Friday, December 30, 2011

சாம்பல் வாசனை

பாம்பின் கண்களில் பதட்டம் பார்க்கையில்
பச்சைத் தவளையின் ஆறுதல் மொழியாய்
தீப்பற்றும் உன் தீவிரத்தின் முன்
முழக்கங்கள் முயன்று முனகவே செய்கிறேன்:
 காட்டு நெருப்பு கலைத்த கலவியில்
உக்கிரம் பரப்பி ஓடும் விலங்காய்
எல்லாத் திசையிலும் எரிதழல் பரப்பும் உன்
பார்வையில் எனக்கென பனியும் சுரக்கும்

அடுத்த விநாடியே அரும்பு கட்டும் -
புன்னகைக்குள்ளே புதையும் எரிமலை
சமதளமாகி சந்தனமாகி
எரிந்த சுவடுகள் எல்லாம் தணிந்திட
எழுந்து நதியாய் என்னை நனைக்கும்..
தேம்பும் எனனைத் தழுவுமுன் கைகளின்
சாம்பல் வாசனை சர்ப்பத்தை எழுப்பும்

நீங்கா நிழலின் நீட்டக் குறுக்கம்
தீரா வியப்பைத் தருவது போல்தான்
பரஸ்பர நிழல்களாய் படரும் நமக்குள்
நிகழ்ந்து கொண்டிருக்கும் நீட்டமும் குறுக்கமும்:

பகடைக் காயின் பக்கங்கள் போல
உருளும் கணங்களின் உன்மத்தம் தெறிக்க
இரவின் மௌனம் கடையும் ஒலியில்
திரளும் அன்பும் திரளும் சினமும்
உருகும் உயிரில் ஒளியை வழங்கும்
  

Thursday, December 29, 2011

பாவை பாடிய மூவர்


மார்கழி மாதத்தின் மகத்துவங்களில் முக்கியமானவை அறிவால் சிவமேயாகிய மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும், சூடிக்கொடுத்த  சுடர்க்கொடியாம் ஆண்டாள் பாடிக் கொடுத்த திருப்பாவையும். அவற்றின் ஆன்மத் தோய்வும் பக்தி பாவமும் அளவிட முடியா அற்புதங்கள்.  இந்து சமயத்திற்கு சைவமும் வைணவமும் இரண்டு கண்கள் எனில்  அந்தக் கண்களின் இரண்டு பாவைகளே திருப்பாவையும் திருவெம்பாவையும் எனலாம்.



"குத்து விளக்கெரிய, கோட்டுக்கால கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின்மீது
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா" 

என்னும் ஆண்டாளின் சொல்லோவியமும்,

"மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார் அமளியில் புரண்டாள்" என்ற மணிவாசகரின் சொற்சித்திரமும்
அளிக்கும் அனுபவங்கள் பரவசமானவை. இந்த இரண்டு படைப்புகளிலும் ஊறித் திளைத்த உள்ளம் கவியரசு  கண்ணதாசனின் உள்ளம்.

"கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை
கூப்பிடும் குரல்கேட்டுக் கண்ணன் வந்தான்"
என்று பாடியவர் அவர்.

ஆன்மீக மரபில் பிறந்து வளர்ந்தாலும் நாத்திக இயக்கத்தில் ஈடுபட்டு,  பின்னர் அங்கிருந்து விடுபட்டு,மீண்டும் ஆன்மீகத்தில் ஆழங்கால் பட்டவர் அவர்.

"நல்லறிவை உந்தனருள்
தந்ததென எண்ணாமல்
நாத்திகம் பேசிநின்றேன் 

நடைபயிலும் சிறுவனொரு
கடைவைத்த பாவனையில்
நாற்புறம் முழக்கி வந்தேன் 

கல்வியறிவு அற்றதொரு
பிள்ளையிடம் நீகொடுத்த
கடலையும் வற்ற விட்டேன் 

கருணைமயிலே உனது
நினவுவரக் கண்டதன்பின்
கடலையும் மீறிநின்றேன் " என்பது கவியரசரின் வாக்குமூலம்.


 சமய இலக்கியங்களில் இருந்த திளைப்பு அவருக்குள் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டே இருந்ததன் விளைவாக திருப்பாவை,  திருவெம்பாவை ஆகியவற்றை அடியொற்றி அவர் படைத்ததே  தைப்பாவை. பாவை நோன்பு நோற்கும் பெண்களின் குரலாக திருப்பாவையும்  திருவெம்பாவையும் இருக்க,தைமகளாகிய பாவையிடம்  நேர்படப் பேசும் தொனியில் தைப்பாவை அமைந்திருக்கிறது  தமிழர் அகவாழ்வு,வீரம்,வேளாண்மையின் சிறப்பு அரசர் மாண்பு உள்ளிட்ட பல்வேறு பாடுபொருட்களைக் கொண்டது தைப்பாவை.

"தைபிறந்தால் வழிபிறக்கும்"என்பது போல தை மாதத்தில்  தமிழர்கள் நலனுக்கு வழிபிறக்கும் என்னும் உணர்வுடன் தைப்பாவையின் முதல் பாடல் தொடங்குகிறது.

"எந்தமிழர் கோட்டத்து
இருப்பார் உயிர்வளர
எந்தமிழர் உள்ளத்து
இனிமைப் பொருள்மலர
எந்தமிழர் கைவேல்
இடுவெங் களம்சிவக்க
எந்தமிழர் நாவால்
இளமைத் தமிழ்செழிக்க
முந்து தமிழ்ப்பாவாய்
முன்னேற்றம் தான்தருவாய்
தந்தருள்வாய் பாவாய்
தைவடிவத் திருப்பாவாய்
வந்தருள்வாய் கண்ணால்
வாழ்த்துரைப்பாய் தைப்பாவாய்"
என்பது தைப்பாவையின் முதல் பாடல்.
"மார்கழிக்குப் பெண்ணாக
மாசிக்குத் தாயாக
பேர்கொழிக்க வந்த
பெட்டகமே"
என்று தைமகளை வர்ணிக்கிறார் கவியரசர்.

பொங்கல் வைக்கும் நாளில் விடிய விடிய அறுவடை நடந்து  வேளாண்குடிப் பெருமக்களின் வீடுகள் பரபரப்பாக இயங்குகின்றன.  காளைமாடுகள் இழுத்துவரும் வண்டிகளிலிருந்து நெல்மூட்டைகள. இறக்கப்படுகின்றன. நெல்மணிகள் களஞ்சியங்களில் கொட்டப்  படுகின்றன.வளைக்கரங்கள் சலசலக்க பெண்கள் படையலிடத்  தயாராக வாழையிலைகளை விரித்து வைக்கிறார்கள்.  இன்னொருபுறம் தாழை மடல்களையும் பின்னுகிறார்கள்.  விடிந்த பிறகு தயிர் கடைய முடியாதாகையால் கதிர்  கிளம்பும் முன்னே தயிர் கடைகிறார்கள். அதன்பிறகு  சேவல் கூவுகிறது.

குழந்தைகள் பொங்கலோ பொங்கல்  என்று உற்சாகக் குரலெழுப்புகிறார்கள். இத்தனை சம்பவங்களையும்  பாட்டுப் பட்டியலாகவே கவியரசர் வழங்குகிறார். 

"காளை மணியோசை களத்துமணி நெல்லோசை 
வாழை இலையோசை வஞ்சியர்கை வளையோசை
தாழை மடலோசை தாயர்தயிர் மத்தோசை
கோழிக் குரலோசை குழவியர்வாய் தேனோசை
ஆழி அலையோசை அத்தனையும் மங்கலமாய்
வாழிய பண்பாடும் மாயமொழி கேட்டிலையோ!
தோழியர் கைதாங்க தூக்கியபொன் அடிநோக
மேழியர்தம் இல்லத்து மேலெழுவாய் தைப்பாவாய் 

தன் மனம்கவர்ந்த காதல் பெண்ணைத் தீண்ட முற்படும் போது வேலை  நிமித்தமாய் பிரிந்து போகிறான் தலைவன்.பிரிவுத் துயரில்  வாடுகிறாள் தலைவி.பிரிந்தவர் மீண்டும் தைமாதத்தில் சேர்வார்கள்  என்று தைமகளையே தலைவிக்கு ஆறுதல் சொல்ல வேண்டுகிறார்.

"வாளைத் தொடு காளை
வடிவைத் தொடு வேளை
வேலைக்கென ஓலை
விரைவுற்றது சென்றான்;
நூலைத் தொடும் இடையாள்
நோயுற்றனள் பாராய்
வேலைப்பழி விழியாள்
வியர்வுற்றனள் காணாய்
ஆலந்தளிர்த் தத்தை
அமைவுற்றிட இத் தை
காலம்வரல் கூறாய்
கனிவாய தைப்பாவாய்" 

சங்க இலக்கியச் செழுமரபின் நெறிநின்ற இப்பாடல் கவியரசரின்  ஆளுமைக்கு சான்று.அதேநேரம் அவர் பயின்ற சமய இலக்கியங்களாகிய  பாவைப் பாடல்களின் தாக்கம் தலைப்பில் மட்டுமின்றி தைப்பாவையை  பாவாய் என்றழைக்கும் உத்தியில் மட்டுமின்றி தைப்பாவை கவிதை  வரியிலும் எதிரொலிக்கிறது.

ஆண்டாள், திருப்பாவையில் கண்ணனை வர்ணிக்கும்போது
"கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்" என்று பாடுகிறார்.
கதிர்போன்ற ஒளியும் நிலவுபோன்ற குளுமையும் ஒருங்கே கொண்டவன்
கண்ணன் என்பது உரையாசிரியர்கள் விளக்குகிற உட்பொருள்.
இந்த நயத்தை உள்வாங்கிய கவியரசர் கண்ணனின் அந்தத் தன்மையை
தமிழ்ச்சமுதாயத்தின்மேல் ஏற்றிப் பாடுகிறார்.

"எங்கள் சமுதாயம்
ஏழாயிரம் ஆண்டு
திங்கள்போல் வாழ்ந்து
செங்கதிர்போல் ஒளிவீசும்" என்கிறார்.

தமிழ் மன்னர்கள் பற்றிய சுவைமிக்க பதிவுகளையும்  தைப்பாவையில் கவிஞர் எழுதுகிறார்.குறிப்பாக சேரமன்னன் பற்றிய கவிதை மிக அழகான ஒன்று
"இருள்வானில் நிலவிடுவான்
நிலவாழ்வை இருளவிடான்
செருவாளில் கை பதிப்பான்
கைவாளை செருவில்விடான்
மருள்மானை மனத்தணைவான்
மனமானை மருளவிடான்
தரும்சேரன் பெற்றறியான்
தழைக்கும்கோன் வஞ்சியிலும்
நிறையாயோ உலவாயோ
நிலவாயோ தைப்பாவாய்"


சங்க இலக்கிய சாரத்தையும் சமய இலக்கிய உத்தியையும் ஒருசேர  வெளிப்படுத்தும் தைப்பாவை, கவியரசு கண்ணதாசனின் முத்திரைப்  படைப்புகளில் முக்கியமானது

Sunday, December 25, 2011

ஆதியோகி வந்தமர்ந்த ஆலயம்

ஆதியோகி வந்தமர்ந்த ஆலயம்- நம்
ஞானயோகி ஆக்கிவைத்த ஆலயம்
ஜோதியாக நின்றொளிரும் ஆலயம்- இதைத்
தேடிவந்து சேர்பவர்க்கு ஆனந்தம்
 
யோகமென்னும் கொடைநமக்குத் தந்தவன்-இந்த
தேகமென்றால் என்னவென்று சொன்னவன்
ஆகமங்கள் தாண்டியாடும் தாண்டவன் -இந்த
ஆதியோகி அனைவருக்கும் ஆண்டவன்
 
சத்குருவின் சக்திமிக்க தந்திரம்- அட
சொல்லிச் சொல்லித் தீரவில்லை மந்திரம்
 பக்திகொண்டு பொங்கியதே நம்மனம்- அந்தப்
பரமனுக்கும் இங்குவரச் சம்மதம்
 
சாம்பசிவம் நீலகண்டன் என்றவன் -கரும்
பாம்பின்நஞ்சில் பால்கலந்து உண்டவன்
வீம்புகொண்டு மீண்டும்மண்ணில் வந்தவன் - நாம்
வாழ்வதற்குக் காரணங்கள் தந்தவன்
 
கண்ணெதிரே கடவுள்வந்த சாகசம்- அதைக்
காட்டுவிக்கும் கருணைவேறு யார்வசம்?
எண்ண எண்ண விந்தை அந்த அற்புதம்-என்றும்
இன்பம் இன்பம் சத்குருவின் பொற்பதம்

Tuesday, October 11, 2011

கமலத்தாள் கருணை


தேனமுதம் அலைவீசும் தெய்வீகப் பாற்கடலில்
வானமுதின் உடன்பிறப்பாய் வந்தாய்-
வானவரின் குலம்முழுதும் வாழவைக்கும் மாலவனின்
வண்ணமணி மார்பினிலே நின்றாய்

சீதமதி விழிபதித்து செல்வவளம் நீகொடுத்து
சோதியெனப் புதுவெளிச்சம் தருவாய்
வேதமுந்தன் வழியாக வெண்ணிலவு குடையாக
வளர்திருவே என்னகத்தே வருவாய்
மூன்றுபெரும் அன்னையரின் மூளுமெழில் கருணையிலே
மண்ணுலகம் இயங்குதம்மா இங்கே
தோன்றுமுங்கள் துணையிருந்தால் தோல்வியென்றும் வாராது
தொட்டதெல்லாம் துலங்கிடுமே நன்றே

கலைமகளும் வார்த்தைதர அலைமகள்நீ வாழ்க்கைதர
கவலையெலாம் நீங்கிடுமே நொடியில்
மலைமகளும் சக்திதர முயற்சியெலாம் வெற்றிதர
மணிவிளக்கை ஏற்றிவைப்பாய் மனதில
சேர்த்தநிதி பெருகுவதும் செம்மைபுகழ் வளருவதும்
செய்யவளே உன்கருணை தானே
கீர்த்தியுடனவாழுவதும் கருதியதை எய்துவதும்
கமலத்தாள் கருணையிலே தானே
கனகமழை பெய்வித்த காருண்ய மாமுகிலே
கண்ணார தரிசித்தேன் கண்டு
தனமுடனே கனம்நிரம்பி மனம்மகிழச் செய்திடுவாய்
தாங்கிடுக தளிர்க்கரங்கள் கொண்டு





அன்னபூரணி-( நவராத்திரி - 8)



தள்ளிநிற்கும் படித்துறையைத் தாவித்தொடும் கங்கைநதி
தாளமிடப் பாடுபவளாம்
அள்ளிவைத்த பூக்களிடை உள்ளுறையும் விஸ்வேசன்
உள்ளமெங்கும் ஆடுபவளாம்
கள்ளமுற்ற நெஞ்சினையும் வெண்பளிங்காய் மாற்றியதில்
கோயில்கொண்டு வாழுபவளாம்
விள்ளலன்னம் கையில்விழ விம்மிவிம்மி நெஞ்சமழ
வினைதீர்க்கும் அன்னையவளாம்

பேசுமொழி உள்ளிருந்து பாட்டின்பொருளாயிருந்து
பூரணத்தை சுட்டுபவளாம்
வீசுதென்றல் ஊடிருந்து சுவாசத்திலே உட்புகுந்து
சக்கரங்கள் தட்டுபவளாம்?
ஆசையின்மேல் கனலுமிட்டு ஆட்டமெலாம் ஓயவிட்டு
ஆனந்தமே நல்குபவளாம்
காசிஅன்னபூரணியாம் தேசுடைய பேரழகி
காவலென்று காக்கவருவாள்



அத்தனை உயிர்களுக்கும் அன்னமிடும் தாயவளை
அண்டியபின் என்ன கவலை?
பித்தனை உருகவைக்கும் பேரழகி உள்ளிருந்து
பேசுவதே இந்தக் கவிதை
முத்தியைத் தரும்தருணம் முந்திவந்து கைகொடுக்கும்
மோகினியின் கோயில் நுழைவோம்
எத்தனை இழைத்தவினை அத்தனையும் துகளாக்கும்
யாமளையின் பாதம் தொழுவோம்

கைமலர்கள் நோகயிந்த வையமெல்லாம் படியளக்கும்
காசிஅன்னபூரணேஷ்வரி
மைவிழிகள் புன்னகைக்க உய்யுமொரு மந்திரத்தை
மெல்லச்சொல்லும் மந்த்ரேஷ்வரி
நெய்விளக்கின் தீபவொளி நெக்குருகச் செய்திருக்க
நிற்பவளே காமேஷ்வரி
மெய்யெனுமோர் பொய்யுடலின் மோகமெல்லாம் தீர்த்தருள்வாய்
மஹாமாயே ஜகதீஷ்வரி

காலைவரை காத்திருக்க....(நவராத்திரி 7)

காலைவரை காத்திருக்கத் தேவையில்லையே-அவள்
கண்ணசைத்தால் காலைமாலை ஏதுமில்லையே
நீலச்சுடர் தோன்றியபின் வானமில்லையே-அவள்
நினைத்தபின்னே தடுப்பவர்கள் யாருமில்லையே

சொந்தமென்னும் பகடைகளை உருட்டச் சொல்லுவாள்-அதில்
சோரம்போன காய்களையும் ஒதுக்கச் சொல்லுவாள்
பந்தமென்னும் கம்பளத்தைப் புரட்டச் சொல்லுவாள்-இனி
படுக்க உதவாதெனவே மடிக்கச் சொல்லுவாள்



உள்ளபசி என்னவென்றும் உணர்ந்துகொள்ளுவாள்-அவள்
உரியநேரம் வரும்பொழுதே உணவு நல்குவாள்
அள்ளியள்ளி உண்ணக்கண்டு சிரித்துக்கொள்ளுவாள்-நாம்
அழ அழவும் பந்தியினை முடித்துக் கொள்ளுவாள்

சூத்திரங்கள் வகுத்தபின்தான் ஆடவிடுகிறாள்-அவள்
சுருதியெல்லாம் சேர்த்துத் தந்து பாடவிடுகிறாள்
சாத்திரங்கள் நடுவில்தன்னைத் தேட விடுகிறாள்-மனம்
சாயும்போது சந்நிதியை சேரவிடுகிறாள்

சொன்னதெல்லாம் காற்றில்போகும்; மௌனம் சத்தியம்-இந்த
சூட்சுமத்தைத் தெரிந்துகொண்டால் முக்தி நிச்சயம்.
என்னையெல்லாம் நிமிர்த்திவைத்த லீலை அற்புதம்-இன்னும்
என்னவெல்லாம் செய்திடுமோ சக்தி தத்துவம்

கூட்டுக்குள்ளே உயிருக்கவள் காவல் நிற்கிறாள்-அந்தக்
கூனல்பிறைக் காரனுடன் காதல் செய்கிறாள்
வீட்டுக்குள்ளே ஏற்றும் சுடரில் வாழ வருகிறாள்-நம்மை
வீனையென்று மடியில்தாங்கி வீடு தருகிறாள்

Thursday, October 6, 2011

சந்ததம் தொடர்பவள் அபிராமி (நவராத்திரி - 6)




திக்குகள் எட்டிலும் தெரிந்திருப்பாள்-என்
திகைப்பையும் தெளிவையும் கணக்கெடுப்பாள்
பக்கத்தில் நின்று பரிகசிப்பாள்-என்
பார்வையில் படாமலும் ஒளிந்திருப்பாள்
நிர்க்கதியோ என்று கலங்குகையில்-அந்த
நாயகி நேர்பட நின்றிருப்பாள்
எக்கணம் எவ்விதம் நகருமென்றே -அவள்
என்றோ எழுதி முடித்திருப்பாள்

அழுதால் அவளுக்குப் பிடிக்காது-நான்
அழாவிடில் தரிசனம் கிடைக்காது
விழுதாய்க் கண்ணீர் இறங்குகையில்-எந்த
வீழ்ச்சியும் துரோகமும் வலிக்காது
தொழுதால் அவளைத் தொழவேண்டும்-அட
விழுந்தால் அவள்முன் விழவேண்டும்
எழுதாக் கவிதைகள் எழுதவைத்தாள்-அவள்
என்னுயிர் புதிதாய் ஒளிரவைத்தாள்

வாழ்க்கை நாடகம் தொடர்ந்துவரும்-அதில்
வரவுகள் செலவுகள் நிகழ்ந்து வரும்
கேட்கும் ஒருகுரல் உள்ளுக்குள்ளே-அதில்
கேள்விகள் யாவையும் அடங்கிவிடும்
தீர்க்கமாய் ஒரு திருவிளக்கு-அது
தினமெந்தன் மனந்தனில் தெரிந்திருக்கும்
தீர்க்க முடியா வழக்கெல்லாம் -அந்தத்
திருக்கட வூரில் முடிந்துவிடும்

முக்தியின் வேதம் அபிராமி-நல்ல
மௌனத்தின் நாதம் அபிராமி
பக்தியின் சாரம் அபிராமி-இங்கு
படைகொள்ளும் வீரம் அபிராமி
யுக்திகள் எல்லாம் அபிராமி -வரும்
யோசனை தருபவள் அபிராமி
சக்தியின் கனிவே அபிராமி-எனை
சந்ததம் தொடர்பவள் அபிராமி

அடிக்கடி வருகிற காட்சி - (நவராத்திரி-5)



நாவல் பழநிறப் பட்டுடுத்தி-மின்னும்
நகைகள் அளவாய் அணிந்தபடி
காவல் புரிந்திட வருபவள்போல்-அன்னை
காட்சி அடிக்கடி கொடுக்கின்றாள்
ஆவல் வளர்க்கும் காட்சியிதும்-என்
அரும்புப் பருவத்தில் தொடங்கியது
வேவு பார்க்க வந்தவள்போல் -எங்கள்
வீட்டு முற்றத்தை வலம்வருவாள்

பின்னங்கைகளில் தவழ்கிறதே-அது
பிரம்பா கரும்பா தெரியவில்லை
பின்னல் இடாத மழைக்கூந்தல் -அது
புரள்கிற அழகுக்கு நிகருமில்லை
கன்னங் கரியவள்- ஆறடிக்குக்
கொஞ்சம் குறைவாய் அவளுயரம்
மின்னல், மேகத்தின் நிறங்கொண்டு-வரும்
மாயத் தோற்றமாய்த் தெரிகின்றாள்

கட்டிய பின்னங் கைகளுடன் -அவள்
காலடி அளந்து வைக்கின்றாள்
முட்டிய கண்ணீர் மறைத்தாலும்-அந்த
மோகனத் திருவுரு மறைவதில்லை
விட்டுச் செல்வதும் இல்லையவள்
விழிகொண்டு நேராய்ப் பார்ப்பதில்லை
எட்டியும் எட்டா அமுதமென -எனை
எத்தனை வருடங்கள் ஏய்த்திருப்பாள்

பாரா முகமென்றும் தோன்றவில்லை-அவள்
பார்ப்பது போலவும் தெரியவில்லை
தீராச் சுமைகள் கனக்கையிலே-என்
தேவி கிளம்பி வருகின்றாள்
தாரா கணங்கள் பட்டினிலே-வந்து
தானாய் மின்னும் அழகினிலே
வாரா அமைதி வருகிறது-அவள்
வாஞ்சையை உள்மனம் உணர்கிறது!

