Saturday, September 27, 2014

ஈடாக ஒருதெய்வமோ?

 
 
பெருங்கொண்ட வனந்தனில் பசிகொண்ட வேங்கையின்
பார்வைக்குக் கனல்தந்தவள்
கருக்கொண்ட சிசுவுக்கு பசிதாகம் போக்கவே
கொடியொன்று தருவித்தவள்
உருக்கொண்டு வந்தாலும் அருவமாய் நின்றாலும்
உயிருக்குத் துணையானவள்
சரக்கொன்றை சூடுவோன் சரிபாதி மேனியில்
சரசமாய் அரசாள்பவள்

சுடர்வீசும் தீபத்தில் சுந்தர நகைகாட்டி
சூழ்கின்ற ஒளியானவள்
இடரான பிறவியும் இல்லாமல் போகவே
இறுதிநாள் இரவானவள்
கடலாடும் அலையெலாம் கைநீட்டும் நிலவினில்
கலையாவும் அருள்கின்றவள்
படையோடு வரும்வினை அடியோடு சாயவே
பாசாங்குசம் கொண்டவள்
நாமங்கள் ஆயிரம் நாவாரச் சொன்னாலும்
நாயகி பேராகுமோ
ஆமெந்த சொல்லிலும் அடங்காத பேரெழில்
அர்ச்சனை மொழியாகுமோ
காமங்கள் மாற்றிடும் காருண்யை பார்த்தபின்
காலங்கள் நமைவாட்டுமோ
ஈமங்கள் தீர்கையில் இருக்கின்ற பெருந்துணை
ஈடாக ஒருதெய்வமோ?

 
ஒன்பது கோள்களும் ஒன்பது இரவிலும்
ஓங்காரி முன்சூழுமே
தன்னரும் அடியவர் விதியினை மாற்றுவாள்
தாமாக நலம்சூழுமே
இன்னிசை பாட்டெலாம் ஏத்திடும் அம்பிகை
இதழ்சுழி அதுபோதுமே
என்னவென் தலையினில் நான்முகன் சுழித்தாலும்
இந்நொடி அது தீருமே