Wednesday, September 14, 2011

சொல்லவா... சொல்லவா... வெண்ணிலாவே!

இசையமைப்பாளர் யானிதேஷின் இசையில் "இன்னிசைக் காவலன்" என்ற திரைப்படத்துக்காக எழுதப்பட்ட பாடல் இது......



பல்லவி:
சொல்லவா சொல்லவா வெண்ணிலாவே
என்னவோ என்னவோ என்கனாவே
கன்னிப்பெண் ஆசைகள் ஆயிரம்
நெஞ்சுக்குள் என்னவோ ஊர்வலம்
சின்னதாய் மோகங்கள் ஆரம்பம்
மன்னவன் அல்லவோ காரணம்

சரணம்-1

யாரோடும் சொல்ல இங்கு வார்த்தையில்லை
சொல்லாத போதுநெஞ்சம் தாங்கவில்லை
ஆனாலும் இந்தக்காதல் ரொம்பத் தொல்லை
தள்ளாடும் பாவமிந்த ஜாதிமுல்லை

ஏதேதோ ஆசைபொங்க இன்பமான நடகம்
உல்லாச ஊஞ்சலாடும் வாலிபம்
தீராத தாகம்தீர காமன்தானே காரணம்
கண்ணோடு கண்கள்பேசும் சாகசம்

நெஞ்சோடு இன்பபோதை மெல்ல மெல்ல ஏறும் நேரம்
(சொல்லவா சொல்லவா)

சரணம்-2
நான்கூட வானவில்லின் ஜாதிதானே
என்மேனி தேனிலூறும் சோலைதானே
செந்தேனைத் தேனீபோலத் தேடினானே
செந்தீயில் பூவைப்போல வாடினேனே

அம்மாடி வேலிதாண்டும் ஆசையென்ன நியாயமோ
என்தேகம் இந்தவேகம் தாங்குமோ
பொல்லாத காதல்வந்து சொல்லித்தந்த பாடமோ
கண்ணாளன் செய்ததென்ன மாயமோ

நெஞ்சோடு இன்பபோதை மெல்ல மெல்ல ஏறும் நேரம்
(சொல்லவா சொல்லவா)

(பாடலை கேட்க கீழே சொடுக்கவும்)





தொடர்புடைய சுட்டி :
குடும்பப் பாட்டாய் மாறிய காதல் பாட்டு






Monday, September 12, 2011

மனிதம் வாழ்க!


காலத்தால் பண்படுதல் மனித நீதி
கருணைதான் நீதிக்குள் குலவும் சோதி
கோலங்கள் மாறுகையில் திட்டம் மாறும்
கொள்கைகள் வளர்கையிலே சட்டம் மாறும்
வேலெடுத்து நாட்டியதும் வீரம் அன்று
வெண்கொடியைக் காட்டுவதும் விவேகம் இன்று
நூலறிவும் நுண்ணறிவும் வளரும் போது
நேற்றிருந்த சட்டங்கள் இன்றைக்கேது?

தூக்கிலிடும் சட்டத்தை பலதேசங்கள்
தூக்கியெறிந்தே இங்கு தூய்மை ஆச்சு
ஆக்கமுடன் அகிம்சையினைத் தந்த நாட்டில்
அடிப்படைகள் மாற்றிவைத்தால் என்ன பேச்சு?
தூக்கமில்லா சிறைவாழ்க்கை நெடுநாள் தந்தார்
தொலைந்துவிட்ட காலத்தைக் கணக்கில் பார்த்தால்
ஆக்கிவைத்த தண்டனையும் முடிந்த தென்று
ஆணையினைத் தருவதுதான் நியாயமாகும்



மூவருக்கு மட்டுமல்ல நம்தேசத்தில்
மூண்டபல குற்றங்கள் புரிந்துவிட்ட
யாவருக்கும் சிறைவாசம் தரலாம் ஆனால்
யாருயிரைப் பறிப்பதுவும் நியாயமில்லை
காவலுக்கே சட்டங்கள் கொல்ல அல்ல!
கருணைக்கே குடியரசு! கொளுத்த அல்ல!
பூவுலகே கொண்டாடும் புனித பூமி
பொருந்தாத தண்டனையைப் போக்க வேண்டும்