கடவூர்க் காரி அவள்வருகை-அது
கனவா நனவா இரண்டுமில்லை
இடர்கள் எதிர்ப்படும் போதெல்லாம்-அவள்
இறங்கி வராமல் இருப்பதில்லை
தொடவும் தயங்கும் நெருக்கத்தில் -பின்
தொடவே முடியாத் தூரத்தில்
அடம்பிடிக்கின்றாள் இப்போதும்-ஆனால்
அவளிருக்கின்றாள் எப்போதும்!

சந்நிதி வாரீரோ - நவராத்திரி கவிதை - 4

அயன்விரல் பிடித்தன்று அரிசியில் வரைந்தாள்
அரிநமோத்து சிந்தம்
கயல்விழி திருமுகக் கலைமகள் சிணுங்கலே
கவிபாடும் சந்தம்
உயர்வுற அவளருள் உடையவர் தமக்கோ
உலகங்கள் சொந்தம்
மயிலவள் மலர்ப்பதம் மனந்தனில் வைத்தால்
வேறேது பந்தம்

வெண்ணிறத் தாமரை வெய்யிலைச் சுமக்கும்
விந்தையைக் காணீரோ
பண்ணெனும் தேன்மழை பாதத்தில் பிறக்கும்
பரவசம் கேளீரோ
விண்ணவர் அமுதம் வீணெனும் அறிவின்
விருந்திடம் சாரீரோ
எண்ணொடும் எழுத்தெனும் சிறகுகள் தருபவள்
சந்நிதி வாரீரோ



ஏட்டினில் எல்லாம் எத்தனை லிபியாய்
ஏந்திழை மிளிர்கின்றாள்
பாட்டினில் எழுகிற பரம சுருதியில்
பாரதி தெரிகின்றாள்
நாட்டினில் மழலைகள் நாவினில் எல்லாம்
நடனம் புரிகின்றாள்
காட்டினில் பறவைகள் கூட்டினில் இறங்கி
காவியம் இசைக்கின்றாள்

சருகினுக் குள்ளே சந்தனம் மணக்கச்
செய்தவள் அவள்தானே
உருகிடும்ய நெஞ்சில் பெருகிடும் கவியில்
உருள்பவள் அவள்தானே
கருதிய புலவர் கனவிலும் நனவிலும்
கிளர்பவள் அவள்தானே
பரிதியின் கனலிலும் பால்நிலா ஒளியிலும்
பெய்பவள் அவள்தானே

பதங்களைத் தேடு (நவராத்திரி 3)



ஆயிரம் சூரியன் பார்வையில் சுடர்விடும்
அன்னையின் திருமுகம் நிலவு
தாயவள் கருணையின்பாய்படுத் துறங்கிட
துன்பமும் இன்பமும் கனவு
பாய்மரக் கப்பலில் போகிற பிள்ளைக்கு
பயமில்லை சமுத்திர விரிவு
தேய்வதும் வளர்வதும் தன்னியல் பெனும்மனம்
தானாய் உணர்ந்தது தெளிவு

சாமரம் வீசிடும் அரம்பையர் நடுவினில்
சாகசச் சிரிப்புடன் தெரிவாள்
காமனின் அம்பினைக் கைப்பற்றும் கன்னிகை
குமரியில் நெடுந்தவம் புரிவாள்
ஊமையின் மனதிலும் ஊற்றெழும் பாட்டுக்கு
ஊர்த்துவ தாண்டவம் இடுவாள்
தீமைகள் சூழ்கையில் தாவி எடுத்துதன்
தாளெனும் தொட்டிலில் இடுவாள்


எல்லாம் சலிக்கையில் எதிரில் வருபவள்
எல்லா பதில்களும் தருவாள்
சொல்லால் தீண்டிட வருகிற்ச் பிள்ளையின்
சொற்களில் நிறைந்து வழிவாள்
கல்லாய் செம்பாய் பொன்னாய் அமர்ந்தும்
கண்ணெதிரே அவள் அசைவாள்
பொல்லா வினைகளின் நில்லாக் குறும்புகள்
பார்வையில் எரித்து விடுவாள்   

ஆலயம் அவளது அரசவையாகும்
அன்பர்கள் மனமே வீடு
காலங்கள் அவளது கால்கொலுசாகும்
கானங்கள் அதற்கெனப் பாடு
வேலெனும் விழிகள் வினைகளைச் சாடும்
விரைந்தவள் பதங்களைத் தேடு
வாலை சிரித்துன் வாழ்வுக்குள் நுழைந்ததும்
வாசலை இழுத்து மூடு





முதல்துளி அபிராமி (நவராத்திரி-2)

 
 
ஒருகுரல் கொடுத்தால் மறுகுரல் கொடுக்கும் உண்மை அபிராமி
ஒருவரும் அறியாத் திசையிலும் உடன்வரும் அண்மை அபிராமி
வரும்பகை எதையும் வற்றிடச் செய்யும் வன்மை அபிராமி
நெருநலும் இன்றும் நாளையும் நிகழும் நன்மை அபிராமி
 
காலனை உதைத்த கால்களும் சிவக்கும் நடனம் அபிராமி
காலங்கள் உருட்டும் கைகளின் அழகிய நளினம் அபிராமி
நீலமுணர்த்தும் தியானத்தின் நிறைவில் சலனம் அபிராமி
தூலமும் துச்சம் என்கிற தெளிவின் தருணம் அபிராமி
 
பட்டரின் நாவில் பதங்கள் மலர்த்தும்   புலமை அபிராமி
தொட்டது துலங்க துணையென நிற்கும் கருணை அபிராமி
கெட்டவர் நடுங்க கீழ்மைகள் களையும்  கடுமை அபிராமி
முட்டிய கன்றின் இதழ்தொடும் அமுதின் முதல்துளி அபிராமி
 
ஒன்பது நாட்களும் ஒவ்வொரு வடிவாய் உதிப்பவள் அபிராமி
உன்னிய நெஞ்சில் ஓமெனும் மந்திரம் பதிப்பவள் அபிராமி
மன்னிய வினைகள் முழுவதும் வீழ்ந்திட விதிப்பவள் அபிராமி
சந்நிதி வரச்சொல்லி சித்துகள் நிகழ்த்தி சிரிப்பவள் அபிராமி
 
அமுத கடேசனின் ஆழ்தவம் அடைகிற அரும்பொருள் அபிராமி
குமுத மலர்க்கரம் அபயம் எனச்சொல்லும் கருப்பொருள் அபிராமி
இமய மலைக்கொரு ராணியென்றெழுந்த திருமுகம் அபிராமி
சமயங்கள் அனைத்தும் சங்கமமாகும் துறைமுகம் அபிராமி
 

அவளே அறிவாள் (நவராத்திரி 1)

அடர்ந்த வனந்தனில் ஒற்றைத் தடம்விழும் அழகாய்-வினை
படர்ந்த மனந்தனில்    பைரவி  நீநடை      பழகாய்
தொடர்ந்து வருந்துயர்க் கனலில் உருகிடும் மெழுகாய்-மனம்
இடரில் கரைகையில் திடம்தனைத் தந்திட வருவாய்
 
 
 
ஏற்றிய தீபத்தில் இளநகை செய்பவள் யாரோ-பலர்
சாற்றிய மறைகளில் சாரமென்றிருப்பவள் யாரோ
காற்றினில் வருகிற கீதத்தில் அவளது பேரோ-திரு
நீற்றினில் தகிக்கிற நெருப்பினில் அவளெழு வாளோ
 
காலத்தின் பேரிகை கைகளில் தாங்கினள் காளி-ஒரு
மூலத்தின் மூலத்தில் மூண்டெழும் சுடரெங்கள் தேவி
நீலத்தை கண்டத்தில் நிறுத்தினள் எங்களின் நீலி-இடும்
ஓலத்தைக் கேட்டதும் உடன்வருவாள் திரி சூலி
 
 
தாங்கிய கனவுகள் திடுமெனக் கலைகிற போது  -மனம்
ஏங்கிய ஏக்கத்தில் எல்லாம் கனக்கிற போது
நீங்கிய உறுதியை நிர்மலை மறுபடி தருவாள்-மடி
தூங்கிடச் செய்து தூக்கத்தில் விழிப்பொன்று தருவாள்
 
ஆயிரம் பந்தங்கள் அலைபோல் வந்திங்கு போகும்-அதில்
காயங்கள் இன்பங்கள் காலத்தின் போக்கினில் ஏகும்
மாயங்கள் யாவையும் மாதவள் செய்கிற ஜாலம்-நம்
தாயவள் உறவே நிலையென்று காட்டிடும் கோலம்
 
கவளங்கள் உருட்டிக் கைகளில் அன்னை இடுவாள்-இதழ்ப் 
பவளங்கள் மின்ன புன்னகையால் உயிர் தொடுவாள்
துவள்கிற பொழுதில் துணையென வந்தருள் புரிவாள்-நம்
கவலைகள் துடைக்கிற கணந்தனை அவளே அறிவாள்

Wednesday, September 14, 2011

சொல்லவா... சொல்லவா... வெண்ணிலாவே!

இசையமைப்பாளர் யானிதேஷின் இசையில் "இன்னிசைக் காவலன்" என்ற திரைப்படத்துக்காக எழுதப்பட்ட பாடல் இது......



பல்லவி:
சொல்லவா சொல்லவா வெண்ணிலாவே
என்னவோ என்னவோ என்கனாவே
கன்னிப்பெண் ஆசைகள் ஆயிரம்
நெஞ்சுக்குள் என்னவோ ஊர்வலம்
சின்னதாய் மோகங்கள் ஆரம்பம்
மன்னவன் அல்லவோ காரணம்

சரணம்-1

யாரோடும் சொல்ல இங்கு வார்த்தையில்லை
சொல்லாத போதுநெஞ்சம் தாங்கவில்லை
ஆனாலும் இந்தக்காதல் ரொம்பத் தொல்லை
தள்ளாடும் பாவமிந்த ஜாதிமுல்லை

ஏதேதோ ஆசைபொங்க இன்பமான நடகம்
உல்லாச ஊஞ்சலாடும் வாலிபம்
தீராத தாகம்தீர காமன்தானே காரணம்
கண்ணோடு கண்கள்பேசும் சாகசம்

நெஞ்சோடு இன்பபோதை மெல்ல மெல்ல ஏறும் நேரம்
(சொல்லவா சொல்லவா)

சரணம்-2
நான்கூட வானவில்லின் ஜாதிதானே
என்மேனி தேனிலூறும் சோலைதானே
செந்தேனைத் தேனீபோலத் தேடினானே
செந்தீயில் பூவைப்போல வாடினேனே

அம்மாடி வேலிதாண்டும் ஆசையென்ன நியாயமோ
என்தேகம் இந்தவேகம் தாங்குமோ
பொல்லாத காதல்வந்து சொல்லித்தந்த பாடமோ
கண்ணாளன் செய்ததென்ன மாயமோ

நெஞ்சோடு இன்பபோதை மெல்ல மெல்ல ஏறும் நேரம்
(சொல்லவா சொல்லவா)

(பாடலை கேட்க கீழே சொடுக்கவும்)





தொடர்புடைய சுட்டி :
குடும்பப் பாட்டாய் மாறிய காதல் பாட்டு






Monday, September 12, 2011

மனிதம் வாழ்க!


