Saturday, August 28, 2010

குகைப்பெருமான் - 3

முருகனுக்கு இருக்கக்கூடிய முக்கியத்துவமும்,முருக வழிபாட்டின் இருவேறு எல்லைகளும் மிகவும் சுவாரசியமானவை. ஒருபுறம் பாமரர்கள் வாழ்வில் விளையாடும் நெருக்கத்தில் கண்கண்ட தெய்வமாய், கலியுக வரதனாய் இருக்கிறான். இன்னொரு புறம், வேதங்கள் அவனுடைய பெருமைகளைச் சொல்லமுடியாமல். "சுப்ரமண்யோஹம்" என்று மூன்று முறை சொல்லிவிட்டு பெரிய கும்பிடாகப் போட்டுவிட்டு தள்ளி நிற்கின்றன. இன்றளவும், பள்ளி கல்லூரி மாணவிகள், சாஃப்ட்வேர் யுவதிகளின் கைப்பையில் லேமினேட் செய்யப்பட்ட படமாய் இருக்கிறான்.இன்னொரு புறம், எல்லா தெய்வங்களும் தங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடும் "தெய்வ-சிகா-மணி"ஆகவும் இருக்கிறான்.



தேவர்களின் தலைவன் இந்திரன் மகளுடன் நிச்சயிக்கப்பட்ட திருமணம். வேடுவர்களின் தலைவன் நம்பிராஜன்மகளுடன் காதல் திருமணம். தந்தைக்கே பிரணவத்தை போதிக்கும் ஞானம் ஒருபுறம். ஞானப்பழம் கிடைக்காமல்கோபித்துக் கொள்ளும் குழந்தைத்தனம் மறுபுறம். முருகனை, கந்தபுராணம் போன்றவை மூலமாகவும், அருணகிரிநாதர்-சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் போன்ற அருளாளர்கள் மூலமாகவும் அறிந்து கொண்டிருந்த எனக்கு, செஞ்சேரிமலை குகை பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு வரும் எளிய மனிதர்களின் அப்பழுக்கற்ற பக்தி பிரம்மிப்பாக இருந்தது.

வாழ்வை நடத்தவென்று உழவோ தொழிலோ அவர்களுக்குண்டு. ஒவ்வொரு நாள் விடியலையும் குகைப்பெருமான் வழிநடத்துகிறான் என்ற அப்பழுக்கற்ற நம்பிக்கை, அவர்களை வாழ்வெனும் பெருவெள்ளத்தைக் கடக்க வைக்கிறது.

அந்த குகைப்பெருமானுக்கு நான் எழுதிய துதிமலர்களின் இரண்டாவது பாடல் இது:

ஆகமம் நான்மறை யாவுமே வேலவன்
அருமையைப் பேசி வாழும்
ஆலய மணிதரும் நாதமும் "ஓம்"என
அருளிசை பாடி யாடும்
தேகமும் எண்ணமும் தேவானை நாதனின்
தளிர்க்கழல் தேடி ஓடும்
திசையெட்டில் தென்றலும் வள்ளி மணாளனின்
திருப்புகழ் பாடல் பாடும்
போகமாம் இல்லறம் கந்தனின் அருளுக்குப்
பாதைகள் போடலாகும்
பார்மிசைப் பற்றுகள் பின்னாளில் சண்முகன்
பார்வையில் மாறலாகும்
ஏகன் அநேகனின் எழில்வளர் புதல்வனே
ஏற்றங்கள் தரும் தெய்வமே
தென்சேரி அடிவாரம் உறைகின்ற குகைபால
தண்டாயுத பாணியே



Friday, August 27, 2010

குகைப்பெருமான் - 2


அடுத்தடுத்து வந்த கிருத்திகைகளில், என்னையே செஞ்சேரிமலைக்கு செல்லப் பணித்தார் புலவர் ஜானகி அம்மையார். ஒவ்வொரு கிருத்திகைக்கும் ஒவ்வொரு தலைப்பில் பேசத் தொடங்கினேன். கந்தரலங்காரம், கந்தரனுபூதி என்று தொடங்கி பின்னர் பெரிய புராணத்தில் ஒவ்வொரு தலைப்பாக அங்கே அரங்கேறின. சேர்மன் வெங்கிடாஜலக் கவுண்டர் இருந்தால், அவர்தான் வரவேற்புரை நிகழ்த்துவார். அவர் கோவையிலுள்ள நன்னெறிக் கழகத்தில் உறுப்பினர். சமய இலக்கியங்கள் ஓரளவு தெரிந்தவர். வெளிப்படையான தலைப்பைத் தந்தால்,
வரவேற்புரையிலேயே பேசுபொருளின் முக்கிய சம்பவத்தைப் போட்டு உடைத்து விடுவார். கிராமப்புற மக்களுக்கு கதையும் பக்தியும் பிரதானம். பாடல்கள்-அதன் நயங்கள் எல்லாம், பெரியவர் தேவசேனாபதி போன்ற சிலருக்கு மட்டும்தான்.

 
எனவே, வெங்கிடாஜலக் கவுண்டரிடமிருந்து தப்பிக்க ஓர் உபாயம் செய்தேன்.அதை எந்த நாளும் காத்தேன். யாருக்கும் புரியாத விதத்தில் தலைப்பைக் கொடுத்து விடுவேன். "எது குறித்துப் பேசப்போகிறீர்கள்?" என்று கவுண்டர் கேட்டால் சிரித்து மழுப்பி விடுவேன். தன் வரவேற்புரையிலேயே அதற்கான கண்டனங்களையும் கவுண்டர் பதிவு செய்வார். நான் அசந்தால் தானே!!

ஒருமுறை அவர் வரவேற்புரையில் சலிப்பாக சொன்னார். "சொற்பொழிவாளர் எது பத்தி பேசப்போறார்னு கேட்டேன். "அவனின் அன்னை அரனின் அன்னை" ன்னு தலைப்பு சொன்னாங்க. அது என்ன சமாச்சாரமுன்னு எனக்கே புரியலை. அவுரே பேசுவாரு. கேளுங்க . நன்றி வணக்கம். "காரைக்காலம்மையார் பற்றிய பேச்சுக்குத்தான் அப்படியொரு தலைப்பு தந்திருந்தேன். தன்னை மணந்த கணவன் உடன்வாழ அஞ்சி, மனைவியையே தாயாகக் கருதிவிடுகிறான். பேயுருக் கொண்டு கயிலாயம் போகும் காரைக்காலம்மையாரை யாரென்று உமையம்மை வினவ, "வருமிவள் நம்மைப்பேணும் அம்மைகாண்" என்கிறார் ஈசன். இதுதான் விஷயம். இதுபோல் புதிது புதிதாக தலைப்புகள் தரத் தொடங்கியபின் ஒவ்வொரு மாசமும் ஒரு விடுகதை கேட்கத் தயாராவதுபோல் பிரியமுடன் காத்திருக்கத் தொடங்கினர் செஞ்சேரிமலை கிராமத்து மக்கள்.  


 முருகப்பெருமானின் ஆறுமுகங்களைச் சொல்லும் ஏறுமயில் ஏறிவிளையாடும்முகம் ஒன்றே என்ற பாடலை முன்னுதாரணமாகக் கொண்டு குகைப்பெருமானுக்கு நான் எழுதிய துதி மலர்களில் முதல் பாடல் இது:


பால்காட்டி மிளிர்கின்ற  புன்னகை மலர்முகம்
 பொலிவாடும் ஞானநிலையம்
பயம்நீக்கி ஜெயமெலாம் வழங்கிடும் ஒளிமுகம்
பகைவீழ்த்தும் பாலவுருவம்
வேல்காட்டி சமரிடை வந்திடும் திருமுகம்
வீரத்தின் மூலவடிவம்  
வள்ளிதெய்வானையர் வழிபடும் அருள்முகம்  
வினைதீர்க்க நின்ற சொரூபம்
கால்காட்டி ஆட்கொள்ளும கருணையின் மதிமுகம்
குன்றேறி நின்ற திலகம்
 

கனிவான முத்தமிழ் காத்திடும் கலைமுகம்  
புலமையின் ஞான உதயம்

சேல்காட்டும் சுனைவளர் தென்சேரி அடிவாரம்
உறைகின்ற அருட்தெய்வமே
சிந்தைதனில் குடியேற வந்தருள்க 
குகைபால
தண்டாயுதபாணியே  

(தொடரும்)

Thursday, August 26, 2010

குகைப் பெருமான் - 1

இருபதாண்டு கால இடைவெளிக்குப் பின்னர் செஞ்சேரிமலை போயிருந்தேன். காரை நிறுத்தச் சொல்லி விட்டு "தேவசேனாபதி அய்யா பழக்கடை" என்று விசாரித்து நின்ற போது, நடுத்தர வயதுக்காரர் ஒருவர்,"நீங்க..."என்றபடியே கடையிலிருந்து வந்தார்."முத்தையா" என்று சொன்ன மாத்திரத்தில் "அய்யா!வாங்க வங்க! அப்பா உங்களைப் பத்தி பேசாத நாளே இல்லீங்க' என்றார். முதன்முதலாக இதே கடை  வாசலில் நான் வந்து நின்ற நாள் என் நினைவுக்கு வந்தது.

"நகர வீதியில் திரிதரு மாந்தர்" என்ற சொற்றொடர், தமிழிலக்கிய ஆர்வலர்களுக்குப் பரிச்சயமாகியிருக்கும். கல்லூரியில் சேர்ந்த முதலிரண்டு ஆண்டுகள். அநேகமாக 1987 அல்லது 1988 ஆம் ஆண்டாக இருக்கும். வீட்டுக்கு வெளியே எங்கள் தெருவில் நான் வெறுமனே திரிந்து கொண்டிருந்த ஒரு முன்மாலைப்பொழுதில் வீட்டுக்கு சற்று தொலைவில் இருவர் வருவது தெரிந்தது.ஒருவர், புலவர். கோ.ஜானகி அம்மையார். இன்னொருவர் புதியவர். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை. கிராமத்து மனிதர் என்பதைப் பறைசாற்றும் வெள்ளந்தி முகம். ஓங்குதாங்கான உடல்வாகு. இரண்டு காதுகளிலிருந்தும் பூனை மீசை போல் நீண்டிருந்த ரோமம்.நெற்றி நிறைய திருநீறு.குங்குமம்.

வீட்டுக்குள் வந்தமர்ந்தனர் இருவரும்.மாப்பிள்ளை பார்ப்பதுபோல் என்னையே கண்களால் அளவெடுத்துக் கொண்டிருந்த அந்தப் பெரியவரை ஜானகி அம்மையார் அறிமுகம் செய்து வைத்தார். "முத்தையா! இந்த அய்யா பேரு வெங்கிடாஜலக் கவுண்டர். செஞ்சேரிமலை மணியகாரரு". அவருடைய கம்பீரமான தோற்றத்துக்கும், என் வயதுக்கும் சற்றும் பொருந்தாத பணிவுடன் "சட்"டென எழுந்து,"வணக்கமுங்க அய்யா" என்றார்.

தென்சேரிமலை என்பதுதான் செஞ்சேரிமலை என்று மருவியது.மந்திராசலம் என்றழைக்கப்படும் இந்த மலைக்கோயிலில் வேலாயுதசாமி என்ற பெயரில் முருகப் பெருமான் கோயில் கொண்டுள்ளார்.






 அதே மலையின் அடிவாரத்தில் குகைக்கோயில் ஒன்று உள்ளதாகவும், குகை பாலதண்டாயுதபாணி என்ற பெயரில் அங்கு முருகன் கோயில் கொண்டுள்ளதாகவும் விவரித்தார் புலவர் ஜானகி அம்மையார். கிருத்திகை தோறும் அங்கே அபிஷேக ஆராதனைகளும்அன்னதானமும் சமயச் சொற்பொழிவுகளும் நடைபெறும். மாதந்தோறும் அங்கே சொற்பொழிவு நிகழ்த்தி வந்த ஜானகி அம்மையார், அங்கே எல்லா மாதங்களும் செல்ல முடியாததால் நான் அவருக்கு பதிலாக செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

செஞ்சேரிமலை  நிறுத்தத்தில் பஸ் குலுங்கி நின்றது.கோவையிலிருந்து கிழக்கே சூலூர் வந்து அங்கிருந்து தெற்கே செலக்கரிச்சல், சுல்தான்பேட்டை வழியாக செஞ்சேரிமலை. அதிகம்போனால் இரண்டு மணிநேரப்பயணம். பஸ் நிலையம் வந்ததும் பக்கத்திலேயே ராமச்சந்திரன் செட்டியார் பாத்திரக்க்கடை என்று விசாரிக்கச் சொல்லியிருந்தார் வெங்கிடாஜலக் கவுண்டர். பிரியமாக வரவேற்றார் செட்டியார். சிறிது நேரத்தில் கோயில் முக்கியஸ்தர்கள் வந்து சேர்ந்தனர். மணியகாரர் , சேர்மன் இருவர் பெயருமே வெங்கிடாஜலக் கவுண்டர்தான். அப்புறம் மலைக்கோவில் வாசலில் தேங்காய் பழக்கடை வைத்திருந்தவரும், ஓதுவாருமான பெரியவர் தேவசேனாபதி. அவருடைய தமிழறிவும், மனனமாகியிருந்த பாடல்களும் அபாரம்

காபி வாங்கிக் கொடுத்து மலைக்கோயிலை சுற்றிக் கொண்டு அழைத்துப் போனார்கள். அடிவாரத்திலுள்ள குகை பாலதண்டாயுதபாணி கோயில். இன்னும் சில நூறாண்டுகள் பின்னே நம்மை அழைத்துப் போகும் புராதன அமைப்பு. குகையில் ஆண்டிக்கோலத்தில் அழகன் முருகன். தொட்டு விடும் தூரத்தில் அமர்ந்து கரிய திருமேனிக்கு நிகழும் அபிஷேகங்களைக் கண்குளிரக் காணும் வாய்ப்பு அமைந்தது. குகைக்கு வெளியே சற்றே உயர்த்திக் கட்டப்பட்ட திண்ணை. எதிரே நூறு பேர்கள் வரை அமரக்கூடிய வசதி. அபிஷேகம் முடிந்து திரை போட்டு அலங்காரம் தொடங்கியதும் சொற்பொழிவு தொடங்கும். அநேக ஆன்மீகத் தலைப்புகளில் நான் பேசிப்பழகியது அங்கேதான்.

