு "கலகல' சிரிப்போடு
             காணுக என்றும் நலமே!

திருவென்னும் நிறைவெலாம் திகழ்கின்ற புகழ்வாழ்வு
             தினம்காண்க கவிரமணனே
             திசையெட்டும் கைகொட்டி இசையட்டும் உன்பாட்டில்  
             திருவருள் துணையாகவே