Thursday, November 8, 2012

ஜெயமோகன் என்மேல் வழக்கு போடவில்லை

( இணையத்தில் எழுதினாலே வழக்கு பாய்கிற காலமிது. எழுத்தாளர் ஜெயமோகன் பால் கொண்ட நட்புரிமையால் 2009 ஜனவரியில் நான் இதனை எழுதினேன்.அவர் என்மேல் வழக்கேதும் போடவில்லை)

   

 தேமே என்று நடந்து போய்க்கொண்டிருந்த தன்னை ஏன் ஆட்டோவில் கடத்தினர்கள் என்று குழம்பிக் கொண்டே ஆட்டோவில் ஆடியவண்ணம் போய்க் கொண்டிருந்தார் எழுத்தாளர் புயல்வேகன்.கூச்சலிடுவதும் எட்டிக் குதிப்பதும் நவீன எழுத்தாளருக்கழகல்ல என்பதுடன் அவருக்கு குதிக்கத் தெரியாது என்பதும் அவர் வாளாவிருந்ததன் காரணங்கள்.ஆனாலும் அவரின் நுண்மனம் வாள் வாள் என்று கத்திக் கொண்டிருந்தது. கண்கள் இரண்டும் கட்டப்பட்ட நிலையிலும்(அவருக்கு மூன்று கணகள் உண்டென்றுஅவரின் நண்பர் ஒருவர்கட்டங்காப்பியைக் குடித்துக்கொண்டே சொன்னது அவருடைய ஓர்மைக்கு வந்தது) தான் கடத்தப்பட்டபோது கடந்துபோன முட்டுச் சந்துகள்,குறுக்குச் சந்துகள்-அங்கே வசீகரமாய் சிரித்துக் கொண்டிருந்த பல்செட் பாட்டி என்று பலத்த விவரணைகளுடன் தன் வலை மொட்டில்(தன்னடக்கம்) அரைமணிக்கூரில் 500 பக்கங்கள் எழுதப்பட வேண்டிய கட்டுரையை மனதுக்குள் எழுதிப் பார்த்துக் கொண்டிருந்தார் புயல்வேகன்.வயது மறந்து சமீபத்தில் "பழய நெனப்புடா பேராண்டி" என்று ஏறியிரங்கிய மலைகள் அவரை சொஸ்த்தாக்கியிருந்தன.பதட்டத்தின் போது தான் வழக்கமாகக் கடிக்கிற மீசையை எட்ட முடியாமல்.மூக்குப்பொடி மணக்கும் கர்ச்சீப்பால் வாயைக் கட்டியிருந்தார்கள்ஆதலால் கடத்தலை நிபந்தனையின்றி ஏற்பது என்ற முடிவுக்கு அவர் வந்த அதே அதீத கணத்தில் ஆட்டோ நின்றது.


நகைச்சுவைத் திருவிழா என்ற பெரிய பேனரின் கீழ் அதிரடி மிமிக்ரி-அட்டகாச கலாட்டா போன்ற விளம்பர வாசகங்கள் மினுமினுத்தன.நடுவர்:
இணையம் புகழ்-சினிமா புகழ் நவீன நாவலாசிரியர் புயல்வேகன் என்று வேறு போட்டிருந்தது.முறைப்படி அழைத்தால் வரமாட்டார் கடத்தி விடுங்கள் என்று பக்கத்தூர் நவீன எழுத்தாளர்" போட்டுக் கொடுத்திருந்த"
திட்டத்தை அமைப்பாளர்கள் நடைமுறைப்படுத்தியிருந்தார்கள்.

என்ன நடக்கிறது ஏது நடக்கிறது என்று தெரியும் முன்னே ஒலிபெருக்கி முன் நிறுத்தப்பட்டிருந்தார் புயல்வேகன்.

"நான் ஆபீஸைவிட்டு எறங்கினப்ப என்னப் பின் தொடர்ந்த நெழலோட குரல நான் கேக்காததால என் குரல இப்ப கேக்கறீங்க" என்று தொடங்கியதுமே எழுந்த கரவொலியில் மிரண்டு போனார் புயல்வேகன்.பேசும்போது கேட்பவர்கள் கைதட்டினால் அது நல்ல பேச்சல்ல என்று தான் முன்னர் எழுதிய இலக்கணத்தைத் தானே மீற நேர்ந்ததில் அவருக்கு வருத்தம்.

அடுத்த விநாடியே சுதாரித்துக் கொண்டு "நகைச்சுவைக்கு நீங்க சிரிக்கறீங்க,ஆனா நகைச்சுவைங்கறது சிரிக்கற விஷயமில்லே!ரொம்ப சீரியஸான விஷயம்.கேரளாவில நெறய மிமிக்ரி கலைஞர்கள் உண்டு.ஆனா அவங்க மிமிக்ரிக்கு அங்க யாரும் சிரிக்கறதே இல்ல.ஏன்னு கேட்டா மிமிக்ரிங்கறதுஉள்ள ஒரு விஷயத்தைத் திருத்தியமைக்கிற முயற்சி.ஆதிப்பிரதியத் திருத்தணும்ங்கிற தவிப்பு மனுஷனுக்குள்ள காலங்காலமா இருக்கிற வேட்கை.தப்பில்லாத பிரபஞ்சம் ஒண்ணு படைக்கணும்னா இருக்கறத பகடி பண்ணனும்.பகடிங்கறதில உள்ள நிதர்சனத்தோட தரிசனத்திலே ஏற்படற வலி தெரியுது. அதனுடைய நீட்சிதான் மிமிக்ரி.ஆனா தமிழ்நாட்டில நகைச்சுவைன்னா சிரிக்கறது,சோகம்னா அழறது,கோபம்னா கோபப் படறதுன்னு நெனக்கறாங்க.அப்படி ஒரு விஷயமே கிடையாது.என்னு கேட்டா விஷயம் அப்படிங்கற ஒண்ணே இல்லைங்கிறதுதான் விஷயம்"

                        
இப்படி உணர்ச்சியல்லாத உணர்ச்சியில் புயல்வேகன் பேசிக்கொண்டே இருந்தபோது அதே ஆட்டோ மேடைக்கே வந்தது.\   ஆட்டோ மேடைக்கருகில் வந்து நின்றதில் புயல்வேகன் பதட்டமைடையவில்லை.தொண்டையை செருமிக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தார்."உதாரணத்துக்கு இந்த ஆட்டோவை எடுத்துக்குங்க. தமிழ்நாட்டிலெ இதை ஆட்டோன்னு நினைக்கறாங்க. ஆக்சுவலா இது ஆட்டோ கிடையாது.கார்ல போன ஒரு தமிழாளு திருவனந்தபுரத்தில  ஒருத்தர உரசீட்டுப் போனப்போ "ஒன் கால உடைப்பேன்"னுஅவரு சபதம் செஞ்சாரு.எல்லாம் அந்த தமிழரோட கால ஒடைப்பார்னு நெனச்சாங்க.ஆன அவரு காரோட ஒரு சக்கரத்தை ஒடைச்சு ஆட்டோ கண்டுபுடிச்சாரு . அதாவது பயணம் ங்கறது மூன்று காலங்களோட சம்பந்தப்பட்டது.பயணம் கிளம்பினது இறந்த காலம்-பயணம் செய்வது நிகழ்காலம்-போய் சேரக்கூடிய இடம் எதிர்காலம். இதத்தான் அவர் கண்டுபிடிச்ச ஆட்டோ குறியீடா சொல்லுது.
முத முதல்லே ஆட்டோ தோன்றினது கேரளாவிலதான். இந்த முக்காலத் தத்துவத்தை கேட்டீர்களா என்று கேள்வி எழுப்பும் பாவனையில் அதுக்கு முதல்ல கேட்டோ கேட்டோ ன்னு தான் பேர் இருந்தது.அதை நம்ம நாட்டில உச்சரிக்கத் தெரியாம ஆட்டோ- ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.அதனால ஆட்டோங்கறதே காரை மிமிக்ரி பண்ணின விஷயம்தான் "

புயல்வேகனின் இந்தப் போக்கு பெரும்போக்காக இருக்க ஆட்டோ ஓட்டுநர் வேறொரு போக்கின் பெயரைச் சொல்லித் திட்டிவிட்டு வேறோர் ஆட்டோ பிடிக்க தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தார்.

புயல்வேகனை எதிர்த்து செய்யப்படும் எல்லா வேலகளையும் போலவே இதுவும் பிசுபிசுத்துப் போனதில் பக்கத்தூர் நவீன எழுத்தாளருக்கு வருத்தம்தான்.பேசாமல் புயல்வேகனை பக்கத்துக் காட்டில் விட்டு விட்டு வர நினைத்தார்.

ஆனால் "வாசனை" இதழ் வெளியீட்டு விழாவுக்காக குற்றாலத்தில் தங்கியிருந்தபோது புயல்வேகன் தன் வன அனுபவங்களை
நண்பர்கள் மத்தியிலான தனி சொற்பொழிவில் சொல்லியிருந்தார். 


வனப்பகுதியில் தான் வாங்கி வரும் வர்க்கிகளுக்காகக் காத்திருக்கும் புலிக்குட்டிகள்,தன் பெயர்,முகவரி,செல்லிடப்பேசி எண் போன்றவற்றைத் தெரிந்து வைத்திருக்கும் ஐந்தாறு காட்டானைகள்,தன் பசிக்காக மானடித்து புயல்வேகனுக்காகப் புல்லறுத்து வைத்து குறுஞ்செய்தி அனுப்பும் சிறுத்தைகள் என்று தன் வனசிநேகிதங்கள் பற்றி புயல்வேகன் ஆற்றிய உரையின் சுருக்கத்தை வாசனை இதழ் ஆசிரியர் அறிவின் வேந்தன் சித்தையா ஏற்கெனவே எழுதியிருந்தார்.

எனவே விழா அமைப்பாளர்களுக்குத் தெரியாமல் பக்கத்தூர் நவீன எழுத்தாளர் மெல்ல நழுவ,தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத
விக்ரமாதித்தனாக (விக்ரமாதித்யன் அல்ல) மீண்டும் "தேமே" என்று நடக்கத் தொடங்கினார் புயல்வேகன்