 சொற்பொழிவு முடிந்ததும் திரைவிலக, அதற்குமுன் ஆண்டிக்கோலத்தில் நின்றிருக்கும் குகைப்பெருமான் (அவரை பெரியவர் தேவசேனாபதி அப்படித்தான் அழைப்பார்) ராஜ அலங்காரத்தில் காட்சி கொடுப்பார். அதன்பின், இறைவனுக்கு நிவேதனம் செய்யப்பட்ட சித்ரான்னங்கள் பரிமாறப்படும். சொற்ப்பொழிவுக்கு சன்மானம் 30 ரூபாய்.

 இரவு 8.00 மணிக்குமேல் அப்போதெல்லாம் கோவைக்கு பேருந்து வசதி கிடையாது.எனவே, "கதர்க்கடைக்காரர்" என்றழைக்கப்பட்ட நடராஜன் என்பவர் வீட்டில் இரவு தங்க வேண்டி வரும்.

அவரின் துணைவியார் சுடுதண்ணீரில் கலந்து தரும் ஹார்லிக்ஸ் குடித்துவிட்டு படுத்தால், கோழி கூப்பிட எழுப்புவார்கள். புலர்ந்தும் புலராத
பொழுதில் உடன்வந்து முதல் பஸ்ஸில் ஏற்றிவிடுவார் நடராஜன்.

அதன்பின் வந்த பெரும்பாலான கிருத்திகைகளிலும் சொற்பொழிவுக்கு நானே தொடர்ந்து போய்க் கொண்டிருந்தேன். இதற்கு சில ஆண்டுகளுக்கு முன் பள்ளிப் படிப்பை முடித்த கையோடு என் தமிழாசிரியர் திரு.க.மீ.வெங்கடேசன் தூண்டுதல் காரணமாக, அருணகிரிநாதர் மீது பருவத்துக்கொரு பாடலாக பிள்ளைத்தமிழ் எழுதியிருந்தேன். நியாயமாக பருவத்துக்கு பத்துப் பாடல்கள் எழுதினால்தான் பிள்ளைத்தமிழ். அருணகிரிநாதர் விழா நெருங்கியிருந்ததால் இதற்கு "ஒரு பா பிள்ளைத்தமிழ்" என்று பெயர் கொடுத்தார் ஆசிரியர். அப்படியோர் இலக்கணம் உண்டா என்பது இன்றளவும் எனக்குத் தெரியாது.

இடையில், குகை பாலதண்டாயுதபாணி மீது ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக அவர் மீதும் துதி மலர்கள் எழுதினேன். அருணகிரி ஒரு பா பிள்ளைத்தமிழ், குகை பாலதண்டாயுதபாணி துதி மலர்கள், இரண்டையும் இணைத்து, "வேலின் வெளிச்சத்தில்"என்ற தலைப்பில் என் முதல் புத்தகம் 1989ல் வெளியானது. பதிப்பாளரும் நானே!!

அறநிலையத்துறை துணை ஆணையராக இருந்து ஒய்வு பெற்ற அமரர். த.நாகராசன்எங்கள் குடும்ப நண்பர்.அவரின் புதல்வர். திரு.த.நா.மதிவாணன், 2750/ ரூபாய்களுக்கு சுந்தரம் பிரிண்டர்ஸில் அச்சிட்டுத் தந்தார். திரு.சுகி சிவம் அற்புதமான அணிந்துரை ஒன்றைத் தந்திருந்தார். என் கல்லூரித்தோழன் தங்கவேல் தந்த 2000 ரூபாய் கடனில் அந்த நூல் வெளியானது. ஒரு பிரதியின் விலை மூன்று ரூபாய்.

உருண்டோடின இருபது வருடங்கள்.இப்போது மறுபடியும் செஞ்சேரிமலைக்கு செல்லத் தோன்றியது. அந்த கிராமம் மாறியிருந்தது . பிரசாதக் கடைகள் அனைத்திலும் வோடாஃபோன், ஏர்செல் பலகைகள். மணியகாரர் வெங்கிடாஜலக் கவுண்டர் மறைந்திருந்தார். சேர்மன் வெங்கிடாஜலக் கவுண்டருக்கு நடமாட்டம் குறைந்துவிட்டது. கதர்க்கடைக்காரர் நடராஜன் அருகில் எதோவொரு நகருக்குக் குடிபெயர்ந்து விட்டார். வேலின் வெளிச்சத்தில் நூல் வெளிவர கடன் கொடுத்து மிகத்தாமதமாகவே திரும்பப் பெற்றுக் கொண்ட என் கல்லூரி நண்பன் தங்கவேலும் அதற்கு முந்தைய வாரம்தான் (15.08.10) மாரடைப்பால் இறந்திருந்தான்.குகை பால தண்டாயுதபாணி கோவில் பூட்டிக் கிடந்தது. பூசாரி ஊரில் இல்லையாம்

பெரியவர் தேவசேனாபதிக்கு 83 வயது.சில கிலோமீட்டர்கள் தொலைவிலிருந்த பெரியகளந்தை என்னும் தலத்தில்  ஆதீஸ்வரர்
திருக்கோவிலில் சனிப்பிரதோஷத்திற்காக சென்றிருந்த பெரியவரை அவருடைய மகன் செல்லில் அழைக்க அடுத்த சில நிமிடங்களில்
எங்கள் கார் ஆதீஸ்வரர் திருக்கோயிலை சென்றடைந்தது.

நாங்கள் நுழையக் காத்திருந்தது போல் சனிப்பிரதோஷ தீபாராதனை. பெரியவர் தேவசேனாபதி பஞ்ச புராணம் பாடினார்.அங்கும் சித்திரான்ன விநியோகம்.எங்கள் காரிலேயே செஞ்சேரிமலை வர ஆயத்தமானார் பெரியவர்.

இவ்வளவு தூரம் வந்தும், குகை பாலதண்டாயுதபாணியை தரிசிக்க முடியவில்லை என்னும் மனக்குறையோடு காருக்கருகே சென்றபோது, பெரியவர் சொன்னார்: "குகைப்பெருமான் யாரையும் கைவிடலீங்க! அவரு சந்நிதியிலேதொடர்ந்து   பேசின ஜானகியம்மா, நீங்க எல்லோரும் நல்ல நிலையிலே இருக்கீங்க! நானும் நல்லா இருக்கேன்.என் பேரன் ஒருத்தன சின்னதிலிருந்தே குகைப் பெருமானை தரிசிக்கச் சொல்லுவேன். அவனும் இப்போ நல்லா இருக்கான். போட்ட்டோ காமிக்கறேன் பாருங்க."பேரனின் படமென்று நினைத்து வாங்கினேன்..


அபிஷேகம் முடிந்து ராஜ அலங்கார ரம்மியனாய் கனகம்பீரமாய் படத்தில் குகைப்பெருமான்.பூசனை நடைபெறாத நாளில் தேடிவந்த எனக்கு அந்தப் புகைப்படங்களில்அலங்கார தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார். "கிருத்திகைக்கு அவசியம் வா" என்று கூப்பிடும் விதமாய் குமிழ்சிரிப்பு..

1988-89ல்குகை பாலதண்டாயுதபாணிக்கு எழுதிய துதி மலர்களை உங்களுடன் இனி தொடர்ந்து பகிர்ந்து கொள்கிறேன்:கூடவே (1986ல்) எழுதிய அருணகிரி ஒருபா பிள்ளைத்தமிழையும்......

                                விநாயகர் காப்பு

 அம்பலத்தில் ஆடுகின்ற அண்ணலவர் மேனிநின்ற
         அன்பினுரு வானமங்கை சிவகாமி
      அஞ்செழுத்தை ஓதுகின்ற அந்தகயிலாய மிசை
          அங்குமிங்கும் தேடநின்ற புதல்வோனே
தம்பலத்தையே நினைந்து உன்பதத்தையே நினைந்து
           தண்ணருளை நாடுகின்ற அடியார்கள்
      தம்பயத்தையே களைந்து அன்புளத்திலே நிறைந்து
           இன்பமுறும் ஞானநிலை அருள்வோனே
செம்பருத்தி மேனிதனில் மின்னலென நூலணிந்த
           சுந்தரநல் வேழமுக முதல்வோனே
      சிந்தைதனில் ஊறுகின்ற செந்தமிழின் ஞானசந்தம்
           செய்யுளினில் கூட வரம் தருவோனே
உம்பர் மகிழ்ந்தாட அந்த வெஞ்சமரில் சூரனங்கம்
            துண்டுபட வேலெறிந்த குமரேசர்
      தன்கழலைப் பாடுகின்ற இன்கவிதை நூலில்வந்து
            என்றுமொரு காவல்புரிந் தருள்வாயே!! 

(தொடரும்)

Sunday, August 15, 2010

நவில்தொறும் குறள்நயமதில் பயில்தொறும் புதுமைகள்..

31.07.2010 அன்று, சேலம் அருகிலுள்ள ஆத்தூரில் நவில்தொறும் குறள்நயம் என்னுந் தலைப்பில் கருத்தரங்கம் நிகழ்ந்தது.அதில்,"பயில்தொறும் புதுமைகள்"என்னுந் தலைப்பில் உரைநிகழ்த்தினேன். சில காலங்களாகவே திருக்குறளில் தோன்றிய புதிய சிந்தனைகள் சிலவற்றை அந்த மேடையில் பகிர்ந்து கொண்டேன். அந்தப் பகிர்வின் பதிவுகள் இவை:
 

"பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்"
மரபு ரீதியாய் இதற்கு சொல்லப்படும் பொருள், என்ன தெரியுமா? "பொருட்படுத்தும் அளவு எந்தத் தகுதியும் இல்லாதவர்கள் கூட, பொருள் சேர்ந்துவிட்டால் பொருட்படுத்தத் தக்கவர்கள் ஆகி விடுவார்கள். எனவே அத்தகைய பொருட்செல்வத்தை விடவும் பெரிய பொருள் எதுவுமில்லை." உண்மையிலேயே திருவள்ளுவர் இந்தப் பொருளில்தான் எழுதியிருப்பாரா? முட்டாள்களிடம் கூடத்தான் பணம் சேருகிறது என்று பகடி பேசியவர் அவர். "பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள"என்றவருக்கு இப்படியொரு சிந்தனை தோன்றுமா என்ன?



இதே குறளை வேறு வகையில் சிந்திக்கலாம். ஒரு மனிதனை எல்லோரும் அலட்சியம் செய்தார்கள். அந்த அளவுக்கு அவனும் அற்பனாகவே இருந்தான். ஆனால், திடீரென்று அவனுக்குப் பெரும்பணம் சேர்ந்து விடுகிறது. உடனே அவனை, உள்ளூர்க் கோயிலில் அறங்காவலர் ஆக்குகிறார்கள். பல விழாக்களுக்கு அழைக்கிறார்கள். ஏசிய உலகமே ஏற்றுகிறது. பழித்த சமூகமே போற்றுகிறது. இந்த நிலைமாற்றம் ஆரோக்கியமானதுதானா, அவன் பொருட்படுத்தத் தக்கவன்தானா என்கிற குழப்பம்  நல்லவர்களிடம் ஏற்படுகிறது. திருவள்ளுவர் அதற்குத் தீர்ப்புச் சொல்கிறார். "இந்தப் பணம் இருக்கிறதே, இதுவரை பொருட்படுத்தப் படாதவர்களை பொருட்படுத்தத் தக்கவர்களாகச்  செய்யும்",  என்று தொடங்குகிறார். "பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும்"என்கிறார்.  அடுத்து அவர் ஒரு கேள்வி கேட்கிறார். பணம் வந்ததால் இந்த மனிதனுக்கு அறிவு கூடிவிட்டதா? அற்பத்தனம் நீங்கி விட்டதா? என்று கேட்க, ஊர்க்காரர்கள் உதட்டை பிதுக்குகிறார்கள். "அந்த இழிகுணங்கள் அப்படியே இருக்கின்றன" என்று ஒப்புக் கொள்கிறார்கள்.

திருவள்ளுவர் சொல்கிறார், "இந்த இழிகுணங்களால் அவன் அற்பனென்று மதிக்கப்பட்டான். இப்போது அவனிடம் பணம் இருக்கிறது. இதற்குமுன் அவன் ஏழை அற்பனாக இருந்தான். இப்போது பணக்கார அற்பனாக இருக்கிறான். புதிதாக வந்துள்ள பொருட்செல்வத்தை கழித்துவிட்டுப் பார்த்தால் அவனிடம் பொருட்படுத்தத் தக்க விஷயம் எதுவும் இல்லை. "பொருளல்லது இல்லை பொருள்". சராசரி மனிதர்கள். அற்பனிடம் பணம் சேர்ந்தால் அவனைக் கொண்டாடுவார்கள். புகழ்வார்கள்.அறிவாளிகள், இப்போதும் பணத்தைத் தவிர அவனிடம் வேறேதும் விஷயமில்லை என்பதை உணர்வார்கள்.என்பதுதான் இதன் பொருளாக இருக்க முடியும்.

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள் .
                                                   -------------------------------------------------

துன்பம் வருவதும் ஒருவகையில் நன்மைக்குத்தான் என்பது திருவள்ளுவரின் கருத்து. உறவென்று சொல்லி அருகில் இருப்பவர்களின் உண்மையான குணத்தை அளப்பதற்கான அளவுகோலே மனிதர்க்ளுக்கு வருகிற துன்பம்தான் என்கிறார் அவர். உறவு கொண்டாடி உடனிருப்பவர்களில் பலர், நம்மைச் சார்ந்திருப்பவர்கள். நாம் வேராக இருந்து அவர்களைத் தாங்க வேண்டியிருக்கிறது. அதனாலேயே அவர்களுக்குக் கிளைஞர்கள் என்று பெயர். "செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல் "என்பதும் நம் தமிழிலக்கியத்தில் உள்ள விஷயம்தான். என்னதான் நெருக்கமான உறவினர்களாகட்டும், நண்பர்களாகட்டும், தமக்குத் தேவையெனில்  நம்மைத் தேடி வருவார்கள். நமக்கொரு துன்பமெனில் ஓடி விடுவார்கள்.இதை ஒரு குறளில் கூறுகிறார் திருவள்ளுவர்.

கேட்டிலும் உண்டோர் உறுதி-கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.  

