Saturday, November 1, 2014

கிழக்கு பார்த்த வீடு


கிழக்குப் பார்த்த வீட்டில் நுழைந்தால்
கீற்று வெளிச்சம் முதலில் தெரியும்.
அரக்குப் பட்டின் அதீத வாசனை;
அதன்மேல் பிச்சி செண்பக நறுமணம்;

கனக்கும் வெளிச்சம் கனலும் சுடர்கள்;
'கலகல' வென்று வெண்கலச் சிரிப்பு;
ஒளிக்கும் ஒளிதரும் ஒய்யாரக் கருமை;
ஒவ்வோர் உயிரையும் உலுக்கும் தாய்மை;

துளித் துளியாக துலங்கும் அழகு;
தொடர்ந்தும் தொட்டிட முடியாக் கனவு;
பளிங்குக் கண்களில் படரும் குறும்பு;
பக்கத் தொலிக்கும் பண்தமிழ்,பழமறை;


மேலைத் திசையில் மணிவிழி பதித்து
 வாலையைப் பார்ப்பான் அமுத கடேசன்;
கோலத் திருவிழி கிழக்கே பதிய
நாதனைக் காண்பாள் நம் அபிராமி;


நுதல்விழி கொண்ட நூதன இணைகள்
முதல்விழி மூடி மோனத்திருக்க
இதம்தரும் நான்கு இணைவிழி கலந்து
விதம்விதமான சரசத்தில் லயிக்க
நிரந்தரமான நிலைபேறழகி
அருள்தரும் கடவூர் அணுகுக மனமே !