காலத்தால் பண்படுதல் மனித நீதி
கருணைதான் நீதிக்குள் குலவும் சோதி
கோலங்கள் மாறுகையில் திட்டம் மாறும்
கொள்கைகள் வளர்கையிலே சட்டம் மாறும்
வேலெடுத்து நாட்டியதும் வீரம் அன்று
வெண்கொடியைக் காட்டுவதும் விவேகம் இன்று
நூலறிவும் நுண்ணறிவும் வளரும் போது
நேற்றிருந்த சட்டங்கள் இன்றைக்கேது?

தூக்கிலிடும் சட்டத்தை பலதேசங்கள்
தூக்கியெறிந்தே இங்கு தூய்மை ஆச்சு
ஆக்கமுடன் அகிம்சையினைத் தந்த நாட்டில்
அடிப்படைகள் மாற்றிவைத்தால் என்ன பேச்சு?
தூக்கமில்லா சிறைவாழ்க்கை நெடுநாள் தந்தார்
தொலைந்துவிட்ட காலத்தைக் கணக்கில் பார்த்தால்
ஆக்கிவைத்த தண்டனையும் முடிந்த தென்று
ஆணையினைத் தருவதுதான் நியாயமாகும்



மூவருக்கு மட்டுமல்ல நம்தேசத்தில்
மூண்டபல குற்றங்கள் புரிந்துவிட்ட
யாவருக்கும் சிறைவாசம் தரலாம் ஆனால்
யாருயிரைப் பறிப்பதுவும் நியாயமில்லை
காவலுக்கே சட்டங்கள் கொல்ல அல்ல!
கருணைக்கே குடியரசு! கொளுத்த அல்ல!
பூவுலகே கொண்டாடும் புனித பூமி
பொருந்தாத தண்டனையைப் போக்க வேண்டும்

வீரமங்கை செங்கொடியின் விரல்கிழித்து
விழித்தெழுந்த தீக்கனலின் வெப்பம் போதும்
ஈரவிறகாய் இருக்கும் மனதில் கூட
இனவுணர்வு என்கின்ற செந்தீ மூளும்
தூரத்தே தெரிகின்ற சிறுவெளிச்சம்
தூக்கிலிடும் சட்டத்தைத் தூக்கில் போடும்
பாரதத்தின் சட்டத்தைத் திருத்தும் கைகள்
பார்முழுதும் கொண்டாடும் பெருமை காணும்


ஆதி சிவனின் அரசாங்கம்


(நீயே சொல் குருநாதா -  கவிதை தொகுப்பிலிருந்து....)



பெளர்ணமி நிலவின் பால்வழிந்து
பாருங்கள் மலைமேல் அபிஷேகம்
வெள்ளித் தகடொன்று வேய்ந்ததுபோல்
வெள்ளியங்கிரியின் திருக்கோலம்

அடடா அழகிய இரவினிலே 
ஆதி சிவனின் அரசாங்கம்
வேண்டும் வரங்கள் வழங்கிடவே
தியான லிங்கத்தின் திருக்கோலம்

தங்கம் இழைத்த கலசத்திலே 
தகதகக்கிறது மேற்கூரை
லிங்கம் தோன்றிய பரவசத்தில் 
சலசலக்கிறது நீரோடை

மெளனம் பேசும் வனங்களெல்லாம்
மூழ்கியிருக்குது தியானத்தில்
கவிதை பாடும் பறவைகளும்
கூட்டில் அடங்குது மோனத்தில்

பாறையில் கசிகிற நீர்த்துளிகள் 
பக்தியில் இளகிடும் மனம்போலே
பாரமாய் உள்ள பழவினைகள்
கரையுது பாருங்கள் பனிபோலே

தியான லிங்கத்தின் தரிசனத்தில்
தினமும் புதிதாய்ப் பிறந்திடலாம்
ஞானம் என்கிற பேரொளியில்
நாமொரு சுடராய் எரிந்திடலாம்

(ஈஷா யோகா நிகழ்ச்சியில் அனுராதா ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீ ராம் பரசுராம் அவர்களால் இந்த பாடல் பாடப்பெற்றது...பாடலை கேட்க கீழே சொடுக்கவும்)
ராகம் : ரேவதி



Friday, September 2, 2011

செப்டம்பர் 3 சத்குரு பிறந்தநாள்


Sadguru

பல்லவி

உள்ளம் ஒன்று கொண்டு வந்தேன்
உன்னை வைக்கத்தான்
வெள்ளம் போலே நீநுழைந்தாய்
நானும் மூழ்கத்தான்
கள்ளங்கள் விழுங்கிய கனலே கனலே
கண்ணெதிர் வருகிற கனவே கனவே
எல்லை இல்லா இன்பம் இங்கே
உன்பேர் சொல்லித்தான்

சத்குரு பாதங்கள் சரணடைந்தேன்
சருகெனப் போனவன் உயிர்மலர்ந்தேன்

சரணம் 1

எத்தனை பிறவிகள் என்னைச் சுமந்தே
எல்லாத் திசையிலும் நடந்தேனோ
எத்தனை தவங்கள் எப்படிச் செய்தேன்
எவ்விதம் உன்னை அடைந்தேனோ

மூச்சினில் கலந்தது உன்கருணை
பேச்சினில் வருவது உன்கவிதை
காட்சியில் தெரிவதும் கணத்தினில் மறைவதும்
கேட்டதைத் தருவதும் உன்மகிமை 

சரணம் 2

ஆசையின் முதுகில் ஆயிரம் காதம்
ஆடிக் குலுங்கிய பயணமோ
பாசத்தில் வழுக்கி பள்ளத்தில் சறுக்கி
போனதும் எத்தனை தூரமோ
பாதையின் முடிவில் உனதுமுகம்
பார்த்ததும் தெளிந்தது எனதுமனம்
நாதத்தின் நடுவில் ஞானத்தின் மௌனம்
நிகழ்ந்ததில் தொலைந்தது  வினையின் கனம்

Sunday, August 28, 2011

நன்மை பயக்கும் எனின்.....

"பிள்ளையார் பெப்ஸி குடிக்கிறார் தெரியுமா? அங்கே நிக்கறேன்" செல்ஃபோன் இல்லாத காலத்தில் தங்கள் அலுவலர்கள் இடையில் உரையாடலுக்காகத் தரப்பட்டிருந்த வாக்கி டாக்கியைக் கையில் வைத்துக் கொண்டுபேசிக்கொண்டிருந்தார் தினமலர் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்த ஐயப்பன்.


கோவையில் கல்கி நூற்றாண்டு விழாவிற்கு வந்த அனைவருமே அந்த சிலையை ஆச்சரியமாகவும் ஆர்வமாகவும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மணிமேல்நிலைப்பள்ளியின் முதல் தளத்தில் கலையரங்கம். தரைதளத்தில்,அலங்காரப் பந்தலின் கீழ் சாய்விருக்கையில் சாய்ந்தபடி, படு தீவிரமாக "கல்கி" வாசித்துக் கொண்டிருந்தார் பிள்ளையார்.

அவர் எதிரே இருந்த டீப்பாயில் பிரித்து வைக்கப்பட்டிருந்தது மைசூர்பா பெட்டி.திறந்து வைக்கப்பட்டிருந்தது ஒரு பாட்டில் பெப்ஸி. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் நடத்திய கல்கி நூற்றாண்டு விழாவில்தான் இந்த அமர்க்களம்.

விழாவிற்கு தலைமை தாங்கியவர் கிருஷ்ணராஜ் வாணவராயர். அன்றும் இன்றும் இளைஞர்களின் ஆதர்சம்சிறப்புப் பேச்சாளர்கள் வரிசையிலோ ஒரு விசித்திரமான கூட்டணி. பாலகுமாரன், சோ, கலை விமர்சகர் சுப்புடு.

விழாவில் இறைவணக்கம் பாட வேண்டியவர் எதனாலோ வரவில்லை. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் திரு.கிருஷ்ணன் தன் வழக்கமான பாணியில் சுப்புடுவை கலாய்த்துக் கொண்டிருந்தார். "சார்! நீங்க மேடையிலே இருக்கீங்கன்னதும் இறைவணக்கம் பாடக்கூட ஆளைக் காணோம்".

கொஞ்ச நேரத்தில் ஏதோ வேலையாக வெளியே வந்த என்னை தயங்கித் தயங்கி அணுகினார் அந்தப் பெரியவர்."சார்! வணக்கம்." ஏறிட்டுப் பார்த்தேன். பரிச்சயமான முகம்தான். வயது எழுபது இருக்கும். பல நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன்."வணக்கம்! சொல்லுங்க சார்" என்றேன். கூடுதல் தயக்கத்துடன் கேட்டார்... "இல்லை ! நான் நல்லா பாடுவேன் சார். இந்த விழாவிலே இறைவணக்கம் பாட சான்ஸ் கிடைக்குமா?"

இறை வணக்கம் பாட வேண்டியவர் வராமல் போன விஷயம் இவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அகஸ்மாத்தாக அகப்பட்டார். ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் "கிருஷ்ணன் சாரைக் கேட்டு சொல்றேன்" என்று நகர்ந்தேன். தமிழ்த்தாய் வாழ்த்து கேசட் போட்டுவிடலாம் என்ற முடிவை மாற்றிக் கொண்டு அவரைப் பாடச் சொல்வதென்று
 முடிவெடுத்தோம்.

"கிருஷ்ணா ஸ்வீட்ஸ்" கிருஷ்ணன்
 சுமாரான குரல். பாட அழைக்கப்பட்ட போதும், பாடி முடித்த பிறகும் "ரொம்ப நன்றி சார்!" என்று வெவ்வேறு பாவங்களில் சொன்னார். சுப்புடு கையாலேயே அவருக்குப் பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசும் கொடுத்ததில் புளகாங்கிதம் அடைந்தார் மனிதர். மேடையின் ஓரத்தில் இருந்த என்னிடம் "ரொம்ப சந்தோஷம் சார்! ரொம்ப நன்றி சார்" என்று பலமுறை
சொன்னது கூச்சமாகவே இருந்தது.

விழா முடிந்து கீழே நின்று கொண்டிருந்த என்னை நெருங்கினார் அந்தப் பெரியவர். கைகளில் பொன்னாடையும் நினைவுப்பரிசும். நான்காவது நன்றியை வாங்க நான் தயாரான போது பத்தடி தொலைவில் நின்று கொண்டு தோரணையாகக் கைச்சாடை போட்டு அழைத்தார். அருகே போனதும் அவர் கேட்ட கேள்வி,"என்னப்பா! கார் ரெடியா இருக்கா?"

எனக்குப் புரியவில்லை. சற்றே குரலை உயர்த்திச் சொன்னார். "அதான் தம்பி! உங்களுக்காக இறைவணக்கம் பாடியிருக்கேன்லே! வீட்டுக்குப் போக கார் கொடுங்க". விருந்தினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கார் மட்டுமே இருந்தது. ஏதோ ஒரு வண்டியை எப்படியோ ஏற்பாடு செய்து அனுப்பினோம். அப்போது எரிச்சலாக இருந்தாலும் அவர் வீட்டுக்குப் போய் என்ன செய்திருப்பார் என்று யோசித்தேன்.

குறுகலான ஒரு வீதியைக் கடந்து அவர் வீட்டு வாசலில் கார் போய் நின்றிருக்கும்.மகன் மருமகள் பேரப்பிள்ளைகள் ஆச்சரியமாகப் பார்த்திருப்பார்கள். ஓட்டுநரிடம் "வரேன்ப்பா!
கிருஷ்ணன் கிட்டே சொல்லீடு" என்று சத்தமாகச் சொன்னபடியே வீட்டுக்குள் நுழைந்திருப்பார்."கல்கி நூற்றாண்டு விழாவுக்குப் போனேனா! சுப்புடு பார்த்துட்டார். நீங்க பாடியே ஆகணும்னு ஒரே பிடிவாதம். பாடினேன். அவங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம். நீங்க பஸ்லே போறதாவதுன்னு பிடிவாதமா கார் வைச்சு அனுப்பீட்டாங்க"என்று தோரணையாக சால்வையை
மருமகளிடம் நீட்டியிருப்பார்.

வீட்டில் சரிந்து கொண்டிருக்கும் செல்வாக்கை மீட்டுக்கொள்ள இந்தச் சின்ன நாடகம் அவருக்குப் பயன்பட்டிருக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன் அதே ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸில் சந்தித்த ஒரு பெரியவரின் ஞாபகம் வந்தது. திரு.கிருஷ்ணனை "என்னப்பா! சொல்லுப்பா" என்று தயங்கித் தயங்கி ஒருமையில் அழைப்பார். அடிக்கடி வந்து உதவிகள் பெறுவார். போகும்போது இன்னும் தயக்கமாய் "ஏம்ப்பா ! வாங்கிக்கட்டுமா? மைசூர்பா?" என்பார்.

கிருஷ்ணன் கையொப்பமிட்டுத் தரும் காகிதத்தைக் கவுண்ட்டரில் காண்பித்து ஒருகிலோ மைசூர்பா இலவசமாய் வாங்கிக் கொண்டு மெல்ல நகர்வார். வீட்டுக்குள் நுழையும்போது இவருடைய தோரணையும் மாறியிருக்கும்.

"இந்த கிருஷ்ணன் கூட ஒரே தொல்லையாப் போச்சு! வேணாம் வேணாம்னா கேக்கறதில்லை. ஒதுங்கிப் போனா கூட வம்பா கூப்பிட்டு கையில மைசூர்பாவைத் திணிச்சுடறது" என்ற செல்லச் சலிப்போடு மருமகள் கைகளில் கொடுத்திருப்பார்.

வீட்டுக்குள் சின்னச் சின்ன சலுகைகளைப் பெறவும் பெரிய மனிதர்களின் பரிந்துரைகள் தேவையாயிருக்கிறது பெரியவர்களுக்கு!!

எது குற்றம்? எது சட்டம்?

"தலைவர் மாறுவர் ! தர்பார் மாறும்! தத்துவம் மட்டும் அட்சய பாத்திரம்" என்றார் கவியரசு கண்ணதாசன். ஒரு கட்சியின் ஆட்சியில் தலைவர்களும் தர்பார்களும் மாறலாம். தத்துவம்
மாறலாமா? மாறலாம் என்கிறது காங்கிரஸ்.

இலங்கை மீதான போர்க்குற்றத்தை இலங்கையே பார்த்துக் கொள்ளும், விசாரித்துக் கொள்ளும் என்கிறார் எஸ்.எம்.கிருஷ்ணா. அப்படியானால் அவர் அங்கம் வகிக்கும் காங்கிரஸின் ஆட்சியில்சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அமைதிப்படை இலங்கைக்குப் போனது ஏன்? தன்னுடைய பிரச்சினையை இலங்கையே பார்த்துக்கொள்ளும் என்ற நிலைப்பாட்டை ஏன் அப்போது எடுக்கவில்லை?

இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவது என்பது ஒத்து வருகிற அம்சங்களுக்கும் ஒத்தூதுகிற அம்சங்களுக்கும் மட்டுமே என்கிற ஒருதலைப்பட்ச முடிவை எடுப்பது சந்தர்ப்பவாதம்.




கட்சியின் தேசியத் தலைவர் தன் கணவரைக் கொன்றவர்களை மன்னிக்கச் சொல்லி மனுப்போடுகிறார். மாநிலத்தலைவர் தூக்கில் போடச்சொல்லி தூபம் போடுகிறார். தூக்கு வேண்டாம் என்பது நீதிமன்ற அவமதிப்பு என்கிறார் தங்கபாலு. அப்படியானால் இவருடைய முரண்பட்ட அறிக்கை கட்சித் தலைமை அவமதிப்பல்லவா!!

எது குற்றம்?எது சட்டம்? என்ற கேள்வியை  ஆய்வு செய்கிற யாரும் மரண தண்டனையை மறுதலிக்கவே செய்வார்கள். இந்த உலகில் ஓர் உயிர் எத்தனை காலம் வசிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமையை கையிலெடுக்கக் கூடாது என்றுதான் கைது செய்கிறது சட்டம். அதே உரிமையை சட்டத்தின் பெயராலும் கையிலெடுக்கக் கூடாது என்பதுதான் மரணதண்டனைக்கெதிராக வைக்கப்படுகிற வாதம்.

மனித உயிர்களையும் மனித உரிமைகலையும் முன்வைக்கும் ஜனநாயக மாண்பிற்கு முற்றிலும் முரணானது மரணதண்டனை என்பதை இந்தியா முழுமைக்கும் தமிழகம் உணர்த்தும் என்பதே நமது நம்பிக்கை.

வேலூர் கோட்டையின் விபரீதத்தை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை தடுத்து நிறுத்த வேண்டும்,

Thursday, August 25, 2011

உளிகள் நிறைந்த உலகமிது - 15

எந்தத் துறையில் இருந்தாலும் அந்தத் துறை சார்ந்த நல்ல புத்தகங்கள் கையில் கிடைப்பதும் ஒருவகை கொடுப்பினைதான். அப்படியொரு கொடுப்பினையின் பேரில் எனக்குக் கிடைத்த புத்தகங்கள் ஓ&எம் என்று அழைக்கப்படும் விளம்பர நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான டேவிட் ஒகில்வியின் இரு புத்தகங்கள். ஓகில்வி ஆன் அட்வர்டைசிங் மற்றும் தி அன்பப்ளிஷ்ட் டேவிட் ஒகில்வி. இவை கல்லூரிப் பருவத்தில் எனக்குக் கிடைத்த புத்தகங்கள். நல்ல வேளையாக பாடமாக இல்லை.

டேவிட் ஒகில்வி (David Ogilvy)
இவை சமைத்துப் பாருங்கள் வகையறா புத்தகங்கள் அல்ல. விளம்பர நிபுணர் ஒருவரின் மனநிலை, வாழ்க்கைமுறை போன்ற அம்சங்களை உணர்வு ரீதியாய் உள்வாங்க உதவுகிற புத்தகங்கள் . ஒகில்வி அலுவலக சகாக்களிடம் நடந்து கொள்கிற முறை, அவர்  அனுப்பிய அலுவலகக் குறிப்புகள் ஆகியவை இரண்டாவது புத்தகத்தில் இருப்பவை. எனக்கு ஒகில்வியின் எழுத்துக்கள் அகஸ்மாத்தாக அறிமுகமாயின.

ஒரு விளம்பரத்துக்கு அங்கீகாரம் தர க்ளையண்ட் முரண்டு பிடித்தால் அவரை எப்படி சமாளிப்பது என்பதற்கு விளையாட்டாக ஒரு கவிதையை ஒகில்வி எழுதியிருப்பார். பெரும்பாலும் விளம்பரத்தின் தரம் படைப்பாக்கத்தின் துல்லியம் போன்றவற்றை மதிக்கத் தெரியாத வாடிக்கையாளர்களைக் கையாள்வதற்கான வழிமுறைகள் கொண்டவை அவை.

வாடிக்கையாளர் ரொம்ப சிணுங்கினால்
அவர் நிறுவன லோகோவை இருமடங்கு பெரிதாகப் போடு
இன்னும் அவர் சமாதானமாகவில்லையா?
அவருடைய தொழிற்சாலையின் படத்தைப் போடு
மனிதர் இன்னும் முரண்டு பிடிக்கிறாரா?
வேறு வழியே இல்லையா?
சரி சரி! அவர் புகைப்படத்தைப் போட்டுத் தொலை!!

If your client groans and cries
make his logo twice the size;
If he is still refractory
put a picture of his factory;
Only in the gravest cases
should you show the client`s faces;

தன்னுடைய நிறுவனத்தில் புதிதாக சேர்பவர்களுக்கெல்லாம் ரஷ்ய பொம்மை ஒன்றைப் பரிசளிப்பார் ஒகில்வி. அந்த பொம்மையின் கழுத்தைத் திருகித் திறந்தால் அதேபோல அதனினும் சிறிய பொம்மை ஒன்று இருக்கும்.அதற்குள் அதனினும் சிறிய பொம்மை. அதற்குள் அதனினும் சிறிதாய் மற்றொரு பொம்மை. அதற்குள் ஒரு சீட்டு வைத்திருப்பார் ஓகில்வி.

"தம்மைவிட சிறியவர்களை வேலைக்கு எடுத்தால் ஒரு நிறுவனம் சித்திரக் குள்ளர்களின் கூடாரமாகிவிடும். தம்மை விடப் பெரிய திறமை வாய்ந்தவர்களை  வேலைக்கு எடுத்தால் அந்த நிறுவனம் அசுரத்தனமாக வளரும்.அந்த நம்பிக்கையில்தான் உங்களை வேலைக்கு எடுத்திருக்கிறோம்".

ஒகில்விக்கு அபாரமான நகைச்சுவையுணர்வும் உண்டு.கிறுக்குத் தனமாக யோசிப்பவர்களுக்கே புதுமையான சிந்தனைகள் தோன்றும் என்று நம்பினார். ஓ&எம் நிறுவனத்தின் ஜகார்தா கிளையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கென் பிராடி என்ற இளைஞருக்கு 29 வயதான போது அவருக்கு ஒகில்வியிடமிருந்து வந்த வாழ்த்து வாசகங்கள் இவை:

"நீ அபாரமான இளைஞன். நம் நியூயார்க் அலுவலகத்துக்கு வா! நான் உன் கைகளைக் குலுக்க வேண்டும்". வந்தவருக்கு ஒகில்வி சொன்ன உபதேசம் என்ன தெரியுமா?"

"இங்கே பார்! கிறுக்குத்தனத்தை மட்டும் இளமையிலிருந்தே நன்றாக வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான், பிற்காலத்தில் அது முதுமைக்கோளாறு என்று யாரும் தவறாகப் பேச மாட்டார்கள்".  

ஒகில்வியின் மதிப்பீடுகளில் இன்றும் செல்லுபடியாகக் கூடிய விஷயம் என்று நான் கருதுவது, தொலைக்காட்சி விளம்பரங்களுக்கும் அச்சு விளம்பரங்களுக்கும் வேண்டிய அம்சங்கள்  என்று அவர் சொன்னவைதான். தொலைக்காட்சி விளம்பரத்தில் சுவாரசியம் தூக்கலாக இருக்க வேண்டும், அச்சு விளம்பரத்தில் சாமர்த்தியம் தூக்கலாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கான விளம்பரங்கள் மற்ற தொலைக்காட்சிகளிலும் இடம் பெற்றதைப் பார்த்திருப்பீர்கள். இது மிக முக்கியமான ஊடகப் புதுமை. போட்டியாளர்களின் கோட்டைக்குள் தங்கள் கொடியை அறிமுகம் செய்வது போலத்தான்.

