Tuesday, September 23, 2014

சத்குரு ஞானோதயத் திருநாள்





திசையெங்கும் பொன்னொளிரத் திறந்ததொரு கதவு
அசைவின்மை எனும்நதியில் அசைந்ததொரு படகு
கசிகின்ற கண்ணிரண்டும் கங்கைநதி மதகு
இசைதாண்டும் மௌனத்தில் எழுந்தசுக அதிர்வு


பாறையின்மேல் பூவொன்று பூத்ததிந்த தருணம்
மாறாத ஞானத்தின் மூலம்மேல் கவனம்
கீறாமல் கீறிவிட்ட ஆக்ஞையிலே  சலனம்
ஆறாகப் பெருக்கெடுக்கும் ஆனந்த அமுதம்


சாமுண்டி மலையிலந்த சாகசத்தின் பிறப்பு
தாமென்ற எல்லையினைத் தாண்டியதோர் இருப்பு
ஓமென்னும் அதிர்வினிலே ஒப்பற்ற லயிப்பு
நாமெல்லாம் கரையேற நாயகனின் சிலிர்ப்பு


முன்னமொரு பிறவியிலே மலர்ந்ததந்த ஞானம்
பின்னுமொரு பிறப்பினிலே பெருகிவந்த மோனம்
பொன்னிலொரு சுடராகப் பூத்தெழுந்த கோலம்
இன்றிங்கே இறைவடிவாய் இலங்குகிற சீலம்