கூட இருக்கும் கிளைஞர்களை அளக்க கேடு என்னும் அளவுகோல் பயன்படுகிறது என்று சொல்ல வருகிற வள்ளுவருக்கு சிரிப்பு வருகிறது. கூட இருப்பவர்களாக இருந்தால் அப்படியே அளந்து விடலாம்.ஆனால் கேடு வந்ததாகக் கேள்விப்பட்டாலே அந்தக் கிளைஞர்கள் வெகுதூரம் ஓடிவிடுவார்களாம். அதனால்,கிளைஞரை அளப்பதோர் கோல் என்று  சொல்லாமல், நீட்டி அளப்பதோர் கோல் என்கிறார். கேடு வரும்போது அவர்கள் தள்ளி நிற்கிற தொலைவுதான்,அவர்களுடன் இருக்கிற உறவின் உண்மையான  தொலைவு என்கிறார் திருவள்ளுவர்.

                                          ---------------------------------------------------------------------

நகுதற் பொருட்டன்று நட்பு-மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தல் பொருட்டு.  
 
பொதுவாக இந்தக் குறளுக்கு சொல்லப்படும் பொருள் இதுதான்."சிரித்துப்பேசி மகிழ்ச்சியாய் இருக்க மட்டுமே
நண்பர்களா? இல்லை.தலைக்கனமோ,தவறுகளோ எல்லை மீறும்போது அந்த இடத்திலேயே இடித்துச்  சொல்வதற்கு..
 
நகுதல் என்பது பெரும்பாலும் கேலிச்சிரிப்பைத்தான் குறிக்கும்.இது பற்றி
"சிரிக்கத் தெரிந்த சிவன்" கட்டுரையில் முன்பே பார்த்திருக்கிறோம்.ஒருவன்
தன் தவறுகளாலேயே வீழ்கிறான்.அந்த வீழ்ச்சியின்போது பலரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.அப்படி சிரிப்பவர்கள் பட்டியலில் இருப்பவன் ஒரு நண்பனாக இருக்க முடியாது.தடம் மாறுவது தெரிகிற போதே அவனை
இடித்துரைத்து,நேர்ப்படுத்துவதுதான் நண்பனின் இலக்கணம்.
 
இதில் இன்னொரு கோணமும் இருக்கிறது.நண்பன் அவனைப் பார்த்து சிரிக்காதவனாகக் கூட இருப்பான்.அத்துடன் அவன் கடமை முடிவதில்லை.ஒருவன்,பிறர் பார்த்து சிரிக்கும்படியான காரியத்தை செய்தால்
அதற்கும் அவன் நண்பந்தன் பொறுப்பு.ஒருவனுக்கு நல்ல நண்பன் அமைந்தால் மற்றவர்கள் பார்த்து சிரிக்கும்படி எந்தக் காரியத்திலும் அவன் ஈடுபட மாட்டான்.நண்பனின் வீழ்ச்சிக்கு வழியடைத்து,தவறு செய்தால்
இடித்துரைத்து எப்போதும் வழிநடத்துபவனே நண்பன்.
                                   ----------------------------------------------------------------------------------- 
                                                                                                (தொடரும்)

Monday, August 9, 2010

சுருட்டபள்ளி சிவன்


உண்ட மயக்கம்


மாலவனின் பாற்கடலில் மிக்க வருமலைகள்
ஓலமிட்டால் கண்ணுறங்க ஒண்ணாதே-கோலமிக்க
தேவியவள் பூமடியில் தேவதேவன் கண்ணுறங்க
மேவிவரும் மௌன மயக்கு.

நால்வர் தமிழ்கொடுத்த ஞானக் கிறக்கமோ
மாங்கனி தந்த மயக்கமோ-ஆலத்தை
உண்ட மயக்கமோ உத்தமியாள் பேரழகைக்
கண்ட மயக்கமோ கூறு

நாயன்மார் வீடுகளை நாடி நடந்தவரின்
தூய உபசரிப்பில் தான்திளைத்தும்-நேயரை
ஆட்டிப் படைத்தும் அருள்கொடுத்தசோர்வினிலே
நீட்டிப் படுத்தாயோ நீ.

பெண்டு தனைக்கேட்டு பிள்ளைக் கறிகேட்டு
திண்ணனவன் கண்களையுந் தான்கேட்டு-மண்மிசையே
சுந்தரர்க்காய் வீதிகளில் சுற்றித் திரிந்துவிட்டு
நொந்துபடுத் தாயோ நவில்.

தாழ்சடைகள் அம்மை திருமடியி லேபுரள
ஆழ்துயிலில் உள்ளதோர் ஆபத்து-ஆழிசேர்
கங்கை மறைந்திருக்கக் கண்டால் விடுவாளோ
எங்குறங்கு வாய்நீ இனி

Thursday, August 5, 2010

நிலவும் நானும்...