அமெரிக்காவில் ஒருமுறை தொலைக்காட்சி செய்திகள் நடுவே ஒரு செய்தித்தாளின் விளம்பரம் ஒளிபரப்பானது. அந்த விளம்பரம் தொலைக்காட்சி செய்திகளையே நக்கலடித்ததுதான் சுவாரசியம்.

"இந்த செய்திகளை ஆற அமர விரிவாகப் படித்தால்தானே நல்லது. அவசரம் அவசரமாக வாசித்தால் பயனுண்டா? செய்தித்தாளில் படித்தால் அந்தப் பகுதியைக் கத்தரித்து வைத்துக் கொள்ளலாம். இன்னும் எவ்வளவோ பயன்கள். ஆனால் ஒரு விஷயம். செய்தித்தாள்களின் பயனை தொலைக்காட்சியின் சில விநாடிகளில் சொல்லிவிட முடியுமா என்ன?. இது சாமர்த்தியமா?சுவாரசியமா? இரண்டும்தான்.

விளம்பரங்களில் இடம்பெறும் சுவாரசியமும் சாமர்த்தியமும் ஒட்டுமொத்த ஜனத்தொகைக்கும் புரியவேண்டும் என்று அவசியமா? அவசியமில்லைதான். உங்கள் இலக்குக்குட்பட்ட வாடிக்கையாளர் யாரோ அவர்களுக்குப் புரிய வேண்டியது மிகவும் அவசியம்.அவர்கள் வாழ்க்கைத் தரத்தின் பாஷையில் அவர்களுக்கு சுவாரசியம் தருகிற விதமாக விளம்பரம் அமைந்தால் போதும்.

சமீபத்தில் ஒரு கார் விளம்பரம் பார்த்தேன்.ஒரு பெண் குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி ஓர் இளைஞனை அழைக்கிறாள்.

"தேடுவது?"

"அதான் நம்ம search engine இருக்கே என்று உற்சாகமாய்க் கிளம்புகிறான் இளைஞன். காரை சர்ச் என்ஜின் என்று சொல்வது இளைஞர் வட்டாரத்தில் கவனிக்கப்படும். பக்கத்து வீடு எங்கே
இருக்கிறது என்று பார்க்கவே சர்ச் என்ஜின்களை நம்பும் இந்தத் தலைமுறையின் இதயங்களில் இந்த விளம்பரம் இடம் பிடிக்கும்.

இந்த விளம்பரத்தில் சுவாரசியமும் இருக்கிறது. சாமர்த்தியமும் இருக்கிறது. சாமர்த்தியமும் சுவாரசியமும் மிக்க விளம்பரங்கள் சந்தையில் வெல்கின்றன. பல நேரங்களில் சந்தையையே வென்றெடுக்கின்றன.

(தொடரும்...)

Monday, August 22, 2011

கமலாம்பா

(17.08.2011.திருவாரூர் கமலாம்பிகை சந்நிதி .இரவு 9 மணி.தரிசனத்துக்கு வந்திருந்ததொரு தளிர்.இரண்டு கமலாம்பிகைகளின் இணைந்த தரிசனம்)

சந்நிதி முன்வந்த சின்னஞ் சிறுமியின்
கண்களில் கமலாம்பா
பொன்னிதழ் மின்னும் புன்னகைச் சுடரில்
பொலிந்தவள் கமலாம்பா
மின்னல்கள் விசிறும் தாடங்க அசைவில்
மிளிர்ந்தவள் கமலாம்பா
என்னெதிர் நின்றவள் என்னுள் புகுந்தவள்
இவள்தான் கமலாம்பா

சிற்றாடைக்குள் சித்த சொரூபமாய்
சிரித்தவள் கமலாம்பா
உற்றார் நடுவினில் உறவின் கனிவாய்
உதித்தவள் கமலாம்பா
கற்றார் கல்வி கனிந்தே உருகக்
கனிந்தவள் கமலாம்பா
பெற்றார் உடனே பிள்ளை உருவில்
புகுந்தாள் கமலாம்பா



பாதங்கள் அசைந்த நாத லயந்தனில்
பார்த்தேன் கமலாம்பா
ஏதும் மொழியா இதழ்களின் சுழிப்பில்
இருந்தாள் கமலாம்பா
வேதனை தீர்க்கும் வேத முதலென
வந்தாள் கமலாம்பா
ஜோதியின் நடுவிலும் சந்நிதி எதிரிலும்
சிரித்தாள் கமலாம்பா

வந்தவர் மனங்களில் வந்தவள் தானென்று
விதைத்தாள் கமலாம்பா
எந்தச் சலனமும் இல்லாச் சிறுமியாய்
எதிரே கமலாம்பா
தந்தை விரல்பற்றித் தளிர்நடை நடந்தாள்
தேவி கமலாம்பா
சுந்தரி பேரென்ன? நர்மதா என்றே
சொன்னாள் கமலாம்பா
 

Sunday, August 21, 2011

உளிகள் நிறைந்த உலகமிது - 14

வாடிக்கையாளர்களின் உணர்வுகளும் அபிமானங்களும்
 விளம்பரங்களின் அடித்தளங்கள்.ஒரு மனிதனை அறிவு ரீதியாய்
அணுகுவதை விட உணர்வு ரீதியாய் நெருங்குவது மிகவும் எளிது. பார்த்த மாத்திரத்தில் புன்னகையை உருவாக்குவது வெற்றிகரமான விளம்பரத்தின் இலக்கணம்.

மனிதனின் மென்னுணர்வுகள் நோக்கி வீசப்படும் எந்த மலரையும் யாரும் புறக்கணிப்பதில்லை. திருமணம், குழந்தை வளர்ப்பு கிரஹப்பிரவேசம் போன்ற சந்தோஷமான சூழல்களை மையப்படுத்தும் விளம்பரங்கள் வெற்றிபெற இதுதான் காரணம். தனியார் தொலைக்காட்சிகள் அதிகமுள்ள இந்தக் கால கட்டத்தில் இத்தகைய விளம்பரங்களை உருவாக்குவது எளிது மட்டுமல்ல. அவை வெகு விரைவில் நுகர்வோர் மனங்களில் இடம் பிடிக்கவும் செய்கின்றன.

ஆனால் அச்சு விளம்பரங்களே அதிகம் செய்யப்பட்ட காலங்களில் விளம்பரத்தின் தலைப்பு வாசகங்களை வைத்துத்தான் மென்னுணர்வின் வட்டத்திற்குள் முத்திரை பதிக்க முடியும்.

ஈரோடு பரணி சில்க்ஸ் நிறுவனத்தின் கல்யாணப்பட்டு ஜவுளிகளுக்கு பல்லாண்டுகள் முன்னர் எழுதிய தலைப்பு வாசகம் இன்னும் என் நினைவில் இருக்கிறது.

"பத்துப் பொருத்தமும் இருக்கு! பட்டுப் பொருத்தமும் இருக்கு!"




பெரும் பொருள்செலவில் வாங்கப்படும் சாதனங்களைத் தவிர வாழ்வுக்குத் தேவையான பிற அம்சங்களை மனிதர்கள் உணர்வு ரீதியாகத்தான் பார்க்கிறார்கள்.இன்று குடும்பம் என்பதுகூட குழந்தைகளை மையப்படுத்திய விஷயமாகத்தான் பெற்றோர்களால் பார்க்கப்படுகிறது. பெற்றோர்களுக்கே அப்படியென்றால் குழந்தைகளுக்குக் கேட்கவும் வேண்டுமா? தங்கள் நலனைச் சுற்றியே தாயும் தந்தையும் இயங்குவதை அவர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

என் நண்பர் ஒருவர் தன் எட்டு வயது மகனுடன் கம்ப்யூட்டர் டேபிள் வாங்கப் போனார். "சின்ன டேபிளாக இருந்தால்தான் ஃபியூச்சரில் இடம் மாற்றிப் போட வசதியாக இருக்கும்"என்று தன் மனைவியிடம் அவர் சொலதைக்கேட்ட மகன் வியப்புடன் கேட்டான்.. "ஃபியூச்சரா?அப்ப நான்தானே இருப்பேன். நீங்க ரெண்டு பேரும் இருக்க மாட்டீங்க தானே!"

வாழ்க்கையை அனுபவிக்காமல் வேகவேகமாக ஓடும் நடுத்தர வயதினர் தங்களுக்குத் தாங்களே சொல்லிக் கொள்ளும் சமாதானம், "இதெல்லாம் யாருக்காக? நம்ம குழந்தைங்களுக்காகத்தானே!" இந்த சென்டிமெண்ட்டை குறிபார்த்துத் தாக்கும் விளம்பரங்களுக்குப் பஞ்சமேயில்லை.குழந்தைகள் கல்விக்கான சேமிப்பு, குழந்தைகள் ஆரோக்கியத்துக்கான பானம்,சோப், தண்ணீர் சுத்திகரிப்புக் கருவி என்று எல்லாமே...

அதேநேரம் தொழில்நுட்பத்தின் அதிரடி மாற்றங்களை மூத்த  தலைமுறையின் புரிதல் வளையத்துக்குள் கொண்டு சேர்க்கும் முயற்சிகளும் விளம்பரங்கள் வாயிலாகவே நடைபெறுகின்றன. இன்றைய தலைமுறையினர் சாஃப்ட்வேர் சாம்ராஜ்யத்தின் முடிசூடா அரசர்களாகவும் அரசிகளாகவுமே இருக்கிறார்கள்.

அவர்கள் வேலை, அவர்கள் சம்பளம் வீட்டுக்கு வந்தாலும் சதா சர்வநேரம் கம்ப்யூட்டர் முன்பாகவே இருக்கும் அவர்களின் தேடல் எதுவுமே பெரும்பாலான பெற்றோர்களுக்கு புரிவதில்லை. வரன் பார்க்கலாமா என்று கேட்டாலும் சண்டைதான் வருகிறது. மேட்ரிமோனி சேவைகள் பற்றிய அபிப்பிராயம் எதுவும் பெற்றோருக்குக் கிடையாது.

தன் பெண்ணின் வாழ்க்கை முறைக்குப் பொருந்துகிற வரன் எங்கே கிடைக்கும் என்று கவலைப்படுகிற் பெற்றோருக்கு, அவர்கள் மகள் கட்டிக் கொண்டு அழுகிற கம்ப்பூட்டர் வழியாகவே வரன் அமையும் என்று தெரிந்தால் சந்தோஷம்தானே!!

மேட்ரிமோனி நிறுவனம் ஒன்றின் தொலைக்காட்சி விளம்பரத்திற்கு சில ஆண்டுகள் முன் ஒரு ஸ்டோரி போர்ட் உருவாக்கினேன். கம்ப்யூட்டர் முன்பாகவே அமர்ந்திருக்கிற மகளை அம்மாவும் அப்பாவும் கவலையுடன் பார்த்து கண்களால் பேசிக்கொள்கிறார்கள். உதட்டசைவு ஏதுமின்றி பின்னணியில் பாடல் ஒலிக்கிறது.

"பரபரப்பான சாஃப்ட்வேர் பெண்ணுக்கு மணமகன் கிடைப்பானோ!"