வீரமங்கை செங்கொடியின் விரல்கிழித்து
விழித்தெழுந்த தீக்கனலின் வெப்பம் போதும்
ஈரவிறகாய் இருக்கும் மனதில் கூட
இனவுணர்வு என்கின்ற செந்தீ மூளும்
தூரத்தே தெரிகின்ற சிறுவெளிச்சம்
தூக்கிலிடும் சட்டத்தைத் தூக்கில் போடும்
பாரதத்தின் சட்டத்தைத் திருத்தும் கைகள்
பார்முழுதும் கொண்டாடும் பெருமை காணும்


ஆதி சிவனின் அரசாங்கம்


(நீயே சொல் குருநாதா -  கவிதை தொகுப்பிலிருந்து....)



பெளர்ணமி நிலவின் பால்வழிந்து
பாருங்கள் மலைமேல் அபிஷேகம்
வெள்ளித் தகடொன்று வேய்ந்ததுபோல்
வெள்ளியங்கிரியின் திருக்கோலம்

அடடா அழகிய இரவினிலே 
ஆதி சிவனின் அரசாங்கம்
வேண்டும் வரங்கள் வழங்கிடவே
தியான லிங்கத்தின் திருக்கோலம்

தங்கம் இழைத்த கலசத்திலே 
தகதகக்கிறது மேற்கூரை
லிங்கம் தோன்றிய பரவசத்தில் 
சலசலக்கிறது நீரோடை

மெளனம் பேசும் வனங்களெல்லாம்
மூழ்கியிருக்குது தியானத்தில்
கவிதை பாடும் பறவைகளும்
கூட்டில் அடங்குது மோனத்தில்

பாறையில் கசிகிற நீர்த்துளிகள் 
பக்தியில் இளகிடும் மனம்போலே
பாரமாய் உள்ள பழவினைகள்
கரையுது பாருங்கள் பனிபோலே

தியான லிங்கத்தின் தரிசனத்தில்
தினமும் புதிதாய்ப் பிறந்திடலாம்
ஞானம் என்கிற பேரொளியில்
நாமொரு சுடராய் எரிந்திடலாம்

(ஈஷா யோகா நிகழ்ச்சியில் அனுராதா ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீ ராம் பரசுராம் அவர்களால் இந்த பாடல் பாடப்பெற்றது...பாடலை கேட்க கீழே சொடுக்கவும்)
ராகம் : ரேவதி



Friday, September 2, 2011

செப்டம்பர் 3 சத்குரு பிறந்தநாள்


Sadguru

பல்லவி

உள்ளம் ஒன்று கொண்டு வந்தேன்
உன்னை வைக்கத்தான்
வெள்ளம் போலே நீநுழைந்தாய்
நானும் மூழ்கத்தான்
கள்ளங்கள் விழுங்கிய கனலே கனலே
கண்ணெதிர் வருகிற கனவே கனவே
எல்லை இல்லா இன்பம் இங்கே
உன்பேர் சொல்லித்தான்

சத்குரு பாதங்கள் சரணடைந்தேன்
சருகெனப் போனவன் உயிர்மலர்ந்தேன்

சரணம் 1

எத்தனை பிறவிகள் என்னைச் சுமந்தே
எல்லாத் திசையிலும் நடந்தேனோ
எத்தனை தவங்கள் எப்படிச் செய்தேன்
எவ்விதம் உன்னை அடைந்தேனோ

மூச்சினில் கலந்தது உன்கருணை
பேச்சினில் வருவது உன்கவிதை
காட்சியில் தெரிவதும் கணத்தினில் மறைவதும்
கேட்டதைத் தருவதும் உன்மகிமை 

சரணம் 2

ஆசையின் முதுகில் ஆயிரம் காதம்
ஆடிக் குலுங்கிய பயணமோ
பாசத்தில் வழுக்கி பள்ளத்தில் சறுக்கி
போனதும் எத்தனை தூரமோ
பாதையின் முடிவில் உனதுமுகம்
பார்த்ததும் தெளிந்தது எனதுமனம்
நாதத்தின் நடுவில் ஞானத்தின் மௌனம்
நிகழ்ந்ததில் தொலைந்தது  வினையின் கனம்