நீட்டிய விரலுக்கும் நிலவுக்கும் நடுவே
நீண்டது ஆயிரம் தூரம்-என்
நினைவில் ஆயிரம் பாரம்
 
ஒளி
காட்டிய பரிவும் கூட்டிய குளிரும்
காலம் முழுதும் வாழும்-அந்த
போதையில் இதயம் ஆழும்
 
 
எங்கே எப்படி நான்போனாலும்
நிலவின் பார்வையில் இருப்பேன் -அதன்
நிழலாய் பூமியில் நடப்பேன்
 
பொங்கும் வெய்யில் பொழுதிலும் நிலவின்
பொன்முகம் எண்ணிக் கிடப்பேன் -அது
பூக்கும் அந்தியில் உயிர்ப்பேன்
 
 
நட்சத்திரங்களின் நளினக் குலுக்கல்கள்
நெஞ்சில் பதிவதும் இல்லை-அதை
நேர்படப் பார்ப்பதும் இல்லை
 
ஒரு
முட்புதர் பாதையில் முல்லைக்காடு
முளைத்தபின் வலிகளும் இல்லை-என்
மூர்க்க குணங்களும் இல்லை
 
தேய்பிறை இல்லா தேவதை நிலவே
தினமென் கனவில் நீதான் -என்
திசைகள் எல்லாம் நீதான்
 
பாய்கிற நதியில் பொன்னொளி பரப்பிப்
பரவசம் கொடுப்பதும் நீதான் -என்னைப்
பரிவில் நனைப்பதும் நீதான்
 
மூடும் முகில்களைக் கோபமில் லாமல்
மெல்ல ஒதுக்கி விடுவாய்-அந்த
மென்மையில் உயிரைத் தொடுவாய்
 
நான்
பாடும் கவிதை வரிகளினூடே
மிதந்து மிதந்து வருவாய்-என்
மனதில் அமுதம் பொழிவாய்
 
வீணையின் தந்திகள் "விண்"ணென அதிர்கையில்
விம்மி வழிகிற ஸ்வரமே-என்
வழியில் கிடைத்த வரமே
 
காணவும் முடியாக் காருண்ய வனத்தில்
கண்கள் திறந்த இதமே-என்
கவிதையில் மலர்ந்த நிஜமே
 

Sunday, August 1, 2010

எழிலே என் அபிராமியே

கல்லையும் கனிவிக்கும் கடைவிழி பதிந்ததால்
கவிபாடிச் சபையேறினேன்
கள்ளென்ற போதையும் முள்ளென்ற வாதையும்
காணாமல் ஆளாகினேன்
நில்லென்று சொல்கையில் நின்றதால் குழிவிழல்
நிகழாமல் கடந்தேகினேன்
நிகழ்பவை யாதென்று நினைத்திடும் முன்னரே
நன்மைகள் நிதங்காண்கிறேன்
அல்லென்ற நிறத்தினாள் அம்பிகை கரத்தினால்
அள்ளினாள் உயிர்வாழ்கிறேன்
அன்னையள் யாருக்கும் முன்னையள் அருளினால்
அச்சத்தின் பிடிநீங்கினேன்
சொல்லொன்று விதைத்ததால் சூட்சுமம் கொடுத்ததால்
சுழன்றாலும் நிமிர்கிறேனே
சுடர்வீசும் விளக்கோடு கதைபேசும் ஜோதியே
சுபவாமி அபிராமியே
 
 
 
எத்தனை வலைகளோ  எத்தனை தடைகளோ
எப்படித் தாண்டினேனோ
எத்தர்கள் பிடிவிட்டு சித்தர்கள் அடிதொட்டு
எவ்விதம் ஓங்கினேனோ
எத்தனை சபைகளோ எத்தனை களங்களோ
எப்படி ஏறினேனோ
எதிர்ப்பிலா வார்த்தையும் விதிர்ப்பிலா விதந்தனில்
யார்சொல்லிச் சொல்கிறேனோ
அத்தனை இடத்திலும் அற்புத விழுத்துணை
அம்பிகை நீயல்லவோ
அத்தனை-அமுதீச முத்தனை மயக்கிடும்
அழகாளும் மயிலல்லவோ
எத்தனை சொன்னாலும் இன்னமும் இன்னமும்
இனிப்பதுன் பெயரல்லவோ
எத்திசை போயினும் என்னுடன் வருகின்ற
எழிலேஎன் அபிராமியே
 
மண்வந்த நாள்தொட்டு மடியினில் ஏந்தினாய்
மலர்த்தாளின் இதங்காட்டினாய்
மறந்திட்ட போதிலும் மனதுக்குள் நின்றெந்தன்
மயக்கத்தில் முகங்காட்டினாய்
கண்வந்த பயனுந்தன் கோயிலைக் கண்டதென
காதுக்குள் நீகூறினாய் 
கடவூரில் நிற்பதாய் கோயிலில் நடப்பதாய்
கனவிலும் உணர்வூட்டினாய்
பண்வந்த செந்தமிழ் பயிலாமல் பயிலவும்
பைரவி அருள்கூட்டினாய்
பரம்பரைப் பெயர்தந்து பங்கய நிழல்தந்து
போகுமொரு வழிகாட்டினாய்
விண்வந்த இருளிலும் வெண்ணிலவு மின்னவே
விளையாடும் ஒளிவெள்ளமே
வினைப்புழுதி துடைக்கின்ற வண்ணப்பட்டழகியே
வித்தகி அபிராமியே