காலிங்பெல் ஒலிக்க பெண் வேகமாகச் சென்று பீட்சாவை வாங்கிக் கொண்டு அவசரம் அவசரமாய் கம்ப்யூட்டர் முன் மீண்டும் அமர்ந்து கொள்கிறாள்,பாடல் தொடர்கிறது..

"ஆர்டர் செய்தால் பீட்சா வரலாம் மாப்பிள்ளை வருவானோ!"
 
உண்மையில் மகள் கணினியில் பார்த்துக் கொண்டிருப்பது மேட்ரிமோனியல் தளத்தைத்தான். சரியான வரன் கிடைத்த மகிழ்ச்சியில் பெற்றோரை அழைத்துக் காட்டுகிறாள். அவர்கள் முகங்களில் சோர்வு மாறி ஆனந்தம், பரவசம், எல்லாமே.. பாடல் தொடர்கிறது...

"இதுவொரு புதுவித சுயம்வரமே
கணினியில் வரன்கள் வரும்வருமே
விரல்களின் நுனியில் உறவொன்று மலரும்
புதுவித அதிசயமே" 
 

மேட்ரிமோனி தளத்தின் பெயரைப்போட்டு புதுவித சுயம்வரம் என்ற வரிகளுடன் ஃப்ரீஸ் செய்யும் விதமாக அந்த ஸ்டோரிபோர்டை உருவாக்கிக் கொடுத்தேன்.

அதேபோல ஒரு நிறுவனத்தின் பெயர் மாற்றம் என்பது மிகவும் முக்கியமான விஷயம். தகவல்களை மையப்படுத்தித்தான் அந்த விளம்பரத்தை உருவாக்க முடியும்.ஆனால் அது வறண்ட அறிவிப்பாய் மாறிவிட வாய்ப்பிருக்கிறது.

ஈரோடு பரணி சில்க்சென்டர் பல வித்தியாசமான விளம்பரங்களுக்குப் பெயர் பெற்றது. அந்த நிறுவனத்தின் பெயர்  பரணிசில்க்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு விளம்பரம் வெளியிடுவதா வேண்டாமா என்று அவர்களுக்குள்ளாகவே விவாதித்து, விளம்பர வாசகம் சரியாக அமைந்தால் வெளியிடலாம் என்று முடிவெடுத்தார்கள்.

எழுதிக் கொடுத்த மறு விநாடியே மிகுந்த உற்சாகத்துடன் அனைவரும் ஏற்றுக்கொண்ட தலைப்பு வாசகம் இதுதான்..


 
"உங்களுக்குப் பிரியமான ஈரோடு பரணி சில்க் சென்டர்
  இனி செல்லமாய்................
  ஈரோடு பரணி சில்க்ஸ்!!"


விளம்பரம் வெளிவந்த அன்று கடைக்கு ஜவுளி எடுக்க வந்த பலரும் கேட்டது,"அப்படியே செல்லமா ஒரு டிஸ்கவுண்ட் போடுங்க பார்க்கலாம்!" அந்த வார்த்தை வாடிக்கையாளர்களிடம் புன்னகையை வரவழைத்ததுடன் மனதிலும் பதிந்தது. அதன் விளைவாக அந்த ஆண்டு பரணி சில்க்ஸுக்காக வானொலி தொலைக்காட்சி விளம்பரங்கள் உருவாக்கியபோது எழுதிக் கொடுத்த பாடல் இப்படித் தொடங்கியது..

  "கல்யாணப் பட்டெடுக்க செல்லமே செல்லம்
ஈரோடு பரணிசில்க்ஸ் செல்லமே செல்லம்


(தொடரும்)

Sunday, July 24, 2011

உளிகள் நிறைந்த உலகமிது - 13

புதியமுத்தூரிலிருந்து ஒருவர் என்னைச் சந்தித்தார். தன்னை அவர் அறிமுகப்படுத்திக் கொண்ட விதமே அலாதியானது."வணக்கம் சார்! என் பேரு கணேசன். தமிழாசிரியர். எங்க ஊர்லே பெரிய ஆளுங்ககிட்டே நன்கொடைகள் வாங்கி, எலக்கிய விழாக்கள் விடாம நடத்தறேன். எங்கூர்லே கூட கேப்பாங்க..உம்ம பேரு கணேசனா? டொனேசனான்னு".

நன்கொடை வாங்கப் போகிறவர்கள் கையில் எலுமிச்சம்பழம் கொண்டு போவது வழக்கம். அதற்குக் காரணம் மரியாதை மட்டுமல்ல. அங்க இலக்கண சாஸ்திரமும் அதிலே இருக்கிறது. சந்திக்கப்படும் பெரிய மனிதர் எலுமிச்சம்பழத்தை கைநீட்டி வாங்கும்போது மணிக்கட்டின் உட்புறத்தில் மூன்று கோடுகள் இருந்தால் போன காரியம் பழம் என்று அர்த்தம்.தைரியமாக பத்தாயிரம் ரூபாய் ரசீது நோட்டைத் திறக்கலாம். கோடுகள் கம்மியாய் இருந்தால் எலுமிச்சம்பழம் நஷ்டம். துணிவிருந்தால் தில்லானா மோகனாம்பாள் வைத்தி போல, "அந்தப் பழத்தைக் கொஞ்சம் தரேளா"என்று வாங்கி வந்து விடலாம்.

நாம் எய்யும் அஸ்திரம் சரியான இடத்தைச் சேர்கிறதா என்று பார்ப்பது நன்கொடை வாங்கவே அவசியம் என்றால் விளம்பரத்தில் அதன் பங்கு மிக மிக முக்கியம். எந்த நுகர்வோரை மனதில் கொண்டு அந்தத் தயாரிப்பு சந்தைக்கு வருகிறதோ, அந்த நுகர்வோரின் வாழ்க்கை முறையை ஆராய்வதும், அவர்களுக்குப் பரிச்சயமான ஊடகங்களில் அவர்கள் மனதில் பதியும் விதமாக விளம்பரங்களை இடம்பெறச் செய்ய வேண்டும். இதற்கு மீடியா பிளானிங் என்று பெயர். இந்த ஊடகப்புரிதல் விளம்பர உலகில் பெரும் பங்கை வகிக்கிறது. பெரும்பாலான நாளிதழ்களில் முதல் பக்க விளம்பரக் கட்டணம் 100% அதிகம். முதல் பக்கத்தில் வெளிவருவதால் மட்டுமே விளம்பரம் ஜெயிக்கும் என்று பொருளல்ல.

அதையும் தாண்டி ஊடகப் புரிதலில் எத்தனையோ அம்சங்கள் உண்டு. கயிலாய யாத்திரை விளம்பரத்தை கனாக்காணும் காலங்கள் தொடரில் போடுவதில் எந்தப் பயனும் இல்லை. அதேபோல தயாரிப்பின் மார்க்கெட்டிங் உத்திகளுடன் ஒத்துப் போகிற விதமாக விளம்பர உருவாக்கமும் மீடியா பிளானிங்கும் இருந்தால் வெற்றி வாய்ப்பு அதிகம்.

"ஃபிராஞ்ச் ஆயில் எங்கேப்பா" என்றொரு விளம்பரம் நினைவிருக்கிறதா? அவர்கள் துணிச்சலாய் ஒரு முடிவெடுத்தார்கள். சந்தைக்கு ஃபிராஞ்ச் ஆயில் வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பே எல்லா ஊடகங்களிலும் விளம்பரங்களை வெளியிட்டு விட்டார்கள். நுகர்வோர்கள் கடை கடையாக ஏறி "ஃபிராஞ்ச் ஆயில் எங்கேப்பா" என்று அலைமோதினார்கள். கிடைக்கவில்லை என்றதும் விற்றுத் தீர்ந்ததாக நினைத்துக் கொண்டு இன்னும் தீவிரமாகத் தேடினார்கள். இரண்டு நாட்களில் சந்தைக்கு வந்ததும் மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்தது.

எனவே விளம்பரங்கள் என்பவை வெற்றுக் கற்பனைகளின் விளையாட்டுக் கூடமல்ல. கள ஆய்வை வேராகக் கொண்டு வளரும் பணப்பயிர். படைப்பாக்கப் பிரிவு, வாடிக்கையாளர் சேவைப்பிரிவு ஊடகப் பிரிவு என்று விளம்பர நிறுவனத்தின் விரலுக்கேற்ற வீக்கங்கள் பல பிரிவுகளாக உண்டு.

இதில் ஊடகப் பிரிவு ஊடகங்களுடன் உறுதியான உறவை உருவாக்கிக் கொள்ளும். நாளிதழ்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி விளம்பர சேகரிப்பாளர்கள் எல்லோருமே விளம்பர நிறுவனங்களின் ஊடகப்பிரிவு அலுவலர்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். சிலசமயம் அந்த நெருக்கமே நெருக்கடி ஏற்படுத்திவிடும்.

உதாரணமாக, வாடிக்கையாளர்களை நாளிதழ்களின் விளம்பர அலுவலர்களும் சென்று பார்ப்பார்கள். சிறப்பிதழ் ஷாப்பிங் ஸ்பெஷல் என்று சில திட்டங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்வார்கள். வாடிக்கையாளர்கள் விரும்பினால், தங்களுடைய விளம்பர நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, விளம்பரம் வெளியிடச் சொல்வார்கள்.இதுதான் நடைமுறை.

ஒரு பிரபல விளம்பர நிறுவனத்திற்கு வாடிக்கையாளரின் அலுவலகத்தில் இருந்தபடியே நாளிதழின் விளம்பர அலுவலர் தொலைபேசியில் அழைத்தார். அந்த வாடிக்கையாளரின் பெயர் குப்புசாமி என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அந்த வாடிக்கையாளருக்கு சேவை செய்யும் அலுவலரிடம் பேசினார்."அப்படியா! குப்புசாமி சார் கிட்டே பேசீட்டீங்களா? சார் அப்ரூவ் பண்ணீட்டா விளம்பரம் தயார் பண்ணிடலாம்" என்று பேசினார். பிறகு தொலைபேசி அழைப்பு விளம்பர நிறுவனத்தின் ஊடகப் பிரிவு அலுவலருக்கு மாற்றப்பட்டது.

அவர் உற்சாகமாக, "யோவ்! நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது. அந்த குப்புசாமியை கோழி அமுக்கு அமுக்கி ஆர்டர் வாங்கீடு!" என்றார். அடுத்த விநாடியே அந்த விளம்பர ஆர்டர் ரத்து செய்யப்பட்டதுடன் அந்த விளம்பர நிறுவனத்துடனான தொடர்பையும் அந்த வாடிக்கையாளர் முறித்துக் கொண்டார்.

ஏனென்றால் குப்புசாமி எப்போது  எப்போது தொலைபேசியில் பேசினாலும் ஸ்பீக்கரில் போட்டுத்தான் பேசுவார். அவருடைய தொலைபேசியிலிருந்து தான் நாளிதழின் விளம்பர அலுவலர் அழைத்திருக்கிறார். தொலைபேசி ஸ்பீக்கர் ஆன்னாகி இருக்கும் விஷயம், அவரை விடாமல் சந்தித்துக் கொண்டிருக்கும் வாடிக்கையாளர் சேவை அலுவலருக்குத் தெரியும். எனவே மரியாதையாகப் பேசி தப்பித்துக் கொண்டார். அந்த வாடிக்கையாளரை சந்தித்தே இராத ஊடகப் பிரிவு அலுவலர் விபரம் தெரியாமல் விளையாட்டாகப் பேசி மாட்டிக் கொண்டார்.

