Thursday, October 6, 2011

சந்நிதி வாரீரோ - நவராத்திரி கவிதை - 4

அயன்விரல் பிடித்தன்று அரிசியில் வரைந்தாள்
அரிநமோத்து சிந்தம்
கயல்விழி திருமுகக் கலைமகள் சிணுங்கலே
கவிபாடும் சந்தம்
உயர்வுற அவளருள் உடையவர் தமக்கோ
உலகங்கள் சொந்தம்
மயிலவள் மலர்ப்பதம் மனந்தனில் வைத்தால்
வேறேது பந்தம்

வெண்ணிறத் தாமரை வெய்யிலைச் சுமக்கும்
விந்தையைக் காணீரோ
பண்ணெனும் தேன்மழை பாதத்தில் பிறக்கும்
பரவசம் கேளீரோ
விண்ணவர் அமுதம் வீணெனும் அறிவின்
விருந்திடம் சாரீரோ
எண்ணொடும் எழுத்தெனும் சிறகுகள் தருபவள்
சந்நிதி வாரீரோ



ஏட்டினில் எல்லாம் எத்தனை லிபியாய்
ஏந்திழை மிளிர்கின்றாள்
பாட்டினில் எழுகிற பரம சுருதியில்
பாரதி தெரிகின்றாள்
நாட்டினில் மழலைகள் நாவினில் எல்லாம்
நடனம் புரிகின்றாள்
காட்டினில் பறவைகள் கூட்டினில் இறங்கி
காவியம் இசைக்கின்றாள்

சருகினுக் குள்ளே சந்தனம் மணக்கச்
செய்தவள் அவள்தானே
உருகிடும்ய நெஞ்சில் பெருகிடும் கவியில்
உருள்பவள் அவள்தானே
கருதிய புலவர் கனவிலும் நனவிலும்
கிளர்பவள் அவள்தானே
பரிதியின் கனலிலும் பால்நிலா ஒளியிலும்
பெய்பவள் அவள்தானே

No comments: