Thursday, October 28, 2010

சாபல்யம் அவள்பதமே



அவள்தான் அவள்தான் அடைக்கலம்
அருளே அவளின் படைக்கலம்
கவலை முழுதும் எரித்திடும்
கருணை அவளின் சூத்திரம்

சாகச மனம்செய்யும் சேட்டைகளில் அவள்
சாட்சி மாத்திரமே
சாட்டை அடிகளும் வாட்டி வதைக்கையில்
சாபல்யம் அவள்பதமே
ஆகாயம் அவள் ஆடுகளம் அதில்
அல்லென ஆடுகிறாள்
ஆயிரம் ஆயிரம் விண்மீன் நடுவே
நிலவென்று தோன்றுகிறாள்

கோணல் மனங்களின் கோடுகளை அவள்
கோலங்கள் செய்வாளோ
கோடி வினைகளும் மூள்கையிலே ஒரு
பார்வையில் எரிப்பாளோ
கேணியில் அமுதம் ஊறிடச் செய்பவள்
கடவூர் ஆளுகிறாள்
கேடுகள் எதுவும் சூழவிடாமலே
கனலாய்த் தோன்றுகிறாள்

இருள்கிற வானிடை எழுநிலவாய் அவள்
எறிந்தனள் தாடங்கமே
இருண்டஎன் நெஞ்சினில் எழுந்திடுவாளோ
இதுதான் ஆதங்கமே
உருள்கிற காலங்கள் உருட்டிடும் தாயெனை
ஒருமுறை பார்ப்பாளோ
உள்ளொளி காட்டவும் தன்னிழல் சேர்க்கவும்
உத்தமி நினைப்பாளோ

No comments: