Friday, July 9, 2010

கோலமயில் அபிராமியே

ஊர்கொடுத்த வரிகளை உதடுகளில் தாங்கியே
உலகத்தைச் சுற்றி வந்தேன்
உரங்கொடுத்த உணர்வினை வரங்கொடுத்த பலரையும்
உள்ளத்தில் ஏற்றி நின்றேன்
பேர்கொடுக்கும் பண்புகள் பிறர்தந்த பரிசோநீ
பிறவியில் தந்த கொடையோ
பழக்கத்தில் வந்தவர் நெருக்கத்தில் இணைந்திடும்
பெற்றிமை உந்தனருளோ
நார்தொடுக்கும் பூக்களாய் நான்கற்ற தமிழினை
நல்கினேன் வேறொன்றில்லை
நாவிலும் தாளிலும் நடமாடும் தமிழன்றி
நானொன்றும் செய்ததில்லை
யார்கொடுத்த புண்ணியம் என்பதை அறிகிலேன்
யானென்று ஆடமாட்டேன்
யாதிலும் நிறைகின்ற மாதவச் செல்வியே
எழிலரசி அபிராமியே
 
 
 
 
 
தீண்டாத வீணையில் தீராத ஸ்வரங்களாய்
தொடர்கின்ற வினைகளென்ன
தகிக்கின்ற கோடையில் தவிக்கின்ற வேளையில்
தென்படும் சுனைகளென்ன
கூண்டாக மாறிடும் கூடுகள் என்பதைக்
காட்டிடும் வினயமென்ன
கூடாத நலங்களும் கூடிடும் விதமாய் நீ
கூட்டிடும் கருணையென்ன
ஆண்டாக ஆண்டாக அடிநெஞ்சில் கனிகின்ற
அன்புக்கு மூலமென்ன
அன்னையுன் திருமுகம் எண்ணிடும் பொழுதினில்
ஆக்ஞையில் நீலமென்ன
தூண்டாத விளக்கிலே தூங்காத ஜோதியாய்
திருமுகம் ஒளிர்வதென்ன
துளியின்னல் வந்தாலும் ஒளிமின்னலாய் வந்து
துணைசெய்யும் அபிராமியே
 
 
ஆலத்தை உண்டவன் அம்மையுன் கைபட்டு
அமுதவடி வாகிநின்றான்
ஆகமம் வேதங்கள் அறிந்த மார்க்கண்டனோ
அன்றுபோல் என்றும் நின்றான்
காலத்தைக் கைகளில் கயிறெனக் கொண்டவன்
கால்பட்டு மகிமை கொண்டான்
காரிருளைப் பவுர்ணமி என்றவன்ஒளிகொண்டு
கவிநூறு பாடிநின்றான்
ஞாலத்தை உணர்ந்திடும் ஞானியர் உன்னிடம்
ஞானப்பால் தேடிவந்தார்
ஞாயிறாய் ஒளிவிடும்தாய்முகம் பார்த்ததில்
ஞானத்தின் ஞானம் கண்டார்
மூலத்தின் மூலமே மோனத்தின் சாரமே
மோகவடிவான அழகே
மூளும்வினை சூழாமல் ஆளுமருள் தேவியே
முக்திதரும் அபிராமியே
 
 பேர்வாங்கச் செய்பவை பழிவாங்கி வந்திங்கு
பகைமூளச் செய்வதுண்டு
பயத்தோடு செய்பவை புகழ்வாங்கி வந்திங்கு
பொன்பொருள் சேர்ப்பதுண்டு
தார்வாங்கும் வாழையாய் தலைதாழ்ந்து நிற்பதைத்
தலைக்கனம் என்பதுண்டு
தாளாத அகந்தையில் தலைதூக்கிச் சொல்வதை
ஆளுமை என்பதுண்டு
நீர்வாங்கும் வேரென்று நான்வாங்கும் பெயருக்கு
நதிமூலம் தெரியவில்லையே
நாலுபேர் சொல்வதை நினைப்பிலே கொள்ளாமல்
நடக்கையில் சுமையுமிலையே
கார்வாங்கும் வானமாய் கனக்கின்ற கருணையே
கருத்தினில் தெளிவுதந்தாய்
கடவூரின் மையமாய் களிபொங்க நிற்கின்ற
கோலமயில் அபிராமியே

No comments: