Sunday, July 17, 2011

சங்கல்பம்

பயணம் என்பதுன் சங்கல்பம்
பாதையின் திருப்பம் அவள்விருப்பம்
முயற்சிகள் யாவுமுன் மனபிம்பம்
முடித்துக் கொடுப்பது அவள்விருப்பம்
துயரங்கள் உனது வினைபந்தம்
துடைப்பதும் எரிப்பதும் அவள்வழக்கம்
உயரங்கள் பள்ளங்கள் உன்கலக்கம்
உடனிரு என்பதே அவள்விளக்கம்

நாளும் நிமிஷமும் உன்கணக்கு
நொடிகளில் மாறிடும் அவள்கணக்கு
கோள்களின் அசைவினில் வாழ்வுனக்கு
கோயிலில் நுழைந்தால் விதிவிலக்கு
நீள்வதும் தொடர்வதும் உன்னிருட்டு
நீக்கிட வருமவள் திருவிளக்கு
தாள்களைத் தொடும்வரை உன்னிருப்பு
தொட்டதும் தொலைந்திடும் ஏழ்பிறப்பு





எவரெவர் வடிவினில் எதிர்ப்படுவாள்
என்னென்ன வார்த்தைகள் உரைத்திடுவாள்
எவருக்கும் இதுவரை தெரியாது
எதிர்வந்து நிற்பதும் புரியாது
தவறென்றும் சரியென்றும் தடமிருக்கும்
தர்மத்தின் சக்கரம் சுழன்றிருக்கும்
அவளிடம் சூட்சுமம் ஒளிந்திருக்கும்
அவளால் நம்திசை ஒளிர்ந்திருக்கும்

காற்று கலைக்கிற நந்தவனம்
கொட்டும் மலர்களின் சிலிர்ப்பினில்பார்
ஊற்றில் பெருகும் நீரலைகள்
உத்தமி பின்னே ஓடுதல்பார்
மாற்றுப் பொன்னெனும் கதிரொளியும்
மாதுமை அருளெனப் பரவுதல்பார்
ஏற்றிய சூரியச் சுடரொளித்தே
ஏறும் இருளினில் அவளெழில் பார்

ஒவ்வொரு கணமும் உடன்வருவாள்
உனக்கென சுவாசமும் கடன்தருவாள்
கவ்விடும் வலிகளில் கலந்திருப்பாள்
காயத்தின் பரப்பிலும் உலர்ந்திருப்பாள்
எவ்விதம் உனையவள் மறந்திடுவாள்
இவளா உன்னைக் கைவிடுவாள்
செவ்வியள் திருவுளம் வைத்துவிட்டால்
செகமே உனக்கெனத் தந்திடுவாள்

என்ன கேட்பதோ ? தெரியவில்லை
எதையவள் இதுவரை வழங்கவில்லை
சொன்ன வார்த்தையோ சொன்னதுதான்
சிறிதும் அவள்சொல் பிறழவில்லை
தன்னைப் பெரிதாய் நினைக்கையிலே
தென்படமாட்டாள் பார்வையிலே
தன்னை அவளிடம் தந்தபின்னே
தனியாய் நாமில்லை வாழ்வினிலே 

4 comments:

நிலாமகள் said...

இத‌மான,‌ ந‌ம்பிக்கை த‌ழைக்க‌ச் செய்யும் வ‌ழிபாடு..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எதை கடவுளிடம் கேட்டாலும் அது கோடீஸ்வரனிடம் கேட்கும் கீரைக் கட்டு போலத் தான்! எது கேட்டாலும் அது அவனைப் பொறுத்தவரை சிறிது தான்..
ஆண்டவனின் குமிழ் சிரிப்பிலே தெரியும்..’போயும்..போயும் இதைப் போய் கேட்கிறானே இந்த மானுடன்’ என்று!
அதற்காகத் தானே அவனிடம் ’ஸர்வ ஜனா சுகினோ பவந்து’ என்று சொல்லி விடுகிறேன், நான்!

கவிதை அருமை, ஸார்!

Murugeswari Rajavel said...

அருமையான சங்கல்பம் சார்.
இந்த மாத காட்டுப்பூவிலே தங்கள் கட்டுரை படித்தேன்.முட்டைக்கோஸ் பற்றி சொல்லிக் கொண்டு வந்ததில் சிறப்பான வரிகள்,
உன்னை விட அறிவாளியிடம் பணி புரிய நேர்ந்தால் அதிர்ஷ்டம். இல்லையெனில் துரதிர்ஷ்டம் என்று.எனக்கு மிகவும் பிடித்த இந்த வரிகளை தெரிவிக்க விரும்பினேன்.

abirami said...

கடவுளையே கதி என்று இருந்தால் நம்மை அவர் கைவிட மாட்டார் என்பதை மிகவும் அருமையாகவும் நயமாகவும் சொல்லியிள்ளீர்கள்.சோதனைகள் வரும்போது இந்த சங்கல்பத்தை படித்தால் மன நிம்மதி கிடைக்கும். எல்லாவற்றையும் அவள் பார்த்துக்கொள்வாள் என்ற நினைப்பு கண்டிப்பாக வரும். மேலும் இந்த சோதனையை அவளே களைந்து நல்வழி காட்டுவாள் என்ற நம்பிக்கையும் வரும் மிகவும் நன்றி