நானறிந்த விளம்பர நிறுவன அதிபர் ஒருவரின் இயல்பு என் நினைவுக்கு வருகிறது. அவர் ஒரு வாடிக்கையாளரை சந்திக்கப் போனால், அந்த வாடிக்கையாளருக்குத் தருகிற அதே மரியாதையை அங்கிருக்கும் ஒவ்வோர் அலுவலருக்கும் தருவார். குறிப்பாக டெலிபோன் ஆபரேட்டரை சந்தித்து நலம் விசாரித்து நட்புடன் பேசி பிறகுதான் நகர்வார். காரணம் கேட்டால், "சார்! கிளையண்ட் நம்மை கூப்பிடச் சொல்லி அபரேட்டர் கிட்டே சொல்வார். அவங்களுக்கு நம்மை பிடிக்காட்டி என்ன வேணும்னாலும் சொல்லீட முடியும்! கூப்பிட்டேன் - பிசியா இருக்கேன்னு சொல்லீட்டாரு, இப்ப வர முடியாதுன்னு சொல்லீட்டாருன்னு எது வேணும்னாலும் சொல்லி நம்ம உறவை வீணாக்க முடியும் சார்!' என்பார்.

வாடிக்கையாளர்களுடனான உறவையும் ஊடகங்களுடனான உறவையும் பேணிக்காப்பதில் விளம்பர நிறுவனங்கள் எப்போதுமே விழிப்பாக இருக்கும்.

(தொடரும்)

Sunday, July 17, 2011

சங்கல்பம்

பயணம் என்பதுன் சங்கல்பம்
பாதையின் திருப்பம் அவள்விருப்பம்
முயற்சிகள் யாவுமுன் மனபிம்பம்
முடித்துக் கொடுப்பது அவள்விருப்பம்
துயரங்கள் உனது வினைபந்தம்
துடைப்பதும் எரிப்பதும் அவள்வழக்கம்
உயரங்கள் பள்ளங்கள் உன்கலக்கம்
உடனிரு என்பதே அவள்விளக்கம்

நாளும் நிமிஷமும் உன்கணக்கு
நொடிகளில் மாறிடும் அவள்கணக்கு
கோள்களின் அசைவினில் வாழ்வுனக்கு
கோயிலில் நுழைந்தால் விதிவிலக்கு
நீள்வதும் தொடர்வதும் உன்னிருட்டு
நீக்கிட வருமவள் திருவிளக்கு
தாள்களைத் தொடும்வரை உன்னிருப்பு
தொட்டதும் தொலைந்திடும் ஏழ்பிறப்பு





எவரெவர் வடிவினில் எதிர்ப்படுவாள்
என்னென்ன வார்த்தைகள் உரைத்திடுவாள்
எவருக்கும் இதுவரை தெரியாது
எதிர்வந்து நிற்பதும் புரியாது
தவறென்றும் சரியென்றும் தடமிருக்கும்
தர்மத்தின் சக்கரம் சுழன்றிருக்கும்
அவளிடம் சூட்சுமம் ஒளிந்திருக்கும்
அவளால் நம்திசை ஒளிர்ந்திருக்கும்

காற்று கலைக்கிற நந்தவனம்
கொட்டும் மலர்களின் சிலிர்ப்பினில்பார்
ஊற்றில் பெருகும் நீரலைகள்
உத்தமி பின்னே ஓடுதல்பார்
மாற்றுப் பொன்னெனும் கதிரொளியும்
மாதுமை அருளெனப் பரவுதல்பார்
ஏற்றிய சூரியச் சுடரொளித்தே
ஏறும் இருளினில் அவளெழில் பார்

ஒவ்வொரு கணமும் உடன்வருவாள்
உனக்கென சுவாசமும் கடன்தருவாள்
கவ்விடும் வலிகளில் கலந்திருப்பாள்
காயத்தின் பரப்பிலும் உலர்ந்திருப்பாள்
எவ்விதம் உனையவள் மறந்திடுவாள்
இவளா உன்னைக் கைவிடுவாள்
செவ்வியள் திருவுளம் வைத்துவிட்டால்
செகமே உனக்கெனத் தந்திடுவாள்

என்ன கேட்பதோ ? தெரியவில்லை
எதையவள் இதுவரை வழங்கவில்லை
சொன்ன வார்த்தையோ சொன்னதுதான்
சிறிதும் அவள்சொல் பிறழவில்லை
தன்னைப் பெரிதாய் நினைக்கையிலே
தென்படமாட்டாள் பார்வையிலே
தன்னை அவளிடம் தந்தபின்னே
தனியாய் நாமில்லை வாழ்வினிலே 

Saturday, July 16, 2011

உளிகள் நிறைந்த உலகமிது - 12

காட்சி பூர்வமாக சிந்தித்தல் என்பது விளம்பர உலகத்துக்கான வேத வாக்கியங்களில் ஒன்று. காட்சி ஊடகங்களுக்கு மட்டுமின்றி அச்சு ஊடகங்களுக்கும் இது பொருந்தும். திரையிசையில் மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்பது போலத்தான் இதுவும். சிலசமயம் நீங்கள் எழுதுகிற விளம்பரத்திலேயே காட்சி அமைப்புக்கான தூண்டுதல் இருக்கும். சில சமயம் வரைகலையாகவோ புகைப்படமாகவோ தரும் விஷுவல் உங்களை எழுதத் தூண்டும்.

எய்ட்ஸ் தடுப்பு நிறுவனத்துக்கு சசியில் இருந்த போது எழுதிய விளம்பர வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது. தரப்பட்டிருந்த புகைப்படம் இதுதான். ஒரு சதுரங்கப் பலகை. காய்களுக்கு பதிலாக போதை மருந்து ஊசிகள் மாத்திரைகள். ஒரு மனிதக்கை. எதிர்ப்புறம் ஓர் எலும்புக்கூட்டின் கைக்கூடு.




 இதற்குக்கீழே நான் எழுதித்தந்த வாசகம் இடம் பெற்றது."இந்த சதுரங்க விளையாட்டு சாவிலே முடியும்....எல்லாக் காய்களுமே எமதூதர்கள்". இது மெட்டுக்குப் பாட்டு வகையறா.

பெரிய மரப்பலகைகளில் சுத்தியல் கொண்டு ஆணி அடிப்பது பெரும் சப்தத்தையும் இடைஞ்சலையும் ஏற்படுத்தும். இதற்கும் ஒரு கருவி வந்தது. மின்சாரத்தில் இயங்கும் அந்தக் கருவியின் முனையில் நிறைய ஆணிகள் இருக்கும்.கோலத்துக்குப் புள்ளி வைப்பதுபோல வரிசையாக ஆணிகளைப் பொருத்திக் கொண்டே போகலாம். யு.எம்.எஸ் நிறுவனம் இந்தக் கருவியைத் தயாரித்திருந்தது.

நிறுவனங்களுக்குப் பெரிதும் பயன்படக் கூடிய இந்தக் கருவிக்கான விளம்பரத்தை சுவாரசியம் மிக்கதாய் ஆக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். வாழைப்பழத்தில் குண்டூசி குத்தியிருப்பது போல் ஒரு புகைப்படம் எடுக்கச் செய்து, அதையே விஷுவலாக அமைத்து, "இனி பேக்கிங்குகளில் ஆணியடிப்பது இத்தனை எளிது" என்கிற பொருளில் ஒரு வாக்கியம் அமைத்திருந்தேன்.

வாசகத்துக்கு விஷுவலோ அல்லது விஷுவலுக்கு வாசகமோ ஒன்றுக்கொன்று பொருத்தமாக இருந்தால் போதாது. யார் அந்த விளம்பரத்தின் இலக்கோ அவர்கள் கவனத்தை ஈர்ப்பது போல் அமைவதும் அவசியம். இதை, Appealing to the target segment  என்று சொல்வார்கள்.

உதாரணமாக யு.எம்.எஸ் நிறுவனத்தின் ஆணிகள் பொருத்தும் கருவி குறித்து இந்தக் கட்டுரையில் எழுதும்போது இயல்பாக வந்த விஷயம், "கோலத்துக்குப் புள்ளி வைப்பது போல" என்கிற வரி. இதையே விளம்பரத்துக்கான காட்சியாகவும் வாசகமாகவும் பயன்படுத்தியிருக்க முடியுமா என்று யோசிக்கிறேன். முடியாது என்றே தோன்றுகிறது. ஏனெனில் தொழில்நுட்பம்
சார்ந்த மனிதர்கள் இந்த விளம்பரத்தின் இலக்கு. கோலத்துக்கு புள்ளி வைப்பது சுலபமா சிரமமா என்று அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பு குறைவு. அவர்களுக்கு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் சொன்னால்தான் சரிப்படும்.


கோவையின் புகழ்பெற்ற கே.ஜி.மருத்துவமனையில், மூளைச்சாவு நிகழ்ந்த ஒருவரின் உடல் உறுப்புகள் சில இரண்டு நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டன. இதற்காக அஞ்சலி விளம்பரம் ஒன்றினை ஆங்கில நாளிதழ் ஹிந்துவில் வெளியிட அந்த மருத்துவமனை எண்ணியது. பொதுவாக அஞ்சலி விளம்பரம் என்றால் ஒரு புகைப்படத்தை நடுவில் போட்டு இரண்டு  புறங்களிலும் விளக்குகளை வைத்து விடுவார்கள். அதே போல லே அவுட் செய்து இறந்தவரின் புகைப்படம் வைக்கும் இடத்தில் அணைந்து புகை கிளம்பும் தீக்குச்சி ஒன்றின் படத்தைப் பெரிதாக அமைத்தேன். அதன் கீழ் The matchstick is gone.But the  light which it left beind is.....matchless!! என்று எழுதி அதன்கீழ் இறந்தவரின் புகைப்படமும் உறுப்புதானம் பற்றிய விபரங்களும்
இடம்பெறுமாறு செய்தேன்.

மேற்குறித்த இரு விளம்பரங்களுமே ராகா ஆட்ஸ் என்ற பெயரில் இயங்கிய ராகவேந்திரா அட்வர்டைசிங் நிறுவனம் உருவாக்கியவை.

வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனையில் புகழ்பெற்ற  விவேக் & கோ நிறுவனத்திற்கு பிஃப்த் எஸ்டேட் நிறுவனம் புத்தாண்டு விற்பனைக்கான விளம்பரங்களை வெளியிடும். பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என்று சகல ஊடகங்களையும் பயன்படுத்துவார்கள்.

பத்து பத்து விநாடிகளாக விதம்விதமான விளம்பரங்களை வெளியிட முடிவு செய்து அதற்கான கருத்துருவாக்கங்களை விவாதித்துக் கொண்டிருந்த போது ராதிகா சொன்ன ஒரு யோசனை இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது. மலையுச்சியிலிருந்து ஒரு பாறை உருண்டு வந்து தரையில் விழுவதை ஏழு நொடிகள் காட்ட வேண்டும். கடைசி மூன்று நொடிகள் கொட்டை எழுத்தில் Rock Bottom Prices..only @ Viveks என்ற வாசகம் போட வேண்டும் என்றார் ராதிகா.

ஆனால் விஷயம் என்னவென்றால், மேற்குறிப்பிட்ட விளம்பரங்களில் எய்ட்ஸ் சதுரங்கம், வாழைப்பழ ஊசி தவிர வேறெவையும் கிளையண்ட் ஒப்புதலைப் பெறவில்லை !!

(தொடரும்)